என் மலர்
நீங்கள் தேடியது "Anbumani Ramdoss"
- தீபாவளி முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பாதவது:-
இருள் இன்றுடன் விலகட்டும்,
மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும்!
இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நான் ஐ.சி.யூ.வில் இல்லை. சாதாரண சிகிச்சை பிரிவில் தான் இருந்தேன்.
- பா.ம.க.வை தோற்றுவித்தது, அதற்கு சொந்தக்காரன் நான் தான்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதய பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.
தைலாபுரம் வீட்டில் சில நாட்கள் ஓய்வில் இருந்த டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மருத்துவ பரிசோதனைக்காக நானே சென்று மருத்துவமனையில் சேர்ந்தேன். 12 வருடத்திற்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து இருந்தேன். அதனை சரி பார்க்க சென்றேன். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து விட்டு வீடு திரும்பிவிட்டேன்.
நான் மருத்துவமனையில் இருந்தபோது கட்சி, சாதி, மத பேதமின்றி அனைவரும் என்னை நேரில் வந்து சந்தித்து நலம் விசாரித்தார்கள். வர முடியாத ஒரு சிலர் மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள். இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது. உடல் நலனில் எந்த பிரச்சனையும் இல்லை என டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்
நான் ஐ.சி.யூ.வில் இல்லை. சாதாரண சிகிச்சை பிரிவில் தான் இருந்தேன். ஒரு மணி நேரம் ஐ.யூ.சி.வில் இருப்பார். அதன்பிறகு அறைக்கு வந்து விடுவார். நான் மருத்துவரிடம் பேசி விட்டேன். இன்னும் 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்ததாக ஒரு கும்பல் கூறியுள்ளது. அவர் பேசிய பேச்சுகள், தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் உலுக்கி இருக்கும்.
டாக்டர் ராமதாசிற்கு ஏதாவது ஆச்சினா நான் சும்மா இருக்க மாட்டேன். தொலைத்து விடுவேன் என பேசி இருக்கிறார்கள். யார் யாரோ வந்து பார்த்து விட்டு போய் கொண்டிருக்கிறார்கள். இது என்ன கண்காட்சியா? எனவும் பேசி இருக்கிறார்கள்.
படிக்காத மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படிபட்ட சொற்களை கொட்டி இருக்க மாட்டான். அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என ஏற்கனவே நிர்வாக குழு கூட்டத்தில் கூறினேன். இது அன்புமணியின் பேச்சு மூலம் உறுதியாக தெரிய வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விரைவில் குணமடைய வேண்டுமென கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. தொற்று அறிகுறி அளவிற்கு எனக்கு வியாதி இல்லை.
பா.ம.க.வை தோற்றுவித்தது, அதற்கு சொந்தக்காரன் நான் தான். வியர்வையை சிந்தி இயக்கத்தை வளர்த்தேன். அந்த கட்சியை என்னுடைய கட்சி என அன்புமணி கூற கூடாது. தேர்தல் ஆணையத்தில் சந்திப்போம். கட்சி ஆரம்பிக்கும்போது இப்படி எல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது.
பா.ம.க. கட்சிக்கும், கொடிக்கும் அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அன்புமணி தனிகட்சி ஆரம்பித்து கொள்ள வேண்டும். அது அன்புமணிக்கும், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.
புதிய கட்சி தொடங்கினால் பொறுப்புகள் தான் கிடைக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி கிடைக்காது. மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அது ஒரு போலியான அமைப்பாக தான் இருக்கும்.
பா.ம.க. கட்சி கொடி, பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது. என்னுடைய பெயரின் தலைப்பெழுத்தினை மட்டுமே அன்புமணி பயன்படுத்தி கொள்ள வேண்டும். தனி மனித உழைப்பினால் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று காடுமேடு அலைந்து திரிந்து உருவாக்கப்பட்டது பா.ம.க.
பா.ம.க. சட்டபேரவை தலைவர் கொறடாவை மாற்ற முடியாது. சபாநாயகர் மட்டுமே இதனை செய்ய முடியும். தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள், பிற கட்சியில் உள்ளவர்கள் தந்தையும், தாயையும் காப்பாற்றாத மகனாக அன்பு மணி உள்ளதாக தெரிவிக்கும் கருத்தாக உள்ளது.
கரூர் சம்பவத்திற்கு உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. அந்த சி.பி.ஐ. விசாரணை காலம் தாழ்த்துமா? என்பது சோழி போட்டு தான் பார்க்க வேண்டும். டிசம்பரில் பொதுக்குழு கூடும் அதில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். இந்த முறை கூட்டணி முடிவு சரியாக இருக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.
- சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
- தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.
நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதியை பா.ம.க. தலைவர் அன்புமணி ஆய்வு செய்தார்.
சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மக்களுடனான கலந்துரையாடலுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நதிக்கரையில் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* தாமிரபரணி ஆற்றில் நாள்தோறும் 200 டன் திடக்கழிவுகள் கலக்கின்றன.
* நீதிபதிகள் நேரில் வந்து ஆய்வு செய்த போதிலும் இன்னும் அதே நிலை தொடர்கிறது.
* தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.
* தாமிரபரணியை கூவம் ஆக்கி விடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த 45 மாதங்களாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
- ககன்தீப்சிங் குழு 194 அரசு ஊழியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்தியுள்ளது.
அரசு ஊழியர்களை ஏமாற்றும் கருவியாக ககன்தீப் சிங் குழு பயன்படக்கூடாது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக அரசு எத்தகைய ஏமாற்று வேலையை செய்துவிடக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தேனோ, அந்த ஏமாற்று வேலையை ககன்தீப் சிங் குழுவை பயன்படுத்தி சாமர்த்தியமாக செய்திருக்கிறது திமுக அரசு.
பேடி குழுவை அதன் இறுதி அறிக்கைக்கு பதிலாக இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வைத்திருப்பதன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளது.
ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து தான் திமுக ஆட்சியைப் பிடித்தது என்றாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த 45 மாதங்களாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்த விவகாரத்தில் திமுகவின் துரோகத்தை பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியதாலும், அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்ததாலும் நிலைமை சமாளிப்பதற்காக பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைப்பதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் குழுவை கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி அரசு அமைத்தது.
இது தொடர்பாக கடந்த ஆட்சியில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டு விட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு குழுவை அமைப்பது ஏமாற்று வேலை; குழுவின் அறிக்கையை பெறுவதை தாமதப்படுத்தி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் ஏமாற்றும் என்று எச்சரித்திருந்தேன். எனது எச்சரிக்கை இப்போது உண்மையாகிருக்கிறது.
தமிழ்நாட்டில் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது குறித்த முழுமையான அறிக்கையை நேற்று தாக்கல் செய்திருக்க வேண்டிய ககன்தீப்சிங் பேடி குழு இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருக்கிறது. அதன் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதுவரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் கூடுதல் கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும் கூடுதல் காலக்கெடு தேவைப்படுவதாகவும் ககன்தீப்சிங் குழு கூறியுள்ளது. இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை. இது நிச்சயமாக ஏமாற்று வேலை தான். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ககன்தீப்சிங் குழு 194 அரசு ஊழியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்தியுள்ளது; அவற்றின் மூலம் ஏராளமான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.
ஆனால், குழு அமைக்கப்பட்ட பிப்ரவரி 4-ம் தேதியில் தொடங்கி இன்று வரையிலான 8 மாதங்களில் இவை செய்து முடிக்க முடியாத பணிகள் அல்ல. ஆனால், இந்தப் பணிகளை குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கக் கூடாது என்று அரசும், ககன்தீப்சிங் குழுவும் செய்த கூட்டுச் சதியின் காரணமாகவே இப்போது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை.
ககன்தீப்சிங் குழு கடந்த பிப்ரவரி 4-ம் தேதியே அமைக்கப்பட்டு விட்ட போதிலும், அடுத்த 6 மாதங்களுக்கு அந்தக் குழு துரும்பைக் கூட அசைக்கவில்லை. அதை சுட்டிக்காட்டி கடந்த ஜூன் 22, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
மேலும், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் நான் மேற்கொண்டு வரும் நடைபயணத்தின் போதும் ஒவ்வொரு நாளும் இந்த சிக்கல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அதனால் ஏற்பட்ட அழுத்தங்களின் காரணமாகத் தான் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் ககன்தீப்சிங் குழு அரசு ஊழியர்களிடம் கருத்துக் கேட்கத் தொடங்கியது. இப்பணியை பிப்ரவரி மாதமே தொடங்கியிருந்தால் 3 மாதங்களுக்கு முன்பாகவே முழு அறிக்கையை தாக்கல் செய்திருக்கலாம்.
அவ்வாறு தாக்கல் செய்திருந்தால் அதன் மீது முடிவெடுத்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் அரசுக்கு ஏற்பட்டிருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத் தான் ககன்தீப்சிங் குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்யாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசின் கருவியாக ககன்தீப்சிங் குழு பயன்படுத்தப்பட்டிருக்கிறது; இது திட்டமிட்ட சதி என்று மீண்டும் ஒருமுறை குற்றஞ்சாட்டுகிறேன். இது அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இழைக்கப்படும் பெருந்துரோகமாகும்.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொருத்தவரை ககன்தீப்சிங் பேடி குழு அமைக்கப்பட்டதே தேவையற்ற வேலை தான். தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 27-.11.2018-ம் நாள் அதன் அறிக்கையை அன்றைய அரசிடம் தாக்கல் செய்து விட்டது.
அதன் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். ஆனால், அதை செய்யாமல் புதிய குழுவை திமுக அரசு அமைத்ததன் நோக்கமே அரசு ஊழியர்களை ஏமாற்றுவது தான். அது இப்போது உறுதியாகியிருக்கிறது.
ககன்தீப்சிங் குழுவின் இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது தெரியாத நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துமா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழக அரசு நினைத்திருந்தால், எப்போதோ பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும்.
அதற்கு நிதிநிலை ஒரு தடையல்ல. இந்தியாவில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த எந்தத் தடையும் கிடையாது.
எனவே, ககன்தீப்சிங் பேடி குழு இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்று காரணங்களைத் தேடிக் கொண்டிருக்காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
- வன்னியர் சங்க அலுவலகத்துக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்.
திண்டிவனத்தில் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. பா.ம.க. செயல் தலைவர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் டாக்டர் அன்புமணியை நீக்கி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால், அன்புமணியை நீக்க ராமதாசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அன்புமணி தரப்பை சேர்ந்த வக்கீல் பாலு கூறியுள்ளார். இதனால் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வன்னியர் சங்க அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் டாக்டர் அன்புமணி கலந்து கொள்வதாகவும் இருந்தது.
இதைத்தொடர்ந்து வன்னியர் சங்க அலுவலகத்துக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் அன்புமணி ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். அவர்கள், வன்னியர் சங்க அலுவலகத்தை திறக்க கூறினர்.
இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் திண்டிவனம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க வன்னியர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பாமக சார்பில் குறைந்தது 5 லட்சம் பேர் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
- இளைஞர்கள் நினைத்தால் புரட்சி வெடிக்கும் என தற்போதைய நேபாள புரட்சியை உதாரணம்.
வன்னியர்களுக்கு 15 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்வில்லை என்றால் இளைஞர்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
வன்னியர்களுக்கு 15 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்காவிடில் இளைஞர்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
இடஒதுக்கீடு வழங்காவிடல் 2 மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டம். பாமகவினர் அறவழியில் கலந்து கொள்ள வேண்டும்.
பாமக சார்பில் குறைந்தது 5 லட்சம் பேர் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இளைஞர்கள் நினைத்தால் புரட்சி வெடிக்கும் என தற்போதைய நேபாள புரட்சியை உதாரணம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
- மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன.
தமிழகம் முழுவதும் நடத்தி வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு 46 வகையான சேவைகளை வழங்கப்போவதாகக் கூறி நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை ஐந்தாயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் வாயிலாக 40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
மகளிர் உரிமைத் தொகை கோரி மட்டும் 22 லட்சத்திற்கும் கூடுதலான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமாகப் பெறப்பட்ட மனுக்களில் 80% மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த ஒருவருக்குக் கூட இதுவரை உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்தத் திட்டம் பெரும் தோல்வி அடைந்துள்ளது.
மக்களுக்கு சேவை வழங்குவதை வெற்றிகரமாக செய்ய முடியாத திமுக அரசு, ஊழலை மட்டும் வெற்றிகரமாக செய்து வருகிறது. பட்டா மாற்றம் கோரியும், மின்சார இணைப்பு கோரியும் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய்த்துறை மற்றும் மின் துறை அதிகாரிகள் கட்டாயக் கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பட்டா மாற்றம் செய்வதற்காக நிலங்களின் மதிப்புக்கு ஏற்ற வகையில் கையூட்டு நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதாக உழவர் அமைப்புகளில் தலைவர்களே குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், கையூட்டு கொடுத்தால் சர்ச்சைக்குரிய இடங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் இயல்பாக அரசு அலுவகங்களில் வழங்கப்படும் சேவைகள் ஆகும். இந்த சேவைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், அனைத்து சேவைகளையும் இணைய வழியில் வழங்கும் வகையிலும் சேவை உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செய்திருந்தால் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்த வேண்டிய தேவையும் இல்லை; மக்கள் கையூட்டு வழங்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், அதை செய்யத் தவறிய திமுக அரசு, இப்போது முகாம்களை நடத்தி ஊழலை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் விளம்பரங்களின் மூலமாகவே மக்களை ஏமாற்ற திமுக அரசு முயன்று வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விழித்துக் கொண்டதுடன், திமுகவின் ஏமாற்று நாடகங்களையும் புரிந்து கொண்டனர். அதனால், வரும் தேர்தலில் அவர்கள் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தாம் கையெழுத்திட்ட அனைத்து முதலீட்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்துவிட்டதாக முதல்வர் கூறுகிறார்.
- 10% கூட நடைமுறைக்கு வராத நிலையில் பச்சைப்பொய்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு திரட்டுவதற்கான 922 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும், தாம் கையெழுத்திட்ட அனைத்து முதலீட்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
திமுக அரசு கையெழுத்திட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் 10% கூட நடைமுறைக்கு வராத நிலையில், அனைத்து முதலீடுகளும் நடைமுறைக்கு வந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதை விட பச்சைப் பொய் எதுவும் இருக்க முடியாது.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வரப்போவதாகக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணமாக சுற்றுலா சென்றிருக்கிறார். அதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "'திமுக ஆட்சிக்கு வந்த பின் ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம். இதன்மூலம் 32 இலட்சத்து 81 ஆயிரத்து 32 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
தாம் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தும் அப்பட்டமான பொய்; பொய்யைத் தவிர வேறெதுவுமில்லை.
திமுக அரசின் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டுக் கதைகள் எந்த அளவுக்கு பொய்யானவை என்பதை கடந்த சில ஆண்டுகளில் பலமுறை பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆனாலும், கோயபல்ஸ் கொள்கையை கடைபிடிக்கும் திமுக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதே பொய்யை மீண்டும், மீண்டும் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் இந்த பொய்யை நம்ப மாட்டார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலின் சிங்கப்பூர் பயணம் குறித்து கடந்த 20ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கையெழுத்திடப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 77% செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும், 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் 80% செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அதன்பின் 10 நாள்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், எவ்வாறு மீதமுள்ள 20 விழுக்காடு ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்தன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
2024-ஆம் ஆண்டு ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மொத்தம் 631 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், அவற்றின் மூலம் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும் என்றும் திமுக அரசு அறிவித்தது. ஆனால், ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களின் பெயர்கள், விவரங்கள் உள்ளிட்டவற்றைக் கூட திமுக அரசு இதுவரை வெளியிடவில்லை. இந்த விவரங்களை திமுக அரசு ரகசியமாக வைத்திருப்பதில் இருந்தே உண்மையை புரிந்து கொள்ள முடியும்.
80% முதலீடு வந்து விட்டது, 100% முதலீடு வந்து விட்டது என நாளொரு பொய்யையும், பொழுதொரு கதையையும் திமுக அரசு கூறிவரும் நிலையில், உண்மை நிலை என்ன? என்பதை விளக்க சில புள்ளி விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதிக முதலீடு செய்ய முன்வந்த 10 நிறுவனங்களின் பட்டியலை மட்டும் தமிழக அரசு வெளியிட்டது. அவற்றில் டாடா பவர் நிறுவனம் ரூ.70,800 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால், அந்த நிறுவனம் இதுவரை ரூ.3800 கோடி மட்டுமே முதலீடு செய்துள்ளது.
அதுவும் கூட முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன் 04.07.2022ஆம் நாள் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது ஆகும். முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ரூ.70,000 கோடியில் ஒரு ரூபாய் முதலீடு கூட வரவில்லை.
அதேபோல், அதானி குழுமம் உறுதியளித்த ரூ.42,768 கோடி, ஜே.எஸ்.டபிள்யூ உறுதியளித்த ரூ.12,000 கோடி, ஹுண்டாய் உறுதியளித்த ரூ.6180 கோடி ஆகியவற்றிலிருந்து ஒரு பைசா கூட வரவில்லை.
வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்த நிலையில் ரூ.4000 கோடி மதிப்பில்தான் தூத்துக்குடி மகிழுந்து ஆலையை அமைத்திருக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனம் ரூ.37,538 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையில், அதன் பசுமை அமோனியா ஆலைக்கு அண்மையில்தான் தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
மீதமுள்ள நிறுவனங்கள் குறித்து எந்த விவரங்களையும் வெளியிட மு.க.ஸ்டாலின் அரசு மறுக்கிறது. திமுக அரசின் முதலீட்டு ஒப்பந்தங்கள் இந்த நிலையில் உள்ள நிலையில், அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்து விட்டதாக மனசாட்சி இல்லாமல் திமுக அரசு பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது.
திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் திமுக அரசு இப்படித்தான் பொய்யுரைத்து வந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது 80% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறுவார்; அடுத்த நிகழ்ச்சியில் 90% என்று கூறுவார்; இப்போது 98% என்று கூறி வருகிறார். அதேபோல்தான் இப்போது தொழில் முதலீடு தொடர்பான விவகாரங்களிலும் 77%, 80%, 100% என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் கதைகளை கூறி வருகிறார்கள். இவை அனைத்தும் அப்பட்டமான பொய் என்பதை வெகுவிரைவில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என 4 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. திமுக அரசுக்கு மடியில் கனமில்லை என்றால் அந்த விவரங்களை வெளியிட்டு, தாங்கள் ஈர்த்த முதலீடுகளின் அளவை நிரூபிக்கலாம். ஆனால், அதை திமுக அரசு செய்யாது. காரணம் பொய் மட்டும்தான் திமுகவின் முதலீடு. திமுகவின் இந்த மோசடிகள் வெகுவிரைவில் அம்பலமாகும். அப்போது திமுக அரசை ஆட்சியிலிருந்து தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- திராவிட மாடல் அரசு நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
- மக்களை முட்டாள்களாக்க நினைப்பவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் அரசை நம்பி அளித்த கோரிக்கை மனுக்களுக்கு திமுக அரசு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறது என்பதற்கு இதுவே சான்று ஆகும்.
ஒன்றரை மாதங்களுக்கு முன்பே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்ட போதே, இது ஊரை ஏமாற்றும் திட்டம் என்பதையும், இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்பதையும் காரண, காரியங்களுடன் விளக்கியிருந்தேன்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டிருப்பதன் மூலம் அப்போது நான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது உறுதியாகியிருக்கிறது.
ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் எதையும் செய்யாமல் இருந்து விட்டு, இப்போது புதிய புதிய திட்டத்தை செயல்படுத்துவதாக திராவிட மாடல் அரசு நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். மக்களை முட்டாள்களாக்க நினைப்பவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அரசும், ஆணையமும் வன்னியர்களுக்கு சமூகநீதியை வழங்க எதையும் செய்யவில்லை.
- திமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதப் போவது உறுதி.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் 17% இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து பட்டியலினம் (வலது) 6%, பட்டியலினம் (இடது) 6%, பிற பட்டியலினத்தவருக்கு 5% என உள் இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. கர்நாடகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் உரிய சமூகநீதி வழங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி எடுக்கப்பட்டுள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை பாராட்டத் தக்கதாகும்.
பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் அம்மாநில அரசும், அதற்காக அமைக்கப்பட்ட ஆணையமும் காட்டிய வேகமும், அக்கறையும் பாராட்டத்தக்கவை. பட்டியலின சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.என்.நாகமோகன் தாஸ் தலைமையில் கடந்த பிப்ரவரி 21-ஆம் நாள் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம், சரியாக 165-ஆம் நாள், அதாவது ஆகஸ்ட் 4-ஆம் தேதி அதன் அறிக்கையை தாக்கல் செய்தது.
அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட 15-ஆம் நாளில் கர்நாடக அரசு அமைச்சரவையைக் கூட்டி உள் இட ஒதுக்கீடு வழங்க தீர்மானித்திருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதன் கடைசி நாளான, நாளை மறுநாள் ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் ஒது குறித்த சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. அதாவது கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து 163 நாள்களில் அது சாத்தியமாகவுள்ளது. இது ஒரு சமூகநீதிச் சாதனை என்பதில் ஐயமில்லை.
ஆனால், தமிழ்நாட்டிலும் தான் ஒன்றுக்கும் உதவாத அரசும், அதனால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இருக்கிறதே. அவற்றை நினைக்க நினைக்க கோபம் தான் கொந்தளிக்கிறது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் 31.03.20222-ஆம் நாள் தீர்ப்பளித்து இன்றுடன் 1239 நாள்கள் ஆகின்றன. அரசால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையிடப்பட்டு இன்றுடன் 952 நாள்கள் ஆகின்றன. ஆனால் அரசும், ஆணையமும் வன்னியர்களுக்கு சமூகநீதியை வழங்க எதையும் செய்யவில்லை.
சமூகநீதியை பாதுகாப்பதற்காகவே அவதாரம் எடுத்து வந்தவரைப் போல நாடகங்களை அரங்கேற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்வதெல்லாம் சமூகநீதியை குழிதோண்டி புதைப்பது தான். வன்னியர்கள், பட்டியலின மக்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் துரோகம் இழைத்து வரும் திமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதப் போவது உறுதி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிலும் ஒரு சமூகத்தினரால் மட்டுமே செய்யப்படுவதாக இருக்கக் கூடாது.
- தூய்மைப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்யக்கூடாது என்று கூறுவது அரசும், தனியார் நிறுவனங்களும் சுரண்டுவதற்கு துணைபோவதாகவே அமையும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், ''அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டால் அவர்களும், அவர்களின் தலைமுறைகளும் தொடர்ந்து துப்புரவுப் பணியையே செய்யக் கட்டாயப்படுத்துவதைப் போலாகி விடும்; எனவே அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கக்கூடாது" என்று சில தலைவர்களால் புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை சொல்லப்பட்ட காலமும், சூழலும் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.
தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிலும் ஒரு சமூகத்தினரால் மட்டுமே செய்யப்படுவதாக இருக்கக் கூடாது; எல்லா தொழிலும் எல்லா சமூகத்தினராலும் செய்யப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வரும் நிலையில், அவர்களை அந்தத் தொழிலில் இருந்து மீட்க வேண்டும்; அவர்களுக்கு கண்ணியமான வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் 12 நாள்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது முன் வைக்கப்படாத இந்த யோசனைகள், தூய்மைப் பணியாளர்களின் இந்தக் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவர்களின் மீது அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டதால் தமிழ்நாடு அரசின் மீது ஒட்டுமொத்த தமிழகமும் கோபத்தில் இருக்கும் நிலையில் எழுப்பப்படுவது தான் வினோதமாக உள்ளது. மக்களின் கோபத்திலிருந்து அரசைக் காப்பாற்றுவதற்காக இந்த யோசனைகள் முன்வைக்கப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
தூய்மைப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது பணியாளர்களின் நுரையீரலை பாதிக்கும் என்பது மட்டுமின்றி, அது கண்ணியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்காது. அதனால் அவர்கள் தொடர்ந்து தூய்மைப் பணி செய்ய அனுமதிக்கப்படக்கூடாது. ஆனால், அதற்கு முன்பாக தூய்மைப் பணியில் இருந்து மீட்கப்படும் பணியாளர்களுக்காக என்னென்ன மாற்றுப் பணிகள் வழங்கப்படவுள்ளன என்பதை அரசு வரையறுக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு தூய்மைப் பணியாளர் 5 அல்லது 7 ஆண்டுகள் பணி செய்த பின் அப்பணியில் இருந்து மீட்கப்படும்போது அவருக்கு அரசுத் துறைகளில் கல்வித் தகுதிக்கு ஏற்ற நிரந்தரப் பணி வழங்குதல், ஒவ்வொருவருக்கும் இயல்பாக கிடைக்கும் ஓய்வுக்கால பயன்களை விட கூடுதலாக 50% மானியத்துடன் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கி தொழில் முனைவோர் ஆக்குதல் போன்ற மாற்று வாழ்வாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். அதை செய்யாமல் தூய்மைப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்யக்கூடாது என்று கூறுவது அவர்களை அரசும், தனியார் நிறுவனங்களும் சுரண்டுவதற்கு துணைபோவதாகவே அமையும்.
தூய்மைப்பணியாளர்களுக்கு இத்தகைய மாற்று வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டாலும் கூட, அவர்கள் பணி செய்யும் காலத்தில் நிலையான பணியாளர்களுக்குரிய ஊதியம் மற்றும் பிற உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இது பற்றியெல்லாம் எதுவும் பேசாமல் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கக்கூடாது என்று மட்டும் வலியுறுத்துவது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?" என்று முழக்கமிட்டிருக்கிறார்.
- அவருக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாது என்று நிரூபித்திருக்கிறார்.
பாமக தலைவர் அன்புமணியின் குற்றச்சாட்டிற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த அன்புமணி அவர்கள் தன்னுடைய தந்தையான டாக்டர் அய்யா அவர்களை எதிர்த்து ரத கஜ துரக பதாதிகளுடன் தமிழகத்தில் திக் விஜயம் செய்ய புறப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து கருத்து சொல்ல நமக்கு உரிமையில்லை; நாம் சொல்லப் போவதுமில்லை.
ஆனால், இந்த திக் விஜயத்தில் நேற்று வேலூருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் போர்பிரகடனம் செய்திருக்கிறார்.
அவர் பேசுகிறபோது, என்மீது ஒரு சிறிய பாசமழையை பொழிந்துவிட்டு, அதே வேகத்தில் நான் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகளை குறித்து விவரம் தெரியாமல் என்னுடைய அமைச்சர் பணியை குறித்து கொச்சைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கிறார்.
அதாவது, "இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவரை நான் கேட்கிறேன். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?" என்று முழக்கமிட்டிருக்கிறார்.
அன்புமணி அவர்கள் கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாது என்று நிரூபித்திருக்கிறார்.
தலைவர் கலைஞர் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது தான் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுகின்ற பணியை ஆரம்பித்தார்.
அதன் தொடர்ச்சியாக, நான் இந்த துறைக்கு அமைச்சராக, கலைஞர் முதல்வராக இருந்த காலகட்டத்திலும், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இருக்கிற இந்த காலத்திலும்,
பாலாற்றில்
இறையங்காடு
பொய்கை
சேண்பாக்கம்
அரும்பருத்தி
திருப்பாற்கடல்
கவுண்டன்யாநதியில்
ஜங்காலப்பள்ளி
செதுக்கரை
பொன்னையாற்றில்
பரமசாத்து- பொன்னை
குகையநல்லூர்
பாம்பாற்றில்
மட்றப்பள்ளி
ஜோன்றாம்பள்ளி
கொசஸ்தலையாற்றில்
கரியகூடல்
அகரம் ஆற்றில்
கோவிந்தப்பாடி
மலட்டாற்றில்
நரியம்பட்டு
வெள்ளக்கல் கானாற்றில்
பெரியாங்குப்பம்
கன்னாற்றில்
சின்னவேப்பம்பட்டு
ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கிறேன்.
இந்த ஆண்டு அம்பலூர், பாப்பனபள்ளி-செங்குனிகுப்பம்
அம்முண்டி, வெப்பாலை, ஆகிய இடங்களில் தடுப்பணை பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனவே, திரு அன்புமணி அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள், இனிமேலாவது பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






