என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனமழை"

    • 7 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இந்தாண்டில் 4-முறை மேட்டூர் அணை நிரம்பியது.

    இதற்கிடையே கடந்த சிலநாட்களாக மழை நின்றதால் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம்கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகாவில் உள்ள குடகு, சிக்கமகளூரு, கோலார், தட்சிணகன்னடா, உடுப்பி, ஹாசன், சிவமொக்கா ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக 7 மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.80 அடியாக உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாத தொடக்கத்தில் தீவிரம் அடைந்து அதன்பிறகு படிப்படியாக குறைந்தது. தற்போது மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அணைகள், அருவிகள், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேகமலை பகுதியிலும் நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வார விடுமுறை நாட்களில் அருவிகளில் நீராட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ளது. நீர்வரத்து 1466 கன அடி. நீர் திறப்பு 969 கன அடி. நீர் இருப்பு 4337 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.80 அடியாக உள்ளது. வரத்து 921 கன அடி. திறப்பு 1419 கன அடி. இருப்பு 4654 மி.கன அடி.

    மாவட்டத்தில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகாரிக்கும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.
    • பல நகரங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    நாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா மற்றும் வட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள குலு பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டது. மேக வெடிப்பால் அங்கு கனமழை பெய்தது.

    இதனால் மலை ஓடைகள், ஆறுகள், காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    கன்யாராவில் பகுதியில் உள்ள ஓடையின் அருகே அரசு நீர்மின் திட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அங்கு தற்காலிக குடில் அமைத்து தங்கியிருந்தனர்.

    அங்கு திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    இதில் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் பல நகரங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    • களக்காடு தலையணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • நம்பியாற்றில் குளிக்கவும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர் வனப்பகுதியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலை நம்பி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவில் கனமழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்லவும், நம்பியாற்றில் குளிக்கவும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    இதேபோல் களக்காடு தலையணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தடுப்பணையை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. இதனால் தலையணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வன சரகர் யோகேஸ்வரன் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தலையணையை சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளப்பெருக்கு குறையாததால் இன்று 2-வது நாளாக தடை நீடிக்கிறது.

    • ஐந்தருவியில் 5 கிளைகளும் தெரியாத அளவிற்கு தண்ணீர் விழுகிறது.
    • மழை பெய்து வருவதுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் தென்காசி மாவட்டத்தில் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையத்தால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதல் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனப்பகுதிக்குள் தொடர்ந்து கனமழை பெய்தது.

    இதன் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 6 மணி முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இரவு முதல் இன்று காலை வரை வனப்பகுதிக்குள் மழை தொடர்வதால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து செம்மண் நிறத்தில் விழ தொடங்கியுள்ளது.

    ஐந்தருவியில் 5 கிளைகளும் தெரியாத அளவிற்கு தண்ணீர் விழுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டியும், பழைய குற்றால அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த தடையானது தொடர்ந்து நீடிக்கிறது.


    குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகள் முழுவதும் வானம் கருமேகக் கூட்டங்கள் நிறைந்து, சாரல் மழை பெய்து வருவதுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் தென்காசி மாவட்டத்தில் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.

    வனப்பகுதிக்குள் மழைப்பொழிவு குறைந்து அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    தடையால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் தூரத்தில் நின்று அருவிகளை பார்த்து குளிக்க முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

    • நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நீரில் மூழ்கி சாய்ந்தன.
    • விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி புதுச்சேரியில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவு முதல் கனமழைகொட்டி வருகிறது. இந்த தொடர் மழையினால் புதுவையின் நெற் களஞ்சியமாக திகழும் பாகூர் பகுதியில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.

    மேலும் வில்லியனூர், நெட்டப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், பாகூர், ஏம்பலம், கோர்க்காடு பகுதியிலும் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

    ஒரு சில வாரங்களில் அறுவடை செய்ய விவசாயிகள் தயாராக இருந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளன.

    இதுபோல் திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழையின் காரணமாக திருக்கனூர், கைக்கிலப்பட்டு, சந்தை புதுக்குப்பம் உள்ளிட்ட பல கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நீரில் மூழ்கி சாய்ந்தன.

    நெற்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஏரலிலும் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
    • கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தென் மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் தண்ணீர் பாய்ந்து ஓடியது. இன்று காலை முதலே வானம் மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காலை 8.30 மணி முதல் சாரலாக தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக பெய்தது. இதனால் பணிக்கும், அலுவலகங்களுக்கும் புறப்பட்டு சென்றவர்கள் அவதி அடைந்தனர். ஏரலிலும் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

    உடன்குடி மற்றும் சுற்றுப்புறபகுதியான பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மாதவன்குறிச்சி, கொட்டங்காடு, செட்டியாபத்து. லட்சுமிபுரம், மருதூர்கரை, பிச்சிவிளை, வட்டன்விளை, சீர்காட்சி ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்தது.

    இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் ஆகியோர் பயணம் செய்ய கடும் சிரமப்பட்டனர். இதனால் முக்கியமான பஜார் சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கியது.

    இதேபோல் மெஞ்ஞானபுரம், செம்மறிகுளம், வள்ளியம்மாள்புரம், நங்கைமொழி, மாநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இன்று காலை 9 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.


    மெஞ்ஞானபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள விஜிகுமரன்நகர் பகுதியில் தேங்கிய தண்ணீரை 3 மின் மோட்டார் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல் ஷாலோம் நகரில வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இந்த தண்ணீரை மின் மோட்டார் மூலம் அகற்றும் பணியை பஞ்சாயத்து தலைவர் கிருபா ராஜபிரபு செய்து வருகிறார். கடந்த மாதம் பெய்த கனமழையால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து 25 நாட்கள் ஆகியும் சில இடங்களில் இயல்பு நிலை திரும்பாமல் சுமார் 100-க்கு மேற்பட்டோர் நிவாரன முகாம்களிலும், சிலர் தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளில் மேலும் கூடுதலாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்பு அடைந்த நிலையில் இன்று கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

    • தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. மேலும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருருப்பதாவது:-

    கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழையாலும், தாமிரபரணி ஆற்றில் அதிகபடியான மழைநீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், உப்பாற்று ஓடை கரையோர பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திடீரென கனமழை பெய்தது.
    • ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 1 மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென மழை பெய்தது.

    தொடர்ந்து நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் அடித்த நிலையில் நேற்று மாலையில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரை யிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

    நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் தொடங்கிய மழை நள்ளிரவு வரையிலும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.

    சேரன்மகாதேவியில் 29.60 மில்லிமீட்டர் மழை பெய்தது. அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் பகுதிகளிலும் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் இரவு முழுவதும் பயங்கர இடி-மின்னலும் காணப்பட்டது. அம்பையில் 40.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராதாபுரத்தில் 21 மில்லிமீட்டரும், நாங்கு நேரியில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 40 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 23.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 251 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 98 அடியாக உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.

    மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாக நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக நாலுமுக்கில் 26 மில்லி மீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 21 மில்லி மீட்டரும் மழை பெய்தது. காக்காச்சியில் 18 மில்லி மீட்டர், மாஞ்சோலையில் 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாநகரில் டவுன், பேட்டை, சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை சமாதானபுரம், மார்க்கெட் பகுதிகள், கே.டி.சி. நகர், என்.ஜி.ஓ. காலனி, டக்கம்மாள் புரம், மேலப்பாளையம் என மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் சென்ற வாகனங்கள் கடும் மழையால் சாலைகளில் ஊர்ந்தபடி சென்றதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    பாளை பகுதியில் விடிய விடிய பெய்த மழை காரணமாக இரவில் தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரையிலும் மின்சார வினியோகம் இல்லை. அதன்பின்னரும் மின்சாரம் வருவதும், போவதுமாக இருந்தது. மாநகரில் பல்வேறு இடங்களிலும் கடுமையான மின்வெட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பாளை பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 84 மில்லிமீட்டரும், நெல்லையில் 49 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியது.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

    தென்காசி, ஆய்க்குடியில் தலா 42 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது .மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 48.40 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சி நிலவியது.

    கருப்பாநதி அணை பகுதியில் 67 மில்லிமீட்டர் மழை பெய்தது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வரும் 55 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 43 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 46 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    காயல்பட்டினம் பகுதியில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. அங்கு அதிகபட்சமாக 93 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறு, மணியாச்சி பகுதிகளில் 65 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 55 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழையும் கொட்டியது. இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    விளாத்திகுளம், கீழஅரசடி, வேடநத்தம், குலசேகரப்பட்டினம், சாத்தான்குளம், கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. இரவில் விட்டு விட்டு சாரல் மழையாக மாறி பெய்தது. ஓட்டப்பிடாரம் பகுதியில் இரவில் பெய்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.

    • தமிழகத்தில் மூன்று நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
    • மீனவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு திரும்ப பெறப்பட்டது.

    மண்டபம்:

    தெற்கு வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து தமிழகத்தில் மூன்று நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து வங்கக் கடல், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    அதனால் மண்டபம் விசைப்படகு, நாட்டுப்படகுகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடி தொழிலுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், இன்று (15-ந்தேதி) அனுமதி சீட்டு வழங்கப்படமாட்டாது எனவும் மீன் வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்தார்.

    முன்னதாக மீனவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டது.

    அதன்பேரில் மண்டபம், பாம்பன், மூக்கையூர், ராமேசுவரம், ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட 30-க்கும் மேற் பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நங்கூர மிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

    மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ராமேசுவரம் பகுதி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட் டது. மேலும் அதனை சார்ந்துள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். மீன்பிடி வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

    • மழையின் காரணமாக சுமார் 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
    • தேசிய பேரிடர் மீட்பு படையினர் மக்களை படகுகள் மூலம் மீட்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களுரு நகரில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பெங்களூரு மாநகரமே போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.

    இந்த மழையின் காரணமாக சுமார் 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக அந்த வீடுகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்பு குழுவினர் ரப்பர் படகு, டிராக்டர்கள் மூலம் பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்கவைத்து உள்ளனர்.

    கோகிலு சர்க்கிள் என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து பார்க்கிங் பகுதியில் 5 அடி தண்ணீர் தேங்கி வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.

    இதையடுத்து அங்கு வசித்த பொதுமக்களை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர். பெரும்பாலானவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் கோகிஷ கிராசை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் யலஹங்கா-மாருதி நகர் பிரதான சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் பல மணி நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    மாருதி நகரில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. பெங்களூரு மாநகரின் பல்வேறு இடங்களில் வீடுகளில் சுமார் 2 அடிக்கும், சாலைகளில் சுமார் 3 அடிக்கும் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறிவிட்டது.

    முக்கிய சாலைகள் அனைத்தும் மழை வெள்ளத்தால் ஆறு போல் மாறியது. தொடர்ந்து மீட்பு பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    பெங்களூரு கேந்திரியா விகார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை வெள்ளம் சூழ்ந்தது. அந்த கட்டிடத்தின் தரைத்தள பகுதியில் 6 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. இதனால் அந்த கட்டிடத்தில் இருந்த மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 16 ரப்பர் படகுகளை கொண்டு வந்தனர். அந்த கட்டிடத்தில் இருந்து மக்களை படகுகள் மூலம் வெளியேற்றும் பணியை மேற்கொண்டனர்.

    அந்த குடியிருப்பில் வசித்து வந்த சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பிஸ்கட், தண்ணீர், உணவு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    பெங்களூரு நகரில் இந்த மாதம் வழக்கத்தை விட இரண்டு மடங்கு பெய்துள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்யும் என்று பெலகாவி, தார்வாட், உடுப்பி, சித்ர துர்கா, தும்கூர், ஹாசன், குடகு, மாண்டியா, மைசூரு உள்பட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழையின் காரணமாக அங்குள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அவை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் நீர்நிலை களில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    துங்கபத்ரா அணையில் இருந்து 1லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் துங்க பத்ரா ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பெங்களூரு பாபுஷா பாளையத்தில் கட்டப்பட்டு வந்த 6 மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 6 பேர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் 3 பேர் நேற்று இரவு இறந்த நிலையில் இன்று மேலும் 2 பேர் உயிரிழ்ந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

    • தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
    • வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் பகுதியில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    இந்தநிலையில் திருப்பூர் காங்கேயம்பாளையம் ஏ.டி. காலனி பகுதியை சேர்ந்த பனியன் தொழிலாளியான குமார் என்பவர் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் வீட்டி ற்குள் குமார் மற்றும் அவரது மனைவி சசிகலா, மகன் கிஷோர், மகள் கீர்த்தனா ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர்.


    வீடு இடிந்ததால் இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்து போராடினர். அவர்களின் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி யடைந்த அக்கம்பக்கத்தினர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று 4பேரையும் மீட்டனர். பின்னர் காய மடைந்த அவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 40 வீடுகளை சூழ்ந்த தண்ணீர்


    மேலும் பலத்த மழை காரணமாக திருப்பூர் மங்களம் சாலை கே. வி .ஆர். நகர் , தந்தை பெரியார் நகர் பகுதியில் தாழ்வான பகுதியில் இருந்த 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதில் வீட்டின் கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மளிகை பொருட்கள், பீரோ உள்ளிட்ட பொருட்கள் தண்ணீரில் சேதம் அடைந்தது.

    வீட்டிற்குள் புகுந்த மழை நீரை பொதுமக்களே அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதி கவுன்சிலர் அன்பகம் திருப்பதி மற்றும் விஏஓ.,ஆகியோர் பாதி க்கப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை பணிகளை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை உணவு வழங்கவும், மளிகை பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க ப்பட்டது.

    கோவை, திருப்பூரில் பெய்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வழக்கத்தை விட அதிக அளவு தண்ணீர் பெரு க்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் பெருக்கெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் கரை யோரம் வசிக்கும் மக்களை அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு-44, திருப்பூர் கலெக்டர் முகாம் அலுவலகம் -51.60, திருப்பூர் தெற்கு -48, கலெக்டர் அலுவலகம் -32, அவி னாசி-2, ஊத்துக்குளி-11, பல்லடம் -38, மூலனூர்-7, உப்பாறு அணை -4, காங்கயம்-1.80, உடுமலை -42, அமராவதி அணை -9, திருமூர்த்தி அணை -8, ஐ.பி.,-6, மடத்துக்குளம்-27. மாவட்டம் முழுவதும் மொத்தம் 331.40 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

    ×