என் மலர்
நீங்கள் தேடியது "லெஹங்கா"
- தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய பகுதி ஆடை அலங்காரம்.
- ஒவ்வொரு உடையும் இந்தியாவின் கலாச்சார கதையைச் சொல்கிறது.
பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். புத்தாடை அதற்கு இன்னும் அழகை கூட்டுகிறது. இந்நிலையில் அனைவரின் மனதிலும் எழும் கேள்வி, "தீபாவளிக்கு என்ன ட்ரெஸ் போடுவது?" என்பதுதான். தீபாவளிக்கு என்ன அணியலாம் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கான பதிவுதான் இது. தீபாவளிக்கு ஆடை அணிவது என்பது வெறும் பாரம்பரிய நடைமுறை மட்டுமல்ல. மக்கள் தங்கள் தனித்துவமான பாணிகளைக் காட்ட ஒரு சிறந்த வழியாகும். அது மின்னும் புடவைகளாக இருந்தாலும் சரி, நேர்த்தியான லெஹங்காக்களாக இருந்தாலும் சரி, துடிப்பான சல்வார் கமீஸ் ஆக இருந்தாலும் சரி... ஒவ்வொரு உடையும் இந்தியாவின் கலாச்சார கதையைச் சொல்கிறது. மேலும் தீபாவளி ஆடைகள், மாறிவரும் நவீன காலத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. இதில் சில உடைகள் குறித்து பார்ப்போம்.
புடவை
பெண்களை மிகவும் அழகாக காட்டும் உடை என்றால், அது புடவைதான். அதிலும் நம்மை தனியாக எடுத்துக்காட்ட வேண்டுமானால், நீலம், அடர்சிவப்பு, அடர்பச்சை போன்ற பிரகாசமான நிறங்களில் புடவை கட்டலாம். ஆனால், அந்த கலர் நமக்கு ஏற்றதாக இருக்குமா என்றும் ஒருமுறை பார்த்துக்கொள்ளலாம். தற்போதையை தலைமுறையினர் பலருக்கும் புடவை கட்டத்தெரியாது. சிலருக்கு சிரமமாக இருக்கும். அதற்கான தீர்வாக தீபாவளி ட்ரெண்டிங்கில் இப்போது ரெடிமேட் சாரீஸ் வந்துள்ளன. இது பாரம்பரியம் மற்றும் ஸ்டைல் என இரண்டையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டைலாகவும் இருக்கணும், புடவையாகவும் இருக்கணும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு.
அனார்கலி
சிலருக்கு புடவை கட்டிக்கொண்டு நீண்டநேரம் இருப்பது சௌகரியத்தை அளிக்காது. அப்படி இருப்பவர்கள் பாரம்பரியம் மற்றும் சௌகரியத்தை கொண்ட அனார்கலியை தேர்வு செய்யலாம். கொஞ்சம் எடுத்துக்காட்ட வேண்டுமானால் எம்பிராய்டரி செய்யப்பட்ட அனார்கலியை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். பல வண்ணங்களில், கச்சிதமான டிசைனிங் கொண்ட இந்த ஆடைகள், தீபாவளி போன்ற விழாக்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கின்றன.

பல வண்ணங்களில் கச்சிதமான டிசைனிங் கொண்ட ஆடைகள், தீபாவளி போன்ற விழாக்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும்
லெஹங்கா
பட்டு, வெல்வெட், ஜார்ஜெட் போன்ற துணிகளில், ஜர்தோசி, எம்ப்ராய்டரி, சீக்வின்ஸ், முத்துக்கள் மற்றும் கற்கள் கொண்டு செய்யப்படும் நேர்த்தியான வேலைப்பாடுகள் லெஹங்காவுக்கு ஒரு ராஜரீக தோற்றத்தை அளிக்கின்றன. லெஹங்காவுடன் அணியும் துப்பட்டா, அதன் அழகை மேலும் அதிகரிக்கிறது. மெல்லிய துணியில், லெஹங்கா மற்றும் சோளியின் வேலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு டிசைன் செய்யப்பட்ட துப்பட்டா, பெண்ணுக்கு நல்ல தோற்றத்தை அளிக்கிறது. இப்போதெல்லாம் மணப்பெண்கள் கூட லெஹங்காவைத்தான் அணிகின்றனர்.
பலாசோ
பலாசோவில் நிறைய ஸ்டைல் செய்யலாம். பளீர் நிறங்களில் கோல்ட் ஜரிகைகள் கொண்ட பலாசோ வாங்கி அதற்கு டாப் அல்லது குர்த்தா அணிந்து மேட்ச் செய்து அசத்தலாம்.
சல்வார்...
பெண்கள் சல்வார் அணிந்து சுடிதார் அணிவது இயல்பு. ஆனால் சல்வாரிலும் ஜரிகை டிசைனில் இப்போது ட்ரெண்டிங்கில் நிறைய கிடைக்கின்றன. அதற்கேற்றவாறு அணிகலன்கள் அணிந்தால் நன்றாக இருக்கும்.
லாங் கவுன்
முழு நீள குர்த்தா அல்லது முழு நீள கவுன் என்ற பெயரில் சுங்குடி புடவையில் கஸ்டமைஸ்டு முறையில் தைத்து அணிவது சமீபத்திய ட்ரெண்ட். அது இந்த தீபாவளிக்குப் பக்கா பொருத்தமாக இருக்கும்.
பாவாடைச் சட்டை
ஜரிகை வைத்தப் பட்டுப் பாவடை அல்லது கற்கள் பதித்த டிசைனர் பட்டுப்பாவடை. இப்படி எது தேர்வு செய்தாலும் நல்ல தேர்வாக இருக்கும்.
- லெஹங்கா உடைகள், சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் ‘டிரெண்டிங்’கில் இருக்கின்றன.
- திருமணத்திற்கு தயாராகும் ‘டீன்-ஏஜ்’ பெண்களும், ‘லெஹங்கா’வை விரும்புகிறார்கள்.
'லெஹங்கா அணிவது ஒரு கலை'… ஆரம்பமே உற்சாகமாக பேசினார் காஸ்டியூம் டிசைனர், அனாமிகா. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த அனாமிகாவிற்கு, 52 வயதாகிறது. வட இந்தியாவின் பிரபல காஸ்டியூம் டிசைனராக இவர், லெஹங்கா உடைகளை வடிவமைப்பதிலும், தைப்பதிலும் ஸ்பெஷலிஸ்ட்.
பாலிவுட் நட்சத்திரங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு, பெரும்பாலும் இவரே லெஹங்கா உடைகளை வடிவமைத்து கொடுப்பார். இவர், லெஹங்கா உடைகள் பற்றியும், அதை அணியும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
''வட இந்தியாவில் பிரபலமான லெஹங்கா உடைகள், சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் 'டிரெண்டிங்'கில் இருக்கின்றன.
சினிமா நட்சத்திரங்களை தாண்டி, திருமணத்திற்கு தயாராகும் 'டீன்-ஏஜ்' பெண்களும், 'லெஹங்கா'வை விரும்புகிறார்கள். தாலி கட்டும் நிகழ்வின்போது பட்டுப்புடவைகளையும், திருமண வரவேற்பிற்கு 'லெஹங்கா' உடைகளையும் அணியும் கலாசாரம், தமிழ்நாட்டிற்குள்ளும் புகுந்துவிட்டது'' என்றவர், லெஹங்கா நிற தேர்வில் கவனமாக இருக்க சொல்கிறார்.
''காலம் காலமாக தென்னிந்திய பட்டுப் புடவைகளுக்கு வட இந்திய பெண்களும், வட இந்திய லெஹங்காக்களுக்கு தென்னிந்திய பெண்களும் ஆசைப்படுவது புதிது இல்லை. ஆனால் எதை எப்படி அணிய வேண்டுமோ அதை அப்படிதான் அணிய வேண்டும்.
எப்படி முகூர்த்தப் பட்டுப்புடவைகளில் 'பெய்ஜ்', 'பீச்', 'பேஸ்டல்' போன்ற நிறங்களில் அணியும்போது அவ்வளவு பிரைட் 'லுக்' கொடுக்காதோ அதேபோல் லெஹங்கா அணிவதிலும் சில விதிமுறைகள் இருக்கிறது.
நம்மூர் பெண்கள் பெரும்பாலும் 'டஸ்கி', 'டார்க் பியூட்டிகள்'. அந்த பெண்கள் லெஹங்கா அணியும்போது நிறங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கிளிப்பச்சை, அடர்ந்த சிவப்பு, மெரூன் சிவப்பு பயன்படுத்தலாம். சிக்னல் லைட் சிவப்பு நிறத்தை நிச்சயம் பயன்படுத்தக்கூடாது.
அதேபோல் அடர்ந்த பஞ்சு மிட்டாய் நிற 'பிங்க்' மாதிரியான ரேடியம், லேசர் லைட் நிறங்கள் அறவே கூடாது. கரும்பச்சையிலேயே கொஞ்சம் மங்கலான பச்சை, பிரவுன் நிறம் இவைகளையும் தவிர்ப்பது நல்லது'' என்னும் அனாமிகா, லெஹங்கா ஸ்டைலிங் குறித்து மேலும் விவரித்தார்.
''பொதுவாகவே தென்னிந்திய பெண்களுக்கு இடைப்பகுதி கொஞ்சம் நீளம் குறைவுதான். அதேபோல் பின்பக்கமும் கொஞ்சம் பருமனாக இருக்கும். அடிப்படையிலேயே புடவைக்கும், தாவணிக்குமான உடல்வாகு தென்னிந்தியப் பெண்களுக்கு உண்டு.
மார்பு, இடைப்பகுதிகள் கொஞ்சம் பப்ளியாக இருக்கும். லெஹங்காவை அந்த அழகை 'ஹைலைட்' செய்யும் மாதிரியில் டிசைன் செய்து கொண்டால் அழகாக இருக்கும். உங்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.
அடுத்ததாக லெஹங்கா அணிய வேண்டும். ஆனால் இடுப்பு அவ்வளவாக தெரியக்கூடாது என்பது தென்னிந்திய பெண்களின் விருப்பம். அந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு லெஹங்காவையே தாவணி ஸ்டைலில் போட்டுக்கொள்வதுதான்.
அடுத்த தீர்வு இடைப்பகுதியில் கொஞ்சம் லேஸ் அல்லது வலை மாதிரியான துணி கொடுத்து மேலும் அழகு சேர்க்கலாம்.
சராரா ஸ்டைலில் லெஹங்கா அல்லது கிராண்ட் ஓவர் கோட் போலவும் தைக்கலாம்'' என்றவர், லெஹங்காவை தென்னிந்திய பெண்கள் மிக குறைவாக பயன்படுத்துகிறார்கள் என்கிறார்.
''வட இந்திய பெண்கள், ஒருமுறை வாங்கிய லெஹங்காவை குறைந்தது 20 நிகழ்ச்சிகளுக்காவது அணிவது உண்டு. ஆனால் தென்னிந்திய பெண்கள், வரவேற்பு நிகழ்ச்சியில் அணிவதோடு சரி, அதை ஓரங்கட்டிவிடுகிறார்கள். அதனாலேயே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பெரும்பாலும் லெஹங்கா வேண்டாம் என கூறிவிடுகிறார்கள். ஒருமுறை பயன்படுத்த எதற்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று கோபப்படுகிறார்கள். அதிலும் முகூர்த்தங்களுக்கு குறைந்தது ரூ.20 ஆயிரம் கொடுத்தால் கூட நல்ல பட்டுப்புடவை கிடைத்துவிடும்.
ஆனால் லெஹங்காக்களுக்கு ரூ.30 ஆயிரமாவது செலவழித்தால் தான் கிராண்ட் 'லுக்' கிடைக்கும். அப்படி செலவு செய்து வாங்கும், லெஹங்காக்களை குறைந்தது 10 விழாக்களுக்காவது அணிய பழகிக் கொள்ளுங்கள். அப்போதுதான் பெரியவர்களும், லெஹங்காக்களை ஆதரிப்பார்கள்'' என்றவர், லெஹங்கா உடை அணியும்போது செய்யக்கூடிய மேக்கப் விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.
''பாரம்பரிய புடவைக்கு உரிய மேக்கப் வேறு. லெஹங்காவிற்கு உரிய மேக்கப் வேறு. தென்னிந்திய புடவை என்றாலே 'பேபி பிங்க்' அல்லது 'ஸ்கின் டோன்' லிப்ஸ்டிக்குகளுடனான லைட் மேக்கப்தான் போட வேண்டும். லெஹங்கா என்றால் கொஞ்சம் இண்டோ-வெஸ்டர்ன் டார்க் நிற லிப்ஸ்டிக், மினுமினுக்கும் ஐ-ஷேடோஸ், பிளஷ், குளோ இப்படி எல்லாமே பளிச்சென்று மேக்கப் செய்யலாம். அப்போதுதான், லெஹங்காவிற்கு மேட்சாக இருக்கும்.
அணிகலன்களை பொறுத்தவரை, லெஹங்காக்களுக்கு ஒரே ஒரு கிராண்ட் நெக்லெஸ் மற்றும் கிராண்ட் தோடு போதும்'' என்றவர், ''அடுத்த 10 வருடங்களில், சுடிதார் போலவே, லெஹங்காவும் தமிழகத்தில் சர்வ-சாதாரண உடையாக மாறியிருக்கும்'' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.






