என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • தினகரன் என்பவரிடம் இருந்து ஒரு பாம்பை வாங்கி தந்தையின் காலில் கடிக்க வைத்துள்ளனர். ஆனால், அப்போது கணேசன் உயிர் தப்பிவிட்டார்.
    • மீண்டும் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பை வரவழைத்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, 3 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகத் தனது தந்தையைப் பாம்பைக் கடிக்க வைத்துக் கொலை செய்த இரண்டு மகன்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (56). இவர் அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.

    கடந்த அக்டோபர் மாதம், இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது மகன் மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    கணேசன் இறந்த பிறகு, அவரது மகன்கள் மோகன்ராஜ் (29) மற்றும் ஹரிஹரன் ஆகியோர் காப்பீட்டு நிறுவனத்தை அணுகி 3 கோடி ரூபாய் இழப்பீடு கோரினர்.

    ஆனால், கணேசன் பெயரில் வருமானத்திற்கு மீறிய வகையில் பல காப்பீட்டு பாலிசிகள் இருப்பதையும், அந்த குடும்பத்திற்குப் பல இடங்களில் கடன் இருப்பதையும் கவனித்த காப்பீட்டு நிறுவனம், காவல்துறையிடம் புகார் அளித்தது.

    போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    தந்தையைக் கொன்று விபத்து மரணமாகக் காட்டினால் பெரிய தொகையை ஈட்டலாம் என மகன்கள் திட்டமிட்டுள்ளனர்.

    சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே, தினகரன் என்பவரிடம் இருந்து ஒரு பாம்பை வாங்கி தந்தையின் காலில் கடிக்க வைத்துள்ளனர். ஆனால், அப்போது கணேசன் உயிர் தப்பிவிட்டார்.

    மீண்டும் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பை வரவழைத்து, அக்டோபர் 22 அதிகாலையில் கணேசனின் கழுத்தில் கடிக்க வைத்துள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.

    பாம்பு கடித்தவுடன், அது தானாக வீட்டிற்குள் வந்தது போலக் காட்ட அந்தப் பாம்பை அங்கேயே அடித்துக் கொன்றுள்ளனர்.

    இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் மற்றும் அவர்களுக்குப் பாம்பை ஏற்பாடு செய்தும் உதவி புரிந்தும் வந்த பாலாஜி, பிரசாந்த், தினகரன், நவீன்குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • கரையோரம் உள்ள குடியிருப்புக்குள் தடுப்பு மணல் மூட்டைகளையும் தாண்டி தண்ணீர் வந்து உள்ளது.
    • புழல் ஏரியில் 21.20 அடியும், பூண்டி ஏரியில் 35 அடியும் தண்ணீர் முழுவதும் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழையாக கொட்டியது. மேலும் டிட்வா புயலின் தாக்கத்தாலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டின.

    செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த உயரமான 24 அடி முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 750 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீராக 500 கனஅடி தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. நேற்று காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில இடங்களில் மழை கொட்டியது. இதனால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அதன் கரையோரப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது.

     

    செம்பரம்பாக்கம், பழஞ்சூர் பகுதியில் ஏரியின் கரையோரத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. சுமார் 3 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல் குன்றத்தூர் அருகே புதுப்பேடு, தாராவூர், குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியிலும் செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீர் கரையோரம் உள்ள குடியிருப்புக்குள் சென்று உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஏரியில் 23 அடிவரை தண்ணீர் தேக்கினால் பாதிப்பு இருக்காது. தற்போது ஏரியில் 24 அடி முழுவதும் நிரம்பி உள்ளதால் கரையோரம் உள்ள குடியிருப்புக்குள் தடுப்பு மணல் மூட்டைகளையும் தாண்டி தண்ணீர் வந்து உள்ளது என்றனர்.

    இதேபோல் புழல் ஏரியில் 21.20 அடியும், பூண்டி ஏரியில் 35 அடியும் தண்ணீர் முழுவதும் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. புழல் ஏரிக்கு 270 கனஅடி தண்ணீர் வருகிறது. 50 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரிக்கு 850 கன அடியும் தண்ணீர்வருகிறது. 500 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியில் 18.86 அடியில் 12.72 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 45 கனஅடி தண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 461 மி.கன அடி தண்ணீர் உள்ளது.ஏரிக்கு நீர் வரத்து இல்லை.

    • மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி மாணவர்கள் நடைமேடையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
    • பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி மாணவர்கள் நடைமேடையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவன் மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

    பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
    • செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிட்வா புயலானது சென்னையை நெருங்கி வருவதால் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்துவந்த நிலையில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

    இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மக்கள் தொடர்பு கொள்ள, அவசர உதவிக்கு 7299004456, மருத்துவ தேவை 9384814050, கால்நடை பாதிப்பு 1962 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு.
    • மருத்துவ உதவிக்கு 93848 14050 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    டிட்வா புயுல் நெருங்கி வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர கால உதவி எண்களை அம்மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார்.

    அதன்படி, அவசர உதவிக்கு 72990 04456 என்ற எண்ணிற்கும், கால்நடை பாதிப்பிற்கு 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    மேலும், மருத்துவ உதவிக்கு 93848 14050 என்ற எண்ணிற்கும், அவசர தேவைக்கு கட்டுப்பாட்டு அறை 1077 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டிட்வா புயல் காரணமாக நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    'டிட்வா' புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளிலும், வீடுகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    இதனிடையே, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து இன்று காலை விநாடிக்கு 1000 கனஅடியாக திறக்கப்பட்ட உபரிநீர் தற்போது விநாடிக்கு 1500 கனஅடியாக திறக்கப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்திற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிட்வா புயல் காரணமாக நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • மேட்டுப்பாளையம், முடுச்சம்பேடு, சாணார்பாளையம்,

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த பஞ்செட்டிதுணை மின் நிலையத்தில் நாளை (8-ந்தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதையடுத்து நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பஞ்செட்டி, அத்திப்பேடு, தச்சூர், பெரவள்ளூர், போராக்ஸ், கீழ்மேனி, சின்னப்பம்பட்டி, தச்சூர் கூட்டுச்சாலை, வேலம்மாள்நகர், பொன்னேரி நகரம், ஹரிஹரன் கடைவீதி, என்.ஜி.ஓ. நகர், மூகாம்பிகை நகர், தாலுகா ஆபீஸ் ரோடு, பாலாஜி நகர், திருவார்பாடி, ஆண்டார்குப்பம், கிருஷ்ணபுரம், கேபி கே.நகர், ஆமூர், வடக்குப்பட்டு, சின்னவேன்பாக்கம், தேவதானம், கே.எஸ்.பாக்கம், அனுப்பம்பட்டு, அக்கரம்பேடு, பாலாஜி நகர், திருவாயர்பாடி, கல்மேடு, சின்னக்காவனம், பரிக்கப்பட்டு, உப்பளம், வேண்பாக்கம், தடபெரும்பாக்கம், சிங்கிலி மேடு, புலிக்குளம், உதன்டி கண்டிகை, இலவம்பேடு, மேட்டுப்பாளையம், முடுச்சம்பேடு, சாணார்பாளையம் பகுதிகளுக்கு மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை பஞ்செட்டி துணை மின் நிலைய உதவி பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    • நீர் திறப்பு 250 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக அதிகரிப்பு.
    • தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.

    வங்கக் கடலில் உருவாகி உள்ள மோன்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை நீடித்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழைக் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது.

    புழல் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இன்று காலை 250 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இன்று மதியம் அதன் அளவு 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    • பல இடங்களில் தார்கள் பெயர்ந்து சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
    • சாலை விரிசலை அவசர அவசரமாக ஒப்பந்ததாரர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம் சென்னை பாடியில் இருந்து - ரேனிகுண்டா வரை 124 கி.மீ., தூரம் ஆறுவழிச்சாலை பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. இதில் சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரையும், ஆந்திர மாநிலம், புத்தூர் - ரேனிகுண்டா வரையும் 4 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர்-திருநின்றவூர் வரை, 17.5 கி.மீட்டர் சாலை அமைக்கும் பணி சுமார் 80 சதவீதம் முடிந்து உள்ளன.

    மேலும் தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் குறுக்கிடும் சாலைகளை கடக்கும் வகையில், தலக்காஞ்சேரி, தண்ணீர்குளம் உட்பட, திருநின்றவூர் வரை ஏரிகள் மற்றும் சாலைகள் குறுக்கிடும் இடம் என 7 இடங்களில் மேம்பாலம் மற்றும் 10 இடங்களில் சிறு பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது. சாலை அமைக்கப்பட்டு உள்ள இடங்களில் முக்கிய ஊர்களை இணைக்கும் இடங்களில், 'சர்வீஸ்' சாலையும் அமைக்கப்பட்டு வழிகாட்டி பலகை வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எனினும் இந்த சாலைப்பணி உரிய தரம் இல்லாமல் அமைக்கப்பட்டு வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வரும் முன்னரே, பல இடங்களில் தார்கள் பெயர்ந்து சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் சாலையை ஒட்டி அமைக்கப்பட்டு உள்ள பக்கவாட்டு சுவர்களில் மண் அரிப்பும் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், மண் அப்படியே உள்வாங்கியதால் பாலத்திற்கும், சாலைக்கும் நடுவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர். அருகில் மற்றும் தலக்காஞ்சேரி, ஈக்காடு, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, காக்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மேம்பாலத்திற்கும், சாலைக்கும் நடுவில் மண் உள்வாங்கி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் விட்டு, விட்டு சாலையோரங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளன. இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த சாலை விரிசலை அவசர அவசரமாக ஒப்பந்ததாரர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே சாலையோரங்களில் விரிசல் ஏற்பட்டு இருப்பதால் அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நீர்வரத்து அதிகமாகியதால் பூண்டி ஏரியின் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.
    • ஏரியில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

    நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஏரிக்கு 10 ஆயிரத்து 500 கனஅடியாக வரத்து அதிகரித்தது. நீர்வரத்து அதிகமாகியதால் பூண்டி ஏரியின் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.

    பூண்டி ஏரின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக பதிவாகி இருந்தது. பூண்டி ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 17 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் பூண்டி ஏரிக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரிக்கான நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. நேற்று மாலை 10 ஆயிரத்து 500 கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில் தொடர்ந்து நீர்வரத்து உயர்ந்து வருகிறது. ஏரியில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பூண்டி ஏரியில் இருந்து 9,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர், மெய்யூர், அணைக்கட்டு, ஐனப்பன்சத்திரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முதன்மையானது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்.
    • பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2510 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முதன்மையானது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். வடகிழக்கு பருவமழையின்போது நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழியும்.

    சென்னை மற்றும் புறநகரில் பெய்து வரும் கனமழை காரணமாக, பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ளது.

    பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2510 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 35 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 33 அடியை தாண்டி உள்ளது.

    • பட்டாசுகள் வெடித்ததில் யாசின், சுனில் உள்ளிட்ட 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
    • விபத்தில் வீடு முழுவதும் சேதமான நிலையில், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் பகுதியில் விற்பனை செய்வதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் யாசின், சுனில் உள்ளிட்ட 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    விபத்தில் வீடு முழுவதும் சேதமான நிலையில், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×