என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbumani Ramdoss"

    • தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
    • காவல்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவரது துறையில் என்ன நடக்கிறது?

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    காவல் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- 3 காவலர்கள் படுகாயம்: சட்டம் - ஒழுங்கை திமுக அரசு பாதுகாக்கும் லட்சணம் இதுதானா?

    பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, கைதியை ஏற்றிச் சென்ற காவல் வாகனத்தின் மீது ஒரு மர்மக் கும்பல் நாட்டு வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் இவ்வளவுக் கொடிய தாக்குதலை நடத்தும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை விசாரணைக்காக அழைத்து செல்லும் போது அவரது எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் ரவுடிகள் வந்து தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், அதைத் தடுக்க முடியாத அளவுக்கு உளவுத்துறையும், நெடுஞ்சாலை சுற்றுக்காவலும் செயலிழந்து விட்டனவா?

    திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே கொலை, கொள்ளை, குண்டுவீச்சு, காவல்துறை மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்து விட்டன. குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து கிடக்கிறது. காவல்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவரது துறையில் என்ன நடக்கிறது? என்பதே அவருக்கு தெரியாத அளவுக்கு திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து கிடக்கிறது.

    தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறிய சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையால் இன்னும் கைது செய்ய முடியவில்லை. செயல்படாத திமுக அரசு இனியும் நீடிக்கக் கூடாது. அதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கறிக்கோழி விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்களின் தூண்டுதலில் இந்த கைது நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.

    உரிமைகளுக்காக போராடிய கறிக்கோழி விவசாயிகளை சிறையில் அடைப்பதா? உழவர்களின் முதல் எதிரியே திமுக தான் என்று பாமக தலைவர் அன்புமணி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை கிலோவுக்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அறவழியில் போராடிய கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட 10 நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. உரிமைக்காக போராடிய விவசாயிகளை திமுக அரசு சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    கறிக்கோழி வளர்ப்பை பெரு நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தாலும், அவர்களுக்காக கறிக்கோழிகளை வளர்த்து தருபவர்கள் உழவர்கள் தான். இதற்காக அவர்களுக்கு கிலோவுக்கு ரூ.6.50 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த ஊதியம் உயர்த்தப்படாத நிலையில், கறிக்கோழி வளர்ப்புக் கூலியை கிலோவுக்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி கறிக்கோழி விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக நாளை மறுநாள் 21-ஆம் தேதி முத்தரப்பு பேச்சுகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு முன்பாகவே கறிக்கோழி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கவே, கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்களின் தூண்டுதலில் இந்த கைது நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.

    உழவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, பெரு நிறுவனங்களின் கையாளாக மாறி அவர்களை ஒடுக்கி வருகிறது. மேல்மா பகுதியில் சிப்காட் வளாகத்திற்காக நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து போராட்டம் நடத்திய உழவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த திமுக அரசிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இத்தகைய நடவடிக்கைகளால் உழவர்களின் முதல் எதிரியாக திமுக அரசு உருவெடுத்திருக்கிறது.

    கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்டோரை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ.20 கூலி வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2026ஆம் ஆண்டு போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு அட்டவணைக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர்.
    • தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

    4 லட்சம் ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டுவிடக்கூடாது 2026 தேர்வு அட்டவணையை தேர்வு வாரியம் உடனே வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக 2026-ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள போட்டித்தேர்வுகளின் அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வரை வெளியிடவில்லை. ஆசிரியர் பணிக்கு செல்லத் துடிக்கும், ஆசிரியர் பணியில் சேர்ந்து அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் லட்சக்கணக்கானவர்களின் எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளின் அட்டவணை அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அப்போது தான் அந்தத் தேர்வுககளை எழுத விரும்புபவர்கள் திட்டம் வகுத்து தயாராக வசதியாக இருக்கும். அதிலும் குறிப்பாக 2026-ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காலத்தில் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாது என்பதாலும் தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட வேண்டியது அவசியமாகும்.

    இவ்வளவு அதிக தேவைகள் இருந்தும் கூட, 2026-ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடாதது அதன் அலட்சியத்தையும், பொறுப்பின்மையையும் தான் காட்டுகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் இந்த அலட்சியம் பல்வேறு தரப்பினருக்கு மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய 1205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையும், நவம்பர் மாதம் வெளியிடப் பட்டிருக்க வேண்டிய 51 வட்டாரக் கல்வி அலுவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையும் வெளியிடப்படவில்லை. இதனால் அந்தப் பணிகளுக்காக காத்திருந்த ஆசிரியர் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்புபவர்களை விட, 2011-ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்து தகுதித் தேர்வை நிறைவு செய்யாதவர்கள் தான் 2026ஆம் ஆண்டு போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு அட்டவணைக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர்.

    கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    அதனால், 2011-ஆம் ஆண்டுக்கு முன் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியில் சேர்ந்த 4 லட்சம் ஆசிரியர்கள் பணியில் நீடிக்கும் தகுதியை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த சிக்கலுக்குத் தீர்வு காண உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் வலியுறுத்தியிருந்தேன்.

    ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மாறி, மாறி முடிவெடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 4 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி பேச்சு நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படாது என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார். அதன்படியே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அதன்பின்னர் நிலையை மாற்றிக் கொண்ட தமிழக அரசு, 2026-ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி அறிவித்தது. அதைத் தொடர்ந்து 2026 ஜனவரி 24, 25 ஆகிய சிறப்புத் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை கடந்த நவம்பர் 19-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆனால், அறிவிக்கை வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே திரும்பப் பெறப்பட்டது. இது ஆசிரியர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    அடுத்த 6 நாள்களில் நிலைப்பாட்டை மீண்டும் மாற்றிக் கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2011-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்பதை ரத்து செய்யும் வகையில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் 23-ஆம் பிரிவில் திருத்தம் செய்யும்படி கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆசிரியர்களின் நலன்களை பாதுகாக்கும் விஷயத்தில் 3 முறை நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட திமுக அரசு, அவற்றில் எந்த நிலைப்பாட்டையும் சாத்தியமாக்க துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் வருத்தமும், வேதனையும் அளிக்கும் உண்மையாகும்.

    ஆசிரியர்கள் நலனில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டும், சிறுநீரகத் திருட்டு வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தும் உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைகளை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அந்த வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வந்த திமுக அரசு, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இன்றுடன் 110 நாள்களாகியும் அதை விசாரணைக்கு கொண்டு வருவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    அதேபோல், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன்பின் 53 நாள்களாகியும் எந்த தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எளிமையான பாடத்திட்டம், குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் சிறப்புத் தகுதித் தேர்வை நடத்தியிருந்தால் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தங்களின் பணிகளை உறுதி செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், எந்த நிலைப்பாட்டிலும் உறுதியாக இருக்காமல் ஆசிரியர்களின் எதிர்காலத்தை இருளிலேயே திமுக அரசு வைத்திருக்கிறது.

    திமுக அரசின் அதிகாரம் இன்னும் ஒரு மாதத்தில் முடிவுக்கு வரப்போகிறது. ஆசிரியர்கள் தகுதித் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது, திமுக அரசுக்கு 6 மாதப் பதவிக்காலம் மீதமிருந்தது. அந்தக் காலத்தில் தங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க திமுக அரசு எதேனும் நடவடிக்கை எடுக்கும் என்று ஆசிரியர்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கையை திமுக அரசு இதுவரை காப்பாற்ற வில்லை. நம்பிய ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டு விடாமல், எளிய பாடத்திட்டம், குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் கூட சிறப்புத் தகுதித் தேர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது.
    • ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்

    பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 7 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்,  நேற்று ஆசிரியர் கண்ணன் என்பவர் (ஜனவரி 13) விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் கண்ணனின் உயிரிழப்புக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில, 

    "பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடத்தி வந்த போராட்டத்தின் போது நஞ்சு குடித்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் மருத்துவம் பயனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பகுதிநேர ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பணி நிலைப்புக் கோரிக்கையை வலியுறுத்தி 13 ஆண்டுகளாக போராடி வரும் அவர்கள், கடந்த 8ஆம் தேதி முதல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு மறுப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு எதிராக அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது.

    சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் வானகரத்தில் உள்ள திருமண அரங்கத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அடக்குமுறைகளைக் கண்டித்தும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மருத்துவம் பயனளிக்காமல் இன்று மாலை காலமானார்.

    திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. கடந்த ஐந்தாண்டுகளாக அவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட , அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு பதிலாக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆசிரியர் கண்ணன் உயிரிழப்புக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    இனியாவது திமுக அரசு மனசாட்சிக்கு அஞ்சி பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு உரிமை இல்லை
    • அன்புமணி தனது தலைவர் பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்ள மோசடி செய்துள்ளார்.

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், கட்சி மற்றும் அதன் தேர்தல் கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார.

    அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதும், கூட்டணி அமைத்ததும் சட்டவிரோதமானது மற்றும் அங்கீகரிக்கப்படாதது என தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவெடுக்கவும் தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், அன்புமணிக்கு அந்த உரிமை இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    அன்புமணி தனது தலைவர் பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்ள மோசடி செய்துள்ளதாகவும், தற்போது பாமகவின் தலைவர் பதவியை தானே (ராமதாஸ்) ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பாமகவின் பெயர், கொடி அல்லது 'மாம்பழம்' சின்னத்தைப் பயன்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    • அன்புமணி பா.ம.க.வில் இல்லை. அவரை ஏற்கனவே பா.ம.க.வில் இருந்து நீக்கிவிட்டேன்.
    • 29-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு செல்லாது என அறிவிக்க அன்புமணிக்கு உரிமை இல்லை.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பெரியாரின் 52-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது தரப்பு நடத்தும் பொதுக்குழு செல்லாது என அன்புமணி தரப்பினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். அவர்கள் பொய்யர்கள், புரட்டர்கள். எது வேணாலும் சொல்வார்கள். அதை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. 99 சதவீதம் மக்கள் என் பக்கம் தான் உள்ளார்கள். அன்புமணி பா.ம.க.வில் இல்லை. அவரை ஏற்கனவே பா.ம.க.வில் இருந்து நீக்கிவிட்டேன். அவர் எது வேணாலும் பொய்களை சொல்லுவார். 29-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு செல்லாது என அறிவிக்க அன்புமணிக்கு உரிமை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது.
    • மது அருந்திய மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாளையங்கோட்டை பள்ளியில், விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. கல்வி கற்று முன்னேற வேண்டிய வயதில் மதுப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது.

    மது அருந்திய மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவிகள் மீதான இந்த நடவடிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இது மாணவிகளின் கல்வியையும், எதிர்காலத்தையும் பாதித்துவிடும்.

    இத்தகைய நடவடிக்கைகளுக்கு பதிலாக மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி, அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், கல்வித்துறையும் மேற்கொள்ள வேண்டும்.

    மது அருந்தியதற்காக மாணவிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை மீறி மாணவிகளுக்கு மது விற்பனை செய்தவர்கள் மீதோ அல்லது அவர்களுக்கு மதுவை வாங்கிக் கொடுத்தவர்கள் மீதோ என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து இத்தகைய நிகழ்வுகளுக்கு மூலகாரணமாக திகழும் ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?

    ஒரு மாணவர் அவரது வீட்டில் இருந்து இரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் இடையில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மதுக்கடைகளை கடந்து தான் செல்ல வேண்டிய நிலையை தமிழகத்தில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

    மது உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள்களுமே மக்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கைக்கெட்டும் தொலைவில் மது கிடைக்கும் போது, பதின் வயதினருக்கே உரிய சாகச மனநிலை மதுவை சுவைத்துப் பார்க்கத் தூண்டும்.

    இதுதான் மாணவச் செல்வங்கள் பதின் வயதில் மதுவுக்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினரை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்கான பரிகாரத்தை தி.மு.க. அரசு செய்தாக வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடுவது தான் அந்த பரிகாரம் ஆகும். அதை உடனடியாகச் செய்து இளம் தலைமுறையினரை அரசு காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தீபாவளி முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பாதவது:-

    இருள் இன்றுடன் விலகட்டும்,

    மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும்!

    இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நான் ஐ.சி.யூ.வில் இல்லை. சாதாரண சிகிச்சை பிரிவில் தான் இருந்தேன்.
    • பா.ம.க.வை தோற்றுவித்தது, அதற்கு சொந்தக்காரன் நான் தான்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதய பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.

    தைலாபுரம் வீட்டில் சில நாட்கள் ஓய்வில் இருந்த டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மருத்துவ பரிசோதனைக்காக நானே சென்று மருத்துவமனையில் சேர்ந்தேன். 12 வருடத்திற்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து இருந்தேன். அதனை சரி பார்க்க சென்றேன். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து விட்டு வீடு திரும்பிவிட்டேன்.

    நான் மருத்துவமனையில் இருந்தபோது கட்சி, சாதி, மத பேதமின்றி அனைவரும் என்னை நேரில் வந்து சந்தித்து நலம் விசாரித்தார்கள். வர முடியாத ஒரு சிலர் மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள். இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது. உடல் நலனில் எந்த பிரச்சனையும் இல்லை என டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்

    நான் ஐ.சி.யூ.வில் இல்லை. சாதாரண சிகிச்சை பிரிவில் தான் இருந்தேன். ஒரு மணி நேரம் ஐ.யூ.சி.வில் இருப்பார். அதன்பிறகு அறைக்கு வந்து விடுவார். நான் மருத்துவரிடம் பேசி விட்டேன். இன்னும் 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்ததாக ஒரு கும்பல் கூறியுள்ளது. அவர் பேசிய பேச்சுகள், தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் உலுக்கி இருக்கும்.

    டாக்டர் ராமதாசிற்கு ஏதாவது ஆச்சினா நான் சும்மா இருக்க மாட்டேன். தொலைத்து விடுவேன் என பேசி இருக்கிறார்கள். யார் யாரோ வந்து பார்த்து விட்டு போய் கொண்டிருக்கிறார்கள். இது என்ன கண்காட்சியா? எனவும் பேசி இருக்கிறார்கள்.

    படிக்காத மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படிபட்ட சொற்களை கொட்டி இருக்க மாட்டான். அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என ஏற்கனவே நிர்வாக குழு கூட்டத்தில் கூறினேன். இது அன்புமணியின் பேச்சு மூலம் உறுதியாக தெரிய வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விரைவில் குணமடைய வேண்டுமென கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. தொற்று அறிகுறி அளவிற்கு எனக்கு வியாதி இல்லை.

    பா.ம.க.வை தோற்றுவித்தது, அதற்கு சொந்தக்காரன் நான் தான். வியர்வையை சிந்தி இயக்கத்தை வளர்த்தேன். அந்த கட்சியை என்னுடைய கட்சி என அன்புமணி கூற கூடாது. தேர்தல் ஆணையத்தில் சந்திப்போம். கட்சி ஆரம்பிக்கும்போது இப்படி எல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது.

    பா.ம.க. கட்சிக்கும், கொடிக்கும் அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அன்புமணி தனிகட்சி ஆரம்பித்து கொள்ள வேண்டும். அது அன்புமணிக்கும், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.

    புதிய கட்சி தொடங்கினால் பொறுப்புகள் தான் கிடைக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி கிடைக்காது. மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அது ஒரு போலியான அமைப்பாக தான் இருக்கும்.

    பா.ம.க. கட்சி கொடி, பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது. என்னுடைய பெயரின் தலைப்பெழுத்தினை மட்டுமே அன்புமணி பயன்படுத்தி கொள்ள வேண்டும். தனி மனித உழைப்பினால் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று காடுமேடு அலைந்து திரிந்து உருவாக்கப்பட்டது பா.ம.க.

    பா.ம.க. சட்டபேரவை தலைவர் கொறடாவை மாற்ற முடியாது. சபாநாயகர் மட்டுமே இதனை செய்ய முடியும். தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள், பிற கட்சியில் உள்ளவர்கள் தந்தையும், தாயையும் காப்பாற்றாத மகனாக அன்பு மணி உள்ளதாக தெரிவிக்கும் கருத்தாக உள்ளது.

    கரூர் சம்பவத்திற்கு உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. அந்த சி.பி.ஐ. விசாரணை காலம் தாழ்த்துமா? என்பது சோழி போட்டு தான் பார்க்க வேண்டும். டிசம்பரில் பொதுக்குழு கூடும் அதில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். இந்த முறை கூட்டணி முடிவு சரியாக இருக்கும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
    • தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.

    நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதியை பா.ம.க. தலைவர் அன்புமணி ஆய்வு செய்தார்.

    சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மக்களுடனான கலந்துரையாடலுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நதிக்கரையில் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

    அப்போது அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * தாமிரபரணி ஆற்றில் நாள்தோறும் 200 டன் திடக்கழிவுகள் கலக்கின்றன.

    * நீதிபதிகள் நேரில் வந்து ஆய்வு செய்த போதிலும் இன்னும் அதே நிலை தொடர்கிறது.

    * தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.

    * தாமிரபரணியை கூவம் ஆக்கி விடாதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த 45 மாதங்களாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
    • ககன்தீப்சிங் குழு 194 அரசு ஊழியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்தியுள்ளது.

    அரசு ஊழியர்களை ஏமாற்றும் கருவியாக ககன்தீப் சிங் குழு பயன்படக்கூடாது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக அரசு எத்தகைய ஏமாற்று வேலையை செய்துவிடக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தேனோ, அந்த ஏமாற்று வேலையை ககன்தீப் சிங் குழுவை பயன்படுத்தி சாமர்த்தியமாக செய்திருக்கிறது திமுக அரசு.

    பேடி குழுவை அதன் இறுதி அறிக்கைக்கு பதிலாக இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வைத்திருப்பதன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளது.

    ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து தான் திமுக ஆட்சியைப் பிடித்தது என்றாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த 45 மாதங்களாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    இந்த விவகாரத்தில் திமுகவின் துரோகத்தை பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியதாலும், அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்ததாலும் நிலைமை சமாளிப்பதற்காக பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைப்பதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் குழுவை கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி அரசு அமைத்தது.

    இது தொடர்பாக கடந்த ஆட்சியில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டு விட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு குழுவை அமைப்பது ஏமாற்று வேலை; குழுவின் அறிக்கையை பெறுவதை தாமதப்படுத்தி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் ஏமாற்றும் என்று எச்சரித்திருந்தேன். எனது எச்சரிக்கை இப்போது உண்மையாகிருக்கிறது.

    தமிழ்நாட்டில் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது குறித்த முழுமையான அறிக்கையை நேற்று தாக்கல் செய்திருக்க வேண்டிய ககன்தீப்சிங் பேடி குழு இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருக்கிறது. அதன் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    இதுவரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் கூடுதல் கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும் கூடுதல் காலக்கெடு தேவைப்படுவதாகவும் ககன்தீப்சிங் குழு கூறியுள்ளது. இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை. இது நிச்சயமாக ஏமாற்று வேலை தான். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    ககன்தீப்சிங் குழு 194 அரசு ஊழியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்தியுள்ளது; அவற்றின் மூலம் ஏராளமான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.

    ஆனால், குழு அமைக்கப்பட்ட பிப்ரவரி 4-ம் தேதியில் தொடங்கி இன்று வரையிலான 8 மாதங்களில் இவை செய்து முடிக்க முடியாத பணிகள் அல்ல. ஆனால், இந்தப் பணிகளை குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கக் கூடாது என்று அரசும், ககன்தீப்சிங் குழுவும் செய்த கூட்டுச் சதியின் காரணமாகவே இப்போது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை.

    ககன்தீப்சிங் குழு கடந்த பிப்ரவரி 4-ம் தேதியே அமைக்கப்பட்டு விட்ட போதிலும், அடுத்த 6 மாதங்களுக்கு அந்தக் குழு துரும்பைக் கூட அசைக்கவில்லை. அதை சுட்டிக்காட்டி கடந்த ஜூன் 22, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

    மேலும், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் நான் மேற்கொண்டு வரும் நடைபயணத்தின் போதும் ஒவ்வொரு நாளும் இந்த சிக்கல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அதனால் ஏற்பட்ட அழுத்தங்களின் காரணமாகத் தான் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் ககன்தீப்சிங் குழு அரசு ஊழியர்களிடம் கருத்துக் கேட்கத் தொடங்கியது. இப்பணியை பிப்ரவரி மாதமே தொடங்கியிருந்தால் 3 மாதங்களுக்கு முன்பாகவே முழு அறிக்கையை தாக்கல் செய்திருக்கலாம்.

    அவ்வாறு தாக்கல் செய்திருந்தால் அதன் மீது முடிவெடுத்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் அரசுக்கு ஏற்பட்டிருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத் தான் ககன்தீப்சிங் குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்யாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசின் கருவியாக ககன்தீப்சிங் குழு பயன்படுத்தப்பட்டிருக்கிறது; இது திட்டமிட்ட சதி என்று மீண்டும் ஒருமுறை குற்றஞ்சாட்டுகிறேன். இது அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இழைக்கப்படும் பெருந்துரோகமாகும்.

    பாட்டாளி மக்கள் கட்சியைப் பொருத்தவரை ககன்தீப்சிங் பேடி குழு அமைக்கப்பட்டதே தேவையற்ற வேலை தான். தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 27-.11.2018-ம் நாள் அதன் அறிக்கையை அன்றைய அரசிடம் தாக்கல் செய்து விட்டது.

    அதன் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். ஆனால், அதை செய்யாமல் புதிய குழுவை திமுக அரசு அமைத்ததன் நோக்கமே அரசு ஊழியர்களை ஏமாற்றுவது தான். அது இப்போது உறுதியாகியிருக்கிறது.

    ககன்தீப்சிங் குழுவின் இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது தெரியாத நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துமா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழக அரசு நினைத்திருந்தால், எப்போதோ பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும்.

    அதற்கு நிதிநிலை ஒரு தடையல்ல. இந்தியாவில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த எந்தத் தடையும் கிடையாது.

    எனவே, ககன்தீப்சிங் பேடி குழு இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்று காரணங்களைத் தேடிக் கொண்டிருக்காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
    • வன்னியர் சங்க அலுவலகத்துக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்.

    திண்டிவனத்தில் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. பா.ம.க. செயல் தலைவர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் டாக்டர் அன்புமணியை நீக்கி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார்.

    ஆனால், அன்புமணியை நீக்க ராமதாசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அன்புமணி தரப்பை சேர்ந்த வக்கீல் பாலு கூறியுள்ளார். இதனால் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

    விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வன்னியர் சங்க அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் டாக்டர் அன்புமணி கலந்து கொள்வதாகவும் இருந்தது.

    இதைத்தொடர்ந்து வன்னியர் சங்க அலுவலகத்துக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் அன்புமணி ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். அவர்கள், வன்னியர் சங்க அலுவலகத்தை திறக்க கூறினர்.

    இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் திண்டிவனம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க வன்னியர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×