என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உலகளவில் "ஜென்-சி" இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை தவிர்க்கிறார்கள்- ஆய்வில் புதிய தகவல்
- சிறுவர்கள் கூட அதில் என்னதான் இருக்கிறது? என்று ருசி பார்க்கும் அளவுக்கு மது கலாசாரம் பெருகிவிட்டது.
- இந்தியர்களின் குடிப்பழக்கம் முன்பைவிட நிதானமாகவும், ஆரோக்கியம் சார்ந்து மாறி வருவதாகவும் சொல்லப்பட்டு உள்ளது.
சென்னை:
உலகளவில் "ஜென்-சி" இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை முற்றிலும் தவிர்ப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
"மது வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு". "மது நாட்டுக்கும், வீட்டுக்கும். உயிருக்கும் கேடு", "மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர்" என்பது போன்ற பல விழிப்புணர்வு வாசகங்களை பெரும்பாலான இடங்களில் பார்க்கிறோம். இவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
சிறுவர்கள் கூட அதில் என்னதான் இருக்கிறது? என்று ருசி பார்க்கும் அளவுக்கு மது கலாசாரம் பெருகிவிட்டது. இப்படி இருக்கும் சூழலில் "யூரோமானிடர் இன்டர்நேஷனல்" என்ற சந்தை ஆய்வு மற்றும் நுகர்வோர் நுண்ணறிவு நிறுவனம் 'மதுபானங்களுக்கான உலக சந்தை' மற்றும் 'நுகர்வோரின் குரல்' என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.
இந்த ஆய்வறிக்கை பல விஷயங்களை இந்த உலகத்துக்கு எடுத்துச் சொல்லியுள்ளது. அதிலும் இன்றைய இளம் தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்களா? என்பதற்கான விடையையும் கொடுத்திருக்கிறது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரேசில், பிரிட்டன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முக்கிய நாடுகளில் இருக்கும் மதுபான சந்தைகளில் இந்த தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. அந்த ஆய்வறிக்கையில், உலகளவில் சட்டப்பூர்வமாக மது அருந்தும் வயதை எட்டியுள்ள 'ஜென்-சி' இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மதுவை அறவே தவிர்க்கிறார்கள். மதுவை தொட்டுக்கூட பார்த்தது இல்லை. மீதமுள்ள 64 சதவீதம் பேர் ஏதாவது ஒரு வகையில் மதுவை ருசிபார்த்தவர்களாகவே இருக்கிறார்கள். மது அருந்துபவர்களில் 53 சதவீதம் பேர் தாங்கள் வாங்கி பருகும் மதுவின் நுகர்வை குறைக்க முயற்சிக்கிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், மதுவையும், மதுவற்ற குளிர்பானங்களையும் மாறி, மாறி குடிக்கும் 'ஜீப்ரா ஸ்டிரைபிங்' என்ற கலாசாரத்தை இன்றைய இளைஞர்கள் கையில் எடுத்து இருக்கின்றனர். சமூக ஊடகங்களில் தங்களை பற்றிய பிம்பம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 85 சதவீதம் இளைஞர்கள் பொது இடங்களில் மது குடிப்பதை தவிர்த்து வருகின்றனர்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமல்லாமல், வாரம் ஒருமுறை மது குடிப்பவர்களின் எண்ணிக்கை 2020-ல் 23 சதவீதமாக இருந்த நிலையில், 2025-ல் அது 17 சதவீதமாக குறைந்திருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. மதுவை தவிர்ப்பவர்களில் 87 சதவீதம் பேர் நீண்டகால உடல்நல அபாயங்களை தவிர்க்க மதுவை அறவே தவிர்ப்பதாகவும், சேமிப்புக்காக 30 சதவீதம் பேர் அதனை தவிர்ப்பதாகவும் கூறியுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, ஆல்கஹால் இல்லாத பீர் மற்றும் பானங்களின் விற்பனை உலக சந்தையில் ஆண்டுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து வருவதாக புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.
இந்த ஆய்வறிக்கை உலகளவில் மதுபானங்களை பயன்படுத்துவோரின் சந்தை எண்ணிக்கை குறைந்து வருவதை சுட்டிக்காட்டினாலும், இந்தியாவில் அதன் பாதிப்பு உடனடியாக தெரியவில்லை. ஆனால் இந்தியர்களின் குடிப்பழக்கம் முன்பைவிட நிதானமாகவும், ஆரோக்கியம் சார்ந்து மாறி வருவதாகவும் சொல்லப்பட்டு உள்ளது.






