search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvallur"

    • 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் முக்கிய ரெயில் நிலையமாக உள்ளது.

    சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணிக்கு செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் காட்பாடி, திருப்பதி, மும்பை, பெங்களூர் விரைவு ரெயில்கள் என தினந்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ரெயில்கள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய நகரமாக உள்ள திருவள்ளூரில் சிறப்பு பெற்ற வீரராகவப் பெருமாள் கோவில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்து அதிநவீன ரெயில் நிலையங்களாக மாற்ற தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

    இதில்முதல் கட்டமாக 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னை சென்ட்ரல்–அரக்கோணம் கோட்டத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையம் ரூ.28.82 கோடியில் மறு சீரமைப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இதில் புதிய ரெயில் நிலையக் கட்டிடம், நடை மேடைகளின் தரை மற்றும் கூரை சீரமைப்பு, ரெயில் நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் சீரமைக்கப்படும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் அனைத்தையும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் லிப்ட் வசதி, 12 மீட்டர் அகலம்கொண்ட பயணிகள் நடைமேம்பாலம் வருகிறது. மேலும் நடைமேடைகளிலும் பயணிகள் நடமாடும் இடங்களிலும் பயனுள்ள தகவல் அளிக்க திரைகள், கண்காணிப்பு கேமரா அமைப்பது என பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.

    இதற்கிடையே சீரமைப்பு பணிகாரணமாக ரெயில் நிலைய முகப்பு வழியாக பயணிகளை அனுமதிக்க வில்லை. சுரங்கப்பாதை வழியாக சென்று வருகிறார்கள். மேலும் பயணச் சீட்டு வழங்கும் இடம் நடை மேடை 1-ல் உள்ளது. அங்கும் பணிகள் நடை பெற்று வருவதால் பயண சீட்டை வாங்க பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ரெயில்நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஊரைச் சுற்றி சித்தர்களும் மா முனிவர்களும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
    • சிவலிங்கத்தை பாதுகாக்க வேண்டியது ஊர் மக்களின் பொறுப்பு.

    திருவள்ளூர் அடுத்த கொப்பூர் (திருகாபூர்) கிராமத்தில் இருக்கும் இடமெல்லாம் சிவலிங்கம். இந்த கிராமத்தைச் சுற்றி களத்துமேட்டில், வரப்பு, மாந்தோப்பில், குளக்கரை, முட்புதரில் மற்றும் பல்வேறு பகுதிகளில் சில காலங்களுக்கு முன் 108 சிவ லிங்கங்களும், நந்தியும், குட்டையும் கிராமத்தைச் சுற்றி இருந்ததாகக் கூறுகிறார்கள்.

    இந்த கொப்பூர் கிராமத்தின் மூத்தவரான திருவேங்கட நாயகர், தன் பதினைந்தாவது வயதில் மாடு மேய்க்கும்போது 65 சிவலிங்கங்கள் வரை பார்த்திருப்பதாகக் கூறுகிறார்.

    மேலும் முனிவர்களும் சித்தர்களும் 108 சிவலிங்கம் நந்தி குட்டைகளை அமைத்து பூஜைகள் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சிவலிங்கம் எல்லாம் கவனிப்பாரற்றுப் பூமிக்குள் புதையுண்டு போய் கொண்டிருக்கின்றன. சிவமயமான கிராமத்தில் தற்போது மக்கள் வழிபடுவது வைணவக் கடவுள்.

    தற்போது இந்த கிராமத்தில் 8 சிவலிங்கங்கள் பூமிக்குள் இருந்து எடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    ஆனால் கடந்த சில ஆண்டில் வெளியே இருந்த சிலலிங்கங்கள், மண்ணில் புதைந்தும் முட்புதர்களால் மூடியும் காணாமல் போனதாக பார்க்க முடிந்தது.

     

    ஆனால் இந்த கொப்பூர் கிராமத்தில் தோண்டுகின்ற இடமெல்லாம் விநாயகர், சிவலிங்கமும், நந்தியும். அம்பாள், சூரிய பகவான் பல்வேறு கடவுள் சிலைகளும் கிடைக்கும் கிராமமாக விளங்குகிறது.

    இந்த கிராமம் சென்னையில் இருந்து 38 கி.மீ. தூரத்தில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அரண்வாயில் குப்பம் பகுதியில் இருந்து ஸ்ரீபெருமந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

    இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னோர்கள் வழிவழியாக பெரியோர்கள் "தங்களது தாத்தா காலத்தில் 108 சிவலிங்கமும், நந்தியும், குட்டையும் இருந்ததாகக் கூறியிருக்கிறார்.

    என் அப்பா காலத்தில் இது இன்னமும் குறைந்து தற்போது 8 லிங்கங்கள் தான் பார்வைக்குத் தெரிகின்றன. எங்கள் ஊருக்கு மேற்கே 'சிவலிங்கமேடு' என்ற பகுதி உண்டு. இப்பகுதியில்தான் ஏராளமான சிவலிங்கங்கள் இருந்தன.

    இந்த கிராமம் ஆரம்பத்துல சிவ மதம்தான் இருந்தது. இந்த ஊரைச் சுற்றி சித்தர்களும் மா முனிவர்களும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர் காலத்தில வைணவத்துக்கு மாறியிருக்கணும். (ராமானுஜர் காலம் கி.பி. 10-ம் நூற்றாண்டு). அதுக்கு முன்னாடி இங்க சைவ மதம் தழைத்திருந்திருக்க வேண்டும்.

    அப்போது இந்த மண்ணில் மாமன்னரும், சிற்றரசரும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நடைபெறும் திருவிழாநாளில் அரசர் இந்த 108 சிவலிங்கத்தையும் வழிபடுவார்கள்.

    3- ம் நூற்றாண்டில் இருந்து 5- ம் நூற்றாண்டுவரை தமிழகச்சரித்திரத்தின் இருண்டகாலமாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ அந்த காலகட்டத்துக்குப் பின்புதான் இக்கிராமம் சைவ மதத்தை தழுவி இருந்திருக்க வேண்டும்.

    ராமானுஜரின் காலத்துக்குப் பிறகு வைணவ மதத்துக்கு மாறிய இந்த ஊர் மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீனிவாசப் பெருமாளின் ஐம்பொன் சிலை பூமிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

    நவாபுகள் வருகையால் ஐம்பொன் சிலைக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சி, சிலைகளைப் பூமியில் புதைத்து வைத்தார்கள். அதில் ஒரு சிலை, 1983-ம் ஆண்டு வீடுகட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டும் போது கிடைத்தது.

    லட்சுமி நரசிம்ம பெருமாள் சிலை. 600-700 ஆண்டுகளுக்கு முந்தைய சிலையென்றும் 83-ம் ஆண்டு அரசுத்தரப்பில் கூறினார்கள்.

    கொப்பூர் கிராமம் அருகே முகலாயர்கள் தண்டல் வசூலித்த இடம் தற்போது தண்டலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த கொப்பூர் கிராமத்தில் ஒரு கட்டத்தில் ஊரே பாழாகி (வீடு, மாடு, கன்றெல்லாம் பறிபோனதை அப்படிச் சொல்கிறார்கள்) எல்லாரும் ஊரை விட்டு வேறிடங்களுக்குப் போய் விட்டார்கள். பிறகு மூன்று குடும்பத்தார் மீண்டும் குடியேறி இப்போது 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களாகப் பெருகியிருக்கிறது.

    இந்த கிராமத்தில் பூமியில் தோண்டியெடுக்கப்பட்ட ஐம்பொன்சிலைகளைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. 'இது எங்கள் புராதனச் சொத்து தரமுடியாது' என்று கொப்பூர் ஊரில் இருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலேயே அவற்றை வைத்திருக்கிறார்கள்.

    மேலும் இந்த ஊரில் உள்ள சிவலிங்கத்தை பாதுகாக்க வேண்டியது ஊர் மக்களின் பொறுப்பு. அதற்காக கோவில் கட்டிச் செழுமைப்படுத்துவதிலும் ஆண்டுதோறும் விழா நடத்துவதும் ஊர் மக்களின் கடமை.

    இந்த ஊர் எல்லையில் பூமிக்கு அடியில் கிடைத்த சிவலிங்கம், நந்தீஸ்வரர், விநாயகர், அம்பாள் உள்ளிட்ட கடவுள் சிலைகள் சாய்ந்த நிலையில் உள்ளதால் பக்தர்கள் வேண்டுதலை செவி கொடுத்து கேட்டு அருள் அளிப்பதாக ஊர் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றனர்.

    காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து உள்ளனர்.
    திருவள்ளூர்:

    பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 3-ம் நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது.

    இதனால் திருவள்ளூர் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    பெரும்பாலான சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதால் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை என்று திரும்பி சென்றனர்.

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கதிரவன், சவுத்ரி, இளங்கோவன், ஞானசேகரன், பாஸ்கர், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து வட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் மற்றும் மறியல் 3-வது நாளாக நடைபெற்றது. காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட் பகுதியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் ஜெபநேசன், ஜியோ ஒருங்கிணைப்பாளர் விக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அரசு வருவாய்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

    போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வருவாய்துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சி துறை அலுவலகர்கள் சங்கம், சத்துணவு ஊழியர்கள் சங்கம், கிராம உதவியாளர் சங்கம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினரும், 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சங்கங்களும் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டத்தில் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை (25-ந் தேதி) மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
    காஞ்சீபுரம்:

    108 திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள்கோவில், அஷ்டபுஜம் பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சீபுரம் உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர்கள் குமரன், கவிதா உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் உள்ள புகழ் பெற்ற பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    இதேபோல் 108 திவ்யதேசங்களில் ஒன்றான மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சொர்க்க வாசல் திறப்பையொட்டி குலசேகரஆழ்வார் ராமானுஜா அறக்கட்டளை சார்பில் வைணவ பக்தர் கிருஷ்ணராமானுஜர் தாசர் விழாவில் கலந்து கொண்ட 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சங்கர் செய்திருந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பள்ளிப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதநாராயண சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழும் திருவள்ளூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதே போல திருவள்ளூர் பூங்காநகரில் உள்ள ஜலநாராயண சாமி கோவில் மற்றும் பேரம்பாக்கம் கமலவள்ளி சமேத வைகுண்ட பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர் மற்றும் திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    தமிழகத்தில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கவேண்டும். முறையான பதவி உயர்வு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டு நடவடிக்கை குழுவின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமா, ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான அரசு மருத்துவமனை டாக்டர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு திருத்தணி பிராந்தியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் அரசு டாக்டர்கள் தங்களது அனைத்து மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில் திருத்தணி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ஹேமாவதி மற்றும் திருத்தணி பிராந்தியத்துக்கு உட்பட்ட பீரகுப்பம், பூனிமாங்காடு, அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய மருத்துவமனைகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    அப்போது அவர்கள் கூறும்போது, “எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்போராட்டங்கள் நடத்தப்படும். முதல் கட்டமாக வருகிற 24-ந்தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 27-ந்தேதி முதல் அலுவலக ரீதியாக ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும். அடுத்தமாதம் 21-ந்தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்வோம்” என்றனர். 
    திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் ராபின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், தொழிற் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், முரளிதரன், குமார், பிரபு சி.ஜ.டி.யு. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் திரளான அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வேண்டும், பெட்ரோல், கியாஸ், டீசல் வரிவிதிப்பை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும், ஆட்டோக்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
    திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் இருந்து நூதன முறையில் பயணிகள் ஆட்டோவில் மணல் கடத்தப்படுவதாக ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர், போலீசாருடன் ஆரணி மசூதி அருகே ஆரணியில் இருந்து பனையஞ்சேரி சென்ற பயணிகள் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஒரு பயணிகள் ஆட்டோ, போலீசாரை கண்டதும் வந்த வழியே திரும்பிச் செல்ல முயன்றது. உடனடியாக போலீசார், அந்த ஆட்டோவை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.

    அதில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஆட்டோவை சோதனை செய்தபோது, ஆரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிந்தது. மணல் மூட்டைகளுடன் அந்த ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் புட்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக புட்லூரைச் சேர்ந்த ராஜசேகர்(வயது 25), பிரவீன்(26), தியாகு(26), கோதண்டன்(47) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
    திருவள்ளூரில் இருந்து தாம்பரத்துக்கு இடையே மீண்டும் மாநகர பஸ் இயக்கப்படுமா? என்பது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். #Minister #MRVijayabaskar
    சென்னை:

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர் தொகுதி) துணை கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசும்போது, ‘ திருவள்ளூரில் இருந்து தாம்பரம் வரை 566 ஏ என்ற எண் கொண்ட 5 நகர பஸ்கள் நாள்தோறும் 10 நடைகள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த 6 மாதகாலமாக அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு, திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி வரை 597 ஏ என்ற எண் கொண்ட பஸ்கள் தான் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூரில் இருந்து தாம்பரத்துக்கு வேலைநிமித்தமாக ஏழை-எளிய மக்களுக்கும், படிப்புநிமித்தமாக மாணவர்களும் சென்று கொண்டிருக்கக் கூடிய இந்த வேளையில் 6 மாதகாலமாக நிறுத்தப்பட்டதை மாற்றி திருவள்ளூரில் இருந்து தாம்பரம் வரை மீண்டும் பஸ்கள் இயக்கப்படுமா?’ என்று கேட்டார்.

    அதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் அளித்து பேசும்போது ‘அந்த வழித்தடத்தில் பயணிகளின் அடர்வினை ஆய்வு செய்து, தேவை இருந்தால் பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அரசு ஆவன செய்யும்’ என்று தெரிவித்தார். #Minister #MRVijayabaskar
    திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஈக்காடு டீச்சர்ஸ் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் மூர்த்தி. ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வடமதுரையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 8 சவரன் நகை, ரூ.13 ஆயிரம் கொள்ளைபோனது தெரிந்தது. #Tamilnews

    திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு அதிகரித்துள்ளதாக கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
    திருவள்ளூர்:

    பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

    பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் பெண் பாலின பிறப்பு விகிதம் மற்றும் பெண் குழந்தையின் கல்வியினை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் ஒரு சிறப்பு திட்டம் ஆகும்.

    பொது மக்களிடையே குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்த திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

    அதன் ஒரு பகுதியாக பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கத்தில் சுகாதாரத் துறையில் பணியாற்றும் பணியாளர்களுடன் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    திருத்தணி, பொன்னேரி, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஊத்துக்கோட்டை, ஆவடி, பூந்தமல்லி, பழவேற்காடு, திருவொற்றியூர், மாதவரம் ஆகிய 12 அரசு ஆஸ்பத்திரிகளில் 30 ஆயிரத்து 416 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டரிடம் கர்ப்பிணிகளை பரிசோதிக்க உரிய கருவிகளை நிறுவி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் வசதிகளை மேம்படுத்த கோரிக்கை மனுவை பொதுமக்கள் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் அனுரத்னா உள்பட பலர் பங்கேற்றனர். #tamilnews
    திருவள்ளூர் மாவட்டத்தில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைகள் மாயமான சம்பவத்தில் வங்கி ஊழியர் உட்பட 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து நகைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். #bankrobbery #staffarrested
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.9 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    32 கிலோ எடை உள்ள அந்த நகைகள் அனைத்தும் அடகு நகைகளாகும். அவற்றை திருவள்ளூர் மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த சுமார் 600 பேர் அடகு வைத்திருந்தனர்.

    வங்கிக் கதவுகள் மற்றும் லாக்கர் உள்ளிட்ட எதையும் உடைக்காமல் கள்ளச் சாவிகளை பயன்படுத்தி இந்த துணிகர கொள்ளை நடந்திருந்தது வங்கி மேலாளர் சேகர், உதவி மேலாளர் பானு இருவரும் நேற்று காலை வங்கிக்கு வந்தபோது தான் இந்த கொள்ளை பற்றி தெரிய வந்தது.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி மற்றும் திருவள்ளூர் டவுன் போலீசார் அந்த வங்கிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது வங்கி லாக்கரில் நகைகளுடன் வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்படாமல் அப்படியே இருந்ததை கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த வங்கியில் மொத்தம் 7 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த 7 கேமிராக்களும் திசை மாற்றி வைக்கப்பட்டிருந்தன.

    இதன் மூலம் ரூ.9 கோடி நகைகளை யாரோ ஒரு வங்கி ஊழியர்தான் கொள்ளையடித்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த தனிப்படை போலீசார், வங்கி ஊழியர்கள் அனைவரிடமும் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    பிறகு வங்கி ஊழியர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அந்த கைரேகை பதிவுகளை, வங்கி வாசல் கதவு மற்றும் லாக்கர்களில் ஏற்கனவே பதிவாகி இருந்த கைரேகை பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தனர்.

    அந்த கைரேகை ஆய்வில் 5 வங்கி ஊழியர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த 5 பேரையும் கடம்பத்தூர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். நேற்று பிற்பகல் 3 மணிக்கு அவர்களிடம் விசாரணை தொடங்கியது.


    இன்று அதிகாலை வரை விடிய, விடிய விசாரணை நடந்தது. 5 ஊழியர்களில் 3 பேரை போலீசார் விடுவித்தனர். 2 பேரிடம் தீவிர விசாரணை நீடித்தது. அந்த 2 பேரில் ஒருவர்தான் முக்கிய குற்றவாளி என்பதை நள்ளிரவில் தனிப்படை போலீசார் உறுதி செய்தனர்.

    அந்த முக்கிய குற்றவாளியின் பெயர் விஸ்வநாதன். இவர் அந்த வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். முதலில் இவர் வங்கியை சுத்தம் செய்யும் பணிக்காகத்தான் வேலையில் சேர்ந்தார்.

    ஓராண்டுக்கு முன்பு அவரை அலுவலக உதவியாளராக மாற்றினார்கள். அதன் பிறகே அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகள் அடகு நகைகளை லாக்கரில் எடுத்து வைக்கவும், லாக்கரை பூட்டவும் அவர் உதவியாக இருந்துள்ளார்.

    நகைகளைப் பார்த்ததும் அவருக்கு அவற்றை கொள்ளையடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவர் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகில் புதிய வீடு ஒன்றை சில லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கினார். அந்த கடனை அடைக்கவும், சொகுசாக வாழவும் அவருக்கு பணம் தேவைப்பட்டது.

    இதையடுத்து லாக்கரில் உள்ள அடகு நகைகளை திருட முடிவு செய்தார். இதுபற்றி வங்கியின் கீழ் தளத்தில் உள்ள தனது கூட்டாளிகளான சூப்பர் மார்க்கெட் சூப்பர்வைசர் ஜெய்கணேஷ், காவலாளி கவுதம் இருவரிடமும் தெரிவித்தார். உடனே அவர்களும் இந்த கொள்ளையில் சேர சம்மதித்தனர்.

    இதையடுத்து கடந்த சில வாரங்களாக அவர்கள் கொள்ளைக்கான ஏற்பாடுகளை செய்தனர். சுலபமாக நகைகளை திருடுவதற்கு வசதியாக வங்கி கதவு மற்றும் லாக்கர்களின் சாவிகளை நைசாக எடுத்துச்சென்று கள்ளச் சாவிகளைத் தயாரித்தனர்.

    அதன் பிறகு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். ரொக்கப் பணத்தில் கை வைத்தால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அவர்கள் ரூ.25 லட்சத்தைத் தொடவில்லை. ஆனால் கைரேகை பதிவுகள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டன.

    முதலில் பியூன் விஸ்வநாதன் குற்றத்தை ஒத்துக் கொள்ளவில்லை. நல்லவன் போல நடித்தார். ஆனால் கைரேகை பதிவு ஆதாரத்தைக் காட்டியதும் அமைதியாகி விட்டார். இனியும் தப்ப முடியாது என்ற நிலை வந்த பிறகே அவர் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டார்.

    அதன் பிறகே அவருக்கு ஜெய்கணேசும், கவுதமும் உதவியாக இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் தான் 32 கிலோ அடகு நகைகள் இருந்தன. அந்த 32 கிலோ நகைகளையும் தனிப்படை போலீசார் அதிரடியாக செயல்பட்டு மீட்டனர்.

    விஸ்வநாதன், ஜெய் கணேஷ், கவுதம் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தனி இடத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் மிகத் திறமையாக செயல்பட்டு 12 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள விதத்தைப் பார்த்ததுமே போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, இந்த கொள்ளை வங்கி ஊழியரின் உதவி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார். அந்த கோணத்தை நோக்கியே அவர் 5 தனிப்படைகளை உருவாக்கி விசாரணையை முடுக்கி விட்டார்.

    வங்கி ஊழியர்கள் ஒவ்வொருவர் பற்றியும் முழுமையாக ஆய்வு செய்த போலீசார், இறுதியில் அது பியூன் விஸ்வநாதன் செய்த கைவரிசை என்பதை கண்டுபிடித்து விட்டனர். என்றாலும் 32 கிலோ நகைகளையும் மீட்பதற்காக எந்த தகவல்களையும் வெளியிடாமல் இருந்தனர்.

    இன்று அதிகாலை 32 கிலோ நகைகளும் மீட்கப்பட்ட பிறகே, குற்றவாளிகள் பற்றிய தகவல்களை போலீசார் வெளியிட்டனர். 12 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ததோடு, ரூ.9 கோடி அடகு நகைகளையும் மீட்ட போலீசாரை திருவள்ளூர் நகர மக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.. #bankrobbery #staffarrested
    திருவள்ளூர் மாவட்டத்தில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #bankrobbery
    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் இருந்து சென்னை வரும் சாலையில் சுமார் 2½ கிலோ மீட்டர் தொலைவில் ஆயில் மில் என்றொரு பகுதி உள்ளது.

    அங்குள்ள 3 மாடி கட்டிடத்தில் கீழ் தளத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றும், முதல் தளத்தில் “பேங்க் ஆப் இந்தியா” கிளையும் செயல் பட்டு வருகிறது.

    அந்த வங்கியின் அருகில் மற்றொரு வங்கியும் 4 ஏ.டி.எம்.களும் இருக்கின்றன. இந்த வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களுக்கு இரவு நேர காவலாளிகள் இல்லை. அதைப் பயன்படுத்தி நேற்றிரவு மர்ம மனிதர்கள் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்குள் புகுந்து கைவரிசை காட்டி விட்டனர்.

    முதல் தளத்தில் உள்ள அந்த வங்கிக்கு செல்ல, கீழ் தள சூப்பர் மார்க்கெட்டின் பக்கவாட்டுப் பகுதியில் பாதை உள்ளது. மாலையில் வங்கிப் பணிகள் முடிந்ததும் அந்த பாதையை “‌ஷட்டர்” மூலம் மூடி விட்டு செல்வார்கள்.

    நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் வரைதான் வங்கிப் பணிகள் நடந்தது. அதன் பிறகு ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டுச் சென்றனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி மூடப்பட்டிருந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணி அளவில் வங்கிக்கு ஊழியர்கள் வந்தனர். நுழைவுப் பகுதியில் உள்ள ‌ஷட்டர் திறந்து இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    பதட்டத்துடன் வங்கி உள்ளே சென்று பார்த்த போது, ஊழியர்கள் அமர்ந்து பணிபுரியும் இடங்களில் எந்த குளறுபடிகளும் இல்லாமல் இருந்தது. கேஷியர் அறையும் உடைக்கப்படவில்லை.

    வங்கி ஊழியர்கள் அவசரம், அவசரமாக நகைகள் உள்ள பெட்டகம் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு பெட்டகங்கள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    நகைப் பெட்டகங்கள் அனைத்தும் கள்ளச் சாவிப் போட்டு திறக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் வாடிக்கையாளர்களின் அடகு நகைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த அடகு நகைகள் அனைத்தையும் மர்ம மனிதர்கள் வாரி சுருட்டி எடுத்துச் சென்று விட்டனர்.

    அடகு நகைகளில் ஒரு நகையைக்கூட கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. பெட்டகங்களை துடைத்து வைத்தது போல அனைத்தையும் அள்ளிச் சென்று விட்டனர்.

    இந்த கொள்ளை குறித்து பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர் சேகர் உடனடியாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, துணைப் போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி மற்றும் டவுன் போலீசார் ஆயில் மில் பகுதிக்கு விரைந்து சென்று கொள்ளை குறித்து விசாரித்து ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை போன அடகு நகைகளின் மதிப்பு ரூ.6 கோடி என்பது தெரிய வந்தது.

    ஆனால் வெளிச்சந்தையில் அந்த நகைகளின் மதிப்பு ரூ. 8 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. போலீசார் அந்த வங்கியில், எத்தனை பேர், எத்தனை பவுன் நகைகளை, எவ்வளவு ரூபாய்க்கு அடகு வைத்தனர் என்ற விவரங்களை சேகரித்தனர்.

    அப்போது அந்த வங்கியில் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 624 பேர் தங்களது நகைகளை அடகு வைத்திருந்தது தெரிய வந்தது. மொத்தம் 32 கிலோ அளவுக்கு அடகு நகைகள் இருந்தன. அந்த நகைகள் அனைத்தும் பறிபோய் விட்டன.

    இந்த கொள்ளையை மர்ம மனிதர்கள் மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. பாதுகாவலர்கள் இல்லாததால் மிகவும் நிதானமாக அவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    அடுத்தப்படியாக அவர்கள் கொள்ளையடிப்பதற்கு விடுமுறை தினத்தை தேர்வு செய்துள்ளனர். சனிக்கிழமை இரவே மர்ம மனிதர்கள் வங்கிக்குள் புகுந்து இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    கொள்ளையர்கள் அந்த வங்கியின் எந்த ஒரு பூட்டையும் உடைக்கவில்லை. அனைத்து பூட்டுக்களையும் அவர்கள் கள்ளச்சாவியைப் பயன்படுத்தி கைவரிசை காட்டி உள்ளனர். நுழைவுப் பகுதியில் உள்ள ‌ஷட்டரில் இருந்து பாதுகாப்புப் பெட்டகம் வரை மர்ம மனிதர்கள் எந்த ஒரு இடத்திலும் பூட்டை தகர்க்கவில்லை.

    சில வங்கிகளில் கொள்ளையர்கள் பூட்டை உடைக்க முடியாதபட்சத்தில் சுவரில் துளைப்போட்டு நகைகளை கொள்ளையடிப்பார்கள். இல்லையெனில் வெல்டிங் செய்யும் கருவி மூலம் பெட்டகங்களை உடைத்து கைவரிசை காட்டுவார்கள்.

    ஆனால் அப்படி எதுவுமே இங்கு நடக்கவில்லை. கள்ளச்சாவி போட்டு காரியத்தை கச்சிதமாக முடித்து விட்டனர்.

    கொள்ளை போன நகைகளை வைத்திருந்த பெட்டகத்தின் சாவிகள் அனைத்தும் துணை மேலாளர் ஒருவர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சாவிகள் அனைத்தும் அவரிடம் பத்திரமாக உள்ள நிலையில் மர்ம மனிதர்கள் கள்ளச் சாவியை பயன்படுத்தி இருப்பது போலீசாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கி ஊழியர்கள், கட்டிட உரிமையாளர் மற்றும் வங்கிக்கு அடிக்கடி வந்து செல்லும் வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    ஆனால் அதில் பயன் உள்ள வகையில் எந்த துப்பும் துலங்கவில்லை.

    கொள்ளையர்கள் வங்கிக்குள் எந்த தடயத்தையும் விட்டுச் செல்லவில்லை. அந்த வங்கிக்குள் ரூ.25 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது.

    ஆனால் அந்த பணம் இருக்கும் பகுதிக்கு மர்ம மனிதர்கள் செல்லவில்லை. அடகு நகைகளை மட்டுமே குறி வைத்தே அவர்கள் கை வரிசை காட்டி உள்ளனர்.

    கடந்த வாரம்தான் இந்த வங்கியில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஆடிட்டர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருந்தனர். அன்று சுமார் 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    அந்த சம்பவம் நடந்து இன்னும் ஒரு வாரம் கூட நிறைவு பெறவில்லை. அதற்குள் அதே பகுதியில் 32 கிலோ தங்கம் கொள்ளை போய் இருப்பது மக்களிடம் கடும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    பேங்க் ஆப் இந்தியாவில் அடகு நகைகள் கொள்ளை போய் விட்டது என்ற தகவல் பரவியதும் மக்கள் ஆயில்மில் பகுதியில் திரண்டனர். நகைகளை அடகு வைத்த சில பெண்கள் கண்ணீர் மல்க காணப்பட்டனர்.

    திருவள்ளூரில் அடுத் தடுத்து நடக்கும் கொள்ளைகள் போலீசாருக்கு சவால் விடும் வகையில் உள்ளது. ஆடிட்டர் வீட்டில் 200 பவுன் கொள்ளை போன போதே வங்கிகள் உஷாராகி காவலாளியை ஏற்பாடு செய்திருந்தால் அடகு நகைகள் கொள்ளை போய் இருக்காது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சென்னை வளசரவாக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளைபோனது. அதிலும் இன்னமும் துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் திருவள்ளூரில் ஆடிட்டர் வீட்டிலும் வங்கியிலும் கைவரிசை காட்டியது ஒரே கும்பலாகத்தான் இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.#bankrobbery
    ×