என் மலர்
நீங்கள் தேடியது "Women Health"
- மார்பில் வலி ஏற்பட்டாலே அது புற்றுநோயாக இருக்குமோ என பெண்கள் பலரும் பயப்படுவர்.
- மார்பில் புற்றுநோய் என்பது முதலில் வலியை கொடுக்காமல்தான் உருவாகும்.
புற்றுநோய் வருவதற்கான காரணிகள் என்ன? பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிக்க காரணங்கள் என்ன? மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன? ரஷ்யா கண்டறிந்த புற்றுநோய் தடுப்பூசி உண்மையில் பயனளிக்குமா? புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து விளக்கியுள்ளார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் கென்னி ராபர்ட்.
புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?
செல்களின் அபரித வளர்ச்சிதான் புற்றுநோய். ஒரு செல்லின் வளர்ச்சி குறிப்பிட்ட அளவுகோலில்தான் இருக்கவேண்டும். உடலில் ஒரு செல் அதிகமாக வளராமல் இருப்பதற்கும், நேர்க்கோட்டில் வளர்வதற்கும் ஒரு இயக்கமுறை உள்ளது. இந்த இயக்கமுறை கட்டுப்பாட்டை இழப்பதுதான் புற்றுநோய். புற்றுநோய் வர இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மரபுரீதியானது. இரண்டாவது 'ஸ்போராடிக்'. திடீரென ஏற்படும் மரபணு மாற்றங்கள், உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றால் ஒரு தாக்கம் ஏற்பட்டு புற்றுநோய் வரும்.
மார்பக புற்றுநோய் அதிகரிக்க காரணம் என்ன?
இயல்பாகவே ஹார்மோன் மாற்றங்களால் மார்பு வீக்கமடையும். இந்த ஹார்மோன் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும்போது, அதாவது சமநிலையை இழக்கும்போது மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன?
புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வே அதற்கான பயத்தை உண்டாக்கும். அநேக நேரங்களில் மார்பில் வலி ஏற்பட்டாலே அது புற்றுநோயாக இருக்குமோ என பெண்கள் பலரும் பயப்படுவர். மார்பில் புற்றுநோய் என்பது முதலில் வலி இல்லாத கட்டியாகத்தான் துவங்கும். வேர்க்கடலை அல்லது நெல்லிக்காய் அளவில் வலியை கொடுக்காமல்தான் உருவாகும். வலி இல்லாமல் வரக்கூடிய கட்டிகளை கவனமாக பார்க்கவேண்டும். ஏனெனில் வலியுடன் வரக்கூடிய கட்டிகள் புற்றுநோய் கட்டியாக இல்லாமல் இருப்பதற்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
நீர்க்கட்டி, புற்றுநோய் கட்டியை வேறுபடுத்துவது எப்படி?
20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் தினமும் கைகளால் சுயமார்பு பரிசோதனை செய்யவேண்டும். ஏதேனும் மாற்றங்கள், அதாவது கட்டிகள், வீக்கம் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும். அப்போது மருத்துவர் அது நீர்க்கட்டியா, புற்றுநோய் கட்டியாக என்பதை கூறிவிடுவார்கள். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றால், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து நீர்க்கட்டியா, புற்றுநோய் கட்டியா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட கட்டியா என்பதை கண்டுபிடிக்க முடியும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேமோகிராம் எனப்படும் எக்ஸ்-கதிர் சோதனையை செய்து என்ன கட்டி என்பதை கண்டறியலாம். இதுதான் முதல்படி.
ரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயை அறிய முடியுமா?
ரத்த பரிசோதனையை வைத்து புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான நடைமுறை என்பது இல்லை. இரத்த பரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட சில வகையான புற்றுநோய்களைக் கண்டறிய முடியும். ஆனால் மேமோகிராம் சோதனை மூலம் மார்பக புற்றுநோயை அடையாளம் காணலாம். மரபியல் ரீதியான அதாவது ஒருவருக்கு எந்த வயதில் புற்றுநோய் வந்ததோ, அவர்களின் சந்ததியினருக்கு அந்த வயதிலோ அல்லது அதற்கு 10 வருடங்களுக்கு முன்போ சில சோதனைகளை செய்து அவர்களுக்கு புற்றுநோய் வருமா என்பதை அறியமுடியும். ரத்தத்தில் தெரியக்கூடிய புற்றுநோய்கள் இருக்கின்றன.
அவற்றை சிஏ (CA-Cancer Antigen), CA-125 சோதனைகள் மூலம் அறியலாம். புற்றுநோயை உறுதிப்படுத்தவும், அதனை கண்காணிக்கவும் இந்த சோதனை முறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். புற்றுநோயின் ஆரம்பநிலையிலோ, அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போதோ அல்லது சிகிச்சை முடியும்போதோ, நம் ரத்தத்தில் புற்றுநோய் செல்கள் ரத்த சிவப்பணுக்களுடன் சுழற்சியில் இருப்பதைதான் Circulating DNA cells என சொல்வோம். இந்த சோதனையை நாம் அனைவருக்கும் செய்யமுடியாது.
புற்றுநோய் இருந்து, பின்னர் முழுவதும் மறைந்து, பின்னர் மீண்டும் வந்து, சிகிச்சையை தொடரவேண்டும் என்பவர்களுக்கு மட்டும்தான் ரத்த பரிசோதனை எடுக்க அனுமதி உண்டு. மற்றபடி பொதுமக்களுக்கு ஒரு ரத்த பரிசோதனை மூலம் மட்டும் புற்றுநோய் உள்ளதா? இல்லையா என்பதை சொல்வதற்கு வாய்ப்புகள் இல்லை.
புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?
பெரும்பாலான புற்றுநோய்களுக்கு காரணிகள் உள்ளன. ஜீன்வழியாக தொடரும் புற்றுநோயை தவிர்க்க இயலாது. 8 மணிநேர தூக்கம், சரியான உடல்எடை, புகை மற்றும் ஆல்கஹாலை தவிர்ப்பது, உடல்பருமனை தவிர்ப்பது மூலம் மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம். கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய்க்கு தடுப்பூசியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 9-14 வயதிற்குள் உள்ளோருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தியதன் மூலம் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் குறைந்துள்ளது. வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் புகைபிடிப்பது. புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை தவிர்த்தாலே வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயை தவிர்த்துவிடலாம். இவைதான் பொதுவாக தவிர்க்கவேண்டியவை.
'என்டரோமிக்ஸ்' போன்ற புற்றுநோய் தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வழங்கப்படாதது ஏன்?
'என்டரோமிக்ஸ்' ஒரு mRNA தடுப்பூசி. விலங்குகளிடம் கோலோரெக்டர் கேன்சருக்கு இதை பயன்படுத்தி பயனுள்ளதாக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கான முழுமையான தகவல்கள் இன்னும் இல்லை. அவர்கள் வெளியிட்ட தரவுகள்படி ஆரம்பநிலையில் இதனால் பயன் உள்ளது. ஆனால் இது புற்றுநோய் வருவதை தடுக்குமா என்றால் தடுக்காது.
- சீன, மேற்கத்திய சமையல் முறைகளின் கலவையில் பிறந்த உணவுதான் 'பட்டர் கார்லிக் பிரான்'!
- இறாலை நீண்ட நேரம் வேகவைத்தால் ரப்பர் போன்று இறுகிவிடும் என்பதால் கவனமாக சமையுங்கள்!
சமையல் என்பது ஒரு கலை. அதுவும் புதுப்புது உணவு கலவைகளை உருவாக்கி, சுவைகளில் புரட்சி செய்வதென்பது ஒரு அசாத்தியமான திறன். அப்படி, சீன, மேற்கத்திய சமையல் முறைகளின் கலவையில் பிறந்த ஒரு உணவுதான் 'பட்டர் கார்லிக் பிரான்' (Butter Garlic Prawn). உணவகங்களில் மட்டுமே கிடைத்துவந்த இந்த சுவையான இறாலை, வீட்டிலேயே எளிதாகவும், குழந்தைகள் விரும்பும் வகையிலும் எப்படிச் செய்வது என்பதை ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் தியாகு செய்து காட்டுகிறார்.
செய்முறை
* முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடாக்கவும்.
* வாணலி சூடானதும், வெண்ணெயைச் சேர்த்து உருக விடவும். வெண்ணெய் அதிகம் சேர்த்தால் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.
* வெண்ணெய் உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டுத் துண்டுகளைச் சேர்க்கவும். வெண்ணெய் மற்றும் பூண்டின் கலவை சேர்ந்து சமைக்கும்போது, சுவை பல மடங்கு அதிகரிக்கும்.
* பூண்டு பொன்னிறமாக வந்தவுடன், முழு சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து வதக்க வேண்டும். வெண்ணெயில் சமைக்கும்போது அடுப்பின் தீயைக் குறைத்துக்கொள்வது முக்கியம், இல்லையென்றால் வெண்ணெய் கருகிவிடும்.
* இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் இறால்களைச் சேர்க்கவும். இறால்களைச் சேர்த்த உடனேயே, தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும். உப்பு சேர்த்த பின்னர்தான் இறால், சுவையை நன்கு உறிஞ்சும்.
* காரத்துக்கு மிளகாய் தூளைச் சேர்க்கவும். இந்த உணவு தயாராக 5 முதல் 10 நிமிடங்களே ஆகும். இறாலை நீண்ட நேரம் சமைத்தால் ரப்பர் போன்று இறுகிவிடும் என்பதால் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* இப்போது சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அதனுடன் சோயா சாஸ் மற்றும் கூடுதல் காரத்துக்குத் தேவையான மிளகாய் தூளையும் சேர்க்கவும். வெண்ணெய் மற்றும் பூண்டுடன் சேர்ந்து சோயா சாஸ் ஒரு அற்புதமான குழம்புப் பக்குவத்தைக் கொடுக்கும்.
* இறுதியாக, பொடியாக நறுக்கிய வெங்காயத் தாளைத் தூவி அடுப்பை அணைக்கவும். இது உணவின் சுவையை மேலும் அதிகரிக்கும்.
இந்த உணவில் உள்ள நன்மைகள்
* இறாலில் புரதம் அதிக அளவில் உள்ளது. இது உடலின் திசுக்கள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு அவசியமானது. மேலும், இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இதய நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
* பூண்டு ஒரு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு. இதில் உள்ள அல்லிசின் என்ற கலவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இது செரிமானத்திற்கும் துணைபுரிகிறது.
* வெங்காயத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதில் உள்ள குவெர்செடின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இப்படி ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 'பட்டர் கார்லிக் பிரான்', சுவையுடன் சேர்த்து உங்கள் உடலுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. அதோடு இன்றைய வேகமான உலகில், வெளியில் கிடைக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளை தேடிச் செல்வதற்குப் பதிலாக, உணவகங்களில் சாப்பிடும் அதே சுவையை வீட்டிலேயே அனுபவிக்க இந்த ரெசிபி சிறந்த தேர்வாக இருக்கும். இது குடும்பத்தினருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும் பிடித்தமான ஒரு உணவாக நிச்சயம் அமையும். இதை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து சுவைத்து மகிழுங்கள்.
- ஐ-லைனரை கண்ணின் ஓரத்திலிருந்து போடாமல் நடுவில் இருந்து போடவேண்டும்.
- ப்ளெண்ட் செய்யும்போது முழு அழுத்தத்தையும் முகத்தில் காட்டாமல், ப்ளெண்டரில் காட்டவேண்டும்.
மஞ்சள் கொத்து இல்லையென்றால் பொங்கல் வைக்க முடியாது என்று தைப்பொங்கலன்று சிலர் வாக்குவாதம் செய்வர். அப்படி மேக்கப் இல்லையென்றால் தற்போது திருமணம் கிடையாது என்பதுபோல, ஒப்பனை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது திருமணத்தில். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு சடங்குமுறையை பின்பற்றுவர். அவ்வாறு அவர்களது திருமண முறையும் மாறுபடும். திருமண முறைகளுக்கு ஏற்றவாறு மேக்கப் முறைகளும் வந்துவிட்டன. அந்தவகையில் சிம்பிள் கிறிஸ்டியன் மேக்கப் போடுவது எப்படி என விளக்கியுள்ளார் அழகு கலை நிபுணர் உமா. ராணி ஆன்லைனுக்கு அளித்த நேர்காணல் மூலம் அவர் கூறிய ப்ரைடல் மேக்கப் வழிமுறைகளை காணலாம்.
CTM (Cleansing, Toning and Moisturizing) பிராசஸ்
முதலில் கிளென்சிங் பண்ணவேண்டும். ஏனென்றால், பார்லர் வரும்போதே சிலர் மேக்கப் போட்டிருப்பார்கள். அதனை முதலில் நீக்கவேண்டும். கிளென்சிங் செய்தபிறகு டோனர். ஓபன் போர்செஸ் இருப்பவர்களுக்கு டோனர் பயன்படுத்தலாம். டோனர் ஸ்பிரே காய்ந்தபின்பு, மாய்ச்சுரைஸர். அடுத்து கன்சீலர். கன்சீலருக்கு பின் ஃபவுண்டேஷன். எப்போதுமே ஃபவுண்டேஷன் ப்ரைடலின் நிறத்தைவிட கொஞ்சம் ஃபேராக இருக்குமாறு போட்டுக்கொள்ள வேண்டும். மூன்று ஃபவுண்டேஷன்களை எடுத்து எது அவர்களின் நிறத்தைவிட கொஞ்சம் ஃபேராக இருக்கிறதோ அதை பயன்படுத்தலாம். சிலர் ஐ-மேக்கப் போட்டுவிட்டு, ஃபேஸ் மேக்கப் போடுவார்கள். ஃபேஸ் மேக்கப் போட்டுவிட்டும், ஐ-மேக்கப் போடலாம். இப்படித்தான் போடவேண்டும் என்று இல்லை. நான் எப்போதும் ஃபேஸ் மேக்கப் போட்டுவிட்டுதான் ஐ-மேக்கப் போடுவேன். பிரஷ், பியூட்டி ப்ளெண்டர் என எது உங்களுக்கு நன்றாக இருக்கிறதோ, அதிலே ப்ளெண்ட் செய்யலாம். எந்தளவு பிளெண்ட் செய்கிறோமோ அந்தளவிற்கு மேக்கப் நன்றாக வரும்.
ப்ளெண்ட் செய்யும்போது...
ப்ளெண்ட் செய்யும்போது முழு அழுத்தத்தையும் ப்ரைடலின் முகத்தில் காட்டாமல், பிளெண்டரில் காட்டவேண்டும். ஏனெனில் நாம் வேகமாக அழுத்தும்போது விரலின் அழுத்தம் முகத்தில் படும்போது அவர்களுக்கு வலிக்கும். கண்ணிற்கு கீழ் க்ரீஸ் லைன் வரும். அப்போது மேலே பார்க்கசொல்லி, மெதுவாக ப்ளெண்ட் செய்யவேண்டும். அடுத்தது ஃபவுண்டேஷனுக்கு எந்த ஷேடு எடுத்தோமோ அதனைவிட டார்க்கர் ஷேடு எடுத்து காண்டோரிங் செய்யவேண்டும். நீங்கள் எது செய்வதாக இருந்தாலும், ப்ரைடுக்கு விருப்பமா எனக்கேட்டு செய்யுங்கள். ஃபவுண்டேஷன் அப்ளை செய்தபிறகு, பேக் செய்யவேண்டும்.
ஐ-லென்ஸ்
மேக்கப்பிற்கு முன்பு ஐ-லென்ஸ் வைக்கவேண்டும். லென்ஸ் போடுவதற்கு முன்பு ப்ரைடலிடம் கேட்கவேண்டும். அவர்கள் ஐ-லென்ஸ், முன்பு போட்டிருக்கிறார்களா என்று? ஏனெனில் சிலருக்கு தலைவலிக்கும், சிலருக்கு கண் சென்சிட்டிவாக இருக்கும். லென்ஸ் போட்டுக்கொண்டே லைட் வெளிச்சத்தை எல்லாம் பார்த்தால், கண்கலங்கும். எப்போதும் பயன்படுத்துபவர்கள் என்றால் பிரச்சனை இல்லை. அதனால் ப்ரைடலிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
ஐ-மேக்கப்
அடுத்தது ஐ-மேக்கப். நமக்கு எந்த ஐ-ஷேடோ வேண்டுமோ, அதை எடுத்துக்கொண்டு பிளெண்ட் செய்யலாம். அடுத்தது கிளிட்டர். எப்போதும் ஐ-லைனரை ஓரத்திலிருந்து போடாமல் நடுவில் இருந்து போடவேண்டும். அப்போது ப்ளெண்ட் செய்ய நன்றாக இருக்கும். அடுத்தது காஜல். எப்போதுமே கண் புருவத்திற்கு கருப்பு நிறத்தை பயன்படுத்துவதைவிட, நம் இந்தியர்களின் நிறத்திற்கேற்ப ப்ரவுன் ஷேடு பயன்படுத்தலாம். அடுத்தது காண்டோரிங். அடுத்தது ப்ளஷ் மற்றும் ஹைலைட்டர். பின்னர் லிப்லைனர். லிப்லைனர் அப்ளை செய்துவிட்டு, லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளலாம். கடைசியாக செட்டிங், ஃபிட்டிங் ஸ்பிரே அடித்துக் கொள்ளலாம்.
- மற்ற குழந்தைகளைப் போல டெஸ்ட் டியூப் பேபியும் நார்மலாக இருக்குமா?
- ஐவிஎஃப், இக்ஸி முறைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமா?
கருமுட்டை அல்லது விந்தணு தானம் பெற்று குழந்தை பெறுபவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், குழந்தை நம்மைப்போல இருக்குமா? அல்லது தானம் வழங்கியவர்களைப் போல இருக்குமா என்றுதான். இப்படி செயற்கை கருத்தரித்தலில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு, அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்துள்ளார் கருத்தரித்தல் சிறப்பு சிகிச்சை மருத்துவர் நிவேதிதா.
"டெஸ்ட் டியூப் பேபி" முறை ஆரோக்கியமானதா?
ஐவிஎஃப், இக்ஸி முறையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என சொல்கிறோம். 10 பேர் குழந்தை இல்லை என வருகிறார்கள் என்றால், எல்லோருக்கும் ஐவிஎஃப் பண்ணமாட்டோம். முதலில் அடிப்படை சிகிச்சைகளை அளிப்போம். அந்த சிகிச்சைகளில் சிலர் கருவுறுவார்கள். சிலருக்கு அடிப்படை சிகிச்சை முறைகள் உதவாது. அவர்களுக்கு வேறுவழியில்லை என்ற சூழலில்தான், டெஸ்ட் டியூப் பேபி முறையை அறிவுறுத்துவோம். டெஸ்ட் டியூப் பேபி என்றாலே குழந்தை எப்படி இருக்கும்? குழந்தை நார்மலாக இருக்குமா? என்று எல்லோரும் கேட்பார்கள். சாதாரணமாக 100 பேர் கருவுறுகிறார்கள் என்றால், அதில் 97 பேருக்கு குழந்தை ஆரோக்கியமானதாகத்தான் இருக்கும். அதில் 3 சதவீத குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும். இது இயற்கை கருவுறுதலின் சதவீதம்.
அதேபோல அந்த 3-5 சதவீதம் என்பது ஐவிஎஃப் முறையிலும் இருக்கும். இயற்கையாக கருவுறும்போது குழந்தைக்கு பிரச்சனைகள் இருந்தால் நாம் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஐவிஎஃப் முறையில் குழந்தைக்கு பிரச்சனை என்றால், அதை பெரிதுப்படுத்தி, ஐவிஎஃப் என்பதால்தான் இப்படி ஆனது என நினைத்துக்கொள்வோம். இயற்கை கருவுறுதலில் என்னென்ன சவால்கள் உள்ளதோ, அதே சவால்கள் ஐவிஎஃப் முறையிலும் உள்ளது. ஐவிஎஃப் முறை நூறு சதவீதம் பாதுகாப்பானது என என்னால் கூறமுடியாது. ஆனால் 97 சதவீதம் அது பாதுகாப்பானதுதான். ஐவிஎஃப் முறையில் பிறக்கும் குழந்தைகள் அப்நார்மலாக, வித்தியாசமாக இருப்பார்கள் எனக்கூறுவார்கள். அப்படி எல்லாம் கிடையாது. வெளிநாடுகளில் ஐம்பது வயதில்கூட ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
சிலருக்கு கருப்பைக்கு வெளியில் உள்ள குழாயில் குழந்தை வளருவது ஏன்?
மாதம் மாதம் பெண்களுக்கு சினைப்பையில் இருந்து ஒரு முட்டை வெளியே வரும். அந்தநேரத்தில் உடலுறவு கொண்டால், விந்தணுக்கள் நீந்தி சென்று, அதனுடன் இணைந்து கரு உருவாகும். ஒருசிலருக்கு கருக்குழாய் அடைப்பு அல்லது பாதிப்பு இருந்தால், கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள குழாயிலேயே கரு தங்கி வளரத்தொடங்கிவிடும். இதனை எக்டோபிக் கர்ப்பம் எனக் கூறுவோம். இந்தக் கருவால் ஆரோக்கியமாக வளர முடியாது. ஏனெனில் குழந்தையை தாங்குவதற்கான அமைப்பு கருக்குழாய்க்கு இருக்காது.
ஆண், பெண் குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணங்கள் என்ன?
பொதுவாக பல பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை பிசிஓடி. முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல்பருமன் அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. சிலருக்கு இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும், குழந்தை இருக்காது. இதனை விவரிக்கப்படாத கருவுறாமை எனக்கூறுவோம். அதுபோல கருக்குழாய் அடைப்பு, ஃபைப்ராய்டு கட்டிகள் உள்ளிட்டவற்றாலும் பெண்களுக்கு கருவுறுதல் தள்ளிப்போகும். அரிதாக சிலருக்கு முட்டையின் எண்ணிக்கையே குறைவாக இருக்கும். அதாவது இளம்வயதிலேயே அவர்களுக்கு மாதவிடாய் நின்றிருக்கும்.
ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, விறைப்புத்தன்மை இல்லாமல் இருப்பது, வேகமாக விந்து வெளியேறுதல், விந்துக்கள் வெளியே வராமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் காரணமாக இருக்கின்றன.
கருமுட்டை, விந்தணு தானம் என்றால் என்ன?
முன்னர் சொன்னவாறு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கருமுட்டை தீர்ந்துவிடும். அவர்களுக்கு கருமுட்டை இருக்காது. இந்த பிரச்சனை உடைய பெண்கள் கருவுற வேண்டும் என ஆசைப்பட்டால், அவர்களுக்கு வேறு பெண்களிடம் இருந்து முட்டையை தானமாக வாங்கி, அவர்களின் கணவரின் விந்தணுவுடன் இக்ஸி செய்து, கரு உருவாக்கி, அந்த கருவை சம்பந்தப்பட்ட பெண்ணின் கருப்பையில் வைத்துவிடுவோம். இது யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும்தான் செய்வோம். இது தம்பதியரின் விருப்பம் இருந்தால் மட்டும்தான் செய்யமுடியும். இதேபோன்றுதான் விந்து தானமும்.
விந்தணு தானம் பெற்று உருவாகும் குழந்தை யார் ஜாடையில் இருக்கும்?
இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் மற்றும் பயம்தான். தானம் பெறுபவர்களுக்கு ஏற்றவாறு உடல்தோற்றத்தை கொண்டவர்களைத்தான் தானம் வழங்குபவராக முதலில் தேர்ந்தெடுப்போம். இப்போது ஒரு பெண்ணுக்கு கருமுட்டை தானம் பெறுகிறோம் என்றால், தானம் தருபவரின் ரத்த வகை, உயரம், எடை, நிறம் போன்றவற்றை பார்த்துதான் தேர்வு செய்வோம். தானம் பெறுபவர், வழங்குபவர் என இரண்டுபேரின் வெளிப்புறத் தோற்றத்தை ஒற்றுமைப்படுத்திதான் தேர்வு செய்வோம். அதுபோலத்தான் விந்தணு தானம் செய்பவர்களையும் தேர்வு செய்வோம். புறத்தோற்றத்தை வைத்துதான் தேர்வு செய்கிறோம் என்பதால், அவர்களின் முட்டை அல்லது விந்து தானம் மூலம் உருவாகும் குழந்தை பெற்றோர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்காது.
கருவுற்றவர்கள் இயல்பான வேலைகளை செய்யலாமா?
முதல் மூன்று மாதம் எந்த வேலையும் செய்யக்கூடாது என வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் குழந்தை கலைந்துவிடுமோ என்ற பயம். ஆனால் அது அப்படி கிடையாது. முதல் மூன்று மாதத்தில் கரு என்பது உருவாகும். அது ஆரோக்கியமாக உருவானால் அப்படியே தொடரும். எனவே பயம் தேவையில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. சிலருக்கு குறை மாதத்திலேயே குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவர்களே சில கட்டுப்பாடுகளைக் கூறுவோம். மற்றபடி முழு நேரம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது.
- குழந்தையின் கனவில் நரி வந்து விளையாட்டு காட்டுமா?
- அனிச்சை போன்றது! வலிப்புத் தாக்கத்தால் கூட குழந்தை சிரிக்கக்கூடும்?
குழந்தை சிரிப்பை பார்த்தாலே நம் மனதில் ஒரு புன்னகை எழும். குழந்தைகள் சிரிக்கும்போது நாமும் அவர்களோடு சேர்ந்து புன்னகைப்போம். அவர்களின் சிரிப்பை ரசிப்போம். குழந்தை விழித்திருக்கும்போது சிரிப்பது சரிதான். ஆனால் தூங்கும்போதும் சிலநேரங்களில் சிரிப்பார்கள். இதனை பலரும் கவனித்திருப்போம். அந்தப் புன்னகையின் அர்த்தம் என்ன? தூங்கும்போது குழந்தை சிரிப்பதற்கான காரணம் என்னவென பலரும் யோசித்திருப்போம். அதற்கு பலரும் நரி கனவில் வந்து விளையாட்டு காட்டும் எனக்கூறுவார்கள். ஆனால் அதற்கான உண்மையான காரணத்தைத்தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
மூன்று தூக்க நிலைகள்...
பெரியவர்கள், கனவில் நேர்மறையான விஷயங்கள் நடந்தால் சிரிப்பார்களாம். ஆனால் குழந்தை விஷயத்தில் அது உண்மையா என தெரியவில்லை. இதற்கான ஆராய்ச்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. குழந்தையின் வயது, தூக்கத்தின் நிலையை பொறுத்து அவர்கள் சிரிப்பதற்கான காரணங்கள் மாறுபடும் எனக் கூறப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தூக்க சுழற்சியில் மூன்று நிலைகள் உள்ளனவாம். அமைதியான தூக்கம், நிச்சயமற்ற தூக்கம் மற்றும் சுறுசுறுப்பான தூக்கம். சுறுசுறுப்பான தூக்கம் என்பது பெரியவர்களில் காணப்படும் விரைவான கண் அசைவு (REM) தூக்க நிலையைப் போன்றது. விரைவான கண் அசைவு தூக்கநிலையில் தூங்குபவர் தெளிவாக கனவு காணும் போக்கைக் கொண்டுள்ளனர்.
ஆனால் சுறுசுறுப்பான தூக்கத்திற்கும், REM தூக்கத்திற்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், சுறுசுறுப்பான தூக்கத்தின் போது குழந்தைகள் முடங்கிப் போவதில்லை. சுறுசுறுப்பான தூக்கத்தில் இருக்கும்போது, ஒரு குழந்தை நடுங்கலாம், உறிஞ்சும் அசைவுகளைச் செய்யலாம், கைகால்களை அசைக்கலாம், புன்னகைக்கலாம் அல்லது முகம் சுளிக்கலாம். தூக்கத்தின் போது குழந்தை சிரிப்பது அனிச்சை போன்றது என்று பழைய ஆராய்ச்சிகள் விவரித்துள்ளன. தூக்கத்தின்போது ஏற்படும் தன்னிச்சையான புன்னகைகள், புன்னகைக்கப் பயன்படுத்தப்படும் தசைகளை வளர்க்க உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க வலிப்புத் தாக்கமும் முக்கிய காரணமாக இருக்கலாம்
வலிப்புத் தாக்கம்...
பொதுவாக, ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கத்தால் (சிரிக்கும் வலிப்புத் தாக்கம்) ஒரு குழந்தை சிரிக்கக்கூடும். ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கம் என்பது ஒரு வகை வலிப்புத் தாக்கமாகும். இது திடீரென சிரிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தூங்கும் தருவாயில் இருக்கும்போது ஜெலாஸ்டிக் வலிப்பு ஏற்படலாம். தூக்கத்தின் போது ஜெலாஸ்டிக் வலிப்பு ஏற்பட்டால், குழந்தை விழித்தெழுந்து, வலிப்பு முடிந்ததும் மீண்டும் தூங்கச் செல்லலாம். ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கங்கள் 10 அல்லது 20 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். மேலும் அவை முகம் சுருங்குதல், முணுமுணுத்தல் அல்லது உதடுகளை அசைத்தல் போன்ற பிற அறிகுறிகளுடன் ஏற்படலாம். பொதுவாக, புதிதாகப் பிறந்த குழந்தையின் முகபாவனைகள், ஒரு பெரியவரின் முகபாவனைகளைப் போல் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது, எல்லா உணர்ச்சிகளையும் ஒரு மனிதன் வெளிக்காட்டமாட்டான். சில சூழல்களை புன்னகையுடன் கடப்பான். அதுபோல சில நேரங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உண்மையில் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கும்போதும் கூட சிரிப்பார்களாம். 1 வயதான குழந்தைகளிலும் கூட சிரிப்பு என்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கான வெளிப்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. 2 மாதம்வரை குழந்தைகள் தங்கள் முழு புன்னகையை வெளிப்படுத்தமாட்டார்கள். குழந்தைகள் நேரடியாக ஒருவரைப் பார்க்காமலேயே புன்னகைப்பார்கள். இது சாதரணமானது. ஆனால் குழந்தையுடன் அதிகம் இருப்பவர்கள் அதாவது அவர்களின் பெற்றோர்களோ அல்லது பராமரிப்பாளர்களோ அல்லது அவர்களை கவனித்து கொள்பவர்களோ சோகமாகவோ அல்லது மனசோர்வுடனோ இருந்தால் குழந்தைகள் குறைவாகவே சிரிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இதனால் முடிந்தவரை குழந்தை பராமரிப்பாளர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
- வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்ட மீன் சமையல்!
- செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும்.
செட்டிநாடு சமையல் தனித்துவமான நறுமணமும், காரசாரமான சுவையும் கொண்ட உணவுகளுக்குப் பெயர் போனது. அந்த சிறப்பு மிக்க பட்டியலில், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் ஒரு தனி இடத்தைப் பிடிக்கிறது. இது வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்டு, பூண்டின் தனித்துவமான சுவையையும், அற்புதமான வாசனையையும் தாங்கி நிற்பதால், இதனைச் சுவைப்பவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும். சாதத்துக்குத் துணையாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ பரிமாற ஏற்ற இந்த உணவு, சுவை மிகுந்தது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும்கூட. இந்த ரெசிபியை நமக்கு செய்துகாட்டுகிறார் ஃபெரோஸ் ஹோட்டலின் செஃப் சதீஷ் தாமு.

செய்முறை
* முள் இல்லாத மீனை 65 மசாலா சேர்த்து நன்றாக ஊற வைத்து பொரித்து எடுத்து வைக்கவும். (பொரித்த மீனை கையால் லேசாக மசிக்கவும்.)
* ஒரு கனமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
* எண்ணெய் சூடானதும், முதலில் சோம்பு சேர்த்து பொரிய விடவும். சோம்பு நல்ல மணம் வந்ததும், கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
* பிறகு, குண்டு வரமிளகாயை சேர்த்து வறுக்கவும்.
* அடுத்ததாக, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும். வெங்காயம் நல்ல பொன்னிறமாக வரும்வரை வதக்க வேண்டும்.
* வெங்காயம் வதங்கியதும், நசுக்கி வைத்த பூண்டை போட்டு, அதன் பச்சை வாசனை போகும்வரை நன்றாக வறுக்கவும். இந்த டிஷ்ஷுக்கு பூண்டின் சுவை மிக முக்கியம். நல்ல பிரவுன் கலராகும்வரை பூண்டை வறுக்க வேண்டும்.
* வதக்கிய பூண்டு மற்றும் வெங்காய கலவையில், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
* அடுப்பை குறைத்து வைத்து, மிளகாய் தூள், சீரகத் தூள், தனியா தூள், சோம்புத் தூள், சுவைக்காக செட்டிநாடு மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
* இந்த மசாலாக்கள் எண்ணெயிலேயே ஸ்லோ குக் (மெதுவாக வறுக்கப்படுவது) ஆகி, நல்ல மணம் வரும் வரை கிளறவும்.
* சிறிது உப்பு சேர்த்து கிளறவும்.
* மசாலா வேக, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். மசாலா பச்சை வாசனை நீங்கி, நன்கு குக் ஆனதும் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.
* மசாலா தயாரானதும், முன்னரே பொரித்து, மசித்து வைத்த மீன் துண்டுகளை அதில் சேர்த்து, மசாலா, மீன் துண்டுகளுடன் நன்றாகக் கலக்கும்படி மெதுவாக புரட்டவும்.
* இறுதியில், தேங்காய்த் தூளைச் சிறிதளவு தூவி, மீண்டும் ஒருமுறை கிளறி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் தயார்.
* கொத்தமல்லித் தழை, வறுத்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் குண்டு மிளகாய் ஆகியவற்றால் அலங்கரித்துப் பரிமாறவும்.

ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள மீன் பூண்டு வறுவல்
ஆரோக்கிய நன்மைகள்
1. மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன.
2. மீனில் உள்ள வைட்டமின் D மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.
3. இந்த உணவில் பூண்டு அதிக அளவில் சேர்க்கப்படுவதால், செரிமானத்தை மேம்படுத்துவதுடன், பூண்டில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றன.
4. செட்டிநாடு சமையலில் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன், உணவுக்கு நல்ல சுவையையும் தரும்.
- தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய பகுதி ஆடை அலங்காரம்.
- ஒவ்வொரு உடையும் இந்தியாவின் கலாச்சார கதையைச் சொல்கிறது.
பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். புத்தாடை அதற்கு இன்னும் அழகை கூட்டுகிறது. இந்நிலையில் அனைவரின் மனதிலும் எழும் கேள்வி, "தீபாவளிக்கு என்ன ட்ரெஸ் போடுவது?" என்பதுதான். தீபாவளிக்கு என்ன அணியலாம் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கான பதிவுதான் இது. தீபாவளிக்கு ஆடை அணிவது என்பது வெறும் பாரம்பரிய நடைமுறை மட்டுமல்ல. மக்கள் தங்கள் தனித்துவமான பாணிகளைக் காட்ட ஒரு சிறந்த வழியாகும். அது மின்னும் புடவைகளாக இருந்தாலும் சரி, நேர்த்தியான லெஹங்காக்களாக இருந்தாலும் சரி, துடிப்பான சல்வார் கமீஸ் ஆக இருந்தாலும் சரி... ஒவ்வொரு உடையும் இந்தியாவின் கலாச்சார கதையைச் சொல்கிறது. மேலும் தீபாவளி ஆடைகள், மாறிவரும் நவீன காலத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. இதில் சில உடைகள் குறித்து பார்ப்போம்.
புடவை
பெண்களை மிகவும் அழகாக காட்டும் உடை என்றால், அது புடவைதான். அதிலும் நம்மை தனியாக எடுத்துக்காட்ட வேண்டுமானால், நீலம், அடர்சிவப்பு, அடர்பச்சை போன்ற பிரகாசமான நிறங்களில் புடவை கட்டலாம். ஆனால், அந்த கலர் நமக்கு ஏற்றதாக இருக்குமா என்றும் ஒருமுறை பார்த்துக்கொள்ளலாம். தற்போதையை தலைமுறையினர் பலருக்கும் புடவை கட்டத்தெரியாது. சிலருக்கு சிரமமாக இருக்கும். அதற்கான தீர்வாக தீபாவளி ட்ரெண்டிங்கில் இப்போது ரெடிமேட் சாரீஸ் வந்துள்ளன. இது பாரம்பரியம் மற்றும் ஸ்டைல் என இரண்டையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டைலாகவும் இருக்கணும், புடவையாகவும் இருக்கணும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு.
அனார்கலி
சிலருக்கு புடவை கட்டிக்கொண்டு நீண்டநேரம் இருப்பது சௌகரியத்தை அளிக்காது. அப்படி இருப்பவர்கள் பாரம்பரியம் மற்றும் சௌகரியத்தை கொண்ட அனார்கலியை தேர்வு செய்யலாம். கொஞ்சம் எடுத்துக்காட்ட வேண்டுமானால் எம்பிராய்டரி செய்யப்பட்ட அனார்கலியை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். பல வண்ணங்களில், கச்சிதமான டிசைனிங் கொண்ட இந்த ஆடைகள், தீபாவளி போன்ற விழாக்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கின்றன.

பல வண்ணங்களில் கச்சிதமான டிசைனிங் கொண்ட ஆடைகள், தீபாவளி போன்ற விழாக்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும்
லெஹங்கா
பட்டு, வெல்வெட், ஜார்ஜெட் போன்ற துணிகளில், ஜர்தோசி, எம்ப்ராய்டரி, சீக்வின்ஸ், முத்துக்கள் மற்றும் கற்கள் கொண்டு செய்யப்படும் நேர்த்தியான வேலைப்பாடுகள் லெஹங்காவுக்கு ஒரு ராஜரீக தோற்றத்தை அளிக்கின்றன. லெஹங்காவுடன் அணியும் துப்பட்டா, அதன் அழகை மேலும் அதிகரிக்கிறது. மெல்லிய துணியில், லெஹங்கா மற்றும் சோளியின் வேலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு டிசைன் செய்யப்பட்ட துப்பட்டா, பெண்ணுக்கு நல்ல தோற்றத்தை அளிக்கிறது. இப்போதெல்லாம் மணப்பெண்கள் கூட லெஹங்காவைத்தான் அணிகின்றனர்.
பலாசோ
பலாசோவில் நிறைய ஸ்டைல் செய்யலாம். பளீர் நிறங்களில் கோல்ட் ஜரிகைகள் கொண்ட பலாசோ வாங்கி அதற்கு டாப் அல்லது குர்த்தா அணிந்து மேட்ச் செய்து அசத்தலாம்.
சல்வார்...
பெண்கள் சல்வார் அணிந்து சுடிதார் அணிவது இயல்பு. ஆனால் சல்வாரிலும் ஜரிகை டிசைனில் இப்போது ட்ரெண்டிங்கில் நிறைய கிடைக்கின்றன. அதற்கேற்றவாறு அணிகலன்கள் அணிந்தால் நன்றாக இருக்கும்.
லாங் கவுன்
முழு நீள குர்த்தா அல்லது முழு நீள கவுன் என்ற பெயரில் சுங்குடி புடவையில் கஸ்டமைஸ்டு முறையில் தைத்து அணிவது சமீபத்திய ட்ரெண்ட். அது இந்த தீபாவளிக்குப் பக்கா பொருத்தமாக இருக்கும்.
பாவாடைச் சட்டை
ஜரிகை வைத்தப் பட்டுப் பாவடை அல்லது கற்கள் பதித்த டிசைனர் பட்டுப்பாவடை. இப்படி எது தேர்வு செய்தாலும் நல்ல தேர்வாக இருக்கும்.
- எல்லாருக்கும் மருதாணி ஒரே அளவாக சிவக்காது. சிலருக்கு நன்றாக சிவக்கும்; சிலருக்கு குறைவாக சிவக்கும்!
- அதிகம் சிவக்கும் தன்மைகொண்ட மருதாணி இலைகளை பயன்படுத்துங்கள்!
பண்டிகைகளாக இருந்தாலும் சரி, வீட்டு விசேஷங்களாக இருந்தாலும் சரி மேக்கப் இல்லாமல் அந்த நிகழ்ச்சி இப்போதெல்லாம் முழுமையடைவதில்லை. அதுவும் மெஹந்தி இல்லாமல் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் பண்டிகை தினத்திற்கு முன்தினம் இரவு கையில் மருதாணி வைக்காமல் பெண்கள் தூங்கமாட்டார்கள். ஏன் ஆண்களும் வைத்துக்கொள்வர். மற்ற பண்டிகைகளைவிட தீபாவளி அப்படித்தான் போகும். தீபாவளிக்கு முந்தைய இரவு கை நிறைய மருதாணி வைத்துக்கொண்டு நல்ல தூக்கத்தில் இருக்க அதிகாலையில் எண்ணெய்க்குளியல் போட சொல்வார் அம்மா. எழுந்தவுடன் முகம் கூட கழுவாமல் கையை கழுவி, சகோதரர், சகோதரிகளிடத்தில் சென்று யார் கை அதிகமாக சிவந்திருக்கு என்று பார்த்தபின்தான் முகம் கழுவுவோம். அப்படி ஒரு ஆர்வம் மருதாணி போடுவதில். இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது.
பலரும் மருதாணி போட காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான பதிவுதான் இது. வீட்டில் நாம் அனைவரும் ஒரேநேரத்தில் மருதாணி போட்டாலும், எல்லோருக்கும் ஒரே அளவு சிவந்திருக்காது. சிலருக்கு அதிகமாக சிவந்திருக்கும், சிலருக்கு மிதமான அளவில் சிவந்திருக்கும், சிலருக்கு மிகவும் குறைவாக சிவந்திருக்கும். அதற்கு காரணம் அவரவரது உடல்நிலை. இருப்பினும் ஈரம் எளிதில் காய்வதாலும் பலருக்கு சிவந்திருக்காது. சிலர் மருதாணி வைத்துவிட்டு அப்படியே தூங்கும்போது கையில் இருந்து விழுந்துவிடும். இந்நிலையில் மருதாணி எளிதில் சிவக்க சில டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.

மருதாணியை அரைத்த உடனேயே போடவேண்டும்
அழகிற்காக மட்டுமின்றி உடல் சூட்டை தணிப்பதற்காகவும், உடலில் உள்ள பித்தத்தை குறைப்பதற்காகவும் என மருதாணி வைப்பதற்கு மருத்துவ ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன.
- புளி பயன்படுத்தப்படும் உணவுகளில் வெந்தயம் சேர்க்கப்படும்.
- வெந்தயத்தின் அதிக பயன்பாடு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.
தமிழர்களின் உணவுமுறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை மேம்படுத்துவதோடு பல நோய்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் வெந்தயம். பொதுவாக புளி பயன்படுத்தப்படும் உணவுகளில் வெந்தயம் சேர்க்கப்படும். ஏனெனில் புளி சூட்டை கிளப்பி, வயிற்று வலியை உண்டாக்கும் எனக் கூறுவார்கள். வெந்தயம் வயிற்று வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால்தான் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி பல மருத்துவ குணங்கள் நிறைந்தது வெந்தயம். உடலுக்குத் தேவையான கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் வெந்தயத்தில் காணப்படுகின்றன. வெந்தயத்தில் பல நன்மைகள் இருந்தாலும், அதனால் உடல் உபாதைகளும் ஏற்படுமாம். அது எப்படி எனப் பார்ப்போம்.
தாய்ப்பால் அதிகரிப்பு
குழந்தை பிறந்த தொடக்கத்தில், சில பெண்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காது. அப்போது பலரும் நாட்டு வைத்தியங்கள் சிலவற்றை பரிந்துரைப்பர். அந்த வகையில் வட ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தெற்கு ஐரோப்பாவில் உள்ள மக்கள் பாரம்பரியமாக தாய்ப்பாலை அதிகரிக்க வெந்தயத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். வெந்தயம் பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்க உதவும் என பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும்
ஆண்களின் விந்தணுக்களால் உற்பத்தி செய்யப்படும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவை அதிகரிக்க வெந்தயம் உதவும். வயதாகும்போது டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் இயற்கையாகவே குறைகின்றன. இது எரிச்சல், மனநிலை மாற்றம் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு வழிவகுக்கும். வெந்தய பயன்பாடு டெஸ்டோஸ்டிரோன் சுரக்க உதவுவதோடு, பாலியல் உந்துதலையும் மேம்படுத்துகிறது. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 12 வாரங்களுக்குப் பிறகு 35-65 வயதுடைய 45 ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவு 46% வரை அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறையும் ரத்த சர்க்கரை அளவு
நீரிழிவு நோய் அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலை உள்ளவர்களுக்கு வெந்தயம், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். ரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்கும். இயற்கையிலேயே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் பண்புகள் கொண்டது. நீரிழிவு காரணமாக உண்டாகும் நீரிழிவு நரம்பியல், கேட்கும் திறன் மற்றும் பார்வை இழப்பு, இதய நோய், சிறுநீரக நோய், பல் சிதைவு, ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என எல்லாவற்றுக்கும் தீர்வாக நாம் வெந்தயத்தை சொல்ல முடியும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க வெந்தயம் உதவுகிறது!
குறையும் கொழுப்பு
வெந்தயம் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதில் உள்ள அதிக நார்ச்சத்து, ரத்தத்தில் உள்ள மொத்த கொழுப்பு, கெட்ட கொழுப்பு (LDL) மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கவும் உதவும். ஆனால் இதுகுறித்த ஆராய்ச்சிகள் இன்னும் தேவைப்படுகின்றன.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு
வெந்தயத்தில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் எனப்படும் சேர்மங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜனைப் போலவே செயல்படுகின்றன. இது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்றுவலி உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
எந்த அளவில் வெந்தயத்தை பயன்படுத்த வேண்டும்?
வெந்தயத்தின் பயன்பாடு நோய்களின் தன்மையை பொறுத்து மாறுபடும். வெந்தயத்தை எந்த அளவு, எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து முடிவெடுக்கலாம்.
வெந்தய பயன்பாடு பாதுகாப்பானதா?
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான். அதுபோலத்தான் வெந்தயத்தின் அதிக பயன்பாடு ஆபத்தை விளைவிக்கக்கூடியது. வெந்தயத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரல் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். அதுபோல கர்ப்பிணிகளும் வெந்தயத்தை அதிகளவு எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வாமை உள்ளவர்களும் வெந்தயத்தை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு 21 கிராமுக்கு மேல் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது பாதுகாப்பானது.
- வாரத்திற்கு 2 முறை சிக்கன், மற்ற நாட்களில் மீன் எடுத்துக்கொள்ளலாம்!
- உடற்பயிற்சி செய்யும் பெண்கள் தினமும் 5 முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம்!
தமிழகத்தில் பாடி பில்டிங்கில் கலக்கிவரும் துணிச்சல் மிக்க பெண்ணான ஷெனாஸ் பேகம் குறித்துதான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த பின்னர் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஜிம்மில் சேர்ந்த ஷெனாஸ், எதிர்பாராத விதமாகத்தான் பாடி பில்டிங்கில் காலடி எடுத்து வைத்துள்ளார். பிறகு பாடி பில்டிங்கில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஷெனாஸ் பேகத்திற்கு இன்று அதுவே அடையாளமாக மாறிவிட்டது. ஷெனாஸ் பேகம், ராணி ஆன்லைனுக்கு அளித்துள்ள நேர்காணலின் ஒரு பகுதியை இங்கு காண்போம்...
பாடி பில்டிங் செய்யும் உங்களை மற்றவர்கள் வித்தியாசமாக பார்ப்பதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
இதில் எனக்கு பல அனுபவங்கள் உண்டு. பெரும்பாலானவர்கள் என்னை வித்தியாசமாகவே பார்ப்பார்கள். ஆனால் அதை எப்போதும் ஒரு நெகட்டிவாக நான் எடுத்துக்கொள்ளவே மாட்டேன். போட்டிகளின் சமயத்தில் தீவிரமாக டயட் இருக்கும்போது கொழுப்பு எல்லாம் இல்லாமல், இயல்பாகவே எனது முகம், கை எல்லாம் மாறுபடும். சாதாரண நாட்களில் இயல்பாக டயட் இருக்கும்போது அப்போது முகம் வேறுபடும். நம் ஊரில் பெண்கள் பலரும் என்ன நினைப்பார்கள் என்றால், புடவை கட்டிக்கொள்ள வேண்டும், உடல் மென்மையாக இருக்க வேண்டும் என்றுதான். பெண்களை மஸுல்ஸோடு பார்க்க விரும்பமாட்டார்கள். நான் பைக்கில் போகும்போது நிறையபேர், நீங்க பொண்ணா? பையனா? என சந்தேகமாகவே கேட்பார்கள். உங்களுக்கு எப்படி தசைகள் இப்படி இருக்கு? என கேட்பார்கள். அதை நான் பாசிட்டிவாகவே எடுத்துக்கொள்வேன்.
பாடி பில்டிங் செய்பவர்கள், சிக்கன் போன்றவற்றை பாதி வேகவைத்த நிலையில் சாப்பிடவேண்டும் என்பது உண்மையா?
சிக்கனே முதலில் சாப்பிடக்கூடாது. என்னிடம் பயிற்சி பெறுபவர்களிடம் நான் சொல்வது என்னவென்றால், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டுமுறை மட்டும் சிக்கன் எடுத்துக் கொள்ளுங்கள். மற்ற நாட்கள் மீன் எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான். மீன் உடலுக்கு மிகவும் நல்லது. சிக்கனில் புரோட்டீன் உள்ளது. பாடி பில்டர்களுக்கு ஒருநாளைக்கு இவ்வளவு புரோட்டீன் தேவை என்பதால் தினமும் சிக்கன் சாப்பிடுவோம். ஆனால் பாதி வேகவைத்த சிக்கனை சாப்பிடக்கூடாது. முழுமையாக வெந்திருக்க வேண்டும். எண்ணெய், மசாலா எல்லாம் இல்லாமல், வேகவைத்தது மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீனைவிட சிக்கன் விலை குறைவாக இருக்கும். எனவே தினமும் மீன் எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் சிக்கன் எடுத்துக்கொள்வோம். அதேநேரம் சிக்கனில் மட்டும் புரோட்டீன் இல்லை. அதற்கு மாற்றாக காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். முட்டை எடுத்துக் கொள்ளலாம். சிறுவர்கள் 3-4 முட்டைகள் ஒரு நாளைக்கு சாப்பிடலாம். பெண்கள் 5 முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம். 5 முட்டை எடுத்துக் கொள்ளும்போது 2 மட்டும் மஞ்சள் கருவுடன் எடுத்துக்கொண்டு, மற்ற மூன்றிலும் வெள்ளை பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். முட்டை மற்றும் தானியங்களில் புரோட்டீன் உள்ளது.
பாடி பில்டிங் குறித்து வீட்டில் இருப்பவர்களின் விருப்பம்?
நான் பாடி பில்டிங் செய்ய தொடங்கியபோது என் குழந்தைகள் சின்னப் பிள்ளைகள். இப்போது என் மகன் 12ஆம் வகுப்பு படிக்கிறான். மகள் 10ம் வகுப்பு. அவர்கள் எப்போதுமே என் பணியால் தாழ்வாக உணர்ந்ததில்லை. எனக்கு எப்போதும் சப்போர்ட் செய்வார்கள். பொதுவாகவே நமது ஊர்களில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரம் இருக்கும். எங்கள் வீட்டில் முதலில் டிராக் பேண்ட், டி-சர்ட் போடவே அனுமதிக்கவில்லை. அவர்களை குறைசொல்ல முடியாது. காரணம் நமது கலாச்சாரம் அப்படி. மற்றவர்கள் என்னைப்பற்றி கேட்கும்போது அவர்களுக்கு கஷ்டமாக இருந்தது. பின் போகபோக புரிந்துகொண்டார்கள். முஸ்லிம் என்று இல்லை எந்த வீட்டிலும் பெண்கள் பிகினி உடை அணிந்து மேடையில் இருப்பதை குடும்பத்தினர் விரும்பமாட்டார்கள். ஆனால் பாடி பில்டிங்கிற்கான உடை அதுதான் என பின்னர் வீட்டில் புரிந்துகொண்டார்கள்.....
- 10 நிமிடங்கள் முடிக்கு மசாஜ் கொடுத்து, சுடுநீரில் முடியை கழுவவேண்டும்.
- பேன் சீப்பை வைத்து சீவினாலே பொடுகுகள் அனைத்தும் கொட்டிவிடும்.
உடல்நலனைவிட தற்போதெல்லாம் சரும நலனுக்கு மெனக்கெடுபவர்கள்தான் அதிகம். இதற்காக பலரும் பியூட்டி பார்லர்களுக்கு சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்கின்றனர். அப்படி பியூட்டி பார்லர் செல்ல இயலாதவர்கள், வீட்டிலேயே சருமத்தின் அழகை மெருகூட்ட, சில பியூட்டி டிப்ஸ்களை கூறியுள்ளார் அழகுக்கலை நிபுணர் நிஷா கோஷ். அந்த குறிப்புகளை காணலாம்.
வறண்ட சருமம் இருக்கக்கூடாது!
நமக்கு எண்ணெய் சருமமாக கூட இருக்கலாம். ஆனால் வறண்ட சருமமாக இருக்கக்கூடாது. வறண்ட சருமம், அரிப்பு, செதில்கள் மற்றும் வறண்ட திட்டுகள் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும், மேலும் புற ஊதா கதிர்களால் எளிதாக சேதமடையக்கூடும், எனவே வறண்ட சருமம் உள்ளவர்கள், பாதாம் எண்ணெய் இரண்டு சொட்டுகள், ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டுகள் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்துவிட்டு, காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் முகம் கழுவுவதால் சருமத்தை நன்றாக பாதுகாத்துக் கொள்ளமுடியும். இதை தினசரி செய்யும்போது அழகான மற்றும் வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு எண்ணெய் சருமம் கிடைக்கும்.
பொடுகு பிரச்சனைக்கு தீர்வு
பொடுகு பிரச்சனை நிறைய இருப்பவர்கள், முல்தானி மெட்டி, எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக்கரு ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து ஸ்கேல்ப்பில் அப்ளை செய்யவேண்டும். ஒரு பத்து நிமிடம் மசாஜ் கொடுக்கவேண்டும். பின்னர் சுடுநீரில் முடியை கழுவவேண்டும். பின்னர் சீப்பை வைத்து சீவினாலே பொடுகுகள் அனைத்தும் கொட்டிவிடும். இதை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். முடி பார்க்க வழுவழுப்பாக சிக்கில்லாமல் தெரிய முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சைச் சாறு, புதினாச்சாறு ஆகிய மூன்றையும் நன்றாக பீட்செய்து முடியில் அப்ளை செய்யவேண்டும். 20 நிமிடம் அல்லது அரைமணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு முடியை கழுவினால், பளப்பளப்பாக, வழுவழுவென முடி நன்றாக இருக்கும்.
கருகருவென நீளமான முடிக்கு!
அதுபோல முடி நீளமாக கருகருவென வளரவேண்டுமென எண்ணினால், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கேரட்டின் இலையை துண்டு துண்டாக வெட்டி போட்டு சூடுப்படுத்த வேண்டும். அதில் கொஞ்சம் மிளகு, வெந்தயம் சேர்க்கவேண்டும். அந்த எண்ணெய்யை நன்கு காய்ச்சி, வடிகட்டி ஒரு மூன்று நாட்கள் வெயிலில் வைக்கவேண்டும். அதை தலைக்கு தேய்த்தால், முடி கருகருவென நன்றாக வளரும். புழுவெட்டு இருப்பவர்கள் தலையில் சின்ன வெங்காயத்தை நன்கு தேய்க்க வேண்டும். மூன்று மாதங்கள் தொடர்ந்து தேய்த்தால், அந்த இடத்தில் குட்டி குட்டி முடி வளரத் தொடங்குவதை நீங்கள் பார்ப்பீர்கள். அதுபோல கண்புருவம் அடத்தியாக வேண்டும் என்றால், விளக்கெண்ணெய்யை அப்ளை செய்யலாம்.
கருமை நீங்க...
கண்ணில் கருவளையம் இருப்பவர்கள், உருளைக்கிழங்கு சாறுடன், கடலைமாவை சேர்த்து பத்துபோல போட்டு வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். உதடு கருப்பாக இருப்பவர்கள், தாங்களாகவே ரோஸ்வாட்டர் தயாரித்து அப்ளை செய்தால் நன்றாக இருக்கும். சந்தைகளில் வாங்குவதில் நிறைய போலிகள் உள்ளன. ரோஸ் வாட்டர் எப்படி செய்வது என நான் கூறுகிறேன். ரோஜாப்பூக்கள் ஒரு கிலோ வாங்கினோமானால், அதன் இதழ்களை எடுத்து தண்ணீரில் கொதிக்கவைக்க வேண்டும். ஒருகிலோ இதழ் 100 மில்லிக்கு வரும்வரையில், கொதிக்கவைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து வடிகட்டி, தினமும் காட்டன் துணியால் தொட்டு உதட்டில் தடவி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். உதடு ரோஸ் நிறத்திற்கு மாறும். இவை அனைத்திற்கும் மேலாக, என்னதான் ஸ்கின் கேர் செய்தாலும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பட்டர் ஃப்ரூட் எடுத்துக்கொள்ளலாம். இது கர்ப்பப்பைக்கும் நல்லது, முகத்திற்கும் பளபளப்பு மற்றும் அழகை தரும்.
- இது டயட் இருப்பவர்களுக்கும், கொழுப்பைக் குறைக்க விரும்புவோருக்கும் மிகவும் நல்லது.
- ஸ்டீமர் முறையில் சமைக்கும்போது எண்ணெய் ஒரு துளி கூட பயன்படுத்தப்படுவது இல்லை.
பாரம்பரிய பார்சி உணவு வகைகளில் ஒன்றாகத் திகழும் பத்ராணி மச்சி, அதன் அலாதியான சுவை மற்றும் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளால் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் பெரும் புகழ் பெற்று விளங்குகிறது. இது, மீனை எண்ணெயில் பொரித்தோ அல்லது குழம்பாக வைத்தோ சமைக்கப்படும் வழக்கமான முறை கிடையாது. மாறாக, மீன் துண்டுகளில் காரசாரமான பச்சை சட்னியைப் பூசி, அவற்றை வாழை இலையில் நேர்த்தியாகச் சுருட்டி, பின்னர் ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான மீன் ரெசிபியை சமையல் கலைஞர் செஃப் கதிரவன் நமக்காக செய்து காட்டியுள்ளார்.

செய்முறை
* மீன் துண்டுகளை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அதில் சிறிதளவு உப்பு மற்றும் அரை லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி ஊற வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடாக்கி, அது லேசாக கொதிக்க ஆரம்பித்தவுடன், சுத்தம் செய்து வைத்துள்ள கொத்தமல்லி மற்றும் புதினா தழைகளைப் போட்டு 2 நிமிடங்கள் வைத்து எடுத்து, ஆற வைக்கவும்.
* ஆறிய தழைகளுடன், நீளமாக நறுக்கிய 4 பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, 10 பல் பூண்டு மற்றும் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பாதியாக அரைக்கவும். பிறகு, துருவி வைத்துள்ள ஒரு கப் தேங்காயையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்த மசாலாவில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், புளிப்புக்கு ஏற்ற அளவில் லெமன் ஜூஸ் ஆகியவற்றைச் சேர்த்து கையால் நன்கு கிளறவும்.
* இந்தக் காரசாரமான மசாலாவை, ஏற்கனவே உப்பு மற்றும் லெமன் சேர்த்து ஊற வைத்துள்ள மீன் துண்டுகளுடன் நன்கு கலக்கவும்.
* ஒரு சுத்தமான வாழை இலையின் நடுவில் மசாலா தடவிய மீன் துண்டை வைத்து, அதை நான்கு பக்கங்களிலும் மடித்து, ஒரு பார்சல் போல சுற்றவும்.
* சுற்றப்பட்ட வாழை இலை பார்சல்களை ஸ்டீமரில் (ஆவியில் வேக வைக்கும் பாத்திரம்) வைத்து, மீன் நன்கு வேகும் வரை சுமார் 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைக்கவும்.
* வேகவைத்த மீனை ஸ்டீமரில் இருந்து எடுத்து, வாழை இலையை கவனமாகப் பிரித்து, ஒரு பரிமாறும் தட்டில் மாற்றி, உடனடியாகப் பரிமாறவும்.

சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மீன் துண்டுகள்
பத்ராணி மச்சியின் சிறப்புகள்
* ஸ்டீமர் முறையில் சமைக்கும் போது எண்ணெய் ஒரு துளி கூட பயன்படுத்தப்படுவது இல்லை. ஆவியில் வேக வைப்பதால், இது டயட் (உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள்) இருப்பவர்களுக்கும், கொழுப்பைக் குறைக்க விரும்புவோருக்கும் மிகவும் நல்லது.
* வாழை இலையில் சுற்றி சமைக்கப்படும்போது, இலையின் அலாதியான சுவை மற்றும் மணம் உணவுடன் கலந்து, வேறு எந்த சமையல் முறையிலும் கிடைக்காத ஒரு தனித்துவமான அனுபவத்தை அளிக்கிறது.
* இதில் பயன்படுத்தப்படும் பச்சை சட்னிதான் இந்த உணவின் மற்றொரு சிறப்பம்சம். பூண்டு, பச்சை மிளகாயின் காரம், புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளின் கூட்டுச் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த மூலிகைகளின் சத்துக்கள் மீனுடன் சேர்ந்து ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன.
* இந்த சமையல் முறையை மீன்களில் மட்டுமல்லாமல், பன்னீர் மற்றும் கறித் துண்டுகளிலும் கூட முயற்சி செய்யலாம்.

ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள பத்ராணி மச்சி
இந்த அற்புதமான பத்ராணி மச்சி உணவை தோசை, சப்பாத்தி, ரொட்டி அல்லது சாதம் மற்றும் காய்கறி தன்சக் (Vegetable Dhansak) உடன் சேர்த்து சைடிஷ்ஷாக சாப்பிடும் பொழுது, அதன் சுவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். ஆரோக்கியம் மற்றும் பாரம்பரியம் இணைந்த இந்த பார்சி உணவை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்!






