என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Children"

    • திடீரென்று, லிஃப்ட் கதவுகள் மூடத் தொடங்குகின்றன
    • சிறுமி லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் நின்று கதவுகளை மூட விடாமல் தடுக்கிறாள்

    லிஃப்டில் சிக்கி கொள்ளவிருந்த இரண்டு குழந்தைகளை சிறுமி ஒருவர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.

    வீடியோவில், "2 குழந்தைகள் லிஃப்டுக்குள் நிற்கின்றனர். ஒரு சிறுமி வெளியே நின்று அவர்களுடன் பேசுகிறார். அப்போது திடீரென்று, லிஃப்ட் கதவுகள் மூடத் தொடங்குகின்றன. அப்போது அந்த சிறுமி லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் நின்று கதவுகளை மூட விடாமல் தடுக்கிறாள். இதை கவனித்த மற்றவர்கள் உடனடியாக இவர்களுக்கு உதவி செய்து குழந்தைகளை மீட்டனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் துணிச்சலாக செயல்ப்ட்ட சிறுமியை பாராட்டி வருகின்றனர். அதே சமயம் இந்த வீடியோ லிஃப்ட் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இணையத்தில் எழுப்பியுள்ளது. 

    • விளாடிமிர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
    • போர்க்களத்திலிருந்து அப்புறப்படுத்தி, அவர்களை பாதுகாக்கவே இந்த செயல்

    'Bring Kids Back UA' முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 2000 குழந்தைகள் நாட்டிற்கு திரும்பினாலும் இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தைகளால் ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    பிப்ரவரி 2022-ல் இருந்து ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளிலிருந்து வலுக்கட்டாயமாக சுமார் 20,000 குழந்தைகள் நாடுகடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்திய குற்றச்சாட்டின் கீழ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    குழந்தைகளை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்ததாக தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டிற்கு ரஷ்யா மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் போர்க்களத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்தி, அவர்களை பாதுகாக்கவே அப்படி செய்ததாக தெரிவித்துள்ளது. மேலும் உறவினர்கள் முன்வந்து, குழந்தைகளின் அடையாளத்தை உறுதிசெய்யும் பட்சத்தில், அவர்களைத் திருப்பி அனுப்பத் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவிக்கிறது.

     

    • இந்து சமூகம் எதிர்காலத்தில் மறைந்து போகக்கூடும்
    • நமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, ஆனால் விழிப்புணர்வு அவசியம்

    இந்து சமூகத்தினர் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த சமூக நல்லிணக்க நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், திருமணத்தின் உண்மையான நோக்கம் சந்ததியை முன் எடுத்துச் செல்வதே தவிர, ஒருவரின் தனிப்பட்ட ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

    மூன்றுக்கும் குறைவாக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் இந்து சமூகம் எதிர்காலத்தில் மறைந்து போகக்கூடும் என தெரிவித்துள்ளார். இந்துக்களை ஒன்றிணைத்து அதிகாரம் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்துக்களை ஒன்றிணைப்பதற்கும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் ஒரு தேவை உள்ளது. நமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, ஆனால் விழிப்புணர்வு அவசியம் எனப் பேசினார்.

    மேலும் பெண்கள்தான் குடும்பத்தின் அஸ்திவாரம் எனவும் தெரிவித்துள்ளார். பெண்களை பலவீனமானவர்களாகக் கருதக்கூடாது என்றும், அவர்களுக்குத் தற்காப்புக் கலைகளில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்திய பாரம்பரியம் பெண்களுக்கு ஒரு மரியாதைக்குரிய இடத்தையும், அவர்களின் வெளிப்புறத் தோற்றத்தை விட அவர்களின் வளர்க்கும் பண்புகளுக்கே அதிக மதிப்பையும் வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

    • ஸ்ரீராம் என்ற சிறுவன் பலத்த காயமடைந்தான்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழுர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன்கள் அபினேஷ் (வயது 16), முகேஷ் (14). வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அபினேஷ் 11-ம் வகுப்பும், முகேஷ் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர். இளங்காடு பகுதியில் உள்ள தனது தாத்தா முனியன் வீட்டிற்கு பள்ளி மாணவர்கள் இன்று காலை வந்தனர்.

    முனியன் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டை சீரமைப்பதற்கு இன்று காலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது திடீரென வீடு இடிந்து விழுந்தது. வீட்டினுள் விளையாடி கொண்டிருந்த அபினேஷ் மற்றும் முகேஷ் மீது வீட்டின் சுவர் விழுந்தன. இதில் இருவரும் இடிப்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

    ஸ்ரீராம் (10) என்ற சிறுவன் பலத்த காயமடைந்தான். சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்து, படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பொன்னூர் போலீசார் விரைந்து சென்று அபினேஷ், முகேஷ் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • திருப்பத்தில் செல்லும்போது, ​​பள்ளிப் பேருந்து எதிரே வந்துள்ளது.
    • ஆட்டோ ஒன்றின் மீது மோதிவிட்டு தப்பிக்க முயன்றபோது இந்த விபத்தை ஓட்டுநர் ஏற்படுத்தியுள்ளார்

    பெங்களூருவின் தனிசந்திரா பகுதியில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதியதில், 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிட்டி ஆர்ம்டு ரிசர்வ் பிரிவில் காவலராகப் பணியாற்றும் நாகனாகவுடா என்பவர் நான்கு நாட்களுக்கு முன்புதான் ராய்ச்சூரில் இருந்து தனது மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக மாமாவின் வீட்டிற்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மகள் மற்றும் அண்ணன் மகளை அழைத்துக்கொண்டு கடைக்கு பால்வாங்கச் சென்றுள்ளார். அப்போது தனிசந்திரா காவல் குடியிருப்பு அருகே, திருப்பத்தில் செல்லும்போது, பள்ளிப் பேருந்து எதிரே வந்துள்ளது. இதனால் ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளார் நாகனாகவுடா. ஆனால் பேருந்து ஓட்டுநர் ப்ரேக் போடாமல் அதேவேகத்தில் வந்து எதிரே நின்ற ஸ்கூட்டர்மீது மோதினார்.

    இதில் ஸ்கூட்டரில் முன்பகுதியில் நின்றுக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளும் பேருந்தின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்தனர். மேலும் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் முழுவதும் அருகிலுள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் நாகனகவுடாவுக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தொடர்ந்து ஹென்னூர் போக்குவரத்து போலீசார் பேருந்து ஓட்டுநர் மாரப்பாவை கைது செய்துள்ளனர். ஆட்டோ ஒன்றின் மீது மோதிவிட்டு தப்பிக்க முயன்றபோது இந்த விபத்தை அவர் ஏற்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • ஜூன் முதல் டிசம்பர் வரை 6 மாத காலத்தில் மும்பையில் 93 சிறுமிகள் உட்பட 145 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.
    • குர்லா, வகோலா, பவாய், மால்வானி, சகினாகா போன்ற நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என காவல்துறை கவலை தெரிவித்துள்ளது.  

    மும்பை காவல்துறை அறிக்கையில், நவம்பர் 1 முதல் டிசம்பர் 6 வரையிலான 36 நாட்களில், குழந்தைகள் காணாமல் போனதாக 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்தக் காலகட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட 41 சிறுமிகளும் 13 சிறுவர்களும் காணாமல் போயுள்ளனர். ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் சிறுவர்களும் காணாமல் போனவர்களில் அடங்குவர்.

    இந்தக் காலகட்டகாத்தில் பச்சிளம் குழந்தைகள் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

    குர்லா, வகோலா, பவாய், மால்வானி, சகினாகா போன்ற நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மேலும் ஜூன் முதல் டிசம்பர் வரை  6 மாத காலத்தில் மும்பையில் 93 சிறுமிகள் உட்பட 145 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக, அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்த காணாமல் போன சம்பவங்களுக்குப் பின்னால் மனித கடத்தல் இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது.

    இதற்கிடையே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆளும் பாஜக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்க்கு கடிதம் எழுதி உள்ளார்.  

    • சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
    • ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.

    உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

    இதனிடையே 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ ஆஸ்திரேலியா அரசு தடை விதித்துள்ளது. இது வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

    நிதி மோசடிகள், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற ஆன்லைன் அபாயங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் வகையில் வழிமுறைகளை வகுத்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

    ஏற்கனவே டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆங்கிலம் பேச அழுத்தம் கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு அதிக பதட்ட உணர்வு ஏற்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
    • ஆங்கிலத்தில் உங்கள் குழந்தைகள் புலமைபெற வேண்டுமானால், நீங்களும் வீட்டில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள்.

    அண்மையில் தமிழ்நாட்டில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மும்மொழிக் கொள்கை தொடர்பான வாக்குவாதங்கள் அரங்கேறியதை நாம் அனைவரும் அறிவோம். இதில் பலரும் ஹிந்தி திணிக்கப்படும் என்பதற்காக மும்மொழிக் கொள்கையை எதிர்த்தாலும், சிலர் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலமே முழுமையாக தெரியாதபோது எப்படி மூன்றாவது மொழி என்பதற்காக எதிர்த்தனர். ஆம் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இருமொழிக்கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த இரண்டு மொழிகளிலும் வல்லவராக இருப்போம். ஒருசிலரே. அனைவருக்கும் அவரவது தாய்மொழி என்பது மிகமுக்கியமான ஒன்று. அடுத்து இணைப்புப் பாலமான ஆங்கிலம். ஆனால் இப்போதெல்லாம் தாய்மொழி தெரியாவிட்டாலும், ஆங்கிலத்தில் பேசினால் பெருமை என பலரும் நினைக்கின்றனர். தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆங்கிலவழி கல்விமுறை உள்ள பள்ளிகளில் சேர்க்கின்றனர். பொது இடங்களில் தமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என அவர்களை ஊக்குவிக்கின்றனர். ஆனால் குழந்தைகளை ஆங்கிலம் பேச கட்டாயப்படுத்துவது அவர்களின் மொழி வளர்ச்சி, உணர்ச்சி, ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

    கற்றலில் அதிகரிக்கும் பதற்றம்...

    2023ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, எகிப்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆங்கிலம் பேச அழுத்தம் இருப்பதாகவும், இது குழந்தைகளுக்கு அதிக பதட்டத்தை கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேச வராதபோது அது அவர்களின் தன்னம்பிக்கையை பாதித்தாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது எகிப்தில் மட்டுமல்ல. தமிழ்நாட்டிலும் அப்படித்தான். நமது மொழி தமிழ். மற்ற மொழியை தவறுதலாக உச்சரித்தால் எந்த தவறும் கிடையாது. இதனை பெற்றோர்கள் மனதில் கொள்ளவேண்டும். நீங்கள் வீட்டில் தமிழில் பேசுவீர்கள். வெறும் கற்பதை வைத்துமட்டும் பிள்ளைகள் சரளமாக ஆங்கிலம் பேசவேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கக்கூடாது. முதலில் அந்த மொழியை குழந்தை அறிந்து, தெளிந்து பின்னர் பேசத்தொடங்கும்போதுதான் சரியான உச்சரிப்பு வரும். அதற்குள் குழந்தைகளை ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என நிர்பந்திக்கும்போது அல்லது அழுத்தம் கொடுக்கப்படும்போது, அவர்கள் பயப்படுகிறார்கள். அதிகம் பதட்டம் கொள்கிறார்கள். பதட்டத்தால் அதுசரியாக வராதபோது, அப்போது எப்போதும் நமக்கு ஆங்கிலம் வராதோ என அச்ச உணர்வு கொள்கிறார்கள். இதுவே அவர்கள் ஆங்கிலம் கற்க தடையாக அமைந்துவிடும். மேலும் படிப்பிலும் அவர்களை பாதிக்கும். அதனால் பெற்றோர் குழந்தைகளிடம் ஆங்கிலம் கற்க வேண்டும் என அதிகம் அழுத்தம் கொடுக்காதீர்கள். 


    நாம் ஒரு செயலை செய்ய கட்டாயப்படுத்தும்போது அதன்மீது குழந்தைகளுக்கு வெறுப்பு உண்டாகும்

    பெற்றோரும் ஆங்கிலத்தில் பேசுங்கள்...

    வீட்டில் நாம் நம் தாய்மொழியில் பேசுவதால் அவர்களுக்கு தமிழ் சரளமாக வரலாம். அப்படி ஆங்கிலத்தில் உங்கள் குழந்தைகள் புலமைபெற வேண்டுமானால், நீங்களும் வீட்டில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள். அப்போது அது குழந்தைக்கு எளிதாக இருக்கும். இருமொழிகளையும் மாறி மாறி பேசும்போது இரண்டிலும் நல்ல புலமை பெறுவார்கள். அவர்களுக்கு இருமொழிகளையும் பற்றி அறிய ஆர்வம் வரும். மறுபக்கம் ஆங்கிலத்திற்கு ஆதரவாக தாய்மொழியை அடக்குவது மொத்த அறிவாற்றல் வளர்ச்சியை குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களை டியூஷனுக்கு அனுப்பாமல் சிறுவர்களுக்கான ஆங்கில படங்களை போட்டுக்காட்டி அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளை கற்றுக்கொடுக்கலாம். இயல்பான உரையாடல் மூலம் ஆங்கிலத்தை ஊக்குவிக்கலாம். மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்போது அதை கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். அதைவிடுத்து அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். மேலும் தாய்மொழி அறிதலும் மிக முக்கியமானது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

    • உணவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் கார்போஹைட்ரேட்டுகள் இருக்க வேண்டும்.
    • உணவில் குறைந்தது ஒன்றாவது மாவுச்சத்துள்ள உணவாக இருக்கவேண்டும்.

    மூன்று வேளையும் உணவு சாப்பிட்டாலே போதும், உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் எந்த அளவு ஊட்டச்சத்துகள் உட்செல்கிறது என்பது மிகமிக முக்கியமானது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமானால், எவ்வாறு உணவுமுறையை அட்டவணைப்படுத்தவேண்டும் என்பது குறித்து காண்போம்.  

    நார்ச்சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுக்கவும்

    நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் ஸ்டார்ச் நிறைந்த கார்போஹைட்ரேட்டுகள் இருக்க வேண்டும். அதுபோல அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுங்கள். நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் குறைந்தது ஒன்றாவது மாவுச்சத்துள்ள உணவாக இருக்கவேண்டும். சிலர் மாவுச்சத்துள்ள உணவுகள் கொழுப்பை அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் மாவுச்சத்து உணவுகள் ஒரு கிராமுக்கு, கொழுப்பைக் காட்டிலும் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. ஆனால் மாவுச்சத்துள்ள உணவுகளை சமைக்கும்போது அதோடு எதை சேர்க்கிறோம் என்பதை கவனிக்கவேண்டும். அதாவது உருளைக்கிழங்குடன் வெண்ணெய் அல்லது சீஸ் போன்றவற்றைச் சேர்க்கும்போது அதன் கலோரி அளவு அதிகரிக்கிறது.

    நிறைய பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்ளவேண்டும்

    தினமும் குறைந்தது 5 விதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. அவை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ அல்லது உலர்ந்ததாகவோ எந்த விதத்தில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதுபோல காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்ளவேண்டும்.

    மீன்கள் அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்

    மீன் புரதத்தின் நல்ல மூலமாகும். இது பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. வாரத்திற்கு 2 முறையாவது மீன் எடுத்துக்கொள்ளுங்கள். இதில் எண்ணெய் மீன்களையும் எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய் மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அதிகமாக உள்ளது. இது இதய நோய்களை தடுக்க உதவும். சால்மன், வெங்கணை, மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.


    11 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளின் தினசரி உணவில் 6 கிராமுக்கும் குறைவான உப்பே இருக்கவேண்டும்

    நிறைவுற்ற கொழுப்பு, சர்க்கரையை குறைக்கவும்

    நமது உணவில் கொழுப்புச்சத்து இருப்பது அவசியம். ஆனால் எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியமானது. அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்பு இதயத்தில் கொழுப்பை அதிகரிக்கும். இது இதய அபாயங்களுக்கு வழிவகுக்கும். ஆண்கள் ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் நிறைவுற்ற கொழுப்பை எடுத்துக்கொள்ளக்கூடாது. பெண்கள் 20 கிராமுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுபோல அதிக சர்க்கரை எடுத்துக்கொள்வது உடல்பருமனுக்கு வழிவகுக்கும். சர்க்கரை நிறைந்த பானங்கள் அதிக ஆற்றலை கொண்டிருக்கும். அவை எடை அதிகரிப்பிற்கு பங்களிப்பதோடு, பல் சிதைவிற்கும் வழிவகுக்கும். சுகர் ஃப்ரீ சர்க்கரைகளும் உடலுக்கு நல்லதல்ல. பழங்கள் மற்றும் விதைகளில் இயற்கையாகவே சர்க்கரை இருந்தாலும், அவற்றின் நார்ச்சத்து காரணமாக அது உடனடியாக இரத்த ஓட்டத்தில் கலக்காது. 

    குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்

    அதிக உப்பு பயன்பாடு இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.  உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரியவர்கள் மற்றும் 11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 6 கிராமுக்கு மேல் உப்பு சாப்பிடக்கூடாது. சிறுவயது குழந்தைகள் அதைவிட குறைவாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

    உடற்பயிற்சி

    ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மட்டுமல்ல, சுறுசுறுப்புடன் இருக்கவேண்டும். உடற்பயிற்சி செய்வது கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும். அதுபோல எப்போதும் ஆரோக்கியமான எடையோடு இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அதிக எடை அல்லது பருமனாக இருப்பது வகை 2 நீரிழிவு நோய், சில புற்றுநோய்கள், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதற்காக மெலிந்து இருப்பதும் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் மிதமான, சராசரி எடையை நிர்வகித்து கொள்ளுங்கள்.

    தண்ணீர்

    நமது உடலே நமக்கு தண்ணீர் குடிக்க நினைவூட்டும். தாகம் என மூளை சைகை கொடுக்கும்போதே தண்ணீர் குடிக்கவேண்டும். அதனால் தண்ணீர் அதிகம் குடித்து உடலை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருங்கள்.

    காலை உணவை தவிர்க்கவேண்டாம்

    சிலர் உடல் எடையை குறைக்க காலை உணவு எடுத்துக்கொள்ளமாட்டார்கள். காலை உணவு சாப்பிடாவிட்டால் பல்வேறு விளைவுகளை உடல் சந்திக்கக்கூடும். அதனால் காலை உணவை தவிர்க்கமால் இருப்பது நல்லது. 

    • கூச்ச சுபாவம் என்பது இளம் குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பண்பு.
    • என் குழந்தைக்கு கூச்ச சுபாவம் கொஞ்சம் அதிகம் என முத்திரை குத்துவதை நிறுத்துங்கள்.

    பெற்றோர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பயம் குழந்தைகளின் அமைதி, அதாவது கூச்ச சுபாவம். கூச்ச சுபாவம் என்பது இளம் குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பண்பாகும். மனோதத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி 10-20 சதவீதம் குழந்தைகள் பிறக்கும்பொழுதே கூச்ச சுபாவம் கொண்டவையாக இருக்கின்றன. கூச்சம் என்பது அமைதியின் ஒரு வெளிப்பாடே. அவர்கள் எதற்காக அமைதியாக இருக்கிறார்கள் என்பதை முதலில் தெளிவுப்படுத்தி, அதிலிருந்து வெளியேக்கொண்டு வாருங்கள். கூச்ச சுபாவமுள்ள குழந்தைகளை மாற்றுவது குறித்த சில யோசனைகளை காணலாம்.

    முத்திரை குற்றுவதை நிறுத்துங்கள்

    முதலில், என் குழந்தைக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம் என முத்திரை குத்துவதை நிறுத்துங்கள். இதில் சிலர் பெருமைக்கொள்வார்கள். இதில் பெருமைக்கொள்வதற்கு ஒன்றும் இல்லை. வீட்டில் நம் குடும்பத்தினர் மட்டுமே இருப்போம். அதனால் குழந்தைகள் பெரும்பாலும் மற்ற முகங்களை பார்த்திருக்கமாட்டார்கள். ஒரு பொதுவெளியில் அதாவது ஒரு விழாவிற்கோ, கோயிலுக்கோ செல்லும்போது புதுமுகங்களை பார்ப்பர். தெரியாதவர்கள் என்பதால் சில குழந்தைகள் பேசமாட்டர்கள். ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும். பெற்றோர்கள்தான் இவர்கள் நம் உறவினர், நண்பர் எனக்கூறி அறிமுகப்படுத்தி அவர்களுக்கு அந்த பயத்தை போக்கவேண்டும். புதிய நபர்களை பார்க்கும்போதும் அல்லது பொது இடத்திற்கு செல்லும்போதும் அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும். சிலர் இதைவிடுத்து அவன் என்னமாதிரி அமைதியா இருப்பான் என கூறுவார்கள். பின்னர் அவனுக்கு கூச்ச சுபாவம் அதிகம் என இவர்களே கூறுவர். இதுபோல உங்களுடையை குணாதிசியம் என லேபிளிடாமல் அது கூச்ச சுபாவமா அல்லது சங்கடமா என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அப்படி பேசுவதற்கு சங்கடம் எனும்போது அதனை விளக்கி சரிசெய்யுங்கள். 

    கூச்சத்தை பலவீனமாக பார்க்கவேண்டாம்

    முதலில் பள்ளியில் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு அது புதிதாக இருக்கும். முதல்நாள் பள்ளி வகுப்பறையை கற்பனை செய்துகொள்வோம். ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே ஓடி, ஓடி விளையாடுவார்கள், சிரிப்பார்கள், அங்குள்ள பொருட்கள், புத்தகங்களை எடுத்து பார்ப்பார்கள், துறுதுறுவென இருப்பார்கள். மற்ற குழந்தைகள் அனைவரும் அமைதியாகத்தான் இருப்பார்கள். நாட்கள் செல்ல செல்ல புதிய முகங்கள் பழக பழக அவர்களும் விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். பள்ளி மட்டுமின்றி வீட்டிலும் சில குழந்தைகள் அமைதியாக இருப்பார்கள். இதனைப் பார்க்கும் பெற்றோர்கள் பலரும் மந்தமாக இருக்கிறான் எனக் கூறுவார்கள். அது மந்தம் இல்லை. அமைதி. அனைத்து குழந்தைகளும் ஒரே சுபாவத்தை கொண்டிருக்கமாட்டார்கள். அதனால் அமைதியை பலவீனமாக பார்க்கவேண்டாம்.


    குழந்தைகளை அவர்களின் சுபாவங்களை வைத்துப்பேசுதல் கூடாது

    குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்

    கொஞ்சம் தைரியமாக இருக்கும் குழந்தைகள் கூச்ச சுபாவத்திற்கு ஆளாகமாட்டார்கள். மனதில் பயம் இருந்தால்தான் சில குழந்தைகள் பேசமாட்டார்கள். அதனால் குழந்தைகள் எதையாவது எண்ணி பயத்தில் இருக்கிறார்களா என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பயத்தில் இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளை பேசுங்கள். கோபத்தில் சில பெற்றோர்களே குழந்தைகளை அவர்களின் சுபாவங்களை வைத்துப்பேசுவர். அது அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும். அதனால் சுபாவங்களை வைத்து பிள்ளைகளை பேசுவதை தவிர்க்க வேண்டும்.

    தனியாக விடவேண்டும்

    குழந்தைகளோடு எப்போதும் ஒன்றாக இருப்பதை தவிர்க்கவேண்டும், அதாவது பொதுஇடங்களில். குழந்தைகளை பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். நிறையபேர் இருக்கும் அந்த இடத்தில் அவர்களை சுதந்திரமாகவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள். அவர்கள் அதில் கவனம் செலுத்த தொடங்கினால் கொஞ்சம் அவர்களை விட்டு தள்ளிச்செல்லுங்கள். தேவைப்பட்டால் திரும்பி பிள்ளைகளிடம் செல்லுங்கள்.

    வெளிப்படைத்தன்மையை பாராட்டுங்கள்

    குழந்தைகள் அவர்களுக்கு புதிதாக ஒரு விஷயம் தெரியவரும்போது நம்மிடம் வந்து ஆர்வமாக கூறுவார்கள். நமக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் சிலர் அதை காதில் போட்டுக்கொள்ளமாட்டார்கள். குழந்தைகள் பேசுவதை ஆர்வமாக கேளுங்கள். அவர்கள் சொல்லும் விஷயங்கள் தவறாக இருந்தாலும், எடுத்தவுடன் கோபப்பட வேண்டாம். அதை வெளிப்படையாக சொல்வதை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள். பின்னர் தவறை சுட்டிக்காட்டி திருத்தவேண்டும். திட்டினால் அடுத்தமுறை சொல்லமாட்டார்கள். மறைக்க நினைப்பார்கள். அதனால் அவர்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையாய் இருப்பதை பாராட்டி, அப்படியே தொடர அனுமதிக்கவேண்டும்.

    • குழந்தையின் நலனுக்காக பெற்றோர்கள் செய்யும் செயலே, தீங்கு விளைவிக்கக்கூடியதாக மாறுகிறது.
    • க்ரீம்கள், வாசனை திரவியங்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தாதீர்கள்!

    குழந்தைகளின் சருமம் பெரியவர்களைவிட மென்மையானதாகவும், மிருதுவானதாகவும், மிகவும் உணர்திறன் கொண்டதாகவும் இருக்கும். மாசு, வானிலை மாற்றங்கள், குழந்தையின் சருமத்திற்கு நல்லது என நினைத்து நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் (பாடி லோஷன்கள், க்ரீம்கள்) அவர்களின் சருமத்தை பாதிப்படைய செய்கிறது. குழந்தையின் நலனை எண்ணித்தான் பெற்றோர்கள் அப்படி செய்கிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளது. குழந்தையின் சருமத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய செயல்கள் என்னவென்று பார்ப்போம்.

    பெரியவர்களுக்கான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துதல்

    சிலர் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவார்கள். இது தவறான ஒன்று. பெரியவர்களுக்கென தயாரிக்கப்பட்ட பொருட்கள் கடுமையான ரசாயனங்கள், ஆல்கஹால், சல்பேட்டுகள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும். குழந்தைகளின் தோல் மெல்லியதாகவும், அதிக ஊடுருவக்கூடியதாகவும், எளிதில் எரிச்சலுக்கு உள்ளாகக் கூடியதாகவும் இருக்கும். இதனால் அந்தப் பொருட்கள் குழந்தைகளின் தோலை எளிதில் பாதிக்கும். அதனால் குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் தோல் பராமரிப்பு பொருட்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும். 

    குழந்தைகளை அதிக நேரம் சூரிய ஒளியில் படுமாறு வைத்திருப்பது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இது முன்கூட்டியே வயதாவது, தோல் புற்றுநோய் பாதிப்புகள் போன்ற அபாயங்களை ஏற்படுத்தும். மேகமூட்டமாக இருந்தாலும், குறைந்தபட்சம் SPF 30 சன்ஸ்கிரீனை பயன்படுத்தவும். குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மென்மையான, மணம் இல்லாத சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.

    அடிக்கடி குளிக்கவைத்தல்

    சுத்தம் முக்கியம் என்றாலும், குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டுவது அல்லது வெந்நீரை பயன்படுத்துவது குழந்தையின் சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெய் பசையை எடுத்துவிடும். இது வறட்சி, எரிச்சல், தோலழற்சி போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். குழந்தையின் உடல்நிலையை பொறுத்து வாரத்திற்கு சிலமுறை மட்டுமே வெந்நீரை பயன்படுத்தவேண்டும். வியர்வை மற்றும் அழுக்கு அதிகமானால் குழந்தைகளை தினமும் குளிக்கவைக்கலாம். ஆனால் வெந்நீர் அதிகம் பயன்படுத்தவேண்டாம்.

    மாய்ச்சுரைஸர்களை தவிர்த்தல்

    குழந்தைகளின் சருமம் இயற்கையாகவே மென்மையாக இருப்பதால், அவர்களுக்கு ஈரப்பதம் தேவையில்லை என நாம் நினைக்கிறோம். ஆனால் குளிர் மற்றும் வெயில் காலங்களில் அவர்களது சருமம் ஈரப்பதத்தை விரைவாக இழந்துவிடும். மாய்ச்சுரைஸர்களை தவிர்ப்பது சருமத்தை இன்னும் பலவீனப்படுத்தும். இதனால் வறட்சி, அரிப்பு, தோல் பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளுக்கென வடிவமைக்கப்பட்டுள்ள மென்மையான, ஒவ்வாமை ஏற்படுத்தாத மாய்ச்சுரைஸர்களை பயன்படுத்துவது நல்லது. குளித்த உடன், சருமம் சற்று ஈரமாக இருக்கும்போதே இதைப் பயன்படுத்துவது, ஈரப்பதத்தை எளிதில் சருமத்தில் தக்கவைக்கும். 


    வெந்நீரில் குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டக்கூடாது 

    தோல் நோய்களை புறக்கணித்தல்

    பெற்றோர்கள் சிலசமயம் குழந்தைகளின் தோலில் வரும் தடிப்புகள், திட்டுகளை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். அவை தானாகவே சரியாகிவிடும் என நம்புகிறார்கள். கீழேவிழுவது, விளையாடும்போது ஏற்படும் தடிப்புகள், காயங்கள் நாளடைவில் தானாக குணமடைந்துவிடும் என்றாலும், மற்ற தோல் பிரச்சனைகள் மீதும் கவனம் செலுத்தவேண்டும்.

    வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தல்

    வாசனை திரவியங்கள் மற்றும் அதிகம் வாசம் தரும் குளியல் சோப்புகள் பயன்படுத்துவதற்கும், நுகர்வதற்கும் நன்றாக இருக்கும். ஆனால் அவை அனைத்தும் குழந்தைகளுக்கு தோல்நோய்களை ஏற்படுத்தும். ஹைபோஅலர்கெனி பொருட்களையே பெற்றோர்கள் தேடவேண்டும். எளிமையான, வாசனையற்ற பொருட்கள் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு நோய் அபாயங்களை குறைக்கின்றன.

    மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து தராதீர்கள்

    குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது அரிப்பு, காயம் அல்லது ஏதேனும் உடல் பிரச்சனைகள் என்றால் உடனே மருத்துவரிடம் செல்லாமல், தாங்களாகவே கடைகளில் கிடைக்கும் (OTC) க்ரீம்கள், மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது தவறு. சில க்ரீம்கள், குறிப்பாக ஸ்டீராய்டுகள் கொண்டவை தவறாக பயன்படுத்தப்பட்டால் சருமத்திற்கு தீங்குவிளைவிக்கும். குழந்தைகளின் சருமத்தை பராமரிப்பதற்கு பொறுமை, விழிப்புணர்வு உள்ளிட்டவை அவசியம்.

    • உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது.
    • முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும்.

    குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான விஷயம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, உணவு ஒவ்வாமை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டால் குழந்தைகள் சத்துள்ள பொருட்களை சாப்பிட முடியாது, உடல் எடை குறையும், உடல்நலம் பாதிக்கப்படும். உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதைக் குணப்படுத்தும் முறைகளைக் காண்போம். 

    குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை இருப்பதை எவ்வாறு கண்டறிவது?

    வளரும் குழந்தைகளுக்கு புதிதாக உணவுகளை பழக்கப்படுத்த வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சாதம், முட்டை, வேர்க்கடலை, அவித்த உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை பெற்றோர்கள் கொடுக்க தொடங்குவார்கள். அப்படி இந்த பொருட்கள் ஒத்துகொள்ளவில்லை எனில் சாப்பிட்ட சிறிதுநேரத்திலேயே குழந்தைகள் வாந்தி எடுத்துவிடுவார்கள். அல்லது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். அரிப்பு, தோல் வெடிப்புகள், வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். சிலநேரங்களில் மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். மேலும் சில உணவுகளை குழந்தைகள் சாப்பிடவே மாட்டார்கள். அப்போது அது காலப்போக்கில் சரியாகிவிடும் என பெற்றோர் விட்டுவிடுவார்கள். குழந்தைக்கு உணவு ஒவ்வாமை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். அது ஒவ்வாமைதானா என உறுதிப்படுத்தி அதன்பின் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குவர். மேலும் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவை வேறு எந்த முறையில் கொடுக்கலாம் எனவும் அறிவுறுத்துவர். 


    குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள்

    ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொதுவான உணவுப் பொருட்கள்...

    • பால்
    • முட்டை
    • வேர்க்கடலை
    • மரக்கொட்டைகள்
    • மீன்
    • கோதுமை
    • சோயா
    • ஷெல்ஃபிஷ்

    மேற்கூறிய 8 உணவுகள்தான் 90% உணவு ஒவ்வாமைகளை ஏற்படுத்துகின்றன. 

    ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு என்ன செய்வது?

    முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும். ஆனால் சில ஒவ்வாமைகள் தொடர்ந்து நீடிக்கும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், வேர்க்கடலை மற்றும் குழந்தைக்கு ஒவ்வாமை கொடுக்கும் பொருட்களை உங்களின் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக ஆக்குங்கள். குழந்தைக்கு முட்டை அவித்து கொடுத்தால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால், மாற்று வழியில் எவ்வாறு அதனை கொடுக்கலாம் என மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பின்னர் தொடர்ந்து அதனை கொடுத்துவரும்போது இந்த பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். 

    ஒவ்வாமையை தடுக்க என்ன செய்யலாம்?

    ஒரு உணவுப்பொருள் குழந்தைக்கு ஒவ்வாமையை கொடுக்கிறது என்றால் அதை கொஞ்ச நாட்கள் தவிர்க்கவேண்டும். குழந்தையை பார்த்துக்கொள்பவர்களிடமும், பள்ளியிலும் அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப்பொருட்கள் குறித்து தெரிவித்தல் நல்லது. ஒவ்வாமை இருப்பவர்கள் எப்போதும் வெளியில் செல்லும்போது எபிநெஃப்ரின் ஆட்டோ-இன்ஜெக்டரை எடுத்துச் செல்வது நல்லது. குழந்தையின் பள்ளி அல்லது பகல்நேர பராமரிப்பு மையத்திலும் குழந்தைக்கு தேவையான மருத்தை வழங்குவது நல்லது. 

    ×