என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • குழந்தைகளின் அழுகை "எனக்கு நீ தேவை!" என்பதற்கான சமிக்ஞையாகும்.
    • குழந்தை எழுப்பும் வெவ்வேறு விதமான சத்தங்களையும், அழுகைகளையும் புரிந்துகொள்ள நாளாகும்.

    புதிதாக பெற்றோரான சிலருக்கு ஆரம்பத்தில் குழந்தை எழுப்பும் வெவ்வேறு விதமான சத்தங்களையும், அழுகைகளையும் புரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள சிறிது நாட்கள் எடுக்கும். நாட்கள் செல்ல செல்ல குழந்தை எதற்காக அழுகிறது என்று நீங்களே தெரிந்துகொள்வீர்கள். ஆனால் ஆரம்பத்தில் குழந்தைகளை கையாள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். குழந்தைகளின் அழுகை "எனக்கு நீ தேவை!" என்பதற்கான சமிக்ஞையாகும். உங்கள் குழந்தை ஏன் அழுகிறது என்பதையும், அவர்களை அமைதிப்படுத்த நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.  

    குழந்தைகள் அழுவதற்கான சில காரணங்கள்

    • பசி
    • காற்று புகுதல்
    • அசௌகரியம்
    • சோர்வு
    • கோலிக் (குழந்தைகள் பொதுவாக ஒருநாளைக்கு 3 மணிநேரத்திற்கும் மேலாக அழுவது - உடல்நல பாதிப்புகளை குறிக்காது)
    • உடல்நிலை சரியில்லாமல் இருப்பது 

    மேற்குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் குழந்தைகள் அழுவதற்கான பொதுவான காரணங்கள். 

    குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதை எவ்வாறு அறிவது?

    • தொடர்ந்து அழுவது (அழும் விதம் வழக்கத்தை விட வித்தியாசமாகவும், அதிக சத்தமாகவும் இருக்கலாம்)
    • சிணுங்கும் சத்தங்களை எழுப்புதல்
    • அதிக சத்தமாக அலறல்
    • புரண்டு புரண்டு படுத்தல்
    • கை, கால்களை பிடுங்குவது, உடலை வேகமாக நீட்டுவது
    • எப்போதும் எரிச்சலாக இருத்தல் ( முகத்தில் வெளிகாட்டுவார்கள்)
    • சாப்பிடாமல் இருப்பது
    • இரவில் தூங்காமல் இருப்பது அல்லது வழக்கத்தை விட அதிகமாக தூங்குவது.

    மேற்கூறிய காரணங்கள் உடல்நல பாதிப்பை குறிக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். 


    குழந்தைகள் பொதுவாகவே ஒருநாளைக்கு 3 மணிநேரத்திற்கும் மேல் அழுவார்கள்!

    குழந்தையை எப்படி அமைதிப்படுத்துவது?

    • குழந்தையை ஒரே இடத்தில் படுக்க வைக்காமல், கையில் தூக்கி விளையாட்டு காட்டுங்கள். மார்போடு அணைத்து சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.
    • வெந்நீரில் குளிப்பாட்டுங்கள்.
    • குழந்தையின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி செய்ய, மென்மையான குரலில் பாட்டுப்பாடலாம். அல்லது அமைதியாக பேசலாம். எப்போதும் இல்லாமல் வித்தியாசமாக அமைதியாக பேசுவது அவர்களின் கவனத்தை ஈர்க்கும். அழுகையை மறக்கச்செய்யும்
    • பால் கொடுத்து பாருங்கள். பசியாக இருந்தால் அழுகை நின்றுவிடும்.
    • மடியில் குப்புற படுக்க வைத்து முதுகை லேசாக தடவிக்கொடுத்து பாருங்கள்.
    • பொம்மைகளை கொடுத்து பார்க்கலாம்
    • சாப்பிடும்போது அல்லது பால் குடிக்கும்போது காற்று புகுந்திருந்தால் அது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அப்போது அவர்களை ஏப்பம்விட வையுங்கள். காற்று வெளியே வந்தால் நன்றாக உணர்வார்கள்.
    • குழந்தையின் துணி ஈரமாக, அழுக்காக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 
    • வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடும்பங்களுக்கும் இலவசம்!
    • வேலை தேடும், வேலைக்கு செல்லும் மற்றும் படிக்கும் தாய்மார்களுக்கான முன்னெடுப்பு.

    குழந்தை பராமரிப்பு என்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல. பசியறிந்து குழந்தைக்கு உணவு கொடுக்கவேண்டும். அவர்களை தூங்கவைக்க வேண்டும். குளிக்க வைக்க வேண்டும். எப்போதும் அவர்களை கண்காணித்து கொண்டே இருக்கவேண்டும். இப்படி பல வேலைகளை உள்ளடக்கியது. அதுவும் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பராமரிப்பது இன்னும் சிக்கல் வாய்ந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களில் பணிக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் தாய்மார்களை உதவிக்கு வைத்துக்கொள்வர். இருப்பினும் நகரங்களில் வாழ்பவர்களால், கிராமத்தில் இருக்கும் தங்கள் அம்மாக்களை இங்குகொண்டுவந்து வைத்து குழந்தையை பார்த்துக்கொள்ள வைப்பது என்பது பல நடைமுறை சிக்கல்களை உள்ளடக்கியது. 

    சில வீட்டில் அவர்களின் அம்மாக்களும் வேலைக்குப் போகும் சூழல் இருக்கும். அப்போது குழந்தையை யார் பார்த்துக்கொள்வது? இந்த சூழலில் இருக்கும் பலரும் தேர்ந்தெடுப்பதுதான் குழந்தை பராமரிப்பு மையங்கள். காசு, பணம் போன்றவற்றைவிட பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகள் மேலானவர்கள்தான். ஆனால் அவர்களை பராமரிக்கவும் பணம் என்பது அத்தியாசியமான ஒன்று. அதனால் அவர்களுக்கும் வேறு வழியில்லை. வேலைக்கு சென்றுதான் ஆகவேண்டும். குழந்தை பராமரிப்பு மையங்களில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி தங்கள் குழந்தைகளை விட்டுச்செல்வர். பணிமுடிந்து வந்து மீண்டும் அழைத்துச்செல்வர்.

    அல்லது பலரும் வீட்டிலேயே குழந்தை பராமரிப்பாளரை நியமித்து குழந்தைகளை கவனிக்க சொல்வர். இதற்கு எப்படியும் மாதத்திற்கு ரூ.15 ஆயிரத்திற்குமேல் செலவு செய்வர். வீட்டில் பணியமர்த்தப்படும் பராமரிப்பாளர்களுக்கு மாதம் ரூ.13 முதல் 15 ஆயிரம் சம்பளம் வழங்குவர். ஒருவேளை கூடுதல் வேலைகள், அதாவது வீட்டு வேலைகள் சிலவற்றையும் சேர்த்து பார்க்கச்சொன்னால் அதற்கேற்றவாறு கூடுதல் சம்பளம் கொடுப்பர். பராமரிப்பு மையங்களில் இந்த தொகை மாறுபடலாம். சில மையங்கள், குறிப்பாக பகல்நேர பராமரிப்பு மையங்கள், நாள் அல்லது வார அடிப்படையில் கட்டணம் வசூலிக்கின்றன. சில மையங்கள் மணிநேரத்தை கணக்கில்கொண்டு கட்டணம் வசூலிக்கின்றன. இந்த செலவே எப்படியும் அவர்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு போய்விடும்.


    அனைத்து குடும்பங்களுக்கும் இலவச குழந்தை பராமரிப்பை வழங்குகிறது நியூ மெக்ஸிகோ 

    இலவச குழந்தை பராமரிப்பு...

    இந்நிலையில் இந்த குழந்தை பராமரிப்புச் செலவை குறைக்கும் வகையில் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ நகரம், புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது குழந்தை பராமரிப்பு இலவசம் என அறிவித்தது. அம்மாநில அரசு அறிவித்த அந்த திட்டமும் நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் அனைத்து குடும்பங்களுக்கும் இலவச குழந்தை பராமரிப்பை வழங்கும் முதல் மாநிலமாக நியூ மெக்ஸிகோ மாறியுள்ளது. இதனால் அம்மாநில மக்களுக்கு ஆண்டுக்கு சுமார் $12,000 மிச்சமாகிறது. இந்திய மதிப்பில் தோராயமாக பத்து லட்சத்து அறுபது ஆயிரம். குடும்பத்தினர் தங்கள் வேலையை தொடரவும், கல்வியை தொடரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

    "குடும்ப ஒற்றுமை, பணியாளர் பங்கேற்பு மற்றும் நியூ மெக்ஸிகோவின் எதிர்கால செழிப்புக்கு குழந்தை பராமரிப்பு அவசியம். உலகளாவிய குழந்தை பராமரிப்பில் முதலீடு செய்வதன் மூலம், நாங்கள் குடும்பங்களுக்கு நிதி நிவாரணம் வழங்குகிறோம். எங்களது பொருளாதாரத்தை ஆதரிக்கிறோம், மேலும் ஒவ்வொரு குழந்தையும் வளரவும், செழிக்கவும் வாய்ப்பு இருப்பதை உறுதி செய்கிறோம்" என நியூ மெக்ஸிகோ ஆளுநர் மிச்செல் லுஜன் கிரிஷாம் தெரிவித்துள்ளார். 

    திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது?

    கடந்த சில ஆண்டுகளாகவே இத்திட்டம் அங்கு நடைமுறையில் இருந்துள்ளது. ஆனால் அது வருமானத்தின் அடிப்படையில், அதாவது வறுமைக்கோட்டின் கீழ் என நாம் குறிப்பிடுவதுபோல வருமானம் குறைவாக இருப்பவர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இந்த சலுகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அரசினுடைய மையங்களில் சேர்த்தாலும், தனியார் பராமரிப்பு மையங்களில் குழந்தைகளை சேர்த்தாலும் அதற்கான பராமரிப்பு தொகையை அரசு வழங்கும். பராமரிப்பு தொகையை பெற்றோர்கள் கட்டிவிட்டு, பின்னர் அந்த தொகையை அரசிடமிருந்து பெறுவார்கள். 

    • குழந்தைகளின் அறிவை வளர்ப்பது கல்வி மட்டுமல்ல!
    • உணர்ச்சிகளை அடையாளம்கண்டு பேசக் கற்றுக்கொள்வது மூளை வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம்.

    குழந்தைகளின் அறிவை வளர்ப்பது, மேம்படுத்துவது என்பது வெறும் கல்வியை சார்ந்தது என்றே பெற்றோர் பலர் நினைக்கின்றனர். நிறைய பணம் கட்டி பெரியப் பள்ளியில் படிக்க வைக்கிறோம். அதுபோதும் அவர்களின் வாழ்க்கைக்கு என நினைக்கிறார்கள். ஆனால் அப்படி பெரிய பள்ளிகளில் படிக்க வைத்தும் சிலர் படிப்பில் பின்தங்கிதான் இருப்பார்கள். அதற்கு காரணம் பிள்ளைகள் சரியாக படிக்காததுதான் என பெற்றோர்கள் நினைப்பர். ஆனால் இதில் பெற்றோருக்கும் பெரியபங்கு உண்டு. காரணம் படிப்பு, அறிவை கொடுப்பது வெறும் கல்வி மட்டுமல்ல. படைப்பாற்றல், பார்வை, புரிதல், கவனம் போன்றவையும்தான். இவை அனைத்தையும் பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு கட்டாயம் தரவேண்டும். பயிற்சியளிக்க வேண்டும். அவர்களின் இந்த திறன்களை வளர்க்க வேண்டும். அப்போதுதான் ஞானத்திலும், படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள். எப்படி? பார்ப்போம்.  

    கதை சொல்லல் மூலம் கற்பனையை தூண்டுதல்

    சில வருடங்களுக்கு முன்பெல்லாம் குழந்தைகளை கதை சொல்லி தூங்கவைப்பார்கள். இந்த கதை சொல்வது குழந்தைகள் தூங்குவதற்காக மட்டுமல்ல. குழந்தையின் கற்பனை மற்றும் மொழித்திறனை மேம்படுத்துவதற்காக. நாம் சொல்லும் பெரும்பாலான கதைகள் கற்பனையே. அது நமக்கு தெரியும். அவர்களுக்கு தெரியாது. அவர்கள் ஆர்வமாக கதை கேட்பார்கள். நாம் கதாபாத்திரத்தையும், கதைக்களத்தையும் கூறிவிட்டு, அடுத்து என்ன நடக்கும்? என அவர்களிடம் கேட்கும்போது அவர்கள் யோசிக்க தொடங்குகிறார்கள். அவர்களும் அந்த கற்பனைக்குள் வருகிறார்கள். யோசிக்க தொடங்கும்போது கற்பனை திறன் வளர்கிறது. நம்மிடம் கதை சொல்வார்கள். பேச்சுத்திறன் வளரும்.

    இந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், என்ன செய்வீர்கள்? என கேட்கும்போது சூழ்நிலையை புரியத் தொடங்குகிறார்கள். அதனால்தான் அந்தக்காலத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்வார்கள். ஆனால் இப்போது குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது, தூங்க வைக்க வேண்டும் என்றால், பொம்மை பாடல்களை போட்டுவிடுவது. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பேச்சுக்கொடுத்து அவர்களின் பேச்சுத்திறனை வளர்க்கவேண்டும். 

    விளையாட்டு

    மொபைல் ஃபோன்களில் கேம் வைத்து கொடுக்காமல், காற்றோட்டமாக விளையாட விடவேண்டும். இது உடல்நலனுக்கும், மனநலனுக்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும். அதுமட்டுமின்றி மொபைல்களில் இருக்கும் விளையாட்டுகள், அதன்விதிகள் சொல்வதுபடியே செய்யவேண்டியதாக இருக்கும். மற்ற குழந்தைகளுடன் விளையாடும்போது, புதிய விளையாட்டுகளை கண்டுபிடித்தல், விளையாட்டில் எழும் பிரச்சனைகளை தீர்த்தல் என திறன்களை வளர்த்துக்கொள்வர்.


    குழந்தைகளை காற்றோட்டமான, உடலுக்கு வேலை கொடுக்குமாறு விளையாட செய்யுங்கள்

    நினைவாற்றல், கவனம்

    நம் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதும், சோர்வடைய வைப்பதும் நம் கையில்தான் இருக்கிறது. மூளைக்கு சிறந்த பயிற்சி சிந்திப்பதுதான். ஆதலால் ஆக்கப்பூர்வமான சிந்தனையை மேற்கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். அறிவார்ந்த பேச்சுகளில் ஈடுபடலாம். குறுக்கெழுத்துப் போட்டி, சுடோகு, பாட்டுக்குப் பாட்டு, புதிதாக ஏதாவது ஒரு மொழியை அல்லது கலையை கற்றுக்கொள்வது போன்றவை மறதியை குறைத்து மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்கள். இது பெரிய பிள்ளைகள் விளையாடும் விளையாட்டு. சிறுவயதினருக்கு களிமண், ஆணிமணிச்சட்டம், மணிகளை வரிசைப்படுத்துதல், ஓவியம் வரைதல் போன்ற வேலைகளை கொடுக்கவேண்டும். இந்த செயல்கள் கவனத்தையும், நினைவாற்றலையும் மேம்படுத்த உதவும்.   

    உணர்வுகளை சொல்லல்

    உணர்ச்சிகளை அடையாளம் கண்டு பேசக் கற்றுக்கொள்வது மூளை வளர்ச்சியின் ஒரு முக்கிய பகுதியாகும். பெற்றோர்கள் உணர்ச்சிகளை முக பாவனைகள் மூலம் குழந்தைகளிடம் வெளிப்படுத்துங்கள். உணர்வுகளை மெல்லமாக புரிந்துகொள்வார்கள். குழந்தைகளுக்கு ஒருவரின் உணர்வுகளை புரிந்துகொள்ள வைப்பது அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கும். மேலும் அவர்களின் மனநிலையை ஒழுங்குபடுத்தவும், பச்சாதாபத்தை வளர்க்கவும் உதவும். குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும்போது, சவால்களை எளிதில் கையாள்வார்கள். 

    அமைதியும், சுய கட்டுப்பாடும்

    கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் குறித்து அவர்களிடம் பேசும்போது அமைதி மற்றும் கட்டுப்பாடு குறித்தும் பேசவேண்டும். எந்தெந்த இடங்களில் அமைதியாக இருக்கவேண்டும், எப்படி கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும். இது அவர்களின் கவனத்தை மேம்படுத்தவும், பதட்டத்தைக் குறைக்கவும், உணர்ச்சி ஒழுங்குமுறையை அதிகரிக்கவும் செய்யும். 

    • குரல்கள் கொடுக்கும் அறிவுரையைவிட, செயலின் விளைவுகள் நிறையப் பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
    • அதிகம் கோபப்படும்போது நம்மீது வெறுப்பு உணர்வு தோன்ற ஆரம்பித்துவிடும்.

    குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதானல்ல. பெற்றோர் என்ற பொறுப்பு எவ்வளவு கடமைகளை கொண்டது என்பதை அந்த நிலையில் இருப்பவர்கள் அறிவர். இந்தக் கடமையில், இந்த பணியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, அதாவது தவறு என்றால் தாங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்க வேண்டுமென்றால் கத்தினால்தான் அது நடக்கும் என நம்புவது. அவர்களை பயப்பட வைப்பதற்கு, சொல்வதை கேட்க வைப்பதற்கு என அனைத்திற்கும் கத்துவதுதான் வழி என பல பெற்றோர்களும் நினைக்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கத்தினால் அப்போதைய வேலை வேண்டுமானால் முடியலாம். ஆனால், அந்தக் கத்தல் குழந்தைகளை அதிக பதட்டமாகவும், அடங்காதவர்களாவும் மாற்றுகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கத்தாமல் குழந்தைகளை நாம் சொல்வதை கேட்கவைப்பது எப்படி என்பதை கூறும் 5 எளிய வழிகள். 

    கண்களை பார்த்து, அமைதியாக பேசுங்கள்...

    குழந்தைகள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அல்லது அவர்களை ஒரு விஷயத்தை செய்ய வைக்க வேண்டுமானால், கத்தாமல், அதிகாரத் தோரணையில் சொல்லாமல், அவர்களிடம் சென்று மண்டியிட்டு அவர்களது கண்களை பார்த்து அமைதியாக பேசுங்கள். அந்த அமைதியான பேச்சு அவர்களை கவனிக்க செய்யும். மேலும் சில விஷயங்களை அவர்களை சொல்லவும்  வைக்கும்.

    கட்டளை வேண்டாம்

    "இப்போதே செய்" என கட்டளையிடுவதற்கு பதில், சாப்பிட்டுவிட்டு வீட்டுப்பாடம் செய்கிறீர்களா? இல்லை வீட்டுப்பாடம் செய்துவிட்டு சாப்பிடுகிறீர்களா? அல்லது கொஞ்சநேரம் விளையாடுகிறீர்களா? ஒரு 10 நிமிடம் இடைவெளி எடுத்துக்கொள்கிறீர்களா? என கேளுங்கள். அப்போது அதை செய்வார்கள்.

    இடைவெளி விட்டுப் பேசுங்கள்

    குழந்தைகளிடம் அவர்களின் தவறை குறிப்பிட்டு கோபமாக பேசும்போது, சிறிது இடைவெளி விட்டு பேசுங்கள். கோபமாக இருக்கும்போது கொஞ்சம் அமைதியானால் அந்த கோபம் தணியும். உங்களின் இந்த சுயகட்டுப்பாட்டை மாதிரியாக கொண்டு குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்றுக்கொள்வார்கள்.  


    குழந்தைகளின் கண்களை பார்த்து அமைதியாக பேசுங்கள்

    முயற்சியைப் பாராட்டுங்கள், முடிவுகளை மட்டுமல்ல

    போட்டியோ, ஏதேனும் புதிய செயலோ எதுவாக இருந்தாலும் அதன் வெற்றி, முடிவை பார்க்காமல் குழந்தைகளின் அந்த முயற்சியை, அதில் கலந்துகொண்டதை பாராட்டுங்கள். அது அவர்களை ஊக்குவிக்கும். தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால், அடுத்தமுறை நன்றாக எடுங்கள் என கூறுங்கள். அப்படி தொடர்ந்து மதிப்பெண்கள் குறைந்தால் அதற்கான காரணம் என்னவென கண்டறியுங்கள். அதைவிடுத்து கத்துவதால், கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லை. 

    தண்டனைகளைவிட விளைவுகள் பாடத்தை சொல்லிக்கொடுக்கும்

    மிகவும் அடம்பிடித்து குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யாவிடில் கத்துவதற்கு பதிலாக அதை அப்படியே விடுங்கள். மறுநாள் ஆசிரியரின் முன்பு அதற்கு பதில்சொல்ல கடமைப்படிருப்பர். நம் குரல்கள் கொடுக்கும் அறிவுரையைவிட, அவர்களின் செயலின் விளைவுகள் நிறையப் பாடங்களை கற்றுக்கொடுக்கும். இது வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் பொருந்தும்.

    அமைதி

    கத்துவதைவிட அமைதியாக பேசுவது அவர்களை காதுகொடுத்து கேட்கவைக்கும். அதிகம் கோபப்படும்போது நம்மீது ஒரு வெறுப்பு உணர்வு தோன்ற ஆரம்பித்துவிடும். "அன்னைக்கு என்ன அடிச்சல்ல" என நாம் திட்டுவது, அடிப்பது போன்ற நிகழ்வுகள் அவர்களின் மனதில் ஆழமாக பதியும். அவர்களின் தவறை சுட்டிக்காட்ட பேசாமல் அமைதியாக இருங்கள். அப்போது அவர்களே வந்துப்பேசி தவறை உணர்வார்கள். 

    • ஆங்கிலம் பேச அழுத்தம் கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு அதிக பதட்ட உணர்வு ஏற்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
    • ஆங்கிலத்தில் உங்கள் குழந்தைகள் புலமைபெற வேண்டுமானால், நீங்களும் வீட்டில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள்.

    அண்மையில் தமிழ்நாட்டில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மும்மொழிக் கொள்கை தொடர்பான வாக்குவாதங்கள் அரங்கேறியதை நாம் அனைவரும் அறிவோம். இதில் பலரும் ஹிந்தி திணிக்கப்படும் என்பதற்காக மும்மொழிக் கொள்கையை எதிர்த்தாலும், சிலர் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலமே முழுமையாக தெரியாதபோது எப்படி மூன்றாவது மொழி என்பதற்காக எதிர்த்தனர். ஆம் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இருமொழிக்கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த இரண்டு மொழிகளிலும் வல்லவராக இருப்போம். ஒருசிலரே. அனைவருக்கும் அவரவது தாய்மொழி என்பது மிகமுக்கியமான ஒன்று. அடுத்து இணைப்புப் பாலமான ஆங்கிலம். ஆனால் இப்போதெல்லாம் தாய்மொழி தெரியாவிட்டாலும், ஆங்கிலத்தில் பேசினால் பெருமை என பலரும் நினைக்கின்றனர். தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆங்கிலவழி கல்விமுறை உள்ள பள்ளிகளில் சேர்க்கின்றனர். பொது இடங்களில் தமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என அவர்களை ஊக்குவிக்கின்றனர். ஆனால் குழந்தைகளை ஆங்கிலம் பேச கட்டாயப்படுத்துவது அவர்களின் மொழி வளர்ச்சி, உணர்ச்சி, ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

    கற்றலில் அதிகரிக்கும் பதற்றம்...

    2023ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, எகிப்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆங்கிலம் பேச அழுத்தம் இருப்பதாகவும், இது குழந்தைகளுக்கு அதிக பதட்டத்தை கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேச வராதபோது அது அவர்களின் தன்னம்பிக்கையை பாதித்தாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது எகிப்தில் மட்டுமல்ல. தமிழ்நாட்டிலும் அப்படித்தான். நமது மொழி தமிழ். மற்ற மொழியை தவறுதலாக உச்சரித்தால் எந்த தவறும் கிடையாது. இதனை பெற்றோர்கள் மனதில் கொள்ளவேண்டும். நீங்கள் வீட்டில் தமிழில் பேசுவீர்கள். வெறும் கற்பதை வைத்துமட்டும் பிள்ளைகள் சரளமாக ஆங்கிலம் பேசவேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கக்கூடாது. முதலில் அந்த மொழியை குழந்தை அறிந்து, தெளிந்து பின்னர் பேசத்தொடங்கும்போதுதான் சரியான உச்சரிப்பு வரும். அதற்குள் குழந்தைகளை ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என நிர்பந்திக்கும்போது அல்லது அழுத்தம் கொடுக்கப்படும்போது, அவர்கள் பயப்படுகிறார்கள். அதிகம் பதட்டம் கொள்கிறார்கள். பதட்டத்தால் அதுசரியாக வராதபோது, அப்போது எப்போதும் நமக்கு ஆங்கிலம் வராதோ என அச்ச உணர்வு கொள்கிறார்கள். இதுவே அவர்கள் ஆங்கிலம் கற்க தடையாக அமைந்துவிடும். மேலும் படிப்பிலும் அவர்களை பாதிக்கும். அதனால் பெற்றோர் குழந்தைகளிடம் ஆங்கிலம் கற்க வேண்டும் என அதிகம் அழுத்தம் கொடுக்காதீர்கள். 


    நாம் ஒரு செயலை செய்ய கட்டாயப்படுத்தும்போது அதன்மீது குழந்தைகளுக்கு வெறுப்பு உண்டாகும்

    பெற்றோரும் ஆங்கிலத்தில் பேசுங்கள்...

    வீட்டில் நாம் நம் தாய்மொழியில் பேசுவதால் அவர்களுக்கு தமிழ் சரளமாக வரலாம். அப்படி ஆங்கிலத்தில் உங்கள் குழந்தைகள் புலமைபெற வேண்டுமானால், நீங்களும் வீட்டில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள். அப்போது அது குழந்தைக்கு எளிதாக இருக்கும். இருமொழிகளையும் மாறி மாறி பேசும்போது இரண்டிலும் நல்ல புலமை பெறுவார்கள். அவர்களுக்கு இருமொழிகளையும் பற்றி அறிய ஆர்வம் வரும். மறுபக்கம் ஆங்கிலத்திற்கு ஆதரவாக தாய்மொழியை அடக்குவது மொத்த அறிவாற்றல் வளர்ச்சியை குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களை டியூஷனுக்கு அனுப்பாமல் சிறுவர்களுக்கான ஆங்கில படங்களை போட்டுக்காட்டி அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளை கற்றுக்கொடுக்கலாம். இயல்பான உரையாடல் மூலம் ஆங்கிலத்தை ஊக்குவிக்கலாம். மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்போது அதை கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். அதைவிடுத்து அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். மேலும் தாய்மொழி அறிதலும் மிக முக்கியமானது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

    • பெற்றோர்களின் அனைத்து நடைமுறைகளையும், செயல்பாடுகளையும், நம்பிக்கைகளையும் குழந்தைகள் கவனிப்பர்.
    • பெற்றோர்களிடம் கவனிப்பதை சில குழந்தைகள் வெளிகாட்டாவிட்டாலும், அந்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள் அவர்கள் ஆழ்மனதை பாதிக்கும்.

    கடல்பாசிகளை போல, குழந்தைகள் தங்கள் குடும்பத்தில், தங்களை சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே உள்வாங்க தொடங்குகின்றனர். குழந்தைகளுக்கு ஓரளவுக்கு நினைவு தெறிந்த பின் தங்களது பெற்றோர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து, பெற்றோரை போலவே செய்ய முயற்சிக்கின்றனர். இதனால் தாய், தந்தைதான் குழந்தைகளுக்கு முதல் முன்மாதிரியாக இருக்கின்றனர். அதனால் குழந்தையின் சிறுவயதின்போது பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பது மிக முக்கியம். உங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் உற்றுநோக்குவர். இந்த ஆரம்பகால அவதானிப்புகள் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஆழமான மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். பெற்றோர்களின் நடத்தைகள்தான் குழந்தைகளின் ஆளுமை, மதிப்புகள், உறவுகளை கட்டமைக்கும். பெற்றோர்களிடம் கவனிப்பதை சில குழந்தைகள் வெளிகாட்டாவிட்டாலும், அந்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள் அவர்கள் ஆழ்மனதை பாதிக்கும். அதனால் குழந்தைகள் முன்பு பெற்றோர் கவனத்துடன் இருக்கவேண்டும். பெற்றோர்களிடம் குழந்தைகள் உள்வாங்கும், சில விஷயங்கள் குறித்து பார்ப்போம். 

    பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் எப்படி நடந்துகொள்கிறார்கள்?

    பெற்றோர்களின் அனைத்து நடைமுறைகளையும், செயல்பாடுகளையும், நம்பிக்கைகளையும் குழந்தைகள் கவனிப்பர். தங்கள் தாய், தந்தை ஒருவருக்கொருவர் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் எப்படி அழைக்கிறீர்கள், ஒரு பிரச்சனையை இணைந்து எப்படி கையாளுகிறீர்கள், இருவருக்கிடையே பாசம், அன்பு, கோபம் போன்ற உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை நன்கு கவனிப்பார்கள். இது குழந்தையின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகள் முன்பு சண்டை போடாதீர்கள். பெற்றோரின் சண்டைகள் குறித்து அவர்களிடத்தில் கூறாவிட்டாலும், தாத்தா, பாட்டி அல்லது அவர்கள் பேசுபவர்களிடத்தில், இன்னைக்கு எங்க அம்மாவும், அப்பாவும் சண்ட போட்டாங்க தெரியுமா? இன்னைக்கு எங்க வீட்ல பெரிய சண்ட? என தங்களை சுற்றி இருப்பவர்களிடம் வெளிப்படுத்துவர். அவர்கள் வந்து உங்களிடத்தில் கேட்கும்போதுதான் நீங்கள் குழந்தை முன்பு சண்டை போட்டதை உணர்வீர்கள். அதனால் எப்போதும் கவனமாக இருங்கள். 

    நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

    குழந்தைகள் தங்கள் பெற்றோரின் சுய பராமரிப்பிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். அதாவது உங்களுடைய பழக்கவழக்கங்கள், சுயமரியாதை, தனிப்பட்ட உணர்ச்சிகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள்? ஒரு பிரச்சனையை எவ்வாறு கையாளுகிறீர்கள்? உங்களுடைய நேர்மை போன்றவற்றையும் உற்றுநோக்குவார்கள். 


    குழந்தைகள் முன்னிலையில் சண்டை போடுவதை தவிர்க்கவேண்டும்

    மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள்?

    பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தெரியாதவர்களிடம் எப்படி பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் குழந்தைகள் கவனிப்பர். அதிலிருந்துதான் அவர்களும் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், மற்றவர்களை எப்படி நடத்தவேண்டும் என்ற மரியாதையை தெரிந்துகொள்கின்றனர்.

    நிதி

    பெற்றோர் பணத்தை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள், நிதிப் பொறுப்பு, குடும்பத்தின் செலவு மற்றும் சேமிப்பு போன்றவற்றையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். பெற்றோரின் சேமிப்பு திறன் மற்றும் செலவு செய்யும் பண்புகள் அப்படியே அவர்களது குழந்தைக்கு வரலாம்.  

    விலங்குகளை எப்படி நடத்துகிறார்கள்?

    தங்கள் பெற்றோர் விலங்குகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைக் குழந்தைகள் கவனிக்கிறார்கள். இதன்மூலம் இரக்கம், பொறுப்பு மற்றும் அனைத்து உயிரினங்களிடத்திலும் அன்பு செலுத்துதல் போன்ற குணங்களை வளர்த்துக் கொள்கின்றனர். இந்த அவதானிப்புகள் ஒரு குழந்தையின் பச்சாதாபம், கருணை மற்றும் நெறிமுறை மதிப்புகளை வளர்க்கும்.

    குழந்தைகளை எப்படி நடத்துகிறீர்கள்?

    தங்களிடம் பெற்றோர் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதுதான் குழந்தைகளை அதிகம் சிந்திக்க வைக்கும். வேறு ஏதேனும் பிரச்சனைகளால் இருக்கும் மன அழுத்தம் அல்லது மற்றவர்களிடம் இருக்கும் கோபத்தை குழந்தைகளிடத்தில் காட்டாதீர்கள். இதனால் நீங்கள் வெறுப்பை உமிழ்வதாக அவர்களுக்கு எண்ணத் தோன்றும். நம் மீது பாசம் இல்லையோ என எண்ணுவார்கள். அதனால் முடிந்த அளவு தனிப்பட்ட பிரச்சனைகளை குழந்தைகளிடத்தில் காட்டாதீர்கள். அதுபோல குழந்தைகளிடத்தில் அதிகம் கோபமாக நடந்துகொள்ளாதீர்கள். இது உணர்ச்சிரீதியாக குழந்தையை அதிகம் பாதிக்கும். எப்போதும் குழந்தையோடு இருக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு பெற்றோர்கள் செயல்படவேண்டும். 

    • காலைநேரத்தில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் வாக்குவாதம் செய்யாதீர்!
    • சீக்கிரம் எழுதல், நீரேற்றம், சீரான ஊட்டச்சத்து, குறைவான திரைநேரம் ஆகியவை பிரச்சனைகளை தீர்க்கும்.

    ஒரு குழந்தையை காலையில் பள்ளிக்கு அனுப்புவது என்பது எவ்வளவு சிரமம் நிறைந்தது என்பது அவர்களின் தாய்மார்களுக்கு மட்டும்தான் தெரியும். குழந்தைகளைவிட அவர்கள்தான் ஞாயிற்றுக்கிழமைகளை அதிகம் எதிர்பார்ப்பார்கள். ஒரு பள்ளி காலைப்பொழுதை இவ்வளவு கடினமாக்குவது எது என நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா? முன்கூட்டியே திட்டமிடாததுதான் அது. காலையில் சிரமமின்றி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கீழ்க்காணும் எளிய நடைமுறைகளை பெற்றோர்கள் பின்பற்றினாலே போதும்....

    சீக்கிரம் எழுவது

    குழந்தைகள் 8 மணிக்கு பள்ளிக்கு செல்லவேண்டும் என்றால், அவர்களை 7 மணிக்கு எழுப்பிவிட்டு அரக்க பறக்க பள்ளிக்கு அனுப்பாதீர்கள். 8 மணிக்கு பள்ளி எனில் 6.30-க்கு எழுப்பிவிடுங்கள். அதற்கு முதல்நாள் இரவு தாமதாக தூங்கவைக்கமால், சீக்கிரம் தூங்கவைக்கவேண்டும். சீரான தூக்க அட்டவணை குழந்தைகளை மன அழுத்தத்திற்கு இட்டுசெல்லாது.

    தண்ணீர் குடிக்க வைக்கவேண்டும்

    குழந்தைகள் எழுந்தவுடன் அவர்கள் முகம், கை, கால்களை கழுவசொல்லவேண்டும். பின்னர் கழிவறைக்கு சென்றுவந்தபின், பல் துலக்க சொல்லிவிட்டு, வெறும் வயிற்றில் கொஞ்சம் தண்ணீர் குடிக்க சொல்லவேண்டும். ஏனெனில் இரவு முழுவதும் தண்ணீர் இல்லாமல் உடல் நீரேற்றம் இன்றி இருக்கும். தூக்கத்திற்குப் பிறகு மீண்டும் நீரேற்றம் பெறுவது வளர்சிதை மாற்றத்தில் தொடங்கி அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கிறது.

    காலை உணவு

    சீக்கிரம் எழாத குழந்தைகள், தாமதமாகிவிட்டது எனக்கூறி சாப்பிடாமல் செல்வார்கள். காலை உணவை தவிர்ப்பது நினைவாற்றல், கவனம் செலுத்தும் செயல்களை பாதிக்கும். இதனால் கல்வி பாதிக்கப்படும்.


    குழந்தைகளின் காலை நேர ரொட்டீனின் மாதிரிப் படம்

    திரை பயன்பாட்டை குறைத்தல்

    பெற்றோர் பலரும் தங்களுக்கு குழந்தைகள் வேலைகொடுக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மொபைல் ஃபோன் கொடுப்பது, டிவியை போட்டுவிட்டு பார்க்க சொல்வது என இருப்பர். எழுந்த உடனேயே டிஜிட்டல் சாதனங்களை பார்ப்பது மூளையின் கவனம் செலுத்தும் திறனை சீர்குலைக்கும். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கவனச்சிதறல் ஏற்படும்.

    உடற்பயிற்சி

    காலையில் குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய சொல்லலாம். உடல் செயல்பாடு ரத்த ஓட்டத்தை தூண்டும் மற்றும் மூளையை கற்றலுக்கு தூண்டும்.

    முன்னேற்பாடு

    காலை நேரத்தை எளிதாக்கவும், மோதல்களைத் தவிர்க்கவும் முன்கூட்டியே திட்டமிடுங்கள். முந்தைய நாள் இரவே காலையில் போடவேண்டிய பள்ளி சீருடைகள், அன்றைய வகுப்புக்கு தேவையான புத்தகங்கள், போன்றவற்றை எடுத்துவைத்துவிடவேண்டும். இது குழந்தையின் நாளை அமைதியாக தொடங்க உதவும்.

    படித்தல்

    அன்றைய நாளில் உள்ள வகுப்புக்கான பாடங்களை ஒருமுறை எடுத்து காலைநேரத்தில் வாசித்து பார்க்க சொல்லலாம். ஒருமுறை தாங்களே வாசித்து பார்த்துவிட்டு, பின்னர் ஆசிரியர் நடத்துவதை கவனிக்கும்போது நன்றாக புரியும். பாடத்தில் இருக்கும் வார்த்தைகள் புரியவில்லையென்றாலும் சந்தேகங்களை எழுப்ப முடியும்.

    பெற்றோர் அமைதி அவசியம்

    இறுதியாக, பெற்றோர்கள் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. காலை நேரத்திலேயே பிள்ளைகளுடன் வாக்குவாதம் செய்வது நேரத்தை வீணடிப்பதோடு, குழந்தைகளுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி, காலை நேரத்தை இன்னும் கடினமாக்குகிறது. 

    சீக்கிரம் எழுதல், நீரேற்றம், சீரான ஊட்டச்சத்து, குறைவான திரைநேரம் ஆகியவை குழந்தைகளின் கவனத்தையும், நல்வாழ்வையும் ஆதரிக்கின்றன என்பதை ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது.  

    • கூச்ச சுபாவம் என்பது இளம் குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பண்பு.
    • என் குழந்தைக்கு கூச்ச சுபாவம் கொஞ்சம் அதிகம் என முத்திரை குத்துவதை நிறுத்துங்கள்.

    பெற்றோர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பயம் குழந்தைகளின் அமைதி, அதாவது கூச்ச சுபாவம். கூச்ச சுபாவம் என்பது இளம் குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பண்பாகும். மனோதத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி 10-20 சதவீதம் குழந்தைகள் பிறக்கும்பொழுதே கூச்ச சுபாவம் கொண்டவையாக இருக்கின்றன. கூச்சம் என்பது அமைதியின் ஒரு வெளிப்பாடே. அவர்கள் எதற்காக அமைதியாக இருக்கிறார்கள் என்பதை முதலில் தெளிவுப்படுத்தி, அதிலிருந்து வெளியேக்கொண்டு வாருங்கள். கூச்ச சுபாவமுள்ள குழந்தைகளை மாற்றுவது குறித்த சில யோசனைகளை காணலாம்.

    முத்திரை குற்றுவதை நிறுத்துங்கள்

    முதலில், என் குழந்தைக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம் என முத்திரை குத்துவதை நிறுத்துங்கள். இதில் சிலர் பெருமைக்கொள்வார்கள். இதில் பெருமைக்கொள்வதற்கு ஒன்றும் இல்லை. வீட்டில் நம் குடும்பத்தினர் மட்டுமே இருப்போம். அதனால் குழந்தைகள் பெரும்பாலும் மற்ற முகங்களை பார்த்திருக்கமாட்டார்கள். ஒரு பொதுவெளியில் அதாவது ஒரு விழாவிற்கோ, கோயிலுக்கோ செல்லும்போது புதுமுகங்களை பார்ப்பர். தெரியாதவர்கள் என்பதால் சில குழந்தைகள் பேசமாட்டர்கள். ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும். பெற்றோர்கள்தான் இவர்கள் நம் உறவினர், நண்பர் எனக்கூறி அறிமுகப்படுத்தி அவர்களுக்கு அந்த பயத்தை போக்கவேண்டும். புதிய நபர்களை பார்க்கும்போதும் அல்லது பொது இடத்திற்கு செல்லும்போதும் அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும். சிலர் இதைவிடுத்து அவன் என்னமாதிரி அமைதியா இருப்பான் என கூறுவார்கள். பின்னர் அவனுக்கு கூச்ச சுபாவம் அதிகம் என இவர்களே கூறுவர். இதுபோல உங்களுடையை குணாதிசியம் என லேபிளிடாமல் அது கூச்ச சுபாவமா அல்லது சங்கடமா என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அப்படி பேசுவதற்கு சங்கடம் எனும்போது அதனை விளக்கி சரிசெய்யுங்கள். 

    கூச்சத்தை பலவீனமாக பார்க்கவேண்டாம்

    முதலில் பள்ளியில் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு அது புதிதாக இருக்கும். முதல்நாள் பள்ளி வகுப்பறையை கற்பனை செய்துகொள்வோம். ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே ஓடி, ஓடி விளையாடுவார்கள், சிரிப்பார்கள், அங்குள்ள பொருட்கள், புத்தகங்களை எடுத்து பார்ப்பார்கள், துறுதுறுவென இருப்பார்கள். மற்ற குழந்தைகள் அனைவரும் அமைதியாகத்தான் இருப்பார்கள். நாட்கள் செல்ல செல்ல புதிய முகங்கள் பழக பழக அவர்களும் விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். பள்ளி மட்டுமின்றி வீட்டிலும் சில குழந்தைகள் அமைதியாக இருப்பார்கள். இதனைப் பார்க்கும் பெற்றோர்கள் பலரும் மந்தமாக இருக்கிறான் எனக் கூறுவார்கள். அது மந்தம் இல்லை. அமைதி. அனைத்து குழந்தைகளும் ஒரே சுபாவத்தை கொண்டிருக்கமாட்டார்கள். அதனால் அமைதியை பலவீனமாக பார்க்கவேண்டாம்.


    குழந்தைகளை அவர்களின் சுபாவங்களை வைத்துப்பேசுதல் கூடாது

    குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்

    கொஞ்சம் தைரியமாக இருக்கும் குழந்தைகள் கூச்ச சுபாவத்திற்கு ஆளாகமாட்டார்கள். மனதில் பயம் இருந்தால்தான் சில குழந்தைகள் பேசமாட்டார்கள். அதனால் குழந்தைகள் எதையாவது எண்ணி பயத்தில் இருக்கிறார்களா என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பயத்தில் இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளை பேசுங்கள். கோபத்தில் சில பெற்றோர்களே குழந்தைகளை அவர்களின் சுபாவங்களை வைத்துப்பேசுவர். அது அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும். அதனால் சுபாவங்களை வைத்து பிள்ளைகளை பேசுவதை தவிர்க்க வேண்டும்.

    தனியாக விடவேண்டும்

    குழந்தைகளோடு எப்போதும் ஒன்றாக இருப்பதை தவிர்க்கவேண்டும், அதாவது பொதுஇடங்களில். குழந்தைகளை பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். நிறையபேர் இருக்கும் அந்த இடத்தில் அவர்களை சுதந்திரமாகவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள். அவர்கள் அதில் கவனம் செலுத்த தொடங்கினால் கொஞ்சம் அவர்களை விட்டு தள்ளிச்செல்லுங்கள். தேவைப்பட்டால் திரும்பி பிள்ளைகளிடம் செல்லுங்கள்.

    வெளிப்படைத்தன்மையை பாராட்டுங்கள்

    குழந்தைகள் அவர்களுக்கு புதிதாக ஒரு விஷயம் தெரியவரும்போது நம்மிடம் வந்து ஆர்வமாக கூறுவார்கள். நமக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் சிலர் அதை காதில் போட்டுக்கொள்ளமாட்டார்கள். குழந்தைகள் பேசுவதை ஆர்வமாக கேளுங்கள். அவர்கள் சொல்லும் விஷயங்கள் தவறாக இருந்தாலும், எடுத்தவுடன் கோபப்பட வேண்டாம். அதை வெளிப்படையாக சொல்வதை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள். பின்னர் தவறை சுட்டிக்காட்டி திருத்தவேண்டும். திட்டினால் அடுத்தமுறை சொல்லமாட்டார்கள். மறைக்க நினைப்பார்கள். அதனால் அவர்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையாய் இருப்பதை பாராட்டி, அப்படியே தொடர அனுமதிக்கவேண்டும்.

    • குழந்தையின் நலனுக்காக பெற்றோர்கள் செய்யும் செயலே, தீங்கு விளைவிக்கக்கூடியதாக மாறுகிறது.
    • க்ரீம்கள், வாசனை திரவியங்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தாதீர்கள்!

    குழந்தைகளின் சருமம் பெரியவர்களைவிட மென்மையானதாகவும், மிருதுவானதாகவும், மிகவும் உணர்திறன் கொண்டதாகவும் இருக்கும். மாசு, வானிலை மாற்றங்கள், குழந்தையின் சருமத்திற்கு நல்லது என நினைத்து நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் (பாடி லோஷன்கள், க்ரீம்கள்) அவர்களின் சருமத்தை பாதிப்படைய செய்கிறது. குழந்தையின் நலனை எண்ணித்தான் பெற்றோர்கள் அப்படி செய்கிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளது. குழந்தையின் சருமத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய செயல்கள் என்னவென்று பார்ப்போம்.

    பெரியவர்களுக்கான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துதல்

    சிலர் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவார்கள். இது தவறான ஒன்று. பெரியவர்களுக்கென தயாரிக்கப்பட்ட பொருட்கள் கடுமையான ரசாயனங்கள், ஆல்கஹால், சல்பேட்டுகள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும். குழந்தைகளின் தோல் மெல்லியதாகவும், அதிக ஊடுருவக்கூடியதாகவும், எளிதில் எரிச்சலுக்கு உள்ளாகக் கூடியதாகவும் இருக்கும். இதனால் அந்தப் பொருட்கள் குழந்தைகளின் தோலை எளிதில் பாதிக்கும். அதனால் குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் தோல் பராமரிப்பு பொருட்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும். 

    குழந்தைகளை அதிக நேரம் சூரிய ஒளியில் படுமாறு வைத்திருப்பது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இது முன்கூட்டியே வயதாவது, தோல் புற்றுநோய் பாதிப்புகள் போன்ற அபாயங்களை ஏற்படுத்தும். மேகமூட்டமாக இருந்தாலும், குறைந்தபட்சம் SPF 30 சன்ஸ்கிரீனை பயன்படுத்தவும். குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மென்மையான, மணம் இல்லாத சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.

    அடிக்கடி குளிக்கவைத்தல்

    சுத்தம் முக்கியம் என்றாலும், குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டுவது அல்லது வெந்நீரை பயன்படுத்துவது குழந்தையின் சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெய் பசையை எடுத்துவிடும். இது வறட்சி, எரிச்சல், தோலழற்சி போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். குழந்தையின் உடல்நிலையை பொறுத்து வாரத்திற்கு சிலமுறை மட்டுமே வெந்நீரை பயன்படுத்தவேண்டும். வியர்வை மற்றும் அழுக்கு அதிகமானால் குழந்தைகளை தினமும் குளிக்கவைக்கலாம். ஆனால் வெந்நீர் அதிகம் பயன்படுத்தவேண்டாம்.

    மாய்ச்சுரைஸர்களை தவிர்த்தல்

    குழந்தைகளின் சருமம் இயற்கையாகவே மென்மையாக இருப்பதால், அவர்களுக்கு ஈரப்பதம் தேவையில்லை என நாம் நினைக்கிறோம். ஆனால் குளிர் மற்றும் வெயில் காலங்களில் அவர்களது சருமம் ஈரப்பதத்தை விரைவாக இழந்துவிடும். மாய்ச்சுரைஸர்களை தவிர்ப்பது சருமத்தை இன்னும் பலவீனப்படுத்தும். இதனால் வறட்சி, அரிப்பு, தோல் பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளுக்கென வடிவமைக்கப்பட்டுள்ள மென்மையான, ஒவ்வாமை ஏற்படுத்தாத மாய்ச்சுரைஸர்களை பயன்படுத்துவது நல்லது. குளித்த உடன், சருமம் சற்று ஈரமாக இருக்கும்போதே இதைப் பயன்படுத்துவது, ஈரப்பதத்தை எளிதில் சருமத்தில் தக்கவைக்கும். 


    வெந்நீரில் குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டக்கூடாது 

    தோல் நோய்களை புறக்கணித்தல்

    பெற்றோர்கள் சிலசமயம் குழந்தைகளின் தோலில் வரும் தடிப்புகள், திட்டுகளை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். அவை தானாகவே சரியாகிவிடும் என நம்புகிறார்கள். கீழேவிழுவது, விளையாடும்போது ஏற்படும் தடிப்புகள், காயங்கள் நாளடைவில் தானாக குணமடைந்துவிடும் என்றாலும், மற்ற தோல் பிரச்சனைகள் மீதும் கவனம் செலுத்தவேண்டும்.

    வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தல்

    வாசனை திரவியங்கள் மற்றும் அதிகம் வாசம் தரும் குளியல் சோப்புகள் பயன்படுத்துவதற்கும், நுகர்வதற்கும் நன்றாக இருக்கும். ஆனால் அவை அனைத்தும் குழந்தைகளுக்கு தோல்நோய்களை ஏற்படுத்தும். ஹைபோஅலர்கெனி பொருட்களையே பெற்றோர்கள் தேடவேண்டும். எளிமையான, வாசனையற்ற பொருட்கள் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு நோய் அபாயங்களை குறைக்கின்றன.

    மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து தராதீர்கள்

    குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது அரிப்பு, காயம் அல்லது ஏதேனும் உடல் பிரச்சனைகள் என்றால் உடனே மருத்துவரிடம் செல்லாமல், தாங்களாகவே கடைகளில் கிடைக்கும் (OTC) க்ரீம்கள், மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது தவறு. சில க்ரீம்கள், குறிப்பாக ஸ்டீராய்டுகள் கொண்டவை தவறாக பயன்படுத்தப்பட்டால் சருமத்திற்கு தீங்குவிளைவிக்கும். குழந்தைகளின் சருமத்தை பராமரிப்பதற்கு பொறுமை, விழிப்புணர்வு உள்ளிட்டவை அவசியம்.

    • குழந்தைகள், முதல் சிரிப்பை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும்.
    • பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது.

    ஒரு உடலுக்குள் ஒரு உயிர் கருவாகி உருவாகி பூமியில் பிறத்தல் என்பது இறைவன் படைப்பில் ஆச்சர்ய விஷயங்களில் ஒன்று. அந்தவகையில் பிறந்த குழந்தைகள் பற்றி நாம் பலரும் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்கள் குறித்து பார்ப்போம். 

    குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுவதில்லை...

    உலகிற்கு வரும்போதே குழந்தை அழுதுகொண்டேதான் வருகிறது. அப்படி பிறக்கும்போது குழந்தை அழவில்லை என்றால், அதனை அழவைக்க மருத்துவர்கள் சில உத்திகளை பயன்படுத்துவர். குழந்தை அழுதால்தான் தாயிடம் கொடுப்பர். இதில் ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது. இதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிறந்த குழந்தைகளுக்கு அவர்களது கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைய சில வாரங்கள் ஆகும். அதற்கு பின்தான் குழந்தைகள் கண்ணீர்விட்டு அழுவார்கள். 

    300 எலும்புகளுடன் பிறக்கின்றனர்

    பொதுவாக மனிதர்களுக்கு 206 எலும்புகள்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் உடலில் 300 எலும்புகள் இருக்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். அப்போது மீதமுள்ள 94 எலும்புகள் எங்கு செல்லும் என நாம் யோசிப்போம். குழந்தைகளின் எலும்புகள் பல குறுத்தெலும்புகளால் ஆனவை. இவை வளரும்போது ஒன்றாக இணைகின்றன. காலப்போக்கில் குறுத்தெலும்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பெரியவர்களில் காணப்படும் எலும்பு அமைப்பை உருவாக்குகின்றன. 

    10,000 சுவை மொட்டுகள்

    புதிதாக பிறக்கும் குழந்தைகள் சுமார் 10 ஆயிரம் சுவை மொட்டுகளுடன் பிறக்கின்றன. சுவை மொட்டுகள் என்பது நாக்கில் உள்ள சுவை உணர்திறன் கொண்ட செல்களாகும். இவை சுவையை உணர உதவுகின்றன. இந்த எண்ணிக்கை பெரியவர்களுக்கு இருப்பதைவிட பலமடங்கு அதிகம். இந்த மொட்டுகள் அவர்களின் நாக்கில் மட்டுமல்ல, கன்னங்களின் உட்புறத்திலும், வாயின் மேற்புறத்திலும், தொண்டையிலும் உள்ளன. இவை குழந்தைகளுக்கு இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்ற சுவை உணர்வுகளை வேறுபடுத்தி அறிய உதவுகின்றன. அதனால்தான் குழந்தைகளுக்கு தேன் அல்லது புதிதாக சில பொருட்களை கொடுக்கும்போது அவ்வளவு பாவனைகளை முகத்தில் காட்டுவர். குழந்தைகள் வளர வளர இந்த சுவை மொட்டுகளின் எண்ணிக்கை குறைந்து நம்மை போலவே சுவைதிறனை கொண்டிருப்பர்.


    குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த 6-8 வாரங்கள் ஆகும்

    வலது பக்கம் தலைசாய்க்க விரும்புவார்கள்

    பிறந்த குழந்தைகளை படுக்க வைக்கும்போது அவர்கள் பெரும்பாலும் கழுத்தை வலதுபக்கம் வைத்து தூங்கவே விரும்புவர். இதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? சுமார் 70-80% குழந்தைகள் இதைத்தான் செய்கிறார்கள். 2017ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இது அவர்களின் மூளை வளர்ச்சி மற்றும் இயக்க ஒருங்கிணைப்புடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.

    புன்னகைக்காக காத்திருக்க வைப்பர்

    பிறந்த குழந்தைகள் அதிகம் அழுதுதான் பார்த்திருப்போம். அவர்கள் முதல் வாரத்திலேயே சிரித்து யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும். அதற்கு முன்னர் நீங்கள் பார்த்திருக்கும் முக அசைவுகள் அல்லது சிரிப்பு அனிச்சையானவை. அவர்களாக செய்திருக்க மாட்டார்கள். உங்கள் குரலை உணர தொடங்கும்போது உங்களுக்கு புன்னகையை பரிசாக அளிப்பார்கள். இதற்கு குறைந்தது 6 வாரங்கள் எடுக்கும்.

    • குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் குறைந்த திறனை கொண்டது.
    • குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது காற்றை விழுங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    பிறந்தது முதல் தவழும்வரை குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை அடிக்கடி எதுக்களிப்பது, சாப்பிட்ட உடன் வாந்தி எடுப்பது. இது நோய் அல்ல. ஆனால் உணவு உடனேயே வெளியேவந்தால், போதுமான அளவு வயிறு நிறையாது. சத்தும் கிடைக்காது. பிறந்த குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் மென்மையாக இருக்கும். மேலும் அவர்களின் வயிற்றில் உள்ள வால்வுகள் இணக்கமாக வேலை செய்யாது. இதன் விளைவாக, தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகள் காற்றை எளிதில் விழுங்கலாம். இந்த அதிகப்படியான காற்று அசௌகரியத்தை ஏற்படுத்தி, உணவளித்த பிறகு எச்சில் ஊறவும், வாந்தி எடுக்கவும் வழிவகுக்கும். குழந்தைகள் சாப்பிட்ட உடனேயே அதனை வெளியே உமிழாமல் இருக்க தாய்மார்கள் தங்கள் தாய்ப்பால் கொடுக்கும் நுட்பங்களை கொஞ்சம் மாற்றினாலே அவற்றை தடுக்கலாம். 

    கொஞ்சம் கொஞ்சமாக...

    குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் குறைந்த திறனை கொண்டது. இதனால் குழந்தைக்கு ஒரே நேரத்தில் அதிகமாக உணவளிக்காமல், நேர இடைவெளி எடுத்து கொடுக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் குறைந்த அளவு பால் கொடுக்க வேண்டும். இது விரைவாகவும், எளிதிலும் ஜீரணமாக உதவும். 

    தாய்ப்பால் கொடுத்த உடன் படுக்க வைக்கக்கூடாது

    பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது காற்றை விழுங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் பால் கொடுத்தவுடன் உடனேயே குழந்தையை படுக்கவைக்கக்கூடாது. கொஞ்சநேரம் தோளில் வைத்துக்கொண்டு, பின்னர் படுக்கவைக்கலாம். குழந்தையை உடனடியாக படுக்க வைத்தால், எச்சில் ஊறவும், வாந்தி எடுக்கவும் அதிக வாய்ப்புள்ளது.  

    அளவு

    நாம் குழந்தைகளுக்கு எந்த அளவு பால் அல்லது உணவுக் கொடுக்கிறோம் என்பது மிக முக்கியம். பால் கொடுத்த கொஞ்ச நேரத்திலேயே குழந்தை அழுதால், பசிக்கிறது என்று மீண்டும் பால் கொடுப்பார்கள். அப்போது வயிற்றில் இடம்கொள்ளாமல் உணவு மேலே எகித்து கொண்டுவரும். அதுபோல குழந்தைகளை வேகமாக பால்குடிக்க விடக்கூடாது. புரை ஏறிவிடும். இதனால் குடித்த மொத்த பாலும் வெளியே வந்துவிடும். குழந்தையை மெதுவாக மட்டுமே பால் குடிக்க பழக்க வேண்டும். அதேபோல் ஒரேநேரத்தில் அதிகமாக பால் கொடுக்கக்கூடாது.


    குழந்தைகளுக்கு ஒரேநேரத்தில் அதிகமாக பால் கொடுக்கக்கூடாது

    சிகரெட் புகையை தவிர்க்க வேண்டும்

    சிகரெட் புகை குழந்தைகளின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். சிகரெட் புகையை குழந்தை சுவாசித்தால், வயிற்றில் அதிக அமிலம் உற்பத்தியாக வழிவகுக்கும். இதனால் குழந்தைக்கு அருகில் யாரேனும் புகைபிடித்தால் அவர்களை தள்ளி செல்ல சொல்லுங்கள். அல்லது குழந்தையை வேறு இடத்திற்கு மாற்றுங்கள். 

    கால்சியம் குறைபாடு

    தூக்கத்தில் சிரமம் அல்லது இருமல், அடிக்கடி எச்சில் துப்புதல், வாந்தி எடுத்தல் போன்றவை குழந்தைக்கு கால்சியம் குறைபாடு இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இதனால் கால்சியம் உள்ள உணவுப்பொருட்களை குழந்தைக்கு வழங்கலாம்.

    • குழந்தையின் கனவில் நரி வந்து விளையாட்டு காட்டுமா?
    • அனிச்சை போன்றது! வலிப்புத் தாக்கத்தால் கூட குழந்தை சிரிக்கக்கூடும்?

    குழந்தை சிரிப்பை பார்த்தாலே நம் மனதில் ஒரு புன்னகை எழும். குழந்தைகள் சிரிக்கும்போது நாமும் அவர்களோடு சேர்ந்து புன்னகைப்போம். அவர்களின் சிரிப்பை ரசிப்போம். குழந்தை விழித்திருக்கும்போது சிரிப்பது சரிதான். ஆனால் தூங்கும்போதும் சிலநேரங்களில் சிரிப்பார்கள். இதனை பலரும் கவனித்திருப்போம். அந்தப் புன்னகையின் அர்த்தம் என்ன? தூங்கும்போது குழந்தை சிரிப்பதற்கான காரணம் என்னவென பலரும் யோசித்திருப்போம். அதற்கு பலரும் நரி கனவில் வந்து விளையாட்டு காட்டும் எனக்கூறுவார்கள். ஆனால் அதற்கான உண்மையான காரணத்தைத்தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

    மூன்று தூக்க நிலைகள்...

    பெரியவர்கள், கனவில் நேர்மறையான விஷயங்கள் நடந்தால் சிரிப்பார்களாம். ஆனால் குழந்தை விஷயத்தில் அது உண்மையா என தெரியவில்லை. இதற்கான ஆராய்ச்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. குழந்தையின் வயது, தூக்கத்தின் நிலையை பொறுத்து அவர்கள் சிரிப்பதற்கான காரணங்கள் மாறுபடும் எனக் கூறப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தூக்க சுழற்சியில் மூன்று நிலைகள் உள்ளனவாம். அமைதியான தூக்கம், நிச்சயமற்ற தூக்கம் மற்றும் சுறுசுறுப்பான தூக்கம். சுறுசுறுப்பான தூக்கம் என்பது பெரியவர்களில் காணப்படும் விரைவான கண் அசைவு (REM) தூக்க நிலையைப் போன்றது. விரைவான கண் அசைவு தூக்கநிலையில் தூங்குபவர் தெளிவாக கனவு காணும் போக்கைக் கொண்டுள்ளனர்.

    ஆனால் சுறுசுறுப்பான தூக்கத்திற்கும், REM தூக்கத்திற்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், சுறுசுறுப்பான தூக்கத்தின் போது குழந்தைகள் முடங்கிப் போவதில்லை. சுறுசுறுப்பான தூக்கத்தில் இருக்கும்போது, ஒரு குழந்தை நடுங்கலாம், உறிஞ்சும் அசைவுகளைச் செய்யலாம், கைகால்களை அசைக்கலாம், புன்னகைக்கலாம் அல்லது முகம் சுளிக்கலாம். தூக்கத்தின் போது குழந்தை சிரிப்பது அனிச்சை போன்றது என்று பழைய ஆராய்ச்சிகள் விவரித்துள்ளன. தூக்கத்தின்போது ஏற்படும் தன்னிச்சையான புன்னகைகள், புன்னகைக்கப் பயன்படுத்தப்படும் தசைகளை வளர்க்க உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 


    குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க வலிப்புத் தாக்கமும் முக்கிய காரணமாக இருக்கலாம்

    வலிப்புத் தாக்கம்...

    பொதுவாக, ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கத்தால் (சிரிக்கும் வலிப்புத் தாக்கம்) ஒரு குழந்தை சிரிக்கக்கூடும். ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கம் என்பது ஒரு வகை வலிப்புத் தாக்கமாகும். இது திடீரென சிரிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தூங்கும் தருவாயில் இருக்கும்போது ஜெலாஸ்டிக் வலிப்பு ஏற்படலாம். தூக்கத்தின் போது ஜெலாஸ்டிக் வலிப்பு ஏற்பட்டால், குழந்தை விழித்தெழுந்து, வலிப்பு முடிந்ததும் மீண்டும் தூங்கச் செல்லலாம். ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கங்கள் 10 அல்லது 20 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். மேலும் அவை முகம் சுருங்குதல், முணுமுணுத்தல் அல்லது உதடுகளை அசைத்தல் போன்ற பிற அறிகுறிகளுடன் ஏற்படலாம். பொதுவாக, புதிதாகப் பிறந்த குழந்தையின் முகபாவனைகள், ஒரு பெரியவரின் முகபாவனைகளைப் போல் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது, எல்லா உணர்ச்சிகளையும் ஒரு மனிதன் வெளிக்காட்டமாட்டான். சில சூழல்களை புன்னகையுடன் கடப்பான். அதுபோல சில நேரங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உண்மையில் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கும்போதும் கூட சிரிப்பார்களாம். 1 வயதான குழந்தைகளிலும் கூட சிரிப்பு என்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கான வெளிப்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. 2 மாதம்வரை குழந்தைகள் தங்கள் முழு புன்னகையை வெளிப்படுத்தமாட்டார்கள். குழந்தைகள் நேரடியாக ஒருவரைப் பார்க்காமலேயே புன்னகைப்பார்கள். இது சாதரணமானது. ஆனால் குழந்தையுடன் அதிகம் இருப்பவர்கள் அதாவது அவர்களின் பெற்றோர்களோ அல்லது பராமரிப்பாளர்களோ அல்லது அவர்களை கவனித்து கொள்பவர்களோ சோகமாகவோ அல்லது மனசோர்வுடனோ இருந்தால் குழந்தைகள் குறைவாகவே சிரிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இதனால் முடிந்தவரை குழந்தை பராமரிப்பாளர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். 

    ×