என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள்"

    • அமாவாசை, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
    • பால்குடம் எடுத்து கிரிவீதி, சன்னதி வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பழனி அடிவாரம் கிரி வீதியில் உள்ள புலிப்பாணி சித்தர் ஆசிரமத்துக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    இங்கு அமாவாசை, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் புலிப்பாணி ஆசிரமத்தில் நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்றனர். 25 ஆண்கள், 25 பெண்கள் என அவர்கள் அனைவரும் தமிழ் பாரம்பரியப்படி வேட்டி சட்டை அணிந்து புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் நடந்த யாகத்தில் பங்கேற்றனர்.

    தொடர்ந்து பால்குடம் எடுத்து கிரிவீதி, சன்னதி வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அதன் பின் திருஆவினன்குடி கோவில், குழந்தை வேலாயுத சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். அதன் பின் பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டத்தில் கலந்து கொண்டு அக்னி சட்டி ஏந்தி ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.

    இதனை உள்ளூர் பக்தர்கள் மிகுந்த வியப்புடன் பார்த்தனர். தொடர்ந்து இக்குழுவினர் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபாடு நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

    • புத்தகத்தில் கையெழுத்திட்ட பிறகு தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    • திருப்பதியில் நேற்று 74,902 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    தரிசன வரிசையில் இனி கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தப்பட உள்ளது. அமிர்தசரஸ் தங்ககோவிலில் உள்ளது போல் திருப்பதி கோவிலுக்கு தனி சட்டம் அமல்படுத்தப்பட உள்ளன.

    அதன்படி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் ஸ்கேனிங் மையம் அருகே உள்ள புத்தகத்தில் கையெழுத்திட்ட பிறகு தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இதேபோல் இந்து மதத்தை சாராத மாற்று மதத்தினர்கள் தரிசனம் செய்ய விரும்பினால் கட்டாயம் அவர்கள் இந்து கடவுளை நம்புகிறோம். இந்து கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் பொட்டு வைத்துக் கொள்கிறோம் என உறுதிமொழி கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    அதே போல் தரிசனத்திற்கு செல்லும் மாற்று மதத்தினர் கட்டாயம் நெற்றியில் நாமம் போட்ட பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 74,902 பேர் தரிசனம் செய்தனர். 22,869 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்து வருகின்றனர்.
    • சிகர நிகழ்ச்சியான மகா சிவராத்திரி தேரோட்டம் நாளை நடக்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    12 ஜோதி லிங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    சிவராத்திரியான இன்று கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு ராமநாத சுவாமிக்கும்-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றன.

     

    கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில், புனித நீராடிவிட்டு கடற்கரை மண்ணில் சிவலிங்கம் போன்று வடிவமைத்து வழிபட்டு வருகின்றனர்.

    பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள சாமி மற்றும் அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வட மாநில பக்தர்கள் காசியில் இருந்து கொண்டு வந்த கங்கை நீரை அபிஷேகத்திற்கு வழங்குவதற்காக தலையில் சுமந்து கொண்டு வந்தனர். இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்து வருகின்றனர்.

    சிகர நிகழ்ச்சியான மகா சிவராத்திரி தேரோட்டம் நாளை நடக்கிறது. மகாசிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் இன்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதனால் கோவில் நடை இரவு முழுவதும் திறந்திருக்கும். 

    • நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிய படி சபரிமலை வந்தனர்.
    • சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி மாசி மாத பூஜைகளுக்காக கடந்த 12-ந் தேதி நடை திறக்கப்பட்டது முதல் சபரிமலையில் பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசனம் பெற்று வருகின்றனர்.

    13-ந்தேதி பொதுவேலை நிறுத்தம் காரணமாக கேரளாவில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்ட போதிலும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிய படி சபரிமலை வந்தனர்.

    நேற்று சபரிமலையில் தந்திரி பிரம்மஸ்ரீ கண்டார் மகேஷ் மோகன் தலைமையில் படி பூஜையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் பெற்றனர். சபரிமலை வந்த பக்தர்களை பாதுகாப்பு போலீசார் ஒழுங்குபடுத்தி தரிசனம் செய்ய அனுப்பினர். சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். வருகிற 17-ந் தேதி வரை நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    • கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அக்னி சட்டி, அழகு குத்துதல், அங்கப் பிரதட்சணம், ஆயிரம் கண் பானை, கரும்புத் தொட்டில், தேர் இழுத்தல், மொட்டை போடுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி, தை, பங்குனி, சித்திரை உள்ளிட்ட மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும். இந்த காலகட்டங்களில் அதிக அளவிலான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்வர்.

    இந்த நிலையில் இன்று தை கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், புளியங்குடி கரிவலம்வந்தநல்லூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆற்றுப்படுகையில் பக்தர்கள் கூட்டம் கடல்போல் காட்சி அளித்தது.

    கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று தை கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குழந்தைகளுக்கு பாலூட்டும் இடவசதி, குடிநீர் வசதி, தங்குமிட வசதி, கழிப்பிட வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல முன்னேற்பாட்டு வசதிகளை செய்திருந்தன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக சாத்தூர் டி.எஸ்.பி. குருசாமி தலைமையில் நூற்றுக்க ணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

    • பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.
    • கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    தை மாதம் பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிய நாளில் முருகன் கோவில்களில் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான், உமா தேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பார்கள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.

    சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோவில், கந்தகோட்டம், குன்றத்தூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் வடபழனி முருகன்கோவில் வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    இதேபோல் கந்த கோட்டம், குன்றத்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் ஆங்காங்கே இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    • மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதத்தில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
    • கோர்ட்டு உத்தரவு காரணமாக தற்போது நாளை முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வடவள்ளி:

    கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.

    இதன் அருகே 7-வது மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இது தென் கைலாயம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த மலைக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாகவும், மலைமீதும் நடந்து செல்ல வேண்டும் என்பதால், கால நிலை காரணமாக குளிர்காலத்தில் செல்ல அனுமதி அளிப்பது இல்லை.

    மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதத்தில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவு காரணமாக தற்போது நாளை முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து வெளியூர்களில் இருந்தும் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கோவை மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் கூறியதாவது:-

    வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் பாதுகாப்புடன் செல்ல வேண்டும். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் செல்லக்கூடாது.

    பக்தர்களின் வசதிக்காக வெள்ளியங்கிரி மலையடி வாரத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருக்கும். மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உடல் தகுதியுடன் இருக்கும் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

    3,6 மற்றும் 7-வது மலையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளது. அதில் மருத்துவ ஊழியர்களுடன் வனத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படுவார்கள். வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் அடிவாரத்தில் தயாராக இருப்பார்கள். அத்துடன் 8 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவினர் மலைமீது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மலைமீது செல்லும் பக்தர்கள் யாரும் போதைப் பொருட்கள் கண்டிப்பாக உபயோகிக்கக்கூடாது. அதுபோன்று பிளாஸ்டிக் பொருட்களை எக்காரணத்தை கொண்டும் எடுத்து செல்லக்கூடாது.

    இதனை அடிவாரத்தில் இருந்து கண்காணித்து, பிஸ்கெட் போன்ற பொருட்கள் கொண்டு வரும் போது அதில் உள்ள பிளாஸ்டிக் கவர்களை அப்புறப்படுத்தி காகிதத்தில் வைத்து கொடுக்கப்படும்.

    கடந்த ஆண்டில் மலையேறிய 9 பேர் உயிரிழந்தனர். எனவே தற்போது உயிரிழப்பை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. எனவே மலையேறும் பக்தர்கள் மிகவும் பாதுகாப்புடன் சென்று திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    • தைப்பூச விழாவில் கலந்து கொள்ள தற்போது பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர்.
    • ஜெர்மன் நாட்டில் இருந்து பக்தர்கள் குழுவினர் தைப்பூச விழாவை காண வடலூருக்கு வந்தனர்.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் கடந்த 1867-ம் ஆண்டு சத்ய தர்மசாலையை நிறுவி அணையா அடுப்பை ஏற்றி வைத்தார்.

    இந்த அணையா அடுப்பு இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது. இந்த அணையா அடுப்பு மூலம் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு இரவு பகலாக தொடர்ந்து அன்னதானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி வடலூரில் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

    இந்த தைப்பூச விழாவில் கலந்து கொள்ள தற்போது பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர்.

    அந்த வகையில் ஜெர்மன் நாட்டில் இருந்து பக்தர்கள் குழுவினர் தைப்பூச விழாவை காண வடலூருக்கு வந்தனர்.

    வள்ளலார் எடுத்துரைத்த ஜீவகாருண்ய ஒழுக்கம் என்று கூறப்படும் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்ற உணர்வால் அன்னதானம் வழங்குவதற்காக அரிசி மூட்டைகளை ஜெர்மன் நாட்டு பயணிகள் தங்கள் தோளில் சுமந்து வந்து கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்கள்.

    வள்ளலார் அன்று அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்று கூறியது கடல் கடந்து ஜெர்மன் நாட்டு பயணிகள் அரிசி மூட்டைகளை தங்கள் தோளில் சுமந்து வந்து வழங்கிய சம்பவம் வள்ளலார் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • இவ்விரு மரங்களும் ஒன்றாக வளர்வதை பார்ப்பது அரிதாகும்.
    • மரங்களுக்கு திருமணம் செய்து வைப்பது விஷேசமாகும்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி தங்கம் நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் அரச மரமும், வேப்ப மரமும் அடுத்தடுத்து, ஒன்றாக வளர்ந்துள்ளது.

    கடந்த 20 ஆண்டு காலமாக இந்த மரங்கள் உள்ளன. இந்நிலையில் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும், அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க பக்தர்கள் முடிவு செய்தனர்.

    இதற்கு முகூர்த்த நாள் குறிக்கப்பட்டு நேற்று அரச, வேப்ப மரங்களுக்கு திருமண வைபோகம் நடந்தது. இதையொட்டி 2 மரங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

    அதனைதொடர்ந்து அரச மரம் ஆணாகவும், வேப்ப மரம் பெண்ணாகவும் கருதப்பட்டு, 2 மரங்களுக்கும் பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க வேம்பு மரத்திற்கு தாலி அணிவிக்கப்பட்டது. அதன் பின் விஷேச தீபாராதனைகளும் நடத்தப்பட்டது.

    இந்த விநோத வழிபாட்டில் மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதுபற்றி பக்தர்கள் கூறுகையில், 'அரச மரம் ஆண் மரம் ஆகும். அது போல வேப்ப மரம் பெண் மரமாகும்.

    இவ்விரு மரங்களும் ஒன்றாக வளர்வதை பார்ப்பது அரிதாகும். ஆனால் மூலைக்கரைப்பட்டி செல்வவிநாயகர் கோவிலில் 2 மரங்களும் ஒன்றாகவே வளர்ந்து வருவது அதிசயமாகும்.

    இவ்வாறு வளரும் மரங்களில் தெய்வாம்சம் பொருந்தி இருக்கும். இறைவன் மரங்களில் குடியிருந்து வேண்டிய வரங்களை அருளுவார் என்பது எங்களது நம்பிக்கை.

    அதிலும் மரங்களுக்கு திருமணம் செய்து வைப்பது விஷேசமாகும். இதனை காண்போர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கும். திருமண காட்சியை கண்டு வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்றனர்.

    • திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு டீ, காபி, பால், குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் நேற்று முதல் அதிகரித்து காணப்பட்டது. 3 நாட்கள் தொடர் விடுமுறை மற்றும் நாளை நடைபெறும் மினி பிரமோற்சவம் எனும் ரத சப்தமியில் தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    இதனால் பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பப்படும் காத்திருப்பு அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது.

    காத்திருப்பு அறைகளை தாண்டி பக்தர்கள் தரிசனத்திற்காக 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை வரிசையில் காத்திருக்கின்றனர்.

    திருப்பதியில் கடும் குளிர் வீசுவதால் வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் குளிரில் நடுங்கியபடி அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு டீ, காபி, பால், குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 69,726 பேர் தரிசனம் செய்தனர். 27,832 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.12 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • திருப்பதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொங்கல் பண்டிகை, சங்கராந்தி தொடர் விடுமுறையால் கடந்த சில நாட்களாக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.

    அதிக அளவில் பக்தர்கள் வாகனங்களில் வருவதால் அலிபிரி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றன. நேரடி இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகள் நிரம்பியது. அதற்கு வெளியே 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

    திருப்பதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 78,733 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,146 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான டீ , காபி, பால், உணவு, தண்ணீர் ஆகியவை தன்னார்வல்கள் மூலம் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

    • நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்தபடியே இருந்ததால் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • பம்பை கணபதி கோவிலை தாண்டி செல்வதற்கே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்து, கடந்தமாதம் 31-ந்தேதி மகரவிளக்கு பூஜை தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

    மகரவிளக்கு பூஜை காலத்துக்கான சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவு அனைத்து நாட்களுக்கும் முடிந்துவிட்டதால், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் மாலையணிந்து விரதமிருக்கும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள்.

    அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் போலீசாரும், கேரள தேவசம்போர்டும் இருப்பதால் தினமும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. இந்தநிலையில் இன்று காலையும் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்தது.

    அதிகாலை 3மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்தே, பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் மட்டுமின்றி, மலைப்பாதையான அப்பாச்சிமேடு, சபரிபீடம், மரக்கூட்டம், சரங்குத்தி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரையிலான 3 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 978 பக்தர்கள் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அவர்களில் ஸ்பாட் புக்கிங் மூலமாக 2,122 பக்தர்கள் வந்துள்ளனர்.

    நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்தபடியே இருந்ததால் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பம்பை கணபதி கோவிலை தாண்டி செல்வதற்கே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

    அதன்பிறகு மலைப் பாதைகளில் ஏறி சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், சபரிமலைக்கு பக்தர்கள் அதிகளவில் வந்தபடி இருக்கின்றனர்.

    ×