என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nutritional foods"
- எலும்புகளை வலுப்படுத்துவதற்கு கீரை உதவுகிறது.
- புரதச்சத்து உணவுகளை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்கள் வீட்டு வேலைகளையும் கவனித்துவிட்டு அலுவலக வேலைக்கும் சென்று வருவது சற்று சவாலான விஷயம்தான். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர். பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்...
கீரை
கீரை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
பருப்பு
பருப்பு பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் உணவுப் பொருள். இதில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. எனவே இதை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பருப்பு மிகவும் நல்லது.
ஓட்ஸ்
ஓட்சில் தினசரி ஆற்றலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. அவை மற்ற தானியங்களை விட அதிக புரதம் மற்றும் கொழுப்புச் சத்தை கொண்டிருக்கின்றன. மற்றும் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்டவற்றையும் ஓட்ஸ் கொண்டுள்ளது.
பால்
பணிபுரியும் பெண்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவதற்கும், எலும்பு அமைப்பு பாதிக்கப்படுவதற்கும் அதிக ஆபத்து உள்ளது. இது அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. பால் கால்சியத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதில் புரதம், பாஸ்பரஸ், பி வைட்டமின் காம்ப்ளக்ஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவையும் உள்ளன.
ப்ரோக்கோலி
பெண்கள் உண்ணவேண்டிய முக்கிய உணவுகளில் ப்ரோக்கோலியும் முக்கியமானது. ஏனெனில் இது கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. இது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்கிறது. இது புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்று அறியப்படுகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். கால்சியம் நிறைந்தது, இது எலும்பு அடர்த்திக்கு பங்களிக்கிறது.
பீட்ரூட்
பீட்ரூட் நார்ச்சத்துக்கான சிறந்த மூலப்பொருளாகும். இது குடலை ஆரோக்கியமாக வைத்து செரிமான அமைப்பை சீராக்க உதவுகிறது. பீட்ரூட் மற்றும் அதன் சாறு மேம்படுத்தப்பட்ட ரத்த ஓட்டம், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சிறந்த உடற்பயிற்சி, செயல்திறன் போன்ற பல நன்மைகளுடன் தொடர்புடையது.
பாதாம்
பாதாம் ஒரு ஃப்ரீபயாடிக் உணவாகும். அதாவது இது உங்கள் செரிமான அமைப்பு வழியாக செல்லும்போது புரோபயாடிக்குகளை உருவாக்க உதவுகிறது. 1/4 கப் பாதாம் ஒரு முட்டையை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. இதில் மெக்னீசியமும் உள்ளது. இந்த உணவுகளை பெண்கள் தங்கள் உணவுகளில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் நலனுக்கு மிகவும் நல்லது.
- சமச்சீரான உணவு கிடைக்காத போது மூளை வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.
- குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் புத்திக் கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.
குழந்தைகள் டீன் ஏஜ் வயதிற்கு வரும் வரை அவர்களை சாப்பிட வைப்பதற்கு பெற்றோர்கள் படும் பாடு சொல்லில் அடங்காது. அதுவும் ஓடி, ஆடி விளையாடும் குழந்தை பருவத்தில், அவர்களின் உடல் வளர்ச்சியானது தினம்தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் விட்டமின்கள் என நிறைய ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தேவையாக இருக்கும். அவர்களின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் மூளை வளர்ச்சியினால் கிடைக்கப்பெறும் புத்தி கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.
வளர்பருவம்:
இந்த வளர்ச்சிதை மாற்றம் நடக்கும் பருவத்தில், அவர்கள் உணவு உண்பதற்கு கோபப்படுவதோ, மறுப்பு தெரிவிப்பதோ என்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். இந்த தருணங்களில் தாய்மார்கள் சத்து நிறைந்த உணவை தயார் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.
சமச்சீரான உணவு கிடைக்காத பொழுது மூளை வளர்ச்சியில் குறைபாடு, அடிக்கடி கோபப்படுவது, படபடப்பாவது, பெண் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், வயதுக்கு வந்த பிறகு மாதாந்திர சுழற்சியில் மாறுபாடு வருவது, ரத்த சோகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என எதிர்காலத்தில் உடல் ரீதியான நிறைய தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்.
ஆகையால் குழந்தைகளுக்கு, அவர்கள் வழியிலேயே சென்று, அவர்களுக்கு பிடித்தமான, அதே நேரத்தில் புரதம், தாது உப்புக்கள், விட்டமின்கள், கால்சியம் மற்றும் அத்தியாவசியமான கொழுப்புகளை எப்படியாவது அவர்கள் உணவில் சேர்க்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.
வைட்டமின் சி:
குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, நோயை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. மேலும் வைட்டமின் சி சாப்பிடும் உணவுப் பொருளில் இருக்கும் இரும்புச்சத்தை உடலுக்கு எடுத்து தருவதில் பெரும்பங்காற்றுகிறது. இந்த வைட்டமின் சி யை பெற சிட்ரஸ் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், கொய்யா, பப்பாளி, தக்காளி, மிளகு என உணவுகள் நிறைய இருக்கின்றன. இவற்றில், உங்கள் குழந்தை எதை விரும்புகிறதோ, அதை கொடுத்து, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அவர்களை சாப்பிட வைக்கலாம்.
இரும்புச்சத்து:
குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது இரும்புச் சத்தாகும். இரும்புச்சத்து குறைவதனால் ரத்த சோகை உண்டாகிறது. ரத்த சிவப்பணுக்கள் தான் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. இதற்கு இரும்புச் சத்து இன்றியமையாததாக இருக்கிறது. காய்கறிகள் இறைச்சி, முட்டை, தானிய வகைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் நிறைய காய்கறிகளை சாப்பிட கொடுப்பதன் மூலம் ஃபோலிக் ஆசிட் ஆனது உடலுக்கு கிடைக்கிறது. இதுவும் குழந்தைகள் வளர்ச்சிக்கு சிறப்பான ஒரு அமிலம் ஆகும்.
வைட்டமின் டி:
குழந்தைகளின் உறுதியான எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் டி அவசியமாகிறது. இது நேரடியாக சூரியனில் இருந்து நமக்கு கிடைக்கிறது. ஆகையால் உங்கள் குழந்தைகளை, காலையில் அல்லது மாலை வேலைகளில் விளையாட உற்சாகப்படுத்துங்கள். தேங்காய் பால், சோயா, மத்தி மீன் மற்றும் ஆரஞ்சு பழம் போன்றவற்றிலும் விட்டமின் டி நிறைந்து காணப்படுகிறது. எனவே அவர்களை காலையில் அல்லது மாலை வேலைகளில் கட்டாயமாக விளையாட, உற்சாகப்படுத்துவதோடு, மேற்கண்ட உணவு தேர்வில் ஏதாவது ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்குமாறு செய்து கொடுங்கள் இதன் மூலம் வைட்டமின் டியை பெற முடியும்.
புரதம்:
வளர்ந்து வரும் குழந்தைகளின் தேக ஆரோக்கியத்திற்கும் திசுக்கள் மற்றும் சதை வளர்ச்சிக்கும் புரோட்டின் எனப்படும் புரதம் இன்றியமையாததாக இருக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இந்த புரதம் மிகவும் தேவையாக இருக்கிறது. மீன், கோழி, இறைச்சிகள், முட்டை,பால், தயிர், நெய், வெண்ணெய், கடலை பயிறு, பாசிப்பயறு, உளுந்து மற்றும் துவரம் பருப்பு, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள், ஆகியவற்றிலும் இந்த புரதமானது நிறைந்து காணப்படுகிறது.
ஆரோக்கியமான கொழுப்பு:
சரியான அளவில் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை கொடுப்பது மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு நன்மை தரும். குறிப்பாக குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவுகிறது. ரத்த உறைதல் மற்றும் வைட்டமின்களை உடலுக்கு எடுத்துக் கொள்வதற்கும் கொழுப்பானது தேவையாக இருக்கிறது. இறைச்சி, முட்டை, மஞ்சள் கரு, பால், தயிர், வெண்ணை மற்றும் நெய் போன்றவற்றில் நிறைந்து காணப்படுகிறது ஆகவே இந்த பொருட்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து நீங்கள் தயாராக வைத்திருப்பது அவர்கள் உடலின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.
- குறைப்பிரசவம் சில இயற்கை காரணங்களினால் நிகழ்கின்றன.
- ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் எடுத்துக் கொள்வது சிறப்பு.
குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றன. அது குழந்தைகள் இறப்பதற்கு காரணமாகவும் அமையும். குழந்தைகள் கர்ப்பத்தில் இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, குழந்தை எடை குறைவாகப் பிறக்கும். இந்த குழந்தையை வளர்ச்சி குறைந்த அல்லது முதிராத குழந்தை என்று கூறுவர். இதனை ஆங்கிலத்தில் பிரிமெச்சூர் என்று கூறுவர்.
குறைப் பிரசவம்
கருப்பை திசுச்சுரண்டல் எனப்படக்கூடிய டி அன்ட் சி செய்வதன் காரணமாக, கருப்பையின் கழுத்துப் பகுதி வலுவிலந்து விடலாம். இதன் காரணமாக, கருப்பைத் திசு தளர்வதுடன் அதில் குழந்தை வளரும் போது குழந்தையைத் தங்க வைக்க முடியாமல், கருப்பை வாய் திறக்க ஆரம்பித்து விடும். இந்த நிலையில் கரு சிதைந்து விட வாய்ப்புள்ளது. இவ்வாறு நிகழாத சமயத்தில் குறை பிரசவம் உண்டாவது உறுதியாகும்.
குறைபிரசவ மற்றும் முதிராத குழந்தை
கர்ப்பம் தரித்ததில் இருந்து 37-வது வாரத்திற்கு முன்பு பிறக்கும் குழந்தை குறை பிரசவக் குழந்தை எனக் கூறப்படுகிறது. அதேபோல, 37-வது வாரத்திற்குப் பிறகு பிறந்தாலும், குழந்தையின் எடை மிகக் குறைவாக இருப்பதை முதிராத குழந்தை எனக் கூறுவர்.
குறைபிரசவத்திற்கான காரணம்
பெண்கள் சாதாரண நிலையில் இருப்பதை விட கர்ப்ப காலத்தில் இருக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் போதுமான அளவு ஊட்டச்சத்து சாப்பிடாமல், கர்ப்பகாலத்தில் தேவையான பராமரிப்பு போதுமானதாக இல்லாவிட்டாலும் குறைபிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மேலும், ரத்த சோகை ஏற்படுவதால் உண்டாகும் அசதியினால் பாதிக்கப்பட்டவர்களும், பால்வினை நோய்களால் தாக்கப்பட்ட சமயத்திலும் குறைபிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மேலும், கர்ப்பிணி பெண்கள் கடுமையான காய்ச்சல், சர்க்கரை வியாதி, மஞ்சள் காமாலை, இதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பினும் குறைபிரசவம் நிகழ வாய்ப்புண்டு.
முக்கியமாக, கர்ப்பம் தரித்த பெண்களின் வயதைப் பொறுத்தும் ஏற்படலாம். அதாவது, கர்ப்பிணி பெண்கள் 16 வயதுக்கு உட்பட்டவராகவோ 35 வயதுக்கு மேற்பட்டவராகவோ உள்ள இருந்தால் அவர்களுக்கு குறை பிரசவம் நிகழ அதிக வாய்ப்பு உள்ளது.
இருப்பினும், குறைப்பிரசவம் சில இயற்கை காரணங்களினால் நிகழ்கின்றன. எனவே, கர்ப்பிணி பெண்கள் இந்த காலகட்டங்களில் மிகுந்த பாதுகாப்புடனும், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் எடுத்துக் கொள்வது சிறப்பு.
- ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு காரணம்.
- மனஅழுத்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவிழக்கச் செய்து, நோயாளி ஆக்கிவிடும்.
கொரோனா மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக குரங்கு அம்மை, தட்டம்மை, டெங்கு காய்ச்சல், நிபா வைரஸ் போன்ற பல்வேறு நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடுவதும், ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கங்களை பின்பற்றுவதுமே தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான 6 காரணங்கள் குறித்து பார்ப்போம்.
ஊட்டச்சத்து குறைபாடு:
போதுமான அளவு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமற்ற உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, நொறுக்குத் தீனி போன்றவற்றில் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்காது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்புக்கு குடலில் இருக்கும் மைக்ரோபயோட்டா இன்றியமையாதது.
மேலும் புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்புகள், வைட்டமின்கள் டி, சி, பி, ஏ, ஈ, கே மற்றும் இரும்பு, கால்சியம், செலினியம், துத்தநாகம் போன்ற தாதுக்களும் உடலுக்கு போதுமான அளவு தேவை. அத்துடன் நோய் எதிர்ப்பு அமைப்பு திறம்பட செயல்பட பழங்கள் மற்றும் காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், ஃப்ரீபயாடிக்குகள், புரோபயாடிக்குகள், தானியங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதும் முக்கியம்.
உடற்பயிற்சி இல்லாமை:
தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் வாரத்தில் 3 நாட்களாவது உடற்பயிற்சிக்காக நேரம் செலவிட வேண்டும். இல்லாவிட்டால் நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாக வேலை செய்யாது. அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மன அழுத்தம்:
நமது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதன் பின்னணியில் இருக்கும் முக்கிய குற்றவாளிகளில் மன அழுத்தம் முதன்மையானது. ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது அதில் இருந்து மீள்வதற்கான நேரம் அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். பல்வேறு நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள வைத்துவிடும். மன அழுத்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேலும் வலுவிழக்கச் செய்து, நோயாளி ஆக்கிவிடும்.
தூக்கமின்மை:
மன அழுத்தத்தைப் போலவே தூக்கமின்மையும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அங்கமான ரத்த வெள்ளை அணுக்களின் இயல்பான உற்பத்தியை சீர்குலைத்து விடும். ஒழுங்கற்ற தூக்க முறைகளும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும்.
மது-புகைப்பழக்கம்:
மது பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும். ஏனெனில் அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு ஆல்கஹால் காரணமாக பாதிப்படையும். புகைப்பிடித்தல் புற்றுநோயுடன் தொடர்புடையது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளிலும் குறுக்கிடும்.
வீட்டுக்குள்ளேயே இருத்தல்:
எப்போதும் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு இருப்பதும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்திவிடும். தினமும் சில நிமிடங்களாவது உடலில் சூரிய ஒளி படர வேண்டும். சூரிய ஒளியின் வெளிப்பாடு சர்க்காடியன் தாளத்தை பராமரிக்க உதவும். இது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது போதுமான அளவு கிடைக்காதபோது நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிவிடும்.
கொரோனா காலகட்டத்தில் பலரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டார்கள். எப்போதும் சளி, இருமலால் அவதிப்படுவது, அடிக்கடி வயிறு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வது, மன அழுத்தத்திற்கு ஆளாவது, அவ்வப்போது சோர்வாக இருப்பதாக உணர்வது, அடிக்கடி நோய் பாதிப்புக்கு ஆளாவது போன்ற அறிகுறிகளை எதிர்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்