என் மலர்
நீங்கள் தேடியது "healthcare"
- குழந்தைகள், முதல் சிரிப்பை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும்.
- பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது.
ஒரு உடலுக்குள் ஒரு உயிர் கருவாகி உருவாகி பூமியில் பிறத்தல் என்பது இறைவன் படைப்பில் ஆச்சர்ய விஷயங்களில் ஒன்று. அந்தவகையில் பிறந்த குழந்தைகள் பற்றி நாம் பலரும் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்கள் குறித்து பார்ப்போம்.
குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுவதில்லை...
உலகிற்கு வரும்போதே குழந்தை அழுதுகொண்டேதான் வருகிறது. அப்படி பிறக்கும்போது குழந்தை அழவில்லை என்றால், அதனை அழவைக்க மருத்துவர்கள் சில உத்திகளை பயன்படுத்துவர். குழந்தை அழுதால்தான் தாயிடம் கொடுப்பர். இதில் ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது. இதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிறந்த குழந்தைகளுக்கு அவர்களது கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைய சில வாரங்கள் ஆகும். அதற்கு பின்தான் குழந்தைகள் கண்ணீர்விட்டு அழுவார்கள்.
300 எலும்புகளுடன் பிறக்கின்றனர்
பொதுவாக மனிதர்களுக்கு 206 எலும்புகள்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் உடலில் 300 எலும்புகள் இருக்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். அப்போது மீதமுள்ள 94 எலும்புகள் எங்கு செல்லும் என நாம் யோசிப்போம். குழந்தைகளின் எலும்புகள் பல குறுத்தெலும்புகளால் ஆனவை. இவை வளரும்போது ஒன்றாக இணைகின்றன. காலப்போக்கில் குறுத்தெலும்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பெரியவர்களில் காணப்படும் எலும்பு அமைப்பை உருவாக்குகின்றன.
10,000 சுவை மொட்டுகள்
புதிதாக பிறக்கும் குழந்தைகள் சுமார் 10 ஆயிரம் சுவை மொட்டுகளுடன் பிறக்கின்றன. சுவை மொட்டுகள் என்பது நாக்கில் உள்ள சுவை உணர்திறன் கொண்ட செல்களாகும். இவை சுவையை உணர உதவுகின்றன. இந்த எண்ணிக்கை பெரியவர்களுக்கு இருப்பதைவிட பலமடங்கு அதிகம். இந்த மொட்டுகள் அவர்களின் நாக்கில் மட்டுமல்ல, கன்னங்களின் உட்புறத்திலும், வாயின் மேற்புறத்திலும், தொண்டையிலும் உள்ளன. இவை குழந்தைகளுக்கு இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்ற சுவை உணர்வுகளை வேறுபடுத்தி அறிய உதவுகின்றன. அதனால்தான் குழந்தைகளுக்கு தேன் அல்லது புதிதாக சில பொருட்களை கொடுக்கும்போது அவ்வளவு பாவனைகளை முகத்தில் காட்டுவர். குழந்தைகள் வளர வளர இந்த சுவை மொட்டுகளின் எண்ணிக்கை குறைந்து நம்மை போலவே சுவைதிறனை கொண்டிருப்பர்.

குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த 6-8 வாரங்கள் ஆகும்
வலது பக்கம் தலைசாய்க்க விரும்புவார்கள்
பிறந்த குழந்தைகளை படுக்க வைக்கும்போது அவர்கள் பெரும்பாலும் கழுத்தை வலதுபக்கம் வைத்து தூங்கவே விரும்புவர். இதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? சுமார் 70-80% குழந்தைகள் இதைத்தான் செய்கிறார்கள். 2017ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இது அவர்களின் மூளை வளர்ச்சி மற்றும் இயக்க ஒருங்கிணைப்புடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.
புன்னகைக்காக காத்திருக்க வைப்பர்
பிறந்த குழந்தைகள் அதிகம் அழுதுதான் பார்த்திருப்போம். அவர்கள் முதல் வாரத்திலேயே சிரித்து யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும். அதற்கு முன்னர் நீங்கள் பார்த்திருக்கும் முக அசைவுகள் அல்லது சிரிப்பு அனிச்சையானவை. அவர்களாக செய்திருக்க மாட்டார்கள். உங்கள் குரலை உணர தொடங்கும்போது உங்களுக்கு புன்னகையை பரிசாக அளிப்பார்கள். இதற்கு குறைந்தது 6 வாரங்கள் எடுக்கும்.
- ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துபவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதயநோய் அபாயம் குறைவாம்!
- ஆலிவ் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் எடை இழப்பிற்கு வழிவகுக்கும்.
ஆலிவ் எண்ணெய், சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது என நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இருந்தபோதிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தியிருக்க மாட்டோம். ஆனால் ஆலிவ் எண்ணெயின் முழு பலனையும் அறிந்தால் கண்டிப்பாக அதனை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிடுவோம். ஆலிவ் எண்ணெய்யின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு விரிவாக காண்போம்.
மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள்
இதயத்திற்கு நன்மை பயக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் (Monounsaturated Fats - MUFAs) ஆலிவ் எண்ணெயில் நிறைந்துள்ளது. மேலும் 13.8% நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. அதேசமயம் 10.5% பாலிஅன்சாச்சுரேட்டட் உள்ளது. அதாவது ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இருப்பினும் ஆலிவ் எண்ணெயின் முக்கிய கொழுப்பு அமிலம் ஒலிக் அமிலமாகும். நிறைவுறா கொழுப்பான ஒலிக் அமிலம் மொத்த எண்ணெய் உள்ளடக்கத்தில் 71% ஆகும். ஒலிக் அமிலம் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் புற்றுநோயுடன் தொடர்புடைய மரபணுக்களில் கூட நன்மை பயக்கும் பண்புகளை விளைவிக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஆக்ஸிஜனேற்றிகள்
1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயில் தினசரி மதிப்பில், 13% வைட்டமின் E-யும், 7% வைட்டமின் K-யும் உள்ளது. மேலும் பாலிஃபீனால்கள், வைட்டமின் E, ஸ்குவாலீன் போன்ற உயிரியல் ரீதியாக செயல்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்களும் நிறைந்துள்ளன. இவை இருதய மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைக்க உதவும். அவை வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதோடு, ரத்தக் கொழுப்பை ஆக்சிஜனேற்றத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
புற்றுநோய், இதய நோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, வகை 2 நீரிழிவு நோய், அல்சைமர், கீல்வாதம், உடல் பருமன் போன்ற நோய்களுக்கு அடிப்படை காரணம் நாள்பட்ட அழற்சி எனக் கண்டறியப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயில் உள்ள முக்கிய அழற்சி எதிர்ப்பு பண்புகள் இந்த நோய்களுக்கு எதிராகப் போராடுகிறது. ஆக்ஸிஜனேற்றிகள் உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, வீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இதில் முக்கியமானது ஓலியோகாந்தல் கலவை. இது இப்யூபுரூஃபன் (ibuprofen) போன்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் போலவே செயல்படுவதாகவும், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் ஒற்றைத் தலைவலியைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒலிக் அமிலம், சி-ரியாக்டிவ் புரதம் அழற்சிகளைக் குறைக்கின்றன.
பக்கவாதத்தை தடுக்க உதவும்
இரத்த உறைவு அல்லது இரத்தப்போக்கு காரணமாக மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, மரணம் ஏற்படுவதற்கு இரண்டாவது முக்கிய காரணமாக பக்கவாதம் உள்ளது. 2014ஆம் ஆண்டு 841,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆலிவ் எண்ணெய் சாப்பிட்ட இவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதயநோய் அபாயம் குறைவாக இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. ஆனால் 2020ல் ஆலிவ் எண்ணெய் உட்கொள்ளலுக்கும், பக்கவாத ஆபாயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கண்டறியப்பட்டது.

புற்றுநோய் அபாயத்தை ஆலிவ் எண்ணெய் குறைக்கிறது
இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், மத்திய தரைக்கடல் நாடுகளில் இதய நோய் அபாயங்கள் குறைவாக இருந்தன. இது அந்நாடுகளின் உணவுமுறை பழக்கத்தை ஆய்வுசெய்ய வழிவகுத்தது. அப்போது அவர்கள் உணவில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் முக்கியப் பொருளாக இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் ஆலிவ் ஆயில் ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் கண்டறியப்பட்டது.
எடை இழப்பு
ஆலிவ் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் எடை இழப்பிற்கு வழிவகுக்கின்றன என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது. காரணம் இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (MUFA) பசியைக் கட்டுப்படுத்தவும், உடலில் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. இருப்பினும், எந்த உணவையும் அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் என்பதையும், ஆலிவ் எண்ணெய் விதிவிலக்கல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
அல்சைமர் நோயை எதிர்த்து போராடும்
அல்சமைர் நரம்புச்சிதைவு நிலைகளில் ஒன்றாகும். இது மறதி நோய்க்கும் வழிவகுக்கும். அல்சைமர் நோய்க்கு முக்கிய காரணம் மூளை செல்களுக்குள் பீட்டா-அமிலாய்டு (Beta-amyloid) பிளேக்குகள் குவிவதாகும். ஆலிவ் எண்ணெய் இந்த பீட்டா- அமிலாய்டு சுரப்பிகளை தடுக்கும் என்றும், அல்சைமர் நோய் மற்றும் அறிவாற்றல் குறைபாட்டை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
வகை 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்
ஆலிவ் எண்ணெய் வகை 2 நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது புற்றுநோய்க்கு முக்கிய காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைக் குறைக்க உதவும். அதுபோல ஆலிவ் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் CRP (சி-ரியாக்டிவ் புரதம்) அளவைக் குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஹெலிகோபாக்டர் பைலோரி (எச். பைலோரி) பாக்டீரியாவுக்கு எதிராக போராடக்கூடிய பண்பு ஆலிவ் எண்ணெயில் உள்ளது.
- சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, சருமத்தின் pH அளவையும் பராமரிக்க தக்காளி உதவும்.
- ஒவ்வாமை இருந்தால் அல்லது முகத்தில் ஏதேனும் காயம் இருந்தால் தக்காளி பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும்.
சமையலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பயன்படுகிறது தக்காளி. உங்களின் செயற்கை அழகு சாதனப் பொருட்களை தள்ளிவைத்துவிட்டு தக்காளியை போட்டாலே போதும். சரும அழகை மெருகூட்டலாம். தக்காளி சருமத்திற்கு எப்படி நன்மை பயக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
இறந்த செல்களை நீக்கும்...
தக்காளியை தொடர்ந்து முகத்தில் தடவினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும். தக்காளியில் இயற்கையான நொதிகள் உள்ளன. அவை சருமத்தை உரிப்பதற்கு (exfoliating) உதவுகின்றன. இந்த நொதிகள் இறந்த சரும செல்களை நீக்கி, சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகின்றன. தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்றவற்றில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. இது சரும செல்களில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து இறந்த செல்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
முகப்பரு
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளன. மேலும், இது அமிலத்தன்மை கொண்டது. இது உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, சருமத்தின் pH அளவையும் பராமரிக்க உதவுகிறது. முகப்பரு பாதிப்புள்ள சருமத்தில் தக்காளியைத் தொடர்ந்து தடவுவது, அதன் இயற்கையான பண்புகளால் முகப்பரு வெடிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும்.
எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது
தக்காளியில் சாலிசிலிக் அமிலம் நிறைந்துள்ளதால் அது சருமத்தில் எண்ணெய் பசை உருவாவதை தடுக்கிறது. தக்காளியை இரண்டாக வெட்டி, அந்தத் துண்டை முகத்தில் தேய்த்து, 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் பச்சை தண்ணீரில் முகத்தை கழுவவும். எண்ணெய் பசை இல்லாத மென்மையான சருமத்திற்கு இதை தொடர்ந்து செய்யுங்கள். வாரத்திற்கு மூன்று முறை பச்சை தக்காளியை முகத்தில் தேய்க்கலாம்.
வெயில் பாதிப்பு
சூரியனின் புறஊதா கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்துவதிலும், முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்குவதிலும் தக்காளி சிறந்தது. சருமத்தின் பழுப்பு நிறத்தை நீக்கவும் உதவுகிறது.

தக்காளியை தேன், மஞ்சள், சர்க்கரையுடனும் பயன்படுத்தலாம்
சருமத்தை ஆற்றும்
சருமத்திற்கு அவசியமான பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை தக்காளியில் உள்ளன. இது தோல் அழற்சியை தணிக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள அழற்சி எதிர்ப்பு கலவை எரிச்சலூட்டும் சருமத்திற்கு நல்லது.
வயதான அறிகுறியைக் குறைக்கும் தக்காளி
சுற்றுசூழல் மாசு, நமது உணவுமுறைகள், நாம் பயன்படுத்தும் செயற்கை அழகு சாதனப்பொருட்கள் இளமையிலேயே சருமத்திற்கு வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இதை சரிசெய்ய தக்காளி மிகவும் உதவியாக இருக்கும். வயதானதற்கான பொதுவான அறிகுறிகளில் கருவளையங்கள், சுருக்கங்கள், புள்ளிகள் போன்றவை அடங்கும். தக்காளியில் உள்ள வைட்டமின் டி இவற்றை குறைக்க உதவுகிறது.
விளைவுகள்
தக்காளி சருமத்திற்கு நல்லது என்றாலும், சிலருக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம். உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அல்லது முகத்தில் ஏதேனும் காயம் இருந்தால் தக்காளி பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும். தக்காளி அமிலத்தன்மை கொண்டது, எனவே அதிகமாக தக்காளி உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். தக்காளியை முகத்தில் தடவும்போது எரிச்சல் ஏற்பட்டால் தடவுவதை நிறுத்துங்கள். தக்காளியைப் பயன்படுத்திய பிறகு முகம் சிவத்தல், அரித்தல் அல்லது தோல் எரிச்சல் ஏற்பட்டால், பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
- குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் குறைந்த திறனை கொண்டது.
- குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது காற்றை விழுங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பிறந்தது முதல் தவழும்வரை குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை அடிக்கடி எதுக்களிப்பது, சாப்பிட்ட உடன் வாந்தி எடுப்பது. இது நோய் அல்ல. ஆனால் உணவு உடனேயே வெளியேவந்தால், போதுமான அளவு வயிறு நிறையாது. சத்தும் கிடைக்காது. பிறந்த குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் மென்மையாக இருக்கும். மேலும் அவர்களின் வயிற்றில் உள்ள வால்வுகள் இணக்கமாக வேலை செய்யாது. இதன் விளைவாக, தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகள் காற்றை எளிதில் விழுங்கலாம். இந்த அதிகப்படியான காற்று அசௌகரியத்தை ஏற்படுத்தி, உணவளித்த பிறகு எச்சில் ஊறவும், வாந்தி எடுக்கவும் வழிவகுக்கும். குழந்தைகள் சாப்பிட்ட உடனேயே அதனை வெளியே உமிழாமல் இருக்க தாய்மார்கள் தங்கள் தாய்ப்பால் கொடுக்கும் நுட்பங்களை கொஞ்சம் மாற்றினாலே அவற்றை தடுக்கலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக...
குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் குறைந்த திறனை கொண்டது. இதனால் குழந்தைக்கு ஒரே நேரத்தில் அதிகமாக உணவளிக்காமல், நேர இடைவெளி எடுத்து கொடுக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் குறைந்த அளவு பால் கொடுக்க வேண்டும். இது விரைவாகவும், எளிதிலும் ஜீரணமாக உதவும்.
தாய்ப்பால் கொடுத்த உடன் படுக்க வைக்கக்கூடாது
பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது காற்றை விழுங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் பால் கொடுத்தவுடன் உடனேயே குழந்தையை படுக்கவைக்கக்கூடாது. கொஞ்சநேரம் தோளில் வைத்துக்கொண்டு, பின்னர் படுக்கவைக்கலாம். குழந்தையை உடனடியாக படுக்க வைத்தால், எச்சில் ஊறவும், வாந்தி எடுக்கவும் அதிக வாய்ப்புள்ளது.
அளவு
நாம் குழந்தைகளுக்கு எந்த அளவு பால் அல்லது உணவுக் கொடுக்கிறோம் என்பது மிக முக்கியம். பால் கொடுத்த கொஞ்ச நேரத்திலேயே குழந்தை அழுதால், பசிக்கிறது என்று மீண்டும் பால் கொடுப்பார்கள். அப்போது வயிற்றில் இடம்கொள்ளாமல் உணவு மேலே எகித்து கொண்டுவரும். அதுபோல குழந்தைகளை வேகமாக பால்குடிக்க விடக்கூடாது. புரை ஏறிவிடும். இதனால் குடித்த மொத்த பாலும் வெளியே வந்துவிடும். குழந்தையை மெதுவாக மட்டுமே பால் குடிக்க பழக்க வேண்டும். அதேபோல் ஒரேநேரத்தில் அதிகமாக பால் கொடுக்கக்கூடாது.

குழந்தைகளுக்கு ஒரேநேரத்தில் அதிகமாக பால் கொடுக்கக்கூடாது
சிகரெட் புகையை தவிர்க்க வேண்டும்
சிகரெட் புகை குழந்தைகளின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். சிகரெட் புகையை குழந்தை சுவாசித்தால், வயிற்றில் அதிக அமிலம் உற்பத்தியாக வழிவகுக்கும். இதனால் குழந்தைக்கு அருகில் யாரேனும் புகைபிடித்தால் அவர்களை தள்ளி செல்ல சொல்லுங்கள். அல்லது குழந்தையை வேறு இடத்திற்கு மாற்றுங்கள்.
கால்சியம் குறைபாடு
தூக்கத்தில் சிரமம் அல்லது இருமல், அடிக்கடி எச்சில் துப்புதல், வாந்தி எடுத்தல் போன்றவை குழந்தைக்கு கால்சியம் குறைபாடு இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இதனால் கால்சியம் உள்ள உணவுப்பொருட்களை குழந்தைக்கு வழங்கலாம்.
- ஆரம்ப நிலை சர்க்கரை நோயை, யோகா 100% குணமாகும்!
- விடியற்காலை 3-4.30 வரை யோகா பயற்சி செய்வது சிறந்த பலனை தரும்.
உண்மையில் யோகா என்றால் என்ன? தியானம் செய்தால் நமது மனம் மற்றும் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியுமா? உடல்நலப் பிரச்சனைகள் சரியாகுமா? உள்ளிட்ட நம்மிடையே இருக்கும் சில பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளார் யோகா பேராசிரியர் சந்துரு.
யோகம் என்றால் என்ன? யோகா என்றால் என்ன?
யோகம் என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்தது. ஜோதிடத்தில் நிறைய யோகங்கள் உள்ளன. யோக கலைகளில் யோகம் என்றால் ஒன்றிணைதல் என்று பொருள். கலப்பிடுதல், ஒன்றோடு ஒன்று இணைவது எனக்கூறலாம். பரமாத்மாவோடு, ஜீவாத்மா ஒன்றிணைதல்தான் யோகா. அதற்காக செய்யக்கூடிய பயிற்சிகள்தான் யோக பயிற்சிகள். யோகா, உடல்நலம், மனநலத்தை நன்றாக வைத்துக்கொள்ளும். ஆத்ம பலம் கொடுக்கும். ஆனால் அதனுடைய இறுதி, இறைநிலையோடு இணைவதுதான். நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்வோம்.
யோகா பக்தியுடன் தொடர்புடையதா?
யோகா பக்தியுடன் தொடர்புடையதுதான் என்று முழுமையாக சொல்லமுடியாது. இறைநிலை, யோகம் என்பதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சரியை, கிரியை, யோகம், ஞானம் என சொல்லப்படுவதுண்டு. புறவழிப்பாடு, அகவழிப்பாடு, அகத்துள்ளேயே வழிபாடு என சொல்லப்படுகிறது. இவ்வாறு படிநிலைகள் பல உள்ளன. படிநிலைகள் பலவாக இருந்தாலும், முதல்படி பக்தி. உச்சப்படி ஞானம். இன்று யோகாவில் பெரியநிலைக்கு சென்றவர்கள் பக்திநிலையை மறைக்கிறார்கள். ஒருசிலர் பக்தியில் இருந்து வந்ததுதானே எனக் கூறுகிறார்கள்.
யோகாவிற்கு குருமார்கள் அவசியமா?
உலகில் இருக்கும் அனைத்து வித்தைகளுக்கும் குரு என்பவர் வேண்டும். குருவிடம் கற்றப்பிறகு நீங்கள் தனியாக செய்யலாம். ஆரம்பத்தில் குருவேண்டும்.
மனதை யோகாவால் கட்டுப்படுத்த முடியுமா?
எடுத்தவுடனேயே மனதை கட்டுப்படுத்த முடியாது. அலையும் எண்ணங்களை நிச்சயம் கட்டுப்படுத்த முடியாது. மன அலைச்சுழலை குறைக்கமுடியும். முறையான நீண்ட கால பயிற்சிக்குப்பின் மனதை கட்டுப்படுத்தலாம்.
உடல்நலத்திற்கு யோகா எந்தவிதத்தில் பயனளிக்கிறது?
சில ஆசனங்களை செய்ய வேண்டும். சிசுபால ஆசனம், பட்டர்ஃப்ளை ஆசனம் அவற்றில் முக்கியமானவை. இந்த இரண்டு ஆசனங்களையும் தினசரி செய்துவந்தால், முதுகு தண்டுவடம் நன்றாக இருக்கும். ஸ்ரீ ரவிசங்கரால் உருவாக்கப்பட்ட சுதர்சன கிரியா மூச்சுப் பயிற்சியை தினமும் மேற்கொள்ளலாம். உடலுக்கு நல்லது. இதனை எல்லோரும் செய்யலாம்.
எந்தவிதமான நோய்களை யோகா தடுக்கும்?
சிறுவயதில் இருந்தே ஒருவர் முறையாக யோகா செய்தால் எந்த நோயும் அவருக்கு வரவே வராது. மரணத்தையே வெல்லலாம் என சொல்கிறார்கள். சர்க்கரை, மன அழுத்தம் இருப்பவர்கள் யோகா செய்தால், அவை 100% குணமாகும். ஒருவேளை நோய் முற்றி இருந்தால், யோகா பயிற்சியின் மூலம் அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கு என்று உள்ள பயிற்சிகளை செய்தால், கண்ணாடியே போடவேண்டாம். ஆனால் அதனை தினமும் செய்யவேண்டும். உடற்பயிற்சியில் கண்பயிற்சிக்கென இரண்டு நிமிடங்களை ஒதுக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் செய்தாலே கண்ணாடி போட்டிருக்கும் அனைவரும் கண்ணாடியை எடுத்துவிடலாம். அதுபோல உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை இருக்கும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தவும், நோயின் தாக்கத்தை குறைக்கவும் யோகாவில் பயிற்சிகள் உள்ளன.
காலை வேளையில்தான் யோகா செய்ய வேண்டுமா?
யோகா, காலையில்தான் செய்யவேண்டும். அதுதான் சிறப்பு. உடற்பயிற்சி காலையில் செய்யவேண்டும். தியானம் விடியற்காலையில் செய்யவேண்டும். அனைவரும் 4.30 - 6 பிரம்மமுகூர்த்தம் சிறந்தது எனக் கூறுவார்கள். ஆனால் அதைவிட சிறந்தது 03 - 4.30 ரிஷிமுகூர்த்தம். அது அமைதியான நேரம். பெரும்பாலும் யாரும் அந்த நேரத்திற்கு எழுந்திருக்க மாட்டார்கள். 8 கோடி பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்றால், அதில் 8 லட்சம் பேர்தான் எழுந்திருப்பார்கள். அந்த நேரத்தில் எழுந்து, கண்ணைமூடி அமர்ந்து, குருமார்கள் எந்த தியானத்தை சொல்லிக் கொடுத்தார்களோ அதை செய்யவேண்டும். ஆரம்பத்தில் அரைமணிநேரம் செய்தாலும், மூன்று, நான்கு வருடங்களுக்கு பிறகு 1 மணிநேரம் தியானம் செய்யவேண்டும். தியானம், உடற்பயிற்சியை ஒரு 6 மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால், நமக்குள்ளே ஒரு உள்ளுணர்வு தோன்றும். நீங்கள் யாரிடமும் எதையும் கேட்கவேண்டிய அவசியமே வராது. தெளிந்த மனநிலை இருக்கும். தெளிவான சிந்தனை இருக்கும். ஒருவரை பார்த்தாலே அவரை எடைபோடும் தன்மை நமக்கு வந்துவிடும். தியானத்திற்கு அவ்வளவு சக்தி உள்ளது. ஆனால் அந்த அளவிற்கு யாரும் தியானம் செய்வதில்லை.
- எல்லா மார்புவலியும் மாரடைப்பு வலி அல்ல.
- இதயத்தை மிகவும் பாதிக்கக்கூடிய காரணிகளில் முதன்மையானது மனஅழுத்தம்
இதயத்தை எப்படிப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அறிவதற்கு ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 29-ம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நீங்கள்நீண்ட நாட்கள் வாழ, இதய நோயால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து விலகி இருக்க இப்பகுதி உங்களுக்கு வழிகாட்டும்.
முதலில் நம் இதயத்தின் இயல்பு பற்றிப் புரிந்து கொள்வோமா? இதயம் ஒரு முறை துடித்து விரிவடைவதற்கு 8 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. முதல் 5 நொடிகளுக்கு விரிவடைந்து தூய்மையாக்கப்பெற்ற இரத்தத்தை நுரையீரலில் இருந்து இடப்பக்க அறைகளில் பெறுகிறது. அதேநேரத்தில் கெட்ட இரத்தம் உடலின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வலப்பக்க அறைகளில் பெறப்படுகிறது. அடுத்த 3 நொடிகளுக்கு இதயம் சுருங்கும்போது கெட்ட இரத்தம் தூய்மையாக்கப்படுவதற்கு நுரையீரலுக்கும், தூய இரத்தம் உடல் முழுவதற்கும் தமனிகள் வாயிலாக எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி ஓய்வில்லாமல் பிறப்பு முதல், நம் இறப்பு வரை வேலை செய்கிறது நம் இதயம்.
நிறைய நோயாளிகள் இடது தோள்பட்டை வலி வந்தாலோ இடது கை வலித்தாலோ மாரடைப்பு வந்துவிட்டதோ? என்று பயப்படுகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் மார்புவலி என்பது எல்லோருக்கும் இயல்பாக ஏற்படக் கூடிய ஒன்றாகி விட்டது. மார்புவலி ஏற்படுவதற்குப் பலதரபபட்ட காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் மாரடைப்பு (ஹார்ட்அட்டாக்). இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எல்லா மார்புவலியும் மாரடைப்பு வலி அல்ல. மார்பு வலி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
மார்புவலி ஏற்படுவதற்கான காரணங்கள்
மன அழுத்தம், நிறைய நேரங்களில் நம்மனதில் ஏற்பட்டகாயங்கள், கவலைகள், பதற்றம் மற்றும் பிற மனநலச் சிக்கல்களால் கூட இந்த மார்புவலி ஏற்படலாம். இந்த மனஅழுத்தத்தினால் பலப்பேருக்கு இதயம் கனப்பது போன்ற உணர்வு, இதயத்தில் அழுத்தம், மார்பில் சுருக்சுருக்கென்று ஒரு கூர்மையான வலி மற்றும் இதயத்தில் தீவிரவலி போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் மார்புவலி மார்பெலும்பின் அடிப்பகுதியில் ஏற்படும். சிலசமயங்களில் நமக்கு ஏற்படும் மிகுந்த பயமே மார்பில்வலி ஏற்படக் காரணமாக அமைந்து விடுகிறது.
ஏதாவது கனமான பொருளைத் தூக்கும்போதோ, தீவிர உடற்பயிற்சிகளைச் செய்யும்போதோகூட மார்புவலி ஏற்படலாம். மாதவிடாய் நாட்களின் போது சில பெண்களுக்கு மார்பில் வலி ஏற்படலாம். மாதவிடாய் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் இது சரியாகிவிடும். நுரையீரல் மற்றும் நுரையீரலைச் சுற்றி உள்ள சவ்வுகளில் ஏற்படும் இடர்களினாலும் மார்பு வலி ஏற்படலாம். விலா எலும்பு மற்றும் சதைகளில் ஏற்படும் இடர்களினால் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் வலி ஏற்படுகின்றது.
உணவுக் குழாய்களில் ஏற்படும் இடர்கள் நடுமார்பில் வலி ஏற்படக் காரணமாகிறது. ஆக அனைத்துமே மார்பு வலியை ஏற்படுத்தினாலும், மாரடைப்பினால் ஏற்படும் மார்புவலி சில சிறப்புத் தன்மைகளைக் கொண்டிருக்கும்.
மாரடைப்பினால் ஏற்படும் வலி எவ்வாறு இருக்கும்?
மாரடைப்பு என்றால், வலி, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். மேலும் வலிநீண்ட நேரம் வரை நீடிக்கும். மார்பில் தோன்றும் வலிபடிப்படியாகத் தோள்பட்டை, முதுகு, கைகள், தாடைஎன்றுபரவ ஆரம்பித்துவிடும். வியர்த்துக்கொட்டுவது சிலருக்கு ஏற்படலாம், சிலருக்கு வாந்தி வரக்கூடும். இவை அனைத்துமே ஒருவருக்கு இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே உங்களுக்கு வலிகடுமையாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

மரு.அ.வேணி
இதயத்தைப் பாதிக்கும் காரணிகள்
இதயத்தின் இயக்கம் மாறுபடும்போது பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.
இதயத்தை மிகவும் பாதிக்கக்கூடிய காரணிகளில் முதன்மையானது மனஅழுத்தம் (Stress) ஆகும். இந்த மனஅழுத்தம் கார்டிசால் மற்றும் பல வேதியியல் பொருள்களைச் சுரக்க வைக்கிறது. இது கொழுப்பை இரத்தக் குழாய்களில் படியச் செய்வதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதநோய் ஏற்படுகின்றன. மேலும் இது இதயத் துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தி இதய நோய்க்கு இட்டுச் செல்கிறது.
இன்று பள்ளிக்குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் கூறும் சொல் மனஅழுத்தம் (Stress/Tension). இவையே இக்காலக்கட்டத்தில் மாரடைப்புக்கு முதன்மைக் காரணம். எனவே மனஅழுத்தம் குறைய என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிப் பின்வரும் பகுதிகளில் விரிவாகப் பார்க்கலாம். இதயத்தைப் பாதிக்கக்கூடிய அடுத்த காரணி இரவில் அதிக நேரம் கண்விழிப்பது மற்றும் குறைந்த நேர உறக்கம். காலம் கடந்து 10 மணிக்கு மேல் உணவருந்திவிட்டு உடனே உறங்குவது இதயத்தையும் மற்ற உடல் உறுப்புகளையும் கெடுக்கக்கூடியது.
சமீபத்தில் 40 வயதில் இருப்பவர்கள் இதய நோய்களுக்கு அதிகம் ஆளாகிறார்கள். புகைப்பிடிப்பது இதய நோய்கள் ஏற்பட ஒரு முக்கிய காரணம். அடுத்து, இப்போது பலரும் உட்கார்ந்தே செய்யும் பணிகளில் இருக்கின்றனர். இதனால் உடல் இயங்க வாய்ப்புக் குறைந்துவிடுகிறது. இதுவும் மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாகும். கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், அதிக இரத்தக் கொழுப்பின் அளவு, மரபணுக் கோளறுகள், மது மற்றும் புகைப் பழக்கம், போதைப்பொருட்களுக்கு அடிமையாவது, உடல் பருமன். இவை அனைத்துமே மாரடைப்பை வருவிக்கும் மிக முதன்மையான காரணிகளில் சிலவாகும், இவற்றில் மரபணு மாற்றங்களைத் தவிர மற்றவற்றை நம்மால் தவிர்க்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதயத்தைப் பாதுகாப்பது எப்படி?
"விருந்தும் மருந்தும் மூன்று நாள்" எனும் பழமொழி நம் அனைவரும் அறிந்ததுதான். முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பலகாரம் என்பது தீபாவளி மற்றும் சிறப்பான சில விழாக்களில்தாம் கிடைக்கும். ஆனால் இப்போதோ, ஆண்டு முழுவதும்எப்போது வேண்டுமானாலும் வேண்டிய பலகாரம் கிடைக்கிறது.
நலவாழ்வு காக்கும் இந்தியப் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடும் வழக்கம் இப்போது பொதுவாகவே குறைந்து விட்டது. மேற்கத்திய உணவுப் பழக்கம் நம்மை அடிமைப்படுத்திவிட்டது. சிறுதானியங்களின் மதிப்பை நாம் மறந்துவிட்டோம். பருப்புகளின் பலனைப் புறந்தள்ளிவிட்டோம். காய்கறிகளைச் சமைக்கச் சோம்பல் வந்துவிட்டது. மாறாக, அடிக்கடி உணவகங்களுக்குச் சென்று, எண்ணெய்யில் வறுத்த, பொரித்த, கலோரிச் சத்து மிகுந்த பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகளையும், அசைவ உணவுகளையும் மிகையாக உண்பது வாடிக்கையாகி விட்டது.
ஆயத்த உணவுகளைக் குழந்தைகள், இளம் வயதினர் சாப்பிடுவதால், உடலில் கொழுப்பு அதிகமாகிறது. இதனால் இதய நோய்கள் சிறுவயதிலேயே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். முடிந்த அளவு இந்த உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது. இவற்றை வழக்கமான உணவாகச் சாப்பிடவேகூடாது. நம் பாரம்பரிய அரிசி வகைகள், கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற தானிய உணவுகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகளும், பழங்களும் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். நன்கு தீட்டப்பட்ட அரிசி, உப்பு, சர்க்கரை போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நண்பர்கள், குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது; அதிகம் சமூக ஊடகம் பயன்படுத்தாமல், அலை பேசியைப் பயன்படுத்தாமல் இருப்பது, யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் செய்வது என நம்மை நாமே அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் இரவு வேளையில் குறைந்தது 10 மணி நேரமாவது உணவு மண்டலத்துக்கு ஓய்வு கொடுத்தால்தான், நம் இதயமும், இரத்தக் குழாய்களும் நலமாக இருக்கும். எனவே நாம் அனைவரும் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும், என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தினமும் 30 நிமிட உடற்பயிற்சி தேவை. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இரவில் பணிசெய்பவர்களின் கவனத்திற்கு
இரவில் பணி செய்பவோருக்கு இதயம் தொடர்பான நோய்கள், பகலில் பணி செய்பவர்களை விட அதிகம் ஏற்படுவது தெரியவந்துள்ளது! இரவில் பணி செய்பவர்களில் இதயத்துடிப்பு 20 முதல் 25 சதவீதம் சீராக இல்லை என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதே போல், இரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்ற இடர்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, வெளிச்சம் இல்லாத அறையில் 8 மணி நேரம் வரை நன்றாக உறங்க வேண்டும். மேற்கூறிய தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
பெண்களின் கவனத்திற்கு
இதய நலனில், பெண்கள் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வரை ஈஸ்ட்ரோஜன் இயல்பாக சுரக்கும். இதனால், 45 வயது வரை இதய நோய்கள் ஏற்படுவது குறைவாக இருக்கும். ஆனால், மாதவிடாய் நின்றதும், ஆண்களுக்கு இணையாக இதய நோய் வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த வயதில், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, படபடப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இப்படிச் செய்வதால் நம் இதயமும் பாதுகாக்கப்படும் பிறர் இதயங்களிலும் நாம் நீண்ட நாட்கள் வாழவும் முடியும். சிந்தித்துச் செயலாற்றுங்கள்.
- எல்லாருக்கும் மருதாணி ஒரே அளவாக சிவக்காது. சிலருக்கு நன்றாக சிவக்கும்; சிலருக்கு குறைவாக சிவக்கும்!
- அதிகம் சிவக்கும் தன்மைகொண்ட மருதாணி இலைகளை பயன்படுத்துங்கள்!
பண்டிகைகளாக இருந்தாலும் சரி, வீட்டு விசேஷங்களாக இருந்தாலும் சரி மேக்கப் இல்லாமல் அந்த நிகழ்ச்சி இப்போதெல்லாம் முழுமையடைவதில்லை. அதுவும் மெஹந்தி இல்லாமல் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் பண்டிகை தினத்திற்கு முன்தினம் இரவு கையில் மருதாணி வைக்காமல் பெண்கள் தூங்கமாட்டார்கள். ஏன் ஆண்களும் வைத்துக்கொள்வர். மற்ற பண்டிகைகளைவிட தீபாவளி அப்படித்தான் போகும். தீபாவளிக்கு முந்தைய இரவு கை நிறைய மருதாணி வைத்துக்கொண்டு நல்ல தூக்கத்தில் இருக்க அதிகாலையில் எண்ணெய்க்குளியல் போட சொல்வார் அம்மா. எழுந்தவுடன் முகம் கூட கழுவாமல் கையை கழுவி, சகோதரர், சகோதரிகளிடத்தில் சென்று யார் கை அதிகமாக சிவந்திருக்கு என்று பார்த்தபின்தான் முகம் கழுவுவோம். அப்படி ஒரு ஆர்வம் மருதாணி போடுவதில். இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது.
பலரும் மருதாணி போட காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான பதிவுதான் இது. வீட்டில் நாம் அனைவரும் ஒரேநேரத்தில் மருதாணி போட்டாலும், எல்லோருக்கும் ஒரே அளவு சிவந்திருக்காது. சிலருக்கு அதிகமாக சிவந்திருக்கும், சிலருக்கு மிதமான அளவில் சிவந்திருக்கும், சிலருக்கு மிகவும் குறைவாக சிவந்திருக்கும். அதற்கு காரணம் அவரவரது உடல்நிலை. இருப்பினும் ஈரம் எளிதில் காய்வதாலும் பலருக்கு சிவந்திருக்காது. சிலர் மருதாணி வைத்துவிட்டு அப்படியே தூங்கும்போது கையில் இருந்து விழுந்துவிடும். இந்நிலையில் மருதாணி எளிதில் சிவக்க சில டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.

மருதாணியை அரைத்த உடனேயே போடவேண்டும்
அழகிற்காக மட்டுமின்றி உடல் சூட்டை தணிப்பதற்காகவும், உடலில் உள்ள பித்தத்தை குறைப்பதற்காகவும் என மருதாணி வைப்பதற்கு மருத்துவ ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன.
- அலாதியான சுவையைக் கொண்டது கோழி நெய் ரோஸ்ட்!
- கர்நாடகாவின் கடற்கரைப் பகுதியான மங்களூருவின் பிரபல உணவு!
சமையல் உலகில் எப்போதும் புதுமைகளும், பாரம்பரிய சுவைகளும் சந்திக்கும் தருணங்கள் உண்டு. அப்படியான ஒரு அலாதி சுவையைத் தன்னகத்தே கொண்டதுதான் கோழி நெய் ரோஸ்ட். கர்நாடகாவின் கடற்கரைப் பகுதியான மங்களூரைச் சேர்ந்த இந்த உணவு, அதன் தனித்துவமான சிவப்பு நிறத்திற்காகவும், வாயில் கரையும் சுவைக்காகவும் மிகவும் புகழ் பெற்றது. இந்த சுவையான சிக்கன் ரெசிபியை சமையல் கலைஞர் கதிரவன் நமக்காக செய்து காட்டியுள்ளார்.

செய்முறை விளக்கம்
காஷ்மீரி மிளகாய் விழுது தயாரித்தல் :
* முதலில் ¼ கிலோ காஷ்மீரி மிளகாயை நன்கு கழுவி, தண்ணீரில் வேகவைக்க வேண்டும்.
* வேகவைத்த இந்த மிளகாயைத் தண்ணீர் வடித்துவிட்டு, பசை போல அரைத்து எடுக்கவும்.
* காஷ்மீரி மிளகாய் காரம் குறைவாக இருந்தாலும், அற்புதமான சிவப்பு நிறத்தை அளிக்கும். மேலும், இந்த விழுதை எண்ணெயில் வதக்கி வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்! இந்த விழுதுதான் நாம் தயாரிக்க உள்ள கோழி நெய் ரோஸ்டிற்கான அடிப்படைச் சுவையாகும்.
கோழி நெய் ரோஸ்ட் செய்முறை :
* ஒரு வாணலியை எடுத்து, அதில் 2 கரண்டி நெய் சேர்க்கவும்.
* நெய் சூடானதும், 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்கவும்.
* பச்சை வாசனை நீங்கியவுடன், நாம் தயாரித்து வைத்திருக்கும் காஷ்மீரி மிளகாய் விழுதில் 2 தேக்கரண்டியை வாணலியில் சேர்க்கவும்.
* இந்த மிளகாய் விழுதை நன்கு வதக்க வேண்டும். சமைக்கும்போது விழுதிலிருந்து நெய் தனியாகப் பிரிந்து வரும். இதுதான் சரியான பதம்!
* இப்போது, மிளகுப் பொடி (¼ தேக்கரண்டி), மஞ்சள் தூள் (½ தேக்கரண்டி), சீரகப் பொடி (½ தேக்கரண்டி) ஆகியவற்றைச் சேர்த்து உடனடியாகக் கிளறவும்.
* மசாலாக்களைக் கலந்த உடனே, வெட்டி வைத்திருக்கும் கோழியை வாணலியில் சேர்க்கவும். இந்தக் கலவையில், நாம் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை; நெய்யே பச்சை வாசனையை நீக்கிச் சரியாகச் சமைத்துவிடும்.
* கோழியை மசாலாவுடன் நன்கு கிளறிய பின், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* சிறிதளவு தண்ணீரை மட்டும் தெளித்து மீண்டும் கிளறி, வாணலியை ஒரு மூடியால் மூடவும்.
* மூடி போட்டு வேகவைக்கும் போது, அடுப்பை அப்படியே குறைந்த தீயில் (Low Flame) வைக்கவும்.
* சிறிது நேரம் கழித்துத் திறந்து பார்த்தால், சுவையான கோழி நெய் ரோஸ்ட் தயாராகியிருக்கும்! இந்த ரெசிபி, மிளகாயை வேகவைத்து செய்வதால், அதிக காரம் இல்லாமலேயே அற்புதமான நிறத்தையும் மணத்தையும் தரும்.
கோழி நெய் ரோஸ்ட்டின் பலன்கள்
* கோழி இறைச்சி புரதத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளது. இது தசைகளின் வளர்ச்சிக்கும், எலும்புகளை வலுப்படுத்தவும் அத்தியாவசியமானது.
* இதில் சேர்க்கப்படும் நெய் (Ghee) ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், ஆற்றல் மூலமாகவும் செயல்படக்கூடியது.
* காஷ்மீரி மிளகாயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.
* இஞ்சியும், சீரகமும் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய பாரம்பரிய மூலிகைகள் ஆகும்.
இந்த விரைவான மற்றும் சுவையான கோழி நெய் ரோஸ்ட், உங்கள் சமையல் அட்டவணையில் நிச்சயம் இடம்பெற வேண்டிய ஒரு ஸ்பெஷல் உணவாகும். இது சிறந்த ஸ்டார்ட்டர் ஆகவோ, அல்லது சப்பாத்தி போன்றவற்றுடன் மெயின் கோர்ஸாகவோ சேர்த்து உண்ண ஏற்ற ரெசிபியாகும். இதைச் செய்து பார்த்து, மங்களூரின் மணக்கும் சுவையை உங்கள் வீட்டிற்கு கொண்டு வாருங்கள்!
- புளி பயன்படுத்தப்படும் உணவுகளில் வெந்தயம் சேர்க்கப்படும்.
- வெந்தயத்தின் அதிக பயன்பாடு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.
தமிழர்களின் உணவுமுறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை மேம்படுத்துவதோடு பல நோய்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் வெந்தயம். பொதுவாக புளி பயன்படுத்தப்படும் உணவுகளில் வெந்தயம் சேர்க்கப்படும். ஏனெனில் புளி சூட்டை கிளப்பி, வயிற்று வலியை உண்டாக்கும் எனக் கூறுவார்கள். வெந்தயம் வயிற்று வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால்தான் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி பல மருத்துவ குணங்கள் நிறைந்தது வெந்தயம். உடலுக்குத் தேவையான கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் வெந்தயத்தில் காணப்படுகின்றன. வெந்தயத்தில் பல நன்மைகள் இருந்தாலும், அதனால் உடல் உபாதைகளும் ஏற்படுமாம். அது எப்படி எனப் பார்ப்போம்.
தாய்ப்பால் அதிகரிப்பு
குழந்தை பிறந்த தொடக்கத்தில், சில பெண்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காது. அப்போது பலரும் நாட்டு வைத்தியங்கள் சிலவற்றை பரிந்துரைப்பர். அந்த வகையில் வட ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தெற்கு ஐரோப்பாவில் உள்ள மக்கள் பாரம்பரியமாக தாய்ப்பாலை அதிகரிக்க வெந்தயத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். வெந்தயம் பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்க உதவும் என பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும்
ஆண்களின் விந்தணுக்களால் உற்பத்தி செய்யப்படும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவை அதிகரிக்க வெந்தயம் உதவும். வயதாகும்போது டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் இயற்கையாகவே குறைகின்றன. இது எரிச்சல், மனநிலை மாற்றம் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு வழிவகுக்கும். வெந்தய பயன்பாடு டெஸ்டோஸ்டிரோன் சுரக்க உதவுவதோடு, பாலியல் உந்துதலையும் மேம்படுத்துகிறது. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 12 வாரங்களுக்குப் பிறகு 35-65 வயதுடைய 45 ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவு 46% வரை அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறையும் ரத்த சர்க்கரை அளவு
நீரிழிவு நோய் அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலை உள்ளவர்களுக்கு வெந்தயம், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். ரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்கும். இயற்கையிலேயே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் பண்புகள் கொண்டது. நீரிழிவு காரணமாக உண்டாகும் நீரிழிவு நரம்பியல், கேட்கும் திறன் மற்றும் பார்வை இழப்பு, இதய நோய், சிறுநீரக நோய், பல் சிதைவு, ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என எல்லாவற்றுக்கும் தீர்வாக நாம் வெந்தயத்தை சொல்ல முடியும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க வெந்தயம் உதவுகிறது!
குறையும் கொழுப்பு
வெந்தயம் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதில் உள்ள அதிக நார்ச்சத்து, ரத்தத்தில் உள்ள மொத்த கொழுப்பு, கெட்ட கொழுப்பு (LDL) மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கவும் உதவும். ஆனால் இதுகுறித்த ஆராய்ச்சிகள் இன்னும் தேவைப்படுகின்றன.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு
வெந்தயத்தில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் எனப்படும் சேர்மங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜனைப் போலவே செயல்படுகின்றன. இது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்றுவலி உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
எந்த அளவில் வெந்தயத்தை பயன்படுத்த வேண்டும்?
வெந்தயத்தின் பயன்பாடு நோய்களின் தன்மையை பொறுத்து மாறுபடும். வெந்தயத்தை எந்த அளவு, எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து முடிவெடுக்கலாம்.
வெந்தய பயன்பாடு பாதுகாப்பானதா?
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான். அதுபோலத்தான் வெந்தயத்தின் அதிக பயன்பாடு ஆபத்தை விளைவிக்கக்கூடியது. வெந்தயத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரல் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். அதுபோல கர்ப்பிணிகளும் வெந்தயத்தை அதிகளவு எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வாமை உள்ளவர்களும் வெந்தயத்தை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு 21 கிராமுக்கு மேல் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது பாதுகாப்பானது.
- வாரத்திற்கு 2 முறை சிக்கன், மற்ற நாட்களில் மீன் எடுத்துக்கொள்ளலாம்!
- உடற்பயிற்சி செய்யும் பெண்கள் தினமும் 5 முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம்!
தமிழகத்தில் பாடி பில்டிங்கில் கலக்கிவரும் துணிச்சல் மிக்க பெண்ணான ஷெனாஸ் பேகம் குறித்துதான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த பின்னர் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஜிம்மில் சேர்ந்த ஷெனாஸ், எதிர்பாராத விதமாகத்தான் பாடி பில்டிங்கில் காலடி எடுத்து வைத்துள்ளார். பிறகு பாடி பில்டிங்கில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஷெனாஸ் பேகத்திற்கு இன்று அதுவே அடையாளமாக மாறிவிட்டது. ஷெனாஸ் பேகம், ராணி ஆன்லைனுக்கு அளித்துள்ள நேர்காணலின் ஒரு பகுதியை இங்கு காண்போம்...
பாடி பில்டிங் செய்யும் உங்களை மற்றவர்கள் வித்தியாசமாக பார்ப்பதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
இதில் எனக்கு பல அனுபவங்கள் உண்டு. பெரும்பாலானவர்கள் என்னை வித்தியாசமாகவே பார்ப்பார்கள். ஆனால் அதை எப்போதும் ஒரு நெகட்டிவாக நான் எடுத்துக்கொள்ளவே மாட்டேன். போட்டிகளின் சமயத்தில் தீவிரமாக டயட் இருக்கும்போது கொழுப்பு எல்லாம் இல்லாமல், இயல்பாகவே எனது முகம், கை எல்லாம் மாறுபடும். சாதாரண நாட்களில் இயல்பாக டயட் இருக்கும்போது அப்போது முகம் வேறுபடும். நம் ஊரில் பெண்கள் பலரும் என்ன நினைப்பார்கள் என்றால், புடவை கட்டிக்கொள்ள வேண்டும், உடல் மென்மையாக இருக்க வேண்டும் என்றுதான். பெண்களை மஸுல்ஸோடு பார்க்க விரும்பமாட்டார்கள். நான் பைக்கில் போகும்போது நிறையபேர், நீங்க பொண்ணா? பையனா? என சந்தேகமாகவே கேட்பார்கள். உங்களுக்கு எப்படி தசைகள் இப்படி இருக்கு? என கேட்பார்கள். அதை நான் பாசிட்டிவாகவே எடுத்துக்கொள்வேன்.
பாடி பில்டிங் செய்பவர்கள், சிக்கன் போன்றவற்றை பாதி வேகவைத்த நிலையில் சாப்பிடவேண்டும் என்பது உண்மையா?
சிக்கனே முதலில் சாப்பிடக்கூடாது. என்னிடம் பயிற்சி பெறுபவர்களிடம் நான் சொல்வது என்னவென்றால், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டுமுறை மட்டும் சிக்கன் எடுத்துக் கொள்ளுங்கள். மற்ற நாட்கள் மீன் எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான். மீன் உடலுக்கு மிகவும் நல்லது. சிக்கனில் புரோட்டீன் உள்ளது. பாடி பில்டர்களுக்கு ஒருநாளைக்கு இவ்வளவு புரோட்டீன் தேவை என்பதால் தினமும் சிக்கன் சாப்பிடுவோம். ஆனால் பாதி வேகவைத்த சிக்கனை சாப்பிடக்கூடாது. முழுமையாக வெந்திருக்க வேண்டும். எண்ணெய், மசாலா எல்லாம் இல்லாமல், வேகவைத்தது மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீனைவிட சிக்கன் விலை குறைவாக இருக்கும். எனவே தினமும் மீன் எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் சிக்கன் எடுத்துக்கொள்வோம். அதேநேரம் சிக்கனில் மட்டும் புரோட்டீன் இல்லை. அதற்கு மாற்றாக காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். முட்டை எடுத்துக் கொள்ளலாம். சிறுவர்கள் 3-4 முட்டைகள் ஒரு நாளைக்கு சாப்பிடலாம். பெண்கள் 5 முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம். 5 முட்டை எடுத்துக் கொள்ளும்போது 2 மட்டும் மஞ்சள் கருவுடன் எடுத்துக்கொண்டு, மற்ற மூன்றிலும் வெள்ளை பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். முட்டை மற்றும் தானியங்களில் புரோட்டீன் உள்ளது.
பாடி பில்டிங் குறித்து வீட்டில் இருப்பவர்களின் விருப்பம்?
நான் பாடி பில்டிங் செய்ய தொடங்கியபோது என் குழந்தைகள் சின்னப் பிள்ளைகள். இப்போது என் மகன் 12ஆம் வகுப்பு படிக்கிறான். மகள் 10ம் வகுப்பு. அவர்கள் எப்போதுமே என் பணியால் தாழ்வாக உணர்ந்ததில்லை. எனக்கு எப்போதும் சப்போர்ட் செய்வார்கள். பொதுவாகவே நமது ஊர்களில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரம் இருக்கும். எங்கள் வீட்டில் முதலில் டிராக் பேண்ட், டி-சர்ட் போடவே அனுமதிக்கவில்லை. அவர்களை குறைசொல்ல முடியாது. காரணம் நமது கலாச்சாரம் அப்படி. மற்றவர்கள் என்னைப்பற்றி கேட்கும்போது அவர்களுக்கு கஷ்டமாக இருந்தது. பின் போகபோக புரிந்துகொண்டார்கள். முஸ்லிம் என்று இல்லை எந்த வீட்டிலும் பெண்கள் பிகினி உடை அணிந்து மேடையில் இருப்பதை குடும்பத்தினர் விரும்பமாட்டார்கள். ஆனால் பாடி பில்டிங்கிற்கான உடை அதுதான் என பின்னர் வீட்டில் புரிந்துகொண்டார்கள்.....
- 10 நிமிடங்கள் முடிக்கு மசாஜ் கொடுத்து, சுடுநீரில் முடியை கழுவவேண்டும்.
- பேன் சீப்பை வைத்து சீவினாலே பொடுகுகள் அனைத்தும் கொட்டிவிடும்.
உடல்நலனைவிட தற்போதெல்லாம் சரும நலனுக்கு மெனக்கெடுபவர்கள்தான் அதிகம். இதற்காக பலரும் பியூட்டி பார்லர்களுக்கு சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்கின்றனர். அப்படி பியூட்டி பார்லர் செல்ல இயலாதவர்கள், வீட்டிலேயே சருமத்தின் அழகை மெருகூட்ட, சில பியூட்டி டிப்ஸ்களை கூறியுள்ளார் அழகுக்கலை நிபுணர் நிஷா கோஷ். அந்த குறிப்புகளை காணலாம்.
வறண்ட சருமம் இருக்கக்கூடாது!
நமக்கு எண்ணெய் சருமமாக கூட இருக்கலாம். ஆனால் வறண்ட சருமமாக இருக்கக்கூடாது. வறண்ட சருமம், அரிப்பு, செதில்கள் மற்றும் வறண்ட திட்டுகள் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும், மேலும் புற ஊதா கதிர்களால் எளிதாக சேதமடையக்கூடும், எனவே வறண்ட சருமம் உள்ளவர்கள், பாதாம் எண்ணெய் இரண்டு சொட்டுகள், ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டுகள் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்துவிட்டு, காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் முகம் கழுவுவதால் சருமத்தை நன்றாக பாதுகாத்துக் கொள்ளமுடியும். இதை தினசரி செய்யும்போது அழகான மற்றும் வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு எண்ணெய் சருமம் கிடைக்கும்.
பொடுகு பிரச்சனைக்கு தீர்வு
பொடுகு பிரச்சனை நிறைய இருப்பவர்கள், முல்தானி மெட்டி, எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக்கரு ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து ஸ்கேல்ப்பில் அப்ளை செய்யவேண்டும். ஒரு பத்து நிமிடம் மசாஜ் கொடுக்கவேண்டும். பின்னர் சுடுநீரில் முடியை கழுவவேண்டும். பின்னர் சீப்பை வைத்து சீவினாலே பொடுகுகள் அனைத்தும் கொட்டிவிடும். இதை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். முடி பார்க்க வழுவழுப்பாக சிக்கில்லாமல் தெரிய முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சைச் சாறு, புதினாச்சாறு ஆகிய மூன்றையும் நன்றாக பீட்செய்து முடியில் அப்ளை செய்யவேண்டும். 20 நிமிடம் அல்லது அரைமணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு முடியை கழுவினால், பளப்பளப்பாக, வழுவழுவென முடி நன்றாக இருக்கும்.
கருகருவென நீளமான முடிக்கு!
அதுபோல முடி நீளமாக கருகருவென வளரவேண்டுமென எண்ணினால், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கேரட்டின் இலையை துண்டு துண்டாக வெட்டி போட்டு சூடுப்படுத்த வேண்டும். அதில் கொஞ்சம் மிளகு, வெந்தயம் சேர்க்கவேண்டும். அந்த எண்ணெய்யை நன்கு காய்ச்சி, வடிகட்டி ஒரு மூன்று நாட்கள் வெயிலில் வைக்கவேண்டும். அதை தலைக்கு தேய்த்தால், முடி கருகருவென நன்றாக வளரும். புழுவெட்டு இருப்பவர்கள் தலையில் சின்ன வெங்காயத்தை நன்கு தேய்க்க வேண்டும். மூன்று மாதங்கள் தொடர்ந்து தேய்த்தால், அந்த இடத்தில் குட்டி குட்டி முடி வளரத் தொடங்குவதை நீங்கள் பார்ப்பீர்கள். அதுபோல கண்புருவம் அடத்தியாக வேண்டும் என்றால், விளக்கெண்ணெய்யை அப்ளை செய்யலாம்.
கருமை நீங்க...
கண்ணில் கருவளையம் இருப்பவர்கள், உருளைக்கிழங்கு சாறுடன், கடலைமாவை சேர்த்து பத்துபோல போட்டு வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். உதடு கருப்பாக இருப்பவர்கள், தாங்களாகவே ரோஸ்வாட்டர் தயாரித்து அப்ளை செய்தால் நன்றாக இருக்கும். சந்தைகளில் வாங்குவதில் நிறைய போலிகள் உள்ளன. ரோஸ் வாட்டர் எப்படி செய்வது என நான் கூறுகிறேன். ரோஜாப்பூக்கள் ஒரு கிலோ வாங்கினோமானால், அதன் இதழ்களை எடுத்து தண்ணீரில் கொதிக்கவைக்க வேண்டும். ஒருகிலோ இதழ் 100 மில்லிக்கு வரும்வரையில், கொதிக்கவைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து வடிகட்டி, தினமும் காட்டன் துணியால் தொட்டு உதட்டில் தடவி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். உதடு ரோஸ் நிறத்திற்கு மாறும். இவை அனைத்திற்கும் மேலாக, என்னதான் ஸ்கின் கேர் செய்தாலும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பட்டர் ஃப்ரூட் எடுத்துக்கொள்ளலாம். இது கர்ப்பப்பைக்கும் நல்லது, முகத்திற்கும் பளபளப்பு மற்றும் அழகை தரும்.
- உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது.
- முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான விஷயம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, உணவு ஒவ்வாமை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டால் குழந்தைகள் சத்துள்ள பொருட்களை சாப்பிட முடியாது, உடல் எடை குறையும், உடல்நலம் பாதிக்கப்படும். உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதைக் குணப்படுத்தும் முறைகளைக் காண்போம்.
குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை இருப்பதை எவ்வாறு கண்டறிவது?
வளரும் குழந்தைகளுக்கு புதிதாக உணவுகளை பழக்கப்படுத்த வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சாதம், முட்டை, வேர்க்கடலை, அவித்த உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை பெற்றோர்கள் கொடுக்க தொடங்குவார்கள். அப்படி இந்த பொருட்கள் ஒத்துகொள்ளவில்லை எனில் சாப்பிட்ட சிறிதுநேரத்திலேயே குழந்தைகள் வாந்தி எடுத்துவிடுவார்கள். அல்லது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். அரிப்பு, தோல் வெடிப்புகள், வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். சிலநேரங்களில் மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். மேலும் சில உணவுகளை குழந்தைகள் சாப்பிடவே மாட்டார்கள். அப்போது அது காலப்போக்கில் சரியாகிவிடும் என பெற்றோர் விட்டுவிடுவார்கள். குழந்தைக்கு உணவு ஒவ்வாமை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். அது ஒவ்வாமைதானா என உறுதிப்படுத்தி அதன்பின் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குவர். மேலும் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவை வேறு எந்த முறையில் கொடுக்கலாம் எனவும் அறிவுறுத்துவர்.

குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள்
ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொதுவான உணவுப் பொருட்கள்...
- பால்
- முட்டை
- வேர்க்கடலை
- மரக்கொட்டைகள்
- மீன்
- கோதுமை
- சோயா
- ஷெல்ஃபிஷ்
மேற்கூறிய 8 உணவுகள்தான் 90% உணவு ஒவ்வாமைகளை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு என்ன செய்வது?
முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும். ஆனால் சில ஒவ்வாமைகள் தொடர்ந்து நீடிக்கும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், வேர்க்கடலை மற்றும் குழந்தைக்கு ஒவ்வாமை கொடுக்கும் பொருட்களை உங்களின் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக ஆக்குங்கள். குழந்தைக்கு முட்டை அவித்து கொடுத்தால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால், மாற்று வழியில் எவ்வாறு அதனை கொடுக்கலாம் என மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பின்னர் தொடர்ந்து அதனை கொடுத்துவரும்போது இந்த பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும்.
ஒவ்வாமையை தடுக்க என்ன செய்யலாம்?
ஒரு உணவுப்பொருள் குழந்தைக்கு ஒவ்வாமையை கொடுக்கிறது என்றால் அதை கொஞ்ச நாட்கள் தவிர்க்கவேண்டும். குழந்தையை பார்த்துக்கொள்பவர்களிடமும், பள்ளியிலும் அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப்பொருட்கள் குறித்து தெரிவித்தல் நல்லது. ஒவ்வாமை இருப்பவர்கள் எப்போதும் வெளியில் செல்லும்போது எபிநெஃப்ரின் ஆட்டோ-இன்ஜெக்டரை எடுத்துச் செல்வது நல்லது. குழந்தையின் பள்ளி அல்லது பகல்நேர பராமரிப்பு மையத்திலும் குழந்தைக்கு தேவையான மருத்தை வழங்குவது நல்லது.






