என் மலர்
நீங்கள் தேடியது "alcohol"
- சிறுவர்கள் கூட அதில் என்னதான் இருக்கிறது? என்று ருசி பார்க்கும் அளவுக்கு மது கலாசாரம் பெருகிவிட்டது.
- இந்தியர்களின் குடிப்பழக்கம் முன்பைவிட நிதானமாகவும், ஆரோக்கியம் சார்ந்து மாறி வருவதாகவும் சொல்லப்பட்டு உள்ளது.
சென்னை:
உலகளவில் "ஜென்-சி" இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை முற்றிலும் தவிர்ப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
"மது வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு". "மது நாட்டுக்கும், வீட்டுக்கும். உயிருக்கும் கேடு", "மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர்" என்பது போன்ற பல விழிப்புணர்வு வாசகங்களை பெரும்பாலான இடங்களில் பார்க்கிறோம். இவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
சிறுவர்கள் கூட அதில் என்னதான் இருக்கிறது? என்று ருசி பார்க்கும் அளவுக்கு மது கலாசாரம் பெருகிவிட்டது. இப்படி இருக்கும் சூழலில் "யூரோமானிடர் இன்டர்நேஷனல்" என்ற சந்தை ஆய்வு மற்றும் நுகர்வோர் நுண்ணறிவு நிறுவனம் 'மதுபானங்களுக்கான உலக சந்தை' மற்றும் 'நுகர்வோரின் குரல்' என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.
இந்த ஆய்வறிக்கை பல விஷயங்களை இந்த உலகத்துக்கு எடுத்துச் சொல்லியுள்ளது. அதிலும் இன்றைய இளம் தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்களா? என்பதற்கான விடையையும் கொடுத்திருக்கிறது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரேசில், பிரிட்டன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முக்கிய நாடுகளில் இருக்கும் மதுபான சந்தைகளில் இந்த தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. அந்த ஆய்வறிக்கையில், உலகளவில் சட்டப்பூர்வமாக மது அருந்தும் வயதை எட்டியுள்ள 'ஜென்-சி' இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மதுவை அறவே தவிர்க்கிறார்கள். மதுவை தொட்டுக்கூட பார்த்தது இல்லை. மீதமுள்ள 64 சதவீதம் பேர் ஏதாவது ஒரு வகையில் மதுவை ருசிபார்த்தவர்களாகவே இருக்கிறார்கள். மது அருந்துபவர்களில் 53 சதவீதம் பேர் தாங்கள் வாங்கி பருகும் மதுவின் நுகர்வை குறைக்க முயற்சிக்கிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், மதுவையும், மதுவற்ற குளிர்பானங்களையும் மாறி, மாறி குடிக்கும் 'ஜீப்ரா ஸ்டிரைபிங்' என்ற கலாசாரத்தை இன்றைய இளைஞர்கள் கையில் எடுத்து இருக்கின்றனர். சமூக ஊடகங்களில் தங்களை பற்றிய பிம்பம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 85 சதவீதம் இளைஞர்கள் பொது இடங்களில் மது குடிப்பதை தவிர்த்து வருகின்றனர்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமல்லாமல், வாரம் ஒருமுறை மது குடிப்பவர்களின் எண்ணிக்கை 2020-ல் 23 சதவீதமாக இருந்த நிலையில், 2025-ல் அது 17 சதவீதமாக குறைந்திருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. மதுவை தவிர்ப்பவர்களில் 87 சதவீதம் பேர் நீண்டகால உடல்நல அபாயங்களை தவிர்க்க மதுவை அறவே தவிர்ப்பதாகவும், சேமிப்புக்காக 30 சதவீதம் பேர் அதனை தவிர்ப்பதாகவும் கூறியுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, ஆல்கஹால் இல்லாத பீர் மற்றும் பானங்களின் விற்பனை உலக சந்தையில் ஆண்டுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து வருவதாக புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.
இந்த ஆய்வறிக்கை உலகளவில் மதுபானங்களை பயன்படுத்துவோரின் சந்தை எண்ணிக்கை குறைந்து வருவதை சுட்டிக்காட்டினாலும், இந்தியாவில் அதன் பாதிப்பு உடனடியாக தெரியவில்லை. ஆனால் இந்தியர்களின் குடிப்பழக்கம் முன்பைவிட நிதானமாகவும், ஆரோக்கியம் சார்ந்து மாறி வருவதாகவும் சொல்லப்பட்டு உள்ளது.
- ரசாயனத் திரவத்தை அவர்கள் அருந்தியதாகக் கூறப்படுகிறது.
- குடித்த சிறிது நேரத்திலேயே 4 பேரின் உடல்நிலை மோசமடைந்தது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஆலோலி கிராமத்தில் திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் பாத்திரம் சுத்தம் செய்யும் ஒப்பந்த வேலையை ரத்தன், சுஷிலா தேவி, ஜம்னி தேவி மற்றும் பதாமி தேவி ஆகிய 4 பேரும் செய்தனர்.
வேலை முடிந்ததும் அங்கிருந்த பாத்திரம் கழுவும் திரவத்தை மது என நினைத்து, அவர்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
நேற்று இரவு அந்த ரசாயனத் திரவத்தை அவர்கள் அருந்தியதாகக் கூறப்படுகிறது. குடித்த சிறிது நேரத்திலேயே 4 பேரின் உடல்நிலையும் மிக மோசமடைந்தது. இதில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பதாமி தேவி என்ற பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்துயர சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் ரசாயனத் திரவத்தை மது என நினைத்து குடித்ததே மரணத்திற்கு காரணம் என தெரிய வந்தது.
- தமிழகத்தில் அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள் என்றார்.
- மதுபோதையில் கொன்றதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பீகார் கூலி தொழிலாளி, அவரது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டதற்கு மது தான் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்ற வாக்கியம் ஏட்டளவில்தான் என்பதற்கு சான்றுதான் பிகார் கூலி தொழிலாளி, அவரது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை. இக்கொலைக்கு அடிப்படைக்காரணம் மது.
ஒரு பெண், ஒரு குழந்தை இவர்களில் யாரையாவது கொல்ல வேண்டும் அல்லது அருகே உள்ள மதுவை அருந்தவேண்டும் என்ற கதைக்கேற்ப மதுவை அருந்திவிட்டு பெண்ணை அடைய தடையாக இருந்த குழந்தையை கொன்று பின் அப்பெண்ணையும் கொன்றதாக அக்கதை முடியும். ஆக மது அனைத்தையும் செய்யவைக்கும் என்பதே இக்கதையின் சாராம்சம்.
அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற திமுக மகளிர் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கியதால்தான் தமிழகத்தில் அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள் என்றார். அப்படி சொன்ன மறுநாளே தமிழகத்தையே உலுக்கிய கொடூர கொலை. வேலை கேட்டு நம்பி வந்த குடும்பத்தை நம்பிக்கை துரோகம் செய்து மதுபோதையில் கொன்றதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆனால் பஞ்சம் பிழைக்க வந்த வெளிமாநிலத்தவரையும் விட்டுவைக்காத மது போதை ஒரு குடும்பத்தையே நிர்மூலமாக்கியுள்ளது. பெண்கள் அச்சமின்றி வாழ இனியாவது மதுவை அறவே ஒழிக்க அரசு மதுகடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும். இலவசங்களை அளிக்க மது வருவாயை தவிர்த்து வேறுவகையில் வருவாயை பெற பல வழிகள் உள்ளது" என்று தெரிவித்தார்.
- புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கும் இந்தப் பானங்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.
- மதுபானங்களின் வீரியத்திற்கு ஏற்ப வரி விதிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் மதுபானம் மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் மக்கள் எளிதில் வாங்கும் அளவுக்கு விலை குறைவாக கிடைப்பது பொதுச் சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது
அதன் அறிக்கையில், "தென்கிழக்கு ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவில், மது மற்றும் சர்க்கரை பானங்கள் மீதான வரி விதிப்பு முறை மிகவும் பலவீனமாக உள்ளது.
வருமானம் உயர்ந்து வரும் சூழலில், இந்தத் தயாரிப்புகளின் விலை அதற்கேற்ப உயர்த்தப்படவில்லை.
புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கும் இந்தப் பானங்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.
வரி குறைவாக இருப்பதால், மக்கள் இவற்றை எளிதாக வாங்கிப் பயன்படுத்துவது நோய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுபானங்களின் வீரியத்திற்கு ஏற்ப வரி விதிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் அத்தகைய முறை பின்பற்றப்படாததால், அதிக போதையுள்ள மதுபானங்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
மேலும் குளிர்பானங்கள் மற்றும் சர்க்கரை கலந்த பழச்சாறுகள் மீதான வரி நுகர்வைக் குறைக்கும் அளவுக்குப் போதுமானதாக இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில் மது வணிகம் ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
- மக்கள் விரோத மது ஆதரவு அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் ரூ.454 கோடிக்கு மது விற்பனையாகி இருந்த நிலையில், நடப்பாண்டில் அதை விட 14.10 சதவீதம் அதிகம் ஆகும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் 11.19 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில், அதை விட அதிகமாக மது வணிகம் வளர்ச்சியடைந்திருக்கிறது. மக்களுக்கு மதுவைப் புகட்டுவதில் மட்டும் தான் தி.மு.க. அரசு சாதனை படைக்கிறது.
கடந்த ஆண்டு பொங்கல் திருநாளின்போது 4 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில், நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில் மது வணிகம் ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
பொங்கல் திருநாள் மது வணிகத்தில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், மனமகிழ் மன்றங்களின் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது என்பது தான். இது மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட ரூ.435.41 கோடி மதுவுடன் ஒப்பிடும்போது 19 சதவீதம் ஆகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் 500 மதுக்கடைகளை, அதாவது 9 சதவீதம் மதுக்கடைகளை மூடிய தி.மு.க. அரசு, 19 சதவீதம் கூடுதலாக மது வணிகம் செய்யும் அளவுக்கு மனமகிழ் மன்றங்களைத் திறந்து மதுவை விற்பனை செய்திருப்பது உறுதியாகி யிருக்கிறது.
மக்கள் விரோத மது ஆதரவு அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- துப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது.
- மது அருந்திய மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாளையங்கோட்டை பள்ளியில், விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. கல்வி கற்று முன்னேற வேண்டிய வயதில் மதுப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது.
மது அருந்திய மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவிகள் மீதான இந்த நடவடிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இது மாணவிகளின் கல்வியையும், எதிர்காலத்தையும் பாதித்துவிடும்.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு பதிலாக மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி, அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், கல்வித்துறையும் மேற்கொள்ள வேண்டும்.
மது அருந்தியதற்காக மாணவிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை மீறி மாணவிகளுக்கு மது விற்பனை செய்தவர்கள் மீதோ அல்லது அவர்களுக்கு மதுவை வாங்கிக் கொடுத்தவர்கள் மீதோ என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து இத்தகைய நிகழ்வுகளுக்கு மூலகாரணமாக திகழும் ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?
ஒரு மாணவர் அவரது வீட்டில் இருந்து இரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் இடையில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மதுக்கடைகளை கடந்து தான் செல்ல வேண்டிய நிலையை தமிழகத்தில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
மது உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள்களுமே மக்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கைக்கெட்டும் தொலைவில் மது கிடைக்கும் போது, பதின் வயதினருக்கே உரிய சாகச மனநிலை மதுவை சுவைத்துப் பார்க்கத் தூண்டும்.
இதுதான் மாணவச் செல்வங்கள் பதின் வயதில் மதுவுக்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினரை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்கான பரிகாரத்தை தி.மு.க. அரசு செய்தாக வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடுவது தான் அந்த பரிகாரம் ஆகும். அதை உடனடியாகச் செய்து இளம் தலைமுறையினரை அரசு காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
- உத்திராட நாளில் (அதாவது ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள்) மட்டும் ரூ.137 கோடிக்கு மது விற்பனையானது.
கொச்சி:
கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 10 நாட்கள் ஓணம் விழா நடந்தது. மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 நாட்களில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை ஆனது. கடந்த ஆண்டு ரூ.776 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இதை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
உத்திராட நாளில் (அதாவது ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள்) மட்டும் ரூ.137 கோடிக்கு மது விற்பனையானது. கடந்த ஆண்டு அதே நாளில் ரூ.126 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. இதை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.11 கோடி மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் 6 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் ரூ.1 கோடி மற்றும் அதற்கு கூடுதலாக மதுபானங்கள் விற்பனையானது. இதில் 3 சில்லறை விற்பனை கடைகள் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது.
கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி பகுதியில் உள்ள அரசின் சில்லறை விற்பனை கடையில் ரூ.1.46 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இது மாநிலத்திலேயே அதிக அளவு விற்பனையான கடை ஆகும். அதற்கு அடுத்தபடியாக கொல்லம் அருகே உள்ள காவநாடு சில்லறை விற்பனை கடையில் ரூ.1.24 கோடிக்கும், மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னாவில் உள்ள எடப்பால் குற்றிப்பாலா சில்லறை மதுபான விற்பனை கடையில் ரூ.1.11 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
திருச்சூர் மாவட்டம் சாலக்குடி மதுபான சில்லறை விற்பனை கடையில் ரூ.1.07 கோடிக்கும், இரிஞ்சாலகுடா மதுபான கடையில் ரூ.1.03 கோடிக்கும், கொல்லம் மாவட்டம் குண்டராவில் உள்ள மதுபான கடையில் ரூ.1 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது என்று கேரள அரசின் மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- போதைப் பொருளை ஒழிக்க பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- போதைப் பொருள் வர்த்தகத்தில் மத்திய பிரதேசம் முந்திவிட்டது என்றார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய பிரதேச மாநில பெண்கள், நாட்டின் பிற பகுதிகளை விட அதிகமாக மது அருந்துகின்றனர். இதற்காக மத்திய பிரதேசத்துக்கு பதக்கம் அளிக்கவேண்டும்.
மத்திய பிரதேசத்தை வளமான மாநிலமாக மாற்ற கனவு காணும் பா.ஜ.க. தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
போதைப் பொருளை ஒழிக்க பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நமது சகோதரிகளும், மகள்களும் போதைப் பொருளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். போதைப் பொருள் பயன்பாட்டிலும் மத்திய பிரதேச பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.
போதைப் பொருள் வர்த்தகத்தில் பஞ்சாப் போன்ற மாநிலங்களை மத்திய பிரதேசம் முந்திவிட்டது என தெரிவித்தார்.
ஜிது பட்வாரியின் இந்தக் கருத்து அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜிது பட்வாரிக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிது பட்வாரியின் கருத்து, பெண்களுக்கு எதிரான காங்கிரசின் குறுகிய மனப்பான்மையை காட்டுவதாகவும், இதற்காக காங்கிரஸ் தலைவர் கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- மது அருந்தியதை பயணிகள் எச்சரித்தும், அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை.
- மது அருந்தியதை எதிர்த்துப் பேசிய மூத்த பயணியையும் அவர் மதிக்கவில்லை.
நாகர்கோவிலில் இருந்து மதுரை சென்ற ரெயிலில் , பயணிகள் முன்னிலையில் ஒரு வடமாநிலத்தவர் வெளிப்படையாக மது அருந்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மது அருந்தியதை பயணிகள் எச்சரித்தும், அவர் அதைக் கண்டுகொள்ளாமல் தனது செயலைத் தொடர்ந்துள்ளார். இதை எதிர்த்துப் பேசிய மூத்த பயணியையும் அவர் மதிக்கவில்லை.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெயில்களில் இதுபோன்று அநாகரீகமான சம்பவங்களைத் தடுக்க, ரெயில்வே பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காரை பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு காருக்குள் சென்று இருவரும் அதிக அளவு மது குடித்தனர்.
- காரில் காற்றோட்டம் இல்லாததால் இருவரும் மூச்சு திணறி இறந்தனர்.
ஆந்திர மாநிலம், கோவிந்தப்பா கண்டிகையை சேர்ந்தவர் திலீப் (வயது 25). கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவரது சகோதரர் வினய் (20). இவர் திருச்சானூரிலுள்ள சகோதரர் வீட்டில் தங்கி இருந்து திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.
இருவரும் நேற்று முன்தினம் இரவு திருச்சானூர் அடுத்த கலுவ கட்டா பகுதிக்கு காரில் வந்தனர். அப்போது காரை பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு காருக்குள் சென்று ஏ.சியை ஆன் செய்தனர். பின்னர் இருவரும் அதிக அளவு மது குடித்தனர்.
ஏ.சி இரவு முழுவதும் ஓடிக்கொண்டு இருந்ததால் காரில் இருந்த பெட்ரோல் தீர்ந்து போனது. இதனால் ஏ.சி வேலை செய்யவில்லை. இருவரும் அதிக மது போதையில் இருந்ததால் ஏசி வேலை செய்யவில்லை என்பது தெரியவில்லை. காரில் காற்றோட்டம் இல்லாததால் இருவரும் மூச்சு திணறி இறந்தனர். கார் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு இருந்ததால் காரில் இருப்பவர்கள் வெளியே தெரியவில்லை.
நேற்று காலை திலீப்பின் தந்தை சந்தேகத்தின் பேரில் காரின் மீது இருந்த கவரை அகற்றினார். அப்போது மகன்கள் இருவரும் காரிலேயே இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
திருச்சானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் ஏசியை ஆன் செய்து விட்டு மதுபோதையில் தூங்கினால் இது போன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும் குடிமகன்கள் உஷாராக இருக்க வேண்டும்என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
- தெலுங்கு நடிகரான நரேஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான அல்லெரி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
- இவரது நடிப்பில் கடைசியாக பச்சல மல்லி என்ற திரைப்படம் வெளியானது.
தெலுங்கு நடிகரான நரேஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான அல்லெரி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லெரி நரேஷ் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக பச்சல மல்லி என்ற திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் அல்லெரி நரேஷ் தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டெர்டெயின்மண்ட் மற்றும் பிரபல இயக்குநரான திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் மற்றும் நாக வம்சி இணைந்து தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஆல்கஹால் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை மெஹெர் தேஜ் எழுதி இயக்குகிறார். இது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தை பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- ஒன்று பழுதடைந்தாலோ அல்லது சிக்னல் கிடைக்கவில்லை என்றாலோ மற்றொறு மிஷினை பயன்படுத்தி பணம் பெறலாம்.
- டாஸ்க்மாக் கடைகளில் இனி மது பாட்டிகளை ஸ்கேன் செய்தால் அந்த பாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டும் தான் வரும்.
சென்னை:
தமிழகத்தில் அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் 4,778 சில்லறை விற்பனை கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. இங்கு மது வகைகளுக்கு ஏற்ப, ஒரு பாட்டில்களுக்கு கூடுதலாக குறைந்தது ரூ.10 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்பாக கேட்கும்போது மதுப்பிரியர்களுக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. அப்போது அவர்கள் பேசுவதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்படுகிறது.
எனவே தமிழக அரசின் உத்தரவின் பேரில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன், அனைத்து கடைகளிலும் மது பாட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு தான் விற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில் ஏராளமான ஊழியர்களையும் அவர், இடைநீக்கம் செய்தார். ஆனாலும் இந்த பிரச்சினை தீரவில்லை. தொடர்ந்து மது பாட்டிலுக்கு கூடுதல் தொகை தான் வசூலிக்கபட்டது.
எனவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க டாஸ்மாக் நிர்வாகம், டிஜிட்டல் பண பறிமாற்ற முறையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தியது. ஒவ்வொரு கடையாக கொண்டு வரப்பட்ட இந்த முறை தற்போது அனைத்து கடைகளிலும் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு கடைகளிலும் 2 'ஸ்வைப்பிங்' மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒன்று பழுதடைந்தாலோ அல்லது சிக்னல் கிடைக்கவில்லை என்றாலோ மற்றொறு மிஷினை பயன்படுத்தி பணம் பெறலாம்.
இதனால் ஏ.டி.எம். கார்டு, யு.பி.ஐ. பறிமாற்றம் மூலம் 2 சதவீதம் அளவுக்கு பணம் வசூலிக்கப்பட்டது. இப்போது 20 சதவீதத்தை தாண்டி டிஜிட்டல் பறிமாற்றம் நடக்கிறது.
இருந்தாலும்....? ஒரு பாட்டிலுக்கு கூடுதல் தொகை வாங்குவது மட்டும் நிற்கவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முடிவு செய்தது.
இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளது. அதாவது சூப்பர் மாக்கெட்டுகளில் வாங்கிய பொருளை ஸ்கேன் செய்தால் அந்த பொருளின் விலை மட்டும் தான் 'ஸ்வைப்பிங்' மிஷினில் வரும். அந்த தொகையை மட்டும் தான் டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும்.
அதேபோல டாஸ்க்மாக் கடைகளில் இனி மது பாட்டிகளை ஸ்கேன் செய்தால் அந்த பாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டும் தான் வரும். அந்த தொகையை மட்டும் தான் நாம் கார்டு மூலமாகவோ, யு.பி.ஐ. மூலமாகவோ செலுத்த முடியும். கூடுதல் தொகையை செலுத்த முடியாது.
இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம், 'ஸ்வைப்பிங்' பணம் செலுத்தும் எந்திரத்தை வழங்கியுள்ள வங்கிகளிடம் ஆலோசனை நடத்தியது. சென்னையில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வங்கி பிரதிநிதிகள், இன்னும் 10 தினங்களுக்குள், அதற்கான ஏற்பாட்டை செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.
இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் மதுபாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






