என் மலர்
நீங்கள் தேடியது "அன்புமணி"
- 2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான்.
'சம வேலைக்கு சம ஊதியம்' உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, இன்று 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவிலியர்களை பணி நிலைப்பு செய்ய என்ன தடை? அதிகாரத் திமிர், ஆணவத்தில் தி.மு.க அரசு ஆட்டம் போடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வரும் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான செவிலியர்களை தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 4 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது ஆட்சியாளர்களின் அதிகாரத் திமிரையும், ஆணவத்தையும் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, செவிலியர்களை மிரட்டி பணியவைக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வு நடத்தி தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8.322 செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும். இதை எதிர்த்து பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வரும் அவர்கள் பணி நிலைப்புக் கோரி கடந்த 18-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் திமுக அரசு, அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. மேலும் பேச்சு நடத்த அழைக்கப்பட்ட தங்களிடம், தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா? இது அரசோட கொள்கை முடிவு அவ்வளவுதான்.
நானே பார்க்குறேன் நிறைய இடங்கள்ல தேவைக்கும் அதிகமா வேலையே செய்யாம ஆட்கள் இருக்காங்க. தேர்தல் நேரத்துல போராட்டம் பண்ணி நெருக்கடி கொடுக்க பார்க்குறீங்களா? என்ன பண்ணுவீங்க? போராடுவிங்க.... போராடிக்கோங்க என்று சுகாதாரத் துறை அமைச்சர் மிரட்டியதாக செவிலியர் சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியது. இந்த அணுகுமுறையை ஏற்கவே முடியாது.
அதுமட்டுமின்றி, ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், காலியிடங்களே இல்லாத நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்யவே முடியாது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த விளக்கம் மிகவும் விநோதமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய செவிலியர் பணியிடங்களை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என்பது ஒருபுறமிருக்க, காலியிடங்களே இல்லை என்பது அப்பட்டமான பொய் தான்.
நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்படாத அனைத்து பணியிடங்களும் காலியிடங்கள் தான். அந்த வகையில் ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான். அந்த இடங்களில் ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்க எந்தத் தடையும் இல்லை, அவ்வாறு செய்ய ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாதது தான் ஒரே ஒரு தடை ஆகும்.
நிரந்தர செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்களோ, அதே முறையை பின்பற்றி தான் ஒப்பந்த செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்தில் போட்டித் தேர்வு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. அத்தகைய சூழலில் அவர்கள் அனைவரையும் ஒரே ஓர் அரசாணையின் மூலம் பணி நிலைப்பு செய்ய முடியும். அவ்வாறு செய்தால் அதை உச்ச நீதிமன்றம் கூட கேள்வி கேட்க முடியாது. ஆனால், வாய்கிழிய சமூகநீதி பேசும் திமுக அரசுக்கு அதை செயல்படுத்துவதற்கு மட்டும் மனம் வராது. சமூகநீதி என்றாலே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.
ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களும் நிரந்தர செவிலியர்கள் செய்யும் அதே பணியைத் தான் செய்கின்றனர். அதனால், தங்களுக்கும் சம ஊதியம் வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உயர்நீதிமன்றமும் அதை ஏற்று சம ஊதியம் வழங்க ஆணையிட்டது. ஆனால், அதை செய்ய மறுத்து விட்ட திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தது.
செவிலியர்களிடம் அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்கிறீர்கள். ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள். அவர்களுக்கு சம ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள். மத்திய அரசு பணம் தரவில்லை என்று கூறாதீர்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். நீங்கள் ஏன் ஒரு தனித்திட்டத்தை தொடங்கக்கூடாது? உங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு தானே? அதை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தட்டிக் கழிக்க முடியாது. இலவசங்களை கொடுக்க பணம் இருக்கிறது. ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள்? ஆனால் செவிலியர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? என்று கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி கண்டனம் தெரிவித்தது. அதற்குப் பிறகாவது செவிலியர்களுக்கு பணி நிலைப்பும், சம ஊதியமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 16-ஆம் தேதி வலியுறுத்தினேன். ஆனால். சமூகநீதியில் அக்கறை இல்லாத திமுக அரசு, செவிலியர்களுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டது.
இப்போது ஒப்பந்த செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்களோ, அதேபோல் தான் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 45 ஆயிரம் ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். 2006-ஆம் ஆண்டில் பா.ம.க. ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கலைஞர், 01.06.2006 முதல் அவர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்தார். அதேபோல் இப்போது செய்ய எந்தத் தடையும் இல்லை.
ஆனால். அதிகாரம் தந்த போதை, ஆணவம், அதிகாரத் திமிர் ஆகியவை தலைக்கு ஏறி ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி குறித்து சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆட்சியாளர்களின் தலையில் ஏறிய அனைத்தும் இறங்கும் வகையில் அதிரடியான தீர்ப்பை வரும் தேர்தலில் மக்கள் வழங்குவார்கள். அதன்பின் அமையும் ஆட்சியில் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- துப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது.
- மது அருந்திய மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாளையங்கோட்டை பள்ளியில், விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. கல்வி கற்று முன்னேற வேண்டிய வயதில் மதுப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது.
மது அருந்திய மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவிகள் மீதான இந்த நடவடிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இது மாணவிகளின் கல்வியையும், எதிர்காலத்தையும் பாதித்துவிடும்.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு பதிலாக மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி, அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், கல்வித்துறையும் மேற்கொள்ள வேண்டும்.
மது அருந்தியதற்காக மாணவிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை மீறி மாணவிகளுக்கு மது விற்பனை செய்தவர்கள் மீதோ அல்லது அவர்களுக்கு மதுவை வாங்கிக் கொடுத்தவர்கள் மீதோ என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து இத்தகைய நிகழ்வுகளுக்கு மூலகாரணமாக திகழும் ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?
ஒரு மாணவர் அவரது வீட்டில் இருந்து இரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் இடையில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மதுக்கடைகளை கடந்து தான் செல்ல வேண்டிய நிலையை தமிழகத்தில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
மது உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள்களுமே மக்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கைக்கெட்டும் தொலைவில் மது கிடைக்கும் போது, பதின் வயதினருக்கே உரிய சாகச மனநிலை மதுவை சுவைத்துப் பார்க்கத் தூண்டும்.
இதுதான் மாணவச் செல்வங்கள் பதின் வயதில் மதுவுக்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினரை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்கான பரிகாரத்தை தி.மு.க. அரசு செய்தாக வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடுவது தான் அந்த பரிகாரம் ஆகும். அதை உடனடியாகச் செய்து இளம் தலைமுறையினரை அரசு காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண வரவேற்பு விழா இன்று நடைபெற்றது
- தற்போது பாமக கட்சி ராமதாஸ் தரப்பு அன்புமணி தரப்பு என்று 2 கோஷ்டிகளாக உள்ளது.
பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண வரவேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
சென்னையில் ஏ.கே.மூர்த்தி இல்லத் திருமண விழாவில் நேருக்கு நேர் சந்தித்த அன்புமணி மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் வணக்கம் வைத்து கொண்டனர்.
தற்போது பாமக கட்சி ராமதாஸ் தரப்பு அன்புமணி தரப்பு என்று 2 கோஷ்டிகளாக உள்ளது. என்னையும், ராமதாசையும் பிரித்தது ஜி.கே.மணிதான் தான் என்று அன்புமணி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாமகவை அன்புமணி அபகரித்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு
- பாமக தலைவர் யார் என்பதில் பிரச்சனை இருக்கிறது என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம்.
வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக கூறியுள்ள தேர்தல் ஆணையம்," பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். தரவுகள் உள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
மேலும், கட்சித் தலைவர் பதவி குறித்த தனது முரண்பாடுகளை தீர்க்க நீதிமன்றத்தை அணுக ராமதாசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், பாமகவை அன்புமணி அபகரித்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, "தற்போதைய ஆவணங்களின் அடிப்படையில்தான் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கிறோம். பாமக தலைவர் யார் என்பதில் பிரச்சனை இருக்கிறது என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம். இரு தரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவம் A மற்றும் படிவம் B-யில் இரு தரப்பு கையெழுத்து போடுவதை ஏற்காமல், சின்னமும் முடக்கி வைக்கப்படும்" என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ராமதாஸ் தரப்பு இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
- பாட்டாளி மக்கள் கட்சியை நான் அமைதியாக நடத்திக்கொண்டிருந்த போது அதில் பிளவு ஏற்பட்டுள்ளது.
- அன்புமணியோடு சேர்ந்துகொண்டு சமூக வலைதளங்களில் திட்டுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியலில் சில தவறுகள் செய்தது உண்டு, அதில் ஒன்று அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது. அருவருக்கத்தக்க வகையில் அன்புமணியின் செயல்பாடுகள் உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியை நான் அமைதியாக நடத்திக்கொண்டிருந்த போது அதில் பிளவு ஏற்பட்டுள்ளது. என்னோடு 5 எம்எல்ஏக்கள் இருந்தனர். அதில் 3 எம்எல்ஏக்கள் தற்போது அன்புமணி கும்பலோடு போய்விட்டனர்.
அய்யா என்று அன்போடு அழைத்தவர்கள் இப்போது அன்புமணியோடு சேர்ந்துகொண்டு சமூக வலைதளங்களில் திட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் இருந்தது. இப்போது 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதற்கு நான்தான் காரணம். பல்வேறு போராட்டங்களை வன்முறை இல்லாமல் நடத்தி உள்ளேன், என்னை எதிர்ப்பவர்களுக்கும் நாகரீகமாக பதிலடி கொடுப்போம்.
என்னுடன் இருந்தவர்களுக்கு பொறுப்புகள் கொடுத்து அன்புமணியும், அவரது மனைவியும் கோமாளி தனம் செய்கிறார்கள்.
அன்புமணி தரப்பு இன்னும் துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தவில்லை. அதையும் சீக்கிரம் பயன்படுத்திவிடுவார்கள்.
ஒரே கட்சியில் இருந்தவர்களை பிரித்து தன் பக்கம் வைத்துக்கொண்டு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அடிதடி செய்கிறார்கள்.
அன்புமணியிடம் இருப்பது அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கும்பல்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைவரும் மதிக்கக்கூடிய தலைவர் ராமதாஸ்.
- சமூக நீதி என்றால் ராமதாஸ் அவர்கள் என்கிற அடையாளம் நாடு முழுவதும் இருக்கிறது.
திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி கூறியதாவது:-
ராமதாஸ் அவர்கள் ஐசியுவில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஆஞ்சியோகிராம் செய்யும்போது கூட அவருக்கு மயக்க மருத்து செலுத்தவில்லை. ஐயாவிடம், உங்களது இதயம் எப்படி துடிக்கிறது என்று பாருங்கள் என்று மருத்துவர்கள் கூறினர்.
அவரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். அதனால், அவர் ஐசியுவில் இல்லை. அனைவரும் மதிக்கக்கூடிய தலைவர் ராமதாஸ் என்பதால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநில தலைவர்களும், தேசிய தலைவர்களும் நலம் விசாரித்தனர்.
பெரும்பாலான தலைவர்கள் நேரில் வந்து நலம் விசாரித்தனர். வர முடியாதவர்கள் போனில் பேசி நலம் விசாரித்தனர்.
சமூக நீதி என்றால் ராமதாஸ் அவர்கள் என்கிற அடையாளம் நாடு முழுவதும் இருக்கிறது.
அதனால், யாரையும் மருத்துவமனைக்கு வந்து ராமதாஸ் அவர்களை பார்க்கும்படி வற்புறுத்தவில்லை. இது அன்புமணி கூறும் அபாண்டமா பொய். இவ்வாறு கூறுவது தேவையற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் வலிமையான ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்திருக்க வேண்டும்.
- குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள்.
சென்னை:
போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்து விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு அன்புமணி கண்டம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மனித மிருகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் நாம் எந்த அளவுக்கு வலிமையற்று இருக்கிறோம் என்பதற்கு இந்த வழக்கு வேதனையான எடுத்துக்காட்டு ஆகும்.
வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன், தடயங்களை அழிக்கும் நோக்குடன் சிறுமியின் உடலையும் எரித்ததாக அதேபகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் இந்த வழக்கில் பிணையில் வந்த தஷ்வந்த் தமது தாயையும் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் மும்பையில் கைது செய்யப்பட்ட அவருக்கு குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனையும், மொத்தமாக 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் செங்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட காணொலி மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் போதுமானவை அல்ல, டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என்று கூறி அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள்!
தாயை கொலை செய்த வழக்கிலும் பிறழ்சாட்சியத்தை பயன்படுத்தி கடந்த மாதம் தஷ்வந்த் விடுதலையான நிலையில், இப்போது இந்த வழக்கிலிருந்தும் விடுதலையாகியுள்ளார். இந்த வழக்கில் தஷ்வந்த் தவறு செய்யவில்லை என்றால் ஹாசினியை கொலை செய்தது யார்? என்ற வினா எழுகிறது. இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே விசாரணை சரியாக நடைபெறவில்லை. 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் தஷ்வந்துக்கு பிணை கிடைத்தது. அப்போதிலிருந்தே இந்த வழக்கு தடம் மாறத் தொடங்கி விட்டது.
தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் வலிமையான ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்திருக்க வேண்டும். டி.என்.ஏ ஆய்வு முடிவுகள் கூட ஒத்துப்போகும் வகையில் இல்லாததால் தான் தண்டிக்கப்பட்ட குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மனித மிருகத்துக்குக் கூட தண்டனை பெற்றுத்தர முடியவில்லை என்றால் நமது சட்ட செயலாக்க அமைப்பும், வழக்கு நடத்துவதற்கான கட்டமைப்பும் எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளன என்பதை புரிந்து கொள்ளலாம். இதற்காக அரசும், காவல்துறையும் தலைகுனிய வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது இது போன்ற கொடிய வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மறுஆய்வு மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
- தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.
நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதியை பா.ம.க. தலைவர் அன்புமணி ஆய்வு செய்தார்.
சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மக்களுடனான கலந்துரையாடலுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நதிக்கரையில் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* தாமிரபரணி ஆற்றில் நாள்தோறும் 200 டன் திடக்கழிவுகள் கலக்கின்றன.
* நீதிபதிகள் நேரில் வந்து ஆய்வு செய்த போதிலும் இன்னும் அதே நிலை தொடர்கிறது.
* தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.
* தாமிரபரணியை கூவம் ஆக்கி விடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு பள்ளிகளில் சுமார் 14,000 சிறப்பாசிரியர்கள் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாக பணி செய்து வருகின்றனர்.
- மேலும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்வதும், அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களை பணிநிலைப்பு செய்வதற்கும் மறுப்பதும் அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் என்று கூறி உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாகவும், தற்காலிகமாகவும் பணியாற்றி வரும் ஆசிரியர்களையும், பிற பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்வதற்கு மறுத்து வரும் திமுக அரசு, உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பிறகாவது திருந்துவதற்கு முயல வேண்டும்.
உத்தரப்பிரதேச உயர்கல்வி சேவைகள் ஆணையத்தில் 1989 முதல் 1992 வரை தினக்கூலி ஊழியர்களாக பணியில் சேர்ந்த மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை பணியாளர்கள் 6 பேர் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க அம்மாநில அரசு மறுத்து விட்டது. அவர்களில் சிலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியும் கூட அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கண்டனமும், அறிவுரைகளும் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்தக் கூடியவை.
பணியாளர்களின் உழைப்பை மத்திய, மாநில அரசுகள் சுரண்டக் கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், வேலை வழங்கும் விஷயத்தில் அரசுகள் வெறும் சந்தைப் பங்கேற்பாளர்கள் அல்ல; மாறாக, அவை அரசியல் சட்டப்படியான வேலை வழங்கும் அமைப்புகள். அரசு அலுவலகங்களில் அடிப்படையான பணிகளை தொடர்ந்து செய்யும் அவர்களின் முதுகில் அரசின் நிதிப்பற்றாக்குறை என்ற சுமையை சுமத்தக்கூடாது.
தற்காலிக பணியாளர்கள் என்ற அடிப்படையில் பணிக்கு சேர்த்து விட்டு, அவர்களிடமிருந்து நிரந்தரமான ஊழியர்களுக்கான வேலைகளை காலம் காலமாக பிழிந்தெடுப்பது பொது நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை சிதைப்பதுடன், அனைவருக்கும் சமமான பாதுகாப்பு என்ற அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதத்தையும் பாதிக்கிறது என்றும் அறிவுறுத்தினர். அந்த பணியாளர்கள் அனைவரையும் 2002-ஆம் ஆண்டு முதல் பணி நிலைப்பு செய்து, அதன் அடிப்படையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.
அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 16, 21 ஆகியவற்றின் அடிப்படையில் அனைவருக்கும் சம உரிமை, வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு, வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்பது தான் இந்தத் தீர்ப்பின் நோக்கமாகும். ஆனால், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்பது தான் உண்மை.
தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், தற்காலிக நியமனங்களை மட்டுமே வாடிக்கையாக வைத்திருக்கிறது தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசு. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளனவோ, அவற்றில் பாதி, அதாவது கிட்டத்தட்ட 50% தற்காலிக நியமனங்கள் ஆகும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பதை புதிய வாடிக்கையாகவும், கலாச்சாரமாகவும் திராவிட மாடல் அரசு மாற்றியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை &அறிவியல் கல்லூரிகளில் 7500க்கும் கூடுதலான கவுரவ விரிவுரையாளர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் சுமார் 14,000 சிறப்பாசிரியர்கள் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாக பணி செய்து வருகின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்களும், பணியாளர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று 2021-ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை குப்பையில் வீசி விட்டு, தற்காலிக ஊழியர்களை சுரண்டும் பணியில் திமுக அரசு ஈடுபட்டிருக்கிறது. திமுகவின் இந்த துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது.
தற்காலிக ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் தங்களுக்கு பணிநிலைப்பு வேண்டும் என்று போராடிய போதெல்லாம் அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதையும், அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்பதையும் தான் திமுக அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் விஷயத்தில் அரசுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை படித்தாவது திமுக அரசு தெரிந்து கொள்ள வேண்டும்; பின்பற்ற வேண்டும்.
அரசுத்துறைகளில் பகுதி நேரப்பணிகள், ஒப்பந்தப்பணிகள், தற்காலிக அடிப்படையிலான பணிகள் போன்றவை அதில் ஈடுபடுவோரை சுரண்டுவதுடன், அவர்களின் கண்ணியத்தையும் குலைக்கின்றன. எனவே, தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிலைப்பு செய்வதுடன், அவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- அன்புமணி தனியாக ஆகஸ்ட் 17 அன்று பொதுக்குழு கூட்டம் நடத்த உள்ளார்.
- இன்று அவரின் தைலாபுரம் வருகை கவனம் பெற்றுள்ளது.
தந்தை - மகன் அதிகார மொதலில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சிக்கியுள்ளது. மகன் அன்புமணியை, ராமதாஸ் பொது வெளிகளில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
பனையூரில் தனி அலுவலகம் அமைத்து அன்புமணி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ராமதாஸின் மனைவியும் தனது தாயாருமான சரஸ்வதியின் பிறந்தநாளையொட்டி, அவரை சந்திப்பதற்காக தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்புமணி தனியாக ஆகஸ்ட் 17 அன்று பொதுக்குழு கூட்டம் நடத்த உள்ள நிலையில் இன்று அவரின் தைலாபுரம் வருகை கவனம் பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் 2 முறை தைலாபுரம் வந்தும் ராமதாஸை அன்புமணி பார்க்காமல் சென்ற நிலையில் இந்த முறை சந்திப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
- நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் தலைவரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தலைவர் பதவிக் காலத்தை நீட்டித்தது கட்சி விதிகளுக்கு முரணானது.
பா.ம.க. பொதுக்குழுவை அன்புமணி ராமதாஸ் கூட்டியதற்கும், அதில் அவர் தலைவராக நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கும் எதிராக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
கட்சியின் நிறுவனரான தனக்கு அழைப்பு விடுக்காமல் அன்புமணி பொதுக்குழுவை நடத்தியுள்ளார். அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதம். நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் தலைவரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக் காலத்தை நீட்டித்தது கட்சி விதிகளுக்கு முரணானது. அன்புமணி மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- ஜெயங்கொண்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்து வருகிறது பாமக. அதிமுக கூட்டணியிலும் பாமக நிச்சயம் இடம்பெறும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
பாமக கட்சி தற்போது ராமதாஸ் அணி அன்புமணி அணி என 2 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்று பாமக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






