search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "H3N2 Virus"

    • ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
    • குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

    ஃப்ளூவின் அதிகபட்ச பாதிப்பை உண்டு செய்யும் ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தற்போது குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இவை சற்று தீவிரமான பாதிப்பையே உண்டு செய்கின்றன. இந்த காய்ச்சலை தவிர்க்க எதிர்கொள்ள என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

    இன்ஃப்ளூயன்சா வைரஸ் என்பது ஒருவகை வைரஸ். நார்மலாக வரக்கூடிய சளி வகை போன்ற வைரஸ் தான் இது. எனினும் இதன் வீரியம் சற்று கூடுதலாக இருக்கும். இந்த ஹெச்3 என்2-ன் தாக்கம் இருந்தால் அதன் அறிகுறிகள் சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், உடல் வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, நீர் கோர்த்தல் இதனோடு அதிக காய்ச்சலும் இருக்கும்.

    பொதுவாகவே வைரஸ் காய்ச்சல் 3- 4 நாட்கள் வரை இருக்கலாம். ஆனால் இந்த ஹெச்3 என்2 வைரஸ் ஒரு வாரம் முதல் ௧௨ நாட்கள் வரை கூட ஆகலாம். அதோடு சில நாட்கள் வறட்டு இருமல் நீடிக்கவும் வாய்ப்புண்டு. அதோடு தற்போது மழையும், வெயிலும் பருநிலை மாறுவதால் இதன் வீரியம் அதிகரிக்கும். இதனுடன் மிதமான மழையும் சேர்ந்தால் அது பரவலை அதிகரிக்கச் செய்யும்.

    இதை எதிர்கொள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவியல் மற்றும் வாழ்வியல் முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    ஆரோக்கியமான உணவுகளில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் தயாரிக்கும் உணவுகளை மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். சாலையோர கடைகளில் இருக்கும் உணவுகள், சுகாதாரமற்ற உணவுகளை தவிர்ப்பதே பாதுகாப்பானது. உதாரணத்துக்கு சாலையோரம் கம்பங்கூழ், கேப்பை கூழ், திறந்த நிலையில் இருக்கும் வெங்காயம், மோர் மிளகாய், வத்தல் போன்றவை வெயிலுக்கு இதமாக இருக்கும் என்றாலும் இவை நீண்ட நேரம் திறந்த நிலையில் இருப்பதால் இவற்றில் இருக்கும் கிருமித்தொற்றுகள் உடலில் பாதிப்பை உண்டு செய்யலாம்.

    வெயிலுக்கு ஏற்றது என்றாலும் கபத்தை உண்டு செய்யும் கொய்யாப்பழம், பால் சேர்ந்த பொருள்கள் குறைப்பது நல்லது. இதனோடு இரவு நேரங்களில் போதுமான தூக்கம் அவசியம் ஆகும்.

    குழந்தைகளுக்கு ஹெச்3 என்2 மட்டும் அல்லாமல் மற்ற தொற்றுகளையும் எதிர்க்கும் அளவுக்கு உடல் பலமாக இருக்க தினமும் பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு சளி தொற்று இருக்கும் போது, காய்ச்சல் இருக்கும்போது நீங்கள் தொடர்ந்து 10 நாட்கள் இந்த பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு தொற்று நேராமல் தடுக்க உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதை கொடுக்கலாம்.

    பூண்டு- ஒரு பல் எடுத்து தட்டிகொள்ளவும். அதில் பால் மற்றும் தண்ணீர் சம அளவு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பூண்டு வேகும் வரை வைத்து பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து இனிப்பு தேவை என்றால் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுக்கலாம். தொற்று வந்த பிறகு தொடர்ந்து 10 நாட்கள் வரை இதை கொடுக்கலாம்.

    நுரையீரல் தொற்று பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நுரையீரல் தொடர்பான கோளாறுகள், உடல் பருமன் கொண்டவர்களுக்கு தொற்று நேரும் அபாயம் அதிகமாக இருக்கலாம். இவர்கள் இன்னும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் நிலவேம்பு கஷாயமும், கபசுர குடிநீரும் எடுத்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நேர்ந்தாலும் அவை தீவிரமாகாமல் தடுக்க முடியும்.

    குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது. காற்றில் கூட இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு அதிகம் என்பதால் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். கிருமிநாசினிகள் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் தொற்று வராமல் தடுக்க முடியும்.

    கூட்டமான இடங்கள் என்றில்லாமல் எப்போதும் ஒரு சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த ஹெச்3என்2 தொற்று மட்டுமல்ல வேறு எந்த வகை தொற்றையும் தடுக்கலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய வகை வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
    • விரைவில் மருந்து பற்றி முழு விவரங்களும் வெளியிடப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்தியாவில் சமீப காலமாக எச்.3 என்.2 என்ற புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவியபடி உள்ளது.

    காய்ச்சல், இருமலை உருவாக்கும் இந்த வைரஸ் சுமார் ஒரு மாதம் மக்களை படாதபாடுபடுத்தி விடுகிறது. இந்த புதிய வகை வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

    விரைவில் இந்த மருந்து பற்றி முழு விவரங்களும் வெளியிடப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

    • புதிய வகை வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இந்த தொற்று பரவல் குறித்து பதற்றம் வேண்டாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
    • தொற்று பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்புளூயன்சா துணை வகை வைரசான எச்3என்2 பரவி வருகிறது. கடந்த ஜனவரி 2 முதல் மார்ச் 5-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 450-க்கு மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

    இதில் கர்நாடகா மற்றும் அரியானாவை சேர்ந்த தலா ஒருவர் சமீபத்தில் உயிரிழந்து உள்ளனர்.

    இது மக்களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவும் மற்றுமொரு கொரோனா தாக்குதலாக இருக்குமோ? என அவர்கள் பதற்றமடைந்து வருகின்றனர்.

    ஆனால் இந்த புதிய வகை வைரஸ் குறித்து பதற்றமடைய வேண்டாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    அந்தவகையில், அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்னணி டாக்டர்களில் ஒருவரான தருண் சகானி கூறுகையில், 'இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் தேவை எழவில்லை. வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே தங்கி சிகிச்சை பெறுகின்றனர். எனவே பதற்றம் தேவையில்லை. கொரோனா காலத்தில் கடைப்பிடித்தது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும்' என்றார்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த காலகட்டத்தில் இத்தகைய தொற்று பரவல் இயற்கைதான் எனக்கூறிய அவர், என்றாலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட 2 அல்லது 3 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறினார்.

    மற்றொரு டாக்டர் அகர்வால் கூறுகையில், 'காய்ச்சலுக்கான பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசிகள் இருப்பதால், ஒரு பெரிய அலையை நான் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் அனைத்துவிதமான தொற்று பரவலும், இறப்புகளும் கவலைக்குரியவைதான்' என தெரிவித்தார்.

    இந்த எச்3என்2 வைரஸ் பன்றிகள் மற்றும் தொற்றுக்கு ஆளானவர்கள் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு பிற புளூ வைரஸ் பாதிப்புகள் போல காய்ச்சல், சுவாச கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதேநேரம் உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளும் ஏற்படுகின்றன.

    இந்த தொற்று பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக மாநில அரசுகள் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    • நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் நடந்த பரிசோதனையில் 3 ஆயிரத்து 38 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • எச்3என்2 வைரஸ் உள்பட சிலவகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனவரி மாதம் 1245 பேருக்கும், பிப்ரவரி மாதம் 1307 பேருக்கும், இந்த மாதம் 9-ந்தேதி வரை 486 பேருக்கும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பரவி வரும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் மக்களை சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

    சாதாரண பருவநிலை காய்ச்சலாக இருந்தாலும் இந்த புதிய வகை வைரஸ் தாக்கம் குழந்தைகளையும், முதியவர்களையும் உயிரிழக்கும் நிலைக்கு கொண்டு போய் விடுகிறது.

    இந்த காய்ச்சலுக்கு கர்நாடகா, அரியானா மாநிலங்களில் தலா ஒருவர் வீதம் 2 பேர் இறந்து இருக்கிறார்கள். எனவே அனைத்து மாநிலங்களையும் மத்திய சுகாதாரத்துறை உஷார்படுத்தி இருக்கிறது.

    சுகாதாரத்துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் நடந்த பரிசோதனையில் 3 ஆயிரத்து 38 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. எச்3என்2 வைரஸ் உள்பட சிலவகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனவரி மாதம் 1245 பேருக்கும், பிப்ரவரி மாதம் 1307 பேருக்கும், இந்த மாதம் 9-ந்தேதி வரை 486 பேருக்கும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    ஆண்டுதோறும் பருவ கால வைரஸ் காய்ச்சல் இரண்டு கட்டங்களாக பரவும். அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையிலான பருவ காலத்தில் ஒரு பகுதியாகவும் அதன்பிறகு ஒரு பகுதியாகவும் பரவும்.

    தற்போது பரவி வரும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் இந்த மாத இறுதியில் குறைய தொடங்கும்.

    எச்3என்2 வைரசை தவிர எச்1என்1 வைரசும் அதிக அளவில் பரவி வருகிறது. இது மிக அதிகமாக தமிழ்நாட்டில் பரவி இருக்கிறது. இதுவரை 545 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் 170 பேருக்கும், குஜராத்தில் 74 பேருக்கும், கேரளாவில் 42 பேருக்கும், பஞ்சாபில் 28 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எச்1என்1 காய்ச்சலுக்கு ஆசெல்டாமிவிர் (Oseltamivir) என்ற மருந்தை உலக சுகாதார மையம் பரிந்துரைத்துள்ளது. இதே மருந்தை எச்3என்2 காய்ச்சலுக்கும் கொடுக்கலாம்.

    இந்தியாவில் இந்த மருந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் தேவையான அளவு கையிருப்பிலும் உள்ளது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பெங்களூருவில் புதிய வகை வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
    • வைரசின் தாக்கம் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பெங்களூரு:

    இந்தியாவில் 'எச்3.என்.2' என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் குறித்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசின் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வைரசின் முக்கிய அறிகுறிகள் ஒன்று, நீண்ட நாட்களுக்கு இருமல் இருக்கும் என்று சொல்கிறார்கள். அத்துடன் காய்ச்சலும் இருக்கும்.

    'எச்3.என்2.' வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடகத்திலும் இந்த வைரசின் பரவல் அதிகரித்து உள்ளது.

    பெங்களூருவில் இந்த புதிய வகை வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வைரசின் தாக்கம் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதேபோல் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று கர்நாடகத்தில் 95 பேருக்கும், அதில் பெங்களூரு நகரில் மட்டும் 79 பேருக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 100 நாட்களுக்கு பிறகு பெங்களூரு உள்பட அனைத்து மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. இது அரசுக்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது 291 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

    'எச்3.என்2.' வைரஸ் மற்றும் கொரோனா பரவலை தடுப்பது குறித்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இது குறித்து கர்நாடக அரசு சுகாதரத்துறை சார்பாக இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    ×