search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Care"

    • பாராட்டு என்பது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது.
    • குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்க்க வழிகாட்டியாக இருந்து உதவுங்கள்.

    உங்கள் குழந்தைக்கு, இயல்பிலே நல்ல குணங்கள் இருக்கலாம். அந்த குணத்தை தக்க வைக்க, அவை வெளிப்படும் போதெல்லாம் பாராட்டுங்கள். குழந்தைகளை பாராட்டும்போது, எந்த செயலுக்காக பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லுவதுதான் சரி. அவர்களை தன் செயலில் தெளிவுடன் இறங்க வைக்க இதுதான் நல்ல வழியும் கூட.

    பாராட்டுகளை பொறுத்தவரை, அவை வாய் வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு தட்டிக்கொடுத்தலோ, ஒரு முத்தமோ, அன்பான அழுத்தமான அணைப்போ, ஆச்சரியப் பார்வையோ, தலைகோதி விடுதலோ, பிடித்த இடத்துக்கு அழைத்துச்செல்வதோ, பிடித்த உணவை சமைத்து தருவதாகவோ கூட இருக்கலாம்.

    உங்கள் குழந்தையின் ஏதேனும் ஒரு சிறப்பான செயல்பாட்டினை, அவர்களுக்குப் பிடித்தவர்களின் முன்னிலையில் பாராட்டுங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இதுபோன்ற செயல்களை செய்யும் ஊக்கத்தையும் அளிக்கும்.

     நம் பாராட்டுதல்கள் குழந்தையை ஊக்கப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பிறரைப் பாராட்டும் தன்மையை குழந்தைகளிடம் வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் ஏற்று அதையும் மனதார பாராட்டுவதை குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பழக்குங்கள். இது அவர்களுக்கான தலைமைப் பண்பை வளர்க்கும்.

    திறனை வெளிப்படுத்தும்போதும், போட்டிகளில் வெற்றி பெறும்போதும் மட்டும் பாராட்டாமல், தோல்வி அடையும் போதும், குழந்தையின் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பாராட்டுதல் வேண்டும். ஒருமுறை பாராட்டிவிட்டு அந்த திறமையை அப்படியே விட்டுவிடாமல், உங்கள் குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்த்தெடுக்க வழிகாட்டியாக இருந்து உதவுங்கள். அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு அதுதான் உதவும்.

    பாராட்டு என்பது நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது. உணர்வுரீதியாகவும், சமூக ரீதியாகவும் தேவையானது. அதை தவறாமல் வழங்குங்கள்.

    • அனைவரும் செல்போனில் அதிக நேரம் அடிமையாகி இருக்கிறோம்.
    • மின்காந்த கதிர்வீச்சுகள் ஆபத்தானது என்று பல ஆய்வுகள் கூறுகின்றது.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் அதிக நேரம் அடிமையாகி இருக்கிறோம். ஷாப்பிங் முதல் வங்கி சேவைகள் வரை அனைத்துமே உட்கார்ந்த இடத்திலிருந்து செல்போன் வைத்து முடித்து விடுகிறோம். ஒரு பக்கம் இதனால் நாம் சோம்பேறியாக மாறினாலும் இன்னொரு பக்கம் நமக்கே தெரியாமல் அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவது ஏன்...? இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன...? என்பதை பற்றி பார்க்கலாம்.

     செல்போனை பெரியவர்களே அதிகம் உபயோகிப்பது தவறு, அதிலும் பிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்த சிலர் செல்போனை கொடுத்து பழக்கம் ஏற்படுத்துகிறார்கள். இந்த செல்போனில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.

    நாம் குழந்தைகளுக்கு அருகில் மொபைல் போன்களை வைத்து சோறு ஊட்டும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது மட்டும் இல்லாமல் செல்போன் ஸ்கிரீன்களில் இருந்து வெளிவரும் புற உதாக்கதிர்கள் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது.

    அதிலும் குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கு அதிக அளவு ஆபத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் குழந்தைகளின் மூளை பெரியவர்களின் மூளையை விட இரண்டு மடங்கு அதிக அளவு கதிர்வீச்சுகளை உறிஞ்சக்கூடிய சக்தி கொண்டது.

    குழந்தைகள் மீது இந்த புற ஊதாக்கதிர்கள் தாக்கும் போது அவர்கள் கண்கள் பாதிப்படையக் கூடும். மேலும் இது தூக்கமின்மை, மூளை செயல்பாடு, அறிவுத்திறன் மற்றும் நடத்தையை கூட சில நேரங்களில் பாதிக்க கூடும் என்று கூறப்படுகிறது. இது தெரியாமல் பெற்றோர்கள் பலரும் குழந்தைகள் அழுகையை நிறுத்த பயன்படுத்தும் ஆயுதமாகவே செல்போன் மாறிவிட்டது.

    அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளுக்கு பேச்சு தாமதம், மனநல குறைபாடு, குழப்பம் மற்றும் சிந்தனை தடைபடுதல் ஏற்படலாம் மற்றும் உடல் செயல்பாடு குறைவதால் உடல் பருமன் மற்றும் மோசமான எலும்பு ஆரோக்கியம் ஏற்படும்.

    செல்போனில் எவ்வளவு தீமைகள் இருந்தாலும் இன்று செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இதை குழந்தைகளிடம் இருந்து எப்படி தவிர்ப்பது என்று கேட்டால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வரை அவர்களுக்கு விளையாட செல்போன் கொடுக்கலாம்.

    அதாவது செல்போன் மடிக்கணினி இவை அனைத்தும் ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் உபயோகிக்க கொடுக்கலாம். அதேபோல வீட்டில் அனைவரும் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொபைல்போன் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு நிர்ணயிக்க வேண்டும். இதற்கு பதிலாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள பூங்கா அல்லது வெளி இடங்களுக்கு அழைத்து செல்லலாம்.

    • சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழியிலான மிரட்டல் என்பது உருவாகிறது.
    • சிறுவர்கள் அதில் இருந்து மீளத் தெரியாமல் தவிக்கிறார்கள்.

    இப்போதெல்லாம் பாடசாலையில் பயிலும் மாணவ-மாணவிகளும், உயர்கல்வி கற்கும் மாணவ-மாணவிகளும் திடீரென்று அவர்களது நடத்தையில் பெரிய மாற்றம் ஏற்படுவதால் அவர்களுடைய பெற்றோர்கள் கவலை அடைகிறார்கள்.

     போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் இணையதள வசதி மற்றும் இணைய சூழல் அதிகரித்துவிட்ட தருணத்தில் சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழி மிரட்டல் அதிகரித்திருப்பதால் இது 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மனநிலையை பாதிக்கிறது என்றும், இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வை பெற்றோர்களும், இளம் சிறுவர், சிறுமிகளும் பெறவில்லை என்றும் உளவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

    தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இன்றைய சூழலில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதன் அவசியம் என்பது இன்றியமையாததாகிவிட்டது. இணைய வழி தொழில்நுட்பத்தால் உலகம் சிறியதாகி விட்டாலும், பல புதிய வடிவிலான மனநல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இணையதள வசதி அதிகரித்துவிட்டதாலும், பிறந்து மூன்று மாதமான பச்சிளம் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரின் கைகளிலும் செல்ஃபோன் எனப்படும் கைபேசி இருப்பதாலும் இத்தகைய உளவியல் பிரச்சினைகள் அதிகரித்திருக்கிறது.

    பாடசாலையில் பயிலும் சிறுவர்களும், சிறுமிகளும் பாடசாலையில் இருந்து இல்லம் திரும்பியவுடன் சீரூடையைக் கூட களையாமல் உடனடியாக செல்ஃபோனை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு, இணையத்தில் ஏதேனும் ஒரு விளையாட்டை விளையாடத் தொடங்குகிறார்கள் அல்லது ஏதேனும் ஒரு இணையதள பக்கத்தை அல்லது சமூக வலைத்தள பக்கத்தை இயக்கி தன்னைப் பற்றிய பிம்பத்தையும், தன்னை பற்றி மற்றவர்களின் விமர்சனத்தையும் ஆர்வத்துடன் காணத் தொடங்குகிறார்கள்.

    தற்போது சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழியிலான மிரட்டல் என்பது உருவாகிறது. இணைய வழி மிரட்டல் என்பது மற்றவர்களை துன்புறுத்தும் நோக்கத்தை கொண்டிருப்பதால், அதனால் பாதிக்கப்படுபவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டு, அதில் இருந்து மீளத் தெரியாமல் தவிக்கிறார்கள். இது மன ஆரோக்கியத்தை பாதித்து, அவர்களின் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்துகிறது.

    சைபர் புல்லிங் என்பது தற்போதைய சூழலில் பொதுவானதாகிவிட்டது. யாரையும் எந்த ஒரு சூழலையும் துணிவுடன் கையாண்டு அவர்களை பற்றிய எதிர்மறையான கருத்துக்களை பதிவிடுகிறார்கள். இதனுடைய தீவிரத் தன்மை தெரியாமல் ஏதோ ஒரு உந்துதலில் இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களை இணையத்தில் பதிவிடுகிறார்கள். இதனால் எதிர்மறை விமர்சனத்துக்கு உள்ளாகும்

    நபர்கள் மனதளவில் சீர்குலைந்து சோர்வடைகிறார்கள். குறிப்பாக, உருவ கேலி, கடுமையான வார்த்தைகளுடன் கூடிய விமர்சனத்தை குறிப்பிடலாம்.

    தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, இது தவறு என்றாலும், இளம் தலைமுறையினர் பலரும் இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். முதலில் சைபர் புல்லிங் என்பதன் நோக்கத்தை அறிந்துகொள்ள வேண்டும். இது முற்றிலும் மற்றவர்களை காயப்படுத்த வேண்டும் அல்லது பக்கவிளைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும், இது ஒருவரின் உள நலத்தையும், மன அமைதியையும் சிதைக்கிறது. அவர்கள் பாதுகாப்பின்மையை உணரத் தொடங்குகிறார்கள். இதனால் சமூகத்துடனும் மற்றவர்களுடனும் இயல்பாக பழகுவதில் தடையும் இடைவெளியும் உண்டாகிறது. இது அவர்களின் வளர்ச்சியில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தி, அவர்களை முற்றிலும் முடக்குகிறது.

    எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழி மிரட்டலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அவர்களின் அன்றாட பழக்கவழக்க நடைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடான நடவடிக்கைகளை துல்லியமாக அவதானித்து, அவர்களிடம் இது தொடர்பாக எச்சரிக்கைகளை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

    மேலும், உங்கள் பிள்ளைகள் இணைய வழி பயன்பாட்டை மேற்கொள்ளும்போது அவரைப் பற்றிய சுய விபரங்களையும், தனிப்பட்ட பிரத்தியேக தகவல்களையும் ஆன்லைனில் பகிரக்கூடாது என கற்பிக்க வேண்டும்.

    உதாரணத்துக்கு உங்கள் வீட்டு முகவரி, உங்களது செல்ஃபோன் எண் போன்றவற்றை பதிவிடக்கூடாது. இது இணையவழி மிரட்டல்காரர்களுக்கு வழிவகுத்துவிடும்.

    பிறகு உங்களின் பிள்ளைகளின் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட விஷயங்களை பற்றியும் தனிப்பட்ட விடயங்களை பற்றியும் இணையவழியில் விவாதிக்க வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், இவை கூட இணையவழி மிரட்டல்காரர்களுக்கு ஆயுதமாக மாறக்கூடும்.

    அதே தருணத்தில் எந்த காரணத்தை முன்னிட்டும் உங்களுடைய கடவுச்சொல்லையும் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட கணக்கு விபரங்களையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள் என பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

    அதனைத் தொடர்ந்து இணையத்தில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடப்படும் விமர்சனங்கள் குறித்தும், கருத்துகள் குறித்தும் எவை நல்லவை? எவை தவறானவை? எவை தவறான உள்நோக்கத்தை கொண்டவை? என்று விஷயத்தையும் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

    • இன்றைக்கு வயது வித்தியாசமின்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன.
    • தொடுகை கல்வியை சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    இன்றைக்கு வயது வித்தியாசமின்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன. எந்த வயது குழந்தைகளையும் பலாத்காரம் செய்து, அவர்களின் வாழ்க்கையையே நிர்மூலமாக்க, பலர் சமூகத்தில் சுற்றித் திரிகின்றனர். பிறந்த குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை. எனவே, இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, பாலியல் கல்வியை குறிப்பாக, தொடுகை கல்வியை நாம் சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    பாலர் வகுப்பு என்கிற போது, சுமார் ஏழு, எட்டு வயதில் இருந்தே நாம் இவற்றை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம். தெளிவாக சொல்வதானால், ஒரு பிள்ளைக்கு எப்போது சிந்திக்கும் ஆற்றல் ஏற்படுகிறதோ அப்போது இருந்தே பாலியல் கல்வியை சொல்லிக்கொடுக்கலாம்.

    பாலியல் கல்வி என்பது அறுவறுக்க தக்கதல்ல... உடல் உறுப்புகளை இனங்காட்டுவது, உறுப்புகளின் முக்கியத்துவங்களை பற்றி எடுத்துரைப்பது, தொடுகை பற்றி கற்பிப்பது முதலிய அம்சங்கள் இதில் உள்ளன.

    நாம் கற்பிக்கும் பாலியல் கல்வியை குழந்தைகளால் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடியுமா, அதற்கு அவர்களின் மனநிலை பக்குவப்பட்டிருக்குமா என்கிற சந்தேகங்கள் பலர் மத்தியில் காணப்படுகின்றன.

    தொடுகை பற்றி அறியாத, கேள்விப்படாத ஒரு குழந்தையை நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகிறார் எனில், தனக்கு நேர்வது தவறு என்பதை அந்த குழந்தையால் உணர முடியாது. எனவே குழந்தைகளுக்கு புரியும் அளவுக்கு நாம் தொடுகை குறித்து கற்பிக்க வேண்டும்.

    சில குழந்தைகளுக்கு வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சி காணப்பட்டாலும், மனதளவில், குழந்தைத்தனம் மிக்கவர்களாகவே இருப்பர். அந்த குழந்தைகள் நாம் சொல்லும் எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாகவே கருதுவார்கள். அதன் தீவிரத்தன்மையை புரிந்துகொள்ள மாட்டார்கள்.

    ஆகவே, பெற்றோர் அல்லது ஆசிரியர் சொல்வதை கேட்டு, புரிந்துகொள்ளும் இயல்புநிலைக்கு குழந்தைகள் வரவேண்டும். அப்போது தான், நாம் சொல்லும் எதையும் குழந்தைகளால் சிந்தித்து செயல்பட முடியும்.

    மேலும், இன்றைய புள்ளிவிவரப்படி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சிறு வயதிலேயே வாழ்க்கையை தொலைத்த சிறுவர்களில் அதிகமானோர் மனநலம் குன்றியவர்களும், மாற்றுத் திறனாளிகளுமே என்பது தெரியவந்துள்ளது. புத்தி சுவாதீனம் உள்ள குழந்தைகளுக்கே பாலியல் கல்வியை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கிறதென்றால், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு அதை எப்படி நம்மால் சொல்லிக்கொடுக்க முடியும்? இது மிகப் பெரிய சவாலாகவே உள்ளது.

    ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் கல்வி முக்கியம்

    பாலியல் கல்வி, குறிப்பாக தொடுகை என்பது அனைத்து குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஒன்றாகும். பொதுவாக, அனைவருமே பாலியல் துஷ்பிரயோகத்தை பற்றி பேசுகின்றபோது பெண் பிள்ளைகளின் மீதே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

    சிறுவர் உலகத்தில் பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் பாதுகாக்கப்பட வேண்டியவர்களே. அவர்களுக்கும் பாலியல் கல்வியை கட்டாயம் வழங்க வேண்டும். அவர்களுக்கும் தொடுகை பற்றி கற்பிக்கவேண்டியது அவசியமாகின்றது. ஆண் குழந்தைகளுக்கும் தொடுதல் பற்றிய விழிப்புணர்வு, தொடுகை பற்றி கற்பிக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு முறையான தொடுதல் எது?, முறையற்ற தொடுதல் எது...? என்பது பற்றி சொல்லிக்கொடுத்தால் தான் அவர்களுக்கு நேரும் ஆபத்துக்களை தடுக்க முடியும்.

    • மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
    • தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

    இது பள்ளி இறுதித்தேர்வுக்கான காலகட்டம். 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிவிட்ட நிலையில், 10 வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளன. சாதாரண மாணவர்களைப் போல மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். எனவே அவர்களுக்கு தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

     மாற்றுத்திறனாளி மாணவர்களை 18 வகையாக வகைப்படுத்தி உள்ளனர். மெல்ல கற்போர், செவித்திறன் குறைபாடு உடையோர், பார்வை திறன் குறைபாடு உடையோர், ஆட்டிசம் குறைபாடு உள்ளோர், போலியோவால் பாதிக்கப்பட்டோர், வாய் பேச முடியாதோர் போன்றவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு எழுதுவதிலும், செய்முறைத்தேர்வு எழுதுவதிலும், சில சலுகைகளையும், விலக்குகளையும் அளிக்கிறது. அவை...

     1. தேர்வு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்குவது.

    2. சொல்லுவதை எழுதுவதற்கு தனியாக ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்தல்.

    3. மொழித்தாள்களான ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு மாணவனின் விருப்பத்தின் பேரில் விலக்கு அளித்தல்.

    4. செய்முறைத் தேர்வுகளுக்கு விலக்கு கோருதல்.

    5. தேர்வின்போது உபயோகப்படுத்தப்படும் கால்குலேட்டர், அச்சடிக்கப்பட்ட அட்டவணைகள் போன்றவற்றுக்கு அனுமதி அளித்தல்.

     6. தேர்வு எழுதுவதற்கு உதவியாளராக (ஸ்கிரைப்) தன்னுடைய தாய் அல்லது தந்தை அல்லது தனக்கு தனியாக கற்பித்த ஆசிரியரை நியமித்துக்கொள்ள உரிமை.

    7. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அவர்கள் எளிதில், தேர்வு எழுதும் அறையை அடைய சாய்தள வசதி.

    8. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தரைத்தளத்திலேயே அவர்களின் பதிவெண் வருமாறு அமைத்துக் கொடுத்தல்.

     இதுபோன்ற பல சலுகைகளை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இவற்றை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட மாற்றுத் திறன் அலுவலகத்தை அணுகி மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெற்று இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவக் குழு பரிந்துரைத்த மருத்துவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும். இச்சான்றுகளை வைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு எழுதி அனுப்பினால் அதற்கான அனுமதி பெற்று தரப்படும்.

    பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்போ, தேர்வு நடக்கும்பொழுதோ விபத்து நடந்து எழுத முடியாத சூழல் ஏற்பட்டாலும் அந்த மாணவர், மருத்துவரின் சான்றிதழின் பேரில் தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பித்து, தான் சொல்லுவதை எழுதுகின்ற ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்து தேர்வு எழுதலாம்.

    • படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
    • குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும்.

    இது தேர்வுக்கான காலகட்டம். மற்ற சமயங்களை விட படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலமே அதிக மதிப்பெண்களை பெற முடியும் என்பதை மாணவர்கள் உணர்ந்து செயல்படுவார்கள். ஒருசில பழக்க வழக்கங்களை தினமும் பின்பற்ற வைப்பதன் மூலம் அவர்களின் கல்வித்திறன் மேம்படுவதோடு வாழ்நாள் மூலம் கற்றல் மீதான நாட்டத்தை மெருகூட்ட செய்யலாம். அதற்கான வழிமுறைகள்...

    தேர்வு சமயங்களை தவிர்த்து தினமும் குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்த செயலிலும் கவனம் செலுத்த அனுமதிக்கக்கூடாது. `இது படிப்புக்கான நேரம்' என்பது மனதில் ஆழமாக பதிய வேண்டும். அப்படி குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து படிப்பதன் மூலம் கற்றலை வலுப்படுத்தும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்வார்கள்.

     அமைதியான இடம்

    கவனச்சிதறல்கள் மாணவர்களை தடம் புரளச் செய்யும். எனவே இடையூறு ஏதும் இல்லாமல், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடிய அமைதியான இடத்தை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும். அமைதியான சூழல் கவனத்தை ஒன்றிணைக்கும் திறனை வலுப்படுத்தும். புரிதலை மேம்படுத்தும்.

    கற்றல் நுட்பங்கள்

    எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்து படிக்கக்கூடாது. ஒரு பாடத்தை படிப்பதற்கு முன்பு அதில் இடம் பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை குறிப்பெடுக்க பழக வேண்டும். பின்பு அந்த குறிப்புகளில் முக்கியமானவற்றை மட்டும் சுருக்கி எழுத வேண்டும்.

    அதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் ஆசிரியரிடமோ, சக மாணவர்களிடமோ கேள்வி எழுப்பி தெளிவு பெற வேண்டும். இத்தகைய செயல்முறை கற்றல் நுட்பங்களை பின்பற்றுவது பாடம் மீது ஆழமான புரிதலை ஏற்படுத்தும். சிந்தனை திறனை வளர்க்கும். திறம்பட தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறவும் வழிவகுக்கும்.

    சிறிது நேர ஓய்வு

    தினமும் குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்காக ஒதுக்கி, தொடர்ந்து படிக்கும்போது ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். படிப்புக்கு இடையே 5 முதல் 10 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மீண்டும் படிப்பை தொடர்வது மன ரீதியாக புத்துணர்ச்சி பெற உதவும். படிப்பின் மீது முழு கவனத்தையும் திருப்புவதற்கு வித்திடும்.

    ஊட்டச்சத்து உணவு

    நாள் முழுவதும் இடை இடையே போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் நீரேற்றத்தை தக்க வைத்துக்கொள்ளும். படிப்புக்கு இடையே சத்தான சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும். அது அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவாக அமைய வேண்டும். அவை மூளைக்கு ஊட்டமளித்து அதன் செயல்திறனை மேம்படுத்த உதவும். அறிவாற்றல் செயல்பாட்டையும் அதிகப்படுத்தும்.

    போதுமான தூக்கம்

    நினைவகத்தை ஒருங்கிணைப்பதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் ஆழ்ந்த தூக்கம் இன்றியமையாதது. மாணவர்கள் தினமும் போதுமான நேரம் தூங்கி எழ வேண்டும். நன்கு ஓய்வு எடுக்கும் மனம் கற்றல் விஷயங்களை மறக்காமல் நினைவில் தக்கவைத்துக்கொள்ளும்.

    பாராட்டு

    நேர்மறை எண்ணங்கள் ஊக்கத்தையும், விடாமுயற்சியையும் உருவாக்கும். எனவே பிள்ளைகளின் முயற்சிகளை அங்கீகரித்து கொண்டாடுங்கள். அவர்கள் படிப்பில் அடைந்திருக்கும் முன்னேற்றம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதனை சாதனையாக கருதி பாராட்டுங்கள்.

    யாரும் நிர்பந்திக்காமலேயே சுயமாக படிப்பின் மீது ஆர்வத்தை வளர்த்தெடுக்க அது உதவும். அவர்களாகவே குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்கு ஒதுக்கி விடுவார்கள். நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள்.

     பாடங்களை பிரித்தல்

    முழு ஆண்டுத்தேர்வுக்கு பாடப்புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு பகுதிகளாக படித்து முடிப்பதை பெரிய பணியாக உணரலாம். அதில் கடினமான பகுதிகளை படிப்பது சிரமமானதாக, சவாலானதாக சில மாணவர்களுக்கு அமையலாம். ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக பிரித்து, அதில் எளிமையான பகுதிகளை முதலில் படிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    கடினமான பகுதிகளை அதிகாலை வேளையில் படிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இப்படி தரம் பிரிப்பதன் மூலம் விருப்பமான பாடங்களை விரைவாக படித்து முடித்துவிட முடியும். அதனால் படிப்பது பெரும் சுமையாக தோன்றாது. இந்த அணுகுமுறை மன அழுத்தத்தையும் தவிர்க்க உதவும். தினமும் படிக்க தொடங்குவதற்கு முன்பு ஏற்கனவே படித்த பகுதிகளை மீண்டும் ஒருமுறை வாசிப்பது நினைவில் ஆழமாக பதிய உதவும். தேர்வை எளிமையாக எழுதுவதற்கு வழிவகுக்கும்.

    • பெற்றோர்கள் குழந்தைக்கு இடதுகை பழக்கம் இருப்பதை எண்ணி கவலைப்படுகிறார்கள்.
    • குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வார்கள்.

    பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடதுகை பழக்கம் இருப்பதை எண்ணி கவலைப்படுகிறார்கள். அதை தவறானது என கருதி குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வார்கள். குழந்தைகளை வலுக்கட்டாயமாக இடதுகை பழக்கத்தில் இருந்து வலதுகை பழக்கத்துக்கு மாற்ற முயற்சிப்பது நல்லது அல்ல. இதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றல், உணர்ச்சி சமநிலை மற்றும் நடத்தை சார்ந்த விஷயங்கள் பாதிக்கப்பட நேரிடும். இதை பற்றிய மேலும் சில தகவல்கள் இதோ...

    உலக அளவில் 85 சதவீதம் பேர் வலதுகை பழக்கம் கொண்டவர்களாகவும், 15 சதவீதம் பேர் இடதுகை பழக்கம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

    இடதுகை பழக்கம் என்பது ஒரு சாதாரண மாறுபாடாகும். இடதுகை பழக்கம் உள்ள குழந்தைகளை திருத்தி வலதுகை பழக்கத்துக்கு மாற்றும்போது கைகளை பயன்படுத்தி செய்யும் செயல்களில் அவர்களின் திறன் குறையும். குழந்தைகள் எந்த கையை அதிகமாக பயன்படுத்துகிறார்களோ, அதே கையால் குறிப்பிட்ட வேலைகளை செய்யும்போது விரைவாகவும். திறமையாகவும் செய்து முடிப்பார்கள்.

     இடதுகை பழக்கம் உள்ளவர்கள் ஆக்கப்பூர்வமான வழிகளில் சிந்திக்கவும், தங்களுடைய சூழ்நிலைகளை மாற்றியமைக்கவும் விரைவாக கற்றுக்கொள்கிறார்கள். படைப்பாற்றல், புத்திக்கூர்மை ஆகியவை இடதுகை பழக்கம் கொண்டவர்களிடையே இருக்கும் பொதுவான பண்புகளாகும்.

    பெரும்பாலான இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு கற்றல் குறைபாடுகள் ஏற்படுவது இல்லை. மரபியல் மூலமாகவே இடதுகை பழக்கம் உண்டாகிறது. இது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடியதாகும். இதை அடிப்படையாகக் கொண்டே மூளையின் வளர்ச்சி வேறுபாடு அடைகிறது.

    வலது பக்க மூளையானது இடதுபக்க உடல் இயக்கத்தையும், இடதுபக்க மூளையானது வலதுபக்க உடல் இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதன் அடிப்படையில் இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு அல்சர், மூட்டு வலி மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம் அல்லது விரைவாக குணமடையலாம்.

    எழுதுவதைத் தவிர மற்ற வேலைகளுக்கு நாம் எந்த கையை அதிகமாக பயன்படுத்துகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டே நம்முடைய பழக்கம் முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் மற்ற வேலைகளை இரண்டு கைகளையும் சரிசமமாக பயன்படுத்தி செய்கிறீர்கள் எனில் நீங்கள் கலப்பு கை பழக்கம் உள்ளவர்களாக இருக்கலாம்.

    கட்டாயப்படுத்தி குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை மாற்றும்போது சமநிலையற்ற உணர்ச்சிகள், மோசமான கையெழுத்து, படுக்கையில் சிறுநீர் கழித்தல், நகங்களைக் கடித்தல், கூச்சம், எதிர்மறையான நடத்தைகள், வாசிப்பதில் சிரமம், கற்றல் திறன் குறைபாடு, சுயக்கட்டுப்பாடு மற்றும் நினை வாற்றல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம்.

    அதுமட்டுமல்லாமல் நரம்பியல் கோளாறுகள், மூளையின் அசாதாரண செயல்பாட்டுக்கும் வழி வகுக்கலாம். ஆகையால், சிறுவயதில் குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை திருத்தி வலதுகை பழக்கத்துக்கு மாற்றுவதைவிட இரண்டு கைகளிலும் சமமாக அனைத்து வேலைகளையும் செய்யும்படி பழக்கலாம். கலப்பு கை பயன்பாட்டை ஊக்குவிக்கலாம். இது அவர்களின் ஆரோக்கியத்துக்கும். எதிர் காலத்துக்கும் நல்லது.

    • குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை.
    • குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்...

    * வைட்டமின் `ஏ' குறைந்தால் கண்பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.

    * வைட்டமின் `பி' குறைந்தால், குழந்தைகளுக்கு வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `சி' குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும், பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளைக்கிழங்கு, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `டி' இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் 'டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `ஈ' குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், ரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

    • தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.
    • நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கலாம்?

    ஆரோக்கியமாக, தற்போது எவ்வித மருந்துகளும் (வைட்டமின்கள், இன்சுலின், ஆஸ்துமா இன்ஹேலர்கள், தைராய்டு மாத்திரை, கண் சொட்டு மருந்துகளைத் தவிர்த்து) உட்கொள்ளாத தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.

    குறிப்பாக, அவர்கள், தங்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும். அவர்களின் பச்சிளங்குழந்தைகள், ஆரோக்கியமாக போதுமான அளவு எடை அதிகரிப்புடன் இருக்க வேண்டும்; குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு, போதுமான அளவு தாய்ப்பால் சுரத்தல் இருக்க வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கக் கூடாது?

    புகைப்பழக்கம் உள்ளவர்கள், புகையிலைப் பொருள்களை உபயோகிப்பவர்கள் மற்றும் நிகோட்டின் மாற்று சிகிச்சையில் (Nicotinereplacement therapy) உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, HTLV அல்லது சிபிலிஸ் நோய்த்தொற்று உள்ளவர்கள், கடந்த 12 மாதங்களில் உறுப்புதானம் அல்லது ரத்ததானம் பெற்றவர்கள், மார்பகங்களில் முலையழற்சி (mastitis), பூஞ்சைத் தொற்று, ஹெர்பெஸ் (herpes simplex) அல்லது வேரிசெல்லா (varicella zoster) நோய்த்தொற்று உள்ளவர்கள் தாய்ப்பால் தானம் அளிக்கக் கூடாது.

    தாய்ப்பால் தானமளிப்பவர்களிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு, நோய்த்தொற்று உள்ளதா என்று ரத்தப் பரிசோதனை எடுத்த பிறகு, தாய்ப்பால் சேகரிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். அங்கே, தாய்மார்கள் தங்கள் விரல்களைக் கொண்டு Manual எஸ்பிரஸின் முறையிலோ, பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தியோ, தாய்ப்பாலை அதற்குரிய கொள்கலனில் சேகரிப்பர். கொள்கலன் லேபிள் ஒட்டப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் சேகரிக்கப்படும்.

    தானமளித்தவருக்கு ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் சிபிலிஸ் நோய்த்தொற்று இல்லை என்று ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்த பிறகு, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால், Pasteurization-க்கு உட்படுத்தப்படும்.

     பாஸ்டுரைசேஷன் செய்வதற்கு முன்பும் பின்பும், தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலில் நுண்ணுயிர்க்கிருமிகள் உள்ளனவா என்பதை அறிய வளர்சோதனை (culture) பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, தாய்ப்பால் கொள்கலனில் அதன் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு, உறைவிப்பானில் 20 டிகிரி செல்சியசில் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். 3 - 6 மாதங்கள் வரை, இவ்வாறு உறைய வைக்கப்பட்ட தாய்ப்பாலை உபயோகப்படுத்தலாம்.

    தீவிர பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவில் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படும்போது, உறைய வைக்கபட்ட தாய்ப்பாலுடைய கொள்கலன், குழாயின் மிதமான சுடுநீரில் காட்டப்பட்டு, நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்பட்ட தாய்ப்பால், மூன்று மணி நேரத்துக்குள் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

    சென்ற அத்தியாயத்தில், தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் மூலம் நோய்த்தொற்று ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தாய்ப்பால் வழியாக ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்று ஏற்படக் கூடுமென்ற காரணத்தால்தான், தாய்ப்பால் தானமளிப்பவர்கள் இந்தப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

     இந்த பரிசோதனைகள் நெகட்டிவ்வாக இருப்பின் மட்டுமே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பாஸ்டுரைசேஷன் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பின்பு உறைய வைக்கப்படும். பாஸ்டுரைசேஷன் செயல்முறையில், தாய்ப்பாலில் வேறு நுண்ணுயிர்க் கிருமிகள் இருந்தால், கொல்லப்பட்டுவிடும். அதன்பிறகு, வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது, உறுதியான பிறகுதான், தாய்ப்பால் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

    எனவே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலின் மூலம் பச்சிளங்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படும் சாத்தியக்கூறு மிகமிகக் குறைவு. பவுடர் பாலைவிட, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பலமடங்கு மேலானதாகும். எனவே கண்டிப்பாக, பச்சிளங்குழந்தைகளுக்கு தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலைப் பயன்படுத்தலாம்.

    • குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி அணுகுமுறை.
    • மரியா மாண்டிசோரியால் உருவாக்கப்பட்டது.

    மாண்டிசோரி கல்வி முறை என்பது குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி அணுகுமுறையாகும், இது 1900-களின் முற்பகுதியில் மரியா மாண்டிசோரியால் உருவாக்கப்பட்டது. மாண்டிசோரி முறையானது கற்றல், தனிப்பட்ட கவனம் மற்றும் குழந்தையின் இயல்பான வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

    இது குழந்தைகளுக்கு கற்க வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பம், மேலும் அவர்கள் சுயமாகச் செயல்படுதல், ஆய்வு செய்தல் மற்றும் அவர்களின் சுற்றுச்சூழலைக் கையாளுதல் மூலம் சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

    மாண்டிசோரி வகுப்பறைகளில், குழந்தைகள் தங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் ஆர்வங்களைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட கல்விப் பொருட்களுடன் வேலை செய்கிறார்கள், மேலும் அவர்கள் அறையைச் சுற்றிச் செல்லவும் தங்கள் சொந்த வேகத்தில் வேலை செய்யவும் சுதந்திரமாக உள்ளனர்.

     சுதந்திரம், பொறுப்பு, கற்றல் மீதான காதல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் சூழல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக பணியாற்றுகிறார்கள், ஒவ்வொரு குழந்தையையும் கவனித்து, தேவைப்படும்போது ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறார்கள்.

    மாண்டிசோரி அணுகுமுறையானது கலப்பு-வயது வகுப்பறைகள், சிறப்புக் கல்விப் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியின் வேகத்திற்கும் மதிப்பளித்தல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

    மாண்டிசோரி கல்வியின் குறிக்கோள், குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றல் அன்பையும், அத்துடன் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான சமூக, உணர்ச்சி மற்றும் அறிவுசார் திறன்களையும் வளர்ப்பதற்கு உதவுவதாகும்.

    மாண்டிசோரி கல்வி முறையானது முறையான கற்பித்தல் முறைகளைக் காட்டிலும் குழந்தைகளின் இயல்பான ஆர்வங்கள் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கியது. ஒரு மாண்டிசோரி வகுப்பறை நடைமுறையில் கற்றல் மற்றும் நிஜ-உலகத் திறன்களை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

     மாண்டிசோரி கல்வி முறை:

    * இதன் கல்வி முறை முழுமையாக செய்முறை தொடர்பானது.

    * குழந்தைகள் தாமாகவே செயல்முறை மூலம் கல்வி கற்பர்.

    * குழந்தைகள் தனித்தனியாகவோ / குழுவாகவோ இணைந்து தாமாக கல்வி கற்பர்.

    நன்மைகள்

    * மாணவர் படைப்பாக்கத் திறன் கூடும்.

    * தாமாகவே புதிது புதிதாக குழந்தைகள் கற்பர்.

    பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்:

    * மொழி

    * கணிதம்

    * நடைமுறை வாழ்க்கை பயிற்சி

    * சமூகத்துடனான அணுகுமுறை

    * கலை

    * இசை-பலப்பல

    வயது முறை:

    * 0–18 வயது வரை

    * 0–3 வீட்டிலேயே இம்முறையில் கற்பிக்கலாம்.

    வகுப்பறைகள்:

    * பொதுவாக சாதாரண பள்ளிகளில் 16 வயது என்றால் 10 வது, 18 வயது என்றால் 12-வது என்ற அடிப்படையில் கற்பிக்கப்படும்.

    * மாண்டிசோரி பள்ளிக்கல்வி முறையில் ஒரே வகுப்பறையில் 3–6 வயதுடையவர்கள், மற்றொரு வகுப்பில் 6–9 வயதுடையோர், மற்றொரு வகுப்பில் 9–12 என்பது போல் வயதுக்கேற்ப பிரித்து கல்வி கற்பிப்பர்.

     பாடங்கள் தேர்வு

    இக்குழந்தை இப்பாடங்களைத்தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. தமக்கு பிடித்த பாடம் எதுவென்றாலும் அது கணிதமோ, அறிவியலோ, மொழியோ இன்ன பிற அவர்களுக்குப் பிடித்த வகுப்பில் அமர்ந்து அவர்கள் கல்வி கற்கலாம். ஆசிரியர்கள்

    * ஆசிரியர்கள் குழந்தைகளை கண்காணிப்பர்.

    * மாணவர் தாமாக கற்க அவர்களை வழிபடுத்துவர். அதுவும் இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதுபோல் அன்றி, எதுவாயினும் அதை குழந்தைகள் சுதந்திரமாக செய்ய அவர்களை அனுமதிப்பர். அதாவது கற்பிக்க மாட்டார்கள் ஆனால் அவர்களை செயல்படுத்தவிட்டு அதை இப்படித்தான் செய்ய வேண்டுமென நல்வழிப்படுத்துவர்.

    பிற பயிற்சிகள்

    நம் வீட்டில் நாம் ஒரு பொருளை எடுத்தால் அதை மீண்டும் அதே இடத்தில் தான் வைக்க வேண்டும் என்பதை அறிவோம். இம்முறையை அவர்களுக்கு பயிற்சியாக வழங்குவர். அதாவது, ஒரு பொருள் என்றால் அதை இங்குதான் வைக்க வேண்டும், சோப்பு என்றால் குளியலறை, புத்தகம் என்றால் கற்கும் அறை என எது எங்கு இருக்க வேண்டுமோ அது அங்குதான் வைக்க, அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளை வழங்குவர்.

    • ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
    • குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும்.

    தங்களுடைய குழந்தைகளின் வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். இதன் காரணமாக தங்களின் பொருளாதார நிலையைத் தாண்டியும் செலவு செய்து குழந்தைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் குழந்தைகளின் ஆளுமைத் திறனை வளர்க்க, ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும். விளையாட்டு, கைவினை மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பிற செயல்பாடுகளிலும் அவர்களுக்குப் போதுமான பயிற்சிகளை வழங்க வேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் சமூகத் திறன்களை மேம்படுத்த முடியும்.

    தன்னம்பிக்கை, குழு மனப்பான்மை விடாமுயற்சி, தலைமைத்துவம், விட்டுக் கொடுத்தல், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்ற பண்புகளை வளர்க்க முடியும். ஏட்டுப்பாடங்களால் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கை பாடங்களை, பல்வேறு கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

    அந்த வகையில் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்று நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டவையே ஆய கலைகள்' நடனம், இசைக்கருவி மீட்டுதல், ஒப்பனை செய்தல், ஓவியம் வரைதல், சிற்பம் செதுக்குதல் என இதில் 64 வகையான கலைகள் உள்ளன. அவற்றில் இந்த கால வாழ்க்கை முறைக்கு தகுந்த சில கலைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பயனுள்ளதாக அமையும். அதைப் பற்றிய தகவல்கள் இதோ....

     பூ தொடுத்தல்:மலர் அலங்காரம், மலர் வடிவமைப்பு, மலர் ஓவியம் மற்றும் பூக்களால் சிற்பம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களுக்கு அடிப்படையாக இருப்பது பூத்தொடுத்தல் அல்லது பூக்கட்டுதல் ஒன்று போல உள்ள பூக்களை தேர்ந்தெடுத்து, வரிசையாக வைத்து அவற்றை மாலையாக கட்டும் செயலில், வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விஷயங்கள் உள்ளன. இதன்மூலம் கண்களுக்கும். கைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படும்.

     ஓவியம் வரைதல்:

    குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும். ஒருங்கிணைப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் ஓவியக்கலை பயன்படுகிறது. குழந்தைகள் சுதந்திரமாக சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்கவும், தங்களது செயல்பாடுகளை மதிப்பீடு செய்யவும் ஓவியக்கலையின் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

    உதாரணத்துக்கு, ஓர் ஓவியத்துக்கு எந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தெந்த நிறங்களை எவ்வாறு கலக்க வேண்டும். ஓவியத்தில் ஏற்படும் பிழைகளை எவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என்பனவற்றை குழந்தைகள் சிந்திப்பார்கள். இது அவர்கள் வாழ்க்கையிலும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை கண்டறிய உதவும்.

    மண்பாண்டங்கள் செய்தல்:

    களிமண்ணைக் கொண்டு பல்வேறு பொருட்களை வடிவமைக்கும் கலையானது, குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும். களிமண்ணை பக்குவமாக கையாளும் போதுதான் அதைக் கொண்டு பொருட்களை வடிவமைக்க முடியும். மனதையும், உடலையும் சமநிலையில் வைத்து சிந்திக்க இந்தக் கலை கற்றுக்கொடுக்கிறது. குழந்தைகளின் மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் களிமண்ணுக்கு உண்டு.

    மண்பாண்டங்கள் செய்வதற்கு கற்றுக்கொடுக்கும் வகுப்புகளில் கலந்துகொள்ளும் குழந்தைகள், மிகவும் அமைதியாக வடிவங்களை உருவாக்கிக் கொண்டு இருப்பதை கவனிக்க முடியும். அதேநேரம் அவர்களின் ஆற்றலும், செயலும் வேகமாக இருக்கும். இவ்வாறு சமைத்தல், தையல் நீச்சல், இல்லத்தை தூய்மையாக வைத்திருத்தல் என ஒவ்வொரு கலையும் குழந்தைகளின் ஆளுமைத்திறனை வளர்ப்பதற்கு உதவுகின்றன.

    • தாய் என்பவள் இறைவனுக்கும் மேலாக மதிக்கப்படுகிறார்.
    • குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள்.

    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே'' என்ற பாடலுக்கு ஏற்ப குழந்தைகளை பெற்று அதன் ஒவ்வொரு வளர்ச்சிப்படி நிலையிலும் உரியவகையில் வளர்த்தெடுக்கும் பெரும் பொறுப்பு தாய்க்கே உள்ளது என்றால் அதை மறுப்பதற்கில்லை. ஒரு தாயின் செயற்பாடுகள், பழக்க வழங்கங்களை வைத்தே அவளின் பிள்ளைகளை மதிப்பிடுகிறார்கள் இதுவே யதார்த்தமாகும்.

    தாய் என்பவள் இறைவனுக்கும் மேலாக மதிக்கப்படுகின்றார். காராணம் பத்துமாதங்கள் ஒரு குழந்தையை கருவிலே சுமப்பது என்பது லேசான காரியமல்ல அவ்வாறு சுமந்து பிரசவ வலியைத் தாங்கி ஒரு குழந்தையை இந்த உலகிற்கு கொண்டுவருகிறாள். அதோடு அவளுடைய பங்களிப்பு நிறைவுபெறுவதில்லை.

    தாய் என்ற நிலையை அடைந்த பெண் பல பொறுப்புக்களை சுமந்துகொண்டு செயல்பட வேண்டியுள்ளது. இந்த சமுதாயத்துக்கு நல்லதொரு பிரஜையை உருவாக்கவேண்டிய பெரும்பொறுப்பும் தாய்க்கே உண்டு.

    இன்று உலகில் பலவகையான சிக்கல்களுக்கு குழந்தைகள் ஆளாகின்றார்கள், போதைப்பொருள் பாவனை, தவறான நபர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் நட்பு என பல பிரச்சினைகள் இன்று தலைவிரித்தாடுகின்றது. அவற்றில் இருந்தெல்லாம் தன்னுடைய பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள ஒரு தாய் பல தியாகங்களை செய்யவேண்டியுள்ளது.

    குழந்தைகளை அளவுக்கு அதிகமாக கண்காணித்தாலும் அவர்கள் அதை வேறுவிதமாக அர்த்தப்படுத்திக்கொண்டு தவறுகளை செய்ய முற்படுகிறார்கள். குழந்தைகளுக்கு எப்போதும் அன்பு செலுத்தும் பழக்கத்தை கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் பிறரை நேசிக்கும் பழக்கத்தை அவர்கள் உருவாக்கிக்கொள்வார்கள். அதுவே ஒரு நல்ல சமுதாயம் உருவாக வழிவகுக்கம். அத்தோடு பிள்ளைகளை இன்னொரு பிள்ளையுடன் ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

    ஏனெனில் ஒவ்வொரு பிள்ளைக்கும் வெவ்வேறு விதமான திறமைகள் உண்டு. அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர ஒப்பிட்டு குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். குழந்தைகளின் பன்முக வளர்ச்சியில் தாயின் பங்களிப்பே முக்கியத்துவம் பெறுகின்றது.

    இன்றைய போட்டி நிறைந்த உலகில் அநேகமான குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு குறைவாகவே கிடைக்கின்றது. காரணம் பொருளாதார சிக்கல்கள் காரணமாக தாய்மார்கள் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.

    அதனால் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவழிக்க முடியாமல் இருக்கின்றது. இது குழந்தைகளின் முன்னேற்றப்பாதைக்கு சில நேரங்களில் நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். எவ்வளவு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உங்களின் குழந்தைகளுக்காகவும் நேரத்தை ஒதுக்கி ஒருமுகப்படுத்தும் மனநிலையுடன் குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள்.

    பிள்ளைகள் ஏதேனும் ஒரு பொருளை கேட்டுக்கும் போது அது தேவைக்காக கேட்கின்றதா? அல்லது ஆசைக்காக கேட்கின்றதா என்பதை புரிந்து கொண்டு தேவைக்காக கேட்கும் எதையும் தாமதிக்காமல் பெற்றுக்கொடுங்கள். குறித்த காலத்தில் காட்டாத அன்பும், காலம் அறிந்து கண்டிக்காத செயலும் பிள்ளை வளர்ப்பில் தாய் நிச்சயமாக பின்பற்றவேண்டிய விஷயங்களாகும்.

    எனவே ஒரு தாய் குழந்தைகளிடம் காட்டும் அக்கறையும் அன்பும் பரிவும், நல்லொழுக்கமுமே அக்குழந்தைக்கு கிடைக்கின்ற மூலதனமாக அமைந்து எதிர்காலத்தில் அந்தக் குழந்தை நல்ல குழந்தையாக திகழ வழி வகுக்கும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு தாய்மாரும் தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகாமல் இருப்பதே கட்டாயமாகும்.

    ×