என் மலர்
நீங்கள் தேடியது "USA"
- அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
- ஈரான் பள்ளிமீது நடத்திய வான்வழித் தாக்குதலில் மாணவிகள் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
டெஹ்ரான்:
பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது எனக்கூறி அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
மினாப் நகரில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளம் அமைந்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் பெண்கள் தொடக்கப்பள்ளி மீது இஸ்ரேல் - அமெரிக்கா நேற்று முன்தினம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 85 மாணவிகள் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பலர் காயமடைந்தனர். இத்தகவலை அந்நாட்டு அரசு நடத்தும் செய்தி நிறுவனம் உறுதிசெய்தது. பள்ளி மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான செயல் என ஈரான் அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தக் கொடூர தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடங்கியுள்ள போர் நடவடிக்கையில் 3 வீரர்கள் பலியாகினர்.
- ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறியதை அமெரிக்கா மறுத்தது.
வாஷிங்டன்:
அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடங்கியுள்ள போர் நடவடிக்கையில், அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 5 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறியதை அமெரிக்கா மறுத்துள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில், ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.
ஈரானின் இந்தத் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கின் அரசியல் நிலைத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
- ஈரான் தாக்குதலில் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் முக்கிய பங்கு வகிக்கிறது.
- வளைகுடா கடல் பகுதியில் செல்லும் கப்பல்களை ஈரான் குறிவைக்கிறது.
அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. 17 ராணுவ தளங்கள் டார்கெட் செய்யப்பட்டன என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அத்துடன் வளைகுடா பகுதிகளில் செல்லும் எண்ணெய் கப்பல்களையும் ஈரான் குறிவைத்துள்ளது. இதற்கிடையே வளைகுடா கடல் பகுதியில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆபிரகாம் லிங்கன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் இருந்து விமானங்கள் பறந்து சென்று ஈரானை தாக்கி வருகிறது. இந்த நிலையில் ஆபிரகாம் லிங்கன் மீது 4 பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் மத்திய கமாண்ட் (CENTCOM) ஈரானின் கூற்றை மறுத்துள்ளது. ஈரான் பொய் சொல்கிறது. ஈரானின் ஏவுகணை கப்பல் அருகில் கூட வரவில்லை எனத் தெரிவித்துள்ளது.
ஒருவேளை ஈரான் சொல்வது உண்மை என்றால், அமெரிக்காவுக்கு இது மிகப்பெரிய இழப்பாகும். இதற்கிடையே நிலமும் கடலும் பயங்கரவாத ஆக்கிரமிப்பாளர்களின் கல்லறையாக மாறும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
- சனிக்கிழமை இரவு மட்டும் 200 விமானங்கள் மூலம் 500 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- ஈரானின் 900 இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் உடன்பாடு எட்டவில்லை.
இந்த நிலையில்தான் சனிக்கிழமை நள்ளிரவு திடீரென்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் அபயதுல்லா காமேனி மற்றும் இரண்டு அமைச்சர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பல இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஈரானின் பல்வேறு இலக்குகளை குறிவைத்து 1200 குண்டுகள் வீசப்பட்டன என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவு மட்டும் 200 விமானங்கள் மூலம் 500 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
முதலாவதாக இஸ்ரேலை ஒட்டியுள்ள தெஹ்ரான் பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயார் படுத்தி வைத்திருந்த பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தப்ரிஸ் என்ற பகுதியில் இருந்துதான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப்படை இஸ்ரேல் நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது. இதனால் இந்த இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஈரானின் 900 இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்கா இன்று காலை தெரிவித்துள்ளது.
- ஈரான் தனது ஏவுகணைப் படைகளை முழு வீச்சில் தயார் நிலையில் வைத்துள்ளது.
- இஸ்ரேல் நாடு முழுவதும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சபட்சத் தலைவரான அலி கமேனி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து இந்த செயலுக்கு காரணமானவர்கள் வருந்துவார்கள் என்றும், இந்த "பெரும் குற்றத்திற்கு" வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்தது.
மேலும் ஈரானிய புரட்சிகர காவல் படை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது "மிகவும் அழிவுகரமான தாக்குதல்கள்" நடத்தப்படும் என எச்சரித்துள்ளது. ஏற்கனவே வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஈரானின் இந்த எச்சரிக்கைக்கு ட்ரம்ப் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,
"முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான தாக்குதலை மேற்கொள்ளப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் அவ்வாறு செய்யாமல் இருப்பது நல்லது. ஈரான் அவ்வாறு செய்தால், இதற்கு முன்பு பார்த்திராத ஒரு பலத்துடன் நாங்கள் அவர்களைத் தாக்குவோம்." என தெரிவித்துள்ளார்.
- ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
- அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாபை உறுதி செய்ய வேண்டும்
மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வரும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு, அங்கு வசித்து மற்றும் பணிபுரிந்து வரும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாபை உறுதி செய்ய தேவையான மற்றும் உரிய அனைந்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- சர்வதேச கூட்டணிப் படைகள் தங்கியிருக்கும் முக்கிய மையமாகும்.
நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அலி காமேனி, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவ தளபதி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பழிவாங்கும் விதமாக, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தொடர்ந்து தற்போது ஈராக்கிலும் ஈரான் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், ஈரான், ஈராக், துபாய் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வான்வெளிகள் வழியாகச் செல்லும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக வடக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் தாக்கப்பட்டுள்ளன.
வடக்கு ஈராக்கின் குர்திஷ் பகுதியில் உள்ள இர்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஒரு டிரோன் விழுந்து வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலுக்குள்ளான இந்த இடம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராகப் போராடும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டணிப் படைகள் தங்கியிருக்கும் முக்கிய மையமாகும்.
இந்த தாக்குதலில் 2 பேர் வரை கொல்லப்பட்தாக தகவல் வெளியாகி உள்ளது.
- கமேனியின் மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை கொல்லப்பட்டனர்.
- கமேனியை வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவர் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
ஈரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA, கடந்த 35 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்த அயதுல்லா அலி காமேனி (86 வயது) இயற்கை எய்தியதாக அறிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் ஈரான் பிரதிநிதிகள் அதை மறுத்தனர்.
கமேனியை வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவர் என்று குறிப்பிட்ட டிரம்ப் அவரது மரணம் ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும் குண்டுவெடிப்பு தடையின்றி தொடரும் என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.
இந்நிலையில் ஈரான் அரசு ஊடகத்தில் அவர் உயிரிழந்த செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாவதும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காமேனியின் தியாகம், கொடுங்கோலர்களுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய மக்கள் எழுச்சியின் தொடக்கமாக அமையும்" என்று எச்சரித்துள்ளது.
மேலும், நேற்றைய தாக்குதல்களில் கமேனியின் மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை கொல்லப்பட்டதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஈரானிய செய்தி நிறுவனமான ஃபார்ஸ் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானில் காமேனியின் இல்லம், அலுவலகம் அமைந்துள்ள வளாகம் முற்றிலும் அளிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காமேனியின் உடலை புகைப்படம் எடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஆகியோரிடம் காண்பிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காமேனியுடன் சேர்த்து ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜிஸ் நசிர்சாதே, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் தரைப்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர்.
- அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பதற்றத்தை தணிக்க வேண்டும்.
- மக்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அமெரிக்கா இன்று காலை இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளான குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், கத்தார் போன்ற நாடுகள் மீது அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நடைபெற்றும் வரும் சமீபத்திய நிகழ்வால் இந்தியா மிகுந்த கவலை கொண்டுள்ளது. அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பதற்றத்தை தணிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பதற்றங்களை தணிக்கவும், அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்கவும் உரையாடல் மற்றும் ராஜதந்திரம் தொடரப்பட வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
- இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்று மோடி அறிவித்தார்.
- அவ்வாறு சொன்னதற்காக ஒரு விருதையும் பெற்றுக்கொண்டார்.
பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என கூறி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது இன்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது. இதில் சாமானிய மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
பதிலடியாக இஸ்ரேல் மீதும், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் புரட்சிகர ராணுவ படையினர் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஈரான், இஸ்ரேல் மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ள பிற நாடுகளில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், " அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் விரோதப் போக்கு மிகவும் கவலையளிக்கிறது.
மத்திய கிழக்கு முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனின் பாதுகாப்பும் நமது மிக உயர்ந்த முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
நமது மக்களைப் பாதுகாக்க உடனடி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், "பிரதமர் மோடி தனது இஸ்ரேல் பயணத்தைக் கொண்டாடிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீதான தங்களின் கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
கடந்த சில மாதங்களாக அவர்களின் ராணுவக் குவிப்பை வைத்துப் பார்க்கும்போது இது முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
இருப்பினும், பிரதமர் மோடி இஸ்ரேலுக்குச் செல்லத் தீர்மானித்தார், அங்கு அவர் மிக உயர்ந்த அளவிலான தார்மீக கோழைத்தனத்தைக் காட்டினார்.
இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்று அவர் அறிவித்தார், அவ்வாறு சொன்னதற்காக ஒரு விருதையும் பெற்றுக்கொண்டார்.
இந்த இஸ்ரேல் பயணம் வெட்கக்கேடானது, பிரதமர் மோடியின் 'நல்ல நண்பர்கள்' இருவரால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போரின் பின்னணியில் இது இன்னும் அவமானகரமானது.
பல வாரங்களாக அதிபர் டிரம்ப், ஈரானுடன் ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.
அவர் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு ஒரு ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் இந்தத் தாக்குதலைக் கண்டிக்கிறது மற்றும் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மில்லியன் கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த பிப்ரவரி 25 இல் இஸ்ரேல் சென்று திரும்பிய 48 மணிநேரத்தில் இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- அணு சக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு அமெரிக்கா அழுத்தம்.
- மத்திய கிழக்கு பகுதிக்கு போர்க்கப்பலை அமெரிக்கா நகர்த்தி வருவதால் பதற்றம் அதிகரிப்பு.
அணுசக்தி திட்டத்தை மேம்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இது தொடர்பாக 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று ஜெனீவாவில் நடைபெற்றது.
இது தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். மேலும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபீ, தூதர் ஸ்டாஃப்களுடன் பேசியுள்ளார். அப்போது, "இஸ்ரேலில் இருந்து வெளியேற விரும்பினால், அதை இன்றையே செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் வெளியேற விரும்புவோர், தாமதிக்காமல் சீக்கிரமாகப் புறப்படுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் போர்க்கப்பல்களை குறி வைக்கும் வகையில், கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை சீனாவிடம் இருந்து வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கியூபாவின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளது.
- அமெரிக்காவிற்கும் கம்யூனிச நாடான கியூபாவிற்கும் இடையே உறவு சுமுகமாக இல்லை.
கியூபா நாட்டின் கடலோர காவல்படைக்கும், அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகில் வந்தவர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் படகில் வந்த நால்வர் உயிரிழந்தனர்.
கியூபாவின் வில்லா கிளாரா மாகாணத்தில் உள்ள பால்கன்ஸ் கே பகுதியிலிருந்து ஒரு நாட்டிகல் மைல் தொலைவில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணப் பதிவு எண்ணைக் கொண்ட அந்தப் படகு, கியூபாவின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளது.
கடலோர காவல்படை அந்தப் படகை அடையாளம் காண நெருங்கியபோது, படகில் இருந்தவர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் கியூபா கப்பலின் கமாண்டர் காயமடைந்தார். இதற்குப் பதிலடியாக கியூபா படையினர் நடத்திய தாக்குதலில் படகில் இருந்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த ஆறு பேருக்கும் தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவிற்கும் கம்யூனிச நாடான கியூபாவிற்கும் இடையே ஏற்கனவே உறவு சுமுகமாக இல்லாத நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூடு சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.
"தனது கடல் எல்லைப் பகுதியை பாதுகாப்பதில் கியூபா உறுதியாக உள்ளது" என்று அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.






