என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை பராமரிப்பு"

    • வாரத்திற்கு மூன்றுமுறையாவது பீட்ரூட் எடுத்துக்கொள்ளுங்கள்.
    • பீட்ரூட் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    நாம் சுவைக்காகவே பெரும்பாலும் நிறைய காய்கறிகளை எடுத்துக்கொள்வோம். அதுவும் சைடிஸ் இல்லாமல் சாதம் இறங்காது என்பதற்காகத்தான், எதாவது ஒரு பொரியலை சாப்பிடுவோம். அப்படி நாம் சாப்பிடக்கூடிய பொரியல்களில் ஒன்றுதான் பீட்ருட். பலரும் அதிகமாக உருளைக்கிழங்குதான் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் பீட்ரூட்டின் ஊட்டச்சத்து நன்மைகளை நீங்கள் அறிந்தால் தினசரியாக எடுத்துக்கொள்ள தொடங்கிவிடுவீர்கள். பீட்ரூட்டின் ஆரோக்கிய நன்மைகளை காண்போம். 

    இரத்த அழுத்த மேலாண்மை

    பீட்ரூட்டில் அதிகளவு நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகின்றன. நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களைத் தளர்த்தி, விரிவுபடுத்தும். மேலும் ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்துகிறது.

    செரிமானம்

    ஒரு கப் பச்சை பீட்ரூட் 3.81 கிராம் நார்ச்சத்தை உடலுக்கு வழங்குகிறது. இது தினசரி மதிப்பில் (DV) சுமார் 13.61% ஆகும். நார்ச்சத்து என்பது செரிமானத்தை ஆதரிக்க உதவும் ஒரு கார்போஹைட்ரேட் ஆகும். இது குடல் இயக்கத்தை சீராக, மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் செரிமான செயல்முறையை மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது உதவுகிறது. மேலும் நீண்டநேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை தருகிறது.

    ஆக்ஸிஜனேற்ற அழற்சி எதிர்ப்பு பண்புகள்

    பீட்ரூட்டில் அதிகளவு பெட்டாலைன் உள்ளது. இது சிறந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட ஒரு சேர்மமாகும். ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களிலிருந்து காக்க உதவுகிறது. 

    இதய ஆரோக்கியம்

    பீட்ரூட் ரத்தத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, இதில் உள்ள பீட்டெய்ன் அமினோ அமிலமும் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பீட்டெய்ன், ஹோமோசைஸ்டீன்-ஐ மற்ற இரசாயனங்களாக மாற்ற உதவுகிறது, இதனால் அதன் இரத்த அளவு குறைகிறது.

    பீட்ரூட் ரத்தத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இதில் உள்ள பீட்டீன் அமினோ அமிலமும் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்கிறது. உதவுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பீட்டெய்ன், ஹோமோசைஸ்டீன்-ஐ மற்ற இரசாயனங்களாக மாற்ற உதவுகிறது, இதனால் அதன் இரத்த அளவு குறைகிறது. 


    பீட்ரூட் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

    மூளை ஆரோக்கியம்

    பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வயதாகும்போது இரத்த ஓட்டம் இயற்கையாகவே குறையத்தொடங்கும். நைட்ரிக் ஆக்சைடு மூளையில் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். இதனால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது. 

    கல்லீரல் ஆரோக்கியம்

    கல்லீரல் இரத்தத்தை வடிகட்டுதல், நச்சு நீக்குதல், செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்தல் என உடலின் பல்வேறு முக்கிய பணிகளை செய்கிறது. பீட்ரூட்டில் உள்ள பீட்டெய்ன், கல்லீரலில் கொழுப்பு படிவதைக் குறைத்து, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். கல்லீரல் தொடர்பான பிற நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.  

    ஒரு கப் பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துகள்

    கலோரிகள் 58, கொழுப்பு 0.231 கிராம் , சோடியம் 78 மிகி, கார்போஹைட்ரேட்டுகள் 13 கிராம், நார்ச்சத்து 3.81 கிராம், புரதம் 2.19 கிராம் உள்ளது. மேலும் பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பொட்டாசியம் இதயம், தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது. ஃபோலேட் திசு வளர்ச்சி மற்றும் இரத்த சிவப்பணு உற்பத்தியை ஆதரிக்கும் ஒரு பி வைட்டமின் ஆகும். வைட்டமின் சி தோல், எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 

    • அன்பின் வழியது வருவது அனைத்துமே அழகானதுதான்.
    • யாரை பார்த்தால் நம் முகம் பூக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்.

    நான், என் முகம், என் சருமம் பார்ப்பதற்கு அழகாக, பொலிவாக தெரியவேண்டும் என பலரும் நினைப்போம். இதற்கு பொருட்செலவு, பணச்செலவு, நேரச்செலவு என அனைத்தையும் செய்வோம். ஆனால் எதற்கு இவ்வளவு மெனக்கெடல்கள்? பொருட்செலவு? பணச்செலவு? நம் முகத்தில் மாற்றத்தை உண்டாக்குவதுதான் உண்மையான அழகா? உண்மையில் எது அழகு? பார்ப்போம்.

    "அழகு என்பது ஒருவரின் பார்வையில்தான் உள்ளது". ஆம், நாம் பலமுறை புத்தகங்களில் அல்லது பேச்சாளர்களால் அல்லது ஏதோ ஒருவகையில் கேள்விப்பட்டிருக்கும் இந்த சொற்றொடர் உண்மையில் அழகு என்பது நாம் ஒருவரை பார்க்கும் விதத்தில்தான் உள்ளது. ஒருவரை அப்படியே அவராகவே ஏற்றுக்கொள்வதில்தான் உள்ளது. இந்த சமூகத்தில் அழகு என்றால் அளவு உள்ளது. அதாவது முகம் உட்பட உதடு, மூக்கு, உடல்வாகு என அனைத்திற்கும் ஒரு அளவு உள்ளது. அது இந்த அளவில் இருந்தால்தான் அழகு என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நிறமும். தமிழர்களின் நிறமே, ஏன் இந்தியர்களின் நிறமே கருப்புதான் எனக்கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கே வெள்ளையாக வேண்டும் என்பதுதான் ஆசை. வெள்ளையாக இருப்பதுதான் இங்கு அழகு. அழகென்றால் இப்படித்தான் இருக்கும் என ஒரு இலக்கணம் இந்த சமூகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த இலக்கணத்தை தாண்டிய அழகு எது? இந்த கேள்வியை ஒரு  10 பொதுமக்களிடம் முன்வைத்தால், அவர்கள் அனைவரிடத்திலும் இருந்து பத்து பதில்கள் வரும். 

    ஒவ்வொரு பதிலும் ஒவ்வொன்றாக இருக்கும்போது அவர்களின் புரிதல்கள், பார்வைகள் வேறுபட்டது என்பது நமக்குத் தெரியும். ஆம், உண்மையில் அனைவரின் பார்வையும் வேறுபட்டது. எல்லோருடைய கண்களுக்கும் நாம் அழகாக தெரிவோமா என்றால் இல்லை. சமூகத்தின் அழகு இலக்கண வரையறைப்படி இருக்கும் ஒருவரை அனைவருக்கும் பிடிக்காது. அந்த இலக்கணத்தை விரும்புபவர்களுக்கு மட்டும்தான் அவர்களை பிடிக்கும். அப்போது எப்படி நம்மை பிடிக்கும்? எதனால் நம்மை பிடிக்கும்? எதுதான் அழகு?


    குழந்தைகளின் புன்னகையும் ஒரு அழகுதான்

    உலகில் படைக்கப்பட்ட அனைத்துமே அழகுதான். நான், நீங்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்கள், எழில் கொஞ்சும் இயற்கை வளம், தெரியாதோரின் கருணை, காரணமே இன்றி அழுத்தத்தில் சாலையில் தனியாக நடந்து செல்லும் நம் மனதை புன்னகைக்க வைக்கும் குழந்தை, என்றோ ஓர்நாள் தடவியதற்காக பார்க்கும்போதெல்லாம் வாலாட்டும் நாய்க்குட்டி, பாதையை அறிந்து பயணம் செய்யும் நமக்கு பயணத்தின்போது வழிசொல்லி "பத்திரமாக செல்" எனக்கூறும் யாரென்றே தெரியாத நரைவிழுந்த மூதாட்டி, அம்மாவின் தலையில் இருக்கும் கனகாம்பரம் என அடுக்கிக்கொண்டே போகலாம். இவையனைத்தும்தான் அழகு. ஆறுதல் தரும் அன்பை உமிழும் அனைவருமே அழகானவர்கள்தான். அவர்களின் வார்த்தைகள்தான் அழகானவை. அன்பின் வழியது வருவது அனைத்துமே அழகானதுதான்.

    யாரை பார்த்தால் நம் முகம் பூக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள். பிடித்த பெண்கள் அனைவரும் ஆண்களின் கண்களுக்கு தேவதைதான். பிடித்த ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு இளமாறன்தான். மொத்தமாக அகமும், அகத்தின்வழி நாம் ஒருவருக்கு அளிக்கும் புன்னகையும்தான் உண்மையான அழகு. இறுதியாக, நீங்கள் அழகாக தெரியவேண்டும் என்றால் எதுவும் செய்யவேண்டாம், புன்னகையை மற்றவருக்கு பரிசளியுங்கள். 

    • பாஞ்சாலி, தனது கணவர்கள் பேச்சை கேட்டதில்லை. தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்டு நடந்தவர்.
    • சிறந்த உறவில் கணவன் தோழனாகவும் இருப்பான்.

    கணவனா? தோழனா? என்னும் நம் தலைப்பிலேயே எவ்வளவு அர்த்தங்கள், பொருட்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலான பெண்களிடம் உங்கள் கணவரா? தோழரா? எனக்கேட்டால், தோழரையே சொல்வார்கள். ஏன் மகாபாரத நாயகி திரௌபதியை கேட்டிருந்தால்கூட தனது தோழர் கிருஷ்ணனைத்தான் கூறியிருப்பார். " ஐந்து ஆண்களுக்கு மனைவியான பாஞ்சாலி தனது கணவர்கள் எவரின் பேச்சையும் கேட்டதில்லை, தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்கவில்லை. நடந்தவர்" என பலரும் சொல்வதே அந்த பதிலுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த பதிலுக்கான உண்மையான காரணம் என்ன?

    குந்தியின் சொல்லோ, அல்லது முன்ஜென்ம வரமோ ஏதோ ஒரு காரணத்தால் திரௌபதி ஐந்து கணவர்களை ஏற்க வேண்டிய சூழல். ஏற்றாள். ஐந்து கணவர்கள் இருந்தும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது யார்? அவளது தோழன் கிருஷ்ணன்தானே. எப்போதெல்லாம் அவள் மனம் குழப்பத்தில் ஆழ்கிறதோ, எப்போதெல்லாம் அவள் இடரை அனுபவிக்கிறாளோ அப்போதெல்லாம் உறுதுணையாக இருந்து தோள் கொடுத்தவன் கண்ணன் ஒருவன்தானே. தனது மனைவியை சூதாட்டத்தில் வைத்து விளையாடியவர்களா? இல்லை சபையில் தனது துயில் உரியபோது துணி கொடுத்து அவள் மானத்தை காப்பாற்றியவனா? யாரைச் சொல்வாள்?

    தர்மத்தில் சிறந்தவன் யுதிர்ஷ்டன். பலத்தில் சிறந்தவன் பீமன். வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜுனன். திரௌபதியால் முதலில் மாலை சூட்டப்பட்ட, முதலில் நேசிக்கப்பட்ட கணவன். குதிரைகள் பற்றிய அறிவிலும், அழகிலும் சிறந்து விளங்கியவன் நகுலன். திரௌபதி துயில் உரியப்படுவது உட்பட முக்காலத்தையும் முன்னரே அறிந்தவன் சகாதேவன். இப்படி உலகில் சிறந்திருந்த இவர்களின் தர்மமோ, அறமோ, திறனோ, எதுவாலும் திரௌபதி துயில் உரியப்படுவதை தடுக்க முடியவில்லை. தடுக்கவில்லை. அத்தனை பலம் கொண்ட பீமன், வில்வித்தையில் சிறந்த அர்ஜூனன், ஞானத்திலும், வீரத்திலும், தர்மத்திலும் சிறந்திருந்த பீஷ்மர் உட்பட அரங்கில் சில தர்மர்கள் நினைத்திருந்தால், தடுத்திருந்தால் திரௌபதி அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கமாட்டாள். தன்னை அர்ப்பணித்த கணவன்மார்களே உதவாதபோது, கையில் சிறிது காயம் பட்டபோது தனது உடையை கிழித்து கண்ணனுக்கு கட்டியதை நினைவுகூர்ந்து, துணியை விட்டு மானம் காத்தான் கிருஷ்ணன். இதில் யார் சிறந்தவர்கள்? யார் திரௌபதி மீது உண்மையான பாசமும், அன்பும், அக்கறையும் கொண்டிருந்தவர்கள்? நட்பின் அடிப்படையில் வந்த ஒருவர் தனக்காக இவ்வளவு செய்யும்போது, காதல், திருமணப் பந்தம் மூலம் வந்த கணவர்கள் பயனற்றதாக இருந்தது ஏன்?


    திரௌபதிக்கு கண்ணன் உதவும் காட்சி

    இந்த பாண்டவர்களைப் போல பல கணவர்மார்கள் உள்ளனர். எப்போது தனது துணைக்கு தேவையோ அப்போது உதவமாட்டார்கள். சிறந்த உறவில் கணவன் தோழனாகவும் இருப்பான். அப்படி இருந்தால்தான் அந்த உறவு சிறக்கும். தோழன் கணவனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு கணவன் கண்டிப்பாக தோழனாக மாறமுடியும். பெண்களின் பதிலுக்கும் இதுதான் காரணம். தன் உணர்வுகளை மதிக்கும் ஒருவரையே பெண் தேர்ந்தெடுப்பாள். 

    • குடல் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டும் வரும் என்று நம்பிக்கொண்டிருந்தால் அது தவறானது!
    • எடை இழப்பு மற்றும் எடை அதிகரித்தலுக்கு குடல் புழுக்கள் ஒரு காரணியாக உள்ளன.

    "தம்பிக்கு, பாப்பாவுக்கு நாக்குப்பூச்சி மாத்திரை கொடுக்கணும். இந்த மாசம் நிறைய சாக்லேட் சாப்பிட்டா. வயித்துல புழு இருக்கும்" என நம்மை சுற்றி இருக்கும் சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா என சிறுவயது குழந்தைகளின் பெற்றோர் கூற கேட்டிருப்போம். குழந்தைகளுக்கு குடலில் எளிதாக புழுக்கள் உருவாகும். அதனால் அவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் கொடுப்பார்கள். ஆனால் அதை கேட்கும், பார்க்கும் நாம் என்றாவது குடல்புழு மாத்திரைகள் எடுத்துக்கொண்டுள்ளோமா? குடல் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டும் வரும் என்று நம்பிக்கொண்டிருந்தால் அது தவறானது. குடல் புழுக்களால் பெரியவர்களுக்கும் ஆபத்து உள்ளது. நமது குடலில் புழுக்கள் உள்ளன என்பதை எவ்வாறு கண்டறியலாம். அதற்கான அறிகுறிகளை இங்கு காணலாம்.  

    அதிகப்படியான பசி

    நாம் வேளை வேளைக்கு சரியாக உணவு எடுத்துக்கொண்டாலும், அடிக்கடி பசி எடுக்கும். குடல் ஒட்டுண்ணிகள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, வளர்சிதை மாற்றத்தில் குறுக்கிடுவதன் மூலம் நமது ஆரோக்கியம் பாதிப்படையும். உதாரணமாக அஸ்காரியாசிஸ் போன்ற புழுக்கள் உடலில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்துகள் உறியப்படும்போது நமக்கு அடிக்கடி பசி எடுக்கும். நாம் இடையில் நொறுக்குத்தீணிகள் எடுத்துக்கொண்டாலும் பசி அடங்கவில்லை என்றால் கண்டிப்பாக குடல் புழுக்களுக்கான அபாயம் உள்ளது. 

    பருக்கள், தோல் பிரச்சனைகள்

    தோல் வெடிப்புகள், புதிய தடிப்புகள் அல்லது அரிப்பு புள்ளிகள் போன்ற தோல் பிரச்சனைகள் பொதுவாக உணவு, ஹார்மோன்கள் அல்லது மன அழுத்தத்தால் ஏற்படுகின்றன. ஆனால் சில புழு தொற்றுகளும் தோலில் தடிப்புகள் அல்லது புண்கள் போன்ற வெளிப்பாடுகளைக் காட்டுகின்றன. உதாரணமாக, தோல் லார்வா மைக்ரான்ஸ் (கொக்கிப்புழு லார்வாக்களால் ஏற்படுகிறது) தோலில் ஊடுருவி அரிப்பு மற்றும் சிவப்பு நிற வெடிப்புகளை உருவாக்குகிறது. இவை வெளிப்புற பாதிப்புகள் என்றால், குடல் புழுக்கள் ஊட்டச்சத்து குறைபாடு, நோயெதிர்ப்பு மண்டல மாற்றங்கள் அல்லது வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் போன்ற இரண்டாம் நிலை ஏற்றத்தாழ்வுகள் மூலம் சருமத்தை பாதிக்கும். இது பருக்கள் மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறிகளை காட்டும்.

    எடை மாற்றம்

    குடல் புழு தொற்று இருப்பதற்கான வழக்கமான அறிகுறிகள், வயிற்று வலி, வீக்கம், வாயு, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும். பெரியவர்களுக்கு இந்த அறிகுறிகள் சற்று மாறுபடும். லேசான அசௌகரியம், வாயு பிரச்சனைகள், வீக்கம், எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு இருக்கும்.


    பெரியவர்களும் குடல் புழு மாத்திரைகள் எடுத்துக்கொள்வது அவசியமானது 

    அரிப்பு

    என்டோரோபயாசிஸ் போன்ற நூல் புழுக்கள், அதாவது அதன் பெண் புழுக்கள் இரவில் குடலை விட்டு வெளியே வந்து ஆசனவாயைச் சுற்றியுள்ள தோலில் முட்டையிடுவதால், கடுமையான அரிப்பு மற்றும் அசௌகரியம் ஏற்படுகிறது. பெரும்பாலும் பெரியவர்கள் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கின்றனர். அதாவது வெறும் எரிச்சல், அவ்வளவு பெரிய விஷயமல்ல என்று நினைத்து இந்த தொற்றுகளை கண்டுகொள்வதில்லை.

    சோர்வு, இரும்புச்சத்து குறைபாடு

    புழுக்கள் உடலின் ஊட்டச்சத்துக்களை உண்ணும்போது, நமது உடல் போதுமான இரும்பு, புரதங்கள் அல்லது பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை பெறும் வாய்ப்புகளை இழக்கிறது. இது சோர்வு, சிலநேரங்களில் ரத்த சோகைக்கு வழிவகுக்கும். மேலும் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். ஒருவருக்கு காரணமில்லாமல் தொடர்ச்சியாக சோர்வு இருந்தால் கண்டிப்பாக குடல்புழுக்கள் முக்கிய காரணமாக இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டு, உங்களுக்கு குடல் புழுக்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், இரப்பை குடல் நிபுணரிடம் உங்கள் உடலில் தென்படும் அறிகுறிகளைக் கூறி ஆலோசனை பெறுங்கள்.  

    • பாதாமை அப்படியே எடுத்துக்கொள்வதை விட ஊறவைத்து எடுத்துக்கொள்வது இன்னும் ஆரோக்கியமானது.
    • ஒவ்வாமை உள்ளவர்கள் பாதாம் எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம்.

    உணவை தாண்டி உடல் ஆரோக்கியத்திற்காக பழங்கள், விதைகள், கொட்டைகள் போன்றவற்றையும் நாம் எடுத்துக்கொள்வோம். அந்த வகையில் நம்மில் பலரும் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்றுதான் பாதாம். பலரும் இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரியாமலேயே சாப்பிடுவர். ஆனால் இது உடலுக்கு பயக்கும் சில நன்மைகளை நாம் அறிந்தால் கண்டிப்பாக தினசரி உணவின் ஒரு பகுதியாகவே மாற்றிவிடுவோம். அப்படி என்ன நன்மைகளை கொண்டுள்ளது பாதாம், பார்ப்போம்.

    ஆக்ஸிஜனேற்றிகள்

    பாதாமில் வைட்டமின் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஈ ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களிலிருந்து காக்கிறது. வைட்டமின் ஈ நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. மேலும் அல்சைமர் உள்ளிட்ட நரம்பியல் சிதைவுகளை எதிர்த்து போராடுகிறது. பாதாமில் இயற்கையான ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உட்பட பல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நன்மைகள் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    ஊட்டச்சத்துகள்

    பாதாம் பருப்பு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இந்த கொட்டைகள் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் சிறந்த ஆதாரங்களாகும். நிறைவுறா கொழுப்புகள் எல்டிஎல் கொழுப்பை (low-density lipoprotein) குறைக்க உதவும். மெக்னீசியம் பாதாமில் அதிக அளவில் காணப்படும் மற்றொரு ஊட்டச்சத்து ஆகும். மெக்னீசியம் நரம்பு மற்றும் தசை செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது, இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கிறது மற்றும் எலும்புகள் வலுவாக இருக்க உதவுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் ஆதரிக்கிறது. 

    குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

    பாதாம் பருப்பு குடல் பாக்டீரியாக்கள் நன்றாக செயல்பட உதவுகிறது. 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பாதாம் சாப்பிடுபவர்களுக்கு, சாப்பிடாதவர்களை விட அதிக ப்யூட்ரேட் இருப்பது கண்டறியப்பட்டது. இது குடல் பாக்டீரியாக்கள் நன்கு செயல்படுவதைக் குறிக்கிறது. ப்யூட்ரேட் என்பது குடல் நுண்ணுயிரிகளால், செரிக்க முடியாத உணவு நார்ச்சத்தை பதப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு கொழுப்பு அமிலமாகும். பாதாம் மற்றும் பாதாம் தோல் ஆகியவை ப்ரீபயாடிக்குகளாகக் கருதப்படுகின்றன. காரணம் இவை குடல் பாக்டீரியாக்கள் செழித்து வளர உதவுகின்றன. குடல் பாக்டீரியாக்கள் செழித்து வளரும்போது, அவை அதிக ப்யூட்ரேட்டை உற்பத்தி செய்கின்றன. ப்யூட்ரேட் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. சில வளர்சிதை மாற்ற நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.   


    உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் பாதாம் எடுத்துக்கொள்ளலாம்

    இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

    பாதாம் பருப்பு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் வாஸ்குலர் அமைப்பு உட்பட உடல் உறுப்புகளில் ஏற்படும் கூடுதல் அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த நாளங்கள் ஓய்வெடுக்கவும், தமனி விறைப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. கொட்டை வகைகள் நல்ல கொழுப்பை ஆதரிக்க உதவுகின்றன. அதிக கொழுப்பு உள்ளவர்கள் பாதாமை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது. 

    எடைக்குறைப்பு

    எடைக் குறைக்க விரும்புவர்கள் பாதாமை எடுத்துக்கொள்ளலாம். பாதாம் பசியை அடக்க உதவுகிறது. பாதாம் பருப்பு உடல் நிறை குறியீட்டெண் (BMI), இடுப்பு சுற்றளவு மற்றும் வயிற்றுப் பகுதி கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. மேலும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.   

    தோல் ஆரோக்கியம்

    மாதாவிடாய் பிரச்சனைகள் இருப்பவர்கள் பாதாம் எடுத்துக்கொள்ளலாம். மற்ற கொட்டைகளுடன் ஒப்பிடும்போது, பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், மெக்னீசியம், கால்சியம், இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.  

    • காதல் மொழிகள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள்.
    • தொடுதல் மனித வாழ்வுக்கு மிக அவசியமான ஒன்று.

    காதல் ஒருவரை பைத்தியமாக்கும் எனக்கூறுவார்கள். அதற்கு காரணம் காதல் வந்தால் தனிமையில் சிரிப்பார்கள், கூட்டத்தின் மத்தியிலும் தனியாக உணர்வார்கள், ஏதோ ஒரு யோசனையிலேயே இருப்பார்களாம். அதாவது மற்றவர்கள் கூறுவதை செவிகொடுத்து கேட்க அவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் அப்படி கூறுவார்களாம். இப்படிப்பட்ட இந்த காதலுக்கு 5 மொழிகள் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? எங்களுக்கு தெரிந்தது எல்லாம் தமிழும், ஆங்கிலமும்தான். அதென்ன 5 மொழிகள் என பலரும் ஆச்சர்யப்படலாம். ஆம் காதலில் 5 மொழிகள் உள்ளனவாம். அதாவது காதலில் உள்ளவர்கள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள். காதலில் இந்த மொழிகளைத்தான் பெரும்பாலும் பெண்கள் விரும்புவார்கள். 

    வார்த்தை

    நமது காதலரிடமோ அல்லது நமக்கு பிடித்தவர்களிடமோ வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துதல். நீ அழகாக இருக்கிறாய் எனக்கூறுதல், அவர்களை புகழ்தல், பாராட்டுதல், ஊக்குவித்தல், நான் இருக்கிறேன் என தைரியம் கொடுத்தல் போன்ற அனைத்தும் காதலின் முதல் மொழியாகும். இப்படி செய்யும்போது உண்மையில் உங்கள் அன்புக்குரியவர்கள் உள்ளிருந்து மகிழ்ச்சியடைவார்கள். ஒரு உறவு நீடிக்க தொடர்பு (communication) மிகவும் அவசியமானது. பல உறவுகளுக்கிடையே பேச்சு இல்லாததே அதன் பிரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. 

    நேரம்

    பலரும் தங்கள் துணையோடு நேரம் செலவிட விரும்புவர். பல திருமணங்கள் முடிவுக்கு வரக்காரணமே நேரம் ஒதுக்காமைதான். வேலை, வீடு என சாக்குப்போக்கு கூறாமல் உங்கள் துணைக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் விரும்புவது அதைத்தான். நேரம் பொன் போன்றது எனக்கூறுவார்கள். நேரத்தை கொடுக்காமல், நீங்கள் பொன்னையே கொடுத்தாலும் அதை பலரும் ஏற்கமாட்டார்கள். 

    தொடுதல்

    தொடுதல் என்பது உடலுறவை குறிப்பது அல்ல. தொடுதல் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. அது காதலரைத்தான் தொடவேண்டும் என்றல்ல. உங்கள் நாய்க்குட்டியை கட்டியணைக்கலாம். நண்பர்களை ஆரத்தழுவலாம். தழுவுதல் மனித வாழ்க்கைக்கு ஒரு ஆறுதலைத் தரும். அதுபோல காதலில் ஒருவரின் கையை ஒருவர் பிடித்து நடப்பது போன்றவை பெண்கள் அதிகம் விரும்பும் ஒன்றாகும். பெண்களின் நகங்களை பிடித்து அவர்களுக்கு நெய்ல்பாலிஷ் போடலாம், மருதாணி போடலாம். அதுபோல பெண்களும் ஆண்களின் கையை பிடித்து அவர்களுக்கு ஆறுதல் கூறலாம். அன்பாக பேசலாம். இந்த தொடுதல் பலருக்கும் பல மனநன்மைகளை தருகிறது. 


    எந்த வழியாக, மொழியாக இருந்தாலும் காதலை வெளிப்படுத்துங்கள்

    துணைக்கு சேவை

    சொல்லைவிட செயலில்தான் ஒருவரின் காதல் வெளிப்படும். உங்களின் காதல் செயல்களாக இருந்தால், நீங்கள் அவர்களுக்காகச் செய்யும் சிறிய விஷயங்களைக்கூட அவர்கள் பெரிதாக எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள். அதாவது வீட்டில் அதிக வேலை இருந்தால், உங்கள் துணைக்கு ஆதரவாக பாத்திரங்களை சுத்தம் செய்யுதல், வீட்டை பெருக்குதல், குழந்தைகளை கவனித்தல், காதலர்கள் அலுவலக வேலைகளில் உதவுதல் என சின்ன சின்ன உதவிகளை செய்தாலே போதும்.

    பரிசு

    உங்கள் அன்பை பரிசுகள் மூலம் வெளிப்படுத்தலாம். அந்தப் பரிசின் அளவு முக்கியமல்ல, ஆனந்தம்தான் முக்கியம். பெண்கள் பரிசு கொடுத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற எண்ணம் பொதுவாகவே ஆண்களிடம் உள்ளது. ஆனால் அது பரிசுக்கான ஆனந்தமோ, மகிழ்ச்சியோ கிடையாது. பரிசு வாங்க அவர்கள் செலவிடும் நேரமும், அவர்களின் அந்த முயற்சியும் ஈர்க்கிறது, மகிழ்விக்கிறது. நமக்காக யோசித்து செய்கிறார்கள் என ஒரு ஆனந்தம். நாம் நேசிக்கும் ஒருவர் கொடுக்கும் பரிசுகள் பொக்கிஷமானவை.  

    இவை மட்டும்தான் காதல்மொழியா?

    இவை மட்டும்தான் காதலை வெளிப்படுத்துவதற்கான வழிகள் என்று இல்லை. அன்பை வெளிப்படுத்தவும், பெறவும் பல்வேறு வழிகள் உள்ளன. இவை அன்பை கட்டமைக்கக்கூடிய சில வழிகளே. வெளிப்படுத்தப்படாமலும் பல காதல்கள் இங்கு வாழ்கின்றன. ஆனால் சொல்லாமல் இருந்தால், அவர்கள் மீதான உங்கள் அன்பு எப்படி அவர்களுக்கு தெரியும்? ஆகையால் உங்கள் காதலை எந்த வழியாக இருந்தாலும் அந்த காதலின்வழி வெளிப்படுத்துங்கள். 

    • குழந்தைகளின் அழுகை "எனக்கு நீ தேவை!" என்பதற்கான சமிக்ஞையாகும்.
    • குழந்தை எழுப்பும் வெவ்வேறு விதமான சத்தங்களையும், அழுகைகளையும் புரிந்துகொள்ள நாளாகும்.

    புதிதாக பெற்றோரான சிலருக்கு ஆரம்பத்தில் குழந்தை எழுப்பும் வெவ்வேறு விதமான சத்தங்களையும், அழுகைகளையும் புரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள சிறிது நாட்கள் எடுக்கும். நாட்கள் செல்ல செல்ல குழந்தை எதற்காக அழுகிறது என்று நீங்களே தெரிந்துகொள்வீர்கள். ஆனால் ஆரம்பத்தில் குழந்தைகளை கையாள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். குழந்தைகளின் அழுகை "எனக்கு நீ தேவை!" என்பதற்கான சமிக்ஞையாகும். உங்கள் குழந்தை ஏன் அழுகிறது என்பதையும், அவர்களை அமைதிப்படுத்த நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.  

    குழந்தைகள் அழுவதற்கான சில காரணங்கள்

    • பசி
    • காற்று புகுதல்
    • அசௌகரியம்
    • சோர்வு
    • கோலிக் (குழந்தைகள் பொதுவாக ஒருநாளைக்கு 3 மணிநேரத்திற்கும் மேலாக அழுவது - உடல்நல பாதிப்புகளை குறிக்காது)
    • உடல்நிலை சரியில்லாமல் இருப்பது 

    மேற்குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் குழந்தைகள் அழுவதற்கான பொதுவான காரணங்கள். 

    குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதை எவ்வாறு அறிவது?

    • தொடர்ந்து அழுவது (அழும் விதம் வழக்கத்தை விட வித்தியாசமாகவும், அதிக சத்தமாகவும் இருக்கலாம்)
    • சிணுங்கும் சத்தங்களை எழுப்புதல்
    • அதிக சத்தமாக அலறல்
    • புரண்டு புரண்டு படுத்தல்
    • கை, கால்களை பிடுங்குவது, உடலை வேகமாக நீட்டுவது
    • எப்போதும் எரிச்சலாக இருத்தல் ( முகத்தில் வெளிகாட்டுவார்கள்)
    • சாப்பிடாமல் இருப்பது
    • இரவில் தூங்காமல் இருப்பது அல்லது வழக்கத்தை விட அதிகமாக தூங்குவது.

    மேற்கூறிய காரணங்கள் உடல்நல பாதிப்பை குறிக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். 


    குழந்தைகள் பொதுவாகவே ஒருநாளைக்கு 3 மணிநேரத்திற்கும் மேல் அழுவார்கள்!

    குழந்தையை எப்படி அமைதிப்படுத்துவது?

    • குழந்தையை ஒரே இடத்தில் படுக்க வைக்காமல், கையில் தூக்கி விளையாட்டு காட்டுங்கள். மார்போடு அணைத்து சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.
    • வெந்நீரில் குளிப்பாட்டுங்கள்.
    • குழந்தையின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி செய்ய, மென்மையான குரலில் பாட்டுப்பாடலாம். அல்லது அமைதியாக பேசலாம். எப்போதும் இல்லாமல் வித்தியாசமாக அமைதியாக பேசுவது அவர்களின் கவனத்தை ஈர்க்கும். அழுகையை மறக்கச்செய்யும்
    • பால் கொடுத்து பாருங்கள். பசியாக இருந்தால் அழுகை நின்றுவிடும்.
    • மடியில் குப்புற படுக்க வைத்து முதுகை லேசாக தடவிக்கொடுத்து பாருங்கள்.
    • பொம்மைகளை கொடுத்து பார்க்கலாம்
    • சாப்பிடும்போது அல்லது பால் குடிக்கும்போது காற்று புகுந்திருந்தால் அது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அப்போது அவர்களை ஏப்பம்விட வையுங்கள். காற்று வெளியே வந்தால் நன்றாக உணர்வார்கள்.
    • குழந்தையின் துணி ஈரமாக, அழுக்காக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 
    • கொண்டாட்டங்களுக்கு பிறகு சருமத்தை புத்துணர்ச்சியூட்ட எக்ஸ்ஃபோலியேஷன் ஒரு சிறந்த வழி.
    • நல்ல தூக்கம் எந்த ஒப்பனையாலும் ஒப்பிட முடியாத இயற்கையான பளபளப்பை முகத்திற்கு அளிக்கும்.

    பண்டிகை காலங்களில் அல்லது விஷேசங்களின்போது நாம் பெரும்பாலும், நீண்டநேரம் நீடிக்கவேண்டும் என்பதற்காக அதிகளவு மேக்கப் போடுவோம். இந்த அதிகப்படியான மேக்கப் பின்னர் சருமத்தை மந்தமாகவும், சோர்வாகவும் மாற்றும். அதிக லேயர்கள் மற்றும் அவற்றில் உள்ள சில பொருட்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்து, சிவத்தல், வறட்சி மற்றும் உணர்திறன் ஆகியவற்றை ஏற்படுத்தும். கொண்டாட்டங்கள் முடிந்து நாம் பழைய நிலைக்கு திரும்பினாலும், முகம் அந்த கலைப்பில் அப்படியேத்தான் இருக்கும். அலச்சலால் சோர்வடைந்த சருமத்தை மீண்டும் பிரகாசிக்க வைக்க உதவும் சில எளிய வழிகள் இங்கே. 

    நீரேற்றம்

    விழாக்களின்போது நாம் தவிர்க்கும் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று தண்ணீர் குடிப்பது. அங்கு செல்வது, இங்கு செல்வது என வேலையில் தண்ணீர் குடிக்கவே நேரம் இருக்காது. வேலைகளால் போதுமான அளவு தண்ணீர் குடிக்க எளிதில் மறந்துவிடலாம். நீரிழப்பு சருமத்தை மந்தாக்கும், சோர்வாக்கும். இதனால் நீரேற்றம் என்பது சருமத்திற்கும், உடலுக்கும் மிக அவசியமான ஒன்று. ஒவ்வொரு நாளும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவேண்டும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தண்ணீர் குடியுங்கள். மாற்றாக எலுமிச்சை சாறும் குடிக்கலாம். சில நேரங்களில் குலதெய்வ கோயில்களுக்கு செல்வோம். அங்கு வெயிலில் நிற்கவேண்டிய சூழல் வரும். அதனால் அதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது வெள்ளரிக்காய், புதினா போட்டு தண்ணீரை எடுத்து சென்று அதை குடியுங்கள். ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வது, மேக்கப், கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.  

    எக்ஸ்ஃபோலியேட்

    கொண்டாட்டங்களுக்கு பிறகு சருமத்தை புத்துணர்ச்சியூட்ட எக்ஸ்ஃபோலியேஷன் ஒரு சிறந்த வழியாகும். இது முகத்தில் உள்ள இறந்த செல்கள், அதிகப்படியான எண்ணெய், மீதமுள்ள மேக்கப்பை நீக்கி சருமத்திற்கு புது தோற்றத்தை கொடுக்கும். பண்டிகை நாட்களை தாண்டி, வாரத்திற்கு ஒரு முறையும் எக்ஸ்ஃபோலியேட் செய்வது சிறந்தது.  


    கொண்டாட்டங்களுக்கு பிறகு சருமத்தை புத்துணர்ச்சியூட்ட எக்ஸ்ஃபோலியேஷன் சிறந்த வழி 

    ஃபேஸ்மாஸ்க்

    ஃபேஸ்பேக் அல்லது ஃபேஸ்மாஸ்க் சருமப் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃபேஸ்மாஸ்க் புத்துணர்ச்சியை அளிக்கும். ஃபேஸ் மாஸ்க்குகளில் சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கி ஊட்டமளிக்கும் சீரம்கள் உள்ளன. காஃபின், தாவரச் சாறுகள் போன்ற பொருட்களும் உள்ளன. அவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. குறிப்பாக கண்களைச் சுற்றி. அதுபோல ஃபேஸ்பேக்கும் சிறந்த நன்மையை அளிக்கும். தினமும் முகத்தை க்ளென்சிங் செய்தாலும் எல்லா முறையும் சருமத்தின் ஆழம்வரை நன்கு சுத்தம் செய்வதில்லை. அதனால் வாரத்தில் ஒருநாள் ஃபேஸ்பேக் பயன்படுத்தும்போது அது சருமத்தின் ஆழம்வரை சென்று சுத்தம் செய்யும். இரண்டு முறை செய்வது கூடுதல் பிரகாசத்தை வழங்கும். 

    சன்ஸ்கீரினை தவிர்க்காதீர்கள்

    விழா நாட்களில் அதிகம் வெளியே செல்ல வேண்டியிருக்கும். அப்போது சூரிய ஒளியின் சேதங்களிலிருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கீரின் உதவும். அதனால் மறக்காமல் வெளியே செல்லும்போது சன்ஸ்கீரின் பயன்படுத்துங்கள். 

    தூக்கம்

    கொண்டாட்டங்களினால் தூக்கம் பாதிக்கப்படும். சரியான தூக்கம் இல்லாதது கண்ணைச்சுற்றி கருவளையங்களையும், வீக்கத்தையும் ஏற்படுத்தும். அதனால் நன்கு தூங்குங்கள். தூக்கம் உங்கள் உடல், சரும செல்களை சரிசெய்து சமநிலையை மீட்டெடுக்கிறது. நீங்கள் நன்றாக ஓய்வெடுத்து எழுந்திருக்கும்போது, உங்கள் சருமம் எந்த ஒப்பனையாலும் ஒப்பிட முடியாத இயற்கையான பளபளப்பைப் பெறும்.   

    • வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடும்பங்களுக்கும் இலவசம்!
    • வேலை தேடும், வேலைக்கு செல்லும் மற்றும் படிக்கும் தாய்மார்களுக்கான முன்னெடுப்பு.

    குழந்தை பராமரிப்பு என்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல. பசியறிந்து குழந்தைக்கு உணவு கொடுக்கவேண்டும். அவர்களை தூங்கவைக்க வேண்டும். குளிக்க வைக்க வேண்டும். எப்போதும் அவர்களை கண்காணித்து கொண்டே இருக்கவேண்டும். இப்படி பல வேலைகளை உள்ளடக்கியது. அதுவும் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பராமரிப்பது இன்னும் சிக்கல் வாய்ந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களில் பணிக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் தாய்மார்களை உதவிக்கு வைத்துக்கொள்வர். இருப்பினும் நகரங்களில் வாழ்பவர்களால், கிராமத்தில் இருக்கும் தங்கள் அம்மாக்களை இங்குகொண்டுவந்து வைத்து குழந்தையை பார்த்துக்கொள்ள வைப்பது என்பது பல நடைமுறை சிக்கல்களை உள்ளடக்கியது. 

    சில வீட்டில் அவர்களின் அம்மாக்களும் வேலைக்குப் போகும் சூழல் இருக்கும். அப்போது குழந்தையை யார் பார்த்துக்கொள்வது? இந்த சூழலில் இருக்கும் பலரும் தேர்ந்தெடுப்பதுதான் குழந்தை பராமரிப்பு மையங்கள். காசு, பணம் போன்றவற்றைவிட பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகள் மேலானவர்கள்தான். ஆனால் அவர்களை பராமரிக்கவும் பணம் என்பது அத்தியாசியமான ஒன்று. அதனால் அவர்களுக்கும் வேறு வழியில்லை. வேலைக்கு சென்றுதான் ஆகவேண்டும். குழந்தை பராமரிப்பு மையங்களில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி தங்கள் குழந்தைகளை விட்டுச்செல்வர். பணிமுடிந்து வந்து மீண்டும் அழைத்துச்செல்வர்.

    அல்லது பலரும் வீட்டிலேயே குழந்தை பராமரிப்பாளரை நியமித்து குழந்தைகளை கவனிக்க சொல்வர். இதற்கு எப்படியும் மாதத்திற்கு ரூ.15 ஆயிரத்திற்குமேல் செலவு செய்வர். வீட்டில் பணியமர்த்தப்படும் பராமரிப்பாளர்களுக்கு மாதம் ரூ.13 முதல் 15 ஆயிரம் சம்பளம் வழங்குவர். ஒருவேளை கூடுதல் வேலைகள், அதாவது வீட்டு வேலைகள் சிலவற்றையும் சேர்த்து பார்க்கச்சொன்னால் அதற்கேற்றவாறு கூடுதல் சம்பளம் கொடுப்பர். பராமரிப்பு மையங்களில் இந்த தொகை மாறுபடலாம். சில மையங்கள், குறிப்பாக பகல்நேர பராமரிப்பு மையங்கள், நாள் அல்லது வார அடிப்படையில் கட்டணம் வசூலிக்கின்றன. சில மையங்கள் மணிநேரத்தை கணக்கில்கொண்டு கட்டணம் வசூலிக்கின்றன. இந்த செலவே எப்படியும் அவர்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு போய்விடும்.


    அனைத்து குடும்பங்களுக்கும் இலவச குழந்தை பராமரிப்பை வழங்குகிறது நியூ மெக்ஸிகோ 

    இலவச குழந்தை பராமரிப்பு...

    இந்நிலையில் இந்த குழந்தை பராமரிப்புச் செலவை குறைக்கும் வகையில் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ நகரம், புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது குழந்தை பராமரிப்பு இலவசம் என அறிவித்தது. அம்மாநில அரசு அறிவித்த அந்த திட்டமும் நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் அனைத்து குடும்பங்களுக்கும் இலவச குழந்தை பராமரிப்பை வழங்கும் முதல் மாநிலமாக நியூ மெக்ஸிகோ மாறியுள்ளது. இதனால் அம்மாநில மக்களுக்கு ஆண்டுக்கு சுமார் $12,000 மிச்சமாகிறது. இந்திய மதிப்பில் தோராயமாக பத்து லட்சத்து அறுபது ஆயிரம். குடும்பத்தினர் தங்கள் வேலையை தொடரவும், கல்வியை தொடரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

    "குடும்ப ஒற்றுமை, பணியாளர் பங்கேற்பு மற்றும் நியூ மெக்ஸிகோவின் எதிர்கால செழிப்புக்கு குழந்தை பராமரிப்பு அவசியம். உலகளாவிய குழந்தை பராமரிப்பில் முதலீடு செய்வதன் மூலம், நாங்கள் குடும்பங்களுக்கு நிதி நிவாரணம் வழங்குகிறோம். எங்களது பொருளாதாரத்தை ஆதரிக்கிறோம், மேலும் ஒவ்வொரு குழந்தையும் வளரவும், செழிக்கவும் வாய்ப்பு இருப்பதை உறுதி செய்கிறோம்" என நியூ மெக்ஸிகோ ஆளுநர் மிச்செல் லுஜன் கிரிஷாம் தெரிவித்துள்ளார். 

    திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது?

    கடந்த சில ஆண்டுகளாகவே இத்திட்டம் அங்கு நடைமுறையில் இருந்துள்ளது. ஆனால் அது வருமானத்தின் அடிப்படையில், அதாவது வறுமைக்கோட்டின் கீழ் என நாம் குறிப்பிடுவதுபோல வருமானம் குறைவாக இருப்பவர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இந்த சலுகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அரசினுடைய மையங்களில் சேர்த்தாலும், தனியார் பராமரிப்பு மையங்களில் குழந்தைகளை சேர்த்தாலும் அதற்கான பராமரிப்பு தொகையை அரசு வழங்கும். பராமரிப்பு தொகையை பெற்றோர்கள் கட்டிவிட்டு, பின்னர் அந்த தொகையை அரசிடமிருந்து பெறுவார்கள். 

    • குரல்கள் கொடுக்கும் அறிவுரையைவிட, செயலின் விளைவுகள் நிறையப் பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
    • அதிகம் கோபப்படும்போது நம்மீது வெறுப்பு உணர்வு தோன்ற ஆரம்பித்துவிடும்.

    குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதானல்ல. பெற்றோர் என்ற பொறுப்பு எவ்வளவு கடமைகளை கொண்டது என்பதை அந்த நிலையில் இருப்பவர்கள் அறிவர். இந்தக் கடமையில், இந்த பணியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, அதாவது தவறு என்றால் தாங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்க வேண்டுமென்றால் கத்தினால்தான் அது நடக்கும் என நம்புவது. அவர்களை பயப்பட வைப்பதற்கு, சொல்வதை கேட்க வைப்பதற்கு என அனைத்திற்கும் கத்துவதுதான் வழி என பல பெற்றோர்களும் நினைக்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கத்தினால் அப்போதைய வேலை வேண்டுமானால் முடியலாம். ஆனால், அந்தக் கத்தல் குழந்தைகளை அதிக பதட்டமாகவும், அடங்காதவர்களாவும் மாற்றுகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கத்தாமல் குழந்தைகளை நாம் சொல்வதை கேட்கவைப்பது எப்படி என்பதை கூறும் 5 எளிய வழிகள். 

    கண்களை பார்த்து, அமைதியாக பேசுங்கள்...

    குழந்தைகள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அல்லது அவர்களை ஒரு விஷயத்தை செய்ய வைக்க வேண்டுமானால், கத்தாமல், அதிகாரத் தோரணையில் சொல்லாமல், அவர்களிடம் சென்று மண்டியிட்டு அவர்களது கண்களை பார்த்து அமைதியாக பேசுங்கள். அந்த அமைதியான பேச்சு அவர்களை கவனிக்க செய்யும். மேலும் சில விஷயங்களை அவர்களை சொல்லவும்  வைக்கும்.

    கட்டளை வேண்டாம்

    "இப்போதே செய்" என கட்டளையிடுவதற்கு பதில், சாப்பிட்டுவிட்டு வீட்டுப்பாடம் செய்கிறீர்களா? இல்லை வீட்டுப்பாடம் செய்துவிட்டு சாப்பிடுகிறீர்களா? அல்லது கொஞ்சநேரம் விளையாடுகிறீர்களா? ஒரு 10 நிமிடம் இடைவெளி எடுத்துக்கொள்கிறீர்களா? என கேளுங்கள். அப்போது அதை செய்வார்கள்.

    இடைவெளி விட்டுப் பேசுங்கள்

    குழந்தைகளிடம் அவர்களின் தவறை குறிப்பிட்டு கோபமாக பேசும்போது, சிறிது இடைவெளி விட்டு பேசுங்கள். கோபமாக இருக்கும்போது கொஞ்சம் அமைதியானால் அந்த கோபம் தணியும். உங்களின் இந்த சுயகட்டுப்பாட்டை மாதிரியாக கொண்டு குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்றுக்கொள்வார்கள்.  


    குழந்தைகளின் கண்களை பார்த்து அமைதியாக பேசுங்கள்

    முயற்சியைப் பாராட்டுங்கள், முடிவுகளை மட்டுமல்ல

    போட்டியோ, ஏதேனும் புதிய செயலோ எதுவாக இருந்தாலும் அதன் வெற்றி, முடிவை பார்க்காமல் குழந்தைகளின் அந்த முயற்சியை, அதில் கலந்துகொண்டதை பாராட்டுங்கள். அது அவர்களை ஊக்குவிக்கும். தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால், அடுத்தமுறை நன்றாக எடுங்கள் என கூறுங்கள். அப்படி தொடர்ந்து மதிப்பெண்கள் குறைந்தால் அதற்கான காரணம் என்னவென கண்டறியுங்கள். அதைவிடுத்து கத்துவதால், கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லை. 

    தண்டனைகளைவிட விளைவுகள் பாடத்தை சொல்லிக்கொடுக்கும்

    மிகவும் அடம்பிடித்து குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யாவிடில் கத்துவதற்கு பதிலாக அதை அப்படியே விடுங்கள். மறுநாள் ஆசிரியரின் முன்பு அதற்கு பதில்சொல்ல கடமைப்படிருப்பர். நம் குரல்கள் கொடுக்கும் அறிவுரையைவிட, அவர்களின் செயலின் விளைவுகள் நிறையப் பாடங்களை கற்றுக்கொடுக்கும். இது வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் பொருந்தும்.

    அமைதி

    கத்துவதைவிட அமைதியாக பேசுவது அவர்களை காதுகொடுத்து கேட்கவைக்கும். அதிகம் கோபப்படும்போது நம்மீது ஒரு வெறுப்பு உணர்வு தோன்ற ஆரம்பித்துவிடும். "அன்னைக்கு என்ன அடிச்சல்ல" என நாம் திட்டுவது, அடிப்பது போன்ற நிகழ்வுகள் அவர்களின் மனதில் ஆழமாக பதியும். அவர்களின் தவறை சுட்டிக்காட்ட பேசாமல் அமைதியாக இருங்கள். அப்போது அவர்களே வந்துப்பேசி தவறை உணர்வார்கள். 

    • உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது.
    • முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும்.

    குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான விஷயம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, உணவு ஒவ்வாமை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டால் குழந்தைகள் சத்துள்ள பொருட்களை சாப்பிட முடியாது, உடல் எடை குறையும், உடல்நலம் பாதிக்கப்படும். உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதைக் குணப்படுத்தும் முறைகளைக் காண்போம். 

    குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை இருப்பதை எவ்வாறு கண்டறிவது?

    வளரும் குழந்தைகளுக்கு புதிதாக உணவுகளை பழக்கப்படுத்த வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சாதம், முட்டை, வேர்க்கடலை, அவித்த உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை பெற்றோர்கள் கொடுக்க தொடங்குவார்கள். அப்படி இந்த பொருட்கள் ஒத்துகொள்ளவில்லை எனில் சாப்பிட்ட சிறிதுநேரத்திலேயே குழந்தைகள் வாந்தி எடுத்துவிடுவார்கள். அல்லது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். அரிப்பு, தோல் வெடிப்புகள், வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். சிலநேரங்களில் மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். மேலும் சில உணவுகளை குழந்தைகள் சாப்பிடவே மாட்டார்கள். அப்போது அது காலப்போக்கில் சரியாகிவிடும் என பெற்றோர் விட்டுவிடுவார்கள். குழந்தைக்கு உணவு ஒவ்வாமை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். அது ஒவ்வாமைதானா என உறுதிப்படுத்தி அதன்பின் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குவர். மேலும் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவை வேறு எந்த முறையில் கொடுக்கலாம் எனவும் அறிவுறுத்துவர். 


    குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள்

    ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொதுவான உணவுப் பொருட்கள்...

    • பால்
    • முட்டை
    • வேர்க்கடலை
    • மரக்கொட்டைகள்
    • மீன்
    • கோதுமை
    • சோயா
    • ஷெல்ஃபிஷ்

    மேற்கூறிய 8 உணவுகள்தான் 90% உணவு ஒவ்வாமைகளை ஏற்படுத்துகின்றன. 

    ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு என்ன செய்வது?

    முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும். ஆனால் சில ஒவ்வாமைகள் தொடர்ந்து நீடிக்கும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், வேர்க்கடலை மற்றும் குழந்தைக்கு ஒவ்வாமை கொடுக்கும் பொருட்களை உங்களின் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக ஆக்குங்கள். குழந்தைக்கு முட்டை அவித்து கொடுத்தால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால், மாற்று வழியில் எவ்வாறு அதனை கொடுக்கலாம் என மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பின்னர் தொடர்ந்து அதனை கொடுத்துவரும்போது இந்த பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். 

    ஒவ்வாமையை தடுக்க என்ன செய்யலாம்?

    ஒரு உணவுப்பொருள் குழந்தைக்கு ஒவ்வாமையை கொடுக்கிறது என்றால் அதை கொஞ்ச நாட்கள் தவிர்க்கவேண்டும். குழந்தையை பார்த்துக்கொள்பவர்களிடமும், பள்ளியிலும் அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப்பொருட்கள் குறித்து தெரிவித்தல் நல்லது. ஒவ்வாமை இருப்பவர்கள் எப்போதும் வெளியில் செல்லும்போது எபிநெஃப்ரின் ஆட்டோ-இன்ஜெக்டரை எடுத்துச் செல்வது நல்லது. குழந்தையின் பள்ளி அல்லது பகல்நேர பராமரிப்பு மையத்திலும் குழந்தைக்கு தேவையான மருத்தை வழங்குவது நல்லது. 

    • குழந்தைகளின் காதுகளை பொறுத்தவரை வலி ஏற்படுவது அவ்வப்பொழுது வரக்கூடிய பாதிப்பு தான்.
    • மூக்கில் ஏற்படும் சிக்கல்களை பொறுத்தவரை சுற்றுப்புற சூழலில் உள்ள மாசு காரணமாகத்தான் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.

    குழந்தைகளைப் பொறுத்தவரை இ.என்.டி என்று சொல்லப்படும் காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் அவர்களுடைய உடல் நிலை மற்றும் கல்வியில் சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன.

    பள்ளி செல்லும் குழந்தைகள் இ.என்.டி பிரச்சனையால் அடிக்கடி பாதிக்கப்படும் நிலையில், பெற்றோர் மற்றும் ஆசிரியர் இரு தரப்பினரும் இணைந்து இந்த பிரச்சனையில் அக்கறை காட்ட வேண்டியதாக உள்ளது.

    காதுகளில் அல்லது மூக்கில் ஏதேனும் சிறிய பொருட்களை குழந்தைகள் போட்டுக் கொள்ளும் பொழுது அதன் மூலம் அடைப்பு ஏற்பட்டு சில நேரங்களில் ரத்தம் கூட வழியலாம். பழங்களின் கொட்டைகள், சிறிய நாணயங்கள் ஆகியவற்றை எதிர்பாராமல் குழந்தைகள் விழுங்கி விடும்பொழுது அது உணவுக் குழாய் அல்லது மூச்சுக்குழாய் வரை சென்று அடைபட்டு சிக்கலை ஏற்படுத்தி விடலாம். அது போன்ற சமயங்களில் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது மிக அவசியம்.

    குழந்தைகளின் காதுகளை பொறுத்தவரை வலி ஏற்படுவது அவ்வப்பொழுது வரக்கூடிய பாதிப்பு தான். சளி தொல்லையால் குழந்தைகள் பாதிக்கப்படும் பொழுது காது வலி அவர்களுக்கு ஏற்படலாம். மூக்கின் பின்பக்கம் உள்ள குழாய் மூலம் காதுக்கு செல்லும் வழி அடைபட்டு தொற்று ஏற்பட்டு அதன் மூலம் காது வலி ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், சளி பிடித்துள்ள சமயங்களில் குழந்தைகள் காது வலி என்று தெரிவித்தால் அவர்களுடைய காதில் உட்புறம் பாதிக்கப்பட்டுள்ளதா என்று மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    மேலும், பட்டாசுகளை அதிக ஒலியோடு வெடிப்பது, காது சுத்தம் செய்யும் பட்ஸை குழந்தைகள் தவறாக பயன்படுத்தி விடுவது, குழந்தைகளுக்கு இடையில் ஏற்படும் சண்டை காரணமாக காது பகுதியில் எதிர்பாராமல் தாக்கி விடுவது, ஏதேனும் கட்டிகள் ஏற்படுவது ஆகியவை காரணமாகவும் குழந்தைகளின் காதுகளில் வலி ஏற்படலாம். பெற்றோர்கள் தவறியும் கூட குழந்தைகளின் காது வலிக்கு எண்ணெய் விடுவது போன்ற விஷயங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.



    மூக்கில் ஏற்படும் சிக்கல்களை பொறுத்தவரை சுற்றுப்புற சூழலில் உள்ள மாசு காரணமாகத்தான் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அத்துடன் சளி பிடிக்கும் பொழுது மூக்கு அடைத்து விடுவதால் வாய் மூலம் சுவாசம் நடந்து அடினாய்டு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது,

    தொண்டையை பொறுத்தவரை டான்சில் கட்டிகள் ஏற்படுவது, அதன் மூலம் இன்பெக்சன் ஏற்பட்டு காய்ச்சல் வருவது, குளிர் பானங்களை அல்லது ஐஸ்கிரீமை அதிகமாக உண்பது, கரும்புச்சாறு, பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளுடன் நெருக்கமாக பழகுவது, தொடர் இருமல் ஆகியவை காரணமாகவும் தொண்டை பாதிக்கப்படலாம்.

    ×