

திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை திடீரென திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான ராமசாமிபுரம், நாலு மூலைக்கிணறு, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், காயாமொழி, தளவாய்புரம், வீரபாண்டிய பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கனமழை பெய்தது.
திருச்செந்தூரில் பெய்த கனமழையால் சிவன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பரமன்குறிச்சியில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இன்று அதிகாலையில் இருந்தே லேசான மழை பெய்து வந்தது. திடீரென காலை 8.30 மணிக்கு மேல் சுமார் 1மணி நேரமாக கனமழை பெய்தது. 9 மணியளவில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றனர். சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர்.
திருச்செந்தூர் பகுதியில் கனமழை பெய்ததால் திருச்செந்தூர் நகரம் முழுவதும் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஒடியது. இதனால் பாதாள சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சென்றதால் பொதுமக்கள் மிக சிரமத்துடன் சாலையில் நடந்து சென்றனர்.
திருச்செந்தூர் காய்-கனி மார்க்கெட் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் குளம் போல் காணப்பட்டது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.