search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Care"

    பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது மிகவும் அவசியம். பெண்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய ஆரோக்கிய விதிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
    பெண்களுக்கு 10 வயதுக்குள் இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையும், 11 முதல் 20 வயதுக்குள் பூப்பெய்தல், மாதவிடாய்ப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. 21 முதல் 40 வயதுக்குள் ரத்தசோகை, ஃபோலிக் ஆசிட் குறைபாடு, பி.சி.ஓ.டி என்னும் சினைப்பைக் கட்டிகள், மெனோபாஸ், அதீத மாதவிடாய் ரத்தப்போக்கு, எலும்பு அடர்த்திக் குறைவு, உடல் பருமன், அதீத உடல்பருமனால் ஏற்படும் ஆர்த்ரைட்டிஸ், அதிக கொழுப்பால் ஏற்படும் இதயப் பிரச்னைகள், சர்க்கரைநோய் போன்றவை அவர்களைப் பாதிக்கின்றன. 41-ல் இருந்து 60 வயதுக்குள் இதய பாதிப்பு, சர்க்கரை நோய், கண் நோய்கள், எலும்பு அடர்த்திக் குறைவதால் ஏற்படும் எலும்பு முறிவு பிரச்னை போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள்.

    இவர்களில் பலர், தங்களுக்கு ஒரு நோயின் அறிகுறி ஏற்பட்டபிறகும் நேரமின்மை அல்லது அலுவலகப் பணிச்சுமை காரணமாக மருத்துவரிடம் செல்வதில்லை. இது, அனைத்துப் பெண்களிடம் பரவலாகக் காணப்படும் மனநிலையாக இருக்கிறது. பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது மிகவும் அவசியம்.

    பெண்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய ஆரோக்கிய விதிகள் குறித்துப் பார்ப்போம்.

    * வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமல்ல, வீட்டிலிருப்பவர்களும்கூட காலை உணவைத் தவிர்ப்பது வழக்கமாக இருக்கிறது. காலை உணவுதான் அன்றைய நாளின் உற்சாகத்துக்கு அடிப்படை. காலை உணவாக, ஒரு முட்டை, இரண்டு பழங்கள்/ இட்லி, சாம்பார்/ சாண்ட்விச், ஜூஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம்.

    * உடல்பருமன் பல்வேறு நோய்களுக்கு நுழைவுவாயிலாக இருக்கிறது. எனவே, உயரத்துக்கேற்ப உடல் எடையைப் பராமரிப்பது அவசியம். ஒருவருக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 2,000 கலோரி தேவை. ஒருவரின் உடலுழைப்பு, பி.எம்.ஐ அளவைப்பொறுத்து மாறுபடும் என்பதால், உணவியல் நிபுணரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். குறிப்பாக, பெரியளவில் உடலுழைப்பு இல்லாத பணிகளைச் செய்பவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை முடிந்தஅளவு குறைக்க வேண்டும். உணவில் எப்போதும் அதிகமான காய்கறிகள் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.



    * ஹார்மோன் சமச்சீரின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இது மாதவிடாயில் தொடங்கி மகப்பேறுவரை பல்வேறு வகையில் பெண்களைப் பாதிக்கிறது. எனவே, ஹார்மோன்கள் சரியாக சுரக்கின்றனவா என்பதைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதிப்பது நல்லது. பிரச்னை இருந்தால் அதற்கான சிகிச்சைகளை எடுக்க வேண்டும்.

    * உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. தினமும் 30 நிமிடம் யோகா அல்லது ஏதேனும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான தேகத்துக்கு வழிவகுக்கும். உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசித்து, வீட்டிலேயே எளிமையான பயிற்சிகளைச் செய்யலாம்.

    * கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் அண்மைக்காலமாகப் பெண்களை அதிக அளவில் பாதித்து வருகின்றன. எனவே, 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் மார்பகத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் `மாமோகிராம்' (Mammogram) பரிசோதனை செய்வது நல்லது. மார்பகங்களில் வலி, வீக்கம், கட்டிகள், அரிப்பு மற்றும் வேறுவிதமான மாற்றங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டும். பொதுவாக 40-லிருந்து 50 வயதுவரையுள்ள பெண்களுக்குத்தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும். பெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏற்படுவது, மாதவிடாய் சரியாக நிகழாமல் இருப்பது போன்றவை இருந்தால், இந்தப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. `பாப் ஸ்மியர் டெஸ்ட்' (pap smear test ) பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

    * 40 வயதைக் கடந்த பெண்களுக்கு மெனோபாஸ் நின்றுவிடும் என்பதால், ஹார்மோன்களின் சுரப்பு குறைந்துவிடும். இதனால் `ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) எனும் எலும்பின் அடர்த்தி குறையும் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் முதுகு வலி, எலும்பு முறிவு பிரச்னைகள் ஏற்படும். இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் அடர்பச்சை நிறக் கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். எலும்பு மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை உட்கொள்ளலாம்.

    * உடலின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அளவு நீர் அருந்தவேண்டியது அவசியம். மனித உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனதே. எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவும். இதன்மூலம் டிஹைட்ரேசன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்" என்கிறார் காவியா கிருஷ்ணன்.
    வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை குடியிருப்பு அமைக்கவோ அல்லது முதலீட்டு அடிப்படையிலோ வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அடிப்படை தகவல்களை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.
    பெருநகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை குடியிருப்பு அமைக்கவோ அல்லது முதலீட்டு அடிப்படையிலோ வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அடிப்படை தகவல்களை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.

    * அதிகாரம் பெற்ற முகவரிடம் (Power Of Attorney) சொத்து வாங்குவதாக இருந்தால், சொத்தை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். ஒருவேளை விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கலாம். மேலும், அதிகாரம் அளித்தவர் உயிருடன் இல்லையென்றால் அந்த அதிகாரப்பத்திரம் செல்லாது.

    * நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் நிலையில் அதற்கான உரிமை, உடைமை மற்றும் அந்த நிறுவனத்தின் விதிமுறைகள் பற்றியும் தெரிந்துகொள்வது முக்கியம்.

    * சொத்தின் உரிமையாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த சொத்தை வங்குவதற்கு நீதிமன்ற அனுமதி அவசியம்.

    * நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லாத நிலையில், வாரிசு சான்றிதழ் மூலம் வாரிசுகள் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் சம்மதத்துடன் விற்பனை செய்யப்பட வேண்டும். வாரிசுதாரர்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், உயர் நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் மூலம் சொத்துப் பரிமாற்றம் நடக்கவேண்டும்.

    * சொத்துக்கான மூல ஆவணத்தை பெற்று தக்க சட்ட ஆலோசனை பெறவேண்டும். மூல ஆவணம் இல்லாத சொத்துக்கள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் அடமானம் வைக்கப்பட்டதாக இருக்கலாம். அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கு மூல ஆவணம் அடமானத்தில் இருக்கலாம். அந்த நிலையில் வாங்கப்படும் வீட்டின் மீது வங்கிக்கு எவ்வித உரிமையும் இல்லை என்ற சான்றிதழ் (NOC) பெறுவது அவசியம்.

    * சொத்தின் மீதான முந்தைய பரிவர்த்தனைகளை கண்டறிய 30 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழ் பெற்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால் அதற்கான அனுமதி, வரைபட அனுமதி உள்ளிட்ட அனைத்து வித அனுமதிகளையும் பெற்று சரிபார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைபட அளவுக்கும் அதிகமாக, கட்டிடப் பரப்பளவு இருந்தால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வரலாம்.

    * சொத்தின் பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் உள்ள நிலையில் விற்பனை ஒப்பந்தம் செய்து கொண்டு, அதை பதிவு செய்து கொள்வதுதான் சட்டப்படி பாதுகாப்பானது. அந்த ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனை தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் அளிக்கப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
    வேலை வாய்ப்பு, தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய காரணங்களை முன்னிட்டு நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகமானதால், வீடு மற்றும் நிலங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
    தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு, ஒழுங்குமுறை சட்டம் 1976-ல் அமலுக்கு வந்து, 1978-ல் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி 500 சதுர மீட்டருக்கும் அதிகமாக நகர்ப்புற நிலம் வைத்துள்ள எந்த ஒரு தனி நபரும், உரிய அதிகாரியின் முன் அனுமதி பெறாமல் நிலத்தை விற்பனை செய்ய அனுமதியில்லை. அதனால், வீட்டு மனை வாங்கும்போது அந்த நிலம் நகர்ப்புற உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்பதை அறிந்து செயல்படுவதே பாதுகாப்பானது.

    கடந்த 1983-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான ஏக்கர் அளவில் உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டு, கிட்டத்தட்ட 70 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டது. அவற்றில் 48 லட்சம் ஏக்கருக்கும் மேல் நிலமற்ற மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நில உச்ச வரம்பு சட்டத்தில், நிலங்கள் நன்செய் மற்றும் புன்செய் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    நகர்ப்புற நில உச்சவரம்பு

    வேலை வாய்ப்பு, தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய காரணங்களை முன்னிட்டு நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகமானதால், வீடு மற்றும் நிலங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதனால், நகர்ப்புற நிலங்களை முறைப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது ஆகியவை நகர்ப்புற நில உச்ச வரம்புச் சட்டத்தின் நோக்கம் ஆகும். தமிழ்நாடு நிலச்சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம், 1961 (Tamilnadu Land Reforms Fixation of Ceiling on Land Act, 1961 ) இந்திய நாடாளுமன்றம் மூலம் 1964-ம் ஆண்டு ஜூன் 20 நாளன்று 1966-ம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் உள்ளடக்கியதாக கொண்டு வரப்பட்டது.

    இச்சட்டத்தை செயலாக்குவதில், பொதுமக்கள் அடைந்த பாதிப்புகள் குறித்த முறையீடுகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் ஆகியவை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதன் அடிப்படையில், 1978-ம் ஆண்டில் நகர்ப்பகுதி நில உச்ச வரம்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தை அரசு இயற்றியது. இச்சட்டம், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நடைமுறையில் உள்ளது.

    கவனிக்க வேண்டிய குறிப்புகள்

    * ஐந்து உறுப்பினர்களுக்கு மேற்படாத குடும்பத்திற்கான நில உச்சவரம்பானது 15 தரநிலை ( Standard Acres ) ஏக்கர்களாகும்.

    * ஐந்து உறுப்பினர்களுக்கு மேற்பட்டிருக்கும் குடும்பத்தினர்களின் நில உச்சவரம்பு, 15 தரநிலை ஏக்கர்களும், கூடுதலாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 தரநிலை ஏக்கர்களும் ஆகும்.

    * எக்காரணம் கொண்டும் மொத்த உச்ச அளவு 30 தரநிலை ஏக்கர்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    * குடும்பத்து பெண் உறுப்பினர் கொண்டிருக்கும் சீதன நிலத்துடன் சேர்த்து குடும்பம் கொண்டிருக்கும் மற்ற நிலத்தையும் சேர்த்து 15 தரநிலை ஏக்கர்களுக்கு மேற்பட்டிருந்தால், பெண் உறுப்பினர் 10 தரநிலை ஏக்கர்களுக்கு மிகைபடாமல் சீதன நிலத்தை வைத்திருக்கும் உரிமை உண்டு.

    * இடம் அல்லது மனை நில உச்ச வரம்பு சட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தால், சம்பந்தப்பட்ட கிராம கணக்கில் ULT (Urban Land Tax) என்ற குறிப்பு இருக்கும். மேலும், அது சம்மந்தமாக வழக்கு ஏதாவது இருந்தால் நீதிமன்ற ஆணை எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

    ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் வாழ்நாள் காப்பீடு மட்டுமல்லாமல், குறைந்த வட்டி விகிதத்தில் கடனும் அளிக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் வாழ்நாள் காப்பீடு மட்டுமல்லாமல், குறைந்த வட்டி விகிதத்தில் கடனும் அளிக்கின்றன என உங்களுக்குத் தெரியுமா?

    காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது பிற நிதிசார் நிறுவனங்கள் அல்லது வங்கிகள் ஆயுள் காப்பீட்டு பாலிசியை பிணையாகக் கொண்டு இக்கடனை அளிக்கின்றன. ஆனால் இந்தக் கடன் திட்டமானது டெர்ம் இன்சூரன்ஸ் அல்லது யூலிப்ஸ் அல்லது ஈக்விட்டி சார்ந்த திட்டங்களுக்குக் கிடையாது.

    இதில் வழங்கப்படும் கடன் அளவானது பாலிசியின் வகை மற்றும் சரண்டர் மதிப்பு இரண்டையும் பொருத்து வழங்கப்படும். கடன் தொகையானது பாலிசியின் சரண்டர் மதிப்பில் இருந்து குறிப்பிட்ட சதவீத அளவில் வழங்கப்படும். அதிகபட்சம் 80 முதல் 90 சதவீதம் வரை சரண்டர் மதிப்பில் இருந்து கடன் பெற முடியும்.

    இந்தக் கடன் திட்டம், மணி பேக் பாலிசி மற்றும் எண்டோவ்மென்ட் பாலிசிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கடன் பெற, அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை இன்சூரன்ஸ் பாலிசி பத்திரம் அல்லது ஆவணத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். கடன் தொகையைப் பெறுவதற்கான வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

    காப்பீட்டு நிறுவனம் அல்லது நிதி நிறுவனம், இந்தக் கடன் தொகையைச் செயல்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையைக் கட்டணமாகப் பெறும்.

    ‘பர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடனை விட, இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படுகிறது. ஒருவேளை வட்டித் தவணை, பாலிசி சரண்டர் மதிப்பை விட அதிகமாக இருந்தால் பாலிசிதாரர் அவரது பாலிசியை இழக்க நேரிடும் என்பதை மட்டும் நினைவில்கொள்ள வேண்டும்.
    சில முதலீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினியை குறிப்பிடும்படி அனுமதிக்கப்பட்டிருக்கும். இந்தப் பகுதியை பெரும்பாலும் பலர் எதுவும் எழுதாமல் காலியாகவே விட்டுவிடுவார்கள். ஆனால் அப்படிச் செய்வது தவறு.
    ஒவ்வொரு முறையும் முதலீட்டுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்யும்போது, அது நிலையான வைப்பு நிதியாக இருந்தாலும், பரஸ்பர நிதியாக இருந்தாலும், வங்கியில் புதிய கணக்குத் துவங்குவதாக இருந்தாலும் அந்தப் படிவத்தில் ஒரு தனிப் பிரிவு ஒன்று இருக்கும். அதில் உங்கள் நாமினி (வாரிசுதாரர்) பற்றிய குறிப்பைத் தருமாறு கேட்கப்பட்டிருக்கும்.

    இந்தப் பகுதியை பெரும்பாலும் பலர் எதுவும் எழுதாமல் காலியாகவே விட்டுவிடுவார்கள். ஆனால் அப்படிச் செய்வது தவறு.

    நாமினி என்பவர் யார்? நாமினி என்று உங்கள் முதலீட்டு விண்ணப்பம் அல்லது வங்கிக் கணக்கு விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் நபர், உங்களுக்கு எதிர்பாராத அசம்பாவிதம் நேர்ந்தால் உங்கள் கணக்கில் உள்ள தொகையைப் பெறுவதற்கான உரிமை உள்ளவர். நாமினியாக உங்கள் முதல்வட்ட சொந்தத்தை நீங்கள் அறிவிக்கலாம். அதாவது உங்கள் பெற்றோர், உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது உங்கள் உடன்பிறந்தவர்கள்.

    சில முதலீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினியை குறிப்பிடும்படி அனுமதிக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நபருக்கும் உங்கள் தொகையில் குறிப்பிட்ட விகிதத்தைப் பிரித்துப் பதிவு செய்யலாம். அப்படி நீங்கள் எந்த விகிதமும் குறிப்பிடாமல் இருந்தால் உங்கள் கணக்கில் உள்ள தொகை சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படும்.

    நாமினியாக ஏன் ஒருவரை நியமிக்கவேண்டும்? எதிர்பாராத விதமாக இறந்தவரின் வங்கிக் கணக்கிலும், முதலீட்டிலும் இருக்கும் பணம் அவருடைய சட்ட வாரிசுகளுக்கு உரிமையாகிறது. இது சொல்வதற்கு மிகவும் சுலபமாக இருந்தாலும் செயல்முறையில் இது மிகப்பெரிய காரியமாக உள்ளது. பல வித ஆவணங்கள், இறப்புச் சான்றிதழ், சில நேரங்களில் கோர்ட்டு ஆர்டர் போன்றவையும் தேவைப்படுகின்றன. வங்கிக்குத் தேவையான ஆவணங்கள் கிடைக் கும் வரை, இறந்தவரின் பணம் வங்கியிலேயே வைக்கப்படும். இந்த முழுச் செயல்முறையும் முடிய சில வாரங்கள் பிடிக்கும். இருப்பினும், வங்கி கணக்குத் தொடங்கும்போது அல்லது அதற்குப் பின்னர், ஒருவர் பெயர் நாமினியாக இணைக்கப்பட்டிருந்தால் இந்தச் செயல்முறை சற்று எளிதாகவும் விரைவாகவும் முடியும். வங்கியும் நியமிக்கப்பட்டவரிடம் குறைந்த ஆவணங்கள் மூலம் பணத்தைக் கொடுத்துவிடும்.

    வங்கிக் கணக்கு மற்றும் வைப்பு நிதிகளுக்கு மட்டும் நாமினி நியமனம் தேவைப்படுவதில்லை, வங்கி லாக்கருக்கும் நாமினி தேவை. லாக்கர் கணக்கு வைத்திருப்பவரின் திடீர் மறைவுக்குப் பின், நாமினி இல்லையேல், குறிப்பிட்ட ஆவணங்கள் கொடுத்தபிறகே, லாக்கரில் உள்ள பணம் மற்றும் நகைகளை வங்கியில் இருந்து ஒப்படைப்பார்கள்.

    புதிதாக மணமானவர்கள் அல்லது கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பேங்க் லாக்கர் கணக்குக்கும் நாமினி அவசியம் தேவை.

    இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, ரூ. 8 ஆயிரம் கோடி, கோரப்படாத நிதியாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் உள்ளது. உரிமையாளர் இல்லாத வைப்பு நிதி, கோரப்படாத நிதியாக அறிவிக்கப்படுகிறது. அசல் உரிமையாளர் வைப்பு நிதியின் விவரத்தை இழந்திருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம். நாமினி பற்றிய தகவலை குறிப்பிடாமலும் இருக்கலாம். இதன் காரணமாக இந்த நிதி கோரப்படாத நிதியாக உள்ளது. நாமினி பெயர் குறிப்பிடாமல் இருப்பதால் எவ்வளவு பிரச்சினை என்பதை இவற்றில் இருந்து புரிந்துகொள்ளலாம்.

    எனவே நாம், வங்கிக்குச் சென்று நமது கணக்கில் நாமினி பெயர் உள்ளதா என்பதை அறிந்துகொள்வது அவசியம். அப்படி நாம் குறிப்பிடவில்லை என்றால் அதற்கான படிவத்தை வாங்கி விண்ணப்பிக்க வேண்டும்.

    பொதுவாக பெண்கள் இந்தப் பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குடும்ப உறுப்பினரின் திடீர் மறைவால் அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்குரிய பணமும் பறிபோகக் கூடாது. இத்தகைய சூழ்நிலையை யாரும் அனுமதிக்கக் கூடாது. நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் நாமினியாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் அல்லது உங்களுக்கு ஒரு நாமினி உள்ளார் என்பதை உங்கள் வீட்டுப் பெண்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இதனால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். வருங்காலத்தில் ஒரு நிச்சயமற்ற சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
    தனி வீடுகள் அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.
    தனி வீடுகள் அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் பல்வேறு காரணங்களுக்காக வீட்டை பூட்டிவிட்டு சில வாரங்கள் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் சூழல் ஏற்படலாம். அந்த நிலையில் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

    * வீட்டு வாசலில் நீர் தெளித்து கோலம் இடும் பழக்கம் கொண்டவர்கள் ஊரில் இல்லாத சமயத்தில், தினமும் அந்த பணியை செய்வதற்கு நன்றாக அறிமுகம் உள்ளவர்களை அமர்த்துவதே பாதுகாப்பானது. அவரையே வீட்டில் உள்ள செடிகளுக்கு, தினமும் தண்ணீர் விடச்சொல்லலாம்.

    * நியூஸ் பேப்பர், தபால், கொரியர் ஆகியவற்றை வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் அல்லது அறிமுகமான கடைகளில் கொடுக்கும்படி ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

    * வீட்டில் போர்டிகோ, பால்கனி, பின்பக்கம் ஆகிய வீட்டை சுற்றிலும் உள்ள பகுதிகள், வீட்டிற்கு உட்புறம் ஆகியவற்றில் சிறிய மின் விளக்குகளை நீங்கள் திரும்பி வரும்வரை ஒளிரும்படி செய்வதும் பாதுகாப்பானது.

    * வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை, லவ் பேர்ட்ஸ், வண்ண மீன்கள் போன்றவற்றை பிரயாணம் செல்வதற்கு ஒரு வாரம் முன்னதாகவே அருகில் உள்ள Pet Shelter ஒன்றில் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்வது நல்லது.

    * வாட்டர் ஹீட்டர், தொலைக்காட்சி, நீரேற்றும் மோட்டர், கார்ப்பரேஷன் தண்ணீர் குழாய், கேஸ் சிலிண்டர், வாஷிங் மிஷின், வாட்டர் லைன், ஏர் கண்டிஷனர், மைக்ரோவேவ் ஓவன், அயர்ன் பாக்ஸ், டிஷ் வாஷர், வாக்குவம் கிளனர் ஆகியவற்றின் மின்சார இணைப்புகளை துண்டித்திருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

    * பிரிட்ஜ் மற்றும் கிரைண்டர் ஆகியவற்றை காலி செய்து, சுத்தமாக துடைத்து உலர வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றிற்கான கவர்கள் இருந்தால் மூடி வைப்பது நல்லது.

    * கதவு, ஜன்னல்களை அடைத்து, ஸ்கிரீன்களை முழுவதுமாக இழுத்து விடப்படுவதுடன், குளியலறை வெண்டிலேட்டர்கள் கச்சிதமாக அடைக்கப்படுவது அவசியம். அவசியத்துக்கு ஏற்ப கதவுகளை கூடுதல் பூட்டுகள் கொண்டு பூட்டி வைக்கலாம்.

    * கூடுதல் முன்னெச்சரிக்கையாக கதவுகள், ஜன்னல், இரும்பு கேட் ஆகியவற்றில் திறந்தால் ஒலி எழுப்பும் அலாரங்களை பொருத்தலாம். வீட்டில் உள்ள சி.சி.டிவி கேமராவில் உள்ள பழைய பதிவுகளை தக்க விதத்தில் சேமித்த பின்னர் அவை காட்சிகளை பதிவு செய்யும் நிலையில் ‘ஆன்’ செய்வது முக்கியம்.

    * சில அவசரமான சூழ்நிலைகளில் வீட்டை திறக்க வேண்டிய சூழல் உருவாகலாம். அதன் அடிப்படையில் நன்றாக அறிமுகம் ஆன பக்கத்து வீட்டில் உள்ளவர் அல்லது அருகாமையில் உள்ளவர்களிடம் வெளி கேட் மற்றும் பிரதான நுழைவாசல் ஆகியவற்றின் கூடுதல் சாவியை கொடுத்து வைக்கலாம். 
    பொது வாழ்க்கையில் பெண்கள் என்றைக்கு தங்கள் பங்களிப்பை செய்வதற்கு முழுமையான வாய்ப்பை பெறுகிறார்களோ, அன்றைக்குத்தான் இந்த நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்.
    “எப்படி இவ்வளவு மிகக்குறைவான எண்ணிக்கையில்தான் பெண்கள், நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பொது வாழ்க்கையில் பெண்கள் என்றைக்கு தங்கள் பங்களிப்பை செய்வதற்கு முழுமையான வாய்ப்பை பெறுகிறார்களோ, அன்றைக்குத்தான் இந்த நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்.” இது நமது முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் கவலை தோய்ந்த வார்த்தைகள்.இந்த வார்த்தைகளை அவர் நாட்டில் உள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

    இந்தக் கடிதம் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி தொடங்கி 1952-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி வரை நடந்து முடிந்த முதல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் எழுதப்பட்டது. முதல் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 489. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க் களின் எண்ணிக்கை, வெறும் 22 தான். 62 ஆண்டுகள் ஆன நிலையில் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்த இடங்கள் 543. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க்கள் எண்ணிக்கை 66. இது மொத்த இடங்களில் 12.15 சதவீதம். முக்கிய பதவிகளை அரசியலில் பெண்கள் அலங்கரித்தாலும், காலங்கள் மாறினாலும், நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை பெரிய அளவில் மாறவில்லை என்பது கசப்பான உண்மை.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நாம் மார் தட்டிக்கொள்கிறோம். ஆனால் உலகளவில் நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் என்று பார்த்தால் 190 நாடுகளில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம் 153. நமது அண்டை நாடான பாகிஸ்தானில்கூட பெண்களுக்கு நடப்பு நாடாளுமன்றத்தில் 20 சதவீதம் பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். தெற்கு சூடான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளை விட இந்தியாவில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. சின்னஞ்சிறிய நாடான கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாதான் உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பி.க்களை கொண்ட நாடு. இங்கு 61 சதவீதம் பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.

    உலகளவில் பெண் எம்.பி.க்களின் சராசரி எண்ணிக்கை 22.4 சதவீதம். அதைவிட மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் இந்திய நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மையான நிலை.இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களில் பெண்களின் பங்களிப்பு ஒற்றை இலக்கத்தில் அமைந்திருக்கிறது என்பது இன்னும் வெட்கக்கேடானது. அது 9 சதவீதம். அதிலும், புதுச்சேரி, நாகலாந்து ஆகிய இரு மாநிலங்களில் பெண் பிரதிநிதிகளே கிடையாது. இது இன்டர் பார்லிமென்டரி யூனியன் தருகிற புள்ளிவிவரம்.

    இந்தியாவில் பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை ஆதரிப்பதாக சொல்லிக்கொள்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறபோது, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து விடுவோம் என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். ஆனால் அன்றைக்கே அதை வழக்கம் போல மறந்து விடுகிறார்கள்.

    முதன்முதலாக 1996-ம் ஆண்டு, நாடாளுமன்ற, சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா, அரசியல் சாசனத்தின் 108-வது திருத்த மசோதாவாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு பிறகு, 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. ஒரு போதும் ஓட்டெடுப்புக்கு விடப்படவும் இல்லை. 2014-ம் ஆண்டு 15-வது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது, மக்களவையில் இந்த மசோதா காலாவதியாகி விட்டது. அதன் பிறகு இன்றுவரை உயிரூட்டப்படவே இல்லை.

    இந்த மசோதாவை நிறைவேற்றி விடுவோம் என ஒவ்வொரு முறையும் ஆளுங்கட்சிகள் கூறினாலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. ஏனென்றால் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. ஆக 23 ஆண்டுகளாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற விடாமல் பல அரசியல்கட்சிகள் சீனப் பெருஞ்சுவராய் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.

    சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது, “நாடாளுமன்ற, சட்டசபைக்கு வர பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மனம் உவந்து தர மாட்டோம், ஆனால் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும், அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்” என்று பல தேசிய கட்சிகளும் சரி, மாநிலக் கட்சிகளும் சரி கணக்கு போடுகின்றன.

    2014 நாடாளுமன்ற தேர்தலில் நாட்டில் உள்ள 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 16-ல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள்தான் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்திருக்கிறார்கள் என்று இந்திய தேர்தல் கமிஷன் புள்ளி விவரம் சொல்கிறது.

    இந்த நிலையில்தான் 17-வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனியாவது நமக்கு ஒரு விடிவு காலம் பிறக்குமா என்று 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பரிதவிக்கிறது. ஆனால் இந்த மசோதா ஒரு பக்கம் கிடப்பில் போடப்பட்டாலும், அரசியல் கட்சிகள் நினைத்தால் குறைந்தபட்சம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்த முடியும்.

    ஒடிசா மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பிஜூ ஜனதா கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்துவதாக அந்தக் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்து இருக்கிறார். மேற்கு வங்காள மாநிலத்தில் அதை விட ஒரு படி மேலாக 40.5 சதவீதம் பெண் வேட்பாளர்களை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிறுத்தி இருக்கிறது.

    ஒவ்வொரு தேசிய கட்சியும், மாநில கட்சியும் 33 சதவீத அளவுக்கு பெண் வேட்பாளர்களை இந்த தேர்தலில் நிறுத்தினாலே, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறதோ இல்லையோ இப்போதைய நிலையை விட, அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பி.க்கள் வருவதற்கு வழி பிறக்கும்.எந்த அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்துகிறதோ அந்த கட்சிகளுக்கே வாக்களிப்போம் என்ற ஒரு நிலைப்பாட்டை பெண்கள் எடுத்தால் அது மாற்றத்தை கொண்டு வரும். ஏற்றத்தைக் கொண்டு வரும். கெஞ்சியது போதும் பெண்களே, நிமிர்ந்து நின்று முடிவு எடுங்கள். அதுதான் உங்கள் முன்னேற்றத்தின் முதல்படி.

    - இலஞ்சியன்
    பெண்களே இப்போதுதான் கிச்சன் பக்கம் முதன் முதலாகபோகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிறையவே தயக்கம் வரும். அந்த தயக்கத்தை விரட்ட சில டிப்ஸ்…
    பெண்கள் படிப்பு, வேலை என்று இறங்கிவிட்டதால் சமையல் அறை அவர்களுக்கு கொஞ்சம் தூரமாகிவிட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் சமைக்கப் பழகுவதும், திருமணத்திற்குப் பிறகு சமைக்கப் படிப்பவர்களும் ஏராளம். பல பெண்கள் சமையல் கற்றுக் கொள்வதற்காக பயிற்சி வகுப்புகளுக்கு கூட செல்கிறார்கள்.

    பெண்கள் இப்படி மாறிவிட்டதால், ஆண்களுக்கும் சமைத்துப் பழகிக் கொண்டால்தான் நல்லது என்ற நிலை வந்துவிட்டது. குடும்பத்தினரை விட்டு தூரமாக இருந்து பணி செய்பவர்களும் தன் கையால் சமைத்து சாப்பிட வேண்டிய சூழலும் பெருகி இருக்கிறது.

    எது எப்படியோ… நீங்கள் இப்போதுதான் கிச்சன் பக்கம் முதன் முதலாகபோகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிறையவே தயக்கம் வரும். அந்த தயக்கத்தை விரட்ட சில டிப்ஸ்…

    * என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முதலில் முடிவு செய்து விடுங்கள். அதற்கு தேவையான பொருட்களையும் பட்டியலிடுங்கள். பிறகு தோலை உறிக்க வேண்டியது, வெட்டி துண்டுகளாக்க வேண்டியது, அரைத்து பக்குவப் படுத்த வேண்டியது போன்ற வேலைகளை செய்து விடுங்கள். அதன்பிறகு பிறகு அடுப்பை பற்ற வையுங்கள்.

    * உதவிக்கு ஏற்கனவே சமையல் அனுபவம் உள்ளவர்களையோ அல்லது சமையல் புத்தகங்களையோ பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உதவிக்கு புத்தகமோ, ஆட்களோ இல்லாவிட்டால் கூட உங்கள் மீது நம்பிக்கை வைத்து களத்தில் இறங்கி விடுங்கள்.

    * நம்பிக்கையுடன் சமைத்து விட்டு வாயில் வைத்துப் பார்க்கும்போதுதான் உப்பு, உறைப்பு கூடியிருப்பது தெரியவரும். கவலையே படாதீர்கள். நேரமும், அனுபவமும் சிறந்த ஆசிரியர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, தொடர்ந்து சமைத்துப் பாருங்கள். தவறுகளை மெள்ள மெள்ள திருத்திக் கொள்ளலாம்.

    * சமையலுக்கு முக்கியமானது பொருட்களின் அளவு தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எது எது தேவை என்பதைப்போலவே அவற்றை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது. அதற்காக கரண்டி, கப் மற்றும் பாத்திரங்களின் அளவுகளை ஞாபகத்தில் வைத்திருப்பதன் மூலம் ஒவ்வொன்றின் அளவையும் மாற்றிவிடாமல் பயன்படுத்த முடியும்.

    * முதன் முதலாக சமைக்கும்போது எளிதாக சமைக்க முடிந்ததும், குறுகிய நேரங்களில் சமைக்கக் கூடியதுமான குழம்புகளை வைத்துப் பழகுங்கள்.

    அப்புறமென்ன! சீக்கிரமே நீங்களும் நளபாகனாக-நளபாகியாக மாறிவிடுவீர்கள்.
    இன்று ஒருதலைக்காதலில் சிக்கும் இளைஞர்கள் தங்கள் பொன்னான வாழ்க்கையை மறந்து கொலை செய்யக்கூடிய விபரீத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
    காதல் புனிதமானது. ஒரு ஆணும், பெண்ணும் மனதார விரும்பி மணம் முடித்துக்கொள்ளும் வாழ்க்கை இனிமை நிறைந்தது. சங்ககாலம் முதல் தற்கால கவிஞர்கள் வரை காதலின் மகத்துவத்தை பாடாத புலவர்களே இல்லை. ஆனால், இன்று ஒருதலைக்காதலில் சிக்கும் இளைஞர்கள் தங்கள் பொன்னான வாழ்க்கையை மறந்து கொலை செய்யக்கூடிய விபரீத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தான் நேசிக்கும் பெண் மீது கொண்ட ஈர்ப்பு தான் அவர்களை இந்த நிலைக்கு கொண்டு சென்று இருக்கிறது இது போன்ற ஒருதலைக்காதல் மயக்கத்தில் படுகொலை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒருதலைக்காதல் கொலைகள் அதிகரிப்பதை தடுக்க பெண்களும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இவர்கள் முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான நேரங்களை செலவிடுகின்றனர்.

    இதன் மூலம் தாங்கள் பதிவிடும் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, சாட் செய்வது உள்ளிட்ட சம்பவங்களால் ஒருவருக்கொருவர் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர். இந்த பழக்கத்தை சிலர் ஒருதலைக்காதலாக கருதி, தான் விரும்பிய பெண்ணிடம் காதலை தெரிவிப்பது, அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே... தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என்ற மனோபாவம் தான் இதுபோன்ற படுகொலைகள் அதிகரிக்கிறது என்று மனோதத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தங்கள் மகள்களையோ, பணி இடங்களுக்கு செல்லும் தங்கள் மகள்களையோ கண்காணிக்க அவர்களுக்கு பெரும்பாலும் வாய்ப்புகள் இருப்பது இல்லை. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் இளம்பெண்களும் தங்களை வாலிபர்கள் யாராவது பின்தொடர்ந்தாலோ, தங்களை காதலிக்குமாறு வற்புறுத்தினாலோ அதுபற்றி தங்கள் பெற்றோரிடம் தெரிவிப்பதில்லை. ஏன் வீண் சிரமம்? குடும்பத்தில் தெரிவித்து தங்களை படிக்க அல்லது வேலைக்கு அனுப்ப மறுத்து விடுவார்களோ என்ற எதிர்கால பயம் பெண்களிடம் இருப்பதால் தான் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறுகிறது.

    ஆரம்பத்திலேயே தங்களை பின்தொடரும் நபர்கள் மீது பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்கள் எதிர்ப்பை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதோடு அதுபற்றி தங்கள் பெற்றோரின் கவனத்துக்கும் கொண்டு செல்வது அவசியம். பெற்றோர்களும் மகள், பள்ளி, கல்லூரிக்கோ அல்லது பணி இடத்துக்கோ போகும்போது வாலிபர்கள் பின் தொடர்கிறார்கள் என்றால் அதுகுறித்து அசட்டையாக இருந்து விட வேண்டாம்.



    சம்பந்தப்பட்ட நபரை நேரில் சந்தித்து தங்கள் குடும்ப வாழ்க்கை முறையை எடுத்துரைத்து பின்தொடர்வதை தடுக்கலாம். இல்லாவிட்டால் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். இது கூட சில நேரங்களில் ஆத்திரத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதன் மூலம் சில நேரங்களில் பெண்களை பின் தொடர்ந்து செல்லும் வாலிபர்கள் தங்கள் முயற்சியை கைவிடவும் வாய்ப்பு உள்ளது.

    பெண்களும் தங்களை ஒருதலையாக காதலிக்கும் வாலிபர்களிடம் இருந்து தப்பிக்க எப்போதும் தனிமையான இடத்திற்கு செல்ல வேண்டாம். பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தின் வழியாக செல்லுங்கள். முடிந்தவரை கிட்ட நெருங்கினாலோ சத்தம் போட்டு ஊரை கூட்டுங்கள். நிச்சயம் அது பலன் கொடுக்கும். பெண்களே உங்களை நீங்கள் தான் காத்து கொள்ள வேண்டும்.

    முடிந்தவரை சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் அதிக நேரம் அரட்டை அடிக்காதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள். அது போல் பள்ளி, கல்லூரி மற்றும் வேலை இடங்களுக்கு செல்லும் போது கவனமாக இருங்கள். பின்னால் பிரச்சினை வரும் என்று நினைக்காதீர்கள். உங்கள் பெற்றோரிடமும், நண்பர்களிடமும், வேலை பார்க்கும் இடங்களில் அதிகாரிகளிடமும் தெரிவியுங்கள். ஒருவர் பின்தொடர்கிறார் என்றால் அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிடுங்கள்.

    அது போல் காதல் மயக்கத்தில் இருக்கும் இளைஞர்களும் தங்கள் பொன்னான எதிர்காலத்தை உணரவேண்டும்.. ஒருதலைக் காதலில் இதுபோன்ற ரத்த களரி இனியும் வேண்டாம். இன்று... தங்கள் குடும்பத்துக்கு உதவியாக இருந்த தாங்கள் 22 ஆண்டுகள் ஆசையாக வளர்த்த அருமை மகள் ரம்யாவை இழந்து தவிக்கும் அவர்களது பெற்றோருக்கு யார் ஆறுதல் கூற முடியும். காதல் மோகம் ராஜசேகரின் வாழ்க்கையும் சூறையாடிவிட்டது. எனவே இன்றைய இளைஞர்கள் ஒருதலைக்காதலில் சிக்கி சாதலில் முடிய வேண்டாம். வாழ்க்கை வாழ்வதற்கே.. வாழ்ந்து காட்டுங்கள்.

    - குருவன்கோட்டை ஸ்ரீமன்.
    விசித்திர குணம் கொண்ட ஆண்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பெண்கள் உணர்ந்து, எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். இவர்களை தைரியமாகவும், சமயோசிதமாகவும் கையாள எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.
    நாம் கற்பனைசெய்து பார்க்க இயலாத விசித்திரங்கள் மனித வாழ்க்கையில் நடக்கக் கூடும். அவைகளை விஞ்ஞானபூர்வமாக அலசி ஆராய்ந்தால்தான், அதன் உண்மைத்தன்மைகளை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். நம்மிடையே அன்றாடம் விசித்திர சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை பற்றி அலசுவோம்!

    இப்போது பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வாடகை வாகனங்களில்தான் செல்கிறார்கள். ஒரு ஆட்டோவில் பத்து குழந்தைகள்கூட ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நெருக்கடி நிறைந்த ஆட்டோ ஒன்றில் தினமும் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிக்கு 8 வயது. துறுதுறுப்பான அவள், படிப்பு, விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் என்று பள்ளியில் நடக்கும் அனைத்திலும் பங்குபெற்று, பரிசோடுதான் வீடு திரும்புவாள். திடீரென்று அவளிடம் அதிரடியான மாற்றங்கள். படிப்பில் பின்தங்கினாள். போட்டிகளில் பங்குபெறுவதை தவிர்த்து தனிமையை நாடினாள். நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்து, அழத் தொடங்கினாள்.

    இரண்டு, மூன்று மாதங்களாக மகளிடம் இத்தகைய மாற்றங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்திருந்த தாயாரின் கவனத்தில் மகளின் புத்தகப்பை தென்பட்டிருக்கிறது. விடுமுறை நாள் ஒன்றில் அவளது புத்தகப்பை நோக்கி ஏராளமான எறும்புகள் படையெடுப்பதை பார்த்திருக்கிறார். என்னவென்று பார்ப்பதற்காக பையை திறந்திருக்கிறார். உள்ளே நிறைய சாக்லேட் இருந்திருக்கிறது.

    “நாங்கள் அவளுக்கு எல்லாவிதமான இனிப்பு வகைகளையும் வாங்கிக்கொடுப்போம். ஆனால் பற்கள் கெட்டுப்போய்விடும் என்பதற்காக சாக்லேட் மட்டும் வாங்கிக்கொடுக்க மாட்டோம். ஆனால் இவளுக்கு சாக்லேட் மீது ரொம்ப ஆசை இருந்தது..” என்றார் தாயார். முதலில் அவர் மட்டுமே கவுன்சலிங்குக்கு வந்திருந்தார்.

    “அப்படியானால் அதை புரிந்துகொண்டு யாரோ இவளுக்கு நிறைய சாக்லேட் வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவள் அதனை சாப்பிடாமல் வைத்திருக்கிறாளே ஏன்? அப்படியானால் இந்த சாக்லேட்டுடன்தான் இவளுக்கு ஏதோ பிரச்சினையும் சேர்ந்து வந்திருக்கிறது. அதை பற்றி விசாரியுங்கள்..” என்றேன்.

    தாயார் விசாரித்து சொன்ன சம்பவம் விசித்திரமாக இருந்தது. அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு 55 வயது. இந்த மாணவியின் வீட்டில் இருந்து பள்ளியை சென்றடைய, முக்கால் மணி நேரம் ஆட்டோவில் பயணிக்கவேண்டும். அதில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் இவள் மட்டுமே ஆட்டோவில் இருப்பாள். அப்போது பெரும்பகுதி நேரம் ஆள்அரவமற்ற பகுதியை ஆட்டோ கடந்து செல்லும். பள்ளியை நெருங்கும் நேரத்தில்தான் நிறைய மாணவிகள் ஏறுவார்களாம். தனியாக பயணிக்கும்போது அவளிடம் பேசிக்கொண்டே செல்லும் அவர், அவளது சாக்லேட் ஆசையை எப்படியோ தெரிந்துகொண்டு விலை உயர்ந்த சாக்லேட்களை நிறைய வாங்கிக்கொடுத்திருக்கிறார். இவளும் ஆர்வமாக சாப்பிட்டிருக்கிறாள்.



    அதை வீட்டில் சொல்லக்கூடாது என்றிருக்கிறார். இவளும் சொல்லவில்லை. அவளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என்று அவர் நம்பிய பின்பு தனது விசித்திர சுபாவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது ஆட்டோவில் இவள் மட்டும் இருக்கும் தனிமை நேரத்தில் அவர் தனது இடுப்புக்கு கீழ் பகுதி ஆடையை கீழே இறக்கிவிட்டுவிட்டு, ஆட்டோ ஓட்டுவாராம். இது தொடர்ந்து நடந்திருக்கிறது. பின்பு நகரப் பகுதிக்குள் ஆட்டோ சென்றதும், தனது உடையை சரிசெய்துகொள்வாராம்.

    அவரது செயலை பார்த்த அவள் முதலில், ‘அவர் உடையை சரிசெய்ய மறந்துவிட்டார்’ என்று எளிதாக எடுத்திருக்கிறாள். பின்பு விளையாட்டுத்தனமாக கருதியிருக்கிறாள். தான் ஆட்டோவில் ஏறிய பின்பு, ஆட்கள் இல்லாத பகுதியில் அந்த செயலை செய்யத்தொடங்கியதும் அது தவறானதாகவும், பின்பு விபரீதமாகவும் அவளுக்கு புரிந்திருக்கிறது. அப்போது அவள், ‘ஒழுங்காக உடையை அணிந்துகொண்டு ஆட்டோ ஓட்டுங்கள்’ என்று கூறி இருக்கிறாள். உடனே அவரது சுபாவம் மாறியிருக்கிறது. அவளை மிரட்டியிருக்கிறார்.

    அவர் தன்னை மிரட்டியதை வீட்டில் சொன்னால், தான் வெகு நாட்களாக அவரிடமிருந்து விலை உயர்ந்த சாக்லேட் வகைகளை வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்ததையும் சொல்ல வேண்டியிருக்குமே என்று அவள் குழம்பி, அச்சமடைந்திருக்கிறாள். அதுவே அவள் கல்வியிலும், இயல்பான நடவடிக்கைகளிலும் பெரும் மாற்றங்களை உருவாக்கிவிட்டது. உண்மை தெரிந்த பின்பு அவளது பெற்றோரே அதற்கு சரியான தீர்வை தேடிக்கொண்டார்கள்.

    (மூடிவைக்க வேண்டிய தனது உறுப்புகளை வெளியே காட்டுவதன் மூலம் தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்பவர்கள் ‘எக்ஸிபிஷனிஸ்டுகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களது பாலியல் மனநோய்க்கு எக்ஸிபிஷனிஸம் (Exhibitionism) என்று பெயர். இப்படிப்பட்டவர்களை அடையாளம் காண்பது சிரமம். உடை விஷயத்தில் கவனம் இல்லாததுபோல் காட்டிக்கொண்டு, மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பார்கள். ‘வயதில் பெரியவர். தெரியாமல் ஏதோ நடந்துகொள்கிறார்’ என்று கருதாமல், தொடக்கத்திலே நாம் விழிப்படைந்து, ‘உடையை சரிசெய்யுங்கள்’ என்று சத்தமாக சொல்லவேண்டும். அப்படி எதிர்ப்பு தெரிவித்தால் ‘இவர்களிடம் நமது கதை எடு படாது’ என்று கருதி ஒழுங்காக நடந்துகொள்ள முயற்சிப்பார்கள்).

    ஊரில் மரியாதைக்குரிய குடும்பத்தை சேர்ந்த அந்த நபருக்கு 30 வயது. கவுரவமான பதவியில் இருக்கிறார். திருமணமான புதிதில், நள்ளிரவில் மனைவி அசந்து தூங்கும் நேரத்தில் இவர் வெளியே கிளம்பிச்சென்றிருக்கிறார். பின்பு அதிகாலை நேரத்தில் திரும்பி வந்திருக்கிறார். திடீரென்று ஒருநாள் அவள் கண்டுபிடித்து காரணம் கேட்டபோது ஏதேதோ சொல்லி சமாளித்திருக்கிறார்.

    அடுத்த சில நாட்களில் நள்ளிரவில் அடி உதை வாங்கி சட்டை எல்லாம் கிழிந்த நிலையில் வீட்டிற்குள் வந்திருக்கிறார். அப்போதுதான் அவரிடம் இருந்த ‘விசித்திர சுபாவம்’ மனைவிக்கு தெரிந் திருக்கிறது.



    அதாவது சிறுவயதில் இருந்தே அவர் வெளியூரில் உள்ள பிரபலமான கான்வென்ட் ஒன்றில் தங்கிப் படித்திருக்கிறார். அப்போது 15, 16 வயதுவாக்கில் இரவில் வெளியே சென்று, மாணவிகளின் விடுதி அறைகளுக்குள் எட்டிப்பார்க்கும் பழக்கம் தோன்றியிருக்கிறது. அப்போதே சில நாட்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார். கல்லூரி காலத்திலும் ஆஸ்டல் வாழ்க்கையை விரும்பி தேர்ந்தெடுத்து அதே விசித்திர பழக்கத்துடன் வாழ்ந்திருக்கிறார். திருமணத்திற்கு பின்பும் அந்த பழக்கம் தொடர்ந்திருக்கிறது. நள்ளிரவில் பக்கத்து வீடுகளின் படுக்கை அறையை எட்டிப்பார்த்திருக்கிறார். அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார்.

    (இந்த விசித்திர மனோபாவத்திற்கு ‘வாய்யூரிஸம்’ (Voyeurism) என்று பெயர். இவர்கள் இரவு நேரங்களில் ஆக்டிவ்வாக செயல்படுவார்கள். காலை நேரங்களில் சோர்ந்துபோய் காணப்படுவார்கள். எதிர்பாலினத்தை சேர்ந்த இன்னொருவரின் படுக்கை அறையை எட்டிப்பார்த்தால்தான், இவர்களுக்கு திருப்தியும், தூக்கமும் வரும். இந்த இயல்பு இருப்பவர்கள் தம்மை சுய பரிசோதனை செய்து இதில் இருந்து விடுபட முன்வரவேண்டும். இவர்களுக்கு மனநல சிகிச்சைகள் தேவைப்படும்)

    நெரிசல் மிகுந்த பஸ், ரெயில், திரு விழாக் கூட்டங்களில் பெண்களை குறிவைத்து, நீந்திச்செல்வதுபோல் சில ஆண்கள் முன்னும், பின்னுமாக நடப்பார்கள். உரசுவது, வருடுவது போன்ற செய்கைகளில் ஈடுபடுவார்கள். மக்கள் நெரிசல் நிறைந்த பகுதிகளில் இப்படி நடமாடுபவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

    (இத்தகைய மனோபாவ குறைபாடு ‘ப்ரோட்டரிஸம்’ (frotteurism) என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்டவர்களை பெண்களால் எளிதாக அடையாளம் காண இயலும். தங்களை அப்பாவிபோல் அடையாளங்காட்டிக்கொண்டு, எதேச்சையாக நடப்பதுபோல் தொடுவார்கள். முறைத்துப்பார்ப்பது, அதட்டுவது போன்ற செயல்பாடுகளை இவர்களிடம் வெளிப்படுத்தவேண்டும்)

    பெண்களின் உள் ஆடைகளை மட்டும் திருடி சுகம் காண்பவர்களும் உண்டு. இத்தகைய விசித்திர சுபாவங்கள் கொண்டவர்கள் தவறு செய்பவர்களாகவே இருந்தாலும், இவர்கள் ஒருவகையில் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்கள் மனஊனம் கொண்டவர்கள். பிறப்பிலே அப்படிப்பட்டவர்களாக அவர்கள் இருப்பதில்லை. சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் அவர்களை இத்தகைய மனோபாவத்திற்கு மாற்றுகிறது. தேவையில்லாதவற்றை தொடர்ச்சியாக பார்ப்பதும், கேட்பதும்கூட அவர்களை இந்த நிலைக்கு மாற்றிவிடும். சிலர் சிறுவர்களாக இருக்கும்போது அத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகி யிருப்பார்கள். தான் வளர்ந்து பெரியவர் ஆன பின்பு, தான் பாதிக்கப்பட்ட அதே வழியில் மற்றவர்களை ஈர்க்கப் பார்ப்பார்கள். தமது நண்பர்களோடு சேர்ந்து இத்தகைய விசித்திர சுபாவங்களுக்கு அடிமையாகிறவர்களும் உண்டு.

    பொதுவாக இத்தகைய விசித்திர குணாதிசயம் கொண்டவர்கள் சமூக பயம் கொண்டவர்களாக இருப்பார்கள். தனிமை விரும்பிகளாகவும், நான்கு பேர் மத்தியில் தலைநிமிர்ந்து நடக்காதவர்களாகவும் இருப்பார்கள். பெண்களை நினைத்து அச்சப்படுவார்கள். அவர்களது முகத்திற்கு நேராக பார்த்து பேசும் தைரியம்கூட இருக்காது. பெண்கள் முறைத்துப் பார்த்தாலே அந்த பகுதியில் இருந்து நகர்ந்துவிடுவார்கள். திருமணமானவர்களாக இருந்தாலும், இவர்களது பாலியல் வாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கும். இப்படிப்பட்ட விசித்திர குணம் கொண்டவர்கள் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை பெண்கள் உணர்ந்து, எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். இவர்களை தைரியமாகவும், சமயோசிதமாகவும் கையாள எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.

    -விஜயலட்சுமி பந்தையன்.
    சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சிப் பசிக்கு குடும்ப பெண்களும் தப்பவில்லை. இத்தகைய இணையதள வன்முறைகள் ஆண்களை விட பெண்களுக்கு 27 மடங்கு அதிகமாக நடக்கிறது.
    சமூக வலைத்தளங்கள் தவிர்க்கமுடியாத அங்கமாக சமூகத்துடன் இணைந்துவிட்டன. கணினி வழியாக பரிமாறிக்கொள்ளப்பட்டு வந்த தகவல்கள் கையடக்க கைப்பேசிக்குள் சுலபமாக புகுந்துவிட்டன. அவற்றுள் எவை அவசியமானவை? எவை அவசியமற்றவை? என்பதை வகைப்படுத்தி பிரித்து பார்க்கும் சிந்தனைத் தெளிவு இல்லாமல் அனைத்து தகவல்களையும் பார்வையிடும் நிர்பந்தத்திற்கு பெரும்பாலானவர்கள் உள்ளாகிவிட்டார்கள். அடுத்தவர்கள் அனுப்பும் தகவல்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் சமூக வலைத்தளத்திலேயே மூழ்கி கிடப்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள்.

    பயனுள்ள விஷயங்களை அறிந்து கொள்வதற்கு நேரத்தை செலவிடுவதற்கு பதில், வீண் விஷயங்களில் கவனம் செலுத்தி பொழுதை போக்குவது பேஷனாகவே மாறிக்கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சிப் பசிக்கு குடும்ப பெண்களும் தப்பவில்லை. ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனி தீவுகளைப்போல் தனிமையில் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பது குடும்ப கட்டமைப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறது. சமூகவலைத்தளங்கள் சமூகத்தை எந்த அளவிற்கு தன் பிடிக்குள் அடி பணிய வைத்திருக்கிறது என்பதை உணர்த்தும் சர்வே இது!

    ‘சமூக வலைத்தளங்களில் தினமும் எத்தனை மணி நேரத்தை செலவிடுகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, 68 சதவீதம் பேர் “தினமும் 4 முதல் 5 மணி நேரத்தை ஒதுக்குகிறோம்” என்று கூறி இருக்கிறார்கள். “நேரத்தை கவனத்தில் கொள்ளாமல் டேட்டா தீர்ந்து போகும் வரை அதிலேயே மூழ்கி கிடப்போம்” என்று பத்து சதவீதம் பேர் பதில் சொல்லியிருக்கிறார்கள். “வீட்டில் இருக்கும் நேரத்தில் வீடியோ பார்ப்பது, சாட்டிங் செய்வது என்று பொழுதை போக்கிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் முகம் கொடுத்து பேச நேரம் கிடைப்பதில்லை” என்றும் 8 சதவீதம் பேர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். டேட்டா தீர்ந்துபோன பிறகும் மற்றவர்களின் வை-பை மூலம் நெட் பயன்படுத்துவதாக 9 சதவீதம் பேர் சொல்கிறார்கள்.

    இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் சமூக வலைத்தளங்களில் ஐந்தாறு மணி நேரத்தை செலவிடுபவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள். அவர்கள், அதன் பிறகு குடும்பத்தோடு செலவிட தங்களுக்கு ஒரு மணி நேரம்கூட கிடைப்பதில்லை என்றும் கூறுகிறார்கள். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம் சமூக வலைத்தளத்துடனேயே தொடர்பில் இருப்பதாக 5 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள்.

    ‘இரவு 11 மணிக்கு மேல் இணைய தளத்தை பயன்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு, 26 சதவீதம் பேர் ‘ஆம்’ என்று பதில் அளித்திருக்கிறார்கள். 39 சதவீதம் பேர் ‘இல்லை’ என்று கூறி இருக்கிறார்கள். 35 சதவீதம் பேர் எப்போதாவது இரவில் இணையதளத்தை பயன்படுத்துவதாக சொல்லியிருக்கிறார்கள்.

    ‘வீட்டில் உள்ளவர்களுடன் குடும்ப விஷயங்களை பேசுவதற்கு தினமும் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள்?’ என்ற கேள்விக்கான பதிலில், சமூக வலைத்தளம் எந்த அளவுக்கு குடும்பத்தினர் மத்தியில் இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 21 சதவீதம் பேர் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவதற்கு 1 மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் செலவிடுவதாக கூறி இருக்கிறார்கள்.

    2 மணி முதல் 3 மணி நேரம் வரை பேசுவதாக 23 சதவீதம் பேர் சொல்லி இருக்கிறார்கள். 2 முதல் 4 மணி நேரம் வரை ஒதுக்குவதாக 27 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். உறவு பந்தத்திற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக 29 சதவீதம் பேர் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக பேசுவதாக கூறி இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது விவாகரத்து அதிகரிப்பதற்கும் காரணமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.



    ‘மகளின் செல்போனின் பாஸ்வேர்டு தெரியுமா?’ என்ற கேள்விக்கு, 52 சதவீதம் பேர் தெரியும் என்கிறார்கள். 42 சதவீதம் பேர் ‘தெரியாது’ என்று கூறி இருக்கிறார்கள். மீதி உள்ள 6 சதவீதம் பேர் கட்டாயப்படுத்தி கேட்டால் சொல்வாள் என்று பதிலளித்திருக்கிறார்கள். அதேபோல் மனைவியின் செல்போன் பாஸ்வேர்டு பற்றிய கேள்விக்கு 56 சதவீதம் ஆண்கள் ‘தெரியும்’ என்கிறார்கள். 25 சதவீதம் பேர் ‘தெரியாது’ என்றும், 11 சதவீதம் பேர் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி இருக்கிறார்கள். “நாங்கள் கேட்டாலும் அவள் சொல்வதில்லை” என்று 8 சதவீதம் பேர் கூறியுள்ளார்கள்.

    ‘டீன் ஏஜ்’ பருவத்தினர் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதும் சர்வேயில் கண்டறியப்பட்டிருக்கிறது. 26 சதவீதம் பேர் செக்ஸ் சார்ந்த விஷயங்களையும், செக்ஸ் ரீதியான தமாஷ்களையும் பகிர்ந்துகொள்வதாக சொல்கிறார்கள். காதலர்களும் சமூகவலைத்தளங்கள் மூலம் அரட்டை அடிப்பதை பிரதானமாக கொண்டிருக்கிறார்கள். அப்போது செக்ஸ் சார்ந்த விஷயங்களும் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. சர்வேயில் பங்கெடுத்த பெண்களில் 24 சதவீதம் பேர் காதலிக்கும் நபருக்கு தங்களின் நிர்வாண படங்களை அனுப்புவதாக கூறி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்கள். தங்களுடைய முகத்தை மறைத்து படம் அனுப்புவதாக 5 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 71 சதவீதம் பேர் அப்படிப்பட்ட படங்களை அனுப்புவதில்லை என்று கூறி சற்று நிம்மதி பெருமூச்சுவிட வைத்திருக்கிறார்கள்.

    குளிக்க செல்லும்போதுகூட சமூகவலைத்தளங்களில் தங்கள் பிரியமானவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலர் அங்கிருந்துகொண்டே புகைப்படங்களை பகிர்வது, வீடியோ கால் செய்து பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். 7 சதவீதம் பேர் குளியல் அறையில் இருந்து வீடியோ காலில் காட்சிகளை பகிர்ந்துகொள்வதாக கூறி இருக்கிறார்கள். ஸ்கிரீன் ரெக்கார்டிங் போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தி தனிமையில் இருக்கும்போது எடுக்கப்படும் காட்சிகளை பதிவுசெய்து பின்னர் எடிட்டிங் செய்து மற்றவர்களுக்கு அனுப்பலாம் என்பது நிறைய பெண்களுக்கு தெரியவில்லை.

    தனக்கு விருப்பமான அவர் மட்டும்தான் பார்த்து ரசிப்பதாக தவறாக நினைத்து விடுகிறார்கள். இந்த மாதிரியான ஆபாச வீடியோ பதிவுகளை எடுக்கும் ஆண்கள் முதலில் பாத்ரூமில் தங்களை அதுபோன்ற கோணத்தில் படம் பிடித்துக்கொள்கிறார்கள். அதனை காண்பித்து அதுபோன்ற கோணத்தில் தனக்கு விருப்பமான பெண்ணிடம் வீடியோ பதிவு செய்து அனுப்பும்படி சொல்கிறார்கள். அப்படி எடுக்கப்படும் படங்கள் பல கைமாறி அந்த பெண்ணுக்கு விபரீதத்தை உருவாக்கிவிடுகிறது.

    போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் தங்களுக்கு பிடிக்காதவர்களை அவமானப்படுத்தவும் நிறைய பேர் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். ‘உலகில் 9 கோடி பெண்கள் சைபர் கிரைம் குற்ற வழக்குகளால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்’ என்று ஐ.நா.வின் பிராட்பேண்ட் கமிஷன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையதளங்கள் மூலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்து கொண்டிருக்கின்றன.

    இத்தகைய இணையதள வன்முறைகள் ஆண்களை விட பெண்களுக்கு 27 மடங்கு அதிகமாக நடக்கிறது. சமூகவலைத்தளங்களில் போலி கணக்குகள் தொடங்கி இருப்பதை சர்வேயில் 17 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோருக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், தாங்கள் காதலிக்கும் நபருக்கு தெரியாமல் இருப்பதற்காகவும் போலி கணக்குகள் தொடங்கி இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இது சமூக அமைப்பு ஒன்று மேற்கொண்ட சர்வே தகவலாகும்.

    சமூகவலைத்தளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதே சமூகத்திற்கும், உபயோகிப்பவர்களுக்கும் நன்மை சேர்க்கும்.
    பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையான உரிமைகளும், பாலின சமத்துவமும் கிடைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது.
    பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையான உரிமைகளும், பாலின சமத்துவமும் கிடைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது. ஆனாலும் உலக அளவில் இருபாலரிடையே சம உரிமை நிலைநாட்டப்படுவதில் சீரற்ற தன்மையே நிலவுகிறது. இந்த நிலையில் உலக பொருளாதார கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் ஆசியாவில் பாலின சமத்துவத்தை பின்பற்றும் நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. கல்வி, சுகாதாரம், பொருளாதார பங்களிப்பு, அரசியல் அதிகாரமளித்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசைப்பட்டியல் அமைந்திருக் கிறது.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண் - பெண் இடையேயான பாலின இடைவெளி 79 சத வீதம் வரை களையப்பட்டு இருப்பதாகவும், பெண்கள் கல்வியில் சாதனை படைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளையில் தெற்கு ஆசிய நாடுகளின் பட்டியலில் வங்காள தேசம் முன்னிலையில் இருக்கிறது. அங்கு ஆண்-பெண் இடையேயான பாலின இடைவெளி 72 சதவீதம் குறைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாடு பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. தெற்கு ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் இருந்தாலும் உலக அளவில் 108-வது இடத்தில்தான் இருக்கிறது. மற்ற ஆசிய நாடுகளான இலங்கை (100-வது இடம்), நேபாளம் (105), மாலத்தீவு (113), பூட்டான் (122) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. 149 நாடுகளை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் பாகிஸ்தான் மிகவும் பின் தங்கிய நிலையில் (148) இருக்கிறது.

    உலக அளவில் பாலின சமநிலையை கடைப்பிடிக்கும் நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம் பிடித்திருக்கிறது. நார்வே, ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகள் முறையே அடுத் தடுத்த இடங்களில் இருக்கின்றன. இங்கிலாந்து 15-வது இடத்திலும், கனடா 16-வது இடத்திலும், அமெரிக்கா 51-வது இடத்திலும், சீனா 103-வது இடத்திலும், ஜப்பான் 110-வது இடத்திலும், கொரியா 115-வது இடத்திலும், துருக்கி 130-வது இடத்திலும், சவுதி அரேபியா 141-வது இடத்திலும் இருக்கின்றன. ஏமன் கடைசி இடத்தில் இருக்கிறது.

    பல நாடுகளில் பெண்கள் தொழில்துறையில் ஆண்களுக்கு இணையாக உயர் பதவியில் இருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் முக்கிய பங்களிப்பு வழங்கி வருகிறார்கள். ஆண் - பெண் தொழிலாளர்களிடையே ஊதியத்தில் இருந்துவந்த முரண்பாடுகளும் ஓரளவு தளர்த்தப்பட்டிருக்கிறது.
    ×