என் மலர்
மலேசியா
- அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
- மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்ளவுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.
இந்நிலையில் மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், முதல்ல நான் போட்டோ எடுக்க முயற்சி பண்ணப்போ அஜித் சார் என்ன திட்டிட்டாரு. ஆனா அதுக்கு அப்புறம் அவரே கூப்பிட்டு ஒரு செல்பி எடுத்து கொடுத்தாரு. என் வாழ்நாள் கனவு நனவாகிடுச்சி. அந்த ஒரு நொடி எனக்கு உலகத்தையே மறக்க வச்சிருச்சு'' என்று ஆனந்த கண்ணீருடன் மலேசிய ரசிகை பேசியுள்ளார்.
- சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
- ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இதனிடையே 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ ஆஸ்திரேலியா அரசு தடை விதித்துள்ளது. இது வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
நிதி மோசடிகள், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற ஆன்லைன் அபாயங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் வகையில் வழிமுறைகளை வகுத்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
ஏற்கனவே டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடலில் தத்தளித்து கொண்டிருந்த 13 பேரை பத்திரமாக மீட்டனர்.
- படகில் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் மாயமாகிவிட்டனர்.
மியான்மர் நாட்டில் இருந்து ஏராளமான ரோஹிங்கியர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் மலேசியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர். நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு கப்பலில் மியான்மரில் இருந்து புறப்பட்டனர்.
தாய்லாந்து- மலேசியா எல்லைக்கு அருகில் அவர்கள் கப்பலில் இருந்து இறங்கி 3 படகுகளில் மலேசியா புறப்பட்டனர். மலேசியா அருகே கடல் பகுதி எல்லையான லங்காவியில் சென்றபோது திடீரென ஒரு படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் கடலில் மூழ்கினார்கள்.
இதுபற்றி அறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்து கொண்டிருந்த 13 பேரை பத்திரமாக மீட்டனர்.
பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துவிட்டதாக மலேசியா கடல் சார் நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் படகில் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் மாயமாகிவிட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மற்ற 2 படகுகளும் எங்கு சென்றது என தெரியவில்லை.
- வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.
- தாயார் அளித்த புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை உடனடியாக கைது செய்யப்பட்டார்.
மலேசியாவில் தனது 2 வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது நபருக்கு, 104 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு பெண்களும் 2020 ஆம் ஆண்டு முதல் வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கடந்த மாதம் தங்களது தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தாயார் அளித்த புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 35 வயது நபருக்கு, 104 ஆண்டுகள் சிறை மற்றும் 18 பிரம்படி தண்டனைகள் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது
- இரு நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
- அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மலேசியா கோலாலம்பூரில் 19-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் உச்சி மாநாடு நாளை (1-ந்தேதி) நடக்கிறது. அதற்கு முன்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் கோலாலம்பூரில் சந்தித்து இரு நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த சந்திப்பின்போது அமெரிக்கா- இந்தியா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இது தொடர்பாக பீட் ஹெக் செத் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியா- அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்புக்கான ஒரு மூலக்கல்லாக இந்த கட்டமைப்பு கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் படைகளுக்கும் ஒரு முக்கியமான படிக்கல்லாகும். இது பாதுகாப்பு மற்றும் நமது வலுவான கூட்டாண்மைக்கான அமெரிக்காவின் நீண்ட கால உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகிறது என தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் போது,"இந்த கட்டமைப்பில் கையெழுத்திட்டது இந்தியா- அமெரிக்கா உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. ஹெக்செத் தலைமையின் கீழ் உறவுகள் மேலும் வலுப்பெறும்" என தெரிவித்தார்.
- இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
- மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தம், அரிய மண் தாதுக்கள் ஒப்பந்தத்த்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது.
இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறினார்கள். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டு இரு நாட்டு தலைவர்களுடன் பேசி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாட்டின் கலந்துகொண்டார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் ஆகியோர் டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் மூலம் தாய்லாந்து காவலில் வைத்திருந்த 18 கம்போடிய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான 800 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட கனரக ஆயுதங்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த ஒப்பந்தத்துடன் சேர்த்து, மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தம், அரிய மண் தாதுக்கள் ஒப்பந்தத்த்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
மேலும் கம்போடியா உடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்துடனான கனிம வள ஒப்பந்தத்திலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
- வாஷிங்டனில் இருந்து 23 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு கோலாலம்பூரில் வந்திறங்கினார்.
- கடைசி நேரத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் -ஐ டிரம்ப் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று 3 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்குகிறார். அவர் 2-வது முறை அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று அமெரிக்காவிலிருந்து கிளம்பிய டிரம்ப் மலேசியா தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்துள்ளார்.
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறார்.
வாஷிங்டனில் இருந்து 23 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு கோலாலம்பூரில் வந்திறங்கிய டிரம்ப்புக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான ஓடுபாதையில் மலேசியாவின் பாரம்பரிய உடைகள் அணிந்த நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ப் நடனமாடினார். மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் அதிபரும் இணைந்து நடனமாடினர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
மலேசிய பயணத்துக்கு பிறகு டிரம்ப் ஜப்பானுக்கு செல்கிறார். இந்த பயணத்தில் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதன்பின் டிரம்ப், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இதில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
குறிப்பாக இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச உள்ளார். இந்த பயணத்தின்போது கடைசி நேரத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் -ஐ டிரம்ப் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
- ஆசியான் அமைப்பின் 47-வது உச்சி மாநாடு 26-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுகிறது.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆசியான் மாநாட்டில் பங்கேற்க மலேசியா அழைப்பு விடுத்தது.
கோலாலம்பூர்:
ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) அமைப்பின் 47-வது உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறுகிறது.
இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் அமைப்புக்கும், இந்தியாவுக்கும் சமீபத்திய ஆண்டுகளாக இருதரப்பு உறவு முன்னேற்றம் அடைந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆசியான் மாநாட்டில் பங்கேற்க மலேசியா அழைப்பு விடுத்தது. இதையடுத்து பிரதமர் மோடி மலேசியாவுக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மலேசியாவில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியது.
இதற்கிடையே மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
இதுதொடர்பாக மலேசிய பிரதமர் அன்வர் கூறுகையில், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். ஆசியான் உச்சி மாநாட்டிற்கான தயாரிப்புகள் குறித்து இருவரும் விவாதித்தோம்.
அதே வேளையில் இந்தியாவில் தீபாவளி பண்டிகை இன்னும் கொண்டாடப்படுவதால் ஆன்லைனில் கலந்து கொள்வதாக மோடி தெரிவித்தார். அவரது இந்த முடிவை மதிக்கிறேன். மலேசியா-இந்தியா உறவை வலுப்படுத்துவதற்கும், ஆசியான்-இந்தியா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் மலேசியா தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது என தெரிவித்தார்.
ஆசியான் உச்சி மாநாட்டில் மலேசியாவின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது. பிரதமர் மோடியின் மலேசிய பயணம் ரத்து மூலம் டிரம்ப் உடனான சந்திப்பு இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் உடன் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுத்தனர்.
- ஆசிய கோப்பையில் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர்
பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியா பாகிஸ்தான் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதனால் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் உடன் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி பேசுபொருளானது.
இதனையடுத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி விரும்பாததால் இப்போது வரை ஆசிய கோப்பை இந்திய அணியிடம் வழங்கப்படவில்லை.
இதனையடுத்து நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கைகுலுக்க மறுத்தனர்.
இந்நிலையில், ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஹைபை கொடுத்துக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மலேசியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் 21 வயதிற்குட்பட்ட சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டி 3-3 என்ற கணக்கில் டிரா ஆனது.
- போலீஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
- இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மலேசியாவின் ஜோகூரில் உள்ள புலாய் ஆற்றில் நேற்று ஒரு போலீஸ் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமானி உட்பட ஐந்து பேரை மீட்டனர்.
அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் பயிற்சியின் போது நடந்ததாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
- மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.
- இன்று நடந்த இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி அடைந்தார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனாவின் எஸ்.எப்.லீ உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய லீ 21-11, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரான்சின் டோமா ஜுனியர் பாபோவ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய கிடாம்பி 24-22, 17-21, 22-20 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் கிடாம்பி, ஜப்பான் வீரர் யுஷி தனகாவுடன் மோதுகிறார்.






