என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரூ.3 கோடி காப்பீட்டு பணத்திற்காக கட்டுவிரியன் பாம்பை விட்டு கடிக்க வைத்து தந்தையை கொன்ற மகன்கள்!
    X

    ரூ.3 கோடி காப்பீட்டு பணத்திற்காக கட்டுவிரியன் பாம்பை விட்டு கடிக்க வைத்து தந்தையை கொன்ற மகன்கள்!

    • தினகரன் என்பவரிடம் இருந்து ஒரு பாம்பை வாங்கி தந்தையின் காலில் கடிக்க வைத்துள்ளனர். ஆனால், அப்போது கணேசன் உயிர் தப்பிவிட்டார்.
    • மீண்டும் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பை வரவழைத்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, 3 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகத் தனது தந்தையைப் பாம்பைக் கடிக்க வைத்துக் கொலை செய்த இரண்டு மகன்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (56). இவர் அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.

    கடந்த அக்டோபர் மாதம், இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது மகன் மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    கணேசன் இறந்த பிறகு, அவரது மகன்கள் மோகன்ராஜ் (29) மற்றும் ஹரிஹரன் ஆகியோர் காப்பீட்டு நிறுவனத்தை அணுகி 3 கோடி ரூபாய் இழப்பீடு கோரினர்.

    ஆனால், கணேசன் பெயரில் வருமானத்திற்கு மீறிய வகையில் பல காப்பீட்டு பாலிசிகள் இருப்பதையும், அந்த குடும்பத்திற்குப் பல இடங்களில் கடன் இருப்பதையும் கவனித்த காப்பீட்டு நிறுவனம், காவல்துறையிடம் புகார் அளித்தது.

    போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    தந்தையைக் கொன்று விபத்து மரணமாகக் காட்டினால் பெரிய தொகையை ஈட்டலாம் என மகன்கள் திட்டமிட்டுள்ளனர்.

    சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே, தினகரன் என்பவரிடம் இருந்து ஒரு பாம்பை வாங்கி தந்தையின் காலில் கடிக்க வைத்துள்ளனர். ஆனால், அப்போது கணேசன் உயிர் தப்பிவிட்டார்.

    மீண்டும் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பை வரவழைத்து, அக்டோபர் 22 அதிகாலையில் கணேசனின் கழுத்தில் கடிக்க வைத்துள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.

    பாம்பு கடித்தவுடன், அது தானாக வீட்டிற்குள் வந்தது போலக் காட்ட அந்தப் பாம்பை அங்கேயே அடித்துக் கொன்றுள்ளனர்.

    இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் மற்றும் அவர்களுக்குப் பாம்பை ஏற்பாடு செய்தும் உதவி புரிந்தும் வந்த பாலாஜி, பிரசாந்த், தினகரன், நவீன்குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×