என் மலர்
நீங்கள் தேடியது "chengalpattu"
- சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
- செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 03) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னை கடற்கரையில் நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
மேலும் நாளையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதி கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
- பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போத ரெட் அலர்ட்.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தத் திட்டத்தின் செலவு ரூ.757.18 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
- இதன்மூலம் பயணிகளின் கூட்ட நெரிசலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான நான்காவது ரெயில் பாதை திட்டத்துக்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 757.18 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான 30.2 கிலோமீட்டர் தூரத்திலான 4-வது ரெயில் பாதை திட்டத்திற்கு மத்திய ரெயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த திட்டத்தின் செலவு ரூ.757.18 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழித்தடத்தில் பயணிகளின் பயன்பாடு 87 சதவீதமாக இருக்கிறது. புதிய பாதை செயல்படுத்தப்படும் போது அது 136 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளின் கூட்ட நெரிசலும் குறையும். செங்கல்பட்டு வரையில் மின்சார ரெயில் சேவையை நீட்டிக்கவும் இது உதவும்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என தெரிவித்துள்ளது.
- விபத்தில் ரசாயனம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.
- லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
செங்கல்பட்டில் வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் ரசாயனம் (ஆசிட்) ஏற்றி வந்த லாரி சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி சாலையில் கவிழ்ந்தது. மேலும் லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாரியில் இருந்து வெளியேறி வரும் ரசாயனத்தை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
- ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
- 41 பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பயணிகள் வசதிக்காகவும், செங்கல்பட்டு கோர்ட்டு அருகே மதுராந்தகம் செல்லும் சாலையில் உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.
இந்த புதிய பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில், 9.95 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய பஸ் நிலையத்தில், 41 பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில், 55 கார்கள், 325 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைப்பதற்கு போதுமான வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ளன.
பஸ் நிலையத்தில் 35 கடைகள், உணவகங்கள், பயணிகளுக்கான ஓய்வறைகள், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வு அறைகள், கழிவறைகள், குடிநீர் வசதிகள் போன்ற வசதிகளும் அமைக்கப்படுகின்றன.
இந்த பஸ் நிலைய வளாகத்தில் அரசு பஸ்களுக்கான பணிமனையும் அமைக்கப்படுகிறது. தற்போது புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் செங்கல்பட்டு புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயற்பொறியாளர் தங்கராஜன் மற்றும் அரசு, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கட்டுமானப் பணிகளை விரைந்து நடத்தி வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'செங்கல்பட்டு புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள், திட்டமிட்டபடி வேகமாக நடந்து வருகிறது. செப்டம்பர் இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
செங்கல்பட்டில் ஏற்கனவே உள்ள பஸ் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை ஆகியவை நகரின் மையப் பகுதியில், போக்குவரத்து மிகுந்த சாலையில் இருப்பதால், செங்கல்பட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம், நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்கப்படுவதோடு, அரசு பஸ்களின் பணிமனையும் இதே வளாகத்தில் அமைக்கப்படுவதால், இந்த புதிய பஸ் நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு, செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் வரும் தீபாவளிக்கு முன்னதாக செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்ற தகவல் செங்கல்பட்டு நகர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
- திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி இருப்பதாக தெரிகிறது.
பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. செங்கல்பட்டு மட்டுமின்றி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் இரண்டு முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாணியம்பாடியில் காலை 7.35 மற்றும் 7.42 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது.
- சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
- ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்.
சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மின்சார ரெயில்கள் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டாலோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோது வழக்கம்.
ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். இது குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுவதுடன் பயணிகளுக்கு பெரிய சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் சேவைகள் குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விடுவதும் வழக்கம்.
இந்நிலையில் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் இடையே இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார ரெயில் சேவை இயங்காது. சென்னை கடற்கரையில் இருந்து நண்பகல் 12.40- க்கு புறப்படும் மின்சார ரெயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக தங்களது பயணத்தை திட்டமிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
- பயணிகள் பாதுகாப்பிற்காக தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மின்சார ரெயில்கள் ஒருநாள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டாலோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
பயணிகள் பாதுகாப்பிற்காகவும், ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் சேவைகள் குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விடுவதும் வழக்கம்.
இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- மேம்பாலம் அமைய உள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு.
- இறுதிகட்ட அனுமதி கிடைத்தவுடன் மேம்பாலப்பணிகள் நடைபெறும்
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்து உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன நெரிசலை தடுக்கும் வகையில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கோயம்பே ட்டில் செயல்பட்டு வந்த பஸ்நிலையமும் தற்போது கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் தற்போது தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கூடுதலாக வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.
இதனை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜி.எஸ்.டி. சாலையில் வண்டலூர் சந்திப்பில் இருந்து காட்டாங்கொளத்தூர் வரை முதல் கட்டமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான கட்டுமான பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 6 வழிச்சாலையாக சுமார் 27 கி.மீட்டர் தூரத்திற்கு உயர் மட்டமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ரூ.3523 கோடி செலவில் இந்த மேம்பாலம் பெருங்களத்தூரில் இருந்து தொடங்கி பரனூர் சுங்கச்சாவடிக்கு முன்பு முடிக்க திட்டமிட்டு இருந்தனர். இதனால் அதிகப்படியான செலவு மற்றும் கூடுதல் சுங்ககட்டணம் வசூலிக்கும் நிலை இருந்தது.
இதற்கிடையே தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயான 27 கி.மீட்டர் உயர்த்தப்பட்ட மேம்பால திட்டத்தை கைவிட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்து உள்ளது. இதற்கு பதிலாக ஜி.எஸ்.டி.சாலையில் முக்கியமான சாலை சந்திப்புகளில் கூடுதலாக மேம்பாலங்கள் கட்ட திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே முக்கிய சந்திப்புகளான வண்டலூர் மற்றும் பெருங்களத்தூரில் மேம்பாலங்கள் உள்ளன.
இதைத்தொடர்ந்து வண்டலூர் அருகே கிளாம்பாக்கம், அய்யஞ்சேர சந்திப்பு முதல் பொத்தேரி வரை சுமார் 7 கி.மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் வாகனங்கள் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மற்றும் காட்டாங்கொளத்தூ ருக்கு செல்லாமல் பயணம் செய்யமுடியும். இதற்கான திட்டமதிப்பீடு மற்றும் மேம்பாலம் அமைய உள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இறுதிகட்ட அனுமதி கிடைத்தவுடன் மேம்பாலப்பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதேபோல் மறைமலைநகர், போர்டு தொழி ற்சாலை, சிங்கப்பெ ருமாள்கோவில், மற்றும் மகேந்திராசிட்டி பகுதியிலும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இது 6 வழிப்பா தையாக அமைய உள்ளன. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களுக்கு விடிவு பிறக்கும்.
- இறைவனை பல வழிகளில் நாம் தரிசிக்க முடியும். அதில் ஒரு வழியே பஜனை.
- நாம சங்கீர்த்தனம் வாயிலாக இறைவனை வழிபடுவார்கள்.
முந்தைய காலங்களில் கிராமப் புறங்களில் ஒரு சிறிய கோவிலை அமைத்து, அதில் ராமபிரான் அல்லது கண்ண பிரான் திரு உருவப்படங்களை வைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. இத்தகைய கோவில்கள் 'பஜனைக் கோவில்கள்' என்று அழைக்கப்பட்டன.
இறைவனை பல வழிகளில் நாம் தரிசிக்க முடியும். அதில் ஒரு வழியே பஜனை. நமது முன்னோர்கள் ஒன்றாய்க் கூடி பஜனைப் பாடல்களை இசையோடு பாடுவதன் மூலம் இறைவனை தரிசிக்க முடியும் என்ற நம்பிக்கையில், பல ஊர்களிலும் பஜனை மடங்களை நிறுவினர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் பஜனைக் கோவில்கள் இருப்பதைக் காணலாம். இந்த பஜனைக் கோவில்களில் சனிக்கிழமை மற்றும் ஏகாதசி, மார்கழி மாதங்களில் பக்தர்கள் ஒன்று கூடி பஜனை இசைத்து நாம சங்கீர்த்தனம் வாயிலாக இறைவனை வழிபடுவார்கள்.
இந்த பஜனை கோவில்கள் நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டு, கருவறையில் ராமபிரான், ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபாலர் ஆகியோரது சிலைகளை பிரதிஷ்டை செய்து முழுமையாக ஆலயமாக மாற்றப்பட்டன.
அப்படிப்பட்ட ஒரு கோவில்தான் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா பெரியகாட்டுப்பாக்கம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி திருக்கோவில்.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இந்த பஜனைக் கோவிலில், நவநீதக் கண்ணன் ஆராதிக்கப்பட்டு வந்துள்ளார். 1904-ம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஏகாதசி தினத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.
நவநீதக்கண்ணன் பஜனைக் கோவிலாகத் திகழ்ந்த இத் தலத்தில், முதலில் ருக்மணி - சத்யபாமா சமேத வேணு கோபால சுவாமியை பிரதிஷ்டை செய்த மக்கள், பின்னர் பல்வேறு திருப்பணி மூலமாக கருடாழ்வார் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதி, சக்கரத்தாழ்வார் சன்னிதி, காளிங்க நர்த்தனர் சன்னிதி, தும்பிக்கை ஆழ்வார் சன்னிதி ஆகிய சன்னிதிகளையும் அமைத்தனர்.
கோவிலுக்குள் நுழைந்ததும் ஒரு சிறிய சன்னிதியில் சிறிய திருவடியான பக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து பலிபீடமும், அதற்குப் பின்னால் பெரிய திருவடியான கருடாழ்வார் சன்னிதியும் உள்ளன.

கருவறையின் முன்னால் சுதைச்சிற்ப வடிவில் துவாரபாலகர்கள் இருபுறமும் காட்சி தருகிறார்கள். கருவறைக்குள் ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
வேணுகோபால சுவாமி புல்லாங்குழலை தனது திருக்கரங்களில் ஏந்தியுள்ளார். உற்சவர்களாக ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி, ஆஞ்சநேயர், ஆண்டாள் மற்றும் நவநீதக்கண்ணன் இருக்கிறார்கள்.
இத்தலத்தில் பொங்கல் பண்டிகை, மாட்டுப்பொங்கல் அன்று பரிவேட்டை உற்சவம், கிருஷ்ணஜெயந்தி, ராமநவமி, அனுமன் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, திருவாடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மூன்றாவது வாரம் சிறப்பு வழிபாடுகள், விஷேச சிறப்பு கல்யாண உற்சவம் முதலானவை விமரிசையாக நடை பெறுகின்றன.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை ஏகாதசி மற்றும் தேய்பிறை ஏகாதசி அன்று தவறாமல் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சந்தான பாக்கியம் அளிக்கும் தலமாக விளங்கும் இத்தலத்திற்கு வந்து, இத்தல இறைவனை வழிபட்டால் குழந்தைப் பேறு நிச்சயம் கிடைக்கும் என்கிறார்கள்.
மன அமைதியை நாடுவோர் இத்தலத்திற்கு ஒரு முறை வந்து வேணுகோபால சுவாமியை மனம் குளிர தரிசித்தால் நம் மனம் முழுவதும் அமைதி பரவுவது நிச்சயம். ஒரு கால பூஜை நடைபெறும் இவ்வாலயம் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணிநேரம் திறந்திருக்கும்.
அமைவிடம்
திருக்கழுக்குன்றத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வீராபுரம் - விட்டிலாபுரம் சாலையில் அமைந்துள்ளது, பெரியகாட்டுப்பாக்கம் திருத்தலம்.
- கலியுகத்தில் திருப்பாதம் பதித்து, திருக்காட்சி அளிப்பேன்.
- கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு மலைகளுக்கு நடுவில் இயற்கை எழில் சூழ சுயம்பு தேவியாக சொர்ண ரேகையுடன் வெளிப்பட்டவள், தேவி கருமாரி. இந்த தேவியை கருவாக வைத்து எழுப்பப்பட்டதே, தேவி கருமாரி அம்மன் ஆலயம். இது பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

தல வரலாறு
ஆதியும் அந்தமுமாகி அனைத்து உலகையும் காத்தருள்பவள், அன்னை ஆதிசக்தி. இவளே கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகங்களிலும் தாயாக நின்று உயிர்களை காத்தருளியவள். இதனையடுத்து, நான்காவது யுகமான, கலியுகம் மிகவும் கொடுமைகள் நிறைந்தது.
இந்த கலியுகத்தின் தீமைகளை உணர்ந்து அச்சம் அடைந்த தேவர்கள், இந்த யுகத்திலும் உலக உயிர்களைக் காத்தருள வேண்டுமென, மீண்டும் ஒருமுறை ஆதிசக்தியிடம் சரண் அடைந்தனர். குழந்தையின் அழுகுரலுக்கு ஓடோடி வரும் தாயான ஆதிசக்தி, அதற்கான வழியையும் கூறினாள்.
"யுகங்கள் தோன்றுவதற்கு முன்பே நான், என்னுடைய பரமனுடன் ஒன்றிணைந்து திருவடி பதித்து, எனக்கான இடத்தை தேர்வு செய்துள்ளேன். ஏழு மலைகளால் சூழ்ந்திருக்கும் எழிலார்ந்த அந்த வனத்தில், எம் வருகைக்காக அருவுருவமாக அமர்ந்து தவம் செய்யுங்கள். காலம் கனியும்போது அந்த புனித மண்ணிற்கு இக்கலியுகத்தின் நாயகியாக நான் வருகைபுரிவேன். அங்கே என் விஸ்வரூபக் காட்சியை தங்களுக்கு அருள் பாலிப்பேன்" என்றாள்.
மேலும் தேவி கூறுகையில், "அத்திருவடி அருட்கோட்டத்தில் நேரில் வந்து என்னை மனமுருகி வழிபட்டு செல்வோருக்கு, ருத்ரனின் திருநீற்று சாம்பலை நான் சிருஷ்டித்த தவசீலர்கள் மூலம் வழங்கி அனைவருக்கும் அருள் தருவேன். அதன் மூலம் அவர்களின் துயரங்களையும், துன்பங்களையும் அகற்றுவேன்" என்றாள்.
இக்கலியுகத்தில் திருப்பாதம் பதித்து, திருக்காட்சி அளிப்பேன் என தேவர்களுக்கு, ஆதிசக்தி அளித்த திருவாக்கின் காலம் கனிந்தது. அதன்படி, சிவபெருமானின் திருக்கர செங்கோலை தம் கரம் பற்றினாள்.
அதன்பின் ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழில்களை தமதாக்கி, பக்தர்களை ஆட்கொள்ளும் தனித்துவத்துடன் கரிய நாகரூபம் கொண்டாள். தமது திருவிளையாடலுக்காக படைத்த புனிதமான பெண் மணியை தீண்டினாள்.
இறந்தவளின் சடலத்தில், தான் உள் ஒளியாய் வெளிப்பட்டாள். எரி மயானச் சுடலையில் உதித்தாள். பரம்பரை தெய்வமாய் கலியுக நாயகி கருமாரி என்னும் திருநாமத்தில் நடமாடி வரம் தரும் சக்தியாய், வட வேதாரண்யம் எனும் திருவேற்காடு திருத்தலத்தில் தம் பாதம் பதித்தாள்.
தம்பு சுவாமிகள் வழியாக திருவாய் மலர்ந்து, திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் தேவஸ்தானம் எனும் திருக்கோவில் கண்டாள்.
இந்த கருமாரி தேவியே, தன் அருளாணைப்படி, ஏழு சக்திகளும் ஏழு மலைகளாக காவல் புரியும், மகா ஆரண்யத் திருத்தலம் வந்தாள். அப்போது அங்கே விண்ணுக்கும், மண்ணுக்குமான உயரத்தில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள் ஒன்று சேர்ந்த ஒளி வெள்ளமாய் பிரகாசித்தாள்.
அங்கே தேவி விஸ்வரூபக் காட்சி தந்து, தன் திருவடி பதித்த முழு முதற் தலம் இதுவே என்பதை பிரகடனப்படுத்தினாள்.
ஆதிசக்தி மகாஜோதியாய் காட்சி தந்து அடையாளம் காட்டிய இடம், அன்றைய வேகவதி ஆற்றின் பழங்கால பயணப்பாதை என்பது புவியியல் வரலாறு.
அங்கே 13 அடி ஆழத்தில் ஆவுடையார் அமைக்க கடைக்காலுக்கு இயந்திரங்களைக் கொண்டு மண் தோண்டப்பட்டது. அப்போது, வேகவதியின் நீரோட்டத்தை உறுதி செய்யும் விதமாக, தோண்டி முடித்தவுடன் நன்னீர் நீரூற்று பொங்கி எழுந்தது. அதில் மற்றுமொரு அதிசயமும் நிகழ்ந்தது.
நீருற்றில் குருதியும் கொப்பளிக்க , மூன்று சுவர்ண ரேகைகள் கொண்ட சுயம்புத் திருமேனியாக தேவி தன் பக்தர்களின் கண்முன்னே வெளிப்பட்டாள். இந்த ஆதிசக்தியான, தேவி கருமாரியம்மனே, தன்னை நாடி வந்து வழிபடுவோரின் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி, வளத்தையும், நலத்தையும் தந்து கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.

கோவிலின் தனிச்சிறப்பு
இத்திருக்கோவிலின் தனிச்சிறப்பு, இங்கு பரிகார பூஜைகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. தேவி கருமாரியம்மனை நேரில் வந்து வேண்டிக் கொண்டாலே வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின்பு, அவசியம் மீண்டும் ஒரு முறை நேரில் வந்து அம்மனுக்கு நன்றி கூற வேண்டும்.

இந்த வளாகத்தில், ஒரே கல்லினால் உருவான 51 அடி உயர தேவி கருமாரியின் சிலை, ஒரே இடத்தில் 108 திவ்ய தேசக்கோவில்கள், பய உணர்வுகளைப் போக்கும் பைரவர், நாக தோஷங்கள் நீக்கும் சர்வ கரிய நாக சொரூபிணி ஆலயம் ஆகியவையும் அமைந்துள்ளன. இதுதவிர தற்போது, 163 அடி உயர கோடி லிங்கமும் எழுப்பப்பட்டு வருகிறது.
இவ்வாலயத்தில் சித்ரா பவுர்ணமி மூன்று நாட்கள், வைகாசியில் மும்முடிசேவை, ஆடி ஞாயிறுக்கிழமை வழிபாடு, நவராத்திரி போன்றவை குறிப்பிடத்தக்க விழாக்களாக உள்ளன. இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.
அமைவிடம்
செங்கல்பட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்போரூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், பசுமையான ஏழு மலைகளுக்கு நடுவில் இத்திருக்கோவில் அமைந்திருக்கிறது. பேருந்தில் வருவோர் திருவடிசூலம் என்ற இடத்தில் இறங்கி, 2 கிலோமீட்டர் உள்ளே வர வேண்டும். திருவடிசூலம் தேவாரத்தலத்தினை அடுத்து இக்கோவில் அமைந்துள்ளது. திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் நேரடி பஸ் வசதி உள்ளது.
- கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம்.
- தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காஞ்சிபுரம்:
அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றத் தேர்தல், சட்மன்ற கூட்டத் தொடர், விக்கிரவாண்டி இடைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் மாதந்தோறும் எனது தலைமையிலும், மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற்று வந்த 'குறைகேட்பு கூட்டம்' கடந்த சில மாதங்களாக நடை பெறாமல் உள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த குறை கேட்பு கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக, மக்கள் நல்லுறவு மையத்திலும், அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்று மாலை 3 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்திலும் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






