search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • வலைகள் எப்படி தீப்பிடித்தது என்பது மர்மமாக உள்ளது.
    • 4-வது முறையாக வலைகள் எரிந்துள்ளன.

    பொன்னேரி:

    பழவேற்காட்டில் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை கடற்கரையில் வைத்து செல்வது வழக்கம்.

    அரங்ககுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் படகில் சென்று மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது மீன்பிடி வலைகளை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கிருந்த மீன்பிடி வலைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மீனவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் வலைகள் முழுவதும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    வலைகள் எப்படி தீப்பிடித்தது என்பது மர்மமாக உள்ளது. மர்ம நபர்கள் யாரேனும் வலைகளுக்கு தீவைத்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எரிந்து நாசமான வலைகளின் சேதமதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இது குறித்து மீனவர்கள் கூறும்போது, பழவேற்காடு பகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக வலைகள் எரிந்துள்ளன. பழவேற்காடு திருமலை நகர், கோட்டை குப்பம் பகுதியில் கடந்த மாதத்தில் மீன்பிடி வலைகள் எரிந்ததாகவும் இது குறித்து மீன்வளத்துறை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் பழவேற்காடு பகுதியில் மர்ம நபர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் மீன்பிடி வலைகளை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஆடி கிருத்திகை திருவிழா 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.
    • காவடிக்கான கட்டணத்தையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோயில் ஆடி கிருத்திகை திருவிழா வருகிற 27-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. சுமார் 5 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:-

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பா ர்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பல்வேறு அடிப்படை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட உள்ளன.

    பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், கண்காணிப்பு காமிராக்கள் 160 இடங்களிலும், பொதுதகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்பட உள்ளன.

    கூடுதல் பஸ்கள் இயக்கவும், 4 தற்காலிக பஸ்நிலையங்களும், சிறப்பு ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆடிக்கிருத்திகை விழாவுக்கு வருகை தரும் 50 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலையில் பவுர்ணமி தினத்தில் சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை விழாவுக்கு 200 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனால் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி 27-ந்தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு கட்டணம் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதேபோல் பக்தர்கள் கொண்டு வரும் காவடிக்கான கட்டணத்தையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், போலீஸ்சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், சந்திரன் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ் பாபு, நாகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல தடை.
    • அவசர தேவைக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளி துறைமுகம், அத்திப்பட்டு புதுநகர், காமராஜர் துறை முகம் மற்றும் அப்பகுதுயை சுற்றி உள்ள ஏராளமான தொழிற்சாலைகளுக்கு சாம்பல் கழிவு, நிலக்கரி, கண்டனர் லாரிகள், கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தச்சூர், பொன்னேரி, இலவம்பேடு, நாலூர், மீஞ்சூர்வழியாக தினமும் சென்று வருகிறன்றன.

    இதனால் பொன்னேரி, மீஞ்சூர் பஜாரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரிக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வந்தது.

    மேலும் தொடர்ந்து விபத்துக்களும் ஏற்பட்டன. அவசர தேவைக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    வண்டலூர் சாலையில் சென்றால் 2 டோல்கேட் மற்றும் கூடுதல் தொலைவு என்பதால் தச்சூர்-பொன்னேரிய சாலையில் சென்று வந்தன.

    இதுபற்றி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் தெரிவித்தனர். இதைத்தொடரந்து பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கத் பல்வந் உத்தரவுப்படி தச்சூரில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் வழியாக கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக பொன்னேரி போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் எச்சரிக்கை பதாகைகள் ஆங்காங்கே வைத்து உள்ளனர்.

    மேலும் தடையை மீறி வரும் கனரக வாகனங்களுக்கு ரூ.1500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் கனரக வாகனங்களை கண்காணித்தபடி வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    • கூவம் ஆற்றில் வீசப்பட்ட மற்ற செல்போன்களையும் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
    • தீயணைப்புத் துறையினர் மற்றும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதான ரவுடி திருவேங்கடம் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளுக்கு உதவியதாக கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க.கவுன்சிலர் ஹரிதரன் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே சிக்கிய வக்கீல்களான ஹரிகரன், அருள் ஆகிய 2 பேருக்கும் ஹரிதரன் நண்பர்களாக இருந்து உள்ளார். அவர்கள் கூறியபடி கொலைகுற்றவாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்களை ஹரிதரன் வெங்கத்தூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முதல் கூவம் ஆற்றில் தீயணைப்பு வீரர்களுடன், தண்ணீரில் மூழ்கி தேடும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடினர். இதில் 3 செல்போன்கள் மட்டும் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கூவம் ஆற்றில் வீசப்பட்ட மற்ற செல்போன்களையும் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை முதல் 2-வது நாளாக மெரினா மீட்பு குழுவினர், திருவூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காலை 6.30 மணிமுதல் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல்.
    • 5 செல்போன்களும் ஸ்கூபா டைவிக் வீரர்கள் மூலமாக கூவம் ஆற்றில் இருந்து மீட்பு.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 16வது நபராக திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ஏற்கனவே கைதான ஹரிஹரன் தந்த தகவலின்பேரில், 5 செல்போன்களும் ஸ்கூபா டைவிக் வீரர்கள் மூலமாக கூவம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

    விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள அருளின் செல்போன், அதிமுக கவுன்சிலரான ஹரிதரனிடம் இருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கட்சிக்கு கலங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    • ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • மாணவர்களின் அட்டகாசத்தால் பயணிகளுக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.

    பஸ், ரெயில்களில் பயணம் செய்யும் மாணவர்கள் இடையே 'ரூட்டுதல' பிரச்சனையால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் பஸ், ரெயில்களில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்து மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தட்டிக் கேட்கும் பொதுமக்களிடம் மாணவர்கள் மோதலில் ஈடுபடும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி மின்சார ரெயில் வந்தபோது 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரே பெட்டியில் ஏறினர்.

    அவர்கள் ரெயில் புறப்பட்டதும் ரகளையில் ஈடுபட தொடங்கினர். சில மாணவர்கள் மின்சார ரெயிலின் ஜன்னலில் ஏறி நின்றபடி கூச்சலிட்டு சாகச பயணம் செய்தனர். மேலும் ரெயில் பெட்டி வாசலில் தொங்கியபடியும் சென்றனர். "பச்சையப்பா கல்லூரி மாஸ்...." என்று சத்த மிட்டபடி பயணம் செய்தனர். இதனால் அந்த ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மாணவர்களின் அட்டகாசத்தை கண்டித்த சில பயணிகளையும் மாணவர்கள் சிலர் கிண்டல் செய்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் மற்ற பயணிகள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்துடனே பயணம் செய்தனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, "மாணவர்கள் ஆபத்தான நிலையில் ரெயில் பொட்டியின் ஜன்னலில் நின்றபடி பயணம் செய்ததை பார்க்கவே பயமாக இருந்தது. மாணவர்களின் அட்டகாசத்தால் பயணிகளுக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான ரெயில் நிலையங்களில் பாதுகாப்புக்காக போலீசார் இல்லை" என்றனர்.

    • மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    • பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலத்தை விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை.

    ஆவடி:

    பட்டாபிராம், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையின் குறுக்காக அமைக்க ப்பட்டுள்ள ரெயில்வே பாதை வழியாக சென்னையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசலும், அவரச தேவைக்கு செலவோரும் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக கடந்த 2010-ம் ஆண்டில் ரூ.33 கோடி செலவில் அப்பகுதியில் நான்கு வழிச்சாலையுடன் ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரெயில்வே துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, ரெயில்வே துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டத்தை மறுமதிப்பீடு செய்தது.

    இதன்படி, திட்ட மதிப்பீடு ரூ.52.11 கோடியாக உயர்ந்தது. திருத்திய மதிப்பீட்டின்படி கடந்த 2018-ம்ஆண்டு ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன.

    இதனை 2 ஆண்டுகளில் முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதிக்கு இயக்கப்படும் வாகனங்கள் தற்போது மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.

    பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே தண்டுரை, அன்னம்பேடு வழியாக மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று அங்கிருந்து நெமிலிச்சேரி ரவுண்டானாவை கடந்து சென்னை- திருத்தணி நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும். இதனால், வாகனங்கள் சுமார் 6 முதல் 9 கிமீ தூரம் வரை மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு காரணங்களால் பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலப்பணி முடிவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.

    இதையடுத்து கடந்த சில மாதங்களாக ரெயில்வே மேம்பாலப்பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது.

    கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த மேம்பால பணி தற்போது நிறை வடைந்து உள்ளது. பாலத்தில் தடுப்புகள் அமைத்து வர்ணம் பூசப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

    இதில் பாலத்தில் சென்னை- திருவள்ளூர் நோக்கி வாகனங்கள் செல்லும் பாதை முழுவதும் பணிகள் முடிந்து உள்ளன.

    திருவள்ளூர்-சென்னை செல்லும் பாதையில் மட்டும் சில பணிகள் முடிக்க வேண்டி உள்ளது. இதுவும் வரும் நாட்களில் விரைந்து முடிக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.

    எனவே பொதுமக்களின் நலன்கருதி பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஜோஸ் தனது மோட்டார் சைக்கிளை கார் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார்.
    • சிறுமி ஜோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் தாசர்புரம் பகுதியில் உள்ள சி எஸ் ஐ தேவாலயத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பாதிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோஸ் (வயது 39). இவர் தேவாலயத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மனைவி மலர்விழி(35). இவர் திருநின்றவூர் அடுத்த பாக்கம் அருகே காவனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு ஜோபி ஜெ.கிறிஸ்டில்டா (8) என்ற மகளும், ஜோவின் (2) என்ற மகனும் உண்டு. இவர்களது மூத்த மகள் ஜோபி ஜெ.கிறிஸ்டில்டா திருநின்றவூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை பாதிரியார் ஜோஸ் மோட்டார் சைக்கிளில் சென்று தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார். அப்போது திருநின்றவூர் பகுதியில் தனியார் கம்பெனி அருகே சென்ற போது, அவரது மோட்டார் சைக்கிளுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஜோஸ் தனது மோட்டார் சைக்கிளை கார் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்பொழுது நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து வந்த சிறுமி ஜோபி ஜெ.கிறிஸ்டில்டா தலையின் மீது பின்னால் வந்து கொண்டிருந்த கனரக லாரியின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஜோஸ் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். இந்த விபத்தை கண்ட லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த சிறுமி ஜோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். தந்தை கண்முன் 3-ம் வகுப்பு மாணவி லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • சாலையில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஆவடி:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சூறைக்காற்றுடன் கனமழை கொட்டுவதால் பருவமழை காலம் போல் நிலைமை மாறி உள்ளது. இன்று காலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் முழுவதும் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றுமுன்தினம் மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆவடியில் 10 செ.மீட்டர் மழை பதிவானது. தொடர்ந்து ஆவடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மழை வெளுத்து வாங்குகிறது.

    இதனால் திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட 16, 17, வார்டுகளில் உள்ள பெரியார்நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீடுகளை மழை நீர் வெள்ளமாக குளம் போல் தேங்கிநிற்கிறது.

    சாலையில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழையின் போது கனமழை கொட்டும் போது இது போன்று தண்ணீர் தேங்குவது வழக்கம்.

    ஆனால் தற்போது ஒரு நாள் மழைக்கே தண்ணீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால்பாம்பு தவளை, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் தண்ணீரில் நீந்தி வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்து வருகின்றன. இதானல் மழை நீர் சூழ்ந்து நிற்கும இடங்களில் வசிப்பவர்கள் அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது.

    பெரியார்நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் பகுதிகள் திருநின்றவூர் ஈசா ஏரியை ஒட்டி உள்ள தாழ்வான பகுதி ஆகும். எனவே சிறிய மழைக்கே இப்பகுதி தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சிஅளிக்கிறது. எனவே இந்த பகுதியில் மழைநீர் வெளியேற நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஆவடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது இதனால் பாரதி தாசனன் தெரு, கம்பர்தெரு உள்பட பல தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரியார்நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதி அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. பல தெருக்களில் வெள்ளம் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் பெரிய ஏரி உள்ளது. ஏரிநீரும் கசிந்து தெருக்களில் தேங்கிவிடுகிறது. திருநின்றவூர் நகராட்சி நிர்வாகம் உடனே மழைநீரை வெளியேற்றி இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும். இப்போதே சிறி மழைக்கு இந்த நிலைமை என்றால் பருவழையின் போது கடும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும். இதனை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்றனர்.

    • அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.

    கீழச்சேரி:

    பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    அதனை தொடர்ந்து, மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜர் பிறந்தநாளான இன்று கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

    பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.

    அப்போது அங்கு படிக்கும் மாணவிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது என் பேரு என்ன என்று ஒரு மாணவியிடம் அவர் கேட்கிறார். அதற்கு அந்த மாணவி ஸ்டாலின் தாத்தா என்று கூற... என் பேரு ஸ்டாலின் தாத்தா இல்ல ஸ்டாலின் அவ்வளவுதான் என்று முதலமைச்சர் பதில் அளிக்கிறார்.

    முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெற்றோருக்கே உரிய பாச உணர்வோடு நான் தொடங்கிய திட்டம் தான் காலை உணவு திட்டம்.
    • காலை உணவு திட்டத்தில் எந்த இடத்திலும் உணவின் தரம் குறைய கூடாது.

    தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக கடந்த 15.9.2022 அன்று தொடங்கப்பட்டது.

    அதன்படி 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1.14 லட் சம் மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

    இந்த திட்டத்துக்கு பொது மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து, கடந்த 25.8.2023 அன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்த திட் டத்தை விரிவுபடுத்தினார்.

    இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

    இதன் ஒரு பகுதியாக கல்வி வளர்ச்சி நாள் என்று அழைக்கப்படும் காமராஜர் பிறந்த நாளான இன்று திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பின்னர் மாணவ-மாணவிகளுக்கு அவர் உணவு பரிமாறினார். அதன்பிறகு மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு சாப்பிட்டார். அப்போது அவர் மாணவிகளுக்கு காலை உணவை ஊட்டி விட்டு மகிழ்ந்தார். பின்னர் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தைகளிடம் என்ன படிக்கிறீர்கள்? உணவு நன்றாக இருக்கிறதா என்று கேட்டறிந்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மிக மிக மகிழ்ச்சியாக உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன். என் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், கலைஞர் உரிமை திட்டம் என தமிழ்நாட்டில் இருக்கிற பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என உங்களின் முன்னேற்றத்துக்கும், எதிர்காலத்துக்கும் முதலமைச்சராக இருந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பு, பாடுபடக்கூடிய எண்ணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை வழங்கிய தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கு முதலில் என்னுடைய நன்றி.

    பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளின் பசியை போக்க வேண்டும் என்று முடிவு செய்து உருவாக்கிய திட்டம்தான் இந்த காலை உணவுத்திட்டம். சென்னையில் ஒரு பள்ளி விழாவுக்கு போனபோது ஒரு குழந்தை இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை என்று சொன்னதை கேட்டவுடன் ஒரு பெற்றோருக்கே உரிய பாச உணர்வோடு நான் உருவாக்கிய திட்டம் தான் இந்த காலை உணவு திட்டம்.

    அரசாங்கத்துக்கு நிதி எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு குழந்தை கூட பசியோடு பள்ளிக்கு வந்து தவிக்கக் கூடாது என்று இந்த திட்டத்தை தொடங்க உத்தரவிட்டேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன். இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறேன். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தான் காலை உணவா? எங்களுக்கு இல்லையா? என்று அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கேட்டனர்.

    அதனால்தான் இந்த திட்டத்தை கிட்டத்தட்ட 18 லட்சத்து 50 ஆயிரம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் வயிறாற சாப்பிட காரணமான இந்த திட்டத்தை இன்று விரிவுப்படுத்தி இருக்கிறேன். இனிமேல் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் காலை உணவு சாப்பிட இருக்கிறார்கள். மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் நாள்தோறும் 20 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் சத்தான, சுவையான காலை உணவை சாப்பிடுகிறார்கள்.

    புறநானூறு, திருக்குறள், மணிமேகலை என்று நம்முடைய இலக்கியங்கள் மட்டுமல்ல; அவ்வையார், வள்ளலார் போன்ற சான்றோர்களும் பசிப்பிணியை போக்குவது குறித்து உயர்வாக சொல்லி இருக்கிறார்கள். சங்க காலத்தை சேர்ந்த ஒரு குறுநில மன்னர் ஏழை-எளியவர்களின் பசியை போக்கியதால் பசிப்பிணி மருத்துவன் என்று போற்றப்படுகிறார். பசிப்பிணி போக்கும் பணி அரசுக்கும் பொருந்தும்.

    ஏழை-எளிய மாணவர்களுக்கு உணவளிப்பதன் மூலம் குழந்தைகளை நலமான, வளமான அறிவுமிக்க சமூகமாக வளர்த்திருக்கிறோம். ஏனென்றால் குழந்தைகள்தான் தமிழ்நாட்டின் எதிர்கால சொத்து. அதனால்தான் காலை உணவு திட்ட ஒதுக்கீடு பற்றி அதிகாரிகள் என்னுடன் விவாதித்தபோது அதை நிதி ஒதுக்கீடு என்று சொல்லாதீர்கள். வருங்கால தலைமுறையை உருவாக்குகிற முதலீடு என்று சொல்லுங்கள் என்று ஆனித்தரமாக சொன்னேன்.

    ஆனால் இந்த திட்டம் மாணவ-மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. பெற்றோர்களுக்கு பொருளாதார சுமையை குறைக்கிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இடை நிற்றலை குறைக்கிறது. இப்படி ஏராளமான நன்மைகள் காலை உணவு திட்டத்தால் விளைகிறது. கொஞ்ச நாளுக்கு முன்பு ஒரு பெண் அளித்த பேட்டியை பார்த்தேன். அதில் காலை உணவு திட்டம் ஏழை-எளிய குடும்பங்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்லும் நடுத்தர குடும்பங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது என்று பேட்டி கொடுத்திருந்தார்.

    இப்படி நமது திராவிட மாடல் அரசு கொண்டு வருகிற ஒவ்வொரு திட்டத்தையும் பயன்பெறுகிற மக்கள் பாராட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இல்லாத கற்பனை கதைகளுக்கு வடிவம் கொடுப்பவர்களுக்கும், ஈரை பேனாக்கும் வேலையை செய்பவர்களுக்கும் நம்மை பாராட்ட மனமில்லை. அதைப்பற்றி நமக்கு கவலையும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்கப்பள்ளி துறை இயக்குனர் சேதுராமவர்மன், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், வருவாய் அலுவலர் ராஜ்கு மார், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன், கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    • காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

    கீழச்சேரி:

    பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    அதனை தொடர்ந்து, மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜர் பிறந்தநாளான இன்று கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

    பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.





    ×