என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலிண்டர்"

    • சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதால் தீயை கட்டுப்பட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
    • வளைவில் திரும்பும் போது சிலிண்டர் லாரி விபத்தில் சிக்கியுள்ளது.

    அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியதால் பலத்த சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதால் தீயை கட்டுப்பட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையை முற்றிலுமாக மூடி வாகனங்கள் வேறு சாலைக்கு மாற்றி விடப்பட்டுள்ளது.

    வளைவில் திரும்பும் போது சிலிண்டர் லாரி விபத்தில் சிக்கியுள்ளது. இன்று காலை ஏற்பட்ட விபத்தால் லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்ததால் பல கிலோ மீட்டருக்கு கேட்ட சத்தத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

    சிலிண்டர் லாரி எங்கிருந்து வந்தது, லாரியில் யாரெல்லாம் இருந்தார்கள், அவர்களின் நிலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தீப்பிழம்புகளும் வெடிப்பு சத்தமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு எதிரொலித்தன.
    • இதே நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இதேபோன்ற விபத்தில், எண்ணெய் டேங்கர் வெடித்து 19 பேர் பலியாகினர்.

    ராஜஸ்தானில் இன்று இரவு எல்.பி.ஜி சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியுடன் மற்றொரு லாரி மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

    டுடு பகுதியில் ஜெய்ப்பூர் - அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த உடனே சிலிண்டர்கள் வெடிக்கத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் சேதமடைந்தன. தீப்பிழம்புகளும் வெடிப்பு சத்தமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு எதிரொலித்தன.

    தகவல் அறிந்ததும் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர்.

    சம்பவம் குறித்து பேசிய துணை முதலமைச்சர் பிரேம் சந்த் பைரவா, லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி நடைபெறுவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுவரை உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

    இதே நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இதேபோன்ற விபத்தில், எண்ணெய் டேங்கர் வெடித்து 19 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    • ஏழை பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது.
    • சிலிண்டர் வாங்கும்போது அதற்கு மானியமும் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' எனப்படும் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 2016-ம் ஆண்டு மே 1-ந்தேதி தொடங்கியது.

    இந்த திட்டத்தின் கீழ் ஏழை பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. கியாஸ் அடுப்பு, டெபாசிட் தொகை, ரப்பர் குழாய், ரெகுலேட்டர், முதல் சிலிண்டர் ஆகியவற்றின் செலவை மத்திய அரசு ஏற்கிறது. சிலிண்டர் வாங்கும்போது அதற்கு மானியமும் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் தமிழகத்தில் 40 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச கியாஸ் இணைப்புகளை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் 10 சதவீதம் அதாவது, 2½ லட்சம் இணைப்புகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எண்ணெய் நிறுவனங்களிடம் எழுந்துள்ளது.

    இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிதாக இலவசமாக வழங்கப்பட உள்ள 25 லட்சம் கியாஸ் இணைப்புகளில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை இணைப்பு என்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகம் உள்ளது. எனவே அதற்கு ஏற்ப கியாஸ் இணைப்புகள் ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன' என்றார்.

    • அனுமதிக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
    • சிலிண்டரை நுகர்வோர்கள் வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. ஆண்டுக்கு 12 கியாஸ் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஆண்டுக்கு 15 சிலிண்டர் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யும் போது 'அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான பதிவை ஏற்க முடியாது. ஏனெனில் ஏற்கனவே இந்த ஆண்டு ஒதுக்கீட்டான 213 கிலோவை நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள்' என்று ஆயில் நிறுவனம் சார்பில் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.

    இதனால் ஒரு ஆண்டுக்கு 15 கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஒருவருக்கு ஆண்டுக்கு 15 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வரை வழங்கப்படும். அதில் 12 சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்கும். எனவே அனுமதிக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஏனென்றால் அந்த சிலிண்டரை நுகர்வோர்கள் வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே 15 கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் வாங்க வேண்டும் என்றால் அதற்கான காரணத்தை விளக்கி கியாஸ் வினியோகம் செய்யும் நிறுவனத்திடம் கடிதம் கொடுத்தால் கூடுதல் சிலிண்டர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டாம். ஆனால் 15 சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்று கூறுவதால் பலர் பாதிக்கப்படலாம்.

    எனவே ஒவ்வொரு முறை சிலிண்டர் வழங்கும் போதும் அது அந்த ஆண்டின் எத்தனையாவது சிலிண்டர் என்ற விவரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மதுரையில் 2 இடங்களில் சிலிண்டர் வெடித்தது.
    • பாலசுப்பி ரமணியன். பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை சுப்பிரமணிய புரம், 3-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பி ரமணியன். பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    பேக்கரி ஊழியர்கள் இன்று காலை சிலிண்டரை மாற்றும்போது எதிர்பாராத விதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. இது குறித்து திடீர்நகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதேபோன்று கோமதி புரம், பாரதி தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தல்லாகுளம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் குமார் என்பவர் அங்கு வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்தினார். மதிய உணவு விருந்துக்கு, அப்பளம் பொறித்து கொண்டிருந்தனர். சிலிண்டரின் ரெகு லேட்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது.

    மதுரையில் இன்று ஒரே நாளில் 2 இடங்களில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த வட்டகரையை சேர்ந்தவர் மேரி புஷ்பராணி.

    இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்திடம் கியாஸ் சிலிண்டர் முன் பதிவு செய்திருந்தார். இதற்காக கொடுத்த கட்டண ரசீதில் சிலிண்டரின் விலை ரூ.969 மற்றும் ரூ.15 ஆக மொத்தம் ரூ.984 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் சிலிண்டரின் விலை, வரிகள் உள்பட சேர்த்து ரூ.969 மட்டுமே. எனவே ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை என அவர் நிறுவனத்திடம் கூறினார். மேலும் தன்னிடம் கூடுதலாக வாங்கிய ரூ.15-ஐ திருப்பி தர வேண்டுமென்று கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திடம் மேரி புஷ்பராணி கேட்டார்.

    அதோடு பல நுகர்வோர் குறைதீர்க்கும் அரசு அமைப்புகளிடமும் இது குறித்து புகார் செய்தார். மேலும் வக்கீல் மூலம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னரும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேரி புஷ்பராணி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.

    இதைத் தொடர்ந்து கியாஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மேரி புஷ்பராணிக்கு நஷ்ட ஈடு (அபராதம்) ரூ.7500 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் மேரி புஷ்பராணியிடம் கூடுத லாக வசூலிக்கப்பட்ட ரூ.15 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 என மொத்தம் ரூ.10,015-ஐ ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டது.

    • சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே சோழபுரம் கடைவீதியில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்ந்து தற்போது 1100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் பொருளாதார ரீதியாக தத்தளித்து வருகின்றனர்.

    சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    இந்நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெற கோரியும் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜீவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தலைவி மாரியம்மாள், மாவட்ட துணைத்தலைவி லதா மகேஸ்வரி, நகரத் தலைவி செல்வி, திருவிடைமருதூர் வட்டாரத் தலைவி ஆர்கனைஸ் மேரி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    • இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது.
    • தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால் சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்பட்டனர்.

    திருப்பூர் :

    பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது. இந்த இரு பிரிவுகளிலும் சிலிண்டர் இணைப்பு பெற கியாஸ் ஏஜென்சிகளில் ஆதார் எண் ,முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதனிடையே திருப்பூர், சென்னை ,கோவை போன்ற ஊர்களுக்கு வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால் சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்பட்டனர். அதே போல் வெளிமாநில தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் போன்றவர்களின் வசதிக்காக இந்தியன் ஆயிலுடன் இணைந்து மினி சிலிண்டர் ரேஷன் கடைகளில் விற்க கூட்டுறவுத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    முதல் கட்டமாக திருப்பூர் அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள தெற்கு நியாய விலை கடையில் இந்தத் திட்டமானது இன்று துவங்கப்பட்டது. இரண்டு கிலோ, ஐந்து கிலோக்களில் , இந்த சிலிண்டர்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாகவும் வெளி மாவட்டம் மற்றும் மாநில தொழிலாளர்களின் வசதிக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தியு ள்ளதாகவும் தெரிவித்தனர். ஆதார் கார்டு அல்லது அவர்களது விலாசம் குறித்து ஏதோ ஒரு ஆவணத்தை காண்பித்து சிலிண்டர்களை பெற்று செல்லலாம் . தற்போது திருப்பூர் நகரில் முதல் முறையாக இத்திட்டமானது இக்கடையில் அறிமுகப்ப டுத்தப்ப ட்டுள்ளதாகவும் , இதன் வரவேற்பு பொறுத்து விரைவில் ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
    • கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிக்குமார் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் வருகிறது.

    எனவே திருப்பூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்க வேண்டும். சிலிண்டர் ஏற்றி வரும் வாகனங்களில் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் சிலிண்டர் எடுத்துச் செல்லக்கூடாது. 5 வருடங்களுக்கு ஒருமுறை சிலிண்டர் வால்வு, கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில்தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உரையாற்றினார்.

    சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

    இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நிலையில், கேஸ் சிலிண்டர்களின் விலை மாதமாதம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் இந்த மாதம் (மார்ச்) சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது.

    அதன்படி ரூ. 1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், எரிவாயு சிலிண்டரின் நிலையான விலையை உறுதி செய்வதற்கும், பாதகமான சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து உற்பத்தியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவதற்கும் நடவடிக்கையாக

    மத்திய அமைச்சரவை நேற்று திருத்தப்பட்ட சமையல் எரிவாயு விலை நிர்ணய வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், "நாட்டில் சமையல் எரிவாயுவின் நிலையான விலையை உறுதி செய்யவும், பாதகமான சந்தை ஏற்ற இறக்கங்களில் இருந்து உற்பத்தியாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கும் வகையில் மாதாந்திர அறிவிப்பு இருக்கும்.

    இப்போது, எரிவாயு விலை, சர்வதேச ஹப் எரிவாயு விலைக்கு பதிலாக, இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு எரிவாயுவின் விலை இந்திய கச்சா எண்ணெயின் சர்வதேச விலையில் 10% ஆக இருக்கும், அது மாதந்தோறும் அறிவிக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.

    மேலும், இது குழாய் இயற்கை எரிவாயுவை (பிஎன்ஜி) 10 சதவீதம் மலிவாகவும், சிஎன்ஜி விலை 6 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை குறையும் என்றும் எண்ணெய் செயலர் பங்கஜ் ஜெயின் தெரிவித்தார். இதற்கான அறிவிப்பை அரசு நாளை வெளியிடும். இந்த முடிவு சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்றும் கூறினார்.

    • எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்து சிதறியது.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    திருவாரூர்:

    மன்னார்குடி அருகே கோட்டூர் புதுத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது35).

    இவர் குடும்பத்தோடு கூரை வீட்டில் வசித்து வந்தார்.

    இவரது மனைவி நேற்று மதியம் கியாஸ் அடுப்பின் அருகே விறகு அடுப்பில் சமையல் செய்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்து சிதறியது.

    இதில் கூரை வீ்டு முற்றிலும் எரிந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிலிண்டரில் தீப்பிடித்த உடன் வீட்டில் உள்ள அனைவரும் ெவளியே சென்று விட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    • சமையல் செய்வதற்காக கியாஸ் சிலிண்டரை திறந்த போது சிலிண்டர் வெடித்து சிதறியது.
    • வேப்பேரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கம் நியுமாணிக்கம் தெரு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் ரபீஸ் என்பவரின் டெக்ஸ்டைல் கடையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் தங்கி உள்ளனர்.

    அவர்கள் சமையல் செய்வதற்காக கியாஸ் சிலிண்டரை திறந்த போது சிலிண்டர் வெடித்து சிதறியது. வேப்பேரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    சைதாப்பேட்டை சி.ஐ.டி.நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. அதுவும் பின்னர் பரவாமல் தடுக்கப்பட்டது.

    ×