என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசவம்"

    • மேலாளருடனான வாட்சப் உரையாடல் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    • உங்களுக்கு இப்போது விடுப்பு கொடுக்க முடியாது. அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

    ஆட்டு மந்தைகளைப் போல பணி நீக்கம் செய்யப்படுவதும், தனிப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாத அளவுக்கு எந்த நேரத்திலும் மீட்டிங், பணிச்சுமை என அலைக்கழிக்கப்படுவதும் கார்ப்பரேட் ஊழியர்கள் நவீன கொத்தடிமைகளாக மாறி வருவதற்காக அறிகுறி என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

    இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பல சம்பவங்களும் அவ்வப்போது வெளிவருகின்றன.

    அந்த வகையில், பிரசவ வலி ஏற்பட்ட மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, தனக்கு 2 நாட்கள் லீவ் வேண்டும் என தனது நிறுவன மேலாளரிடம் கேட்ட ஊழியருக்கு கிடைத்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    மேலாளருடனான வாட்சப் உரையாடல் புகைப்படத்தை பகிர்ந்து Reddit சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட இந்த அனுபவம் விமர்சனங்களை ஏற்ப்படுத்தி வருகிறது

    அந்த பதிவின்படி, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊழியர் பிரசவ வலி ஏற்பட்ட தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அவரை கவனித்துக்கொள்வதற்காக 2 நாட்கள் தனது நிறுவன மேலாளரிடம் விடுப்பு கேட்டுள்ளார்.

    இதற்கு பதியளித்த மேலாளர், 'உங்களுக்கு இப்போது விடுப்பு கொடுக்க முடியாது. அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவியின் பிரசவத்திற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால் மருத்துவமனையில் இருந்து வேலை செய்ய முடியுமா?' என்று பதிலளித்தார்.

    இதற்கு பதிலளித்த ஊழியர்,"அது சாத்தியமில்லை, மருத்துவமனையில் மனைவியை கவனித்துக் கொள்ள வேண்டியவன் நான். மருத்துவக் வாங்க செல்வது போன்ற வேறு வேலைகளும் உள்ளன. மேலும், மருத்துவமனையில் இருந்து அலுவலக வேலைகளைச் செய்வது சாத்தியமில்லை," என்று பதில் கூறியுள்ளார். இதன்பின் மேலாளர் வேண்டா வெறுப்பாக அவருக்கு விடுப்பு வழங்கியுள்ளார். இந்த பதிவு வைரலாகி விமர்சனங்களை குவித்து வருகிறது. 

    • அவருக்கு மறைவான இடம் கூட தரப்படவில்லை.
    • இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    உத்தரகாண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை தரையிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பெண் செவ்வாய்க்கிழமை இரவு ஹரித்வாரில் உள்ள அரசு பெண்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் உறவினப் பெண் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார்.

    பணம் தர முடியாத ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், பணியில் இருந்த மருத்துவர், பிரசவம் பார்க்க முடியாது என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. 

    சிகிச்சை மறுக்கப்பட்ட அந்தப் பெண் பிரசவ வலியில் நகர முடியாமல் மருத்துவமனையின் தரையிலேயே அதிகாலை 1:30 மணியளவில் குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவருக்கு மறைவான இடம் கூட தரப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அது மட்டுமின்றி, குழந்தை பிறந்த பிறகு கர்ப்பிணி பெண்ணிடம் அங்கிருந்த நர்சுகள், "என்ன சுகமாக இருக்கிறதா? இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமா?" என்று நக்கலாக பேசி கேலி செய்துள்ளனர்.

    சம்பவம் குறித்து புகார் எழுந்த நிலையில், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இரவுப் பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் சோனாலி உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்று விரிவான விசாரணை நடந்து வருவதாகவும், அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார். மேலும் பிரசவித்த தாயும் சேயும் நலமாக உள்ளாதாகவும் அவர் தெரிவித்தார். 

    • இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததது.
    • புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளது.

    மத்திய பிரதேசத்தில் அரசு வேலை பறிபோய்விடும் என்ற அச்சத்தில், மூன்று நாட்களே ஆன சிசுவை பெற்றோரே காட்டில் வீசிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் நந்தன்வாடி பகுதியை சேர்ந்தவர் பப்லு தண்டோலியா. அரசுப் பள்ளி ஆசிரியரான இவருக்கும் மனைவி ராஜ்குமாரி தண்டோலியாவுக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த அண்மையில் ராஜ்குமாரிக்கு 4ஆவதாக ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 3 நாட்களுக்கு பிறகு காட்டுக்குள் கொண்டு சென்று ஒரு கல்லின் ஓரத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

    மத்தியப் பிரதேச அரசு ஜனவரி 26, 2001 அன்று மத்தியப் பிரதேச அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் 'இரண்டு குழந்தைகள்' மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

    இதை மீறி மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்தால், அவர் அரசுப் பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்படுவார் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இந்தக் கொள்கைப்படி வேலை இழந்துவிடுவோம் என்ற பயத்தாலேயே இந்தக் கொடூரச் செயலைச் செய்ததாகப் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    காலையில் நடைபயிற்சிக்குச் சென்ற கிராம மக்கள் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, கல்லிடுக்கில் கிடந்த குழந்தையைக் கண்டுபிடித்து, காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.

    மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு, இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை அளித்தனர். இதைதொடர்ந்து குழந்தை பத்திரமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

     தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  

    • கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர்.
    • பிரசவம் நடந்தபிறகு ஜெஸ்வீனா திடீரென மயங்கினார்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராசிகுல். இவரது மனைவி ஜெஸ்வீனா (வயது30). இவர்களுக்கு 4 வயதில் ஜோஹிருல் என்ற மகன் இருக்கிறான். ராசிகுல் தனது மனைவி மற்றும் மகனுடன் கேரளாவில் வாழ்ந்து வந்தார். கூலி வேலைகளுக்கு சென்று தனது மனைவி மற்றும் மகனை காப்பாற்றி வந்தார்.

    இந்தநிலையில் ஜெஸ்வீனா மீண்டும் கர்ப்பமானார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராசிகுல் தனது மனைவி மற்றும் மகனுடன் கண்ணூர் மாலோடு பகுதியில் ஒரு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த ஜெஸ்வீனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தில் அவருக்கு அழகிய குழந்தை பிறந்தது. இந்தநிலையில் பிரசவம் நடந்தபிறகு ஜெஸ்வீனா திடீரென மயங்கினார். சுயநினைவை இழந்த அவரை அவரது குடும்பத்தினர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு ஜெஸ்வீனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தலைமறைவாகினர். ஜெஸ்வீனாவுக்கு புதிதாக பிறந்த குழந்தை மற்றும் மகன் ஜோஹிருல் ஆகியோரை தனியாக தவிக்க விட்டுவிட்டு அவர்கள் மாயமாகினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்பு ஜெஸ்வீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு புதிதாக பிறந்த குழந்தையை மீட்டு பரியாரத்தில் உள்ள கண்ணூர் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவரது மகன் ஜோஹிருலை சைல்டு லைன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவன் அவர்களது பராமரிப்பில் உள்ளான்.

    வீட்டில் பிரசவம் பார்த்ததால் பெண் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் ஜேஸ்வீனாவின் கணவர் மற்றும் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள்.
    • கிரகணம் தொடர்பாக கர்ப்பிணிகள் எல்லோருமே சில கேள்விகளை கேட்கிறார்கள்.

    பெண்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் சிறந்த தருணம் என்பது கர்ப்ப காலம் மற்றும் பிரசவ நேரம் ஆகியவை ஆகும். இந்த காலகட்டம் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு, வயதில் மூத்த பெண்கள் பலரும் பல்வேறு அறிவுரைகளை கூறுவார்கள். அவற்றில் எது நல்லது, எது கெட்டது என்பதை ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணி பெண்களுக்கு உணவு விஷயத்தில் ஏற்படுகிற சந்தேகங்கள்:

    மேலும் கர்ப்ப காலத்தின்போது என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்கிற சந்தேகங்களும் நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கிறது.

    வயதில் மூத்த பெண்கள் பலரும் அறிவியல் அடிப்படை இல்லாமல் தங்களின் அனுபவத்தில் ஏற்பட்ட ஏராளமான விஷயங்களை கர்ப்பிணி பெண்களிடம் சொல்வதால்தான், கர்ப்ப காலத்தின்போது கர்ப்பிணி பெண்கள் பல விஷயங்களையும் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இது அவர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக அமைகிறது. இதைப்பற்றி இன்னும் சில சுவையான விஷயங்களை பார்க்கலாம். ஏனென்றால் இதெல்லாம் கர்ப்பிணிகள் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய முக்கியமான விஷயங்கள் ஆகும்.

    பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மனதில் பலவிதமான குழப்பங்கள் இருக்கும். வயிற்றில் இருக்கும் குழந்தையை தான் கவனிப்பதற்கு கடைபிடிக்கும் விஷயங்கள் சரியா? தவறா? கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி பாதுகாப்பாக பார்க்க வேண்டும்? அதற்காக என்ன சாப்பிட வேண்டும் என்று பலவிதமான சந்தேகங்களும், எதிர்பார்ப்புகளும் இருக்கும்.

    பல நேரங்களில் இதுபோன்ற விஷயங்களால் கர்ப்பிணி பெண்களின் மனதில் பெரிய அளவிலான அழுத்தங்களும் ஏற்படும். மேலும் கர்ப்ப காலத்தின்போது அவ்வப்போது எதிர்கொள்ளும் அல்லது உணரும் விஷயங்களால் ஒவ்வொரு நாளுமே கர்ப்பிணிகளுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

    ஆனால் இதை யாரிடம் போய் கேட்பது என்று தான் அவர்களுக்கு தெரியாது. ஏனென்றால் எல்லாம் அறிந்தவர்கள் என்று நிறைய பேர் சொல்வதையெல்லாம் அவர்கள் சரி என்று நினைப்பார்கள். ஆனால் சில நேரங்களில் அதில் அறிவியல் அடிப்படை என்பது இருக்காது. இதனால் அவர்கள் சொல்வது சில நேரங்களில் தவறாக அமையும். இந்த வகையில் கர்ப்ப காலத்தை பற்றி பலவிதமான தவறான தகவல்கள் இன்றைக்கு உலா வந்து கொண்டுதான் இருக்கிறது.

    கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா?

    இதில் உணவு விஷயத்தில் கர்ப்பிணிகள் நிறைய பேருக்கு பலவிதமான சந்தேகங்கள் ஏற்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணவு விஷயத்தில் முதலில் என்னிடம் கேட்பது, 'டாக்டர்... கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிடலாமா? பப்பாளி சாப்பிடக்கூடாது என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நான் அது தெரியாமல் பப்பாளி சாப்பிட்டு விட்டேன், எனக்கு கருச்சிதைவு ஏற்படுமா?' என்று கேட்பார்கள்.

    அவர்களுக்கு நான் சொல்லும் பதில், கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாம். அதில் எந்த தவறும் இல்லை. பப்பாளி பழத்தில் உள்ள போலிக் அமிலம் குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கர்ப்ப காலத்தில் நன்மை பயக்கும்.

    ஆனால் அதில் ஒரே ஒரு விஷயம், பப்பாளி காயாக இருக்கும்போது கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது. அதேபோல் பாதி பழுத்த பப்பாளியையும் அவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் பப்பாளி காயாக இருக்கும்போது அதில் உள்ள லேடெக்ஸ் எனப்படும் பொருள் பல நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு வயிற்று வலியை உண்டாக்கலாம்.

    அது மென்மையான தசைகளை சுருங்கச் செய்யக்கூடிய தன்மை கொண்டது. இதனால் கர்ப்பப்பையில் எரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் வயிற்றுவலி ஏற்படலாம். மேலும் கருப்பையை சுருங்க வைத்து சில நேரங்களில் கருச்சிதைவையும் ஏற்படுத்தலாம். இதுவே நன்றாக பழுத்த பப்பாளியில் இந்த பொருள் எதுவுமே இருப்பதில்லை. எனவே பப்பாளி பழமாக இருக்கும்போது கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.

    இதேபோல் சிலர் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள். ஆனால் அன்னாசிப்பழம் எந்த வகையிலும் கருச்சிதைவை உருவாக்குவதில்லை. இதெல்லாம் தவறான கருத்துக்கள். ஆனால் கர்ப்பிணிகள் அன்னாசிப்பழத்தை மிதமான அளவிலேயே சாப்பிட வேண்டும்.

    பல நேரங்களில் 'பேரிச்சம்பழம் சாப்பிட்டால் குழந்தை கருப்பாக இருக்கும் என்று சொல்கிறார்களே டாக்டர்' என்பார்கள். அதுவும் தவறுதான். பேரிச்சம்பழத்தில் இரும்பு சத்து இருக்கிறது, புரோட்டீன் இருக்கிறது, நிறைய நுண் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தேவை. இதெல்லாம் அவர்கள் உட்கொள்கின்ற உணவுப் பழக்க வழக்க முறைகளில் தவறான கருத்துக்களாக சொல்லப்படுகின்றன. எனவே கர்ப்பிணி பெண்கள் இதில் தெளிவு பெற வேண்டும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    கர்ப்பிணிகளுக்கு வாந்தி அதிகம் ஏற்பட்டால் பெண் குழந்தை பிறக்குமா?

    மேலும் பெண்கள் கர்ப்பகாலத்தில் எதிர்நோக்குகின்ற பலவிதமான பிரச்சினைகளுக்கும் ஏதாவது அறிவியல் அடிப்படை இருக்கிறதா என்பதை பார்க்கலாம். பொதுவாக கர்ப்பிணி பெண்கள் பலரும் வாந்தி எடுப்பது வழக்கம். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அதிகாலையில், அதிக அளவில் வாந்தி எடுத்தால் அது பெண் குழந்தை என்று பலரும் கர்ப்பிணிகளிடம் சொல்கிறார்கள்.

    கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் தான் நிறைய வாந்தி வரும். அதிகமாக வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தால் அது பெண் குழந்தைகள் தான் என்று பலரும் சொல்லி விடுவார்கள். இது சரியா தவறா என்று பார்த்தால், இதுபற்றி கடந்த 2014-ம் ஆண்டு ஒரு ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வில் கருவில் பெண் குழந்தையை சுமக்கின்ற பெண்களுக்கு, சற்று அதிகமாக வாந்தி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்தார்கள்.

    அதற்காக ஆண் குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு வாந்தி வராது என்பது அர்த்தமல்ல. பொதுவாக பெண் குழந்தையை சுமந்தால் அதிகமாக வாந்தி வருகிறது என்பதை இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 2 ஆயிரம் கர்ப்பிணி பெண்களிடம் ஆராய்ச்சி செய்து இதை கண்டுபிடித்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    மேலும் கிரகணம் தொடர்பாக கர்ப்பிணிகள் எல்லோருமே சில கேள்விகளை கேட்கிறார்கள். 'டாக்டர்... சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் பலரும் பரிசோதனைக்கு வருவதில்லை. சூரிய கிரகணத்தின்போது பிரசவத்துக்கு கூட கர்ப்பிணிகள் பெரும்பாலும் வெளியே வருவதில்லையே ஏன்?' என்பார்கள்.

    கர்ப்பமாக இருப்பதற்கும், சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணத்திற்கும் ஏதாவது அறிவியல் ரீதியான அடிப்படை இருக்கிறதா என்பதை பார்த்தால், இன்றும் பலவிதமான விஞ்ஞான முறைகளில் ஆய்வு செய்த வரைக்கும், சூரிய கிரகணத்தினாலோ அல்லது சந்திர கிரகணத்தினாலோ எந்த விதமான பாதிப்பும் கர்ப்பத்துக்கு ஏற்பட்டது இல்லை, கர்ப்பிணிகளுக்கும் ஏற்பட்டது கிடையாது.

    கிரகணத்தின்போது கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவது, அதனால் கர்ப்பம் பாதிக்கப்படுவது என்பது தவறான கண்ணோட்டம் தான். இதற்கு எந்த விதமான விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லை. இதை நினைத்து யாரும் பயப்பட வேண்டியதில்லை.

    என்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு கர்ப்பிணி பெண், 'டாக்டர்... கிரகணத்தை கவனிக்காமல் நான் சிகிச்சைக்கு வந்து விட்டேன். எனது குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ?' என்று கேட்டார். கிரகணம் பற்றிய அவர்களின் பய உணர்வு தான் பிரச்சினைகளை உருவாக்கும். சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் கர்ப்பத்துக்கு கண்டிப்பாக எந்தவித பாதிப்பையும் உருவாக்காது.

     

    கர்ப்பிணி பெண்கள் 'ஹேர் டை' பயன்படுத்தலாமா?

    தற்காலத்தில் பெண்கள் கேட்கிற ஒரு முக்கியமான விஷயம், 'டாக்டர்... நான் கர்ப்பமாக இருக்கும்போது 'ஹேர் டை' பயன்படுத்தலாமா?' என்பார்கள். குறிப்பாக வயது அதிகமாக இருக்கும் பெண்கள் கர்ப்பமான பிறகு எங்களிடம் பரிசோதனைக்கு வருவார்கள். அவர்கள் கர்ப்ப காலத்தின்போது 'ஹேர் டை' போடுவதில்லை, ஆனால் ஹேர் டை போடலாமா என்று கேட்கிறார்கள்.

    அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள், அந்த கர்ப்பிணிகளிடம், 'நீ ஹேர் டை போடக்கூடாது, ஹேர் டை போட்டால் குழந்தைக்கு பிரச்சினை வரும், குழந்தை வயிற்றிலே இறந்துவிடும் அல்லது குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும்' என்று பயமுறுத்துகிறார்கள். இது சரியா, தவறா என்று பார்த்தால், பல ஹேர் டைகளில் இருக்கிற சில ரசாயனங்கள் சில நேரங்களில் கர்ப்பிணி பெண்களின் உடலில் சேரலாம். அவை ரத்தத்தில் கலந்தால் சில நேரங்களில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    அந்த வகையில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்தவுடன் முதல் 3 மாதங்களுக்கு 'ஹேர் டை' பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதன்பிறகு அவர்கள் 'ஹேர் டை' போடுவதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவது குறைவாகிறது. எனவே கர்ப்ப காலத்தில் 'ஹேர் டை' பயன்படுத்துவது என்பது தவறு என்கிற கருத்து கிடையாது. கர்ப்பிணிகள் 3 மாதங்களுக்கு பிறகு கண்டிப்பாக 'ஹேர் டை' போடலாம்.

    கர்ப்பிணிகளுக்கு இதுபோல இன்னும் பல விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் இருக்கிறது. அதாவது, உடற்பயிற்சி செய்யலாமா? 2 மடங்கு சாப்பிட வேண்டுமா? அடிக்கடி வரும் வயிற்றுவலி, எப்படி படுத்து தூங்க வேண்டும்? தாம்பத்திய உறவு கொள்ளலாமா? காபி குடிக்கலாமா என்பது போன்ற சந்தேகங்கள் ஏற்படுகிறது. அந்த சந்தேகங்களுக்கான விளக்கங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • வீட்டில் பிரசவம் பார்க்கும்போது பல பெண்களும், குழந்தைகளும் உயிரிழக்கிறார்கள்.
    • கர்ப்பமாக இருக்கும்போது குங்குமப்பூ நிறைய சாப்பிட்டு அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்கள் தான் அதிகம்.

    தாய்மை அடையும் நேரம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம் ஆகும். எனவே பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டம் என்பது கர்ப்பகாலம் மற்றும் பிரசவ நேரம் ஆகியவை தான். இதைத்தான் ஒவ்வொரு பெண்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குகிறார்கள். அந்த அளவுக்கு கர்ப்பம், பிரசவம் ஆகியவை பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது.

    கர்ப்பிணி பெண்களுக்கு வயதில் மூத்த பெண்கள் கூறும் தவறான அறிவுரைகள்:

    கர்ப்ப காலமும், பிரசவ நேரமும் எல்லா பெண்களுக்கும் மகிழ்ச்சியான காலகட்டமாக அமைவதில்லை. கர்ப்பம், பிரசவம் ஆகியவை பெண்கள் மட்டுமே சந்திக்கும் பிரத்தியேகமான விஷயங்கள் ஆகும். இந்த விஷயங்களில் பெண்கள் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் பலருக்கும், வயதில் மூத்த பெண்கள் பலரும் பல்வேறு அறிவுரைகளை கூறுவார்கள்.

    ஆனால் அந்த அறிவுரைகளில் சரியான விஷயங்களும் இருக்கும், சில நேரங்களில் தவறான விஷயங்களும் இருக்கும். அதாவது தவறான விஷயங்களை தவறு என்று அறியாமலேயே அவர்கள் சரியானது என்று கூறுவார்கள். அப்படி நிறைய விஷயங்கள் கர்ப்பிணிகளின் காதில் வந்து விழும்.

    ஆனால் இவற்றில் எது நல்லது? எது கெட்டது என்பது பல நேரங்களில் அந்த கர்ப்பிணி பெண்கள் அறியாத ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் இதைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் இன்றைக்கு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற முக்கியமான விஷயமான கர்ப்பம் மற்றும் பிரசவம் என்பது மிகவும் சீரான முறையில், நல்ல முறையில் இருக்க வேண்டும். அந்த கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தம் எதுவும் இல்லாமல், நல்ல மகிழ்ச்சியோடு இருந்தால் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும். பிரசவத்தின்போது தாய் சேய் இருவரும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும்.

    இந்த வகையில் கர்ப்ப காலத்தின்போது பெண்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் ஆகியவை எக்கச்சக்கம் இருக்கிறது. மேலும் சமுதாய ரீதியாக ஏற்படும் பல பிரச்சனைகளும் கர்ப்பிணி பெண்களின் வாழ்க்கையில் பங்கு வகிக்கிறது.

    வீட்டிலேயே பிரசவம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:

    மருத்துவத்துறை இப்போது எவ்வளவோ முன்னேறியுள்ளது. ஆனால் இந்த காலகட்டத்திலும் வீட்டில் பிரசவம் பார்க்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிரசவம் எங்கு, எப்படி, யாரால் பார்க்கப்படுகிறது என்று கடந்த 2018-ம் ஆண்டிலேயே உலக அளவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த ஆய்வில் நிறைய பேர் வீட்டில் பிரசவம் பார்க்கிறார்கள் என்பதை கண்டறிந்து உள்ளனர். இன்றும் நிறைய பேர் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதை நாம் கேள்விப்படுகிறோம். யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்தேன் என்று நிறைய பேர் கூறுகிறார்கள்.

    பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு போனால் குளுக்கோஸ் ஏற்றுகிறார்கள், ஊசி போடுகிறார்கள், சிசேரியன் அறுவை சிகிச்சை செய்கிறார்கள், தையல் போடுகிறார்கள் என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. பிரசவம் என்பது இயற்கையாக ஏற்படுவது தானே? கர்ப்பம் இயற்கையாக உருவாகும் நிலையில், பிரசவமும் இயற்கையாகத்தானே இருக்க வேண்டும் என்பது போன்று பலரது கருத்துக்கள் உள்ளன.

    அந்த கருத்துக்களில் தவறு இல்லை என்றாலும் கூட, அதை முழுக்க முழுக்க சரியென்று பலரும் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்த காலத்தில் வீட்டில் பிரசவம் ஆகவில்லையா என்கிற நம்பிக்கையோடு, தேவையில்லாமல் மருத்துவரை பார்க்க வேண்டாம் என்று எண்ணி, வீட்டிலேயே பிரசவம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இப்போதும் அதிகமாக உள்ளது.

    இதைத்தான் அந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அந்த ஆய்வுகளில் சொல்லியிருக்கக்கூடிய விஷயம், படித்தவர்கள் நிறைய பேர் வசிக்கும் சுவீடன் போன்ற நாடுகளில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 0.1 சதவீதமாக உள்ளது.

    ஆனால் மலேசியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வீட்டில் பிரசவம் பார்ப்பது 19 முதல் 20 சதவீதமாக இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதில் ஒரு விஷயத்தை மட்டும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பதை தவிருங்கள்:

    வீட்டில் பிரசவம் பார்த்தவர்களில், பிரசவம் சரியாக நடந்த ஒருவர் வேண்டுமானால் அதை யூடியூப்பில் போடலாம். ஆனால் வீட்டில் பிரசவம் பார்க்கும்போது பல பெண்களும், குழந்தைகளும் உயிரிழக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருமே அதை யூடியூப்பில் போடுவதில்லை. ஏனென்றால் யூடியூப்பை பார்த்து பிரசவம் பார்க்கும்போது தாயும், குழந்தையும் ஒருவேளை இறக்க நேரிட்டால் அது மிகப்பெரிய பிரச்சனையாகி விடும். எனவே யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பதை தவிருங்கள்.

    அந்த வகையில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஒரு கர்ப்ப காலத்தில் பலரும் பலவிதமான மாற்றுக் கருத்துக்களை கூறுவார்கள். இன்றைக்கும் அந்த காலத்து பெரியவர்கள் சிலர் சொல்லுவார்கள். நாங்கள் அந்த காலத்தில் வீட்டில் தான் பிரசவம் பார்த்தோம். இன்றைக்குத் தான் பெரிய பெரிய மருத்துவமனைகள் வந்துள்ளன. பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து விடுவார்கள். இப்படி சொல்கின்ற அந்தக்கால பெண்கள் அதிகம்.

    காலம் காலமாக பழகி வந்த கலாசாரம் மற்றும் அவர்களுடைய சமூக பழக்க வழக்கம் ஆகியவற்றை பின்பற்றி கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு அந்த காலத்து பெண்கள் நிறைய அறிவுரைகளை சொல்வார்கள். நான் நிறைய பெண்களுக்கு பிரசவம் பார்த்திருக்கிறேன். எனக்கு தெரியாதா என்று விமர்சனம் செய்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    அவர்கள் இப்படி விமர்சனம் செய்வதற்கு அறிவியல் ரீதியாக பிரசவம் பற்றிய புரிதல் இல்லாததுதான் முக்கியமான காரணம் ஆகும். கர்ப்பம் மற்றும் பிரசவம் என்கின்ற இயற்கையான விஷயத்தின் அறிவியல் அடிப்படையே அவர்களுக்கு தெரிவதில்லை. இது தொடர்பான புரிதல் என்பது மிகவும் முக்கியம்.

    அந்த புரிதல் இல்லாததால் தான் பிரசவத்தின்போது வருகிற சவால்கள், என்ன நடக்குமோ என்கிற குழப்பங்கள், இதனால் வருகிற பாதிப்புகள் பற்றி தெரியாமல், நிறைய பேர் ஒரு சில விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டு வீட்டிலேயே பிரசவம் பார்க்கிறார்கள்.

    மேலும் பிரசவம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்கிற தவறான கருத்துக்களையும் சொல்கிறார்கள். அதனால் தான் இன்றைக்கு கர்ப்ப காலத்தில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    குங்குமப்பூ அதிகம் சாப்பிட்டால் கருச்சிதைவு அபாயம்:

    இதேபோல் கர்ப்ப காலத்தின்போது பெண்களுக்கு, எல்லோரும் பலவிதமான அறிவுரைகளை சொல்வார்கள். நான் இதைத்தான் சாப்பிட்டேன், எனது குழந்தை நல்ல கலராக இருந்தது. நான் இதை சாப்பிட்டேன், குழந்தை மோசமாக இருந்தது என்பார்கள்.

    இந்த மாதிரி பலவிதமான உணவு பழக்க வழக்க முறைகளிலும், வாழ்க்கை முறைகளிலும், அவர்கள் என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை தங்களுடைய அனுபவத்தில் இருந்து, இதுதான் சரி என்று எண்ணி, தவறான கருத்துக்களை சொல்வது இன்னும் அதிகமாக இருக்கிறது.

    இன்றைக்கும் சமூக வலைதளத்திலோ அல்லது யூடியூப்களிலோ யாராவது எளிதாக சொல்லி விடுவார்கள். நான் கர்ப்பமாக இருக்கும்போது இதைத்தான் சாப்பிட்டேன், அதனால் எனது குழந்தை நல்ல கலராக இருந்தது என்று பதிவிடுவார்கள். ஆனால் அது உண்மையான தகவலாக இருக்காது.

    அந்த காலத்தில் குங்குமப்பூ சாப்பிட்டால் தான் குழந்தை நல்ல கலராக இருக்கும் என்பார்கள். ஆனால் கர்ப்பமாக இருக்கும்போது குங்குமப்பூ நிறைய சாப்பிட்டு அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்கள் தான் அதிகம். ஏனென்றால் குங்குமப்பூவில் இருக்கிற பல விதமான விஷயங்கள் கருவுக்கும், கரு வளர்ச்சிக்கும் பிரச்சனையாக இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்ட தகவல் ஆகும்.

    இந்த வகையில் கருச்சிதைவு என்பது குங்குமப்பூ அதிகம் சாப்பிடுவதால் ஏற்படுகிறது என்பதை பல ஆய்வுகளில் உறுதி செய்திருக்கிறார்கள். ஆனால் இது தெரியாமல் நிறைய பேர் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை அழகாக இருக்கும், நல்ல நிறமாக இருக்கும் என்கிறார்கள்.

    இதெல்லாம் தவறான கருத்துக்கள். இப்படி பலரும் சமூக ஊடகத்தில் சொல்லும் தவறான கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களை, கர்ப்பிணிகள் சரியானது என்று கருதி, அதை பயன்படுத்தி, அதனால் பலவித பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

    குங்குமப்பூ விஷயம் போலவே, அடுத்ததாக கர்ப்ப காலத்தில் என்னென்ன சாப்பிட வேண்டும், என்னென்ன சாப்பிடக்கூடாது என்கிற சந்தேகங்கள் நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கிறது. அதுபற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

    • கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல.
    • கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.

    கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

    சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் 'கர்ப்ப ரோபோவை' உருவாக்கி வருகிறது.

    சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்த கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன.

    செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்த செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படுகிறது.

    நிஜ வாழ்க்கையில், கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.

    கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

    உண்மையில், இந்த செயற்கை கருப்பை ஒரு புதிய முறை அல்ல என்று டாக்டர் ஜாங் கூறினார்.

    விஞ்ஞானிகள் முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பெற்றெடுத்ததாக அவர் விளக்கினார்.

    இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும், இதற்கு ரூ. 12.96 லட்சம் வரை செலவாகும் என்றும் ஜாங் கூறினார். 

    • பாரதியின் உயிருக்கு ஆபத்து என்பதால் பெண் போலீஸ் கோகிலா தைரியமாக ஆட்டோவில் வைத்தே அவருக்கு பிரசவம் பார்த்தார்.
    • கோகிலாவை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

    திருப்பூர்:

    சுதந்திர தினத்தையொட்டி நேற்றிரவு திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு ஏ.வி.பி., பள்ளி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்தது. அதில் வந்த பெண் கதறி அழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் கோகிலா மற்றும் போலீசார் உடனே ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாரதி என்பவரை பிரசவத்திற்காக இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அவரது கணவர் அழைத்து செல்வது தெரியவந்தது.

    மேலும் பாரதிக்கு பாதி குழந்தை வெளியே வந்த நிலையில் அவர் கதறி துடித்தார். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு முன் குழந்தை பிறந்து விடும் என்பதாலும், பாரதியின் உயிருக்கு ஆபத்து என்பதாலும் நர்சிங் படித்திருந்த பெண் போலீஸ் கோகிலா தைரியமாக ஆட்டோவில் வைத்தே பாரதிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

    இதனைத்தொடர்ந்து உடனடியாக பாரதி மற்றும் குழந்தையை திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில் தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    பாரதிக்கு பிரசவம் பார்த்து அவரது உயிரை காப்பாற்றிய கோகிலாவை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

    இதுதொடர்பாக கோகிலா கூறுகையில், நர்சிங் படித்துள்ள நான் மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளேன். பிரசவங்களும் பார்த்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்புதான் தமிழக காவல்துறை பணியில் சேர்ந்தேன். பிரசவம் பார்த்த அனுபவம் இருந்ததால் எந்தவித பதற்றமின்றி நேற்றிரவு பாரதிக்கு பிரசவம் பார்த்தேன். தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர் என்றார்.

    • விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது
    • இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர்.

    அசாமில் உள்ள ஸ்ரீபூமியைச் சேர்ந்தவர் புலோக் மலாக்கர். இவர் சில்சாரில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளாக கைனகாலஜிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார்.

    இதுவரை சுமார் 50 பிரசவங்களை செய்துள்ளார். அதுவும் சிசேரியன் பிரசவங்கள். இந்நிலையில் அவர் போலி மருத்துவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கடைசியாக ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் போது ஆபரேஷன் தியேட்டரில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.

    மூத்த காவல்துறை அதிகாரி நுமல் மஹாதா கூறுகையில், புலோக் ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்றும், விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது என்றும் கூறினார். ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரியில் போலி மருத்துவர்களைப் பிடிக்க அசாம் அரசு சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.   

    • அந்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து வந்தது.
    • ஆனால் அந்த பெண்ணின் கருப்பை காலியாக இருந்தது.

    உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 30 வயது பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை இருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது.

    அந்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து வந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. ஆனால் அந்த பெண்ணின் கருப்பை காலியாக இருந்தது. பின்னர் மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய பரிந்துரைத்தனர்.

    பின்னர் கல்லீரலின் வலது பக்கத்தில் கரு கண்டுபிடிக்கப்பட்டது. 12 வார வயதுடைய கருவுக்கு வழக்கமான இதயத் துடிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கல்லீரலில் இருந்து வரும் இரத்த நாளங்கள் கருவுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இந்தியாவில் இதுபோன்ற முதல் வழக்கு இதுவாகும்.

    இதுவரை, உலகில் இதுபோன்ற எட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த அரிதான நிலை இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது.

    இதுபோன்ற கர்ப்பம் தாய்க்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது கல்லீரல் சிதைவு அல்லது இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.

    அந்தப் பெண் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். சிக்கலான அறுவை சிகிச்சையைத் திட்டமிட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • பயணிகளில் ஒருவர் எதையோ வெளியே வீசுவதை ஓட்டுநர் கவனித்தார்.
    • அந்தப் பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்து அதை ஜன்னல் வெளியே வீசி கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

    மகாராஷ்டிராவின் பர்பானியில், 19 வயது ரித்திகா திர் என்ற பெண்ணையும் அவரது கணவர் என்று நம்பப்படும் அல்தாஃப் ஷேக் என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    அவர்கள் பயணித்த பேருந்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் பெர்த்கள் இருந்தன. பயணிகளில் ஒருவர் எதையோ வெளியே வீசுவதை ஓட்டுநர் கவனித்தார். கேட்டபோது, அல்தாஃப் தனது மனைவி பேருந்து பயணத்தால் சோர்வாக இருப்பதாகவும், வாந்தி எடுப்பதாகவும் கூறினார்.

    இருப்பினும், இந்த சம்பவத்தை கவனித்த உள்ளூர்வாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை நிறுத்தி விசாரித்தபோது, குழந்தை பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் கூற்றுப்படி, பயணத்தின் நடுவே பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தம்பதியினர் குழந்தையை ஒரு துணியில் சுற்றி வாகனத்திலிருந்து வெளியே எறிந்ததாக தெரிவித்தனர்.

    குழந்தையை வளர்க்க முடியாததால் அதை கைவிட்டதாக தம்பதியினர் போலீசாரிடம் விசாரணையின்போது தெரிவித்தனர். அவர்கள் பர்பானியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒரு வருடத்திற்கும் மேலாக புனேவில் வசித்து வந்தனர் என்றும் தெரியவந்தது. அந்தப் பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    • லோகோ பைலட் ரெயிலை நிறுத்தினார்.
    • இந்த சம்பவத்தின் வீடியோவை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    ஜார்க்கண்டில் ரெயில் தண்டவாளத்தில் யானை தனது குட்டியை பிரசவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ஜார்க்கண்டில் ஒரு கர்ப்பிணி யானை தண்டவாளம் அருகே வந்து பிரசவ வேதனையில் நின்றது. அதே நேரத்தில், அருகில் ஒரு ரெயில் வருவதை உள்ளூர்வாசிகள் கவனித்தனர். அவர்கள் உடனடியாக உஷாராகி ரெயிலை நிறுத்தினர். லோகோ பைலட் ரெயிலை நிறுத்தினார்.

    பின்னர் யானை ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தது. பின்னர், அது மெதுவாக தனது குழந்தையுடன் காட்டுக்குள் நடந்து சென்றது. தாயும் குழந்தையும் பாதுகாப்பாக அகலும் வரை வரை ரெயில் அங்கேயே 2 மணிநேரம் நின்றது.

    இந்த சம்பவத்தின் வீடியோவை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜார்க்கண்ட் வனத்துறை அதிகாரிகளையும், யானையின் பிரசவத்திற்கு உதவியவர்களின் மென்மையான மனதையும் அவர் பாராட்டினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    ×