என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rameshwaram temple"

    • நடிகர் பிரபுவுடன் ஏராளமான பக்தர்கள், கோவில் பணியாளர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
    • ராமேசுவரம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

    ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் பிரபு தனது மனைவி புனிதாவுடன் வந்தார். அவர்கள் கோவிலில் விநாயகர், சாமி, அம்பாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தனர். அவருடன் சிவாஜி மன்ற நிர்வாகிகள் தேவதாஸ், பால்ராஜ், சீனி, கவுன்சிலர் முகேஷ் குமார், கோவில் பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கோவிலுக்கு வந்த நடிகர் பிரபுவுடன் ஏராளமான பக்தர்கள், கோவில் பணியாளர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    தரிசனம் முடிந்து வெளியே வந்த பிரபு நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கும் மார்ஷல் திரைப்பட சூட்டிங் கீழக்கரையில் நடக்கிறது. அந்த படத்தில் நடிப்பதற்காக ராமநாதபுரம் வந்துள்ளேன். இத்திரைப்பட இயக்குனரும் ராமேசுவரத்தை சேர்ந்தவர்தான். ராமேசுவரம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும்.
    • 1-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு அம்பாள் தங்கசிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 6-வது நாளான நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கிலும், தொடர்ந்து பகல் 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.

    வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும். பின்னர் 3 மணிக்கு திறக்கப்பட்டு 8 மணிக்கு சாத்தப்படும். இந்த நிலையில் நாளை ஆடி அமாவாசை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராடி, சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது மதியம் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் திறந்திருந்து இரவு 8 மணிக்கு சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் 7-ம் நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி தேரோட்டமும், 9-ம் நாளான 27-ந்தேதி காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. 11-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

    ஆகஸ்டு 4-ந்தேதி சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் கோவிலில் இருந்து ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று தனுஷ்கோடியிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டனர்.
    • ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்த சுற்றுலா பயணிகளை கண்காணித்த பாதுகாப்பு போலீசார் கடலில் இறங்க கூடாது என எச்சரித்தனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    விடுமுறையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கார், பஸ், வேன் மற்றும் ரெயில்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக ராமேசுவரம் வந்தனர். இன்று அதிகாலை அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி கொடுத்தனர்.

    தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று தனுஷ்கோடியிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டனர். ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்த சுற்றுலா பயணிகளை கண்காணித்த பாதுகாப்பு போலீசார் கடலில் இறங்க கூடாது என எச்சரித்தனர்.

    இதே போல் பேக்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தையும் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

    • உள்ளூர் மக்கள், அரசியல் கட்சியினர், கடும் எதிர்ப்பு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • வழிபாட்டு உரிமை தொடர்பாக கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

    ராமேசுவரம்:

    உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

    ராமேசுவரம் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தனி வழி காலம் காலமாக இருந்து வருகிறது. இதன் மூலம் உள்ளூர் பக்தர்கள் திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் இணை ஆணையராக செல்லத்துரை பொறுப்பேற்ற நிலையில் உள்ளூர் பக்தர்கள் வழக்கமாக செல்லும் தரிசன வழித்தடத்திற்கு தடை விதித்தார். மேலும் மற்ற பக்தர்களை போல் கட்டண வழித்தடம் அல்லது பொது தரிசனம் வழியாக தரிசனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதற்கு உள்ளூர் மக்கள், அரசியல் கட்சியினர், கடும் எதிர்ப்பு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ராமேசுவரத்தில் உள்ளூர் பக்தர்கள் வழிபாட்டு உரிமையை காக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் வழிபாட்டு உரிமை தொடர்பாக கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. ஆனால் கோவில் நிர்வாகம் கட்டண தரிசனம் வழியில் உள்ளூர் மக்கள் வர வேண்டும் என பிடிவாதமாக கூறிவிட்டது.

    கோவில் நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து இன்று கோவிலில் நுழைவு போராட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்காரணமாக கோவில் நுழைவுவாயிலில் இன்று காலை தடுப்புகள் அமைத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 10 மணியளவில் கோவில் முன்பு உள்ளூர் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

    அவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டவாறு தடுப்புகளை தாண்டி கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு போலீசார் கோவில் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர்.

    இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோவிலுக்கு செல்ல முற்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் நுழைவு போராட்டம் காரணமாக மேலவாசல் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. 

    • கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஸ்படிகலிங்க பூஜையில் மனைவியுடன் கலந்துகொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

    ராமேசுவரம்:

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் ஆன்மிக பயணமாக திருச்சி, ராமேசுவரம், மதுரை கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக நேற்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் முசிறி செல்லும் வழியில் அமைந்துள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான குணசீலத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெற்ற விழாவில் கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் பிச்சுமணி அய்யங்கார் எழுதிய குணசீல மகாத்மியம் என்ற நூலை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.

    இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை ராமேசுவரம் வருகை தந்தார். அங்கு அவரை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இரவில் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்று புனித நீராடினார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் தனது மனைவியுடன் நீராடிய கவர்னர், கோவிலுக்குள் சென்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டார்.

    தொடர்ந்து அங்கு நடைபெற்ற ஸ்படிகலிங்க பூஜையில் மனைவியுடன் கலந்துகொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்தார். முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் உள்ள புகழ்பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் தனது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி காரில் புறப்பட்டு அனுஷ்கோடி, அரிச்சல்முனை ஆகிய பகுதிகளுக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட அவர் மதுரை சென்றார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையையொட்டி ராமேசுவரம், மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • வார விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
    • மதியம் 3.30 மணிக்கு பின் வழக்கம் போல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

    இதனால் ராமேஸ்வரத்தில், குறிப்பிட்ட அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தர்ப்பணம் செய்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அதேபோல் வார விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    பிரதமர் மோடி நாளை தரிசனம் செய்ய உள்ளதை அடுத்து பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் மதியம் 3.30 மணிக்கு பின் வழக்கம் போல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இரண்டு திருக்கோயில்களிலும் உயிரிழந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர்.
    • பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இத்திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ளை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார், அவரது குடும்பத்தினர் முன்னரே தரிசனம் செய்ய வரிசையில் சென்ற நிலையில் தனியாக சென்றபோது அவருக்கு ஏற்கனவே உள்ள மூச்சுத்திணறல் நோயினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.

    அதேபோன்று ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு இன்று விடியற்காலை ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கிய நிலையில் காணப்பட்டதால் அவரை திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் முதலுதவி மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    மேற்குறிப்பிட்ட இரண்டு திருக்கோயில்களிலும் உயிரிழந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழக்கவில்லை. பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இத்திருக்கோயில்கள் உள்ளிட்ட 17 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் அனைத்து திருக்கோயில்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தனி வரிசைமுறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

    மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடியால் அண்ணாமலை போன்றோர் இந்து சமய அறநிலையத்துறையின் மீது இதுபோன்ற களங்கம் கற்பிக்க முயல்வதில் வியப்பேதுமில்லை.

    இவ்வாறு சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும்.
    • பக்தர் இறந்ததால் கோவிலில் சிறிது நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும், தென்னகத்து காசி என்றழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அமாவாசை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    ராமநாதபுரம் கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். பிரசித்தி பெற்ற இந்த பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதில் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக வடமாநிலத்தவர்கள் இந்த பூஜையில் அதிகளவில் பங்கேற்பார்கள்.

    அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குழுவினர் இன்று காலை ஸ்படிக லிங்க பூஜையில் பங்கேற்க கோவிலுக்கு வந்தனர். இதில் ராஜ்தாஸ் (வயது 59) என்பவரும் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு மணிநேரத்துக்கு மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது.

    இந்த நிலையில் வரிசையில் நின்றிருந்த ராஜ்தாசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அங்கேயே ஓரத்தில் படுக்க வைத்தனர். ஆனால் அங்கு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் அவரிடம் எந்த அசைவும் இல்லை.

    இதுகுறித்து பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஊழியர்கள் ராஜ்தாசை கோவில் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ராஜ்தாஸ் இறந்து 20 நிமிடங்களுக்கு மேலாகி விட்டதாக தெரிவித்தனர். ராஜ்தாஸ் வரிசயைில் நின்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராமேசுவரம் கோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவிலில் அதிகாலையில் நடந்த ஸ்படிக லிங்க பூஜையில் பக்தர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பக்தர் இறந்ததால் கோவிலில் சிறிது நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் என்பவர் திருச்செந்தூரில் வரிசையில் நின்றிருந்தபோது மூச்சுத்திணறி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    • ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    காசிக்கு நிகராக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகையில் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இதன் காரணமாக அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். வருடத்தின் ஆடி, தை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகிறது.

    முன்னோர்களுக்கு மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அதன்படி மகாளய அமாவாசைக்காக வெள்ளிக்கிழமை முதலே பஸ், கார் மற்றும் வேன்கள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாதசுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது.

    தொடர்ந்து பல மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடியபின் ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை சாமி தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் பாதுகாப்புக்காக ராமேசுவரம் நகர் முழுவதும் 650-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடற்கரை கோவில் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமும், ரோந்து சென்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவிபட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

    • மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.
    • இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ராமேசுவரம்:

    இந்தியாவில் புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகும். தென்னகத்து காசி என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பல்வேறு தோஷங்கள் கழிந்து, குடும்பமும், வம்சமும் செழித்து நன்மைகள் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.

    அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் புரோகிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பேசி வழங்கி வந்தார்கள்.

    இந்த நிலையில் அக்னி தீர்த்த கடற்கரையில் மேற்கண்ட சடங்குகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்ய ரூ.200 முதல் ரூ.400 வரை வசூலிக்கப்படும் எனவும் அதில் இருந்து ரூ.80, ரூ.160 புரோகிதர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    அதேபோல், தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளின்படியே கோவில் வழிபாடு, பூஜை மற்றும் நம்பிக்கைகள் என்று எதிலும் அந்த துறை தலையிட முடியாது. அவ்வாறு இருக்கும்போது கோவிலுக்கு வெளியே திதி, தர்ப்பண பூஜை செய்யும் இந்துக்களின் அடிப்படை கலாச்சாரத்தின் மீது எப்படி தலையிட முடியும்? எனவே உடனடியாக இந்த அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அறநிலையத்துறையின் முடிவு வாபஸ் பெறப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான செ.சிவராம் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோளின் படியும், பக்தர்களின் வசதிக்காகவும் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்திட கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் பொதுமக்கள் தங்களது ஆட்சேபனையினை வருகிற 20-ந்தேதிக்குள் தெரிவிக்கும்படி நாளிதழ்களில் 28.2.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

    நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வழக்கத்தை விட கோவில், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ராமேசுவரம்:

    தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்க தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். வழக்கத்தை விட கோவில், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    முன்னோர்களுக்கு திதி கொடுத்த பக்தர்கள் கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி-பர்வத வர்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். இதற்காக பக்தர்கள் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இதே போல் பேய்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவு மண்டபம், தனுஷ்கோடி கடற்கரை, கோதண்டராமர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணி முதல் 4:00 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.
    • கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் பிரசித்தி பெற்றிருக்கும் ராமநாதசுவாமி கோவில் ராமாயண வரலாற்று கதைகள் நிறைந்த புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்ட முக்கிய பகுதியாக உள்ளது.

    இந்நிலையில் மார்கழி அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை இன்று அடைக்கப்படுகிறது. இதன்படி இன்று அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணி முதல் 4:00 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெறும் என்பதால் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு, மீண்டும், சுவாமி - அம்பாள் கோவிலுக்கு வந்தவுடன் 12 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு உச்சிகால பூஜை நடைபெறும்.

    கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    ×