search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali"

    • தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
    • சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

    மத்தூர்:

    போச்சம்பள்ளியில் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் நடத்தி பொருட்கள் கொடுக்காமல் ஏமற்றியதாக தனியார் பைனான்ஸின் மேலாளரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வாக்கடை கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் ராபர்ட் என்கின்ற ராஜன் மற்றும் அவரது சகோதரி வனிதா ஆகியோர் தனியார் பைனான்ஸ், தனியார் சிட்பண்ட்ஸ், தனியார் டிராவல்ஸ், தனியார் சிறு சேமிப்பு திட்டம், தனியார் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம், தனியார் சூப்பர் மார்கெட் என பல்வேறு நிறுவனங்களை போச்சம்பள்ளி தலைமையிடமாக கொண்டு நடத்தி வந்தனர்.

    தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கடந்த ஆண்டு சீட்டு நடத்தினார். அதில் நம்ப முடியாத வாக்குறுதிகளை அளித்து விளம்பரப்படுத்தினார். மாதம் ரூ.300 என ஒரு வருடத்திற்கு ரூ.3600 கட்டினால் சுமார் ரூ.9000 மதிப்புள்ள வீட்டு மளிகை பொருட்கள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியிருந்தார். இதனை நம்பிய பொது மக்கள், இந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவடங்களில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த திட்டத்தில் பொது மக்கள் சேர்ந்தனர். பலர் ஏஜென்டுகளாக மாறி தங்களது கிராமத்தில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் இந்த திட்டத்தில் இணைத்தனர்.

    இதனால் நிறுவனத்திற்கு சுமார் ரூ.9 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தற்போது தீபாவளி வந்தும் பொருட்களை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு பதில் அளித்து வந்தனர்.

    தினமும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 100-க்கும் மேற்பட்டோர் பைனான்ஸ் நிறுவனம் முன்பு காத்திருந்து சென்ற நிலையில், பணத்தை ஏதாவது ஒரு வகையில் திருப்பி கொடுப்பார்கள் என எதிர்பாத்திருந்த பொது மக்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில் இன்று தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர் வனிதாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் வனிதா கைது செய்யப்பட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிய வரவே, போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    அதிகளவில் திரண்ட பொதுமக்களை கட்டுப் படுத்த பர்கூர் சரகத்திற்கு உட்பட்ட பாரூர், நாகரசம்பட்டி, பர்கூர், பர்கூர் மகளிர், போச்சம் பள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட வனிதாவை போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஒப்படைக்க அழைத்து செல்ல முயன்றபோது போலீஸ் வாகனத்தை தடுத்தனர். வாகனம் சென்ற பின்னர் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் போலீஸ் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பணத்தை பெற்றுத்தர போலீஸ் நடவடிக்கை எடுக்காமல், மேலாளர் வனிதாவுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக குற்றம் சாட்டினர். அப்போது அங்கிருந்த பர்கூர் டி.எஸ்.பி. மனோகரன், அவர்களிடம் சமாதான பேச்சுவாரத்தை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவராக மனுக்களை அளிக்க கேட்டார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து வனிதாவை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கோவிட் பெருந்தொற்று விமான போக்குவரத்து துறையை மிகவும் பாதித்தது
    • தொடர்ந்து 3 நாட்கள் விமான போக்குவரத்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது

    கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக நலிவடைந்த பல தொழில்களில் சுற்றுலா துறையும், அதை சார்ந்திருந்த விமான போக்குவரத்தும் ஒன்று. பல உலக நாடுகளில் 2020 காலகட்டத்தில் சரிவடைந்த விமான போக்குவரத்து நிறுவனங்களின் வர்த்தகம் தற்போது வரை முழுமையாக சீரடையவில்லை.

    ஆனால், இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தும், விமான நிறுவனங்களின் வருமானமும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து புதிய சாதனையை படைத்துள்ளது.

    கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 4,63,417 பேர் இதுவரை நவம்பர் மாதத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்தை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர்.

    "நேர்மறை கொள்கைகள், வளர்ச்சியை நோக்கிய இலக்குகள் மற்றும் பயணிகளுக்கு இந்திய விமான சேவையில் உள்ள நம்பிக்கை காரணமாக, ஒவ்வொரு விமான பயணமும் ஒரு புதிய உச்சத்தை தொடுகிறது" என சிவில் விமான போக்குவரத்து துறை தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.

    இது குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 


    விமான பயண போக்குவரத்து வியாழக்கிழமை (நவம்பர் 23) கணக்கின்படி 5998 என உள்ளது.

    நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து உள்ளூர் விமான போக்குவரத்து, எண்ணிக்கையின்படி புதிய உச்சங்களை தொட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

    தீபாவளி பண்டிகை மற்றும் இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை ஆண்கள் கிரிக்கெட் போட்டி ஆகியவை காரணமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததும் இந்த புதிய சாதனைக்கு ஒரு காரணம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் டாடா குழுமமும் இண்டிகோ குழுமமும் 90 சதவீத சந்தையை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
    • தீ விபத்திற்கு பட்டாசு வெடித்தது காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவில் உள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த குடும்பம் வசித்து வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி அன்று இரவு 10.30 மணியளவில் இவர்கள் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென இரண்டு மாடிகளுக்கும் பரவியது.

    இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். அந்த வீட்டில் சீமா ராத்ரா என்ற பெண் தனது மூன்று குழந்தைகளுடன் இறந்துள்ளார். விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பிய குழந்தைகளின் தந்தை ஆரோன் கிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    தீபாவளி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் அதிகளவில் பட்டாசு சத்தம் இருந்ததாகவும், அதனால் தீ விபத்திற்கு பட்டாசு வெடித்தது காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து, தலைமை கண்காணிப்பாளர் சீன் வில்சன் கூறுகையில், " இது ஒரு பயங்கரமான சம்பவம். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய லண்டன் தீயணைப்புப் படை அயராது உழைக்கும்" என்று கூறினார்.

    • போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் 12 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
    • தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது.

    மதுராந்தகம்:

    தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்த வெளிமாவட்டத்தை சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் பஸ், கார், ரெயில்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பிவரவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    நேற்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று மாலை முதல் கார் மற்றும் பஸ்களில் சென்னை வரத்தொடங்கினர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சென்னை நோக்க வரத்தொடங்கியதால் நேற்று இரவு முதலே சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தொடங்கியது.

    இந்த போக்குவரத்து நெரிசல் விடிய, விடிய நீடித்தது. செங்கல்பட்டு மாவட்ட தொடக்க எல்லையான மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் இரவில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து வாகனங்களை விரைவாக சென்னை நோக்கி அனுப்புவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வழக்கம்போல் 5 கவுண்டர்களில் செல்லும் வாகனங்கள் கூடுதலாக 3 கவுண்டர்கள் வழியாக அனுப்பப்பட்டன. கூடுதல் கவுண்டர்கள் வழியாக வாகனங்கள் விரைந்து சென்றன. நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

    இதேபோல் பரனூர் சுங்கச்சாவடியிலும் இரவு முதலே வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்தன. அங்கும் கூடுதல் கவுண்டர்கள் வழியாக சென்னைக்குள் அனுப்பப்பட்டன. சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வாகனங்கள் மொத்தமாக செல்வதை தடுக்கும் வகையில் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை வரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து வந்து கொண்டு இருந்தன.

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வெளியூர்களில் இருந்து வந்த பஸ்கள் அனைத்தும் வண்டலூரில் இருந்து மீஞ்சூர் புறவெளி வட்டச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லை. எனினும் வண்டலூர் பகுதியில் ஏராளமான பயணிகள் இறங்கி மாறி சென்றதால் அங்கு கடுமையாகன நெரிசல் ஏற்பட்டது. கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரிசெய்தனர். பயணிகள் செல்வதற்கு மாநகர பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது.

    கோயம்பேடு நோக்கி வந்த வாகனங்களால் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் தொடங்கி 100அடி சாலையில் ஈக்காட்டுதாங்கல், அசோக் பில்லர், வடபழனி உள்ளிட்ட முக்கிய சந்திப்பில் அதிகாலை 4மணி முதலே கடும் நெரிசல் ஏற்பட்டது. காலை 6 மணிக்கு மேல் கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் இருந்து வரும் வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்பட்டு செல்பவர்கள் என ஏராளமானோர் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டதால் மதுரவாயல்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் 12 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். கோயம்பேடு-பூந்தமல்லி நெடுஞ்சாலை, 100 அடி சாலை பஸ் நிலைய சந்திப்பு, மெட்டுக்குளம் சந்திப்பு, காளியம்மன் கோவில் தெரு சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஏராளமான போலீசார் நெரிசலை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சர்வதேச குழு ஒன்று காற்றின் தரத்தை அளவிட்டு பட்டியல் வெளியிட்டுள்ளது.
    • வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 2 வாரம் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. தீபாவளிக்கு முன்னர் காற்று மாசு ஓரளவு குறைந்தது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு வெடித்த பட்டாசால் மீண்டும் காற்று மாசு அதிகரித்தது. காற்றின் தரம் குறைந்து நகரம் முழுவதையும் மூடு பனி ஆக்கிரமித்து இருப்பது போல் காணப்படுகிறது.

    எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர். புறநகர் பகுதிகளில் இருந்து காற்று மாசு டெல்லியின் மைய பகுதியிலும் தற்போது தொற்றிக் கொண்டுள்ளது. வரலாறு காணாத வகையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

    நேற்று மதியம் மத்திய அரசின் ஷபார் செயலியின்படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ) 445 ஆக இருந்தது, சில இடங்களில் 520-க்கு மேல் பதிவாகியது.

    101 மற்றும் 200-க்கு இடைப்பட்ட நிலைகள் மிதமானதாகக் கருதப்படுகின்றன.

    அதே சமயம் 201 மற்றும் 300-க்கு இடைப்பட்டவை மோசமானவை. 301 மற்றும் 400 க்கு இடையில் மிகவும் மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் 400 ஐ விட அதிகமான எண்ணிக்கை கடுமையானது என்று கருதப்படுகிறது.

    ஆனால் சில பகுதிகளில் டெல்லியின் காற்றின்தரம் (ஏ.கியூ.ஐ) பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது.

    டெல்லியின் நச்சுக் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 25 ல் இருந்து 30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று நுரையீரல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    அதிக அளவு மாசுபாடுகளை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது மக்களுக்கு சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.

    இது தோல் மற்றும் கண் எரிச்சலைத் தூண்டும் மற்றும் ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் திறன் இழப்பு, எம்பிஸிமா, புற்றுநோய் மற்றும் கடுமையான நரம்பியல், இருதய மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தும்.

    டெல்லி அரசு கடந்த சில ஆண்டுகளாக தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. இந்தாண்டும் பட்டாசு வெடிக்க தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி அதிகளவிலான பட்டாசு வெடித்ததே இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணமாகும் என கூறப்படுகிறது.

    வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்தார். எல்லையில் சோதனை நடத்தினார்.

    அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மட்டுமே நகருக்குள் அனுமதித்தார். மற்ற வாகனங்களை திருப்பி அனுப்பினார். இதனை கடுமையாக பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தீபாவளிக்கு முன்பு காற்று மாசு குறைவாக இருந்தது. பட்டாசு அதிகளவில் வெடித்ததால் மீண்டும் காற்று மாசு அதிகரித்துள்ளது என்று மாநில அரசும், மத்திய அரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    சர்வதேச குழு ஒன்று காற்றின் தரத்தை அளவிட்டு பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 445 என்ற அளவில் உள்ளதாகவும் அது உலகளவில் காற்று மாசு பட்டியலில் டெல்லி முதலிடத்தைபிடித்துள்ளது என்றும் கூறியுள்ளது.

    இந்த பட்டியலில் 6-வது இடத்தில் மும்பையும், 7-வது இடத்தில் கொல்கத்தாவும் உள்ளது.

    • பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு சாப்பிட்டும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்று போலீசார் கண்காணித்து வந்தனர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு சாப்பிட்டும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இதற்கிடையே காலை 6 மணி முதல் 7 மணி வ ரையும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்று போலீசார் கண்காணித்து வந்தனர்.

    தொடர்ந்து சேலம் புறநகர் பகுதிகளில் அனுமதித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக 19 பேர் மீதும், மாநகரில் 2 பேர் மீதும் என மொத்தம் 21 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    • நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • காவல்துறை எல்லைக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மதுரை:

    நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். முன்னதாக தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தமிழக அரசு நேரக்கட்டுப்பாடு விதிருந்தது.

    மதுரை மாநகர் பகுதியில் அரசு அனுமதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 141 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதே போன்று நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்ட காவல்துறை எல்கைக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மொத்தத்தில் மதுரை மாவட்டம் முழுவதும் 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் உசிலம்பட்டி, மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளிலும், மாநகரில் விளக்குத்தூண், ஜெய் ஹிந்த்புரம், எஸ்.எஸ்.காலனி, திடீர்நகர், திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமான நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது உண்டு.
    • வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை செய்து டாஸ்மாக் நிர்வாகம் வசூலை குவித்து உள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமான நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது உண்டு. விடுமுறை காலங்களில் ரூ.175 கோடி வரை விற்பனை அதிகரிக்கும். ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விற்பனையாகும் மது பானங்களின் சாதனை ஒவ்வொரு ஆண்டும் முறியடிக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில் வந்தது. இதனால் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    மது அருந்துபவர்கள் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்களும் மது குடித்து குதூகலம் அடைந்தனர்.

    தீபாவளி பண்டிகைக்காக மது குடித்தவர்கள், தொடர் விடுமுறை காரணமாக மது குடிப்பவர்கள் என பல காரணங்களால் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் டாஸ்மாக் கடைகளில் வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களாக விற்பனைகளை கட்டியது. இதில் ரூ.708 கோடி மதிப்பிலான மது பானங்கள் விற்பனையாகி உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.241.02 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. சனிக்கிழமை ரூ.220.85 கோடிக்கும், ஞாயிற்றுக் கிழமை ரூ.246.78 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது.

    இந்த 3 நாட்களில் மட்டும் ரூ.708 கோடி மது விற்பனை நடந்துள்ளது. மது பிரியர்கள் 3 நாட்களும் மது குடித்து குதூகலம் அடைந்துள்ளனர்.

    இதில் 11-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை மண்டலத்தில் ரூ.48.12 கோடிக்கும் திருச்சி-ரூ.40.02 கோடிக்கும், சேலம்-ரூ.39.78 கோடிக்கும், மதுரை ரூ.52.73 கோடிக்கும் கோவையில் ரூ.40.20 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. 12-ந்தேதி (ஞாயிறு) மண்டலவாரியாக சென்னையில் ரூ.52.98 கோடி, திருச்சி ரூ.55.60 கோடி, சேலம் ரூ.46.62 கோடி, கோவை ரூ.39.61 கோடி அளவுக்கு மது விற்கப்பட்டது.

    கடந்த ஆண்டு தீபாவளி 2 நாள் மது விற்பனை ரூ.431 கோடியாகும். இந்த ஆண்டு 2 நாள் விற்பனை ரூ.467.69 கோடியாகும். இதன்மூலம் கடந்த ஆண்டு சாதனையை இந்த ஆண்டு விற்பனை முறியடித்து உள்ளது.

    • நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை மது விருந்துடன் கொண்டாட சின்னா திட்டமிட்டார்.
    • மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு அடுத்த புலிக்குன்றம் காந்தலூரை சேர்ந்தவர் சின்னா(வயது28). வெல்டரான இவர் மாமல்லபுரம் வெண்புருஷம் பகுதியில் உள்ள மாமா வீட்டில் தங்கியிருந்து பூஞ்சேரியில் வேலை பார்த்து வந்தார். நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை மது விருந்துடன் கொண்டாட சின்னா திட்டமிட்டார்.

    ஆனால் அவரிடம் போதிய அளவு பணம் இல்லை. இதைத்தொடர்ந்து சின்னா தனது மாமாவிடம் பணம்கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் பணம் கொடுக்க வில்லை. இதனால் சின்ன மனம் உடைந்தார். இந்த நிலையில் சின்னா அப்பகுதியில் உள்ள பாலாறு குட்டை அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்கள் மகிழ்ச்சியோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    • விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு லிட்டில் பிளவர் கல்வி குழுமத்தின் தலைவர் மரியசூசை தலைமை தாங்கி பேசினார். அப்போது, மாணவர்கள் மகிழ்ச்சியோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

    விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சஹானா உமர் செய்திருந்தார்.

    • டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.
    • டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள். பல்வேறு பகுதிகளில் தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு கடுமையான சூழல் நிலவி வரும் நிலையில் பட்டாசு வெடிக்க டெல்லி அரசு 3வது ஆண்டாக தடை செய்தது. இந்த உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டும் மறுத்துவிட்டது.

    பட்டாசு வெடிக்க தடை உள்ள நிலையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

    தெற்கு டெல்லியின் சர்தர்பூர் பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் மக்கள் அதிகளவில் பட்டாசு வெடித்தனர். அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களும் சிறு, சிறு பட்டாசுகளை குழந்தை களுக்கு விற்பனை செய்தனர். தெற்கு டெல்லி யின் கிழக்கு கைலாஷ் பகுதியி லும் சிலர் பட்டாசு வெடித்தனர். ஷாபூர் காட் மற்றும் ஹவுஸ் காஸ் பகுதியில் மக்கள் அதிகளவில் பட்டாசு வெடித்தனர். அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் ஏராளமானோர் கூடி பட்டாசு வெடித்தனர். இருப்பினும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடித்தது மிகவும் குறைவு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    பட்டாசு வெடிக்க தடை இருந்த போதிலும் மக்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    • பட்டாசு வெடிக்கும் பொழுது நவிஷ்கா ஆனந்தத்தில் துள்ளி குதித்து, அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்.
    • வாழைபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28), டிரைவர். இவரது மனைவி அஸ்வினி (25). தம்பதியின் மகள் நவிஷ்கா (4), ஒரு வயது மகனும் உள்ளார்.

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வேண்டுமென நவீஷ்கா தந்தையிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து ரமேஷ் தனது மகளுடன் கடைக்கு சென்று விதவிதமான பட்டாசுகளை வாங்கி வந்தனர்.

    நேற்று மாலை நவீஷ்கா தனது குடும்பத்தினருடன் இணைந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். தந்தை ரமேஷ் விதவிதமான பட்டாசுகளை வெடித்தார். அதனை பார்த்து சிறுமி மகிழ்ச்சியடைந்தார்.

    பட்டாசு வெடிக்கும் பொழுது நவிஷ்கா ஆனந்தத்தில் துள்ளி குதித்து, அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்.

    அப்போது சிறுமியின் பெரியப்பாவான ரமேஷின் அண்ணன் விக்னேஷ் (31) பெரிய அணுகுண்டு வகை பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி பட்டாசு அருகே சென்றுவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ஓடிப்போய் சிறுமியை காப்பாற்ற முயன்றார். அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடித்து சிதறி விக்னேஷ் மற்றும் சிறுமியின் மீது விழுந்தது.

    இதில் விக்னேசுக்கு வலது கையிலும், சிறுமிக்கு கை மற்றும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் நவிஷ்கா அலறி துடித்தாள்.

    இதனை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நவிஷ்கா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி உயிரிழந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர்.

    ஆஸ்பத்திரியில் குழந்தையின் தாய் அஸ்வினி கதறி அழுதகாட்சி காண்பவர்களின் நெஞ்சை கரையச் செய்தது.

    சிறுமியின் பெரியப்பா விக்னேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாழைபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×