search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Childcare"

    • தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடும்.
    • குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது தவறான பழக்கம்.

    ஒவ்வொரு பெற்றோருமே குழந்தைகளை நல்வழிப்படுத்தி சிறந்த ஆளுமைத்திறன் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கவே முனைப்பு காட்டுகிறார்கள். குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன தவறுகளை அன்புடன் சுட்டிக்காட்டி திருத்த வேண்டுமே தவிர கடுமையான சொற்களை பிரயோகித்து அவர்களை வசைபாடக்கூடாது. அது அவர்களை மன ரீதியாக பலவீனமாக்கிவிடும். என்னென்ன வார்த்தைகளை கூறி குழந்தைகளை திட்டக்கூடாது என்று தெரியுமா?


    'உன் பிரச்சனையை கேட்க எனக்கு நேரமில்லை'

    குழந்தைகளின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்காமல் அலட்சியப்படுத்துவது, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அசட்டையாக இருப்பது, அவர்களின் கருத்துக்களை நிராகரிப்பது, தான் குடும்பத்தில் முக்கியமில்லாத நபராக, சுமையாக இருப்பவராக குழந்தைகளை சிந்திக்க வைத்துவிடும். தங்களை ஆதரவற்றவர்களாக எண்ணக்கூடும்.

    'நீ புத்திசாலி என்று உன் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். அதற்குரிய தகுதி உனக்கு இல்லை'

    உன்னை அதிபுத்திசாலி. எந்த பிரச்சனையையும் எளிதாக சமாளித்துவிடுவாய். அறிவாளி என்று நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் நீ இப்படி முட்டாளாக இருப்பாய் என்று எதிர்பார்க்கவில்லை.

    உன் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது என்பது போன்ற கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது. அது உணர்ச்சி ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் குழந்தையின் தன்னம்பிக்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.


    'நீ புத்திசாலி இல்லை'

    குழந்தையின் அறிவுத்திறன் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் அவர்களின் கற்றல் ஆர்வத்தை பாதிக்கக்கூடும்.

    'நீ அவரை போன்றவர். எதற்கும் உதவ மாட்டாய்'

    குடும்பத்தில் எவருடைய பேச்சையும் கேட்காமல் தன் விருப்பப்படி செயல்படும் நபர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களுடன் ஒப்பிட்டு, 'நீயும் அவரை போன்றுதான் எதற்கும் உதவ மாட்டாய்.

    நீ வாழ்க்கையில் முன்னேறுவது கஷ்டம்தான்' என்பது போன்ற வார்த்தைகளை குழந்தைகளிடம் கூறக்கூடாது. அது அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும். தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடும்.


    'நீ எப்போதும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறாய்'

    குழந்தையை தொந்தரவு செய்பவர், எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனையை ஏற்படுத்திக்கொண்டே இருப்பவர் போல் சித்தரித்து பேசுவது அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும். அவர்களின் நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, தவறான வழிக்கு செல்வதற்கு வழிவகை செய்துவிடும்.

    'நீ எதற்கும் தகுதி இல்லாதவன்'

    உன்னிடம் எல்லா திறமையும் இருக்கிறது. எதையும் சிறப்பாக செய்துவிடுவாய் என்று எண்ணி இருந்தேன். உன்னால் சின்ன விஷயத்தை கூட எளிதாக கடந்து வர முடியவில்லை.

    எதற்கும் தகுதி இல்லாதவன் என்று கூறி திட்டக்கூடாது. அது குழந்தை தன்மீது கொண்டிருக்கும் சுய நம்பிக்கையை கேள்விக்குரியதாக்கிவிடும். தான் எந்த தகுதியும் இல்லாதவன் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

    'நீ அந்த குழந்தையை போல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'

    குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது தவறான பழக்கம். அந்த குழந்தையை பார். எப்படி நன்றாக படிக்கிறது. நல்ல திறமைசாலியாகவும் இருக்கிறது.

    அந்த குழந்தையை போல் நீயும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என கூறி மன நெருக்கடிக்கு ஆளாக்கக்கூடாது. அது அவர்களின் சுய மதிப்பை குறைத்துவிடும். தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு எந்த முயற்சியிலும் ஈடுபடுவதற்கு ஆர்வம் இல்லாதவர்களாக மாறிவிட நேரிடும்.


    'உன்னால் ஏன் உன் சகோதர, சகோதரிகள் போல் இருக்க முடியவில்லை'

    உடன் பிறந்தவர்களுடன் தொடர்ந்து ஒப்பிட்டு பேசுவது போட்டி மனப்பான்மையையும், பொறாமை உணர்வையும் உருவாக்கிவிடக்கூடும். எப்போதும் சண்டையிடும் மனோபாவம் அவர்களுக்குள் ஏற்பட்டுவிடும்.

    'அழுவதை நிறுத்து. அதனால் எதுவும் மாறிவிடப்போவதில்லை'

    செய்த தவறுக்கு மனம் வருந்தி குழந்தை அழும்போது கடுமையாக பேசக்கூடாது. அது குழந்தையின் உணர்ச்சிகளை நாம் புரிந்து கொள்ளாமல் வசைபாடுவது போலாகிவிடும். தன் உணர்வுக்கு உரிய மதிப்பு அளிக்கவில்லை என்று வேதனைப்படுவார்கள்.

    • குழந்தைகள் இரண்டு வாரங்கள் வரை கூட மலம் கழிக்காமல் இருப்பார்கள்.
    • மலம் கழிக்கும் போது வாயு திரட்சியால் வயிறு வீங்குவது.

    மலச்சிக்கல் என்பது பெரியவர்களுக்கு மட்டும் அல்ல. பிறந்த குழந்தைகளுக்கு கூட வரலாம். குழந்தைகளின் அழுகை, மலம் கழிக்கும் போது அலறல் மற்றும் முக மாற்றம் போன்ற அறிகுறிகளோடு மலச்சிக்கலை பெற்றோர்கள் அறியலாம்.

    பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகள் தாய்ப்பால் மட்டும் குடிப்பவர்களாக இருந்தால் அவர்கள் மலம் கழித்தல் என்பது தாய்ப்பாலுக்கு பிறகு இருக்கும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை. சில நேரங்களில் பிறந்த உடன் 5 முதல் 7 வரை இருக்கலாம். இது இயல்பானது.

    குழந்தைகள் இரண்டு வாரங்கள் வரை கூட மலம் கழிக்காமல் இருப்பார்கள் அல்லது தாமதமாகலாம். எனினும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்குமான மலச்சிக்கலின் அறிகுறிகள் மாறுபடும். சில நாட்கள் வரை குழந்தைகள் மலம் கழிக்காமல் இருக்கலாம்.

    அறிகுறிகள்:

    * மலம் வெளியேற்றும் போது குழந்தை சிவந்த முகத்துடன் 10 நிமிடங்களுக்கு மேல் கஷ்டப்படலாம். இது மலம் கழிப்பதில் சிரமத்தை குறிக்கிறது.

    * மலம் கழிக்கும் போது குழந்தை குழப்பமடையலாம். இது வலியுடன் இருப்பதை குறிக்கிறது.

    * மலம் கழிக்கும் போது வாயு திரட்சியால் வயிறு வீங்குவது. வாயு வெளியேற்றம் கடினமாக இருப்பது.

    * மலம் வெளியேறாமல் ஆசனவாய் வாய்பகுதியில் நீண்ட நேரம் இருப்பது.

    * குழந்தையின் வயிறு வழக்கத்திற்கு மாறாக வீங்கியதாகவும் தொடுவதற்கு கடினமாகவும் இருக்கலாம்.

    * கடுமையான மலச்சிக்கல் என்கோபிரெசிஸை ஏற்படுத்தலாம் இது குழந்தையின் டயபர் அல்லது உள்ளாடைக்குள் ஒரு சிறிய அளவு திரவ மலம் தன்னிச்சையாக கசிவை உண்டாக்கலாம்.

    * கடுமையான சந்தர்ப்பங்களில் குழந்தை நகரும் போது மலத்தில் ரத்தப்போக்கு உண்டாகலாம். குழந்தை மலத்தை வெளியேற்ற சிரமப்படலாம். மலம் கழிக்கும் வழக்கத்தில் மாற்றங்கள் தொடர்ந்து இருந்தால் மலச்சிக்கல் இருக்கலாம்.

    மலச்சிக்கல் உண்டாக காரணம்:

    * குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்றால் அரிதாக கடினமான மலத்தை கவனிக்கலாம்.

    * தண்ணீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படலாம்.

    * திட உணவில் குறைந்த நார்ச்சத்து இருப்பதால் மலத்தை கடினப்படுத்தலாம்.

    * மலச்சிக்கல் உண்டாவது இரைப்பை குடல் நோய்த்தொற்றின் விளைவாக இருக்கலாம்.

    • காலம் சென்ற பின்பு கடமைகளை செய்வது இயலாத காரியம்.
    • தன்னம்பிக்கையை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

    பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை மதிப்பீடு செய்யாதீர்கள். ஏன் என்றால் நீங்கள் ஆசிரியர் அல்ல. நீங்கள் பெற்றோர்கள். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். குறை சொல்லுதல் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டாம். அவர்கள் தானாக வளருவார்கள்.

    கடிகாரம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் நாட்கள் நகர்ந்துகொண்டு தான் இருக்கும். அதனால் காலம் சென்ற பின்பு கடமைகளை செய்வது இயலாத காரியம். இவ்வாறாக ஒரு பழமொழி சொல்வார்கள். `கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யாதே'

    மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தையும், ஆயுளையும் கண்ணியமாக செய்து முடித்து விட வேண்டும். அப்போது வெற்றி தேடி வரும். இவை அனைத்தும் வரும் போது மிகுந்த நன்றி உணர்வுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

    இந்த பிரபஞ்சம் மாணவர்களுக்காக எல்லாவற்றையும் தயார் செய்து வைத்து விடும். அகிலம் என்னும் இந்த அண்டத்தில் மாணவர்கள் திறன் நிறைந்த மாணவர்களாக வளர மிகுந்த ஆற்றலும், அறிவும், ஞானமும், தொடர்ச்சியான, செய்முறையும், படித்தலும், எழுதுதலும், பேசுதலும், கேட்டலும், அனைத்து மொழித்திறன் களையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் உடல் நலமும், சத்தான உணவு முறையும், நேர்மறையான சிந்தனையும், சமுதாயத்தின் மிகச் சிறந்த பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இயற்கை சூழலோடு இணைந்த பள்ளிக்கூடம், அதனோடு இயற்கை அன்னையை போன்ற அன்பான பாகுபாடின்றி அனைத்து மாணவர்களையும் தங்கள் பிள்ளைகள் போன்று அரவணைக்கும் அறிவும் ஞானமும் நிறைந்த ஆசிரியர்கள் உள்ளனர்.

    உள்ளத்தில் எழும் அனைத்து ஐயங்களுக்கும் அறிவு பூர்வமாக சிறப்பாக விடை கண்டு உங்களிடம் மறைந்து கிடக்கும் திறன்களைத் தொடர்ச்சியாக கண்காணித்து கண்டறிந்து தனித்திறமை கொண்ட ஆசிரியர்கள் உதவியோடு வளர்க்க வேண்டும்.

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

    உயிரினும் ஓம்பப் படும்

    என்று பொது மறை நூலில் ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால் உயிரை விட சிறந்ததாக போற்றப்படும் என வள்ளுவர் சொல்கிறார்.

    முதல் ஒழுக்கத்தை கற்றுத் தருவது பள்ளிக்கூடம். இங்கு சிறப்பான, மேன்மையான, பண்பான ஒழுக்கத்தை காத்து கொள்ளுங்கள். அதனால் தான் உங்களை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்.

    • குழந்தை பெற்றோரின் கவனத்தை ஈர்க்க நினைக்கிறது.
    • மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்று பொருள்.

    உங்கள் குழந்தை தனது செயல்களை ரகசியமாக செய்கிறது என்றால், குழந்தை செய்யும் சிறிய தவறுகளை கூட பெற்றோர்கள் பெரிதாக்கி குத்திக்காட்டி பேசுகிறார்கள் என்று பொருள்.

    உங்கள் குழந்தைக்கு முன்கோபம் அதிகமாக வருகிறது என்றால், பெற்றோர் அவர்களை பாராட்டி பேசுவதில்லை என்று பொருள். அதனால் குழந்தை பெற்றோரின் கவனத்தை ஈர்க்க நினைக்கிறது.

    உங்கள் குழந்தை பயந்த சுபாவத்துடன் இருந்தால், பெற்றோர் அவர்கள் எதையும் கேட்பதற்கு முன்பே வாங்கி கொடுக்குறீர்கள். அவர்கள் பாதையில் உள்ள எல்லா தடைகளையும் நீங்களே எளிதாக்கி கொடுக்காதீர்கள். தடைகளை அவர்களே தடுப்பதற்கு அவகாசம் கொடுங்கள்.

    குழந்தை பொறாமை எண்ணத்துடன் இருந்தால், பெற்றோர்கள் குழந்தைகளிடம் மற்ற குழந்தைகளை காட்டி ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்று பொருள்.

    குழந்தை பொய் சொல்கிறது என்றால், குழந்தைகளை ஒவ்வொரு செயல்களுக்கு அதிகமாக திட்டி, அடிக்கிறீர்கள் என்று பொருள். குழந்தைகள் வேண்டுமென்றே பொற்றோர்களை தொந்தரவு செய்கிறது என்றால், பெற்றோர்கள், குழந்தைகளை அரவணைக்க அதாவது கட்டியணைத்து பாராட்டவே இல்லை என்று பொருள்.

     குழந்தைக்கு எந்த பொருள் வாங்கிக்கொடுத்தாலும் அவர்கள் அந்த பொருள் மீது விருப்பம் கொள்ளவில்லை என்றால், பெற்றோர்கள் அவர்கள் விரும்பும் பொருளை வாங்க பெற்றோர்கள் விருப்பம் கொடுக்கவில்லை என்றுபொருள்.

    குழந்தை சுயமாக முடிவெடுக்க தயங்குகிறது என்றால், பெற்றோர்கள் குழந்தைகளிடம் சிறுவயதில் இருந்தே குடும்பத்தார் அல்லது அனைவரது முன்னிலையிலும் அவர்களின் செயல்களை உங்களுக்கு தகுந்தார்போல் ஒழுங்குபடுத்தி உள்ளீர்கள் என்று பொருள்.

    குழந்தைகள் மற்றவர்களிம் உணர்வுகளை பொருட்படுத்தவே இல்லை என்றால், பெற்றோர்கள் குழந்தைகளிம் உணர்வுக்கு மதிப்பளித்து பேசுவதில்லை, அவர்களுக்கு உத்தரவிடுகிறீர்கள் என்று பொருள்.

    குழந்தைகள் மற்றவர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொள்கிறார்கள் என்றால், இந்த நடத்தையை குழந்தைகள் பெற்றோரிடம் இருந்தோ, அல்லது குழந்தைகள் அதிகம் பழகும் நபரிடம் இருந்தோ இதனை கற்றுக்கொள்கிறார்கள் என்று பொருள்.

    • மகிழ்ச்சியான சுற்றுச்சூழல் எப்படி குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பங்காற்றுகிறது.
    • சூழ்நிலைகள் தான் மனிதர்களை பல்வேறு அடையாளம் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கிறது.

    மகிழ்ச்சியான சுற்றுச்சூழல் மற்றும் குழந்தை வளர்ப்பு எப்படி குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பங்காற்றுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

    சூழ்நிலைகள் தான் மனிதர்களை பல்வேறு அடையாளம் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கிறது. அதனால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி கொடுப்பது பெற்றோரின் கடமை. அப்போதுதான், `மகிழ்ச்சியான ஹார்மோன்கள்' மூளையில் உருவாகும்.

    செரோடோனின், டோபமைன், எண்டோர்பின் மற்றும் ஆக்ஸிடோசின்... இவை நான்கும் தான் மகிழ்ச்சியான ஹார்மோன் என அறியப்படுகின்றன. இவை மூளையில் உற்பத்தியாகும் அளவை பொறுத்துதான், குழந்தைகளின் மனநிலையும், உணர்ச்சியும் வெளிப்படும். அவை குழந்தைகளை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சியுடன் இயங்க வழிவகுக்கும். அவர்களது மூளைத்திறனை மேம்படுத்தும்.

     செரோடோனின்: மனநிலை, தூக்கம், பசியின்மை மற்றும் செரிமானத்தை ஒழுங்குபடுத்துகிறது. (சூரிய ஒளியில் விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, பருப்பு வகைகளை உண்பதன் மூலம் இதை அதிகரிக்கலாம்.)

    டோபமைன்: இன்பம், ஊக்கம் மற்றும் கவனம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. (ஆழ்ந்து தூங்குவது, பரிசுப்போட்டிகளில் கலந்துகொள்வது, மீன், முட்டை, பால் உணவுகளை உட்கொள்வதன் மூலம் அதிகரிக்கலாம்)

    எண்டோர்பின்: இயற்கையான வலி நிவாரணியாகவும், மனநிலையை மாற்றும் சக்தியாகவும் செயல்படுகின்றன. (சிரிப்பு, சுவாச பயிற்சி, இசை, கார உணவுகள் மூலம் அதிகமாக்கலாம்.)

    ஆக்ஸிடோசின்: இது பிணைப்பு, நம்பிக்கை மற்றும் சமூகத் தொடர்பை ஊக்குவிக்கிறது. (அரவணைப்பு, பிணைப்புக்கு உதவும்)

    இந்த செயல்பாடுகளை பெற்றோர் தங்களது தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்வதால், குழந்தைகளின் `மகிழ்ச்சியான ஹார்மோன்' அளவை அதிகரிக்கலாம். அது குழந்தைகளின் ஒட்டுமொத்த மனநிலையையும், நல்வாழ்வையும் மேம்படுத்தவும் உதவும். இவ்வாறு பெற்றோர் தங்களது வீட்டை குழந்தைகளின் மகிழ்ச்சியான இடமாக மாற்றும்போது, அவர்களது மூளை மேம்படும். திறமைகளுடன் தனித்துவமாக வளர்வார்கள். கல்வி, விளையாட்டு, பரிசுப்போட்டிகள் என எல்லாவற்றிலும் முதலிடம் பிடிப்பார்கள்.

    • ஸ்மார்ட்போன் உபயோகத்தை நேரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள்.
    • பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு கடிவாளம் போடுங்கள்.

    ஸ்மார்ட்போன் உபயோகத்தை நேரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள். ரைம்ஸ், பள்ளிக்கூட பாடங்களைத் தவிர்த்து பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு கடிவாளம் போடுங்கள். நீச்சல், ஸ்கேட்டிங், சிலம்பம், நடனம்... போன்ற பயிற்சிகளில், அவர்களை பிசியாக்குங்கள். குடும்பமாக விளையாடுவது, பூங்கா-கடற்கரைக்கு அழைத்துச் செல்வது... என குடும்பமாக நேரம் செலவழியுங்கள்.

    காமன் சென்ஸ் மீடியா என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில், ஸ்மார்ட்போனுக்கு 50 சதவித இளையோர்களும் (13-18 வயது), 36 சதவித பெரியவர்களும் (18-24 வயது) அடிமையாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், பெற்றோர் குழந்தைகள் முன்பாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதையும், வீடியோக்கள் பார்ப்பதையும், விளையாடுவதையும் குறைத்து கொண்டு, முன்மாதிரியாக நடந்து கொள்வது அவசியம்.

    குறும்புத்தனம் நிறைந்த குழந்தைகளை ஒரே இடத்தில் அமர வைக்க, சாப்பாட்டை எளிதாக ஊட்ட... என குழந்தை வளர்ப்பில் இந்த காலத்து பெற்றோர் கையில் எடுத்திருக்கும் ஆபத்தான விளையாட்டு பொருள்தான், ஸ்மார்ட்போன்.

     வசதியில்லாதவர்கள், வசதியானவர்கள் என்ற எந்தவித பாரபட்சமின்றி, வயது வித்தியாசமின்றி எல்லா குழந்தைகளின் கைகளிலும் ஸ்மார்ட்போன் தவழ்கிறது. `பேபி ரைம்ஸ்' என்ற பெயரில், குழந்தைகளின் மூளைக்குள் ஊடுருவி, `யூ-டியூப் ஷார்ட்ஸ்', `பேஸ்புக் ரீல்ஸ்' பார்க்கும் அளவிற்கு, குழந்தைகளின் மூளையை ஸ்மார்ட்போன்கள் ஆக்கிரமித்துவிட்டன.

    குழந்தைகள், ஸ்மார்ட்போன் பார்ப்பது தவறில்லை, என்றாலும் அது கட்டுப்பாட்டோடு நடைபெற வேண்டும். இல்லையேல், குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.

    பொதுவாக பிறந்தது முதல் 5 வயது வரை யிலான காலகட்டத்தில்தான், மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால், ஸ்மார்ட்போனிற்குள் மூழ்கும்போது, குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபடும். `ஸ்மார்ட்போன்' என்ற வட்டத்திற்குள்ளாகவே, வாழ அவர்களது மூளை பழக்கப்பட்டுவிடும்.

    2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஸ்மார்ட்போன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 3 முதல் 5 வயது குழந்தைகள், கல்விக்காக ஒரு மணிநேரம் மட்டும் பயன்படுத்தலாம். அதுவும், வீடியோக்களை அவர்கள் பார்க்க அனுமதிக்கக்கூடாது. மாறாக ரைம்ஸ் பாடல்களை கேட்க மட்டுமே அனுமதிக்க வேண்டும். 5 முதல் 17 வயது குழந்தைகளுக்கு 2 மணி நேரம் மட்டும், அதுவும் கல்விக்கு உதவும் வகையிலான விஷயங்களை தெரிந்துகொள்ள அனுமதிக்கலாம். இதுதான், கட்டுப்பாடான `ஸ்கிரீனிங்' நேரம். கட்டுப்பாடுகள் மீறப்படும்போது, குழந்தைகள் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

     கடந்த 8 ஆண்டுகளில், நிறைய குழந்தைகள் `ஸ்பீச் தெரபி' எனப்படும், பேச்சுப்பயிற்சிக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்கள். அதற்கு ஸ்மார்ட்போன்கள் மிகமுக்கிய காரணம். ஆம்...!

    8 மாதம் தொடங்கி, 2 வயதிற்குள்தான் குழந்தைகள் பேச கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்கள் பேசுவதை உள்வாங்கி, அதற்கு பதில் பேசி பழகவும், மற்றவர்களின் கேள்விக்கு யோசித்து பதில் கொடுக்கவும் அந்த வயதில்தான் பழகுவார்கள். அந்த காலகட்டத்தில், ஸ்மார்ட் போனுக்குள் குழந்தைகள் மூழ்கும்போது பேச்சுப்பயிற்சி, பதில் பேசும் திறன்... என எல்லாமே தடைப்படும்.

    வழக்கமான குழந்தைகளில் இருந்து வேறுபட்டு, சிறப்பு குழந்தைகளை போல செயல்பட ஆரம்பிப்பார்கள். அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல், பதில் பேச தெரியாமல் தவிப்பார்கள்.

    அதேபோல, `காக்னெட்டிவ் டெவலெப்மெண்ட்' எனப்படும் அறிவாற்றல் வளர்ச்சியும் தடைப்பட்டு, குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைந்துவிடும். மேலும் சமூகத்துடன் சேர்ந்து வாழ, தயக்கம் காட்டுவார்கள்.

    ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் பிஞ்சு குழந்தைகளின் கண்களை வெகுவாக பாதிக்கும். கண்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் தீங்கு விளைவிக்கும். நீல ஒளி மூளையின் நினைவக திறனை பாதிப்பதால், குழந்தைகளுக்கு கவனச்சிதறல் உண்டாகும். எதிலும் முழு கவனமின்றி, மிகவும் குழப்பமாகவே காணப்படுவார்கள். இதுமட்டுமல்ல, அவர்களது தூக்கம், உணவு முறை, உடல் பருமன் என பல்வேறு பிரச்சினைகளை ஸ்மார்ட்போன் உண்டாக்கும்.

    • இளம் வயதினர் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
    • 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

    நாளை உடல் பருமன் தினம். இந்தியாவில் 1¼ கோடி இளம் வயதினர் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    உலக அளவில் விஞ்ஞானிகளை கொண்ட `என்.சி.டி.' என்ற அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து உடல் பருமன் குறித்து ஒரு ஆய்வில் ஈடுபட்டன. அதன் முடிவுகள், `லான்செட்' பத்திரிகையில் வெளிவந்துள்ளன.

    கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே உடல் பருமனும், குறைந்த எடை பாதிப்பும் எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை கண்டறிவதே இதன் நோக்கம் ஆகும். 5 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் இளம் வயதினராகவும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர்.

    இந்தியா உள்பட 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இப்பணியில் 1,500 ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். எடை, உயரத்தை பயன்படுத்தி, `பாடி மாஸ் இன்டெக்ஸ்' கணக்கீடு அடிப்படையில், உடல் பருமன் கணக்கிடப்பட்டது.

    அதன்படி, 2022-ம் ஆண்டு உலக அளவில், 15 கோடியே 90 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினரும், 87 கோடியே 90 லட்சம் பெரியவர்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. அதாவது, 100 கோடிக்கு மேற்பட்டோர் உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளனர்.

    1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை இரு மடங்காகவும், ஆண்கள் எண்ணிக்கை சுமார் 3 மடங்காகவும் அதிகரித்துள்ளது. ஆனால், சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்தியாவை பொறுத்தவரை, 2022-ம் ஆண்டில், 1 கோடியே 25 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் உடல் பருமனுடன் இருந்தனர். இவர்களில், 73 லட்சம்பேர் ஆண்கள், 52 லட்சம்பேர் பெண்கள் ஆவர்.

    மேலும், இந்தியாவில் உள்ள பெரியவர்களில் 4 கோடியே 40 லட்சம் பெண்களும், 2 கோடியே 60 லட்சம் ஆண்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

    1990-ம் ஆண்டில், 1.2 சதவீதமாக இருந்த உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 9.8 சதவீதமாகவும், 0.5 சதவீதமாக இருந்த ஆண்கள் எண்ணிக்கை 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே குறைந்த எடை பாதிப்பு கொண்ட பெரியவர்கள் எண்ணிக்கை பாதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் மஜித் எஸ்சாடி கூறியதாவது:-

    உடல் பருமனும், குறைந்த எடையும் ஊட்டச்சத்து குறைபாட்டின் இரு வடிவங்கள் ஆகும். இரண்டுமே மக்களின் ஆரோக்கியத்துக்கு கெடுதலானவை. இந்த ஆய்வு, கடந்த 33 ஆண்டுகளில் இருவகையான ஊட்டச்சத்து குறைபாடு எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பதை காட்டுகிறது.

    கடந்த 1990-ம் ஆண்டில், பெரியவர்கள்தான் உடல் பருமனுடன் இருந்தனர். ஆனால், இப்போது, பள்ளி செல்லும் சிறுவர்களும், இளம்வயதினரும் உடல் பருமன் கொண்டவர்களாக மாறியிருப்பது கவலை அளிக்கிறது.

    இருப்பினும், ஏழை நாடுகளில் இன்னும் கோடிக்கணக்கானோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவகையான ஊட்டச்சத்து குறைபாட்டையும் கையாள ஆரோக்கியமான, ஊட்டச்சத்து கொண்ட உணவு தாராளமாக கிடைக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரியசஸ் கூறியதாவது:-

    குழந்தை பருவம் முதலே உடல் பருமனை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு உணர்த்துகிறது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போதிய அக்கறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை தடுக்க வேண்டும். இதில், அரசுகளுக்கு மட்டுமின்றி தனியார் துறையினருக்கும் பொறுப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் மூன்று மாதங்கள், குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமானவை.
    • இறப்பு விகிதத்தை குறைப்பது இந்த நாளின் நோக்கமாகும்.

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7-ந் தேதி பச்சிளம் குழந்தைகள் (சிசு) பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்பதும், அவர்களின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதும் இந்த நாளின் நோக்கமாகும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதன்முதலில் ஐரோப்பா தொடங்கியது.

    பிரசவத்திற்குப் பிறகு, போதுமான கவனிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாததால் வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். பிறந்த முதல் மூன்று மாதங்கள், குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. இந்த நேரத்தில், அவர்கள் தங்கள் பெற்றோருடன் நல்ல தொடர்பை உருவாக்குகிறார்கள். மேலும் குழந்தையின் செவிப்புலன், பார்வை, கை, கால்கள் மற்றும் தகவல் தொடர்பு மேம்படும் என்பதால் குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த மாதங்கள் மிகவும் முக்கியமானது.

    ஐக்கிய நாடுகள் சபையின் பச்சிளம் குழந்தை இறப்பு அறிக்கையின்படி, 2018-ம் ஆண்டு இந்தியாவில் 7 லட்சத்து 21 ஆயிரம், குழந்தைகள் இறந்ததாக கண்டறிந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, 2019-ம் ஆண்டு உலகளவில் பிறந்த முதல் மாதத்தில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் உலகளவில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக, தற்போது குழந்தை இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 100-ல்இருந்து ௧௦ ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டு சிசு பாதுகாப்பு தினத்தின் கருப்பொருளாக `ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சிக்கும் உரிமையை உறுதி செய்தல்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நாட்டின் எதிர் காலம். அவர்களுக்கு பிரகாசமான எதிர் காலத்தை உருவாக்குவது ஒவ்வொருவருடைய கடமை.

    • ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
    • குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

    ஃப்ளூவின் அதிகபட்ச பாதிப்பை உண்டு செய்யும் ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தற்போது குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இவை சற்று தீவிரமான பாதிப்பையே உண்டு செய்கின்றன. இந்த காய்ச்சலை தவிர்க்க எதிர்கொள்ள என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

    இன்ஃப்ளூயன்சா வைரஸ் என்பது ஒருவகை வைரஸ். நார்மலாக வரக்கூடிய சளி வகை போன்ற வைரஸ் தான் இது. எனினும் இதன் வீரியம் சற்று கூடுதலாக இருக்கும். இந்த ஹெச்3 என்2-ன் தாக்கம் இருந்தால் அதன் அறிகுறிகள் சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், உடல் வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, நீர் கோர்த்தல் இதனோடு அதிக காய்ச்சலும் இருக்கும்.

    பொதுவாகவே வைரஸ் காய்ச்சல் 3- 4 நாட்கள் வரை இருக்கலாம். ஆனால் இந்த ஹெச்3 என்2 வைரஸ் ஒரு வாரம் முதல் ௧௨ நாட்கள் வரை கூட ஆகலாம். அதோடு சில நாட்கள் வறட்டு இருமல் நீடிக்கவும் வாய்ப்புண்டு. அதோடு தற்போது மழையும், வெயிலும் பருநிலை மாறுவதால் இதன் வீரியம் அதிகரிக்கும். இதனுடன் மிதமான மழையும் சேர்ந்தால் அது பரவலை அதிகரிக்கச் செய்யும்.

    இதை எதிர்கொள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவியல் மற்றும் வாழ்வியல் முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    ஆரோக்கியமான உணவுகளில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் தயாரிக்கும் உணவுகளை மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். சாலையோர கடைகளில் இருக்கும் உணவுகள், சுகாதாரமற்ற உணவுகளை தவிர்ப்பதே பாதுகாப்பானது. உதாரணத்துக்கு சாலையோரம் கம்பங்கூழ், கேப்பை கூழ், திறந்த நிலையில் இருக்கும் வெங்காயம், மோர் மிளகாய், வத்தல் போன்றவை வெயிலுக்கு இதமாக இருக்கும் என்றாலும் இவை நீண்ட நேரம் திறந்த நிலையில் இருப்பதால் இவற்றில் இருக்கும் கிருமித்தொற்றுகள் உடலில் பாதிப்பை உண்டு செய்யலாம்.

    வெயிலுக்கு ஏற்றது என்றாலும் கபத்தை உண்டு செய்யும் கொய்யாப்பழம், பால் சேர்ந்த பொருள்கள் குறைப்பது நல்லது. இதனோடு இரவு நேரங்களில் போதுமான தூக்கம் அவசியம் ஆகும்.

    குழந்தைகளுக்கு ஹெச்3 என்2 மட்டும் அல்லாமல் மற்ற தொற்றுகளையும் எதிர்க்கும் அளவுக்கு உடல் பலமாக இருக்க தினமும் பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு சளி தொற்று இருக்கும் போது, காய்ச்சல் இருக்கும்போது நீங்கள் தொடர்ந்து 10 நாட்கள் இந்த பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு தொற்று நேராமல் தடுக்க உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதை கொடுக்கலாம்.

    பூண்டு- ஒரு பல் எடுத்து தட்டிகொள்ளவும். அதில் பால் மற்றும் தண்ணீர் சம அளவு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பூண்டு வேகும் வரை வைத்து பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து இனிப்பு தேவை என்றால் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுக்கலாம். தொற்று வந்த பிறகு தொடர்ந்து 10 நாட்கள் வரை இதை கொடுக்கலாம்.

    நுரையீரல் தொற்று பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நுரையீரல் தொடர்பான கோளாறுகள், உடல் பருமன் கொண்டவர்களுக்கு தொற்று நேரும் அபாயம் அதிகமாக இருக்கலாம். இவர்கள் இன்னும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் நிலவேம்பு கஷாயமும், கபசுர குடிநீரும் எடுத்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நேர்ந்தாலும் அவை தீவிரமாகாமல் தடுக்க முடியும்.

    குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது. காற்றில் கூட இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு அதிகம் என்பதால் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். கிருமிநாசினிகள் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் தொற்று வராமல் தடுக்க முடியும்.

    கூட்டமான இடங்கள் என்றில்லாமல் எப்போதும் ஒரு சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த ஹெச்3என்2 தொற்று மட்டுமல்ல வேறு எந்த வகை தொற்றையும் தடுக்கலாம்.

    • புதுமண தம்பதிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் கே.டி.சி. நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
    • மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் இசக்கி முத்தையா குழந்தைகள் வளர்ப்பு பற்றி எடுத்துக் கூறினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் புதுமண தம்பதிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் பாளையை அடுத்த கீழநத்தம் ஊராட்சி கே.டி.சி. நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அனுராதா ரவி முருகன் குத்து விளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் இந்திரா முன்னிலை வகித்தார்.

    கருத்தரங்கில் மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் இசக்கி முத்தையா கலந்துகொண்டு குழந்தைகள் வளர்ப்பு பற்றி புதுமண தம்பதிகளிடம் எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் பாளை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெனிபா, வட்டார சுகாதார ஆய்வாளர் முத்துசாமி, அங்கன்வாடி சீதாலட்சுமி, மக்கள் நல பணியாளர் மாரியம்மாள், பணி தள பொறுப்பாளர் சோபனா, வார்டு உறுப்பினர் சுரேஷ் மற்றும் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கருத்தரங்கில் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும்.
    ‘ஒன்றை நீ முடிவு செய்யகூடாது. ஏனென்றால், உனக்கு வயசு போதாது அல்லது பெரியவர்களுக்கு எல்லாம் தெரியும்’ அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி கேட்ககூடிய வார்த்தைகள்தான் இவை. உண்மையைச் சொல்வது என்றால் இவை போன்றவற்றைக் கேட்பது இனிமையான ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை. உதாரணத்துக்கு, உங்கள் குழந்தை தவறு இழைத்தல் என்பது ஒன்றும் மோசமான செயல் அல்ல.

    எந்த ஒரு குழந்தையின் கருத்து அடிக்கடி நிராகரிக்கப்படுகிறதோ அக்குழந்தை ஒருவிதமான பாதுகாப்பு அற்ற சூழலிலே வளரக்கூடும். உண்மையிலேயே, இது சரியான உணர்வைத் தோற்றுவிக்கும். உங்களுக்காக வேறொருவர் எல்லா முடிவுகளையும் மேற்கொள்ளும்போது, வாழ்க்கையிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்களால் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?

    உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும்.

    மகிழ்ச்சியாக வைக்க மறுத்தல்குழந்தைப் பருவத்தின் இனிமையான நினைவுகள் மிகவும் மதிக்க தகுந்தவையாகும். அவற்றை யாராலும் நம்மிடம் இருந்து ஒருபோதும் எளிதாகப் பிரித்துவிட முடியாது.

    இன்னும் ஒருபடி மேலாக, சின்னசின்ன விடுமுறை காலங்கள் பின்னாளில், பெரிய நிறைவேறுதல்களாக உருமாற்றம் பெறுகின்றன. ஒரு குழந்தை ஆரோக்கியமான சூழலில் வளரும்பட்சத்தில், எண்ணற்ற புதிய அனுபவங்களைப் பெறுகின்றது. இது அவர்கள் விரைவாக வளர்வதைக் காட்டுகின்றது. மகிழ்ச்சி நிறைந்த குழந்தை எளிதாக வாலிபப் பருவத்தினை ஏற்றுக்கொள்வதோடு, புதிய வாழ்க்கையையும் தொடங்குகின்றது.



    உண்மை என்னவென்றால் பெற்றோராக மற்றவர்கள் கூறுவதைவிட எது குழந்தைக்கு நல்லது? எது கெட்டது? என்பது உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். மற்றவர்கள் கூறுகிற அறிவுரையை நீங்கள் கேட்கலாமே தவிர அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற அர்த்தம் இல்லை.

    தனிமைப்படுத்துதல் நமக்கு முக்கியத்துவம் இல்லாமல் தெரிகிற விஷயங்கள், குழந்தைகளுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத் தெரியலாம். அனைத்து மக்களுக்கும், குறிப்பாக, மழலைகளுக்குச் சிலராவது, அவர்களிடம் விழாக்காலங்களில் அன்பாக அரவணைப்பாக இருக்க வேண்டும் என்பது தேவையாக உள்ளது.

    உங்கள் குழந்தையின் பிறந்த நாள் விழாவில், பங்கேற்காமல் இருக்க சரியான காரணம் இருந்தாலும், அவ்வாறு நடக்க முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால், எதிர்காலத்தில் எவ்வளவு முக்கியமான தருணத்தை இழந்து விட்டீர்கள் என்பதை உணர்ந்து, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை உண்டாகும்.

    குழந்தைகளுடன் சேர்ந்து விழாக்காலத்தில் வீட்டினை அலங்கரிக்கவும், சினிமாவிற்குப் போகவும், பாட்டியுடன் ஒன்றாக இருக்கவும் நேஇரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். ஏனென்றால் வாழ்வில் இவையெல்லாம் முக்கிய மணித்துளிகள். மழலைகள் வளரும்பட்சத்தில், இவற்றை நீங்கள் இழக்க நேரிடும்.

    குழந்தைகளுக்கு கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப்பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
    நாம் நமது குழந்தைகளை மருத்துவராக்க வேண்டும் என்றும், பொறியாளர் ஆக்க வேண்டும் என்றும், கலெக்டர் ஆக்க வேண்டும் என்றும் கடினமாக உழைக்கச் சொல்கிறோம். ஆனால் நாம் நமது பிள்ளைகளுக்கு நிதியைக் கையாள்வது குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் இதுவரை சொல்லிக் கொடுத்தது இல்லை. பொருளை ஈட்ட வேண்டும் எனில் நல்லதொரு பணியையோ, தொழிலையோ தேட வேண்டும்.

    நல்ல ஒரு பணியைப் பெறுவதற்கு நமது தகுதியை வளர்க்கும் கல்வி வேண்டும். ஆனால் செல்வம் என்ற ஒன்றை நோக்கித்தான் நாம் அனைவருமே இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் பணத்தின் அருமை தெரிவதில்லை. பணத்தைச் செலவழிக்கும் விதமும் தெரியவில்லை. கடையில் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கிய பின்னர், தாங்கள் கொடுத்த பணத்தின் மீதம் எவ்வளவு பெறப்பட்டுள்ளது என்பதை எத்தனை நபர்கள் கணக்கிட்டுச் சரிபார்க்கின்றனர்.

    குழந்தைகளுக்கு கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப்பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதில்லை. எந்தவொரு செலவு செய்வதற்கு முன்னும் அந்த செலவு அவசியம்தானா என்பதைப் பகுத்தாய்வதற்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.



    அந்தச் செலவு செய்வதற்குப் பதிலாக அதற்கான பலனை வேறு குறைவான செலவுகளில் பெறுவதற்குண்டான வழிகளைக் கற்றுத் தரவேண்டும். அவர்களுக்குச் சிந்திக்கும் தன்மையையும், மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கும் தன்மையையும் பயிற்றுவிக்க வேண்டும்.

    தேவையற்ற செலவுகளை எந்நாளும் ஊக்கப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் பணத்தைக் கொடுத்து பழக்கப்படுத்துவதை விட, ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலவுக்காக வழங்கினால், அது அவர்களிடையே ஒரு திட்டமிடுதலை ஏற்படுத்தும். மேலும், செய்கின்ற செலவுகளை எழுதி வைக்கச் சொல்லுங்கள், அது மட்டுமல்ல அதனை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்.

    அதன் மூலம் கூடுதலாகச் செய்த செலவுகளும், அனாவசியமாகச் செய்த செலவுகளும் தெரிய வரும். அதனைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும். இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு சிறப்பான, திட்டமிட்ட வாழ்க்கை வாழ அது வழி வகுக்கும். 
    ×