என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருவள்ளூர்
- விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
- 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, கடலூர், கரூர், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் கட்டணம் செலுத்தி நேற்று முதல் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள்.
இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்தனர். விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
விருப்ப மனு கொடுப்பவர்கள் கட்டணத்துடன் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு ஆகியவற்றையும் இணைத்து கொடுத்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 100 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இன்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தனர். இதனால் காங்கிரஸ் களம் இறங்கும் 9 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து 200-க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
விருப்ப மனு கொடுப்பதற்கு நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணிவரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு விருப்ப மனு கொடுத்தவர்களில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்புவார்கள்.
மேலிட தலைவர்கள் அவற்றை ஆய்வு செய்து அதிகாரப்பூர்வ வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளனர். தற்போதைய நிலவரப்படி கரூர் தொகுதியில் ஜோதிமணி, சிவகங்கை கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.
மயிலாடுதுறை தொகுதியில் ராகுலுக்கு மிகவும் நெருக்கமான பிரவீண் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் மயிலாடுதுறை தொகுதியை மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஹசினா சையது, பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஆகியோரும் கேட்கிறார்கள்.
திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், காங்கிரஸ் ஐ.டி. பிரிவு தலைவருமான சசிகாந்த் செந்தில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் அந்த தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்.பி. ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், ரஞ்சன்குமார், இமயா கக்கன், விக்டரி ஜெயக்குமார் ஆகியோரும் முயற்சி செய்து வருகிறார்கள்.
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நிறுத்தப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி தொகுதியில் டாக்டர் செல்லகுமார் போட்டியிட அதிக வாய்ப்பு இருக்கிறது.
நெல்லை தொகுதியில் விஜய்வசந்த் போட்டியிடுவார் என்றும், கன்னியாகுமரி தொகுதியில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
கன்னியாகுமரி: விஜய் வசந்த் அல்லது ரூபி மனோ கரன், ராபர்ட் புரூஸ்
நெல்லை: திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு, சிந்தியா.
மயிலாடுதுறை: அசன் மவுலானா, பிரவீண் சக்கரவர்த்தி, ரமணி.
கடலூர்: கே.எஸ்.அழகிரி, நாசே ராமச்சந்திரன், டாக்டர் விஷ்ணுபிரசாத்
திருவள்ளூர் : ஜெயக்குமார், சசிகாந்த்செந்தில், பி. விசுவநாதன், ரஞ்சன் குமார்
சிவகங்கை: கார்த்தி சிதம்பரம்.
உத்தேச பட்டியலில் உள்ள இந்த தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதனால் டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்கள் 9 தொகுதிகளுக்கு யார்-யாரை தேர்வு செய்வது என்று கடும் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே போட்டியிட்டு எம்.பி.யாக இருப்பவர்கள் மற்றும் வாரிசுகளை கடந்து புதுமுகங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
- வேலூர் இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
- காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைத்த அத்திப்பட்டு துரைக்கண்ணு கண்டன உரையாற்றினார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டித்தும், அதை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைத்த அத்திப்பட்டு துரைக்கண்ணு கண்டன உரையாற்றினார்.
பா.ஜ.க.வின் சாதனைகள் பற்றி பேசிய அத்திப்பட்டு துரைக்கண்ணு இதுபோன்ற திட்டங்களை செய்திருக்கின்ற பிரதமர் மோடிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் "கை" சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பேசினார்.
பா.ஜ.க. ஆர்ப்பாட்ட மேடையில் நின்றபடி காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் சிறிது நேரம் சலசலப்பும், சிரிப்பலையும் எழுந்தது. உடனே சுதாரித்த அத்திப்பட்டு துரைக்கண்ணு நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் பழக்க தோஷத்தில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு விட்டதாகவும், தன்னை மன்னித்து விடுங்கள் எனவும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் கேட்டு கொண்டார்.
பா.ஜ.க. மேடையில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்ட அத்திப்பட்டு துரைக்கண்ணு அதனை தொடர்ந்து பேசும் போது அருகில் நின்றிருந்த பா.ஜ.க. நிர்வாகிகள் தாமரை சின்னம் என பேசுமாறு எடுத்து கொடுத்தனர். பா.ஜ.க. மேடையில் மோடிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கரைக்கு முட்டையிடும் ஆமைகள் படகு மற்றும் வலையில் சிக்கி இறப்பது கடந்த சில நாட்களாக அதிகரித்தது.
- ஆமை குஞ்சுகளை மீண்டும் கடலில் விடும் பணியில் வனத்துறையினர் மற்றும் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொன்னேரி:
பழவேற்காடு கடற்கரை பகுதியில் டிசம்பர் மாதம் முதல் ஆமைகள் முட்டையிட கரைக்கு வருகின்றன. இவை ஏப்ரல் மாதம் வரை முட்டையிடும்.
கரைக்கு முட்டையிடும் ஆமைகள் படகு மற்றும் வலையில் சிக்கி இறப்பது கடந்த சில நாட்களாக அதிகரித்தது. மேலும் ஆமையின் முட்டைகளை விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து பாதுகாக்க வனத்து றையினருடன் இணைந்து ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினரும் களத்தில் இறங்கினர்.
அவர்கள் பழவேற்காடு கடற்கரையோரத்தில் ஆமைகளின் முட்டைகளை சேகரித்து ஆமைக்குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாத்தனர்.
கடந்த மாதத்தில் இருந்து இதுவரை 9,700 முட்டை சேகரிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் இந்த முட்டைகள் தற்போது குஞ்சு பொரிக்கத்தொடங்கி உள்ளன. இந்த ஆமை குஞ்சுகளை மீண்டும் கட லில் விடும் பணியில் வனத்துறையினர் மற்றும் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் புதிதாக பிறந்த 1,121 ஆமைக்குஞ்சு களை வனச்சரகர் அலுவலர் ரூஸப் லெஸ்லி தலைமையில் அதிகாரிகள் பழவேற்காடு கடலில் விட்டனர்.
- அரசின் சாதனைகள் குறித்த தகவல்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர்.
- மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளி்ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 83 ஆயிரத்து 710.
பாராளுமன்றத் தேர்தலுக்கு 3687 வாக்குச்சாவடிகளும், 1301 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இவற்றில் 281 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை. 6 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சா வடிகளில் தேர்தல் நாளன்று நடக்கும் அனைத்து நடைமுறைகளும் சி.சி.டி.வி. மூலம் நேரடியாக மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்காக மொத்தம் 9119 வாக்குப்பதிவு கருவிகளும் 4821 கட்டுப்பாட்டுக் கருவிகளும் 5333 யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவியும் பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்துவதற்காக 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் 90 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழுக்கள், 20 காணொலி கண்காணிப்பு குழுக்களும், 10 காணொலி பார்வையாளர் குழுக்களும், வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்கும் பொருட்டு 10 உதவி செலவின குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 87 துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் தங்களது துப்பாக்கிகளை உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். வேட்பாளர்களாக இருப்பவர்கள் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் போன்றவற்றிற்கு அனுமதி பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் சுவிதா 'Suvidha' என்ற இணையதளம் வழியில் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இந்த இணையத்தின் முகவரி 'http:\\suvidha.eci.gov.in' ஆகும். வேட்பாளர்கள் மேற்கண்ட இணைய தளத்தின் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
இந்த இணையத்தின் மூலம் அனுமதி பெற 48 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் இந்த சுவிதா இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். அதேபோல் சி.விஜில் என்னும் கைபேசி செயலி இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை புகார் அளிக்க வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க பொது மக்களுக்காக 044-2766 0642, 044-2766 0643, 044-2766 0644 மற்றும் இலவச தொலைபேசி எண் 1800 425 8515-ல் தங்கள் புகார்களை அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமன்ற தலைவர் அறை மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவற்றை பூட்டி சீல் வைத்தனர். இதேபோல் அரசின் சாதனைகள் குறித்த தகவல்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர். நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மாற்றப்பட்டிருந்த தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டது. இரவு முதலே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.
- விவசாய பாசனத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
- விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பொன்னேரி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது. நேர்முக உதவியாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வண்ண மீன் வளர்ப்பு, மீஞ்சூர், பழவேற்காடு, தாங்கல் பெரும்புலம், வெள்ளக்குளம் பள்ளிபாளையம் பகுதி சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆறு ஏரி குளங்களில் விடுவதால் நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், மெரட்டுர் ஏரியில் இருந்து விவசாய பாசனத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
- சாலையில் பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. .
- மணல் சாலையாகவே காட்சி அளிக்கிறது.
பொன்னேரி:
பொன்னேரி- பழவேற்காடு சாலை மெதூரில் இருந்து அரசூர் சாலை வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, காட்டாவூர், ஐயநல்லூர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. இதில் விடதண்டலம், மேல பட்டறை, கொள்ளுமேடு பகுதி மக்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மெதூர்-அரசூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக ஜல்லி கற்கள் பெயர்ந்து மணல் ரோடாக காட்சி அளிக்கிறது. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படும் சாலையால் பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். சாலையில் பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து மெதூர்-அரசூர் சாலையை சீரமைக்க கோரி விடதண்டலம், மேல பட்டறை, கொள்ளுமேடு பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில மாதத்திற்கு முன்பு இந்த கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மெதூரில் பொன்னேரி-பழவேற்காடு செல்லும் 8 அரசு பஸ்களை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்ததை நடத்திய பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் மற்றும் வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை சாலை சீரமைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மணல் சாலையாகவே காட்சி அளிக்கிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மெதூர்-அரசூர் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை. அடுத்த கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- கைதானவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
- வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே கடந்த மாதம் சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த மின்சார ரெயிலில் பயணம் செய்த பயணிகள் 3 பேரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் ஏறிய 5 பேர் கும்பல் இதில் ஈடுபட்டது தெரிந்தது. இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
டி.ஐ.ஜி. ராமர் உத்தரவின்படி துணை போலீஸ்சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மின்சார ரெயிலில் பயணிகளை வெட்டி கொள்ளையடித்த வழக்கில் கும்மிடிப்பூண்டி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லெவின் என்கிற பூச்சி (26), பொன்னேரி செஞ்சம்மாள் நகரை சேர்ந்த விஜி என்கிற கெல்லீஸ் (24) ஆகிய 2 பேரை இன்ஸ்பெக்டர் சசிகலா கைது செய்தார்.
கைதானவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
- திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரகதகல்லால் ஆன மயில், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் இருப்பதும், திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சிறுவாபுரி கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு, நிலம், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பக்தர்களின் நீண்டநாள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மேலும் இந்த கோவில் செவ்வாய் கிரகத்துக்கு உகந்த கோவில் என்றும் கூறப்படுகிறது. இதனால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்களின் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் சிக்கி திணறி வருகிறார்கள்.
இதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள். செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்தி ருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை நிலவிவருகிறது. ரூ.100 சிறப்பு கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து செல்கிறார்கள்.
இதேபோல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதிலும், வாகனங்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. சிறுவாபுரி-புதுரோடு சாலையிலும், சிறுவாபுரி-அகரம் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே செவ்வாய்க்கி ழமை மற்றும் விழா காலங்களில் அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரையில் நடை திறந்து பக்தர்கள் தரிசனம் நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-
சிறுவாபுரி கோவிலில் முருகனுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட நாட்களில் விடியற்காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு போதுமான அளவு குடிநீர் வசதி, நிழல் தரும் பந்தல் வசதி, தேவையான கழிவறை வசதி தேவையான அளவு இல்லை.
மேலும், கோவிலுக்கு செல்லும் வழியையும், தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வழியையும் ஒவ்வொரு வாரமும் மாற்றி, மாற்றி அமைப்பதால் பக்தர்கள், முதியவர்கள், பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்டோர் கோவிலுக்குள் செல்வதிலும், வெளியே வருவதிலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
சாலையின் இருபுறமும் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளனர். காவல்துறையினரும், வருவாய் துறையினரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஒருவருக்கு, ஒருவர் ஒத்துழைப்பு இல்லாததால் சாலை ஓரம் உள்ள கடைகளை அப்புறப்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.
இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மற்றும் விழா காலங்களில் பக்தர்கள் தரிசன நேரத்தை அதிகரித்தால் கூட்ட நெரிசல் ஏற்படாது. வாகன நெரிசலை தவிர்க்க கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்து போக்கு வரத்தை சரிசெய்யவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- பங்குனி உத்திர விழா இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர்:
திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் உத்திர விழா மிக விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா இன்று காலை 9 மணிக்கு கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் காலை, மாலை உற்சவர் சோமாஸ்கந்தர் பல்வேறு வாகனத்தில் திருவலாங்காட்டில் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
விழாவின் 7ம் நாளான 21-ந்தேதி கமலத்தேர் விழா நடக்கிறது. இதைத்தொடர்ந்து 22-ந்தேதி இரவு வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலியம்மன் திருக்கல்யாணம் நடைப்பெறுகிறது. 24-ந்தேதி இரவு தீர்த்தவாரி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணி செய்து வருகின்றனர்.
- வேப்பம்பட்டு-பெருமாள்பட்டு இடையே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது தந்தை மற்றும் 2 மகள்கள் ரெயில் மோதி பலியானார்கள்.
வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே வேப்பம்பட்டு-பெருமாள்பட்டு இடையே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது தந்தை மற்றும் 2 மகள்கள் ரெயில் மோதி பலியானார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதியில் நிற்கும் மேம்பால பணியை விரைந்து முடிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே மேம்பாலப்பணியை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்றது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணியை முடிக்க கூடுதலாக ரூ.24 கோடி 18 லட்சத்து 83 ஆயிரத்து 895 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலைய மேம்பாலம் கட்டும் பணி இன்று பூமி பூஜையுடன் மீண்டும் தொடங்கியது. இதில் பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- பெண் கவுன்சிலர் நளினியின் கணவர் குருநாதன், நகராட்சியில் குப்பை எடுக்கும் டெண்டர் எடுத்துள்ளார்.
- குருநாதன் மீது புகார்கள் வந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டது.
திருவேற்காடு:
சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 18 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. அதில் 10-வது வார்டு கவுன்சிலராக நளினி குருநாதன் இருந்தார்.
இந்தநிலையில் பெண் கவுன்சிலர் நளினி குருநாதனை, கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து திருவேற்காடு நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவிட்டார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை மீறியதால், சட்ட மீறல்கள் சட்டப்பிரிவு 32-ன் கீழ் கவுன்சிலர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக நகராட்சி கமிஷனர் குறிப்பிட்டு இருந்தார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணைகள் சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பெண் கவுன்சிலர் நளினியின் கணவர் குருநாதன், நகராட்சியில் குப்பை எடுக்கும் டெண்டர் எடுத்துள்ளார். கவுன்சிலரின் குடும்பத்தினரே டெண்டர் எடுப்பது விதிமீறல் ஆகும். மேலும் வேட்பு மனு தாக்கலின் போது உறுதிமொழி பத்திரத்தில் தான் கூலி வேலை செய்து வருவதாக குருநாதன் போலியான தகவலை குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் அவர், கடந்த ஆண்டு தனது வார்டில் எந்தவித பணிகளையும் செய்யவில்லை எனக்கூறி வார்டில் உள்ள பெண்களை அழைத்து வந்து நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி நகராட்சி கமிஷனர் அறையில் அமர்ந்து அவதூறாக பேசியதாகவும் புகார்கள் வந்தது.
தொடர்ந்து குருநாதன் மீது புகார்கள் வந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த விளக்கம் உண்மையானதாக இல்லை என்பதாலும் பெண் கவுன்சிலர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் மற்றும் கடிதம் வருவதை அறிந்த நளினி குருநாதன், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக நகர மன்ற தலைவர் மூர்த்தியிடம் ராஜினாமா கடிதத்தை நேற்று கொடுத்தார்.
கவுன்சிலர் நளினி பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து திருவேற்காடு நகராட்சி இணையதளத்தில் உள்ள கவுன்சிலர்கள் பட்டியலில் இருந்து அவரது புகைப்படம் மற்றும் பதவி உடனடியாக நீக்கப்பட்டது. 10-வது வார்டு காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- பழ வியாபாரிகள் கூடையில் கொண்டு வரும் பழங்களை குரங்குகள் கூட்டமாக வந்து எடுத்து சென்று விடுகின்றன.
- குரங்குகள் துரத்தும் போது பயணிகள் சிலர் தவறி கிழே விழும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
பொன்னேரி:
பொன்னேரி ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து சென்னைக்கு கவரப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், எண்ணூர், திருவொற்றியூர் வழியாக இரு மார்க்கத்திலும் தினமும் 40-க்கும் மேற்பட்ட புறநகர் ரெயில்கள் வந்து செல்கின்றன. பொன்னேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் தினமும் ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பொன்னேரி ரெயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து உள்ளது. 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் குடும்பத்துடன் அங்கு அட்டகாசம் செய்து வருகின்றன. ரெயில் நிலையத்திற்குள் வரும் பயணிகளை ரெயில் நிலையத்திற்கு நுழையும் போதே வாசல் அருகில் நின்று அச்சுறுத்துகின்றன. பயணிகள் பைகளில் கொண்டு வரும் பழங்கள், உணவு பொருட்களை பறித்து சென்று விடுகின்றன. இதனை தடுக்க முயன்றால் பயணிகளை குரங்குகள் கடிக்க பாய்கின்றன.
இதேபோல் பழ வியாபாரிகள் கூடையில் கொண்டு வரும் பழங்களை குரங்குகள் கூட்டமாக வந்து எடுத்து சென்று விடுகின்றன. இதனால் பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.
குரங்குகள் துரத்தும் போது பயணிகள் சிலர் தவறி கிழே விழும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே பொன்னேரி ரெயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்