என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HealthTips"

    • வேகநடை, ஓட இயலாத முதியோர் பலருக்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக உள்ளது.
    • மெல்லோட்டமே உடல் எடை குறைக்க சிறந்த வழி என்போரும் உண்டு.

    காலை மெல்லோட்டம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உடற்பருமனானவர்கள் பலர் மெல்லோட்டம் ஓட மிகுந்த சிரமத்துக்குள்ளாவர்.

    இன்று வெறும் 10 அடி தூரம் மெல்லோட்டம் செய்தாலே பலருக்கு மூச்சு வாங்கும், வியர்த்துக்கொட்டும். இதனால் வேக நடையே சிறந்தது என எண்ணி பலர் கை, கால்களை வீசியபடி வேக நடை செல்வர்.

    வேகநடை, ஓட இயலாத முதியோர் பலருக்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக உள்ளது. ஆனால் மெல்லோட்டமே உடல் எடை குறைக்க சிறந்த வழி என்போரும் உண்டு. காலை நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்வோர் வேக நடை, மெல்லோட்டம் இடையே உள்ள வேறுபாட்டை அறிவது நல்லது.

    நடக்கும் வேகத்தில் மெல்லோட்டம் செய்வது, அதாவது நிமிடத்துக்கு 50 அடி எடுத்து வைத்து மெல்லோட்டம் செய்வது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் ஓர் உடற்பயிற்சி முறை.

    கட்டுடல் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள் இதுபோல தினமும் காலை பல கி.மீ., மெல்லோட்டம் செல்வார்கள். இது இதயத்துடிப்பை அதிகரித்து, வியர்வையை வெளியேற்றி மன அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால் மெல்லோட்டம் கால்களின் தசை நாரில் தசைப்பிடிப்பு, காயம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    இளைஞர்கள், நடுத்தர வயதினர் மெல்லோட்டம் ஓடும்போது சரியான வேகத்தில் ஓடுவது நல்லது.

    வேகநடை மூலம் குறைவான கலோரிகளே எரிக்கப்படும். வேக நடை பயிலும்போது கைகளை முன்னும் பின்னும் வேகமாக ஆட்டி நடப்பது அதிக பலனைத் தரும். வேகநடை முதியோருக்கு ஏற்ற ஓர் சிறந்த கார்டியோ பயிற்சி. இதனை தினமும் செய்வதால் உடற்பருமனானவர்களின் உடற்தசைகளின் அடியில் உள்ள கொழுப்புப் படலம் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும். வேக நடை பயில்வது மிக எளிய கார்டியோ உடற்பயிற்சிக்கு சமமானது. வேக நடை பயில்வது மெல்லோட்டம் அளவுக்கு விரைவில் பலனைத் தராது என்றபோதும், உடல் களைப்படையாமல் நீண்டநேரம் செய்ய ஏற்ற உடற்பயிற்சிகளுள் சிறந்தது.

    வேகநடை, மெல்லோட்டம் ஆகிய இரண்டிலுமே சாதக பாதகங்கள் உள்ள நிலையில் உங்கள் உடல் நிலைக்கேற்ப நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம்.

    • சமையலில் சுவைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட, சுகாதாரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் மிக அவசியம்.
    • சமையலுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே வெங்காயத்தை வெட்டி வைக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

    மழைக்காலங்களில் அதிக ஈரப்பதம் நிலவுவதால், நம் அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத வெங்காயத்தைக் கையாள்வதில் கூடுதல் கவனமும், சுகாதாரமும் கட்டாயம் தேவை. வெங்காயம் சுவைக்காக மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்தைக் காப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், இந்த சீதோஷ்ண நிலையில், வெங்காயத்தின் பாதுகாப்புக் குறித்து நாம் அறியாத சில முக்கியமான அபாயங்கள் உள்ளன. குறிப்பாக, ஈரமான சூழலில், வெங்காயத்தின் மேல் தோலின் அடியிலோ அல்லது உள் அடுக்கிலோ கருமையான புள்ளிகளோ அல்லது கோடுகளோ தென்படுவதுண்டு. இது அஸ்பெர்கிலஸ் நைகர் போன்ற ஒரு வகைப் பூஞ்சையின் வளர்ச்சியை குறிக்கிறது. இந்தப் பூஞ்சையானது, குறிப்பிட்ட நச்சுத்தன்மையை வெளியிடுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. பூஞ்சை படிந்த வெங்காயத்தை முறையாகச் சுத்தப்படுத்தாமல் பயன்படுத்தும்போதும், அதன் வித்துக்கள் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய பூஞ்சை வித்துக்கள் நுரையீரலை பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது. ஏற்கனவே ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை போன்ற சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தாக முடியலாம். மேலும், தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பொதுவான உடல்நலப் பாதிப்புகளும் இதனால் ஏற்படலாம். எனவே, சமையலில் சுவைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட, சுகாதாரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் மிக அவசியம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

    பூஞ்சையை நீக்க கல்லுப்பு

    வெங்காயத்தின் மூலம் கிருமித் தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும், அதன் நன்மைகளை முழுமையாகப் பாதுகாப்பாக அனுபவிக்கவும், நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரு எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள சுகாதார முறை உள்ளது. வெங்காயத்தைப் பயன்படுத்துவதற்கு முன் முதலில் அதன் மேலிருக்கும் காய்ந்த தோலை முழுவதுமாக நீக்கிவிட வேண்டும். அடுத்ததாக, ஒரு பாத்திரத்தில் சிறிது கல்லுப்பை எடுத்து, அந்த வெங்காயத்தின் மீது தூவி, உங்கள் கைகளால் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். கல்லுப்பு தனது சொரசொரப்பான தன்மை காரணமாக, வெங்காயத்தில் இருக்கும் நுண்ணிய கிருமிகளையும், மேலடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் பூஞ்சை வித்துக்களையும் நீக்குவதற்கு உதவுகிறது. இவ்வாறு கல்லுப்பு கொண்டு நன்கு தேய்த்தப் பிறகு, குறைந்தது இரண்டு முறை நல்ல தண்ணீரில் அலசிய பின்னரே வெங்காயத்தைச் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த எளிய வழிமுறை, உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன் மட்டுமல்லாமல், கடுமையான தொற்றுநோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கவும் பேருதவியாக அமையும். இந்த சுகாதார நடவடிக்கையைப் பின்பற்றுவது, ஆரோக்கியமான சமையல் முறைக்கு மிகவும் முக்கியமான ஒரு அத்தியாவசியப் படியாகும்.


    வெங்காயத்தின் மீதுள்ள கருப்பு கோடுகள், ஒரு வகைப் பூஞ்சையின் வளர்ச்சி!

    மூடி வைப்பதே பாதுகாப்பு!

    வெங்காயத்தின் இயல்பு என்னவென்றால், அது வெட்டப்பட்டவுடன் காற்றிலுள்ள கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் மிக வேகமாக ஈர்க்கும் தன்மை கொண்டது. வெங்காயம் வெட்டப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அதன் மேற்பரப்பில் அதிகப்படியான கிருமிகள் குவியும் அபாயம் உள்ளது. இந்த சுகாதார அபாயத்தைக் கருத்தில் கொண்டு, சமையல் தேவைகளுக்காக ஒரு முறை வெங்காயத்தை வெட்டிய பிறகு, எந்தக் காரணம் கொண்டும் அதைத் திறந்தவெளியில் வைக்கக் கூடாது. உடனடியாக, மூடி உள்ள ஒரு காற்றுப் புகாத பாத்திரத்திலோ அல்லது ஒரு தட்டைக் கொண்டோ உறுதியாக மூடி வைக்க வேண்டும். வெட்டிய வெங்காயம் எந்த வகையிலும் வெளியிலுள்ள கிருமிகளை ஈர்க்காதபடி உறுதி செய்வது அவசியம். மேலும், சமையலுக்கு ஒரு மணி நேரம் அல்லது அதற்கு முன்னதாகவே வெங்காயத்தை வெட்டித் தயார் செய்து வைக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பது உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. சமைக்கத் தேவைப்படும் போது மட்டுமே வெங்காயத்தை வெட்டி உடனடியாகப் பயன்படுத்துவதே சிறந்த பழக்கமாகும். இந்த எளிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வெங்காயம் தரும் ஆரோக்கிய நன்மைகளைப் பாதுகாப்பாகப் பெற முடியும்.

    • போதுமான தூக்கம் என்பது நேரக்கணக்கை பொறுத்தது மட்டுமல்ல, தூக்கத்தின் தரத்தை பொறுத்தது.
    • ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, தூக்கம் மூன்றும் ஆரோக்கியத்தின் மூன்று தூண்கள்.

    எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலேயே ஓடுபவர்கள்தான் மனித இனம். உணவு, உடை, உறக்கம், இருப்பிடம் உள்ளிட்ட நல்ல வாழ்க்கை முறைக்காகத்தான் அனைவரும் கடினமாக உழைப்போம். ஆனால் அந்த உழைப்பால் உணவு, உறக்கத்தையே மறந்துவிடுகிறோம். வேலை, குழந்தை, குடும்பம் என எது வேண்டுமானாலும் தூக்கத்திற்கும், உணவிற்கும் தடையாக இருக்கலாம். ஆனால் போதுமான தூக்கம் என்பது எடை, உணர்ச்சி, இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மன மற்றும் உடல் செயல்திறன் மற்றும் பலவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தூக்கம் ஒன்று கெடும்போது இது அனைத்தும் பாதிக்கப்படுகின்றது. ஆகையால் மனிதனுக்கு உணவு, உறக்கம் என்பது மிகமுக்கியான ஒன்று. இந்த தூக்கம் கெட்டால் என்ன ஆகும்? பார்க்கலாம். 

    தூக்கத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

    • வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
    • இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
    • எடை மேலாண்மையை ஆதரிக்கிறது
    • நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க உதவுகிறது
    • கவனத்தின் அளவை அதிகரிக்கிறது
    • நினைவாற்றல் மற்றும் கற்றலை அதிகரிக்கிறது

    பெரியவர்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

    பெரியவர்கள் ஒருநாளைக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணிநேரம் தூங்கவேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் போதுமான தூக்கம் என்பது நேரக்கணக்கை பொறுத்தது மட்டுமல்ல, தூக்கத்தின் தரத்தை பொறுத்தது. எந்த இடையூறுகளும் இன்றி நாம் எவ்வாறு ஆழ்ந்து தூங்குகிறோம் என்பதை பொறுத்தது. 

    குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும்?

    குழந்தைகளின் வயதின் அடிப்படையில் அவர்கள் தூக்கம் இருக்கவேண்டும்.

    • பிறந்த குழந்தைகள் : 14-17 மணிநேரம்
    • 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் : 12-16 மணிநேரம்
    • 1 முதல் 3 வயதுவரை உள்ள குழந்தைகள் : 11-14 மணிநேரம்
    • 3 முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகள் : 10-13 மணிநேரம்
    • பள்ளி செல்பவர்கள் : 9-12 மணிநேரம்
    • பதின்பருவத்தினர் : 8-10 மணிநேரம்

    இருண்ட அறையில் தூங்குவது அவசியம்

    போதுமான தூக்கம் இல்லாததால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்

    • இதய நோய்
    • புற்றுநோய் கட்டிகள்
    • பக்கவாதம் மற்றும் மூளை தொடர்பான நோய்கள்
    • கவனக்குறைவால் விபத்துக்கு வழிவகுக்கும்
    • நீரிழிவு நோய்
    • உயர் இரத்த அழுத்தம்

    இரவில் சிறந்த தூக்கத்தை பெற என்ன செய்யலாம்?

    • இரவில் காபி, சர்க்கரை, மது எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.
    • தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பு மின்னணு சாதனங்கள், ஃபோன் போன்ற டிஜிட்டல் சாதனங்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
    • விளக்கை அணைத்துவிட்டு தூங்குங்கள். காரணம் ஒளி நம் மூளையைத் தூண்டி, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, எனவே இருண்ட அறையில் தூங்குவது அவசியம்.
    • அலாரம் வைப்பதற்கு ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்தாமல், கடிகாரத்தை பயன்படுத்துங்கள்.

    தூக்கமின்மையின் பாதிப்புகள்

    தூக்கமின்மை, நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், கவனம் செலுத்தும் திறன் ஆகியவற்றை பாதிக்கிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் குடிபோதையில் இருப்பதற்கு சமம். போதுமான தூக்கம் இல்லாதது நம்மை உணர்ச்சி ரீதியாக நிலையற்றதாக ஆக்குகிறது. மேலும் தூக்கமின்மை மிகுந்த சோகம் அல்லது கோபம் போன்ற மிகவும் வலுவான உணர்ச்சிகளை ஏற்படுத்தும்.

    • இனிப்பு சேர்க்கப்பட்ட சூயிங்கத்தை தவிர்க்க வேண்டும்.
    • பைகார்பனேட் கலந்த சூயிங்கத்தை தேர்வு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.

    உணவு சாப்பிட்டதும் சிலருக்கு கடுமையான 'அசிடிட்டி' பிரச்சனை ஏற்படும். வயிறு மற்றும் மார்பு பகுதியில் கடுமையான எரிச்சலை உணர்வார்கள். புளிப்புடன் கூடிய ஏப்பமும் எட்டிப்பார்க்கும். அதனை தடுப்பதற்கு மாத்திரை வடிவிலோ, திரவ மருந்து வகையிலோ உட்கொள்வார்கள். அவை வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மையை குறைக்க உதவிடும்.

    இப்படி உணவு உட்கொண்ட பிறகு உருவாகும் அசிடிட்டி பிரச்சனையை தடுப்பதற்கு சூயிங்கம் உதவும். அது வயிற்று அமில பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

    ஆம்! சூயிங்கம் வாயில் உமிழ்நீர் உற்பத்தியை தூண்ட உதவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த உமிழ் நீர் உணவுக்குழாயில் நுழைந்து வயிற்று அமிலத்துக்கு எதிராக செயல்பட தொடங்கும். பின்பு வயிறு மெதுவாக இந்த அமிலத்தையும், அங்கு சேரும் உணவையும் வெளியேற்ற தொடங்கும். அதனால் அசிடிட்டியால் ஏற்படும் பாதிப்பு குறையத் தொடங்கும். குறிப்பாக நெஞ்செரிச்சல் அறிகுறிகளை குறைக்கும்.

    வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் உணவுத் துகள்களை தடுத்து சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும் தன்மையும் சூயிங்கத்துக்கு உண்டு. மன அழுத்தம், பதற்றமான சூழலின்போது சூயிங்கம் மெல்வது அவற்றின் வீரியத்தை குறைக்க உதவிடும்.

    அதேவேளையில் இனிப்பு சேர்க்கப்பட்ட சூயிங்கத்தை தவிர்க்க வேண்டும். அதிலும் பைகார்பனேட் கலந்த சூயிங்கத்தை தேர்வு செய்வது சிறந்த பலனை கொடுக்கும். சூயிங்கம் மெல்லும் பழக்கத்தை தொடர்வது அசிடிட்டியை தடுப்பதுடன் நினைவாற்றலை மேம்படுத்தவும் வழிகாட்டும்.

    சூயிங்கம் அதிக உமிழ்நீர் உற்பத்தியை தூண்டுவதோடு பற்களில் படிந்திருக்கும் உணவுத்துகள்களை சுத்தம் செய்து பல் சிதைவையும் தடுக்க உதவுகிறது.

    • அழகு என்பது சருமம் வெள்ளையாக இருப்பதல்ல.
    • உடல் ஆரோக்கியமே சரும அழகுக்கு வழிவகுக்கும்.

    பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் உட்பட பலரும் சரும அழகை கூட்ட, பராமரிக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுபவர். சிலர் அழகு நிலையங்களுக்கு செல்வர். சிலர் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சருமத்திற்கு அழகை கூட்டுவர். ஆனால் இதுபோல மெனக்கெடல்கள் எதுவும் இல்லாமலேயே சருமத்தை அழகாக வைத்திருக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்? பார்க்கலாம். 

    நீரேற்றம்...

    ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் வேண்டுமென்றால் உடலுக்கு நீரேற்றம் என்பது மிக அவசியமான ஒன்று. உடல் நீரேற்றத்தோடு இருக்கும்போது, சருமத்தின் தோற்றத்தை மங்கச்செய்யும் மாசுகளை திறம்பட நீக்கும். மேலும் உடல் எப்போதும் ஹைட்ரேட்டாக இருப்பதால், வறட்சி தடுக்கப்பட்டு, முக சுருக்கங்கள் இல்லாமல் எப்போதும் முகம் குண்டாக, மென்மையாக காட்சியளிக்கும். நீர் உங்கள் சருமத்தின் இயற்கையான நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. இது சருமத்திற்கு இளமை மற்றும் பிரகாசமான பளபளப்பைக் கொடுக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள். 

    கிளென்சிங்

    பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கு மென்மையான சுத்திகரிப்பு என்பது முக்கியம். லேசான அதாவது அதிக பாதிப்பில்லாத க்ளென்சர்களை பயன்படுத்தும்போது, அது சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை நீக்காமல், அழுக்கு, மாசுக்களை நீக்கும். கடுமையான ரசாயனங்கள் கொண்ட க்ளென்சர்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யும். இதனால் வீக்கம் மற்றும் முன்கூட்டியே வயதான தன்மை ஏற்படும். ஒரு மென்மையான க்ளென்சர் சருமத்தின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இந்த சமநிலை கூடுதல் எண்ணெய் உற்பத்தியைத் தடுக்கிறது.  இது பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கிறது. 

    எக்ஸ்ஃபோலியேஷன்

    முகத்தில் உள்ள இறந்த செல்கள் சருமத்தின் நிறத்தை மங்கச் செய்து சருமத்தை சீரற்றதாகத் தோன்றச் செய்யும். சரும பராமரிப்பில் எக்ஸ்ஃபோலியேட்டிற்கு (exfoliate) முக்கிய பங்கு உண்டு. எக்ஸ்ஃபோலியேட் என்பது சருமத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை வளர செய்யும் ஒரு முறையாகும். இறந்த சரும செல்கள் அகற்றப்படும்போது முகத்திற்கு பொலிவான தோற்றம் கிடைக்கும்.


    சருமம் பளபளக்க தண்ணீர் அவசியம்

    சரிவிகித உணவு

    ஒரு சரிவிகித உணவுமுறை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. நாம் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற அனைத்து வகை உணவுகளையும் எடுத்துக்கொள்ளும்போது நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்சிஜனேற்றிகள் அனைத்தும் கிடைக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் சேதமடைந்த சரும செல்களை சரிசெய்யவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிப்புற அழுத்தங்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. மேலும் ஒரு நல்ல உணவுமுறை ஹார்மோன் ஒழுங்குமுறைக்கும் உதவும். ஆரோக்கியமான உடல்நலமே சருமத்தை பிரகாசிக்க செய்யும்.

    உடற்பயிற்சி

    உடற்பயிற்சி பளபளப்பான சருமத்தைப் பெற உதவும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது, உங்கள் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை சரும செல்களுக்கு வழங்குகிறது. இந்த ரத்த ஓட்ட மேம்பாடு சரும பராமரிப்பிற்கு உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை ஊக்குவிக்கிறது. முக்கியமாக உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மன அழுத்தம் முகப்பரு மற்றும் முன்கூட்டிய வயதானது போன்ற தோல் பிரச்சினைகளுக்கு பங்களிக்கும். உடற்பயிற்சி செய்வது வியர்வையை ஏற்படுத்தும். இது சருமத்தை சுத்தப்படுத்தவும், மாசுகளை நீக்கவும், பளபளப்பான மற்றும் இளமையான தோற்றத்தை ஊக்குவிக்கவும் உதவும். ஒட்டுமொத்தமாக, வழக்கமான உடற்பயிற்சியே உங்கள் சரும ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும்.  

    மேற்கூறியவை போல நாம் தினசரி எடுத்துக்கொள்ளவேண்டிய தண்ணீர், உணவு போன்றவற்றை சரியாக எடுத்தாலே உடலும், சருமமும் ஆரோக்கியமாக, அழகாக இருக்கும்.

    • துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வையுங்கள்!
    • துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்.

    மழைக்காலம் வந்தாலே, பெண்களுக்கு சலவைப் பணிகள் ஒரு பெரும் சவாலாக மாறிவிடுகின்றன. வெயிலும், காற்றின் வேகமும் குறையும் போது, துணிகளை உலர்த்துவது மிகவும் கடினமாகிறது. ஈரப்பதம் வெளியேறாமல், துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிப்பது பலரது வீட்டிலும் நடக்கும் பொதுவான பிரச்சனை. துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகாமல், துணிகளை விரைவாகவும், சுகாதாரமாகவும் உலர்த்துவது எப்படி? அதிகபட்ச நீரை வெளியேற்றுவது முதல், சரியான காற்றோட்டத்தை உருவாக்குவது மற்றும் பூஞ்சை வாடையை அகற்றும் சமையலறை ரகசியம் வரை, மழைக்காலத்தில் சலவை செய்யும் உத்திகள் குறித்து இப்போது விரிவாகக் காணலாம்.

    துணிகளை விரைவாக உலர்த்த

    மழைக்காலத்தில், வெயில் மற்றும் காற்றின் ஈரப்பதம் இல்லாத காரணத்தால் துணிகளை உலர்த்துவது பெரும் சவாலாக உள்ளது. இதனால் துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிக்கிறது. இதற்குத் தீர்வாக, முதலில் துணிகளில் உள்ள அதிகபட்ச நீரை வெளியேற்ற வேண்டும்; வாஷிங் மெஷினில் துவைப்பவர்கள் துணிகளை அதிக வேகத்தில் இரண்டு முறை 'சுழற்றுதல் (Spin Cycle)' செய்ய வேண்டும், கைகளால் துவைப்பவர்கள் துணிகளை ஒரு சுத்தமான, உலர்ந்த டவலில் வைத்து இறுக்கமாகச் சுருட்டி அழுத்தி நீரை உறிஞ்சச் செய்யலாம். மேலும், துணிகளை உலர்த்தப் போடும் முன் ஒவ்வொன்றையும் நன்கு உதறி, அதன் இழைகளைப் பிரித்து, துணியின் மேற்பரப்பை அதிகப்படுத்துவதன் மூலம் ஆவியாதல் சீக்கிரமாக நடைபெறும்; குறிப்பாக ஜீன்ஸ் போன்ற கனமான துணிகளை மடிப்பு இல்லாமல் பரப்பிப் போடுவது மிகவும் அவசியமாகும்.


    பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை தவிர்க்க கடைசி அலசலின்போது சிறிதளவு வினிகர் சேர்த்துக் கொள்ளலாம்

    உட்புறத்தில் காற்றோட்டமே முக்கியம்

    வீட்டிற்குள் துணிகளை உலர்த்துவதற்குச் சரியான காற்றோட்டமே மிக முக்கியமாகும். துணிகளை உலர்த்த ஒரு மடிப்பு ஸ்டாண்டைப் பயன்படுத்தி, அதை சீலிங் ஃபேன் அல்லது டேபிள் ஃபேன் இயங்கும் அறையில் வைக்க வேண்டும். ஃபேன் காற்று நேரடியாகத் துணிகள் மீது படுமாறு வைத்தால், ஈரப்பதம் வேகமாக ஆவியாகும். முக்கியமாக, துணிகளை நெருக்காமல், ஒவ்வொரு துணிக்கும் இடையில் குறைந்தபட்சம் 3 அங்குலமாவது இடைவெளி விட வேண்டும். துணிகள் ஒன்றோடு ஒன்று தொட்டால், ஈரப்பதம் தங்கிக் கொண்டே இருக்கும், இதனால் துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வைத்தால், அவை காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை ஈர்த்து, உலர்த்தும் செயல்முறையைத் துரிதப்படுத்த உதவும்.

    பூஞ்சை வாடைக்குத் 'தடா'

    மழைக்காலத்தில் சலவை செய்யப்பட்ட துணிகளில் ஏற்படும் பூஞ்சை வாசனை மற்றும் துர்நாற்றத்தைத் தவிர்க்க ஒரு எளிய, செலவு குறைந்த சமையலறை ரகசியம் உள்ளது. துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையையும் கையாளலாம். வினிகர் பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் சக்தி வாய்ந்தது; மேலும், அதன் வாசனை துணி காய்ந்தவுடன் முற்றிலும் ஆவியாகிவிடும். துர்நாற்றம் நீங்கவில்லை எனில், மீண்டும் அலசும் தண்ணீரில் வினிகர் சேர்த்து ஒரு முறை அலசி, பின்னர் உலர வைக்கலாம். இந்த எளிய மற்றும் பயனுள்ள உட்புற நிர்வாக உத்தியின் மூலம், விலை உயர்ந்த இயந்திரங்களைப் பற்றிய கவலை இல்லாமல், எந்தவொரு குடும்பத் தலைவியும் மழைக்காலச் சலவைப் பணிகளை மிகச் சிறப்பாகவும், துர்நாற்றமின்றியும் நிர்வகிக்க முடியும். 

    • ஆங்கிலம் பேச அழுத்தம் கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு அதிக பதட்ட உணர்வு ஏற்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
    • ஆங்கிலத்தில் உங்கள் குழந்தைகள் புலமைபெற வேண்டுமானால், நீங்களும் வீட்டில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள்.

    அண்மையில் தமிழ்நாட்டில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மும்மொழிக் கொள்கை தொடர்பான வாக்குவாதங்கள் அரங்கேறியதை நாம் அனைவரும் அறிவோம். இதில் பலரும் ஹிந்தி திணிக்கப்படும் என்பதற்காக மும்மொழிக் கொள்கையை எதிர்த்தாலும், சிலர் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலமே முழுமையாக தெரியாதபோது எப்படி மூன்றாவது மொழி என்பதற்காக எதிர்த்தனர். ஆம் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இருமொழிக்கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த இரண்டு மொழிகளிலும் வல்லவராக இருப்போம். ஒருசிலரே. அனைவருக்கும் அவரவது தாய்மொழி என்பது மிகமுக்கியமான ஒன்று. அடுத்து இணைப்புப் பாலமான ஆங்கிலம். ஆனால் இப்போதெல்லாம் தாய்மொழி தெரியாவிட்டாலும், ஆங்கிலத்தில் பேசினால் பெருமை என பலரும் நினைக்கின்றனர். தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆங்கிலவழி கல்விமுறை உள்ள பள்ளிகளில் சேர்க்கின்றனர். பொது இடங்களில் தமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என அவர்களை ஊக்குவிக்கின்றனர். ஆனால் குழந்தைகளை ஆங்கிலம் பேச கட்டாயப்படுத்துவது அவர்களின் மொழி வளர்ச்சி, உணர்ச்சி, ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

    கற்றலில் அதிகரிக்கும் பதற்றம்...

    2023ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, எகிப்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆங்கிலம் பேச அழுத்தம் இருப்பதாகவும், இது குழந்தைகளுக்கு அதிக பதட்டத்தை கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேச வராதபோது அது அவர்களின் தன்னம்பிக்கையை பாதித்தாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது எகிப்தில் மட்டுமல்ல. தமிழ்நாட்டிலும் அப்படித்தான். நமது மொழி தமிழ். மற்ற மொழியை தவறுதலாக உச்சரித்தால் எந்த தவறும் கிடையாது. இதனை பெற்றோர்கள் மனதில் கொள்ளவேண்டும். நீங்கள் வீட்டில் தமிழில் பேசுவீர்கள். வெறும் கற்பதை வைத்துமட்டும் பிள்ளைகள் சரளமாக ஆங்கிலம் பேசவேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கக்கூடாது. முதலில் அந்த மொழியை குழந்தை அறிந்து, தெளிந்து பின்னர் பேசத்தொடங்கும்போதுதான் சரியான உச்சரிப்பு வரும். அதற்குள் குழந்தைகளை ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என நிர்பந்திக்கும்போது அல்லது அழுத்தம் கொடுக்கப்படும்போது, அவர்கள் பயப்படுகிறார்கள். அதிகம் பதட்டம் கொள்கிறார்கள். பதட்டத்தால் அதுசரியாக வராதபோது, அப்போது எப்போதும் நமக்கு ஆங்கிலம் வராதோ என அச்ச உணர்வு கொள்கிறார்கள். இதுவே அவர்கள் ஆங்கிலம் கற்க தடையாக அமைந்துவிடும். மேலும் படிப்பிலும் அவர்களை பாதிக்கும். அதனால் பெற்றோர் குழந்தைகளிடம் ஆங்கிலம் கற்க வேண்டும் என அதிகம் அழுத்தம் கொடுக்காதீர்கள். 


    நாம் ஒரு செயலை செய்ய கட்டாயப்படுத்தும்போது அதன்மீது குழந்தைகளுக்கு வெறுப்பு உண்டாகும்

    பெற்றோரும் ஆங்கிலத்தில் பேசுங்கள்...

    வீட்டில் நாம் நம் தாய்மொழியில் பேசுவதால் அவர்களுக்கு தமிழ் சரளமாக வரலாம். அப்படி ஆங்கிலத்தில் உங்கள் குழந்தைகள் புலமைபெற வேண்டுமானால், நீங்களும் வீட்டில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள். அப்போது அது குழந்தைக்கு எளிதாக இருக்கும். இருமொழிகளையும் மாறி மாறி பேசும்போது இரண்டிலும் நல்ல புலமை பெறுவார்கள். அவர்களுக்கு இருமொழிகளையும் பற்றி அறிய ஆர்வம் வரும். மறுபக்கம் ஆங்கிலத்திற்கு ஆதரவாக தாய்மொழியை அடக்குவது மொத்த அறிவாற்றல் வளர்ச்சியை குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களை டியூஷனுக்கு அனுப்பாமல் சிறுவர்களுக்கான ஆங்கில படங்களை போட்டுக்காட்டி அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளை கற்றுக்கொடுக்கலாம். இயல்பான உரையாடல் மூலம் ஆங்கிலத்தை ஊக்குவிக்கலாம். மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்போது அதை கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். அதைவிடுத்து அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். மேலும் தாய்மொழி அறிதலும் மிக முக்கியமானது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

    • கடுகு எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவது முடி அமைப்பை மேம்படுத்தும்.
    • அதிக உணர்திறன் சருமம் கொண்டவர்கள் கடுகு எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

    கடுகு எண்ணெயில் முடி ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. கடுகு எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மேலும் மாசு, சூரியனின் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் சேதங்களிலிருந்து முடியை பாதுகாக்கிறது. மேலும் இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் தொற்று, பொடுகு மற்றும் அரிப்புகள் ஏற்படுவதை தடுத்து அதற்கெதிராக போராடுகின்றன. முடிக்கு இவ்வளவு நன்மை பயக்கும் கடுகு எண்ணெயை மற்ற எந்தெந்த பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தினால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். 

    வெந்தயம் - கடுகு எண்ணெய்

    வெந்தயம் புரதம் மற்றும் நிகோடினிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும். வெந்தயத்தில் உள்ள புரதங்கள் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் நிகோடினிக் அமிலம் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கிறது. வெந்தயத்தை கடுகு எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தும்போது அந்த கலவை உச்சந்தலையில் ஊடுருவி, வேர்களுக்கு ஊட்டமளிக்கும்.

    பயன்படுத்தும் முறை: வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, பேஸ்டாக அரைத்து, கடுகு எண்ணெயுடன் கலந்து, இந்த கலவையை உச்சந்தலையில் தடவி, 30-45 நிமிடங்கள் விட்டு, பின்னர் தலைக்கு குளிக்கவும்.

    கடுகு எண்ணெய் - வெங்காயச் சாறு

    வெங்காயச் சாறு நீண்ட காலமாக அதன் அதிக சல்பர் உள்ளடக்கத்திற்கு பெயர் பெற்றது. சல்பர் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் முடி நுண்குழாய்களை வலுப்படுத்துகிறது. வெங்காயச் சாற்றை கடுகு எண்ணெயுடன் கலந்து தடவுவது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும் முடிவளர்ச்சியைத் தூண்டி காலப்போக்கில் முடி உதிர்தலைக் குறைக்கிறது. இந்த கலவை உச்சந்தலையில் தொற்றுகளைத் தடுக்கவும், வேர் முதல் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

    பயன்படுத்தும் முறை: கடுகு எண்ணெய்யை லேசாக சூடுப்படுத்தி, அதில் வெங்காய சாற்றை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் ஊற்றி, மெதுவாக மசாஜ் செய்து, 30-40 நிமிடங்கள் விட்டு, ஷாம்பு பயன்படுத்தி குளிக்கலாம். இது முடி அடர்த்தியை மேம்படுத்துவதோடு, உதிர்தலை குறைக்கும்.

    கடுகு எண்ணெய் - கற்றாழை

    கற்றாழையின் நீரேற்றம் பண்பு தலையின் எரிச்சலுக்கு சிகிச்சையளிக்கிறது. இதனை கடுகு எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும்போது உச்சந்தலையின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. முடி நுண்ணறைகளை அவிழ்த்து, முடி மீண்டும் வளரத் தூண்டுகிறது. இந்த கலவை முடியை ஹைட்ரேட்டாகவும், மென்மையாகவும் வைத்திருப்பதோடு, முடியின் உடையும் தன்மையை குறைக்கும். அதாவது முடியை வலுப்படுத்தும்.

    பயன்படுத்தும் முறை: கற்றாழை ஜெல்லை கடுகு எண்ணெயுடன் கலக்கவும். கலவையை உச்சந்தலையில் மற்றும் தலைமுடியில் தடவி, 30 நிமிடங்கள் விட்டு, பின்னர் முடியை அலசவும். 

    கடுகு எண்ணெய் - கறிவேப்பிலை

    கறிவேப்பிலையில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பீட்டா கரோட்டின் உள்ளிட்டவை இருக்கின்றன. இவை தலைமுடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கும் மற்றும் ஒட்டுமொத்த உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கறிவேப்பிலையை கடுகு எண்ணெயோடு சேர்த்து பயன்படுத்தும்போது வலுவான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

    பயன்படுத்தும் முறை: கடுகு எண்ணெயில் தேவையான அளவு கருவேப்பிலையைப் போட்டு, நன்கு கொதிக்கவிடவும். பின்னர் இந்த எண்ணெயை எடுத்து ஆறவைத்து வடிகட்டி முடிக்கு மசாஜ் செய்யலாம். வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயால் மசாஜ் செய்தால், நல்ல பலன் கிடைக்கும். 

    கடுகு எண்ணெய் - செம்பருத்தி

    செம்பருத்தி கெரட்டின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், முடி இழைகளை அடர்த்தியாக்கவும், புதிய வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. கடுகு எண்ணெயுடன் செம்பருத்தி இலைகள், பூவை சேர்க்கும்போது சக்திவாய்ந்த ஹேர் மாஸ்க் உருவாகிறது. இது முடி உதிர்தலைக் குறைப்பது மட்டுமல்லாமல், முடிக்கு இயற்கையான பளபளப்பை தருகிறது.

    பயன்படுத்தும் முறை: செம்பருத்தி இதழ்கள் அல்லது இலைகளை அரைத்து, பேஸ்ட் பதத்திற்கு வந்தபின் கடுகு எண்ணெயுடன் கலந்து, உச்சந்தலை மற்றும் முடியில் தடவவும். 40-45 நிமிடங்கள் அப்படியே ஊறவைத்து, பின்னர் தலையை அலசலாம். 


    வெந்தயம் முடிக்கு நன்கு ஊட்டமளிக்கும்

    கடுகு எண்ணெய் - கருஞ்சீரகம்

    கருஞ்சீரகத்தின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மயிர்க்கால்களைத் தூண்டுவதோடு, உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. இதனை கடுகு எண்ணெயுடன் கலந்து தடவும்போது முடி இழைகள் வலுவடைகின்றன.

    பயன்படுத்தும் முறை: கருப்பு விதைகளை நன்றாகப் பொடியாக அரைத்து, சூடான கடுகு எண்ணெயுடன் கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். 30-40 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் அலசலாம். இந்த பேக்கை வாரந்தோறும் போடுவது முடி உதிர்தலைக் குறைத்து வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். 

    கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் பால்

    தேங்காய்ப் பாலில் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை முடி வளர்ச்சியை ஊக்குவித்து, முடி உடைவதை தடுக்கிறது. இதனை கடுகு எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும்போது முடியின் வலிமையை அதிகரிக்கிறது. முடி உடைதலை குறைத்து ஒட்டுமொத்த முடி அமைப்பை மேம்படுத்துகிறது. இந்த கலவை வறண்ட மற்றும் உடையக்கூடிய கூந்தலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    பயன்படுத்தும் முறை: தேங்காய்ப் பாலை கடுகு எண்ணெயுடன் கலந்து, அந்தக் கலவையை உச்சந்தலை மற்றும் தலைமுடியில் தடவி, 45 நிமிடங்கள் விட்டு பின்னர் கழுவவும். தொடர்ந்து தடவுவது முடியை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும்.

    • மனம் அதன் போக்கில் போனால் உடல்நிலை மோசமாகிவிடும்...
    • சாலையில் செல்லும் வாகனங்களை போலத்தான் நம் எண்ண ஓட்டமும்!

    மன சோர்வு அல்லது கவலை என்பது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கக்கூடியவை. இந்த மன அழுத்தம் நாளடைவில் உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. மனசோர்வு மற்றும் கவலையிருந்து வெளியே வர என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பார்ப்போம். 

    கவலை தரும் விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது

    நாம் சாலையில் சென்றுக் கொண்டிருக்குமாறு கற்பனை செய்துகொள்வோம். நமக்கு இணையாக, நம் பின்னால், நம் முன்னால் ஏராளமான வாகனங்கள் செல்லும். அவற்றை நாம் கவனிக்கமாட்டோம். சில வாகனங்கள் அதிக சத்தத்துடனும், வேகமாகவும், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலி எழுப்பானை அடித்துக்கொண்டும் செல்லும். உடனே அந்த வாகனத்தின்மீது நம் கவனம்செல்லும். அந்த வாகனம் இடையூறாக இருந்ததால் நாம் அதில் கவனம் செலுத்துகிறோம். இந்த வாகனங்களை போலத்தான் நம் எண்ண ஓட்டமும்.

    சில எண்ணங்கள் அமைதியாக, கவனிக்கப்படாமல் கடந்து செல்கின்றன. ஆனால் ஒருசிலவை சத்தமாகவும், இடையூறாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இதனால் நாம் கவலையை உணர்கிறோம். இந்த கவலையை எண்ணி எண்ணி மன அழுத்தத்திற்குள் செல்கிறோம். நமக்கு கவலையளிக்கும் விஷயங்களோ, செயல்களோ, எண்ணங்களோ மனதில் எழும்போது, அல்லது அந்த விஷயங்கள் மனதில் நுழையும்போது சாலையில் சென்ற சத்தமான கார்போல, அதற்கு கவனம் செலுத்தாமல் கடந்து செல்ல வேண்டும். ஒரு துன்பம் தரும் செயல் நடந்துவிட்டால் அதை பற்றிக்கொள்ளாமல், அவற்றில் சிக்கிக் கொள்ளாமல் அல்லது அதில் அதிக கவனம் செலுத்தாமல், அதை கடந்து செல்லப் பழகுங்கள். இது கவலை அல்லது சோகத்தில் மூழ்காமல் இருக்க உதவும்.


    சம்பவங்களை கடந்து செல்லப் பழகுங்கள்

    நாட்குறிப்பு எழுதுங்கள்...

    தாங்கமுடியாத அல்லது வெளியே சொல்லமுடியாத அளவு துயரம் என்னை ஆட்கொண்டிருக்கிறது. யாரிடமாவது பேசினால் உடைந்து அழுதுவிடுவேன் என்று நினைத்தால், கண்டிப்பாக உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பேசி உடைந்து அழுங்கள். அப்படி நெருக்கமானவர்களிடமும் பேசமுடியவில்லை, மனது மிகவும் பாரமாக இருக்கிறது என்றால் தனியாக வெளியே செல்லுங்கள். பிடித்த உணவை வாங்கி சாப்பிடுங்கள். பிடித்த சினிமாவை சென்று பாருங்கள். அப்படி இதுவும் சரிப்பட்டு வரவில்லை என்றால், டைரி எழுதுங்கள். நீங்கள் என்ன சொல்ல நினைத்தீர்களோ, அல்லது உங்கள் மனதில் எது ஆழமாக ஓடிக்கொண்டிருக்கிறதோ அதைப்பற்றி எழுதுங்கள். எழுதிவிட்டு, அதை படித்துவிட்டு, கிழித்தெரிந்து விடுங்கள். இது கண்டிப்பாக ஒரு ஆறுதலை தரும். 

    தியானம்

    வாழ்க்கை எல்லா நேரமும் ஒரேமாதிரி செல்லாது. ஒரு கட்டத்தில் அனைவரும் ஒரு மோசமான பகுதியை கடந்துசெல்வர். கடந்துதான் ஆகவேண்டும். ஆனால் அந்தக் கட்டம் நிறைய அனுபவங்களையும், பாடங்களையும் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும். அவை அனைத்தும் வாழ்க்கைக்கு தேவையானவையே. இப்படி ஒரு கட்டத்தில் மனிதர்கள் இருக்கும்போது யாரிடமும் பேசத்தோன்றாது. எந்த எண்ணமும் இருக்காது. மனதில் எந்த சிந்தனையும் ஓடாவிட்டாலும், ஒரு பிடிமானம் இல்லாத, விருப்பமில்லாத, வாழ்க்கையின் போக்கில் சென்றுக்கொண்டிருப்போம். இந்தநிலையில் நாம் உணரவேண்டியது மனம் ஒருநிலையில் இல்லை என்பதுதான். மனம் அதன் போக்கில் போனால் உடல்நிலை மோசமாகிவிடும். இதிலிருந்து வெளியேவர மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். எண்ண ஓட்டங்களை நிறுத்தவேண்டும். அதாவது சோகம் தரும் அல்லது வெற்றிடமாக தோன்ற வைக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு தியானம் உதவும். தியானத்தில் நீங்கள் விரும்பும் அளவுக்கு நேரத்தைச் செலவிடுங்கள். இது கவலையிலிருந்து வெளிப்படவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும்.

    • பெற்றோர்களின் அனைத்து நடைமுறைகளையும், செயல்பாடுகளையும், நம்பிக்கைகளையும் குழந்தைகள் கவனிப்பர்.
    • பெற்றோர்களிடம் கவனிப்பதை சில குழந்தைகள் வெளிகாட்டாவிட்டாலும், அந்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள் அவர்கள் ஆழ்மனதை பாதிக்கும்.

    கடல்பாசிகளை போல, குழந்தைகள் தங்கள் குடும்பத்தில், தங்களை சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே உள்வாங்க தொடங்குகின்றனர். குழந்தைகளுக்கு ஓரளவுக்கு நினைவு தெறிந்த பின் தங்களது பெற்றோர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து, பெற்றோரை போலவே செய்ய முயற்சிக்கின்றனர். இதனால் தாய், தந்தைதான் குழந்தைகளுக்கு முதல் முன்மாதிரியாக இருக்கின்றனர். அதனால் குழந்தையின் சிறுவயதின்போது பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பது மிக முக்கியம். உங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் உற்றுநோக்குவர். இந்த ஆரம்பகால அவதானிப்புகள் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஆழமான மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். பெற்றோர்களின் நடத்தைகள்தான் குழந்தைகளின் ஆளுமை, மதிப்புகள், உறவுகளை கட்டமைக்கும். பெற்றோர்களிடம் கவனிப்பதை சில குழந்தைகள் வெளிகாட்டாவிட்டாலும், அந்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள் அவர்கள் ஆழ்மனதை பாதிக்கும். அதனால் குழந்தைகள் முன்பு பெற்றோர் கவனத்துடன் இருக்கவேண்டும். பெற்றோர்களிடம் குழந்தைகள் உள்வாங்கும், சில விஷயங்கள் குறித்து பார்ப்போம். 

    பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் எப்படி நடந்துகொள்கிறார்கள்?

    பெற்றோர்களின் அனைத்து நடைமுறைகளையும், செயல்பாடுகளையும், நம்பிக்கைகளையும் குழந்தைகள் கவனிப்பர். தங்கள் தாய், தந்தை ஒருவருக்கொருவர் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் எப்படி அழைக்கிறீர்கள், ஒரு பிரச்சனையை இணைந்து எப்படி கையாளுகிறீர்கள், இருவருக்கிடையே பாசம், அன்பு, கோபம் போன்ற உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை நன்கு கவனிப்பார்கள். இது குழந்தையின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகள் முன்பு சண்டை போடாதீர்கள். பெற்றோரின் சண்டைகள் குறித்து அவர்களிடத்தில் கூறாவிட்டாலும், தாத்தா, பாட்டி அல்லது அவர்கள் பேசுபவர்களிடத்தில், இன்னைக்கு எங்க அம்மாவும், அப்பாவும் சண்ட போட்டாங்க தெரியுமா? இன்னைக்கு எங்க வீட்ல பெரிய சண்ட? என தங்களை சுற்றி இருப்பவர்களிடம் வெளிப்படுத்துவர். அவர்கள் வந்து உங்களிடத்தில் கேட்கும்போதுதான் நீங்கள் குழந்தை முன்பு சண்டை போட்டதை உணர்வீர்கள். அதனால் எப்போதும் கவனமாக இருங்கள். 

    நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

    குழந்தைகள் தங்கள் பெற்றோரின் சுய பராமரிப்பிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். அதாவது உங்களுடைய பழக்கவழக்கங்கள், சுயமரியாதை, தனிப்பட்ட உணர்ச்சிகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள்? ஒரு பிரச்சனையை எவ்வாறு கையாளுகிறீர்கள்? உங்களுடைய நேர்மை போன்றவற்றையும் உற்றுநோக்குவார்கள். 


    குழந்தைகள் முன்னிலையில் சண்டை போடுவதை தவிர்க்கவேண்டும்

    மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள்?

    பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தெரியாதவர்களிடம் எப்படி பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் குழந்தைகள் கவனிப்பர். அதிலிருந்துதான் அவர்களும் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், மற்றவர்களை எப்படி நடத்தவேண்டும் என்ற மரியாதையை தெரிந்துகொள்கின்றனர்.

    நிதி

    பெற்றோர் பணத்தை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள், நிதிப் பொறுப்பு, குடும்பத்தின் செலவு மற்றும் சேமிப்பு போன்றவற்றையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். பெற்றோரின் சேமிப்பு திறன் மற்றும் செலவு செய்யும் பண்புகள் அப்படியே அவர்களது குழந்தைக்கு வரலாம்.  

    விலங்குகளை எப்படி நடத்துகிறார்கள்?

    தங்கள் பெற்றோர் விலங்குகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைக் குழந்தைகள் கவனிக்கிறார்கள். இதன்மூலம் இரக்கம், பொறுப்பு மற்றும் அனைத்து உயிரினங்களிடத்திலும் அன்பு செலுத்துதல் போன்ற குணங்களை வளர்த்துக் கொள்கின்றனர். இந்த அவதானிப்புகள் ஒரு குழந்தையின் பச்சாதாபம், கருணை மற்றும் நெறிமுறை மதிப்புகளை வளர்க்கும்.

    குழந்தைகளை எப்படி நடத்துகிறீர்கள்?

    தங்களிடம் பெற்றோர் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதுதான் குழந்தைகளை அதிகம் சிந்திக்க வைக்கும். வேறு ஏதேனும் பிரச்சனைகளால் இருக்கும் மன அழுத்தம் அல்லது மற்றவர்களிடம் இருக்கும் கோபத்தை குழந்தைகளிடத்தில் காட்டாதீர்கள். இதனால் நீங்கள் வெறுப்பை உமிழ்வதாக அவர்களுக்கு எண்ணத் தோன்றும். நம் மீது பாசம் இல்லையோ என எண்ணுவார்கள். அதனால் முடிந்த அளவு தனிப்பட்ட பிரச்சனைகளை குழந்தைகளிடத்தில் காட்டாதீர்கள். அதுபோல குழந்தைகளிடத்தில் அதிகம் கோபமாக நடந்துகொள்ளாதீர்கள். இது உணர்ச்சிரீதியாக குழந்தையை அதிகம் பாதிக்கும். எப்போதும் குழந்தையோடு இருக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு பெற்றோர்கள் செயல்படவேண்டும். 

    • 18 வயது ஆனாலும் கூட பெண்கள், பாலியல் ரீதியான உறவுகளில் புரிதல் இல்லாமல்தான் இருக்கின்றனர்.
    • பெற்றோர்கள் பெண்குழந்தைகளிடம் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரின் பெரியப்பா செய்தியாளர்களின் முன்பு அழுது, புலம்பும் வீடியோ ஒன்று வைரலானது. அதில் தங்கள் வீட்டுப் பிள்ளையை, அதாவது அவரது தம்பிப் பெண்ணை, இளைஞர் ஒருவர் காதலிப்பாதாக சொல்லி, ஆசைவார்த்தைக் கூறி 18 வயது நிரம்பிய மறுநாளே அழைத்துச்சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், தற்போதுவரை தங்களிடம் தங்களது மகளை காண்பிக்கவில்லை எனவும், மேலும் அந்த இளைஞர் இதுபோன்று பல பெண்களை ஏமாற்றி உள்ளதாகவும் கதறி புலம்பியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அப்பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞரின் உறவினர் ஒருவர், பணவசதி இல்லாததால் பெண்ணின் வீட்டார்தான் மிரட்டியதாக தெரிவித்தார். இச்செய்தி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    ஒரு பக்கத்தினர் பெண்வீட்டார் பணவசதி இல்லாததால் அப்பையனை ஏற்கவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபக்கத்தினர் பெண்பிள்ளைகளை ஏமாற்றி, பெற்றோரின் சொத்தை பறிப்பதே பல இளைஞர்களின் வேலையாக இருக்கிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளின் உண்மை நிலவரம் என்ன? இதுபோன்று இளைஞர்கள், இளம்பெண்கள் செய்வது முறையா? அவர்களின் பெற்றோர் மனநிலை என்ன? அவர்கள் என்ன செய்யவேண்டும்? என்பது குறித்து ஒரு சிறுதொகுப்பை காண்போம்.  

    இளம்பெண்ணின் எதிர்காலம் என்னவாகும்?

    மேற்கூறிய நிகழ்ச்சியையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். 18 வயதாகி ஒரு வாரம் கூட அப்பெண்ணுக்கு ஆகவில்லை. அவள் இன்னும் கல்லூரி படிப்பை முடிக்கவில்லை. ஒரு திருமண உறவிற்குள் செல்லும்போது அவளின் படிப்பு கவனம் சிதறி, எண்ண ஓட்டம் மாறும். மேலும் குழந்தை எண்ணத்தை இருவரும் கையிலெடுத்தால், அதனை கையாளும் மனப்பக்குவம் அந்தப் பெண்ணுக்கு இருக்கிறதா? என்பதும் இங்கு கேள்விக்குறிதான். இந்திய திருமணச் சட்டத்தில் பெண்களின் திருமண வயது 18ஆக இருந்தாலும், பல பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் இன்னும் பாலியல்ரீதியான உறவுகளில் புரிதல் இல்லாமல்தான் இருக்கின்றனர். மேலும் உடலளவிலும் அவர்கள் ஒரு பிரசவத்தை தாங்கும் திடத்துடனும் இருக்கிறார்களா? என்பதும் கேள்விக்குறியே. இதற்காகத்தான் இப்போது பெண்ணின் திருமண வயதை 21ஆக மாற்றவேண்டும் என்ற விவாதம் சென்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு பலரும் அந்தக்காலத்தில் 14 வயதிலேயே பெண்கள் திருமணம் செய்துக்கொண்டார்கள், குழந்தைப் பெற்றுக்கொண்டார்கள் என அறிவாளித்தனமாக பேசுவார்கள். அப்போது இருந்த நடைமுறையும், அவர்கள் உணவுமுறையும் வேறுப்பட்டது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு ஆகச்சிறந்த கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

    ஈர்ப்பா? காதலா?

    எது நடந்தாலும் 2கே கிட்ஸா இருப்பா என்று 2000த்திற்கு பின் பிறந்தவர்களை பெரும்பாலானோர் ஒரு கேலியுடன் பேசுவார்கள். காரணம் அவர்களின் காதல் விவகாரங்கள், அவர்களின் செயல்முறைகள், நடைமுறைகள் மற்றும் அணுகுமுறைகள். இது எல்லோருக்கும் பொருந்தாது. இருப்பினும் இப்போதைய தலைமுறையினர் பலரும் காதல் என்றால் என்னவென்றே தெரியாமல், எதிர்பாலினத்தவரிடம் வரும் ஈர்ப்பை வேறுபடுத்தி அறியமுடியாமல் ஒரு உறவுக்குள் செல்கின்றனர். இருவருக்கும் இடையே எந்த புரிதலும் இல்லாமல், ஒரு உறவுக்குள் செல்லும்போது அதில் பிரச்சனைகள், வாக்குவாதங்கள், மோதல் என வன்முறை வெடிக்கிறது. பல விவகாரங்கள் கொலைகளில் முடிகிறது. ஆனால் இவை எல்லாம் 2கே கிட்ஸ்க்கு மட்டும் பொருந்தாது. பலருக்கும் பொருந்தும். எதிர்பாலினத்தவரிடம் வரும் ஈர்ப்புக்கும், காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

    புரிதல் ஒருபக்கம் இல்லையென்றாலும், இதுபோன்ற தவறுகள் நடக்க எளிதாக துணைநிற்கின்றன சமூக வலைதளங்கள். யாரென்றே தெரியாதவர்களிடம் எளிதில் பழகி, அவர்கள் உண்மையை பேசுகிறார்களா? உண்மையில் தங்களை விரும்புகிறார்களா? என்று தெரியாமல் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கின்றனர் பல இளைஞர்களும், இளம்பெண்களும். அவர்களின் உண்மைமுகம் தெரியவரும்போது வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள். அப்படி உண்மையில் நீங்கள் காதல்தான் செய்கின்றீர்கள் என்றால் இருவரும் இணைந்து ஒன்றாக முன்னேற பாருங்கள். உங்கள் படிப்பை முதலில் முடித்துவிட்டு, ஒரு நல்ல வேலைக்கு சென்று பின்னர் வீட்டில் கூறுங்கள். அப்போது அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் காத்திருங்கள். காத்திருப்பதில்தான் உண்மையான காதல் உள்ளது. உங்களை ஒருவர் உண்மையில் காதலித்தால் உங்களுக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பார்கள்.

    சிலவீட்டில் என்ன செய்தாலும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அந்தச் சூழலில் நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். ஒருவேளை பெண்ணின் வீட்டில் உங்கள் காதல் தெரிந்து, அவர்களை கட்டாயப்படுத்தினால், அந்தப் பெண் திருமணம் செய்து கொள்வதற்கு தயார் என்றால் நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் எந்த காரணத்தாலும் உங்களின் படிப்பு, அதனால் பாதிப்படையாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். உண்மையில் காதலிப்பவர்கள் உங்களின் முன்னேற்றை கருத்தில்கொண்டே ஒவ்வொரும் நடைமுறையையும் மேற்கொள்வர். அப்படி படிக்கும்போதே திருமணம் செய்துகொண்டாலும் படிப்பைத்தொடருங்கள். அதைவிடுத்து படிப்பை நிறுத்தி ஒரு திருமணம் என்பது உங்களின் வாழ்க்கையை கேள்விகுறியாக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    பெற்றோர் மனநிலை...

    பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைகள் ஏதேனும் பிரச்சனையில் சிக்கும்போதே அவர்கள் ஒரு உறவில் இருந்துள்ளனர் என்பதை அறிகின்றனர். சமூக வலைதளங்களில் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க தவறுகின்றனர். மற்றொரு முக்கிய காரணம் பெற்றோர்கள் பாலியல்ரீதியான சில கருத்துகளை பிள்ளைகளிடம் பேசுவது தவறு இல்லை. இந்தியாவில் உள்ள பெற்றோர்கள்தான் இன்னும் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். பெற்ற பிள்ளைகளிடம் காதல்ரீதியான வார்த்தைகளை பேசினால் கூட அது அபச்சாரம். பின் எப்படி உங்கள் பிள்ளைகளுக்கு காதலுக்கும், ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியும். ஒருபுறம் நம் பெற்றோர்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் அந்தளவு புரிதல் இல்லை என்று கூறினாலும், அவர்கள் வளர்ந்த விதமும், சூழலும் எப்படி இருந்தது என்பது நமக்கும் தெரியும். அதனால் அவர்களை சொல்லியும் பலன் இல்லை.


    ஈரப்பால் வரும் உணர்ச்சிகளுக்கு காதல் என பெயர் சூட்டாதீர்

    மற்றொன்று இதில் பிள்ளைகளைவிட, பெற்றோர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். தன் மகள் ஒரு நல்லப்பையனை திருமணம் செய்துகொண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அவன் ஏமாற்றுபவனாக இருந்தால்? அதன்பின் நடைபெறும் விளைவுகள்? அதற்கு யார் பொறுப்பேற்பது? தங்கள் பெண் தேர்ந்தெடுத்த ஒரு ஆண்மகன் சரியானவாக இல்லாவிட்டால், அந்தப் பெண்ணை தாண்டி ஒரு குடும்பமே அதில் வீழ்கிறது. இது எல்லாக் குடும்பத்தினருக்கும் பொருந்துமா எனத் தெரியாது. ஆனால் உண்மையில் தனது பெண்பிள்ளைகளை அன்பாக வளர்க்கும் ஒவ்வொரு குடும்பத்தினரையும் அது வலுவாக பாதிக்கும். பாதை எப்படி இருந்தாலும் பிடிப்புதான் முக்கியம்.

    அவள் எப்படி திருமணம் செய்துகொண்டால் என்பதை தாண்டி, அவள் யாரை திருமணம் செய்துகொண்டால் என்பது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் பல பெண்கள் தாங்கள் தவறான முடிவு எடுத்துவிட்டால் தற்கொலை செய்துகொள்கின்றனர். பலரின் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது யார்? அந்தப் பெண் இறந்துவிட்டால், அவளை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டவன், வேறொரு பெண்ணைத்தேடி சென்றுவிடுவான். ஆனால் பிள்ளையை இழந்த பெற்றோரின் கதி? இறுதியில் பெண்களோ, ஆண்களோ ஒரு காதல் உறவுக்குள் செல்கிறீர்கள் என்றால் உங்களின் துணை, உங்களது கல்வி, வேலை, உங்களது துன்பம், இன்பம் என அனைத்திலும் துணை நிற்பார்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஈரப்பால் வரும் உணர்ச்சிக்குள் விழுந்து காதல் என பெயர்வைத்துக்கொண்டு வாழ்க்கையை வீணாக்காதீர்கள். 

    • பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம்!
    • ஒவ்வாமை உள்ளவர்கள் தேன் பயன்பாட்டை தவிர்க்கலாம்.

    சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அனைவருமே அதிக கவனம் செலுத்துகிறோம். இதற்காக பலரும் கடையில் விற்கும் அழகுசாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஒருசிலர் வீட்டு வைத்தியங்களயே கையாளுகின்றனர். அதாவது இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே தங்கள் சருமத்தை பராமரித்து வருகின்றனர். அதில் தேனும் அடங்கும். சிலர் முகத்திற்கு தேனை பயன்படுத்துவர். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? யாரெல்லாம் பயன்படுத்தவேண்டும் போன்ற தகவல்களை பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை. அந்தவகையில் தேனை எவ்வாறு பயன்படுத்தலாம்? அது சருமத்திற்கு அளிக்கும் பலன்கள் என்ன? பார்க்கலாம்...

    தோலழற்சிக்கு எதிராக செயல்படும் தேன்...

    வறட்சி, அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நாள்பட்ட தோல் நோயான அடோபிக் டெர்மடிடிஸ், சொரியாசிஸ், நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ் (தோலில் பரவும் பாக்டீரியா தொற்று), புண்கள் போன்ற அனைத்துவிதமான தோல்நோய்களுக்கும் பச்சை தேன் பலனளிக்கும். தேனில் சருமத்திற்கு நன்மை பயக்கும் பைட்டோ கெமிக்கல்கள் நிரம்பியுள்ளன. பைட்டோ கெமிக்கல்களுக்கு ஆக்ஸிஜனேற்ற (antioxidant) மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இவை தோலழற்சி போன்ற தொற்றுகளுக்கு எதிராக செயல்படுகின்றன. மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், புற்றுநோய் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரித்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அதிலும் குறிப்பாக மனுகா தேன் (மனுகா மரத்தின் பூக்களில் இருந்து தேனீக்களால் எடுக்கப்படுவது) முகத்தில் உள்ள நுண்ணிய கோடுகள், சுருக்கங்கள், கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன், வறட்சி போன்றவற்றை தடுத்து தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும் என ஆய்வுகள் காட்டுகின்றன.  தேன் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்கவும், முகத்தை பிரகாசமாக்கவும் உதவும். தேனில் உள்ள உரித்தல் பண்புகள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். இது உங்கள் சருமத்தை பிரகாசமாகக் காட்ட உதவும். அதுபோல முகத்தில் உள்ள வடுக்களை மறையச்செய்யும்.


    பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம்

    தேனை எப்படி பயன்படுத்தலாம்?

    பச்சைத்தேனை அப்படியே முகத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால் அது கடைகளில் வாங்கியதாக இருக்கக்கூடாது. அதாவது சில தேன்கள் வெறும் சர்க்கரைக்கரைசலாக உள்ளன. இயற்கையான தேன்தான் சருமம் மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லப்பலனைத் தரும். அப்படிப்பட்ட பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம். அதன் பிசுபிசுத்தன்மை பிடிக்காதவர்கள், தேனை தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்து அதன் பிசுபிசுப்புத்தன்மையை குறைத்து முகத்தில் பயன்படுத்தலாம். சில நிமிடங்கள் முகத்தில் தேனைவிட்டு, பின்னர் முகத்தை கழுவலாம். தேனை மற்ற பொருட்கள் உடனும் கலந்து பயன்படுத்தலாம். தக்காளி, கற்றாழை, இலவங்கப்பட்டை தூள் ஆகியவற்றுடன் தேனை சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தலாம். மூன்று பங்கு தேன் மற்றும் ஒரு பங்கு தூய இலவங்கப்பட்டை தூளை ஒன்றாக கலக்கவேண்டும். இந்த கலவையை கொஞ்சம் சூடாக்கி, முகத்தில் தடவி 8 முதல் 10 நிமிடங்கள் உலரவிடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இது முகப்பருவை நீக்க உதவி நல்ல பலனை அளிக்கும். ஆனால் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் இலவங்கப்பட்டையை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மேலும் தேன் பயன்படுத்துவதையும் தவிர்க்கலாம். மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு பின்னர் பயன்படுத்தலாம். அதுபோல தேனை முகத்தில் தடவிக்கொண்டே தூங்ககூடாது. காரணம் முகத்தில் இருக்கும் தேன் தூசி மற்றும் பிற குப்பைகளை ஈர்க்கும். இது செயலில் உள்ள முகப்பருவை மோசமாக்கும். தூசிகள் தோல் அரிப்புக்கு வழிவகுக்கும். இதை தொடர்ந்து செய்வது சரும பிரச்சனைகளை உண்டாக்கும். 

    ×