என் மலர்
நீங்கள் தேடியது "USA"
- கடந்த 2003ல் சதாம் உசேன் ஆட்சியை கவிழ்க்க ஈராக்கை அமெரிக்கா படையெடுத்தது.
- அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் தஞ்சம் அடைந்தன.
ஈராக் ராணுவ தளங்களில் இருந்து சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியது.
கடந்த 2003ல் சதாம் உசேன் ஆட்சியை கவிழ்க்க ஈராக்கை அமெரிக்கா படையெடுத்தது. அந்த சமயத்தில் ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் தஞ்சம் அடைந்தன. இந்த விமானத் தளத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கப் படைகள் இருந்தன.
2023 ஆம் ஆண்டில் ஈராக் அரசாங்கம் அழைப்பு விடுத்ததிலிருந்து அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் இருந்த படைகளை அமெரிக்க இராணுவம் பல ஆண்டுகளாக அதைக் குறைத்து வந்தது.
இந்நிலையில், ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறியதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .
இனிமேல் அமெரிக்கா உடனான உறவு, நேரடி ராணுவ தலையீடாக இல்லாமல், இருதரப்பு பாதுகாப்பு உறவாக மட்டுமே இருக்கும் என ஈராக் அறிவித்துள்ளது.
- ஈரானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் போராட்டம் வெடித்துள்ளது.
- போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், அமெரிக்கா தலையிடும் என டிரம்ப் எச்சரிக்கையால பதற்றம்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் போராட்டக்காரர்கள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
ஈரானில் தற்போது நடந்து வரும் போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2500-யை தாண்டியுள்ளது.
இதனிடையே, போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்தது.
இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளத்தில் உள்ள சில பணியாளர்களை வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஈரான் தலைவர் இதற்கு முன்னதாக வெளியிட்டு ஒரு வீடியோ, தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், அமெரிக்கா இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர், அலி ஷம்கானி தனது எக்ஸ் பக்கத்தில் "அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானின் அணுஆயுத நிலையத்திற்கு எதிராக பயனற்ற ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இதனுடன் ஈரானிய ஏவுகணைகளால் அல்-உதைதில் (கத்தார்) உள்ள அமெரிக்கத் தளம் அழிக்கப்படுவது குறித்தும் குறிப்பிடுவது நல்லது.
எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலடி கொடுப்பதில் ஈரானின் விருப்பம் மற்றும் திறமை குறித்து ஒரு உண்மையான புரிதலை உருவாக்க இது நிச்சயமாக உதவும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
- அமெரிக்கா உலக கோப்பை அணியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது.
- இந்த விவகாரத்தால் 8 நாடுகள் பாதிக்கப்படும்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7- ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. 20 நாடுகள் இதில் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் பெரும்பாலான அணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் விளையாடும் அணிகளில் ஒன்றான அமெரிக்கா இன்னும் வீரர்களை தேர்வு செய்யவில்லை.
இதற்கிடையே அந்த அணியில் உள்ள பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த 4 வீரர்களுக்கு இந்தியா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் அலி கான், ஷயான் ஜஹாங்கிர், முகமது மோஷின், எஹ்சான் அதில் ஆகிய 4 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விசா நிராகரிக்கப்பட்ட தகவலை அலிகான் காெணாலி செய்தியில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எங்களால் டி20 உலக கோப்பையில் பங்கேற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் அமெரிக்கா உலக கோப்பை அணியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தால் 8 நாடுகள் பாதிக்கப்படும். அமெரிக்காவை தவிர இங்கிலாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், நேபாளம், கனடா, நெதர்லாந்து ஆகிய நாடு களிலும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- போதைப் பொருள் கடத்துவதாகக் கூறி வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
- வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.
வாஷிங்டன்:
வெனிசுலா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
இதையடுத்து, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகக்கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டு அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்தது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலாவில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.
இந்நிலையில், வட அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. இந்தக் கப்பல் ரஷியாவுக்கு சொந்தமானது என தகவல் வெளியானது. அந்தக் கப்பலில் ரஷிய தேசிய கொடி பொருத்தப்பட்டிருந்ததாகவும், கப்பல் ரஷியாவுக்கு சென்றுகொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
- பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை கீழ் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட அந்நாடு தடை விதித்தது.
டாக்கா:
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அவாமி லீக் கட்சி தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்கு வரும்வரை பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை கீழ் அவாமி லீக் கட்சிக்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.
இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தேர்தலில் அவாமி லீக் கட்சியினர் பங்குகொள்ள வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷேக் ஹசீனா கட்சிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக்குழு உறுப்பினர்கள் வங்கதேச பிரதமர் முகமது யூனுசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மூலம் தங்களுக்கு தேவையான அரசை அமைக்க வங்கதேச மக்களுக்கு உரிமை உள்ளது. அனைத்துக் கட்சியினரும் தேர்தலில் கலந்துகொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடா நோக்கி விமானம் புறப்பட்டது.
- சுமார் 2,000 அடி உயரத்தை அடைந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிரெக் பிபிள் (55). இவர் முன்னாள் கார் பந்தய சாம்பியன் ஆவார். இவர் தனது மனைவி கிறிஸ்டினா, குழந்தைகள் ரைடர், எம்மா ஆகியோருடன் செஸ்னா சி550 என்ற சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தார். இவர்களுடன் டென்னிஸ் டட்டன், அவரது மகன் ஜாக், கிரெக் வாட்ஸ்வொர்த் ஆகியோரும் இருந்தனர்.
ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடாவை நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம் சுமார் 2,000 அடி உயரத்தை அடைந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் விமான நிலையத்திற்கே திரும்பியது.
அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ரன்வேயைத் தாண்டிச் சென்று ஆண்டனா மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு விமானத்தில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த விமானம் சுவரில் மோதி தீப்பிடித்ததில் 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வெளிநாடுகளை சேர்ந்த 85 ஆயிரம் பேர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
- நமது சமூகங்களின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பவர்கள்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப் பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவோம் என்ற முழக்கத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வெளிநாட்டினரின் 85 ஆயிரம் விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிபர் டிரம்ப்பும் செயலாளர் மார்கோ ரூபியோவும் ஒரு எளிய ஆணையைப் பின்பற்றுகிறார்கள். அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றும் வரை அவர்கள் ஓயமாட் டார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 85 ஆயிரம் பேர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
இதுமுந்தைய ஆண்டை விட 2 மடங்கு அதிகம். தாக்குதல்கள் மற்றும் திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம். இவை மட்டுமே கிட்டத்தட்ட பாதி விசா ரத்துகளுக்குக் காரணம் ஆகும்.
இவர்கள் நமது சமூகங்களின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பவர்கள். எனவே அவர்கள் நம் நாட்டில் இருக்க நாங்கள் விரும்பவில்லை.
அமெரிக்கா வர விசாவுக்கு விண்ணபிப்பவர்களுக்கு அனுமதி வழங்க நாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமோ எடுத்துக்கொள்வோம். மேலும், விண்ணப்பதாரர் அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்பதை உறுதி செய்யும் வரை நாங்கள் விசா வழங்க மாட்டோம்.
ஒரு விண்ணப்பதாரர் விசாவிற்குத் தகுதி பெறுகிறாரா என்பதைத் தீர்மானிக்கும்போது, தூதரக அதிகாரிகள் ஒரு காரணியை மட்டும் பார்க்காமல், அந்த நபரின் ஒட்டுமொத்த சூழ்நிலையையும் பார்த்து, பின்னர் விசா வழங்குவற்கான தகுதி குறித்து தீர்மானிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே பெண் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வரி என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான வருவாய் ஆதாரம்
- இந்தியாவில் நான்கு அடுக்குகளாக இருந்த வரிச்சுமை இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டது
இன்னும் சிலநாட்களில் நாம் புத்தாண்டை பூரிக்க இருக்கிறோம். அதாவது 2025 முடியப் போகிறது. ஒவ்வொரு வருடம் முடியும்போதும் அந்த வருடத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நினைவுக்கூறுவோம். அப்படிதான் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை, அதாவது நீங்கள் டிரெண்ட் செய்த முக்கிய நிகழ்வுகளை, தகவல்களை உங்களுக்கு நினைவுப்படுத்தி வருகிறோம்.
அந்த வரிசையில் இன்றைய தலைப்பு 'வரி'. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த மன்னிப்பு என விஜயகாந்த் கூறியதுபோல வரி என்ற வார்த்தையே கேட்டாலே அனைவருக்கும் ரத்தம் கொதிக்கும் அளவிற்கு கோபம் வரலாம். அனைவரின் கோபமும் நியாமானதுதான். மக்களின் இந்த கோபத்திற்கு காரணம் என்ன?
வரி என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமாகும். இந்த நிதியைக் கொண்டே அரசாங்கம் பொதுச் சேவைகளான சாலைகள் அமைத்தல், மருத்துவமனைகள், பள்ளிகள், பாதுகாப்பு மற்றும் பிற நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆனால் நம் நாட்டில் இருக்கும் சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகளின் நிலை என்ன? பாதுகாப்பு குறித்து பேசவேக்கூடாது. அந்த நிலைமை.

நாம் கடையில் பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்கி செல்லும்போது, அந்தப் பொருள் சரியில்லை என்றால் மறுநாள், ஏன் அந்த நாளே வந்து கடைக்காரரை உண்டில்லை என ஆக்கிவிடுவோம். அப்படி இருக்கையில் நமக்கான அடிப்படை தேவைகளுக்காக நாம் செலுத்தும் வரி பயனற்று போகும்போது யாருக்குதான் ஆத்திரம் வராது?. அதனால் உங்களின் கோபம் நியாயமானதுதான். இந்தக் கதையை தொடர்ந்தால் சென்றுக்கொண்டே இருக்கும். அதனால், அதைவிடுத்து இந்த கட்டுரைக்கான தலைப்புக்குள் வருவோம்.
இந்தாண்டு பேசப்பட்ட, கூகுளில் தேடப்பட்ட முக்கிய தலைப்புகளில் ஒன்று வரி. ஏன்? இந்திய அரசு வரியை குறைத்தது. அதாவது நான்கு அடுக்குகளாக இருந்த வரிச்சுமையை, இரண்டு அடுக்குகளாக குறைத்தனர். இந்த நடைமுறை கடந்த செப்டம்பர் முதல் அமலுக்கு வந்தது. இதனால் மக்கள் கொஞ்சம் செலவு குறையும் என மகிழ்ந்தனர். மற்றொன்று அமெரிக்க அரசின் வரிவிதிப்பு. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல, உள்நாட்டு வரியையே தாங்கமுடியாத நிலையில் இருக்கும் மக்களுக்கு, அமெரிக்கா மேலும் ஒரு குண்டை வீசியது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
அதாவது இந்தியப் பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா அரசு அதிகரித்தது. இந்தியப் பொருட்களின் மீது கூடுதல் 25% வரி விதித்து, மொத்த வரிகளை 50% ஆக உயர்த்தியது. கண்ணாடிய திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும் என்பதுபோல இதற்கு ரஷ்யாவை எல்லாம் காரணம் கூறியது அமெரிக்கா. இது போதாது என்று, நீங்கள் இன்னும் நிறைய வரிகளை பார்க்கப்போகிறீர்கள் என்றும் டிரம்ப் கூறுகிறார். மக்களின் அச்சத்திற்கு காரணம் அந்த வரியை ஈடுகட்ட நம்மீது தாக்கம் வெளிப்படுத்தப்படும் என்ற எண்ணம்தான்.
நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? என்ற திரைப்பட டயலாக்தான் மக்களின் நிலை. ஏனெனில் கொடுப்பவர்களும் அவர்கள்தான். அடிவாங்குபவர்களும் அவர்கள்தான்.
இப்படித்தான் டிரெண்டானது வரி.
- அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதராக பொறுப்பேற்றார்.
- இந்தியாவுடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதித்தார். ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு இந்தியா பணியவில்லை.
தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே, இந்தியா உடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் என டிரம்ப் சொல்லி வருகிறார். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.
அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதரக பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவி ஏற்ற விழாவில் பேசிய அதிபர் டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என சூசகமாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை டிசம்பர் 10ம் தேதி முதல் டெல்லியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
- சஹாஜா தங்கியிருந்த வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் சஹாஜா உள்பட சக மாணவிகள் பலர் சிக்கினர்.
வாஷிங்டன்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ஜோடிமெட்லா பகுதியைச் சேர்ந்தவர் சஹாஜா உடுமலா (24). இவர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் அல்பெனி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.
அவர் அல்பெனி நகரின் வெஸ்ட் அவன்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சக மாணவிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.
இந்நிலையில், சஹாஜா தங்கி இருந்த வீட்டில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சஹாஜா உள்பட சக மாணவிகள் சிக்கினர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் வீட்டில் சிக்கியவர்களை போராடி மீட்டனர்.
இந்த தீ விபத்தில் சஹாஜாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. சக மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சஹாஜாவுக்கு 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சஹாஜா நேற்று உயிரிழந்தார். அவரது உடலை இந்தியா கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சி எடுத்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீ விபத்தில் சிக்கி இந்திய மாணவி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களையும், 2024 ஆம் ஆண்டில் 1,368 பேரை அமெரிக்கா நாடு கடத்தியது.
- இந்த நாடுகடத்தல்களுக்கு மனித கடத்தல் முக்கிய காரணம்.
2009 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா 18,822 இந்திய குடிமக்களை நாடு கடத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் இந்த ஆண்டு மட்டும் 3,258 பேர் ஜனவரி முதல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அளித்த எழுத்துப்பூர்வமாக பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களையும், 2024 ஆம் ஆண்டில் 1,368 பேரை அமெரிக்கா நாடு கடத்தியது. இந்த ஆண்டு திரும்பிய 3,258 பேரில், 2,032 பேர் வழக்கமான வணிக விமானங்களில் வந்தனர். மீதமுள்ள 1,226 பேர் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் சிறப்பு விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நாடு கடத்தல்களுக்கு மனித கடத்தல் முக்கிய காரணம் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார். தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் மாநில அரசுகள் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், பஞ்சாப் மாநிலத்தில் இதுபோன்ற வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் NIA இதுவரை 27 மனித கடத்தல் வழக்குகளைப் பதிவு செய்து 169 பேரைக் கைது செய்துள்ளது என்றும் 132 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
- வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- வெனிசுலா ஒருபோதும் வெளிநாட்டு அழுத்தம் அல்லது ஆதிக்கத்திற்கு அடிபணியாது.
கராகஸ்:
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாக டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து கடந்த செப்டம்பா் முதல் வெனிசுலா அருகே கரீபியன் பகுதியில் அமெரிக்கா கடற்படையை பெரும் அளவில் குவித்து வருகிறது. இதனால் வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் மதுரோவும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்து உள்ளார்.
தலைநகர் கராகசில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரோ தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது:-
நாங்கள் அமைதியை விரும்புகிறோம். இறையாண்மை, சமத்துவம், சுதந்திரம் கொண்ட அமைதியை விரும்புகிறோம். அடிமையின் அமைதியையோ, காலனித்துவ அமைதியையோ நாங்கள் விரும்பவில்லை. வெனிசுலா ஒருபோதும் வெளிநாட்டு அழுத்தம் அல்லது ஆதிக்கத்திற்கு அடிபணியாது. எனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முயற்சிக்கிறது. மோதலுக்குத் தயாராகும்போது வெனிசுலா வெளிப்புற கட்டளைகளுக்கு அடிபணியாது.
இவ்வாறு அவர் கூறினார்.






