என் மலர்
நீங்கள் தேடியது "திமுக அரசு"
- சென்னை பெருநகர மாநகராட்சி பிப்ரவரியில் மட்டுமே 248 டெண்டர்களை வெளியிட்டது எப்படி சாத்தியமானது?
- தேர்தலுக்கு முன் கமிஷன் கல்லா கட்ட திமுக அரசு தந்திரமா என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்!
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வரும் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில், முன்கூட்டியே மாநில நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கி, திமுக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது ஒருபுறமிருக்க, சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் நாளொன்றுக்கு சராசரியாக 40 டெண்டர்களை வெளியிட்டு, ரூ.4,000 கோடி மதிப்பிலான பணிகளை விரைந்து முடிக்க அவசரகதியில் செயல்பட்டுக் கொண்டிருப்பது பல சந்தேகங்களைக் கிளப்புகிறது.
வழக்கமாக அரசு டெண்டர்களை வெளியிட பல மாதங்களாகும் நிலையில், என்றும் இல்லாத சாதனையாக நெடுஞ்சாலை துறைக்கான டெண்டருக்கு மூன்றே நாட்களில் அரசாணை வெளியிடுவதும், பிப்ரவரி மாதத்தில் மட்டுமே சென்னை பெருநகர மாநகராட்சி 248 டெண்டர்களை வெளியிட்டிருப்பதும் எப்படி சாத்தியமாகியது? இவையெல்லாம் தேர்தலுக்கு முன் கமிஷன் கல்லா கட்ட திமுக அரசின் தந்திரமா என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்!
நான்கரை ஆண்டுகளாக தமிழக மக்களின் வரிப்பணத்தை சுரண்டித் தின்று கொழுத்தது போதாமல், எஞ்சிய ஓரிரு மாதங்களிலும் மொத்தமாக கமிஷன் அடித்து, வாரி சுருட்டிக்கொள்ள தி.மு.க. அரசு திட்டமிடுவது என்றும் நிறைவேறாது! உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, கமிஷன் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டி, விரைவில் ஊழல் மாளிகையான திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் பூட்டு போடுவர்! என்று கூறியுள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளிலும் இதே நிலை தான் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
- அவலத்தின் அடையாளமாகத் திகழும் இந்த ஆட்சியை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுக்கோட்டை ஆதி திராவிடர் நலத்துறை சமூக நீதி விடுதிக்கு மாணவிகளின் உணவுக்காக வழங்கப்படும் நிதி கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு வழங்கப்படவில்லை என்றும், விடுதியில் அரிசி, எரிவாயு சிலிண்டர் ஆகியவை மட்டுமே இருப்பதால் அதைக் கொண்டு, கடந்த 2 மாதங்களாக வெறும் சோறு மட்டும் வடித்து தங்கள் சொந்த செலவில் ஊறுகாய் அல்லது சிப்ஸ் வாங்கி மாணவர்களுக்கு வழங்குவதாகவும் விடுதி பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புரதச்சத்து, காய்கறிகள் என சத்தான உணவு வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி மாதத்தில் 4 நாள்கள் அசைவ உணவு வழங்கப்பட வேண்டும்.
ஆனால், தி.மு.க. ஆட்சியில் இவை அனைத்தும் ஏட்டளவில் தான் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளிலும் இதே நிலை தான் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமின்றி, அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் சீரழிந்து கொண்டு தான் இருக்கின்றன. அவலத்தின் அடையாளமாகத் திகழும் இந்த ஆட்சியை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள் என்று கூறியுள்ளார்.
- தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
- காவல்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவரது துறையில் என்ன நடக்கிறது?
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காவல் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- 3 காவலர்கள் படுகாயம்: சட்டம் - ஒழுங்கை திமுக அரசு பாதுகாக்கும் லட்சணம் இதுதானா?
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, கைதியை ஏற்றிச் சென்ற காவல் வாகனத்தின் மீது ஒரு மர்மக் கும்பல் நாட்டு வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் இவ்வளவுக் கொடிய தாக்குதலை நடத்தும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை விசாரணைக்காக அழைத்து செல்லும் போது அவரது எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் ரவுடிகள் வந்து தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், அதைத் தடுக்க முடியாத அளவுக்கு உளவுத்துறையும், நெடுஞ்சாலை சுற்றுக்காவலும் செயலிழந்து விட்டனவா?
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே கொலை, கொள்ளை, குண்டுவீச்சு, காவல்துறை மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்து விட்டன. குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து கிடக்கிறது. காவல்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவரது துறையில் என்ன நடக்கிறது? என்பதே அவருக்கு தெரியாத அளவுக்கு திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து கிடக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறிய சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையால் இன்னும் கைது செய்ய முடியவில்லை. செயல்படாத திமுக அரசு இனியும் நீடிக்கக் கூடாது. அதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தற்போது இருக்கும் ஊதியத்தையும் பிடித்தம் செய்து, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அராஜகமானது.
- ஆசிரியர்களின் குடும்பங்களின் நலன் கருதியும், கொடுத்த வாக்குறுதிப்படி சம ஊதியம் வழங்க மனமில்லையா?
14வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசை கண்டித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
சம ஊதியம் வழங்க மனமில்லாமல் தெருவிலிறங்கிப் போராடவிட்டு, இருக்கும் ஊதியத்தையும் பறிக்கும் திமுக அரசு!
"சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்" என்று தேர்தல் வாக்குறுதி எண் 311-ல் முழங்கிவிட்டு, நான்கரை ஆண்டுகளாக வழங்காமல் ஏமாற்றி, இடைநிலை ஆசிரியர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளி, குண்டுக்கட்டாகக் கைது செய்வதோடு, தற்போது போராடும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாது எனத் திமுக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கொடுத்த வாக்குறுதி எண் 181-ஐ வீசி எறிந்ததோடு, தற்போது இருக்கும் ஊதியத்தையும் பிடித்தம் செய்து, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அராஜகமானது.
பல கோடி செலவழித்து "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று நாடக விழா நடத்தத் தெரிந்த திமுக அரசுக்கு, சம ஊதியம் வழங்கப் பணமில்லையா? பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என்று முழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், இடைநிலை ஆசிரியர்களின் குடும்பங்களின் நலன் கருதியும், கொடுத்த வாக்குறுதிப்படி சம ஊதியம் வழங்க மனமில்லையா?
போராடும் ஆசிரியர்களை முடக்கும் சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, சம ஊதியம் வழங்கி, மாணவர்கள் நலன் காக்க முனைய வேண்டும் எனத் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
- தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துடிப்பான நிர்வாகிகளுடன் உரையாற்ற உள்ளார்.
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு விழாவில் பங்கேற்க, புதுக்கோட்டைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வருகிறார். இதனை தொடர்ந்து, கூட்டணி, தேர்தல் வியூகம் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், புதுக்கோட்டை வருகை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, பல லட்சக்கணக்கான மக்களை இப்பேரணி இணைக்கிறது.
இன்று அதன் நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துடிப்பான நிர்வாகிகளுடன் உரையாற்ற உள்ளதாக கூறியுள்ளார்.
- இயேசுபிரான் காட்டிய அன்பு வழியில் வாழும் சகோதரர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
- சிறுபான்மை மக்களின் உண்மைத்தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் திமுக அரசு செயல்படுகிறது.
உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
இயேசுபிரான் காட்டிய அன்பு வழியில் வாழும் சகோதரர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். சிறுபான்மை மக்களின் உண்மைத்தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் திமுக அரசு செயல்படுகிறது.
சிறுபான்மை மக்களின் தேவைகளை தீர்த்துவைக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
கிறிஸ்தவ சகோதரர்களின் உரிமை, வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றி தரும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது.
எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படி தான் என்றுமே இந்த ஆட்சி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தருமபுரி மாவட்டத்தை தி.மு.க. புறக்கணித்துள்ளது.
- தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இப்போது 13 சதவீத வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தருமபுரி:
தருமபுரியில் பா.ம.க. மூத்த நிர்வாகி இல்ல திருமணத்திற்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வருவது போல் இல்லை. தி.மு.க. ஒரு துரும்பை கூட செய்யவில்லை. சிப்காட் தொழிற்சாலை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகள் வரவில்லை.
தருமபுரி மாவட்டத்தை தி.மு.க. புறக்கணித்துள்ளது. அதற்கு வருகிற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். வருகிற டிசம்பர் 17-ம் தேதி எனது தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
அதற்கு தி.மு.க.வை தவிர, அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பீகாரில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே காரணம். தமிழ்நாட்டில் சமூக நீதியை மு.க.ஸ்டாலின் குழித் தோண்டி புதைந்துள்ளார்.
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, ஒப்பந்தத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் சமூக நீதி.
தமிழ்நாட்டில் நகாராட்சி துறையில் ரூ.888 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றப்பத்திரிகையை, காவல் துறைக்கு கொடுத்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியாளர் பணிக்கு ரூ.25 லட்சம் வரை ஹவாலா பணம் வந்ததாக 232 பக்கம் அறிக்கை கொடுத்தும் இந்த அரசு விசாரணை நடத்தவில்லை. ஆனால் இந்த செய்தி வெளியானதற்கு விசாரணை நடத்துகிறார்கள். மணல் கொள்ளை நடந்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
கூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இப்போது 13 சதவீத வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
தொழிலாளர்கள் முதலீடு முழுமையாக வந்ததாக முதலமைச்சரும், அமைச்சரும் பொய்யாக கூறுகிறார்கள். 9 விழுக்காடு தான் முதலீடு வந்துள்ளது. 80 முதலீடு வந்ததாக சொன்னவர்கள். தற்போது 23 சதவீதம் வந்துள்ளது என சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு வராமல், ஆந்திரா, தெலுங்கானாவுக்கு, தொழில் நிறுவனங்கள் செல்கிறது. இதற்கு தி.மு.க.வின், கலெக்சன், கமிசன் கராப்சன் அதிகம் என்பதால், இங்கு வருவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழ்நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
- லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவுகளை திமுக அரசு தட்டிப் பறித்திருக்கிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறையில் 2538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க ஒரு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டு பெறப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியானது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த காவல்துறை ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய ஊழல் அம்பலப்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தத் துடிக்கும் திமுக அரசு, அந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த முன்வராதது கண்டிக்கத்தக்கது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமிப்பதற்கான அரசாணை 14.11.2023-ஆம் நாளும், ஆள்தேர்வு அறிவிக்கை 02.02.2024-ஆம் நாளும் வெளியிடப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆள்தேர்வில் ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதையும், அப்பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதையும் சோதனைகளின் மூலம் கண்டறிந்த அமலாக்கத்துறை, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி 232 பக்க ஆவணங்களுடன் அக்டோபர் 27-ஆம் நாள் தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்த ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அக்டோபர் 29-ஆம் நாள் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது; சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்விலும், மதுரைக் கிளையிலும் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிடக் கோரி வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. அந்த வழக்குகளில் ஒன்றின் விசாரணையின்போது, அமலாக்கத்துறையின் அறிக்கை எவ்வாறு வெளியானது? என்று நீதிபதிகள் வினா எழுப்பியிருந்தனர்.
அதையே காரணம் காட்டி, ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் குறித்த அமலாக்கத்துறை அறிக்கை எவ்வாறு வெளியானது? என்பது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இந்த ஊழல் குறித்த அமலாக்கத்துறையின் அறிக்கை வெளியானது அதிசயம் அல்ல. ஊடகத் தொடர்புகள் கடந்த காலங்களில் இல்லாத அளவில் அதிகரித்திருப்பதுடன், சமூக ஊடகங்கள் பெருகியுள்ள நிலையில், இத்தகைய அறிக்கைகள் வெளிவருவது இயல்பானது தான். கடந்த காலங்களிலும் இதே போன்ற பல அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு இருக்கும் போது இந்த அறிக்கை வெளியானது குறித்து விசாரணை நடத்த ஆணையிட்டிருக்கும் தமிழக அரசு, தமிழகத்தையே உலுக்கிய வேலைவாய்ப்பு ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?
தமிழ்நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் பட்டப்படிப்பை முடித்து விட்டு, அரசு வேலைக்கு சென்று விட முடியாதா? என போட்டித் தேர்வு பயிற்சி மையங்களிலும், நூலகங்களிலும் தவம் கிடக்கின்றனர். அவர்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசுத்துறை வேலைகளை திமுக அரசு விலை வைத்து விற்பனை செய்திருக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவுகளை திமுக அரசு தட்டிப் பறித்திருக்கிறது. இதற்கு மன்னிப்பே கிடையாது.
தமிழ்நாட்டில் நல்லாட்சி நடத்துவதாக நாடகமாடும் திமுகவினர், ஊழல்கள் செய்வதை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சியில் ஊழல்கள் நடக்காதத் துறையே கிடையாது என்பது தான் அனைத்துத் தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது. வேலைவாய்ப்பு வழங்குவதில் தொடங்கி, ஆற்று மணல் கொள்ளை, கனிமவளங்கள் கொள்ளை, இராம்சார் தளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்குவதில் ஊழல், மின்சாரம் கொள்முதல் செய்வதில் ஊழல், மின்மாற்றிகள் கொள்முதல் செய்வதில் ஊழல், சரக்குந்து போக்குவரத்து ஒப்பந்த ஊழல் என திமுக அரசில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டால், நீதியரசர் சர்க்காரியா ஆணையத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊழல்களின் பட்டியலை விட மிகவும் அதிகமாக நீண்டு கொண்டே செல்லும். திமுக என்றால் ஊழல் என்று தான் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
ஆனால், எந்த ஊழலும் செய்யவில்லை; உலகின் உத்தமமான நிர்வாகத்தை வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற உலகமகா பொய்யை திமுக தொடர்ந்து கூறி வருகிறது. திமுக ஆட்சியாளர்கள் எந்த ஊழலும் செய்ய வில்லை என்றால், குறிப்பாக நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிகாரிகளை நியமித்ததில் எந்த ஊழலும் நடைபெற வில்லை என்றால், அது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த திமுக அரசு அஞ்சுவது ஏன்?
இதற்கு முன் தமிழ்நாட்டில் ரூ.4730 கோடி அளவுக்கு மணல் கொள்ளை நடந்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைத்த பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்த அமலாக்கத் துறை, அது குறித்த ஆதாரங்களை தமிழக அரசுக்கு அனுப்பி, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு கடந்த ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு கடிதம் எழுதியது. ஆனால், அதன் மீது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் தான் வேலைவாய்ப்பு ஊழல் குறித்த அறிக்கை மீது ஒன்றரை மாதமாக நடவடிக்கை இல்லை.
ஆட்சி அதிகாரத்தை தீமைகளில் இருந்து மக்களைக் காக்கும் கவசமாக பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஊழல் செய்த தீயசக்திகளை காப்பாற்றுவதற்கான கவசமாக ஆட்சி அதிகாரத்தை திமுகவினர் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவினரால் தவறாக பயன்படுத்தப்படும் அந்தக் கவசம் இன்னும் 3 மாதங்களில் காணாமல் போய்விடும். அடுத்து அமையவிருக்கும் அரசில் திமுக ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். மக்களைச் சுரண்டி ஊழல் செய்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பதை வாக்குறுதியாக அளிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக கோவை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
- விடியா திமுக அரசுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கோவையில் செம்மொழிப் பூங்கா அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவையில் அவசர கதியில் வெற்று விளம்பரத்திற்காக திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா விடியா திமுக-
25.11.2025 அன்று கோவைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட திரு. ஸ்டாலின் காந்திபுரம், சிறைச்சாலை மைதான வளாகத்தில் ரூ.204 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த செம்மொழி பூங்காவை பணிகள் முழுமையாக முடிவடையாமல், அவசர கதியில் விளம்பரத்திற்காக திறந்து வைத்துள்ளார். சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக கோவை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டத்திற்கு சுற்றுச்சுழல் அனுமதி பெறப்படவில்லை.
முடிவடையாத பணிகள் :
* 30ரூ மரங்கள் நடப்படவில்லை.
* செயற்கை புல் தரைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
* முன் நுழைவு வாயில் முகப்பு
* மாநாட்டு மையம் - தரைத் தளம்
* சுற்றுச் சுவர்
* கட்டண விளையாட்டு மைதானம்
* திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம்
* போதுமான கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தப்படவில்லை.
* விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படவில்லை.
* கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகள் முழுமையடையவில்லை.
கோவை மாநகராட்சியில் பல இடங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை; ஏற்கெனவே இருக்கும் பூங்காக்கள் சரிவர
பராமரிக்கப்படுவதில்லை என்று மக்கள் அடுக்கடுக்காக புகார்கள் தெரிவித்தும்; ஏற்கெனவே அளித்த நிர்வாக
அனுமதியைக் காட்டிலும் 40 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டும், முழுமை பெறாத இந்தப் பூங்காவை அவசர
அவசரமாகத் திறந்தது ஏன்? மேலும், பல பணிகள் ஒப்பந்தப் புள்ளி கோரப்படாமல், நாமினேஷன் முறையில் விடியா
திமுக அரசுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிய வருகிறது.
எனது தலைமையிலான அம்மாவின் அரசு, சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் (ஸ்மார்ட் சிட்டி) கோவை மாநகராட்சிப் பகுதியில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட, கோவை மக்களின் பொழுதுபோக்கு இடங்களாகத் திகழ்ந்த; பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்த பூங்காக்களான உக்கடம்-
பெரியகுளம், குறிச்சி குளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி குளம், குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம் ஆகியவை தற்போது ஆகாயத் தாமரைகள் படர்ந்து, போதிய பராமரிப்பின்றி கேட்பாரற்று உள்ளது. எங்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பூங்காக்கள், குளங்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இவைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் உள்ளது.
விடியா திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை கோவை மாவட்ட
மக்களையும், தொழில் துறையினரின் கோரிக்கைகளையும் விடியா திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
அவற்றில் ஒருசில-
* அத்திக்கடவு–அவிநாசி திட்டம் I-ல் விடுபட்ட பகுதிகளை இணைத்து அம்மாவின் அரசு அறிவித்த அத்திக்கடவு–அவிநாசி திட்டம்-Iஐ பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
* கோவை மாநகராட்சியால் வெள்ளலூரில் 61.62 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 168 கோடி மதிப்பில் 'ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்' அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, 50ரூ பணிகள் முடிவடைந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விடியா திமுக அரசு இப்பணியை கிடப்பில் போட்டுள்ளது.
* அதேபோன்று, கோவை மாநகராட்சியில் சுமார் 200 உட்புற சாலைகள் உட்பட முக்கிய அடிப்படைக் கட்டமைப்புகளை சீரமைக்க ரூ. 150 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விடியா திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ஒப்பந்தப் புள்ளி ரத்து செய்யப்பட்டது.
* கோவை மாவட்டத்தில் முக்கிய சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால்
பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சாலைகளை சீரமைக்க இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
* கோவை மாவட்ட வளர்ச்சிக்கு நாங்கள் திட்டமிட்ட, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை சரியான முறையில்
முன்மொழிவு அனுப்பாத காரணத்தால் இத்திட்டம் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது.
* அம்மாவின் அரசு கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் இத்திட்டத்தையும் விடியா திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
இப்படி விடியா திமுக அரசு, அம்மாவின் அரசு கொண்டு வந்த பல திட்டங்களை கைவிட்டுவிட்டது. இந்நிலையில்,
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று, அரசு சக்கரத்தை சுழற்றும் குணம் கொண்ட மு.க. ஸ்டாலின், அரைகுறையாக இந்தப்
பூங்காவை திறந்து வைத்து கோவை மக்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்யலாம் என்று பகல் கனவு காண்கிறார்.
பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசிற்கு 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில்,
கோவை மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆயிரம் கோடிக்கு மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்றுகூட செயல்பாட்டுக்கு வரவில்லை.
- முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு மாறி செல்வதற்கு கமிஷன், ஊழல்தான் காரணம்.
சென்னை:
பா.ம.க. சார்பில் தி.மு.க. அரசின் தொழில் முதலீடுகள் பொய்யானவை என்ற ஆவண புத்தகம் தயாரிக்கப்பட்டது. அதனை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி சென்னையில் இன்று வெளியிட்டார்.
பின்னர் அதில் உள்ள புள்ளி விவரங்கள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பா.ம.க. பல்வேறு ஆவணங்களை வெளியிட்டு வருகிறது. தொழில், வேளாண்மை, கல்வி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வரைவு நிதி நிலை அறிக்கை என இதுவரை 57 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று வெளியிடப்பட்ட ஆவணம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் முதலீடுகள் எவ்வளவு வந்துள்ளது என்பதாகும்.
இதில் எந்த அளவுக்கு பொய் சொல்லி இருக்கிறார்கள் என்பது தெரிய வரும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகள் குறித்து தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.
ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வந்திருப்பதாகவும், 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் மீண்டும் மீண்டும் முதலமைச்சரும், தொழில் துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் சொல்லி வருகிறார்கள். இது பொய் என்று ஆவணங்கள் மூலம் நிரூபித்து உள்ளோம்.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முதலீடு 78 சதவீதம். 2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அதில் 80 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இது மிகப்பெரிய பொய். ஆயிரம் கோடிக்கு மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்றுகூட செயல்பாட்டுக்கு வரவில்லை.
2021-22-ம் ஆண்டில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்க ஒப்பந்தங்களாகும். 2022-23-ம் ஆண்டில் முதல் கட்டமாக ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.
2023-24-ம் ஆண்டில் ரூ.61,791 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் ஹூண்டாய் நிறுவனம் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்வதாக கூறி இருந்தனர். ஆனால் ரூ.500 கோடி மட்டுமே அந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க பயணம் செய்தார். இதன் மூலம் 66 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் ரூ.34,014 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் 47 ஆயிரத்து 650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் ஒரு பைசா முதலீடு கூட வரவில்லை.
இதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். வெறும் 3 சதவீத வெளிநாட்டு முதலீடு மட்டுமே வந்துள்ளது. தமிழ் நாட்டில் கங்கை கொண்டானில் தொழில் தொடங்க கையெழுத்திட்ட நிறுவனம் ஒருசில மாதங்களில் ஆந்திராவுக்கு சென்றது ஏன்?
அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தமிழகத்தை சேர்ந்தவர். அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யாமல் ஆந்திராவுக்கு சென்றது ஏன்? முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு மாறி செல்வதற்கு கமிஷன், ஊழல்தான் காரணம்.
இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலம் எது என்ற பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் 17 மாநிலங்கள் இடம் பெற்றன. அதில் தமிழகம் இடம் பெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பா.ம.க. பொருளாளர் சத்யபாமா, வக்கீல் பாலு, அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது.
- மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை:
பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், தி.மு.க. அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.
கடந்த நான்கு ஆண்டு தி.மு.க. ஆட்சியில், சேமிப்புக் கிடங்குகள், உணவுக் கிடங்குகள் அமைக்க, ₹309 கோடி செலவிட்டதாக தி.மு.க. அரசு கூறியிருக்கிறது.
ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது இந்த ₹309 கோடி நிதி?
நெல் கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், அமைச்சர் சக்கரபாணியின் துறையான உணவுப் பொருள் வழங்கல் துறையில், ₹160 கோடி ஊழல் நடைபெற்றிருந்ததைக் குறித்து சமீபத்தில் கூறியிருந்தோம். இதன் காரணமாக, நெல் கொள்முதலில் ஏற்பட்ட 30 - 40 நாட்கள் தாமதத்திற்கு தி.மு.க. அரசே முழு பொறுப்பு.
கடந்த ஒரு மாதமாக நெல் கொள்முதல் தாமதத்தைக் குறித்து விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும், தஞ்சாவூரில், தி.மு.க. அமைச்சர் சக்கரபாணியிடம் விவசாயிகள் நேரடியாக வாக்குவாதம் செய்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொழுதுபோக்கிவிட்டு, யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம்?
தி.மு.க. அரசின் ஊழலாலும், தவறுகளாலும், தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? ஒவ்வொரு ஆண்டும், நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கவும், உலர வைக்கவும் கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, தி.மு.க.வின் கடித நாடகம் அல்ல.
தமிழக விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போதுதான் நிறுத்தும் இந்த கையாலாகாத திமுக அரசு? என பதிவிட்டுள்ளார்.
- அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது.
- இதனால் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களை பல்வேறு வகைகளில் பாதுகாக்கும் மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு, விடியா திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; போதைப் பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தல்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவது, மக்கள் விரோதச் செயல்கள் நடைபெற்று வருவது போன்ற தொடர்கதையாகிவிட்டது.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செயல்படுகின்றனர். இந்த திமுக ஆட்சி தமிழ்நாட்டை அலங்கோல நிலைக்கு தள்ளிவிட்டதன் அடையாளம் தான் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும்; பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும் அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தொடர்ச்சியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், இதுவரை நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
அதேபோல், திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியில், மக்களின் பல்வேறு அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவதில் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. மாறாக, பல்வேறு வரி உயர்வுகளை மக்கள் தலையில் சுமத்தி உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
சமீபத்தில் கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவருக்கு எதிராக நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமை. அதேபோல், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம் காவலர் ஒருவர் பாலியல் சீண்டல் என, தமிழ்நாட்டின் வரலாற்றில் திமுக-வின் ஆட்சிக் காலம் ஒரு கரும்புள்ளி என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் மெய்ப்பித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழ் நாட்டில் பெருகிவரும் பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கலாச்சாரம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் திண்டிவனத்தில் நிகழ்ந்த பாலியல் சீண்டல் என தொடர்ந்து நடைபெற்று வரும் மகளிர் விரோத, மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டக் கழகம் மற்றும் மாவட்ட மகளிர் அணியின் சார்பில், 14.11.2025 - வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், திண்டிவனம் காந்தி சிலை அருகில், கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அலட்சியப் போக்கைக் கண்டித்து நடைபெற உள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெருந்திரளான மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் .






