என் மலர்tooltip icon

    கடலூர்

    • பலத்த காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • அரசு பேருந்து ஓட்டுநர் தாஹா அலியை கைது செய்த ராமநத்தம் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கியதாக ஓட்டுநர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

    அரசு பேருந்து ஓட்டுநர் தாஹா அலியை கைது செய்த ராமநத்தம் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    பேருந்தை இயக்குவதற்கு முன்பாக உரிய முறையில் சோதனை செய்யத் தவறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஜனவரி மாதம் 1-ந்தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது.
    • 2-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு இன்று காலை மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து நாளை சந்திர பிரபை வாகன வீதி உலா, நாளைமறுநாள் தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 28-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, 29-ந் தேதி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 30-ந் தேதி யானை வாகன வீதி உலாவும், 31-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது.

    அதனைத்தொடர்ந்து ஜனவரி மாதம் 1-ந்தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 2-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 3-ந்தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 4-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 5-ந் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது. 

    • அரசு பேருந்தின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து 2 கார்கள் மீது மோதியது.
    • 2 கார்களில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூரில் அரசு பேருந்து 2 கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து மோதியதில் 2 கார்களில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்தின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து 2 கார்கள் மீது மோதியது.

    கட்டுப்பாட்டை இழந்த அரசு விரைவு பேருந்து சாலை தடுப்பை தாண்டி எதிர்திசையில் வந்த 2 கார்கள் மீது மோதியது.

    விபத்தை தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை அதிகன மழைக்கான ரெட் அலெர்ட்.
    • தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாக தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்வு மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • டிட்வா’ புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் உத்தரவு.

    இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாக தமிழகத்தில் இன்று நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.

    மேலும், தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    அரக்கோணத்தில் இருந்து 34 பேர் கொண்ட குழுவினர் வருகை தந்துள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் குழுவினர் 60 பேர் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 127 பேரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 'டிட்வா' புயல் காரணமாக மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். 

    • சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.
    • ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும்.

    இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாடு மற்றும் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.

    இந்த ஏரி மூலம் 34 பாசன மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 756 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இது தவிர சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக வீராணம் ஏரிக்கு செங்கால், கருவாட்டு ஓடைகள் வழியாக வினாடிக்கு 1,365 கன அடி நீர் வருகிறது.

    இதனால் ஏரியின் நீர் மட்டம் நேற்றைய நிலவரப்படி 45.50 அடியாக இருந்தது. பாதுகாப்பு கருதி இதற்கு மேல் நீர் தேக்க முடியாது என்பதாலும், மழைக்காலம் என்பதாலும் ஏரியில் இருந்து உபரி நீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டு வழியாக வினாடிக்கு 1,570 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.

    சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • 20 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
    • போலீசாரை பார்த்ததும் நவீன் தப்பி ஓட முயன்றார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம், வல்லம் படுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மோகன் மகன் நவீன் (வயது24) மீது 20 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து நவீன் தலைமறைவாகி விட்டார். அவரை அண்ணாமலை நகர் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கஞ்சா வியாபாரி நவீன் அண்ணாமலை நகர் மாரியப்பா நகர் பகுதியில் உள்ள முட்புதருக்குள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் இன்று காலை 6 மணிக்கு அங்கு சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் நவீன் தப்பி ஓட முயன்றார். அவரை போலீஸ்காரர்கள் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களை நவீன் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினார்.

    அதனையும் மீறி போலீஸ்காரர் அய்யப்பன், கஞ்சா வியாபாரி நவீனை பிடிக்க முயன்றார். அவரை நவீன் கத்தியால் வெட்டினார். இதில் அய்யப்பன் காயம் அடைந்தார். மேலும் நவீன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் பல முறை எச்சரித்தார்.

    ஆனாலும் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி நவீன் தப்பி ஓட முயன்றார். உடனே இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் நவீனை சுட்டார். இதில் அவரது கால் மூட்டியில் குண்டு பாய்ந்தது.

    உடனே நவீன் கீழே சரிந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் உடலில் ஏற்பட்ட குண்டு காயத்துக்கு சிகிச்சை அளிக்க அவரை சிதம்பரம் அண்ணாமலை நகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கஞ்சா வியாபாரி கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் அய்யப்பனும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கஞ்சா வியாபாரி போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையில் கஞ்சா வைத்திருந்ததாக சிதம்பரம் கோவிந்தசாமி நகரை சேர்ந்த கவுதம்(27), வல்லத்துறை பகுதியை சேர்ந்த அருள்(30) ஆகியோரை அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • சென்னையிலும் லேசான மழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும், சென்னையிலும் லேசான மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்றுநாள் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார். மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • அடிக்கடி வலிப்பு வரும் என்பதால் அவர் தனது அக்காள் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதுப்பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணம் அவரது தாய்மாமன் என்பது தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 18 வயது இளம் பெண்ணுக்கும், வைலாமுர் கிராமத்தை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 4-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    இந்து நிலையில் புதுப்பெண் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதை அடுத்து அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கணவர் அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதை செய்த டாக்டர்கள், புதுப்பெண் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர், தனது மனைவியின் கர்ப்பத்துக்கு காரணமானவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதுப்பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணம் அவரது தாய்மாமன் என்பது தெரியவந்தது.

    அதாவது புதுப்பெண்ணின் தாய் மாமன் லிங்கமுத்து(32) என்பவருக்கு அடிக்கடி வலிப்பு வரும் என்பதால் அவர் தனது அக்காள் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது அவர் தனது அக்காள் மகளான புதுப்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்ததும், இதனால் அவர் கர்ப்பம் அடைந்ததும் தொியவந்தது. இதையடுத்து லிங்கமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    லிங்கமுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நெய்வேலி பகுதியில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பொய் பிரசாரம் செய்கின்றனர்.
    • ராகுல் தான் இந்தியாவை வழி நடத்துவார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-

    பா.ஜ.க. ராட்சத பலத்துடன் உள்ளது. நம்மிடம் கொள்கை பலம் உள்ளது. காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களில் மு.க. ஸ்டாலின் மட்டுமே கொள்கையுடன் சிறப்பாக செயல்படுகிறார்.

    மு.க. ஸ்டாலின் நினைத்திருந்தால் பா.ஜ.க.வை அரவணைத்து செல்லலாம். ஆனால் அதை தவித்து ராகுலுக்கு துணையாக நிற்கிறார்.

    பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பொய் பிரசாரம் செய்கின்றனர். தவறான கருத்துக்களை திரும்ப திரும்ப சொல்லி மக்கள் மனதில் விதைக்கின்றனர். எதிர்மறை கருத்துகளுக்கு அந்த இடத்திலேயே பதிலடி தர வேண்டும்.

    நாம் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். ஆட்சியில் பங்கு பெற வேண்டும். இது கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பானவர். அதற்காக கூட்டணி என்ற பெயரில் எல்லாவற்றையும் இழந்து விட முடியாது. இந்த கூட்டணியை விரும்புகிறேன்.

    அடுத்த முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் வர வேண்டும். அது போல் நாமும் வளர வேண்டும். ராகுல் வரலாறு என்ன. அவரை போல அரசியல் வரலாறு கொண்ட நபர்கள் யாராவது உள்ளனரா? கொள்கை தான் அவரது கோட்பாடு. ராகுல் தான் இந்தியாவை வழி நடத்துவார். அதுவரை காங்கிரஸ் கட்சியினருக்கு தூக்கம் வராது.

    தி.மு.க. இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெற முடியாது என பா.ஜ.க.வினர் கூறுவது அவர்கள் எங்கள் மீது எவ்வளவு கோபத்தில் இருக்கின்றனர் என தெரிகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வந்தால் அவர்களுக்கு ஒரு ஓட்டு கூட விழாது என்று கூறலாம். நாங்கள் கொள்கை கூட்டணி.

    கொள்கைக்காக உழைத்து வருகிறோம். கடந்த தேர்தல்களில் பா.ஜ.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று நான் கூறினேன்.

    அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் கொஞ்சம் ஓட்டு விழும். ஆனாலும் அவர்கள் வெற்றி பெற முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த நிலையில் இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. சென்னையில் இருந்து 990 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் 27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பெயர் வரிசைப்படி, 'மோன்தா' என பெயரிடப்பட உள்ளது.

    வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் மசிலிப்பட்டணம்-விசாகப்பட்டினம் இடையே நாளை மறுநாள் மோன்தா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும் நாளை மறுநாள் மற்றும் 28-ந்தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் தூரப் புயல் எச்சரிக்கையான ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 6 நாட்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகள் கடற்கரை ஓரமாகவும் கடலூர் துறைமுகத்திலும் அணிவகுத்து நிற்கின்றன.

    • அதிகாலை நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
    • இந்த கோவில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் ஆகும்.

    திட்டக்குடி:

    தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு கோவில் கோபுரம் இடிந்து விழுந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பொயனபாடியில் பழமை வாய்ந்த செல்லியம்மன் ஆண்டவர் கோவில் உள்ளது.

    வேப்பூர் மற்றும் திட்டக்குடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இக்கோவில் கோபுரம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த கோவில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் ஆகும். ஆகையால் தமிழக அரசு இந்த கோவிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அரசுக்கும், அறநிலைத்துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவில் கோபுரம் இடிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ×