என் மலர்
நீங்கள் தேடியது "Peoples Protest"
- உள்ளூர் மக்கள், அரசியல் கட்சியினர், கடும் எதிர்ப்பு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- வழிபாட்டு உரிமை தொடர்பாக கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
ராமேசுவரம்:
உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
ராமேசுவரம் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தனி வழி காலம் காலமாக இருந்து வருகிறது. இதன் மூலம் உள்ளூர் பக்தர்கள் திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் இணை ஆணையராக செல்லத்துரை பொறுப்பேற்ற நிலையில் உள்ளூர் பக்தர்கள் வழக்கமாக செல்லும் தரிசன வழித்தடத்திற்கு தடை விதித்தார். மேலும் மற்ற பக்தர்களை போல் கட்டண வழித்தடம் அல்லது பொது தரிசனம் வழியாக தரிசனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதற்கு உள்ளூர் மக்கள், அரசியல் கட்சியினர், கடும் எதிர்ப்பு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ராமேசுவரத்தில் உள்ளூர் பக்தர்கள் வழிபாட்டு உரிமையை காக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினார்.
இந்த நிலையில் வழிபாட்டு உரிமை தொடர்பாக கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. ஆனால் கோவில் நிர்வாகம் கட்டண தரிசனம் வழியில் உள்ளூர் மக்கள் வர வேண்டும் என பிடிவாதமாக கூறிவிட்டது.
கோவில் நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து இன்று கோவிலில் நுழைவு போராட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்காரணமாக கோவில் நுழைவுவாயிலில் இன்று காலை தடுப்புகள் அமைத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 10 மணியளவில் கோவில் முன்பு உள்ளூர் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.
அவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டவாறு தடுப்புகளை தாண்டி கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு போலீசார் கோவில் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர்.
இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோவிலுக்கு செல்ல முற்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் நுழைவு போராட்டம் காரணமாக மேலவாசல் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
- வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும்.
- குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களின் பாதைகளில் ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள முள்வேலிகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது சேர்ந்தான்குளம் கிராமம்.
இங்குள்ள பொதுமக்கள் இன்று தங்கள் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கூறியதாவது:-
நாங்கள் 3 தலைமுறையாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும். குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களின் பாதைகளில் ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள முள்வேலிகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வருகிற 10-ந் தேதிக்குள் இந்த முள்வேலிகளை அகற்றாவிட்டால் விவசாய சங்கம், கம்யூனிஸ்ட்டு கட்சிகள் சார்பில் முள்வேலிகளை அகற்றும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள சுடுகாட்டு பாதையை அடைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
- மங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் விஜயலட்சுமி, ரவிசந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- பொதுமக்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் ஆயாமரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 54). இவரது விவசாய நிலத்திற்கு அருகில் அரசுக்கு சொந்தமான 2 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் தற்போது ஊராட்சி ஒன்றிய ஆணையாளரின் உத்தரவின் பேரில் பொதுமக்கள் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அந்த இடத்தில் குடிநீர் தொட்டி அமைக்க கூடாது என்று கூறி சின்னத்தம்பி குடும்பத்தினர் கம்பி அமைத்து விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்து நேற்று தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டபுரம் செல்லும் சாலையில் ஆயாமரம் பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தார்.
மங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் விஜயலட்சுமி, ரவிசந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்து தாரமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அதனை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்ததால் ஆணையாளர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னத்தம்பி,விஜயா, கார்த்தி, குருநாதசாமி, பெரியம்மாள், ராஜி, தங்கவேல்,சரோஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருநீர்மலை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த பொக்லைன் எந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- நிலை தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் மீது பொக்லைன் எந்திரத்தின் டயர் ஏறியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தாம்பரம்:
சென்னை தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர், அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் இருந்து திருநீர்மலை நோக்கி சென்றார்.
திருநீர்மலை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த பொக்லைன் எந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் மீது பொக்லைன் எந்திரத்தின் டயர் ஏறியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபோன்று பள்ளி குழந்தைகள், முதியவர்கள் அந்த சாலையில் பரபரப்பாக செல்லும் நேரத்தில் கனரக வாகனங்கள், லாரிகள் அந்த சாலையில் பயணிப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பும் ஏற்படுகிறது என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்கள்.
இந்தநிலையில் லாரிகள், கனரக வாகனங்கள் அந்த சாலையில் செல்ல தடை விதிக்க கோரி அப்பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பதாகைகள் ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள வாகையூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் என்கிற செந்தாமரை (வயது 43). இவர் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறி விட்டு திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
உடனே பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த சிறுமியை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிறுமி இறந்தார். இதனை தொடர்ந்து கைதான செந்திலுக்கு ஜாமீன் வழங்க கூடாது. கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பெண்கள் திட்டக்குடி-ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் வாகையூரில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த ராமநத்தம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியல் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தால் பெரும் பரபரப்பு பதட்டம் ஏற்பட்டது .
- பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் சட்டசபையில் ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 கடைகள் மூடப்பட்டது. தஞ்சை நகரில் மட்டும் 10 கடைகள் அடைக்கப்பட்டன.
இந்த பட்டியலில் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் செயல்படும் அரசு டாஸ்மாக் இடம் பெறவில்லை. எனவே இந்த டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு இயக்கம், அமைப்புகள் சார்பில் ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டன. இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
இந்த நிலையில் மாட்டு மேஸ்திரி சந்து டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கான முதல்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி இன்று மதியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வசந்தி தலைமையில் மாநகர செயலாளர் வடிவேலன் மற்றும் பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.
அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் முடிவு எட்டப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடையை மீறி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது மூட வேண்டும்.. மூட வேண்டும்.. மாட்டு மேஸ்திரி சந்து டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம், மாட்டு மேஸ்திரி சந்து மற்றும் சுற்றியுள்ள இடங்களில் ஏராளமான வணிக நிறுவனங்கள் , வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கோவில்கள் உள்ளன. இந்தக் கடையில் மது குடிப்பவர்கள் பலர் அந்த வழியை கடந்து வீட்டுக்கு செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள், வேலைக்கு செல்வோரும் இன்னலுக்கு ஆளாகினர். எனவே இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். தற்போது மூடப்பட்ட பட்டியலிலும் இந்த கடை இல்லாதது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் நிரந்தரமாக இந்த டாஸ்மாக்கை மூடும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்று போராட்டக்காரர்கள் கூறினர்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தால் டாஸ்மாக் கடை இன்று திறக்கப்படவில்லை.
டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு பதட்டம் ஏற்பட்டது . பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாட்டு மேஸ்திரி சந்து, பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
- குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா என்பவரிடம் முறையிட்டுள்ளனர்.
- 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செங்குன்றம்- ஆவடி நெடுஞ்சாலை ஈஸ்வரன் நகர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த பம்மது குளம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுநாயக்கன் நகர் உள்ளது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா என்பவரிடம் முறையிட்டுள்ளனர். அவர் சரிவர பதில் கூறவில்லை என தெரிகிறது.
இதனால் இன்று காலை 8.30 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செங்குன்றம்- ஆவடி நெடுஞ்சாலை ஈஸ்வரன் நகர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததால் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த சாலை மறியலால் 2 மணி நேரம் ஆவடி- செங்குன்றம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வேலாயுதபுரம் சோதனை சாவடி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மறியலால் ராஜபாளையம்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ராஜபாளையம்:
தென்காசி மாவட்டம் செந்தட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கனகராஜ் மகன் மலர்மன்னன் (வயது 25), சுப்பையா மகன் மகேந்திரன் (25). இதில் மலர்மன்னன் டிரைவராகவும், மகேந்திரன் கட்டிட தொழிலாளியாகவும் வேலை பார்த்து வருகின்றனர். நண்பர்களான இவர்கள் மீது கொலை உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் கரிவலம் வந்தநல்லூர் போலீசார் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மலர்மன்னன் மற்றும் மகேந்திரன் இருவரையும் ஒரு வழக்கு தொடர்பாக புகைப்படம் எடுக்க வேண்டும் எனக்கூறி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் அவர்களிடம் பேசி போலீசார் அழைத்து சென்றனர்.
நீண்ட நேரம் ஆகியும் போலீஸ் நிலையத்தில் இருந்து இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரது உறவினர்களும் போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது இருவரையும் நாங்குநேரி சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் பிடிபட்ட இருவரையும் விசாரணை முடிந்து போலீஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் விடுவிக்கப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இரவு வரை அவர்கள் இருவரையும் விடுவிக்காததை கண்டித்து ராஜபாளையம் அருகே தென்காசி-விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள வேலாயுதபுரம் சோதனை சாவடி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் கலந்துகொண்ட ஆண்டிச்சாமி மற்றும் வடிவு ஆகியோர் சிறைப்பிடித்த இருவரையும் விடுவிக்க கோரி திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் தடுத்து அவர்களை காப்பாற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு வாலிபர்களையும் விடுவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் ராஜபாளையம்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
- மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.
- சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் பூனாட்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த மாணவி வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்கு வந்தார். இதையடுத்து ஒரு வாலிபர் நேற்று பள்ளிக்கு வந்து அந்த மாணவிக்கு தான் மாமா என்று கூறி விட்டு உள்ளே சென்றார். இதை தொடர்ந்து அவர் அந்த மாணவியை பள்ளியில் இருந்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை அந்த மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது ஒரு வாலிபர் மாமா என்று கூறி மாணவியை அழைத்து சென்று விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் யார் என்று விசாரிக்காமல் எப்படி அனுப்பி வைக்கலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்தி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாணவியின் உறவினர்கள் என 100-க்கு மேற்பட்டவர்கள் இன்று காலை அம்மாபேட்டை-அந்தியூர் மெயின் ரோடு பூனாட்சி பகுதியில் அந்த தனியார் பள்ளி அருகே ஒன்று திரண்டனர்.
இதைதொடர்ந்து அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டடனர். இதையடுத்து நிர்வாகத்தை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, பள்ளிக்கு வந்த வாலிபர் மாணவியை கடத்தி சென்று விட்டார். எனவே பள்ளி நிர்வாகம் மீதும், மாணவியை கடத்தி சென்றவர் மீதும் நடவடிக்கை எடுக்க என கூறினர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி நிர்வாகத்தினர் நேரில் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பல ஆண்டுகளாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்கின்ற கோரிக்கையை பொதுமக்கள் வைத்து வருகின்றனர்.
- பொதுமக்களின் போராட்டத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மோச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார், விஜயலட்சுமி தம்பதியர் நேற்று இருவரும் இருசக்கர வாகனத்தில் வரும் போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
ஆகவே இந்த இடத்தில் பல ஆண்டுகளாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர். நேற்று இரண்டு பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்தையொட்டி இன்று மோச்சேரி கிராம பொது மக்கள் 250-க்கும் ஏற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டிஎஸ்பி சிவசக்தி தலைமையிலான போலீசார் பொதுமக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் 45 நிமிடங்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சீலாத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலிகுடங்களுடன் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சீலாத்திகுளம் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தில் உரிய புகார் அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டித்து சீலாத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலிகுடங்களுடன் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்டார். எனினும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முசிறி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
- பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
முசிறி:
முசிறி அருகே வெள்ளூர் அடுத்த சாலப்பட்டி கிராமம் வழியாக முசிறியில் இருந்து மாங்கரைப்பேட்டை, வெள்ளூர், வேப்பந்துறை, மணப்பாறையில், தெற்கு சித்தாம்பூர் ஆகிய கிராமங்களுக்கு காலை மற்றும் மாலை இருவேளை அரசு பேருந்து சென்று வருகிறது.
இவ்வாறு செல்லும் அரசு பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் வந்து செல்ல வேண்டும். இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பயனடைவர் என்று கூறி, அப்பகுதி மக்கள் முசிறி கோட்டாட்சியர் மற்றும் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் ஆகியோரிடம் மனு அறிவித்துள்ளனர். ஆனால் அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த கிராமத்தின் வழியாக சென்ற பேருந்தினை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முசிறி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.






