search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi rain"

    • வங்கிகள் மூலமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை நாங்கள் செய்வோம்.
    • சுனாமி ஏற்பட்ட போது கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு, சேதாரங்கள் ஏற்பட்டது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அதனை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

    பாதிப்பு குறித்த விவரங்களை வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அவருக்கு விளக்கி கூறினார். அதனைத்தொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் மழை வெள்ள சேதங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி., வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் சிங் பேடி, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, நகராட்சி நிர்வாக செயலாளர் கார்த்திகேயன், மேலாண்மை துறை ஆணையர் அபூர்வா, சிறு தொழில் துறை ஆணையர் அட்சயா பட்நாயக், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் குறித்து 'பவர் பாயிண்ட் பிரசன்டேசன்' மூலம் விளக்கி கூறினர்.

    முன்னதாக கலெக்டர் அலுவலக ஆலோசனை கூட்டம் 45 நிமிடங்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் 1¾ மணி நேரம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள சேதங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள், கொடுக்கப்பட வேண்டிய நிவாரணங்கள் குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நீண்ட ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தேவையான நிவாரணம் குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு 78 பக்க ஆய்வு அறிக்கையை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார்.

    அதனை முடித்து கொண்டு தூத்துக்குடி மாநகர பகுதியில் அதிகம் பாதிக்கப்பட்ட குறிஞ்சி நகர் பகுதி, உடைப்பு ஏற்பட்ட கோரம்பள்ளம் குளம் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி தாலுகா கோரம்பள்ளம், மறவன்மடம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, முறப்ப நாடு, கோவில்பத்து மற்றும் ஏரல் தாலுகாவில் உள்ள ராஜபதி தெற்கு வாழ வல்லான் ஆகிய பகுதிகள் என மாவட்டத்தில் சுமார் 120 கிலோ மீட்டருக்கு பயணித்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது, உமரிக்காடு பொதுமக்கள் வரலாறு காணாத மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

    எனவே மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், பொதுவாக மழை, வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என தெரிவித்தார்.

    வங்கிகள் மூலமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை நாங்கள் செய்வோம். மாநில அரசுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது.

    இதுவரை தேசிய பேரிடர் என எப்போதும் அறிவிக்கப்பட்டது இல்லை. சுனாமி ஏற்பட்ட போது கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

    எனினும் மாநில அரசின் அதிகாரிகள் இயற்கை பேரிடரை அறிவிப்பதில் நடவடிக்கை எடுத்தவுடன் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றி கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க எஸ்.எல்.பி.சி. செயல்முறை மூலம் முன் முயற்சிகள் எடுக்க அறிவுறுத்தினார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் தகுதி வாய்ந்த 2.5 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை தகுந்த நேரத்தில் வழங்கி அறுவடை பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

    (பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1.38 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் உள்ளது). வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு காப்பீட்டு கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து தொடர் முகாம்களை நடத்த வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களை நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

    தோட்டக்கலை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வெள்ளத்தின் போது வீடுகளை இழந்து காப்பகங்களில் தங்கி உள்ள பெண்கள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக்கொண்டனர்.

    அப்போது தகுதியான பெண்களின் வீடுகளை மீண்டும் கட்டித்தரவும், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வராதவர்களுக்கு மீண்டும் வீடுகளை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி தாங்கள் தயாரித்து வைத்த பொருட்கள் மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பெண் தொழிலாளர்கள் கூறினர்.

    அப்போது மண்பாண்ட பொருட்கள் மற்றும் ரங்கோலி வண்ணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உள்ளூர் பெண்கள் மீண்டும் தொழில் தொடங்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    மேலும் மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகள், தொழில் அதிபர்கள் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

    ஏற்கனவே வாங்கிய கடனுக்கு செலுத்தும் மாதாந்திர தவணை 2 ஆண்டிற்கு நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • வெள்ள பாதிப்புகளை பார்வையிட புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடிக்கு வந்தார்.
    • தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடிக்கு வந்தார்.

    அப்போது விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:-

    * தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும்.

    * தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை.

    * இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது.

    * மழை வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முடிந்துள்ளது. எனினும் மாநகர பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை அதிகனமழை பெய்தது.

    வரலாறு காணாத வகையில் பெய்த இந்த மழையால், வழக்கமாக மழை வெள்ளத்தால் பாதிக்காத வறட்சியான பகுதியில் கூட வெள்ளம் சூழ்ந்தது.

    கோரம்பள்ளம் உள்ளிட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் அந்த தண்ணீர் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சூழ்ந்துள்ளது. மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல், காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி என பல்வேறு இடங்களிலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    வெள்ளம் படிப்படியாக குறைந்ததையடுத்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    இதனால் விமானம், ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. வெள்ளம் காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட திருச்செந்தூர் உள்ளிட்ட சில இடங்களுக்கும் தற்போது போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

    புறநகர் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப தொடங்கி இருந்தாலும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இன்று 7-வது நாளாகவும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம் வடியாமல் உள்ளது. அதனை வெளியேற்றும் பணி இரவு, பகலாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேத பகுதிகளை பார்வையிட தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி மாநகர பகுதியில் வெள்ளம் பாதித்த மறவன்மடம், குறிஞ்சி நகர், 3-ம் கேட் பகுதி, அந்தோணியார்புரம், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.

    தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

    குறிஞ்சி நகரில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின்னர் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பக்கிள் ஓடை மூலமாக வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேங்கிய வெள்ள நீர் பம்பிங் செய்யப்பட்டும் வெளியேற்றப்படுகிறது. அதற்கு தேவையான கூடுதல் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.


    குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அமைந்துள்ள சாலையில் தேங்கிய வெள்ளத்தில் நடந்து சென்று ஆய்வு செய்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா.


    ரெயில்வே கேட் பகுதிக்குள் கூடுதல் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம், மின்சாரம் தாக்கி, வீடு இடிந்து என 22 பேர் பலியாகி உள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 40 முதல் 55 சென்டி மீட்டர் வரை மழை பெய்துள்ளது. அதன் மூலம் 150 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. இது மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் கொள்ளளவை விட 10 மடங்கு அதிகமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் வாறுகால்கள் முறையாக தூர்வாரப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் ரூ.200 கோடியில் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிர்கள் கணக்கிடும் பணியும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முடிந்துள்ளது. எனினும் மாநகர பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவரிடம் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மழை வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் தவித்து வருவதாகவும், உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

    • பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    வரலாறு காணாத வகையில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை விட்டும் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் 93840 56221, 73977 31065 என்ற வாட்ஸ்அப் எண்கள் மூலம் மக்கள் குறைகளை தெரிவிக்கலாம். மேலும் Collector Thoothukudi என்ற முகநூல் பக்கத்திலும், @CollectorTuty என்ற X தள பக்கத்திலும் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தாமிரபரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பகுதி அபாய கட்டத்தில் உள்ளது.
    • 1,500 பேருக்கும் ஆறுமுகநேரி பேரூராட்சி சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இடைவிடாமல் கனமழை பெய்தது.

    இதில் காயல்பட்டினம் மற்றும் ஆறுமுகநேரி பகுதியில் மட்டும் உச்சபட்சமாக 92.3 சென்டி மீட்டர் அளவிலான மழை பொழிந்து தள்ளியது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் பெய்த இந்த மழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    இதனால் காயல்பட்டினத்தில் உள்ள திருமண மண்டபங்களில் நூற்றுக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பொதுநல அமைப்புகள் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    2 நாட்களாக இங்கு முற்றிலுமான மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வெகுண்ட மக்கள் நேற்று மறியல் போராட்டத்தில் இறங்கினர்.

    இதனைத் தொடர்ந்து காயல்பட்டினத்திற்கு 3-வது நாளான நேற்று மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனாலும் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதேபோல் ஆறுமுகநேரியில் 3-வது நாளாக மின்சாரம் தடைப்பட்டும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டும் உள்ளன.

    மேலும் இங்கிருந்து தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சாலைகளும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டு ஆத்தூர், புன்னகாயல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், மூலக்கரை, குரும்பூர், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகள் தனித்தனி தீவுகளை போல காணப்படுகின்றன.

    பக்கத்து ஊர்களில் இருக்கும் உறவினர்களின் நிலைமையை கூட அறிந்து கொள்ள முடியாத அவல நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர்.

    தாமிரபரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பகுதி அபாய கட்டத்தில் உள்ளது. அங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே தாமிரபரணி ஆற்றின் கிளைகளுக்கு இடையில் தீவு போல உள்ள புன்னக்காயல் தற்போதைய வெள்ளம் காரணமாக பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது.

    ஆத்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல், தலைவன் வடலி ஆகிய கிராமங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கின. அங்கு தத்தளித்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு ஆறுமுகநேரியில் 2 பள்ளிகளிலும் 3 திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அங்குள்ள 1,500 பேருக்கும் ஆறுமுகநேரி பேரூராட்சி சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    ஆறுமுகநேரி பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களில் இருந்தும் அபரிமிதமாக வெளியேறிய தண்ணீரால் மேலத்தெரு, காமராஜபுரம், சீனந்தோப்பு ஆகிய பகுதிகள் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள மக்கள் உணவுக்கு வழியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்து முன்னணி சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    அனைத்து ஊர்களுக்கும் எவ்வித போக்குவரத்தும் இல்லாததால் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஆகிவிட்டன. இதனால் அடுத்தடுத்த நாட்களுக்கான தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என்கிற பரிதவிப்பு நிலையில் மக்கள் உள்ளனர்.

    காயல்பட்டினம் பகுதியில் தரைதள வீடுகள் பெரும்பாலாக மூழ்கி விட்டன. அங்கு பெரும் சுகாதார கேடு உருவாகும் நிலை உள்ளது. காயல்பட்டினம் பகுதி நிலைமையை விளக்கி போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறவும் நிவாரண உதவிகளை வழங்கவும் வலியுறுத்தி முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்பின் பிரதிநிதிகள் குழு இன்று சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை இன்று சந்தித்து பேச இருப்பதாக 'மெகா' அமைப்பின் நிர்வாகியான முகம்மது சாலிக் தெரிவித்துள்ளார்.

    • தூத்துக்குடி-திருச்செந்தூர், நெல்லை-திருச்செந்தூர் சாலைகள் துண்டிக்கப்பட்டு தற்போது வரை சாலை போக்குவரத்து தொடங்கவில்லை.
    • பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17-ந்தேதி முதல் மிக பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 16-ந்தேதியே அதிகனமழை பொழிய தொடங்கியது. குறிப்பாக காயல்பட்டினத்தில் 17-ந்தேதி ஒரே நாளில் 95 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் நகரமே துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 17-ந்தேதி தொடங்கி விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் தூத்துக்குடி மாநகர பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. பெரும்பாலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தத்தளிக்கின்றனர்.

    தூத்துக்குடி மாநகர பகுதியை பொறுத்தவரை ராஜகோபால்புரம், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், மகிழ்ச்சிபுரம், குறிஞ்சி நகர், முத்தம்மாள் காலனி, ராம்நகர், ரஹ்மத் நகர், கே.டி.சி. நகர், பிரையண்ட் நகர், அமுதா நகர், ஸ்டேட் பாங்க் காலனி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட இடங்களை வெள்ளம் சூழ்ந்தது.

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் 40 படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் பொது மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே போல் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றுக்கு சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நெல்லை மாவட்டம் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை தாமிரபரணி கரையோர மக்கள் குடியிருப்புகள் வெள்ளத்தில் சூழ்ந்தது.

    செய்துங்கநல்லூர் அருகே உள்ள கொங்கராயக்குறிச்சி, தூத்துக்குழி, சந்தையடியூர், எஸ்.என்.பட்டியூர், அய்யனார்குளம் பட்டி, மணக்கரை, ஆழ்வார்கற்குளம், பத்மநாப மங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

    குறிப்பாக ஆழிக்குடி கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதையறிந்த அனவரநல்லூர் கிராம மக்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவத்தினர், மீனவர்கள் உள்ளிட்டோர் அக்கிராமத்தில் இருந்த 800 பேரை படகுகள் மூலம் பத்திரமாக மீட்டு பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

    இதே போல் முத்தாலங்குறிச்சி, நாணல்காடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 1,500 கிராம மக்கள் மீட்கப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் பகுதி முழுவதும் தாமிரபரணி வெள்ளம் சூழ்ந்து தனித்தீவாக மாறி உள்ளது.

    தூத்துக்குடியில் நேற்று காலை முதல் மழை ஓய்ந்துள்ளது. எனினும் சாலையில் தேங்கிய தண்ணீர், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் ஆகியவற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக தூத்துக்குடி-திருச்செந்தூர், நெல்லை-திருச்செந்தூர் சாலைகள் துண்டிக்கப்பட்டு தற்போது வரை சாலை போக்குவரத்து தொடங்கவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், வசவப்ப புரம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, வல்லநாடு, புதுக்கோட்டை, கோரம்பள்ளம், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பாதுகாப்பு கருதி அங்கு மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    தொலை தொடர்பு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் அவர்களது உறவினர்கள் கடந்த 4 நாட்களாக தவித்து வருகிறார்கள்.

    தொடர்பு கொள்ள முடியும் நிலையில் உள்ளவர்களின் செல்போன்கள் மின்வசதி இல்லாததால் சார்ஜ் செய்ய முடியாததால் அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு படையினரும், துணை ராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.

    இதற்கிடையே கூடுதலாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதிப்பு பகுதிகளுக்கு விரைந்து உள்ளனர். தேவைப்பட்டால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும் மீட்பு குழுவினர் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 25-க்கும் மேற்பட்ட ராணுவ குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆறாம் பண்ணையில் இருந்து மணக்கரை செல்லும் ரோடு மூழ்கி உள்ளது. மாவட்டத்தில் மழை வெள்ளம் புகுந்ததால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் தூத்துக்குடி மாநகர் பகுதியில் சில இடங்களிலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இன்று 4-வது நாளாகவும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

    திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழையால் தோப்பூர் பகுதியில் உள்ள கால்வாயில் வரும் மழைநீர் நிரம்பி அப்பகுதி சாலை வழியாக தெப்பகுளம் முன்புள்ள சாலையில் வெள்ளமாக மழைநீர் ஓடியது.

    அப்பகுதியில் மழைநீர் முட்டளவு முதல் இடுப்பளவு வரை மழை நீர் வெள்ளமாக ஓடியதால் அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மற்றும் சாலையை கடக்கும் அப்பகுதி பொதுமக்கள் படகு மூலம் மழைநீரை கடந்து சென்றனர்.

    மேலும் இந்த மழைநீர் காமராஜர் சாலை வழியாக டிபி ரோடு மற்றும் பகத்சிங் பஸ் நிலையம், மார்க்கெட் வழியாக அப்பகுதியில் உள்ள கால்வாய்க்கு சென்றது. அதேபோல், திருச்செந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீரானது குளம் போல தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமபட்டனர்.

    தூத்துக்குடி மாநகர் பகுதியில் திருச்செந்தூர், காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, தென்திருப்பேரை, ஏரல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.

    மாவட்டத்தின் புறநகர் பகுதிகள் மற்றும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும் துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. படகுகள் மூலம் மீட்கப்படும் பொதுமக்கள் அருகே உள்ள திருமண மண்டபங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

    அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்கள், அரசு மருத்துவமனை, தொழிற்சாலைகள், வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் மழை ஓய்ந்தும் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. அதனை அகற்றி இயல்பு நிலை திரும்ப தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. #Rain

    நெல்லை:

    நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பகலில் வானம் மேகமூட்டத்துடனும் மாலையில் மழையும் பெய்து வருகிறது. இரவு விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக ராதாபுரம் கடலோரப்பகுதியில் 5.2 மில்லிமீட்டரும், நம்பியாறு அணைப்பகுதியில் 5 மில்லிமீட்டரும், பாபநாசம் அணைப்பகுதியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 797 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 395 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 119.75 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 132.45 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைப் பகுதியில் 1 மில்லிமீட்டர் அளவுக்கு மட்டுமே மழை பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 256 கனஅடி தண்ணீர் வருகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை 96.75 அடியாக உள்ளது. இதுபோல மற்ற அணைகளுக்கும் குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரப்பகுதியில் பரவலாக கனமழையும், சாரல்மழையும் மாறிமாறி பெய்து வருகிறது. அதிகபட்சமாக சூரங்குடி பகுதியில் 27 மில்லிமீட்டரும், வைப்பாறு பகுதியில் 22 மில்லிமீட்டரும் பெய்துள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், குலசேகரப்பட்டினம் பகுதியிலும் ஒரளவு நன்றாக மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    ராதாபுரம்-5.2, நம்பியாறு-5.00, பாபநாசம்-4, பாளை-2, சேர்வலாறு-2, நாங்குநேரி-2, அம்பை-1, மணிமுத்தாறு-1

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலைவரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    சூரங்குடி-27, வைப் ‘பார்-22, ஸ்ரீவைகுண்டம்-16.5, ஓட்டப்பிடாரம்-14, திருச்செந்தூர்-14, குலசேகரபட்டினம்-12, விளாத்திகுளம்-12, தூத்துக்குடி-7.2, வேடநத்தம்-7, கடம்பூர்-6, சாத்தான்குளம் -6, கீழஅரசடி-5.6, காயல்பட்டினம்-3, கயத்தாறு-1, கோவில்பட்டி-1. #Rain

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.#Rain

    நெல்லை:

    தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் மழை கொட்டியது. செங்கோட்டை, குற்றாலம், அம்பை, பாளை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணைப்பகுதியில் 49 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 33 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. இந்த மழையினால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் ஓடியது. ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு மழை காரணமாக மின் தடை ஏற்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

    பாபநாசம், குற்றாலம், களக்காடு மலைப்பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 104.65 அடியாக இருந்தது. இன்று இது 105.30 அடியாக அதிகரித்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.


     

    118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.40 அடியாக உள்ளது. இதேபோல 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் 63அடியாகவும், 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 53.50அடியாகவும், 72.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 59.39 அடியாகவும் உள்ளன.

    36.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் ஏற்கனவே தென்மேற்கு பருவ மழையினால் நிரம்பியது. பின்னர் பாசனத்துக்கு அணையில் இருந்து தண்னீர் திறந்து விடபப்ட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் இந்த அணை மீண்டும் நிரம்பியது. இதேபோல 23.60 உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணை ஏற்கனவே தென்மேற்கு பருவம்ழையினால் நிரம்பியது. இந்த அணையின் நீர்மட்டம் நேற்று 21.31 அடியாக இருந்தது. இன்று இந்த அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

    50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு அணை 20 அடியாகவும், 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 30 அடியாகவும், 132.22 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 83 அடியாகவும் உள்ளன.

    குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழையினால் நேற்று முன்தினம் மாலையில் மெயினருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பேருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்ருலா பயணிகள் குளிக்க தடை விதிக்கபப்ட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை வெள்ளம் குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கபப்ட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் மழை கொட்டியதால் அருவிகளில் வெள்ளப்பேருக்கு ஏற்பட்டது. இன்று காலையும் அருவிகளில் அதிகளவு தண்ணீர் விழுகிறது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தான்டி மழை தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தொடர் மழை காரணமாக நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் பயிர்கள் முளைவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே பெய்த மழையினால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. அவற்றை வெளியேற்றும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்ததால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. #Rain

    ×