என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi Rain"

    • மழைநீர் முறையாக செல்வதற்கு வழியின்றி, விவசாய நிலங்களிலேயே மழைநீர் தேங்கி விவசாயப்பயிர்கள் அழுகும் நிலை தொடர் கதையாகி வருகிறது.
    • உப்பள ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் நெல், வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிர்களை அப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைகளை தனியார் உப்பளத்தினர் ஆக்கிரமித்ததோடு, தங்களது தேவைக்கு ஏற்ப தண்ணீர் செல்லும் வழியை மறித்து பாலங்கள் அமைத்துள்ளனர் என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    இதனால் மழைநீர் முறையாக செல்வதற்கு வழியின்றி, விவசாய நிலங்களிலேயே மழைநீர் தேங்கி விவசாயப்பயிர்கள் அழுகும் நிலை தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக மேல்மாந்தை பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் உப்பள நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் என பலமுறை அப்பகுதி விவசாயிகள் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், தற்போது வரை உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

    மேலும், இப்பகுதியில் 2 நாட்கள் பெய்த இந்த தொடர் மழைக்கே நீர் வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காரணத்தால், விவசாயப் பயிர்கள் பெருமளவில் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், உப்பள ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர்.

    ஆனால் இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி உப்பள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    மேலும், விவசாயிகள், எஞ்சியுள்ள பயிர்களையாவது பாதுகாக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு டிசம்பர் மாத மழைக்குள்ளாகவே இங்குள்ள உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

    • வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதன்படி மாட்டுக்குளம், ரத்தினபுரி, சீதக்காதி நகர், உச்சினிமாகாளியம்மன் கோவில் தெரு, பை-பாஸ் சாலை, காட்டு தைக்கா தெரு உள்ளிட்ட இடங்களில் சுமார் 500-க்கும் மேலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    சிவன் கோவில் வடக்கு அக்பர்ஷா நகர் பெரு வெள்ளத்தால் தத்தளிக்கிறது. அங்குள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், தீவு தெரு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்திலும் தண்ணீர் புகுந்துள்ளது.

    மழை வெள்ளத்தை வடிய வைப்பதற்காக நகராட்சி சார்பில் வாய்க்கால் வெட்டும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இருந்த போதிலும் இந்த நடவடிக்கை மழை வெள்ளம் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு தருமா? என்கிற கேள்வியே எழுந்துள்ளது.

    • கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 24 மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 122 அடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் அந்த அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 130.71 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 11 அடி உயர்ந்து 141.27 அடியை எட்டியுள்ளது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 6 ஆயிரத்து 178 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 700 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. 118 அடி கொண்ட மணி முத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,974 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மலைப்பகுதியில் தொடரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தாமிரபரணி ஆற்றில் சற்று அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் நீர் ஆற்றில் கலந்து காட்டாற்று வெள்ளமாக செல்கிறது. இதன் காரணமாக வழக்கத்தை விட ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.

    நெல்லை மாநகர பகுதியை பொறுத்தவரை டவுன் குறுக்குத்துறையில் உள்ள முருகன்கோவில் மண்டபம் முழுவதுமாக மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகரில் நேற்று பகலில் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில், மாலையில் கனமழை பெய்தது.

    நள்ளிரவு வரையிலும் பெய்த கனமழையால் சாலை பள்ளங்களில் குளம் போல் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. அதிகபட்சமாக நெல்லையில் 56 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    புறநகர் பகுதியை பொறுத்தவரை சேரன்மகாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, அம்பை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 1 வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் அடவிநயினார், குண்டாறு அணைகள் நிரம்பி வழியும் நிலையில், நேற்றும் பரவலாக பெய்த மழையால் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக அந்த அணைகளும் முழு கொள்ளளவை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    குண்டாறு அணை பகுதியிலும், கடனா அணை பகுதிகளிலும் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. ராமநதி, கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 71 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 73 ½ அடியாகவும் இருக்கிறது. 71 அடி கொண்ட கருப்பாநதி அணை நீர் மட்டம் 62 அடியை நெருங்கி உள்ளது.

    நகர் பகுதியை பொறுத்தவரை செங்கோட்டை, தென்காசி மற்றும் ஆய்குடி சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    இதேபோல் சங்கரன் கோவில் மற்றும் சிவகிரி சுற்று வட்டாரத்தில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து பெய்த மழையால் குளங்கள் நீர்இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர பகுதிகளான திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் மற்றும் காயல்பட்டினம் சுற்று வட்டாரத்தில் மிக கனமழை பெய்தது. குலசேகரன்பட்டினம், திருச்செந்தூரில் 13 சென்டி மீட்டரும், காயல்பட்டினத்தில் 10 சென்டிமீட்டரும் மழை பெய்தது.

    கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்தி குளம், சூரங்குடி, ஒட்டப்பிடாரம், மணியாச்சி, வேடநத்தம், கீழஅரசடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளும் தீவிரம் எடுத்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம்பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் மருதூர் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

    • 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 86 அடியை எட்டியுள்ளது.
    • சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மதியம் வரையிலும் கனமழை பெய்த நிலையில், மாலை நேரத்திலும் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாநகரில் நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்தது. பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. டவுன் ரதவீதிகள் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து ஓடியது.

    டவுனில் நேற்று பகலில் பெய்த கனமழை காரணமாக டவுன் சுந்தரர் தெருவில் ஒரு வீட்டின் மாடி அறையானது முழுமையாக இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வேளாண்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமசாமி என்பவர் தனது மனைவி மற்றும் மகன்களான சிவா, பரமேஸ்வரன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

    தற்போது சிவா, பரமேஸ்வரன் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்று 2 பேரும் வெளியே சென்ற நேரத்தில் வீடு இடிந்தது. இதனால் பெரிய அளவு பாதிப்பு இல்லை. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், டவுன் தாசில்தார் தலைமையில் குழு சென்று பார்வையிட்டனர்.

    மாநகரில் இன்று காலை நிலவரப்படி பாளையில் 26 மில்லிமீட்டரும், நெல்லையில் 21.60 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் 5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,425 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 944 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 86 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 93 அடியாக உள்ளது.

    மாவட்டத்தில் களக்காடு சுற்றுவட்டாரத்தில் 8 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தலையணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நம்பியாற்றிலும் வெள்ளம் அதிக அளவு சென்றது. நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் கொட்டித்தீர்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.

    இந்த பகுதிகளில் பிற்பகலில் மழை குறைந்த நிலையில், இன்று காலை வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. அம்பை பகுதியில் நேற்று இரவில் சற்று கனமழை பெய்தது. அங்கு 77 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொடுமுடியாறு, நம்பியாறு என அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக 52 அடி கொண்ட கொடுமுடியாறு அணை பகுதியில் தொடர் மழையால் நேற்று ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்து 31.25 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 201 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் வறண்டு போன குளங்கள், கால்வாய்களில் நீர்வரத்து சற்று ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அதிகாலை தொடங்கி மாலை வரையிலும் கொட்டித்தீர்த்த கனமழையால் கடனா அணையில் 1 அடியும், ராமநதி அணையில் 1½ அடியும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 42.28 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 47½ அடியானது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 115 அடியை கடந்துள்ளது.

    நகர் பகுதியை பொறுத்தவரை செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 35 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி பகுதியில் நேற்று பிற்பகலில் இருந்து மழை சற்று குறைந்துவிட்டது. எனினும் நேற்று முன்தினம் தொடங்கி பெய்த மழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் தொடர்மழையால் மின்தடை ஏற்பட்டது. சில கிராமங்களில் மாலையில் தொடங்கி சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. ஆனாலும் மின் ஊழியர்கள் கொட்டும் மழையிலும் மின்தடங்கலை சீர் செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகரில் பரவலாக மழை பெய்தது. கழுகுமலை சுற்றுவட்டாரத்தில் 10 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. திருச்செந்தூர், கோவில்பட்டி, சூரன்குடி, வைப்பார், கீழ அரசடி, மணியாச்சி, கயத்தாறு சுற்றுவட்டாரங்களில் பரவலான மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    • தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்கும்.
    • சென்னையில் இன்று பகலில் வெயில் அடித்தாலும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனிடையே, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை தொடர்ந்து 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெரிய மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்கும். பின்னர் படிப்படியாகக் குறையும். கடந்த 24 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ., திருச்செந்தூரில் 14.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லையின் பிற உள் பகுதிகளில் நண்பகல் அல்லது மாலை வரை மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் இன்று பகலில் வெயில் அடித்தாலும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். 

    • கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாட்டில் இன்று வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், திருச்செந்தூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நகர் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இடி மின்னலுடன் விடிய விடிய கொட்டிய கனமழையால் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலை சுற்றியுள்ள சாலைகளிலும் வெள்ளம் தேங்கியுள்ளது. மேலும் சிவன் கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்தது.

    கடந்த சில நாட்களாக திருச்செந்தூரில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • தூத்துக்குடி-திருச்செந்தூர், நெல்லை-திருச்செந்தூர் சாலைகள் துண்டிக்கப்பட்டு தற்போது வரை சாலை போக்குவரத்து தொடங்கவில்லை.
    • பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17-ந்தேதி முதல் மிக பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 16-ந்தேதியே அதிகனமழை பொழிய தொடங்கியது. குறிப்பாக காயல்பட்டினத்தில் 17-ந்தேதி ஒரே நாளில் 95 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் நகரமே துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 17-ந்தேதி தொடங்கி விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் தூத்துக்குடி மாநகர பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. பெரும்பாலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தத்தளிக்கின்றனர்.

    தூத்துக்குடி மாநகர பகுதியை பொறுத்தவரை ராஜகோபால்புரம், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், மகிழ்ச்சிபுரம், குறிஞ்சி நகர், முத்தம்மாள் காலனி, ராம்நகர், ரஹ்மத் நகர், கே.டி.சி. நகர், பிரையண்ட் நகர், அமுதா நகர், ஸ்டேட் பாங்க் காலனி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட இடங்களை வெள்ளம் சூழ்ந்தது.

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் 40 படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் பொது மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே போல் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றுக்கு சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நெல்லை மாவட்டம் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை தாமிரபரணி கரையோர மக்கள் குடியிருப்புகள் வெள்ளத்தில் சூழ்ந்தது.

    செய்துங்கநல்லூர் அருகே உள்ள கொங்கராயக்குறிச்சி, தூத்துக்குழி, சந்தையடியூர், எஸ்.என்.பட்டியூர், அய்யனார்குளம் பட்டி, மணக்கரை, ஆழ்வார்கற்குளம், பத்மநாப மங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

    குறிப்பாக ஆழிக்குடி கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதையறிந்த அனவரநல்லூர் கிராம மக்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவத்தினர், மீனவர்கள் உள்ளிட்டோர் அக்கிராமத்தில் இருந்த 800 பேரை படகுகள் மூலம் பத்திரமாக மீட்டு பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

    இதே போல் முத்தாலங்குறிச்சி, நாணல்காடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 1,500 கிராம மக்கள் மீட்கப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் பகுதி முழுவதும் தாமிரபரணி வெள்ளம் சூழ்ந்து தனித்தீவாக மாறி உள்ளது.

    தூத்துக்குடியில் நேற்று காலை முதல் மழை ஓய்ந்துள்ளது. எனினும் சாலையில் தேங்கிய தண்ணீர், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் ஆகியவற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக தூத்துக்குடி-திருச்செந்தூர், நெல்லை-திருச்செந்தூர் சாலைகள் துண்டிக்கப்பட்டு தற்போது வரை சாலை போக்குவரத்து தொடங்கவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், வசவப்ப புரம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, வல்லநாடு, புதுக்கோட்டை, கோரம்பள்ளம், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பாதுகாப்பு கருதி அங்கு மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    தொலை தொடர்பு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் அவர்களது உறவினர்கள் கடந்த 4 நாட்களாக தவித்து வருகிறார்கள்.

    தொடர்பு கொள்ள முடியும் நிலையில் உள்ளவர்களின் செல்போன்கள் மின்வசதி இல்லாததால் சார்ஜ் செய்ய முடியாததால் அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு படையினரும், துணை ராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.

    இதற்கிடையே கூடுதலாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதிப்பு பகுதிகளுக்கு விரைந்து உள்ளனர். தேவைப்பட்டால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும் மீட்பு குழுவினர் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 25-க்கும் மேற்பட்ட ராணுவ குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆறாம் பண்ணையில் இருந்து மணக்கரை செல்லும் ரோடு மூழ்கி உள்ளது. மாவட்டத்தில் மழை வெள்ளம் புகுந்ததால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் தூத்துக்குடி மாநகர் பகுதியில் சில இடங்களிலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இன்று 4-வது நாளாகவும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

    திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழையால் தோப்பூர் பகுதியில் உள்ள கால்வாயில் வரும் மழைநீர் நிரம்பி அப்பகுதி சாலை வழியாக தெப்பகுளம் முன்புள்ள சாலையில் வெள்ளமாக மழைநீர் ஓடியது.

    அப்பகுதியில் மழைநீர் முட்டளவு முதல் இடுப்பளவு வரை மழை நீர் வெள்ளமாக ஓடியதால் அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மற்றும் சாலையை கடக்கும் அப்பகுதி பொதுமக்கள் படகு மூலம் மழைநீரை கடந்து சென்றனர்.

    மேலும் இந்த மழைநீர் காமராஜர் சாலை வழியாக டிபி ரோடு மற்றும் பகத்சிங் பஸ் நிலையம், மார்க்கெட் வழியாக அப்பகுதியில் உள்ள கால்வாய்க்கு சென்றது. அதேபோல், திருச்செந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீரானது குளம் போல தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமபட்டனர்.

    தூத்துக்குடி மாநகர் பகுதியில் திருச்செந்தூர், காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, தென்திருப்பேரை, ஏரல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.

    மாவட்டத்தின் புறநகர் பகுதிகள் மற்றும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும் துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. படகுகள் மூலம் மீட்கப்படும் பொதுமக்கள் அருகே உள்ள திருமண மண்டபங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

    அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்கள், அரசு மருத்துவமனை, தொழிற்சாலைகள், வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் மழை ஓய்ந்தும் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. அதனை அகற்றி இயல்பு நிலை திரும்ப தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • தாமிரபரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பகுதி அபாய கட்டத்தில் உள்ளது.
    • 1,500 பேருக்கும் ஆறுமுகநேரி பேரூராட்சி சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இடைவிடாமல் கனமழை பெய்தது.

    இதில் காயல்பட்டினம் மற்றும் ஆறுமுகநேரி பகுதியில் மட்டும் உச்சபட்சமாக 92.3 சென்டி மீட்டர் அளவிலான மழை பொழிந்து தள்ளியது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் பெய்த இந்த மழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    இதனால் காயல்பட்டினத்தில் உள்ள திருமண மண்டபங்களில் நூற்றுக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பொதுநல அமைப்புகள் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    2 நாட்களாக இங்கு முற்றிலுமான மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வெகுண்ட மக்கள் நேற்று மறியல் போராட்டத்தில் இறங்கினர்.

    இதனைத் தொடர்ந்து காயல்பட்டினத்திற்கு 3-வது நாளான நேற்று மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனாலும் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதேபோல் ஆறுமுகநேரியில் 3-வது நாளாக மின்சாரம் தடைப்பட்டும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டும் உள்ளன.

    மேலும் இங்கிருந்து தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சாலைகளும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டு ஆத்தூர், புன்னகாயல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், மூலக்கரை, குரும்பூர், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகள் தனித்தனி தீவுகளை போல காணப்படுகின்றன.

    பக்கத்து ஊர்களில் இருக்கும் உறவினர்களின் நிலைமையை கூட அறிந்து கொள்ள முடியாத அவல நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர்.

    தாமிரபரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பகுதி அபாய கட்டத்தில் உள்ளது. அங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே தாமிரபரணி ஆற்றின் கிளைகளுக்கு இடையில் தீவு போல உள்ள புன்னக்காயல் தற்போதைய வெள்ளம் காரணமாக பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது.

    ஆத்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல், தலைவன் வடலி ஆகிய கிராமங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கின. அங்கு தத்தளித்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு ஆறுமுகநேரியில் 2 பள்ளிகளிலும் 3 திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அங்குள்ள 1,500 பேருக்கும் ஆறுமுகநேரி பேரூராட்சி சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    ஆறுமுகநேரி பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களில் இருந்தும் அபரிமிதமாக வெளியேறிய தண்ணீரால் மேலத்தெரு, காமராஜபுரம், சீனந்தோப்பு ஆகிய பகுதிகள் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள மக்கள் உணவுக்கு வழியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்து முன்னணி சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    அனைத்து ஊர்களுக்கும் எவ்வித போக்குவரத்தும் இல்லாததால் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஆகிவிட்டன. இதனால் அடுத்தடுத்த நாட்களுக்கான தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என்கிற பரிதவிப்பு நிலையில் மக்கள் உள்ளனர்.

    காயல்பட்டினம் பகுதியில் தரைதள வீடுகள் பெரும்பாலாக மூழ்கி விட்டன. அங்கு பெரும் சுகாதார கேடு உருவாகும் நிலை உள்ளது. காயல்பட்டினம் பகுதி நிலைமையை விளக்கி போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறவும் நிவாரண உதவிகளை வழங்கவும் வலியுறுத்தி முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்பின் பிரதிநிதிகள் குழு இன்று சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை இன்று சந்தித்து பேச இருப்பதாக 'மெகா' அமைப்பின் நிர்வாகியான முகம்மது சாலிக் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    வரலாறு காணாத வகையில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை விட்டும் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் 93840 56221, 73977 31065 என்ற வாட்ஸ்அப் எண்கள் மூலம் மக்கள் குறைகளை தெரிவிக்கலாம். மேலும் Collector Thoothukudi என்ற முகநூல் பக்கத்திலும், @CollectorTuty என்ற X தள பக்கத்திலும் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முடிந்துள்ளது. எனினும் மாநகர பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை அதிகனமழை பெய்தது.

    வரலாறு காணாத வகையில் பெய்த இந்த மழையால், வழக்கமாக மழை வெள்ளத்தால் பாதிக்காத வறட்சியான பகுதியில் கூட வெள்ளம் சூழ்ந்தது.

    கோரம்பள்ளம் உள்ளிட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் அந்த தண்ணீர் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சூழ்ந்துள்ளது. மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல், காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி என பல்வேறு இடங்களிலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    வெள்ளம் படிப்படியாக குறைந்ததையடுத்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    இதனால் விமானம், ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. வெள்ளம் காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட திருச்செந்தூர் உள்ளிட்ட சில இடங்களுக்கும் தற்போது போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

    புறநகர் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப தொடங்கி இருந்தாலும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இன்று 7-வது நாளாகவும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம் வடியாமல் உள்ளது. அதனை வெளியேற்றும் பணி இரவு, பகலாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேத பகுதிகளை பார்வையிட தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி மாநகர பகுதியில் வெள்ளம் பாதித்த மறவன்மடம், குறிஞ்சி நகர், 3-ம் கேட் பகுதி, அந்தோணியார்புரம், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.

    தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

    குறிஞ்சி நகரில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின்னர் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பக்கிள் ஓடை மூலமாக வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேங்கிய வெள்ள நீர் பம்பிங் செய்யப்பட்டும் வெளியேற்றப்படுகிறது. அதற்கு தேவையான கூடுதல் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.


    குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அமைந்துள்ள சாலையில் தேங்கிய வெள்ளத்தில் நடந்து சென்று ஆய்வு செய்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா.


    ரெயில்வே கேட் பகுதிக்குள் கூடுதல் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம், மின்சாரம் தாக்கி, வீடு இடிந்து என 22 பேர் பலியாகி உள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 40 முதல் 55 சென்டி மீட்டர் வரை மழை பெய்துள்ளது. அதன் மூலம் 150 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. இது மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் கொள்ளளவை விட 10 மடங்கு அதிகமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் வாறுகால்கள் முறையாக தூர்வாரப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் ரூ.200 கோடியில் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிர்கள் கணக்கிடும் பணியும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முடிந்துள்ளது. எனினும் மாநகர பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவரிடம் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மழை வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் தவித்து வருவதாகவும், உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

    • வெள்ள பாதிப்புகளை பார்வையிட புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடிக்கு வந்தார்.
    • தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடிக்கு வந்தார்.

    அப்போது விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:-

    * தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும்.

    * தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை.

    * இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது.

    * மழை வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கிகள் மூலமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை நாங்கள் செய்வோம்.
    • சுனாமி ஏற்பட்ட போது கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு, சேதாரங்கள் ஏற்பட்டது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அதனை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

    பாதிப்பு குறித்த விவரங்களை வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அவருக்கு விளக்கி கூறினார். அதனைத்தொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் மழை வெள்ள சேதங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி., வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் சிங் பேடி, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, நகராட்சி நிர்வாக செயலாளர் கார்த்திகேயன், மேலாண்மை துறை ஆணையர் அபூர்வா, சிறு தொழில் துறை ஆணையர் அட்சயா பட்நாயக், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் குறித்து 'பவர் பாயிண்ட் பிரசன்டேசன்' மூலம் விளக்கி கூறினர்.

    முன்னதாக கலெக்டர் அலுவலக ஆலோசனை கூட்டம் 45 நிமிடங்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் 1¾ மணி நேரம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள சேதங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள், கொடுக்கப்பட வேண்டிய நிவாரணங்கள் குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நீண்ட ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தேவையான நிவாரணம் குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு 78 பக்க ஆய்வு அறிக்கையை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார்.

    அதனை முடித்து கொண்டு தூத்துக்குடி மாநகர பகுதியில் அதிகம் பாதிக்கப்பட்ட குறிஞ்சி நகர் பகுதி, உடைப்பு ஏற்பட்ட கோரம்பள்ளம் குளம் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி தாலுகா கோரம்பள்ளம், மறவன்மடம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, முறப்ப நாடு, கோவில்பத்து மற்றும் ஏரல் தாலுகாவில் உள்ள ராஜபதி தெற்கு வாழ வல்லான் ஆகிய பகுதிகள் என மாவட்டத்தில் சுமார் 120 கிலோ மீட்டருக்கு பயணித்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது, உமரிக்காடு பொதுமக்கள் வரலாறு காணாத மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

    எனவே மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், பொதுவாக மழை, வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என தெரிவித்தார்.

    வங்கிகள் மூலமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை நாங்கள் செய்வோம். மாநில அரசுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது.

    இதுவரை தேசிய பேரிடர் என எப்போதும் அறிவிக்கப்பட்டது இல்லை. சுனாமி ஏற்பட்ட போது கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

    எனினும் மாநில அரசின் அதிகாரிகள் இயற்கை பேரிடரை அறிவிப்பதில் நடவடிக்கை எடுத்தவுடன் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றி கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க எஸ்.எல்.பி.சி. செயல்முறை மூலம் முன் முயற்சிகள் எடுக்க அறிவுறுத்தினார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் தகுதி வாய்ந்த 2.5 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை தகுந்த நேரத்தில் வழங்கி அறுவடை பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

    (பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1.38 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் உள்ளது). வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு காப்பீட்டு கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து தொடர் முகாம்களை நடத்த வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களை நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

    தோட்டக்கலை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வெள்ளத்தின் போது வீடுகளை இழந்து காப்பகங்களில் தங்கி உள்ள பெண்கள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக்கொண்டனர்.

    அப்போது தகுதியான பெண்களின் வீடுகளை மீண்டும் கட்டித்தரவும், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வராதவர்களுக்கு மீண்டும் வீடுகளை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி தாங்கள் தயாரித்து வைத்த பொருட்கள் மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பெண் தொழிலாளர்கள் கூறினர்.

    அப்போது மண்பாண்ட பொருட்கள் மற்றும் ரங்கோலி வண்ணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உள்ளூர் பெண்கள் மீண்டும் தொழில் தொடங்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    மேலும் மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகள், தொழில் அதிபர்கள் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

    ஏற்கனவே வாங்கிய கடனுக்கு செலுத்தும் மாதாந்திர தவணை 2 ஆண்டிற்கு நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×