search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "USA"

    • அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மதுபானத்திற்கு வரி விதிக்க ஐரோப்பிய யூனியன் பரிந்துரை.
    • ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து மெக்சிகோ, கனடா, சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதித்து வருகிறார். அதேவேளையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் தங்கள் நாட்டின் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கக்கூடாது என்கிறார்.

    குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், கனடா, சீனாவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் போன்றவற்றிற்கு அதிக வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு சீனா பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளது.

    தற்போது டொனால்டு டிரம்பின் பார்வை மதுபானங்கள் மீது திரும்பியுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் மதுபானங்களுக்கு இந்தியா 150 சதவீதம் வரி விதிக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.

    ஐரோப்பிய நாடுகளில் இருந்து இரும்பு, அலுமினியம் இறக்குமதிக்கு டிரம்ப் அதிக விரி விதித்துள்ளதால், அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மதுபானத்திற்கு ஐரோப்பிய நாடுகள் வரிவிதிக்க பரிந்துரை செய்துள்ளது. ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒயின்ஸ், ஷாம்பெயின், பிரான்ஸ் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும். இது அமெரிக்காவின் ஒயின் மற்றும் ஷாம்பெயின் தொழிலுக்கு சிறப்பானதாக இருக்கும்" டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதனால் அமெரிக்கா- ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் மதுபானம் விசயத்தில் வர்த்த போர் ஏற்படும் அபாயம் உள்ளது.

    • அமெரிக்கா, தென்கொரியா படைகள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
    • வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

    பியாங்யாங் :

    வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இதனை பொருட்படுத்தாமல் கூட்டுப்போர் பயிற்சியை தொடர்ந்து வருகின்றன.

    அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் மிகப்பெரிய கூட்டுப்பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கின. இருநாட்டு விமானப்படைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான விமானங்கள் 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து வடகொரியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கா தனது பாதுகாப்பு நலன்களுக்குப் பொருந்தாத எந்தவொரு தீவிரமான முன்னேற்றங்களையும் விரும்பவில்லை என்றால், அது பயனற்ற போர் பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால், அது அனைத்து விளைவுகளுக்கும் முற்றிலும் பழியை ஏற்க வேண்டியிருக்கும். கடுமையான ராணுவ ஆத்திரமூட்டல்களில் அமெரிக்கா தொடர்ந்து நீடித்தால் வடகொரியா மிகவும் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை கையில் எடுக்கும்" என கூறப்பட்டுள்ளது.

    • உக்ரைன் ரஷியா போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.

    வாஷிங்டன் :

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷியா தன்வசப்படுத்தியுள்ளது.

    ஆனாலும் உக்ரைன் ராணுவம் துணிச்சலுடன் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன. உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருகின்றன.

    அந்த வகையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,238 கோடி) மதிப்புடைய ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இதனை தெரிவித்தார்.

    புதிதாக வழங்கப்படும் இந்த ராணுவ உதவி தொகுப்பில் முதல் முறையாக அதிநவீன வான்பாதுகாப்பு அமைப்பு, ரஷியாவுக்கு எதிரான தனது பதில் தாக்குதலில் உக்ரைன் வெற்றிகரமாக பயன்படுத்தி வரும் ஹிமார்ஸ் எனப்படும் அதீத சக்தி கொண்ட பீரங்கி ராக்கெட் அமைப்பு உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே உக்ரைனுக்கு வழங்குவதற்காக தென்கொரியாவிடம் இருந்து சுமார் 1 லட்சம் ஹோவிட்சர் பீரங்கி குண்டுகளை அமெரிக்க வாங்க இருப்பதாகவும், இது தொடர்பாக அமெரிக்கா-தென்கொரியா அரசுகள் சிலகாலமாக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அமெரிக்காவில் ஹவாய் தீவில் மவுனா லோவா என்கிற எரிமலை உள்ளது.
    • தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் மேற்கே பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஹவாய் தீவில் மவுனா லோவா என்கிற எரிமலை உள்ளது. இது உலகின் மிகப்பெரிய எரிமலை ஆகும்.

    38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த எரிமைலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான நிலநடுக்கங்களை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு எரிமலை வெடிப்பு தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வெடிப்பை தொடர்ந்து எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. எனினும் அது தற்போது எரிமலை வாயின் விளிம்புகளுக்கு உள்ளாக முடிந்திருக்கின்றன என்றும், எனவே அது குறித்து அச்சுறுத்தல் தற்போதைக்கு இல்லை என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதே சமயம் எரிமலை வெடிப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என்றும் நெருப்பு குழம்பின் ஓட்டம் விரைவாக மாறக்கூடும் என்றும் எச்சரித்து ஆய்வு மையம், எரிமலைக் குழம்பு குடியிருப்பு பகுதிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினால் அங்கிருந்து வெளியேற தயாராக இருக்குமாறு தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

    கடந்த 1843ம் ஆண்டில் இருந்து இப்போது வரை 33 முறை சீற்றம் கண்ட மவுனா லோவா கடைசியாக கடந்த 1984-ம் ஆண்டில் வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

    • இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 60-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்துள்ளது.
    • வடகொரியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    வாஷிங்டன் :

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து அடாவடி போக்கை கையாண்டு வருகிறது. அந்த வகையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 60-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்துள்ளது. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் சில ஏவுகணைகளும் அடங்கும்.

    அணுஆயுத விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியில் வடகொரியா இத்தகைய ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவின் தொடர் அடாவடி போக்குக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை வித்துள்ளது.

    அதே போல் தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுடன் தொடர்புடைய 3 மூத்த ராணுவ அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் பல தனிநபர்கள் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வடகொரியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    • ஆறு , நதி , குளம் என எங்கும் எவரும் நேராய் போய் மீன் பிடித்து விட முடியாது.
    • மான்களோ, காட்டுப் பன்றிகளோ பெருத்து விட்டால் அரசாங்கமே போய் வேட்டையாடுங்கள்...! என அனுமதிக்கும்.

    அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் கடுமை என்றாலும் கூட, அவற்றில் சில சட்டங்கள் வினோதமும் கூட! அதில் ஒன்று முடி திருத்தம்!

    நம்மூரில் எளிதாய் நடப்பவைகள் கூட அங்கு விலை அதிகம். காய்கறி, மளிகை, துணிகள் முதல் காலனிகள் வரை யம்மாடி! மருத்துவத்துக்கு.. யம்மம்மா! கார் வாஷுக்கு எவ்ளோ தெரியுமா... 24 ஆயிரம் ரூபாய்!

    பணம் ஒரு பக்கமிருக்க, ஒவ்வொன்றிற்கும் அப்பாயின்மென்ட் என்பது மகா ரோதனை !

    அதனால் அமெரிக்கா செல்பவர்கள் உடல்நலம் பரிசோதித்து, வேண்டிய மருந்துகள், உபயோகிக்கும் பொருட்கள் என கையோடு எடுத்துச் செல்வர்.

    முடிவெட்ட அங்கு ரூபாய் 2000 என்பதால் இங்கேயே (ஒட்ட) வெட்டிக் கொண்டு செல்பவர்களும் உண்டு. (ஹி..ஹி-அடியேனும்!)

    இம்முறை அதையும் மீறி முடி வளர்ந்துவிட யோகிபாபுவுக்கு போட்டி வேண்டாம். காசு போனாலும் பரவாயில்லை என்று ஒரு வழியாய் மனதை தேற்றிக் கொண்டேன். ஆனால் அப்பாயின்மென்ட் இழுத்தடித்தது.

    அப்புறம் எங்கள் மாப்பிள்ளை வசிக்கும் காலனியிலேயே வீட்டில் வைத்து வெட்டுகிறார்கள் என்று கேள்விப்பட்டு, அப்பாயின்மென்ட் வாங்கிவிட்டேன்!

    அவர் ரஷ்ய பெண்ணாம். வீட்டில் அனைத்து வசதிகளும் வைத்து மிகச் சிறப்பாக மிக நேர்த்தியாக வெட்டிவிட்டார். கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் , பணிவாக பக்குவமாக!

    இதுவே அப்பாயின்மென்ட் எடுத்து கடைக்கு சென்றால் கூட படுத்தி எடுத்து விடுவர். மனிதாபிமானமே இல்லாத வகையில் புல் வெட்டுவது போல மிஷின் போட்டு விரட்டியடிப்பர்.

    இந்த ரஷ்ய அக்காவிடம் பேச்சு கொடுக்க (முடி திருத்தர்கள் பேச சளைப்பதில்லையே!) சில விஷயங்களை சொல்லி விசனப்பட்டார்!

    பாஷை பிரச்சினையில் அது புரியாமல் போக நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பியூட்டிஷின்களான ரோஷினி மற்றும் ரம்யாவிடம் விசாரித்த போது அம்மாடியோவ்!

    ஒரு முடிவெட்டும் தொழிலுக்கு இம்புட்டா என்கிற மலைப்பு!

    அமெரிக்கர்களின் தோல் ரொம்ப மிருதுவானதாம். சின்னச் சின்ன செதுக்கங்கள் கூட நச்சு பண்ணி விடக் கூடுமாம்.

    அதனால் ஏகப்பட்ட கெடுபிடியாம். பியூட்டிஷினுக்கு ஒரு வருட படிப்பு! முடி திருத்தத்திற்கு 8 மாதம்! அதுவும் நேராய் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும். படிப்போடு பிராக்டிகல் கிளாஸ்களும் உண்டு!

    அதன் பின் ஒன்று எழுத்து அடுத்து பிராக்டிகல் என இரண்டு பரீட்சைகள்! அவைகள் கடுமையாக இருக்கும். எந்த சால்சாப்புக்கும் அங்கே இடம் கிடையாது.

    அவற்றில் பாஸ் செய்தால் தான் லைசன்ஸ்! லைசன்ஸ் பெற்றாலும் கூட யாரும் உடனே சொந்தமாய் தொழிலில் இறங்கிவிட முடியாது.

    அனுமதி பெற்றுள்ள சலூனில் குறிப்பிட்ட காலம் பணிபுரிந்தாக வேண்டும். நம்ம ஊரு போல ஒரு கத்திரிக்கோலை தொடர்ந்து பலருக்கும் உபயோகிக்க முடியாது. சானிடைஸ் செய்யணும். தரமான கிரீம்களை பயன்படுத்தனும்.

    இந்த லைசன்ஸ் எடுக்க செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா...? ரூபாய் 25 லட்சம்!

    இந்த தொகைக்கு நம்மூர் அரசு கல்லூரியில் மருத்துவம் அல்லது பொறியியல் பட்டமே பெற்று விடலாமே!

    கையோடு அங்குள்ள இன்னொரு லைசன்ஸ் சமாச்சாரத்தையும் சொல்லத் தோன்றுகிறது. அது மீன்பிடிப்பு !

    ஆறு , நதி , குளம் என எங்கும் எவரும் நேராய் போய் மீன் பிடித்து விட முடியாது. அதற்கும் இங்கு லைசென்ஸ் வேண்டும். மீன்பிடிப்பதற்கென்று ஒரு இதம் பதம் இருக்கின்றது. இங்கிதம்! சட்ட திட்டம்! கட்டுப்பாடுகள்!

    அவைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். மீன்களின் அளவு , சீதோஷ்ண நிலை இவற்றை பொறுத்து அது வேறுபடும்.

    கடல் மீன்களை பிடிக்கமட்டும் பிரச்சனை இல்லை. படகுகளுக்கு தனி வரைமுறைகள் உண்டு. மீன்பிடிப்பு என்பது அங்கு விலை உயர்ந்த பொழுதுபோக்கு.

    ஆமாம்.. இதற்காக லைசன்ஸ்க்கு மனு தாக்கல் செய்யணும். அதற்கு குறைந்தபட்சம் ரூபாய் 5 ஆயிரம். ஒரு மாதம் , வருடம் என அந்த கட்டணம் எகிறும்.

    வெயில் நேரங்களில் மீன்கள் தண்ணீருக்கு அடியில் சென்று விடும். அதனால் மீன்பிடிக்க உகந்த நேரம் மாலை தான். மீன் பிடிக்க வேண்டி பிரத்யேக தூண்டில்கள் உள்ளன. இதற்கான கடைகளுக்கு சென்றால் அவர்களே பயிற்சி தருவார்கள். லைசன்ஸ் எடுத்தும் தருவார்கள். தூண்டில் புழுக்களும் அங்கேயே கிடைக்கும்.

    அப்புறம் லைசன்ஸ் எடுத்துவிட்டால் போதும் என மீன்பிடித்துவிட முடியாது. அதற்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் முன்பதிவு அடிப்படையிலேயே போகவேண்டும்.

    பிடிக்கும் மீன்களையும் கூட நாம் எடுத்து வர முடியாது. ஆசை தீர பிடித்து பிடித்து திரும்ப நீரிலேயே விட்டுவிட்டு ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டும்.!

    மீன்கள் அதிகரிக்கும் போது அரசாங்கம் தெரிவிக்கும். அப்போது மீன்களை பிடித்து எடுத்துச் செல்லலாம்.

    அதுவும் கூட எத்தனை மீன்கள்-என்ன வகையான மீன்களை பிடிக்கிறோம்-எடுத்துச் செல்கிறோம் என கணக்கு கொடுக்க வேண்டும். அது கெட்டது போ!

    அதுபோல வேட்டையாடுவதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன.

    ஆதி காலத்தில் அமெரிக்காவிற்கு மனிதர்கள் வந்தபோது சாப்பாடு எதுவும் கிடையாது. மீன் மற்றும் மிருகங்களை வேட்டையாடி சுட்டுத் தான் சாப்பிட்டார்கள்.

    அந்த பழக்கம் இப்போது பொழுதுபோக்காக நடக்கிறது. இதற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம்.

    பறவைகள் மிருகங்கள் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி துப்பாக்கிகள்!

    வேட்டையையும் எந்த நேரத்திலும் செய்து விட முடியாது. இதற்காக காடுகளை பகுதி பகுதியாய் பிரித்து வைத்துள்ளனர். விடுமுறையிலோ வார இறுதி நாட்களிலோ அவர்கள்.... வேட்டையாடு...விளையாடு!

    துணைக்கு நாய்களை வைத்துக்கொண்டு கிளம்பிவிடுவர். காட்டிலேயே தங்குவதற்கு குடில்கள் உண்டு. மிருகங்களை சுடுவதற்கு பயிற்சி வேண்டும்.

    அவற்றை காலில் சுட்டுக் காயப்படுத்த கூடாது. சுட்டால் அவை சாக வேண்டும். அவற்றை எடுத்து வந்து புட்சரிடம் (வெட்டி தருபவர்கள்) கொடுத்து கூறு போடுவர். பிறகு பதப்படுத்துபவரிடம் (டாக்சி டெர்மிஸ்ட்) கொடுத்து வாங்கி வந்து குளிர்சாதனத்தில் வைத்து மாத கணக்கில் சாப்பிடுபவர்களும் உண்டு.

    மான் வேட்டை என்பது அங்கு மிகப் பிரபலம்!

    சமயத்தில் சாலைகளுக்கு குறுக்கே மான் வந்துவிட்டால் ஆபத்து. காரையே அது பதம் பார்த்து விடும்.

    அப்படி மானை தட்டி விட்டால்-உடன் அதிகாரிகளுக்கு தெரிவித்தாக வேண்டும். ஒரு வேளை தெரிவிக்காமல், அடுத்து வரும் கார் நபர் புகார் அளித்தால் போச்சு... தண்டனை தான்.

    அங்கே மான் வேட்டை பொதுவாக கூடாது. ஆனால் மான்களோ, காட்டுப் பன்றிகளோ பெருத்து விட்டால் அரசாங்கமே போய் வேட்டையாடுங்கள்...! என அனுமதிக்கும்.

    என்ன ஒரு வினோதம்!

    தொடர்புக்கு:-ncmohandoss@yahoo.com

    • உக்ரைன் ரஷியா போர் 11 மாதங்களைக் கடந்து விட்டது.
    • ஜெர்மனி, அமெரிக்காவின் முடிவுகளை ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார்.

    வாஷிங்டன் :

    கிரீமியாவைத் தொடர்ந்து உக்ரைனின் கிழக்கு பகுதியையும் ஆக்கிரமிக்க ரஷியா திட்டமிட்டபோது, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட உக்ரைன் முடிவு எடுத்தது. ஆனால் இதில் கொந்தளித்துப்போன ரஷியா, உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது.

    உலகமே எதிர்பார்க்காத நிலையில், இந்தப் போர் 11 மாதங்களைக் கடந்து விட்டது. இன்னும் நீளுகிறது. வல்லரசு நாடான ரஷியாவை போரில் சமாளிக்க உக்ரைனுக்கு அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பக்க பலமாக இருக்கின்றன. இதனால் எதிர்பார்த்தபடி உக்ரைனை ரஷியாவால் வாரிச்சுருட்டிக்கொள்ள முடியாமல் போனது.

    தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவியை வழங்க வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தி வந்தது.

    இந்த நிலையில் உக்ரைனுக்கு அதிநவீனமான 'லெப்பேர்டு-2' ரக பீரங்கிகள் 14-ஐ அனுப்பி வைக்க முடிவு எடுத்துள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் நேற்று முன்தினம் அறிவித்தார்.

    இதுகுறித்து அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர் பேசும்போது, "உக்ரைனுக்கு லெப்பேர்டு-2 ரக பீரங்கிகள் 14-ஐ அனுப்பி வைக்க முடிவு செய்திருப்பது சரியான கொள்கை ஆகும். நாங்கள் மிகவும் பயனுள்ள ஆயுத அமைப்புகளை கையாள்கிறோம். எப்போதும் நெருக்கமான ஒத்துழைப்புடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்" என தெரிவித்தார்.

    உக்ரைனுக்கு லெப்பேர்டு-2 ரக பீரங்கிகள் 14-ஐ அனுப்பும் முடிவை ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது அவர், உக்ரைனுக்கு அதிநவீன 'எம்-1 ஆப்ராம்ஸ்' ரக பீரங்கிகள் 31-ஐ அனுப்பும் முடிவை வெளியிட்டார்.

    வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோரை உடன் வைத்துக்கொண்டு இந்த முடிவை ஜோ பைடன் அறிவித்தபோது, "உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் அதிகரிப்பதை ரஷியா மீதான தாக்குதலாக பார்க்கக்கூடாது. இது உக்ரைன் மண்ணைப் பாதுகாக்க அந்த நாட்டுக்கு உதவுவதுதான். இது ரஷியாவுக்கு அச்சுறுத்தல் ஆகாது. ரஷியாவுக்கு எந்தவிதமான தாக்குதல் அச்சுறுத்தலும் இல்லை" என்று கூறினார்.

    ஜெர்மனியும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு அதிநவீன பீரங்கிகளை அனுப்பும் நிலையில், பிற மேற்கத்திய நாடுகளும் அந்த நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் முடிவுகளை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார்.

    இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், "இது வெற்றியின் பாதைக்கு மிக முக்கியமான படியாக அமைகிறது. இன்று சுதந்திர உலகம், ஒரு பொதுவான குறிக்கோளுக்காக உக்ரைனின் விடுதலைக்காக முன் எப்போதும் இல்லாத வகையில் ஒன்றுபட்டுள்ளன" என குறிப்பிட்டார்.

    ரஷியா எதிர்ப்பு

    ஆனால் ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் முடிவை ரஷியா எதிர்த்துள்ளது.

    இதுபற்றி அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனட்டாலி ஆன்டனோவ் கருத்து கூறுகையில், "ஆப்ராம்ஸ் பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பி வைக்கும் அமெரிக்காவின் முடிவு, ரஷிய கூட்டமைப்புக்கு எதிரான மற்றொரு அப்பட்டமான ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக இருக்கும்" என தெரிவித்தார்.

    ஜெர்மனிக்கான ரஷிய தூதர் செர்ஜி நெச்சேவ் கருத்து தெரிவிக்கையில், "மிகவும் ஆபத்தான இந்த முடிவு, மோதலை ஒரு புதிய நிலை மோதலுக்கு கொண்டு செல்கிறது" என குறிப்பிட்டார்.

    • தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
    • நீரா இ-காமர்ஸ் முறையிலும் விற்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை தலைமையி டமாக க்கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 1,200க்கும் அதிகமான விவசாயிகளை பங்குதாரர்க ளாக கொண்ட இந்நிறுவனம் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடு பட்டுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே விற்கப்பட்டு வரும் நீரா இ-காமர்ஸ் முறை யிலும் விற்கப்படுகிறது.இது குறித்து நிர்வாக இயக்குனர் பாலசுப்பி ரமணியன் கூறிய தாவது:- பல்வேறு வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், இரும்பு மற்றும் தாதுக்கள் அடங்கிய 'நீரா' பானத்துக்கு முதன்முறை யாக ஏற்றுமதி வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்கா வில் உள்ள தமிழகத்தை சேர்ந்த கதிர் குருசாமி என்பவரின் ரீஜென்ட் நார்த் அமெரிக்கா நிறுவனம், நீரா ஆர்டர் செய்துள்ளது. தற்போது தினசரி, 5,000 பாக்கெட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை 20 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டு ள்ளோம்.

    ஆண்டு விற்பனை 25 கோடி ரூபாயை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது. தற்போது 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 'நீரா', கன்டெய்னர் மூலம் அமெரி க்காவுக்கு ஏற்றுமதியாகிறது. வரும் நாட்களில் 5 கன்டெய்னர்கள் அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம். நீரா விற்பனை அதிகரிப்பதால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலோங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • தீர்வு எட்டப்படாவிட்டால் முக்கியமான பில்களுக்கு அரசு பணத்தை செலுத்த முடியாது.
    • அமெரிக்காவில் கடும் நிதி பற்றாக்குறையானது பொருளாதார மந்தநிலையின் ஆரம்பமாக பார்க்கப்படுகிறது.

    வாஷிங்டன்:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்தபிறகு அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பின.

    ஆனாலும் பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இன்றும் ஏற்படவில்லை. இதற்கிடையே சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் உலக வல்லரசு நாடான அமெரிக்கா கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்த நாட்டிடம் ஜூன் 1-ந் தேதிக்கு பிறகு செலவு களுக்கு நிதி செலுத்த போதுமான பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அமெரிக்க அரசின் கருவூலம் வெளியிட்ட அறிக்கையில், அரசின் கடன் வரம்பு அதிகரிப்பு செய்யாவிட்டால் ஜூன் மாதத்துக்கு பிறகு அரசின் செலவுகளுக்கு போதுமான பணம் இல்லாமல் போகலாம் என்று தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க நிதி மந்திரி ஜேனட்யெல்லன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அமெரிக்காவின் கடன்கள் முறையாக அடைக்கப்படும் என்ற முழு நம்பிக்கை ஏற்படுவதற்கு உதவுங்கள். கடைசி நிமிடம் வரை காத்திருந்து அதன்பின் கடன் உச்சவரம்பு உயர்த்தப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனால் நாட்டின் வணிகமும், வாடிக்கையாளர் நம்பிக்கையும் பெருமளவு பாதிக்கப்படுகின்றன.

    கடன் உச்சவரம்பை அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய காலத்துக்குள் உயர்த்தவில்லை என்றால் அது பங்குச்சந்தைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன்மூலம் உலக அளவில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுவிடும்.

    ஜூன் மாத தொடக்கத்தில் அல்லது ஜூன் 1-ந்தேதிக்கு முன்னதாக பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அமெரிக்க அரசு, மக்கள் சேவைகளுக்கும் பிற அனைத்து நிதி செலவுகளுக்கும் நிதியை திரட்ட முடியாது. இந்த நிதி பற்றாக்குறை பிரச்சினையை விரைவாக சரிசெய்ய வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்க நிதித்துறை 31.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடன் வாங்கலாம் என்று ஏற்கனவே அனுமதி வழங்கியது. இந்த உச்ச வரம்பு, கடந்த ஜனவரி 19-ந்தேதியே எட்டப்பட்டுவிட்டது. ஆனாலும் ஜூன் வரை கையிருப்பு தொகை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ஜூன் 1-ந்தேதி முன்பே கையிருப்பு தொகை தீர்ந்துவிடும் சூழல் உள்ளது. இதையடுத்து அதிபர் ஜோபைடன், அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ஜெருசலேம் நகரில் தூதரக அளவிலான சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் குடியரசு கட்சியின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை வருகிற 9-ந்தேதி, கடன் உச்சவரம்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வெள்ளை மாளிகைக்கு வருகை தரும்படி அழைத்து உள்ளார். ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள் சபை தலைவரான ஹக்கீம் ஜெப்ரீஸ், செனட்டின் பெரும்பான்மை தலைவர் சக் ஷுமர் மற்றும் குடியரசு கட்சியின் செனட் தலைவர் மிட்ச் மெக்கான்னல் ஆகியோரையும் இக்கூட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

    இக்கூட்டத்தில் தீர்வு எட்டப்படாவிட்டால் முக்கியமான பில்களுக்கு அரசு பணத்தை செலுத்த முடியாது. அமெரிக்கா, வருமானத்தைவிட அதிக அளவில் செலவழித்து வருகிறது. அதனை ஈடுகட்ட ஏராளமாக கடன் வாங்க வேண்டியுள்ளது.

    அமெரிக்காவில் கடும் நிதி பற்றாக்குறை, பொருளாதார மந்தநிலையின் ஆரம்பமாக பார்க்கப்படுகிறது. ஆசியாவில் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அதில் இருந்து மீண்டு வர அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இலங்கையில் பணவீக்கம் அதிகரித்தபடியே சென்றது. இதேபோல் மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் ஆசியாவில் இலங்கையைவிட பாகிஸ்தானில் பணவீக்கம் வேகமாக அதிகரித்து வருவதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது. 2023-ம் ஆண்டில் இதுவரை உலக அளவில் மோசமாக சரிந்துள்ள நாணயங்களில் பாகிஸ்தான் ரூபாயும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.
    • நீரா பானம் பல்வேறு வைட்டமின்கள், இரும்பு மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகும்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தினை தலைமை யிடமாக கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் 1200க்கும் மேற்பட்ட விவசாயிகளை பங்குதாரராக கொண்டு தென்னை மரங்களில் இருந்து நீரா பானத்தினை உற்பத்தி செய்து அதனை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறீர்கள். சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த நீரா பானம், பல்வேறு வைட்டமின்கள், இரும்பு மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகும். இது இ-காமர்ஸ் முறையிலும் விற்பனை செய்யப்டுகிறது.

    இந்தநிலையில் நீரா பானத்தை அமெரிக்கா விற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்து நிர்வாக இயக்குனர் பாலசு ப்ரமணி யம் கூறியிருப்பதாவது :- அமெரிக்காவில் உள்ள தமிழகத்தை சேர்ந்த கதிர்குருசாமி என்பவர் மூலம் ரீஜெண்ட் நார்த் அமெரிக்க நிறுவனம் நீரா பானத்திற்கான ஆர்டரினை கொடுத்துள்ளது இதனால் தற்போது தினசரி 5000 பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் நிலையில், அதனை உயர்த்தி இனி 20 ஆயிரம் பாக்கெட்டுகளாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ.30 லட்சம் மதிப்புள்ள நீரா பானம் அமெரிக்காவிற்கு கண்டைனர் மூலம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

    இதன் ஆண்டு விற்பனை ரூ .25 கோடி ரூபாயை எட்டுவதற்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும் நாட்களில் நீரா பானத்தினை 5 கண்டைன ர்களில் அனுப்ப திட்டமிட ப்பட்டுள்ளது. இதன் விற்பனை அதிகரி த்தால் தென்னை விவசாயிக ளின் வாழ்வாதா ரமும் மேலோங்கும் என்றார்.

    • அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக சட்டம் நிறைவேற்றம்.
    • சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதியை மீண்டும் விண்வெளிக்கு திருப்புதல் உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து ஆராயப்படுகிறது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், "காலநிலை மாற்றங்களிலிருந்து நமது பூமியை காப்பாற்ற சூரிய ஒளியை எவ்வாறு தடுப்பது" என்பது குறித்து ஆராய்வதற்கு, ஒப்புதல் அளித்திருக்கிறது.

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை அலுவலகம், சூரிய புவி-பொறியியல் குறித்த அறிக்கையை வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், புவி வெப்பமடைதலை விரைவுபடுத்துவது சூரியக் கதிர்கள்தான் என்பதால், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை ஒரு குழு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சூரிய புவி பொறியியல் ஆராய்ச்சி குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக 2022ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இத்தகைய ஆராய்ச்சிகள் குறித்து அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பூமியின் சிக்கலான அமைப்புகள் குறித்து வளர்ந்து வரும் புரிதலின் அடிப்படையில், இவற்றினால் ஏற்படப்போகும் நன்மைகள் மற்றும் அபாயங்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள ஒரு ஆராய்ச்சிக்கான தேவை இருக்கிறது. சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதியை மீண்டும் விண்வெளிக்கு திருப்புதல், சூரிய கதிர்களை பிரதிபலிக்கும் வகையில் கடல் மேகங்களை பிரகாசமாக்குதல், சிரஸ் மேக ஆய்வு போன்ற வழிமுறைகள் குறித்து ஆராயப்படுகிறது.

    இந்த ஆராய்ச்சியானது, தொழில்நுட்பங்களை காட்டிலும், 'சூரிய கதிர்வீச்சு மாற்றியமைத்தல் முறைகள்' (Solar Radiation Modification) ஏற்படுத்தப்போகும் தாக்கங்களைப் பற்றிய ஒரு புரிதலை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. இதன் பெரும்பகுதி அடிப்படை காலநிலை செயல்முறைகள் மற்றும் "மனித கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகள்" (Human Greenhouse Gas Emissions) ஏற்படுத்தப்போகும் விளைவுகள் குறித்தும், காலநிலைக் கொள்கையின் ஒரு அங்கமாக சூரிய கதிர்வீச்சு மாற்றியமைத்தல் முறைகள் விளைவிக்கக் கூடிய அபாயங்கள் மற்றும் நன்மைகள் ஆகியவற்றை குறித்தும் சிறந்த முடிவுகளை செயல்படுத்த வழிவகுக்கும்.

    வரும் காலங்களில், பொது அல்லது தனியார் நிறுவனங்களால் இந்த வழிமுறை (SRM) பயன்படுத்தப்படுவதற்கு அமெரிக்காவை தயார்படுத்தவும் உதவும். இதன் மூலம் சில வருட காலங்களுக்கு நமது கிரகமான பூமியை கணிசமாக குளிர்விக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அந்த ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது.

    • போலி செய்தி ஊடகங்கள் இச்செய்தியை மறைக்க மாற்றி தகவல் வெளியிடும் என டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
    • கோகைன் கண்டுபிடிக்கப்பட்டபோது பைடன் கேம்ப் டேவிட் எனும் அமெரிக்க அதிபருக்கான தங்குமிடத்தில் இருந்தார்.

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் 5 நாட்களுக்கு முன்பு, மேற்கு விங் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு வெள்ளை நிற பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது, கோகைன் எனப்படும் போதை மருந்து என ரகசிய சேவை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. தீயணைப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு வந்து கண்டெடுத்த பொருள் குறித்து சோதனை நடத்தினர்.

    இது குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையில், "இவை தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டர் ஆகியோரின் பயன்பாட்டிற்குத்தான்" என குற்றஞ்சாட்டியுள்ளார்.

    இது குறித்து டிரம்ப், தனது "டிரூத் சோஷியல்" சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "வெள்ளை மாளிகையில் உள்ள அமெரிக்க அதிபரின் பிரத்யேக அலுவலகமான ஓவல் அலுவலகம் அருகே கிடைத்த இந்த கோகைன், பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டருக்காக இல்லாமல் வேறு யாருக்கோ என எவ்வாறு நம்புவது? ஆனால், போலி செய்தி ஊடகங்கள் இச்செய்தியை மறைக்க, 'கிடைத்தது மிக குறைந்த அளவு' என்றோ அல்லது 'அது கோகைன் அல்ல, ஆஸ்பிரின்' என்றோ கூறத் தொடங்கி விடும். என்னை வெறுக்கும் அரசு வக்கீல் ஜாக் ஸ்மித், கோகைன் கண்டெடுத்த பகுதியில் காணப்பட்டாரா?" என பதிவிட்டுள்ளார்.

    கோகைன் கண்டுபிடிக்கப்பட்டபோது பைடன் வார இறுதி விடுமுறைக்காக கேம்ப் டேவிட் எனும் அமெரிக்க அதிபருக்கான தங்குமிடத்தில் இருந்தார்.

    ஊடகவியலாளர்களுடன் உரையாடிய வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கெரீன் ஜீன்-பியர், "அமெரிக்க அதிபர் இந்த சம்பவத்தை ஆழமாக விசாரிக்க வேண்டும் என நினைக்கிறார். இப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் (வெஸ்ட் விங்), பெரிதும் மக்கள் பயணிக்கும் பகுதி. அங்கு பல வெள்ளை மாளிகை பார்வையாளர்கள் வருகிறார்கள். இது குறித்து இதற்கு மேல் பகிர்ந்து கொள்ள என்னிடம் எதுவும் தகவல் இல்லை. விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் குறித்த உண்மைகளை அதிகாரிகள் கண்டுபிடிப்பார்கள் என வெள்ளை மாளிகை நம்புகிறது" என தெரிவித்தார்.

    ×