என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvallur"

    • அதி கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
    • பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போத ரெட் அலர்ட்.

    சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு.
    • மருத்துவ உதவிக்கு 93848 14050 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    டிட்வா புயுல் நெருங்கி வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர கால உதவி எண்களை அம்மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார்.

    அதன்படி, அவசர உதவிக்கு 72990 04456 என்ற எண்ணிற்கும், கால்நடை பாதிப்பிற்கு 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    மேலும், மருத்துவ உதவிக்கு 93848 14050 என்ற எண்ணிற்கும், அவசர தேவைக்கு கட்டுப்பாட்டு அறை 1077 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
    • சசிகாந்த் செந்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்தார்.

    காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் நேற்று அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், சசிகாந்த் செந்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சசிகாந்த் செந்திலின் இதய துடிப்பில் மாற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் நிலையில் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவன் என்று தகவல்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பள்ளி முடித்து வீடு திரும்பிய 10 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஆரம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்தே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவன் என்றும், சம்பவத்தன்று அணிந்திருந்த அதே உடையுடன் கைது செய்யப்பட்டுள்ளான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    • சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
    • 8 அதிவிரைவு ரெயில்கள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

    சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 8 அதிவிரைவு ரெயில்கள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    ரத்து செய்யப்பட்டுள்ள ரெயில்களில் பட்டியல்:

    1. காலை 5.50 மணிக்கு சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில்

    2. காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரெயில்

    3. காலை 6.10 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்படும் கோவை விரைவு ரெயில்

    4. காலை 7.15 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரெயில்

    5. காலை 6.25 மணிக்கு சென்னையில் இருந்து திருப்பதிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரெயில்

    6. காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு புறப்படும் டபுல்டெக்கர் விரைவு ரெயில்

    7. காலை 7.40 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு புறப்படும் பிருந்தாவன் விரைவு ரெயில்

    8. காலை 9.15 மணிக்கு சென்னையில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள நாகர்சோல் செல்லும் விரைவு ரெயில்

    • பெங்களூருக்கு டீசல் ஏற்றிச் சென்றபோது சரக்கு ரெயிலில விபத்து ஏற்பட்டுள்ளது.
    • பயணிகள் பாதுகாப்பிற்காக ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

    விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.

    அதில், சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு டீசல் ஏற்றிச் சென்றபோது சரக்கு ரெயிலில விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடைபெறுகிறது.

    தீ விபத்து காரணமாக விரைவு ரெயில் செல்லும் வழித்தடத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தீ விபத்து எதிரொலியால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பிற்காக ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும் ரெயில் போக்குவரத்து தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சரக்கு ரெயிலில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
    • திருவள்ளூர் பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயிலில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    சரக்கு ரெயில் தீப்பற்றி எரியும் இடத்தில மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தீ பற்றி எரியும் இடத்தில வேடிக்கை பார்ப்பதற்காக பொதுமக்கள் யாரும் வரவேண்டாம்" என்று தெரிவித்தார்.

    • ஊரைச் சுற்றி சித்தர்களும் மா முனிவர்களும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
    • சிவலிங்கத்தை பாதுகாக்க வேண்டியது ஊர் மக்களின் பொறுப்பு.

    திருவள்ளூர் அடுத்த கொப்பூர் (திருகாபூர்) கிராமத்தில் இருக்கும் இடமெல்லாம் சிவலிங்கம். இந்த கிராமத்தைச் சுற்றி களத்துமேட்டில், வரப்பு, மாந்தோப்பில், குளக்கரை, முட்புதரில் மற்றும் பல்வேறு பகுதிகளில் சில காலங்களுக்கு முன் 108 சிவ லிங்கங்களும், நந்தியும், குட்டையும் கிராமத்தைச் சுற்றி இருந்ததாகக் கூறுகிறார்கள்.

    இந்த கொப்பூர் கிராமத்தின் மூத்தவரான திருவேங்கட நாயகர், தன் பதினைந்தாவது வயதில் மாடு மேய்க்கும்போது 65 சிவலிங்கங்கள் வரை பார்த்திருப்பதாகக் கூறுகிறார்.

    மேலும் முனிவர்களும் சித்தர்களும் 108 சிவலிங்கம் நந்தி குட்டைகளை அமைத்து பூஜைகள் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சிவலிங்கம் எல்லாம் கவனிப்பாரற்றுப் பூமிக்குள் புதையுண்டு போய் கொண்டிருக்கின்றன. சிவமயமான கிராமத்தில் தற்போது மக்கள் வழிபடுவது வைணவக் கடவுள்.

    தற்போது இந்த கிராமத்தில் 8 சிவலிங்கங்கள் பூமிக்குள் இருந்து எடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    ஆனால் கடந்த சில ஆண்டில் வெளியே இருந்த சிலலிங்கங்கள், மண்ணில் புதைந்தும் முட்புதர்களால் மூடியும் காணாமல் போனதாக பார்க்க முடிந்தது.

     

    ஆனால் இந்த கொப்பூர் கிராமத்தில் தோண்டுகின்ற இடமெல்லாம் விநாயகர், சிவலிங்கமும், நந்தியும். அம்பாள், சூரிய பகவான் பல்வேறு கடவுள் சிலைகளும் கிடைக்கும் கிராமமாக விளங்குகிறது.

    இந்த கிராமம் சென்னையில் இருந்து 38 கி.மீ. தூரத்தில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அரண்வாயில் குப்பம் பகுதியில் இருந்து ஸ்ரீபெருமந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

    இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னோர்கள் வழிவழியாக பெரியோர்கள் "தங்களது தாத்தா காலத்தில் 108 சிவலிங்கமும், நந்தியும், குட்டையும் இருந்ததாகக் கூறியிருக்கிறார்.

    என் அப்பா காலத்தில் இது இன்னமும் குறைந்து தற்போது 8 லிங்கங்கள் தான் பார்வைக்குத் தெரிகின்றன. எங்கள் ஊருக்கு மேற்கே 'சிவலிங்கமேடு' என்ற பகுதி உண்டு. இப்பகுதியில்தான் ஏராளமான சிவலிங்கங்கள் இருந்தன.

    இந்த கிராமம் ஆரம்பத்துல சிவ மதம்தான் இருந்தது. இந்த ஊரைச் சுற்றி சித்தர்களும் மா முனிவர்களும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர் காலத்தில வைணவத்துக்கு மாறியிருக்கணும். (ராமானுஜர் காலம் கி.பி. 10-ம் நூற்றாண்டு). அதுக்கு முன்னாடி இங்க சைவ மதம் தழைத்திருந்திருக்க வேண்டும்.

    அப்போது இந்த மண்ணில் மாமன்னரும், சிற்றரசரும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நடைபெறும் திருவிழாநாளில் அரசர் இந்த 108 சிவலிங்கத்தையும் வழிபடுவார்கள்.

    3- ம் நூற்றாண்டில் இருந்து 5- ம் நூற்றாண்டுவரை தமிழகச்சரித்திரத்தின் இருண்டகாலமாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ அந்த காலகட்டத்துக்குப் பின்புதான் இக்கிராமம் சைவ மதத்தை தழுவி இருந்திருக்க வேண்டும்.

    ராமானுஜரின் காலத்துக்குப் பிறகு வைணவ மதத்துக்கு மாறிய இந்த ஊர் மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீனிவாசப் பெருமாளின் ஐம்பொன் சிலை பூமிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

    நவாபுகள் வருகையால் ஐம்பொன் சிலைக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சி, சிலைகளைப் பூமியில் புதைத்து வைத்தார்கள். அதில் ஒரு சிலை, 1983-ம் ஆண்டு வீடுகட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டும் போது கிடைத்தது.

    லட்சுமி நரசிம்ம பெருமாள் சிலை. 600-700 ஆண்டுகளுக்கு முந்தைய சிலையென்றும் 83-ம் ஆண்டு அரசுத்தரப்பில் கூறினார்கள்.

    கொப்பூர் கிராமம் அருகே முகலாயர்கள் தண்டல் வசூலித்த இடம் தற்போது தண்டலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த கொப்பூர் கிராமத்தில் ஒரு கட்டத்தில் ஊரே பாழாகி (வீடு, மாடு, கன்றெல்லாம் பறிபோனதை அப்படிச் சொல்கிறார்கள்) எல்லாரும் ஊரை விட்டு வேறிடங்களுக்குப் போய் விட்டார்கள். பிறகு மூன்று குடும்பத்தார் மீண்டும் குடியேறி இப்போது 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களாகப் பெருகியிருக்கிறது.

    இந்த கிராமத்தில் பூமியில் தோண்டியெடுக்கப்பட்ட ஐம்பொன்சிலைகளைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. 'இது எங்கள் புராதனச் சொத்து தரமுடியாது' என்று கொப்பூர் ஊரில் இருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலேயே அவற்றை வைத்திருக்கிறார்கள்.

    மேலும் இந்த ஊரில் உள்ள சிவலிங்கத்தை பாதுகாக்க வேண்டியது ஊர் மக்களின் பொறுப்பு. அதற்காக கோவில் கட்டிச் செழுமைப்படுத்துவதிலும் ஆண்டுதோறும் விழா நடத்துவதும் ஊர் மக்களின் கடமை.

    இந்த ஊர் எல்லையில் பூமிக்கு அடியில் கிடைத்த சிவலிங்கம், நந்தீஸ்வரர், விநாயகர், அம்பாள் உள்ளிட்ட கடவுள் சிலைகள் சாய்ந்த நிலையில் உள்ளதால் பக்தர்கள் வேண்டுதலை செவி கொடுத்து கேட்டு அருள் அளிப்பதாக ஊர் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றனர்.

    • 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் முக்கிய ரெயில் நிலையமாக உள்ளது.

    சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணிக்கு செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் காட்பாடி, திருப்பதி, மும்பை, பெங்களூர் விரைவு ரெயில்கள் என தினந்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ரெயில்கள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய நகரமாக உள்ள திருவள்ளூரில் சிறப்பு பெற்ற வீரராகவப் பெருமாள் கோவில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்து அதிநவீன ரெயில் நிலையங்களாக மாற்ற தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

    இதில்முதல் கட்டமாக 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னை சென்ட்ரல்–அரக்கோணம் கோட்டத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையம் ரூ.28.82 கோடியில் மறு சீரமைப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இதில் புதிய ரெயில் நிலையக் கட்டிடம், நடை மேடைகளின் தரை மற்றும் கூரை சீரமைப்பு, ரெயில் நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் சீரமைக்கப்படும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் அனைத்தையும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் லிப்ட் வசதி, 12 மீட்டர் அகலம்கொண்ட பயணிகள் நடைமேம்பாலம் வருகிறது. மேலும் நடைமேடைகளிலும் பயணிகள் நடமாடும் இடங்களிலும் பயனுள்ள தகவல் அளிக்க திரைகள், கண்காணிப்பு கேமரா அமைப்பது என பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.

    இதற்கிடையே சீரமைப்பு பணிகாரணமாக ரெயில் நிலைய முகப்பு வழியாக பயணிகளை அனுமதிக்க வில்லை. சுரங்கப்பாதை வழியாக சென்று வருகிறார்கள். மேலும் பயணச் சீட்டு வழங்கும் இடம் நடை மேடை 1-ல் உள்ளது. அங்கும் பணிகள் நடை பெற்று வருவதால் பயண சீட்டை வாங்க பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ரெயில்நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
    • பலத்த காற்றுடன் மிதமான மழை இன்று பெய்யக் கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தென் னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில இடங் களில் லேசான மழை பெய்யும்.

    புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை இன்று பெய்யக் கூடும்.

    கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை பகுதிகளில், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை செய்யக்கூடும். இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. 5 மாதத்திற்கு பிறகு சென்னையில் 2 நாட்களாக மாலையில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பல்வேறு இடங்களில் விதிமுறைகள் மீறி பிரமாண்ட பேனர்களை வைத்து உள்ளனர்.
    • விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலை ஓரம் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விதிமுறைகள் மீறி விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. விளம்பர பேனர் வைக்க வேண்டும் என்றால் அந்தந்த நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி கோரி குறிப்பிட்ட தொகை செலுத்தி போலீசாரிடம் அனுமதி பெற்று வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    எனினும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விதிமுறைகள் மீறி பிரமாண்ட பேனர்களை வைத்து உள்ளனர்.

    இவ்வாறு வைக்கப்படும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலை ஓரம் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர் ஒன்று காற்றில் சரிந்தது. அந்த பேனர் எப்போது வேண்டுமானாலும் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது விழும் அபாய நிலையில் காட்சி அளித்தது. இதனால் அவ்வழியே செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது.

    எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த விளம்பர பேனர்களை அகற்றி, விதிமுறைகள் மீறி விளம்பர பேனர்கள் வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
    • போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    சி.ஐ.டி.யூ காஞ்சிபுரம் மண்டல துணைத் தலைவர் மாயக்கண்ணன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் முன்னாள் நகர மன்ற தலைவர் சுந்தர்ராஜன், சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன், போக்குவரத்து படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான வேண்டும்.

    வாரிசு வேலை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    இதில் கோயம்பேடு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×