search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UNESCO"

    • குஜராத்தின் பிரபலமான கர்பா நடனத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது.
    • யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இந்தியாவின் ஒய்சாலா கோவில்கள் சமீபத்தில் சேர்க்கப்பட்டது.

    புதுடெல்லி:

    நவராத்திரி விழாவின் போது பெண்ணின் தெய்வீக வடிவமான துர்கா தேவியை மையமாக வைத்து, 9 சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ள கர்பா பாடல்கள் இசைக்கப்படும். கர்பா நடனத்தைப் பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் விடியும் வரை இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.

    இந்த கர்பா நடனத்தைப் பார்த்து ரசிப்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குவிகின்றனர். வட மாநிலங்கள் பலவற்றில் கர்பா நடனம் ஆடப்பட்டாலும் குஜராத்தில் கர்பா நடனம் புகழ் பெற்றது.

    கர்பா நடனத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கக் கோரி மத்திய அரசு யுனெஸ்கோவுக்கு பரிந்துரைத்தது.

    இந்நிலையில், பாரம்பரிய கலாசார நிகழ்வுகளைப் பாதுகாக்கும் யுனெஸ்கோவின் சர்வதேச குழுவின் மாநாடு தென் அமெரிக்க நாடான போட்ஸ்வானாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி குஜராத்தின் பாரம்பரியமான கர்பா நடனத்தைக் கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

    குஜராத்தின் கர்பா நடனத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததற்காக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
    • சமீபத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதன் சேர்க்கப்பட்டது.

    புதுடெல்லி:

    உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோமநாத்புரம் ஆகியவற்றின் ஒய்சாலா கோவில்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதனால் இந்தியாவின் 42-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது.

    இதுதொடர்பாக, யுனெஸ்கோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன, வாழ்த்துகள் என தெரிவித்துள்ளது.

    இதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், இந்தியாவுக்கு அதிக பெருமை கிடைத்துள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் பிரமிக்க செய்யும் புனித தோற்றம் கொண்ட ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

    காலவரையற்ற அழகு மற்றும் சிக்கலான விவரங்களைக் கொண்ட ஒய்சாலா கோவில்கள் இந்தியாவின் கலாசார பாரம்பரிய செறிவுக்கான தக்க சான்றாக உள்ளது. நம்முடைய முன்னோர்களின் தனிச்சிறப்புடனான கைவினை திறனை விளக்கும் வகையிலும் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதன் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சாந்திநிகேதனுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
    • யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சாந்திநிகேதன் சேர்க்கப்பட்டு உள்ளது.

    ரியாத்:

    மேற்கு வங்காளத்தின் பீர்பும் மாவட்டத்தில் சாந்திநிகேதன் அமைந்துள்ளது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் கடந்த 1901-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது சாந்திநிகேதன். உறைவிட பள்ளி, பழமையான இந்திய பாரம்பரியங்களை அடிப்படையாக கொண்ட கலைக்கான ஒரு மையம் ஆகவும் இது திகழ்கிறது.

    1921-ம் ஆண்டு சாந்திநிகேதனில் உலக பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டது. மனித இனத்திற்கான ஒற்றுமை அல்லது விஸ்வ பாரதியை அங்கீகரிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் இப்பகுதிக்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

    இந்த கலாசார தலத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைப்பதற்காக நீண்டகாலம் வரை இந்தியா போராடி வந்தது.

    இந்நிலையில், யுனெஸ்கோவின் பாரம்பரிய கமிட்டி சார்பில் 45-வது கூட்டத்தொடர் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நேற்று நடந்தது. இதில், மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, யுனெஸ்கோ வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், இந்தியாவின் சாந்திநிகேதன், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள் என தெரிவித்துள்ளது.

    யுனெஸ்கோ பட்டியலில் சாந்திநிகேதன் இடம்பிடித்ததைக் கொண்டாடும் வகையில், விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் முழுதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    • கடந்த 2018-ம் ஆண்டில் பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பிரான்ஸ் நாடு தடை செய்தது.
    • இந்த மாதம் நெதர்லாந்து நாடு பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் தடையை அறிவித்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.

    பள்ளியில் ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கல்வி செயல்திறன் குறைவதற்கும், வகுப்பறையில் மோசமான செயல்திறனுக்கும் வழிவகுக்கிறது.

    தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்வுக்காகவும் இருக்க வேண்டும், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

    கடந்த 2018-ம் ஆண்டில் பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பிரான்ஸ் நாடு தடை செய்தது. பின்னர் இந்த மாதம் நெதர்லாந்து நாடு பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் தடையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×