என் மலர்
சேலம்
- வெங்கடேஷ் புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் செங்காந்தள் விதை விற்பனை செய்து வருகிறார்.
- நீண்ட நேரமாகியும் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் இதுகுறித்த இரும்பாலை போலீசில் புகார் செய்தார்.
சேலம்:
திருப்பூர் காங்கேயம் ரோடு வெங்கடாசல கவுண்டர் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் வெங்டேஷ் (37). இவர் புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் செங்காந்தள் விதை விற்பனை செய்து வருகிறார்.
இவரிடம் சேலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் புழக்கத்தில் உள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் புதிய வரிசை எண் கொண்ட கரண்சி நோட்டுகளாக ரூ.60 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.
இதை உண்மை என்று நம்பிய வெங்கடேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 50 லட்சத்துடன் ராஜேஷ் கூறியபடி சேலம் மாரமங்கலத்துப்பட்டிக்கு வந்து உள்ளார். அப்போது அவரிடம் நூதனமாக பணத்தை பறித்து கொண்ட கும்பல் வெங்கடேசிடம் சற்று நேரத்தில் வந்து பணத்தை தருவதாக கூறி ஏமாற்றி பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர்.
நீண்ட நேரமாகியும் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் இதுகுறித்த இரும்பாலை போலீசில் புகார் செய்தார். இந்த கொள்ளை சம்பவம் பற்றி தெரியவந்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர்கள் கவுதம் கோயல், மதிவாணன் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் ராமமூர்த்தி, ஆனந்தி உள்பட இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்பு உடைய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காளிபாளையம் பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் மோகன் பாரதி (26), காங்கேயம் அருகே உள்ள சின்னபுதூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் பிரகதீஷ்வரன் (24), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் வினித் குமார் (27), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி சின்னசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமராஜன் என்பவரது மகன் முத்துமாரி (30), சிவகாசி அருகே உள்ள திருத்தாங்கல் ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் (58), ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கிரையனூர் பகுதியை சேர்ந்த குமார் (41) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சேலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் பெங்களுரு, மைசூருவில் தேடி வருகிறார்கள்.
- அப்துல் காதர் (44) இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 தவணைகளாக 91.1/2 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.4லட்சத்து11 ஆயிரத்து 280 பணத்தைப் பெற்றுள்ளார்.
- நகைகளை சோதித்து பார்த்த போது அனைத்தும் கவரிங் நகை என்பது தெரியவந்தது.
சேலம்:
சேலம் ஓமலூர் மெயின் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தங்க நகை அடமான நிறுவனத்தில் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர் (44) இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 தவணைகளாக 91.1/2 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.4லட்சத்து11 ஆயிரத்து 280 பணத்தைப் பெற்றுள்ளார்.
சமீபத்தில் அந்த நகைகளை சோதித்து பார்த்த போது அனைத்தும் கவரிங் நகை என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் மதியழகன் (40) என்பவர் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செல்போனுக்கு இருக்கு கடந்த 18-ந் தேதி வந்த குறுந்தகவலில் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும் அதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வந்துள்ளது.
- மர்ம நபர் நிபந்தனையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பணம் செலுத்தி பதில்களை தந்தால் மீண்டும் அந்த பணம் திரும்பி உங்கள் வங்கி கணக்கிலேயே வந்துவிடும் என்று கூறியுள்ளார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை ராஜ கணபதி தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மகன் விஜய் (24). இவரது செல்போனுக்கு இருக்கு கடந்த 18-ந் தேதி வந்த குறுந்தகவலில் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும் அதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து விஜய் அந்த குறிப்பிட்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது அந்த மர்ம நபர் நிபந்தனையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பணம் செலுத்தி பதில்களை தந்தால் மீண்டும் அந்த பணம் திரும்பி உங்கள் வங்கி கணக்கிலேயே வந்துவிடும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய விஜய் ரூ.5 லட்சத்து 71ஆயிரத்து 280 பணத்தை வங்கி பரிவர்த்தனை மூலம் செலுத்தியுள்ளார்.ஆனால் அந்த மர்ம நபர் கூறியபடி பணம் மீண்டும் இவரது வங்கி கணக்கில் வராததால் அதிர்ச்சி அடைந்த விஜய் இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
சேலம்:
சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
கோட்டை பெருமாள்: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் இன்று காலை சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் அழகிரிநாதர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பட்டை கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், ஜாகீர் அம்மாபாளையம் வரபிரசாத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பூஜைகள் நடந்தது. இதேபோல் ஆனந்தா இறக்கம் அருகே உள்ள லட்சுமி நாராயணசாமி கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவில், சின்னத் திருப்பதி வெங்கடேச பெருமாள்கோவில், அழகாபுரம் வெங்கடேசுவரா பாலாஜி டிரஸ்ட் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், கடைவீதி வேணுகோபாலசுவாமி கோவில், நாமமலை பெருமாள் கோவில், நெத்திமேடு கரியபெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
- நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா.
- வெண்ணிலாவின் மருமகன் வீரமுத்து மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா. இவரது கணவர் ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மகள், மருமகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இன்று காலை வெண்ணிலாவின் மருமகன் வீரமுத்து மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணி மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வீரமுத்து ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் இருந்து நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று சேலத்தை நோக்கி புறப்பட்டது.
- பஸ்சில் இருந்த 24 வயது இளம்பெண்ணுக்கு அருகில் இருந்த வாலிபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சென்னையில் இருந்து நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று சேலத்தை நோக்கி புறப்பட்டது. இன்று அதிகாலை ஊத்தங்கரை அருகே வந்து கொண்டிருந்தபோது அந்தப் பஸ்சில் இருந்த 24 வயது இளம்பெண்ணுக்கு அருகில் இருந்த வாலிபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தன்னுடன் பயணித்த சகநண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை கண்டித்த பெண்ணின் நண்பர்கள் பஸ் சேலம் புதிய பஸ் நிலையம் அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊத்துமலை பகுதியில் சில வாலிபர்கள் வாக்கி டாக்கி மூலம் பேசிக் கொண்டிருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது.
- அவர்களிடம் இருந்த வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை பகுதியில் சில வாலிபர்கள் வாக்கி டாக்கி மூலம் பேசிக் கொண்டிருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த 3 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சேலம் தாதகாப்பட்டி சண்முக நகர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த கேசவன்(35), அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த வில்வேஸ்வரன் (22), தாதகாப்பட்டி ஸ்ரீரங்கம் தெருவை சேர்ந்த நாகராஜன் (20) என்பது தெரியவந்தது.
இவர்கள் போலீசார் மற்றும் ஆட்கள் நடமாட்டத்தை நோட்டமிட்டு வாக்கி டாக்கி மூலம் தகவல்களை பரிமாறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வாலிபர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசு கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை தலைமை தாங்கினார்.
சேலம்:
தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசு கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை தலைமை தாங்கினார். இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான ஜெகதீசபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ராசா அம்மையப்பன், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ ரத்னா அல்லி முத்து, மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை, நாடாளுமன்ற பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், கொள்கை பரப்புச் செயலாளர் நல்லான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அப்போது கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். வீரபாண்டி தொகுதி துணைத் தலைவர் எருமாபாளையம் சுரேஷ் மேற்கு தொகுதி செயலாளர் மணிகண்டன், தெற்கு தொகுதி செயலாளர் ஜனார்த்தனன், வடக்கு தொகுதி செயலாளர் பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருநங்கை நவ்யா (36), இவர் கடந்த 10 ஆண்டுகளாக அய்யா கவுண்டர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.
- ஆத்திரம் அடைந்த நவ்யா கட்டையை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (34), சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
திருநங்கை
அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்தவர் திருநங்கை நவ்யா (36), இவர் கடந்த 10 ஆண்டுகளாக அய்யா கவுண்டர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். இவருக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதனால் சதீஷ்குமார் அடிக்கடி நவ்யாவின் வீட்டிற்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சதீஷ்குமார் தனது நண்பரான வாழப்பாடி பாட்டப்பன் கோவில் பகுதியை சேர்ந்த கவியரசன் (34) என்பவருடன் குடிபோதையில் நவ்யாவை தேடி அவரது வீட்டிற்கு சென்றார்.
பின்னர் அவரை அழைத்து பேசி விட்டு சதீஷ்குமாரும், கவியரசனும் அங்கிருந்து சென்று விட்டனர். மீண்டும் திரும்பி வந்த சதீஷ்குமார் கதவை தட்டி நவ்யாவை வெளியே வரவழைத்து அவரை உல்லாசமாக இருக்க அழைத்தார். இதற்கு நவ்யா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அடித்து கொலை
இதில் ஆத்திரம் அடைந்த நவ்யா கட்டையை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் கதறி துடித்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு வாழப்பாடியில் முதலுதவி சிகிச்சை அளித்து சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்த சதீஷ்குமார் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
இதற்கிடையே நவ்யாைவ கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-
சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு எனது வீட்டிற்கு வந்து என்னை உல்லாசத்திற்கு அழைத்தார். அதற்கு நான்மறுத்ததால் தகாத வார்த்தையால் பேசினார். மேலும் கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கினேன். இதில் நிலைகுலைந்த அவர் தரையில் சாய்ந்தார். இதையடுத்து அங்கிருந்து நான் தப்பி ஓடினேன், ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மருத்துவ பரிசோதனை
இதையடுத்து சேலம் அரசு மருத்துவ மனையில் அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்து தகுதி சான்றிதழ் பெற்று வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- முதியவரை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்தது தெரியவந்தது.
- முதியவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மேட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மரியமுத்து, மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் முதியவரை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முதியவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முதியவர் கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மேட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.