search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN farmers"

    • மேகதாதுவில் அணை கட்ட கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
    • டெல்லி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் செல்போன் டவர் இருக்கும் இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் டெல்லி ஜந்தார் மந்திர் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று தொடங்கிய இந்த காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகளுக்கும், டெல்லி போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், அதன் பின்னர் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. அப்போது ஒரு பெண் உள்ளிட்ட சில விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் மரத்தின் மீது ஏறினர். கயிறுடன் ஏறி நின்ற அவர்கள், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக அறிவித்தனர்.

    இதனை தொடர்ந்து அங்கு வந்த டெல்லி போலீசாரும், தீயணைப்பு துறையினரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் இறங்க மறுத்ததால், பெண் போலீசார் மரத்தின் மீது ஏறி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மரத்தை விட்டு இறங்க செய்தனர்.

    இந்நிலையில் 2 பெண்கள் உள்ளிட்ட சில விவசாயிகள் அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறினர்.


    அரை நிர்வாணத்துடன் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்ட அவர்கள் செல்போன் டவர் மீது தூக்கிட்டும், மேலே இருந்து குதித்தும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது. டெல்லி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் செல்போன் டவர் இருக்கும் இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இவ்வாறு தமிழக விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் காலை முதல் பரபரப்பு நிலவி வருகிறது.





    • காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி காவிரியில் தமிழகத்துக்கு மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தினமும் விதவிதமான போராட்டங்கள் நடத்தி வரும் அய்யாக்கண்ணு இன்றைய தினம் மனித எலும்பை கடித்து போராட்டம் நடத்தினார்.

    திருச்சி:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி வந்தார்.

    பின்னர் இரவு திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஓய்வெடுத்தார். அதைத்தொடர்ந்து இன்று அரியலூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சத்திரம் பஸ் நிலையம் வழியாக புறப்பட்டுச் சென்றார்.

    அப்போது கடந்த 30 நாட்களாக சத்திரம் அண்ணா சிலை அருகாமையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் திடீரென அவரது காரை வழிமறித்து கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    அய்யாக்கண்ணு கொடுத்த மனுவில், மோடி அரசு வாக்குறுதி அளித்தபடி விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி காவிரியில் தமிழகத்துக்கு மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயிகளின் கடனுக்காக வங்கிகள் கொடுக்கும் நெருக்கடியை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்று இருந்தன. மேலும் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    மனுவை பெற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.

    தினமும் விதவிதமான போராட்டங்கள் நடத்தி வரும் அய்யாக்கண்ணு இன்றைய தினம் மனித எலும்பை கடித்து போராட்டம் நடத்தினார்.

    • இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
    • தி.மு.க. அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும். எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் செப்டம்பர் 15-ந்தேதி வரை சுமார் 5.25 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். இதற்கு மேட்டூர் அணையிலிருந்து 99.74 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள தண்ணீரானது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு மற்றும் இந்திய வானிலை மையத்தின் ஆண்டு மழைப் பொழிவு பற்றிய விபரங்களையும் பெற்று டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தண்ணீர் திறப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் 110 அடிக்கு மேல் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விபரங்களைப் பெறாமல், இந்த நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஜூன் 12 அன்று மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார்.

    மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந்தேதி 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, அன்றே மாலைக்குள் படிப்படியாக 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு, ஜூலை மாதத்தில் படிப்படியாக 16000 கனஅடியாக உயர்த்தி ஆகஸ்ட் மாதத்தில் 18000 கனஅடியாக நீர் தேவைக்கேற்ப, மழையின் அளவுக்கேற்ப வழங்கப்பட வேண்டும்.

    ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வெறும் 10 ஆயிரம் கன அடிதான். இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில், ஆற்றங்கரை ஓரம் உள்ள பாசனப் பரப்புகள் மற்றும் சில தண்ணீர் திறந்து விடப்பட்ட கால்வாய்களின் ஓரங்களில் உள்ள பாசனப் பரப்புகள் தவிர, மற்ற இடங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம்-54.91 அடி (120 அடி), நீர் இருப்பு 20.55 டி.எம்.சி. (மொத்த இருப்பு 93.47 டி.எம்.சி.). நீர் வரத்து சுமார் 12,000 கன அடி. தண்ணீர் திறப்பு 7 ஆயிரம் கன அடி. குறுவை சாகுபடிக்கே தண்ணீர் பற்றாத நிலையில், சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்று இதுவரை தி.மு.க. அரசு வாயையே திறக்கவில்லை.

    ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு சாதனை படைத்துவிட்டோம் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த தி.மு.க. அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாமல் விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் நிவாரணம் பெற இயலாது. எனவே, இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    மேலும், இன்றுவரை சம்பா சாகுபடி குறித்தும், போதிய விதை நெல் மற்றும் உரங்கள் விநியோகம் குறித்தும் எந்தவிதமான அறிவிப்பையும் இந்த தி.மு.க. அரசு வெளியிடவில்லை. எனவே, எனது தலைமையிலான அம்மாவின் அரசு வறட்சிக் காலத்தில் செய்ததுபோல், சம்பா சாகுபடி மேற்கொள்ளும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சம்பா மற்றும் தாளடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும் என்று, ''நானும் டெல்டா மாவட்டத்துக்காரன்'' என்று அடிக்கடி சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    டெல்டா விவசாயிகள் படும் வேதனையை கவனத்தில் கொள்ளாமல், உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறோம் என்று பசப்புவார்த்தை பேசி பிரச்சனையை திசை திருப்ப, முதலைக் கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தான்தோன்றித்தனமான செயல்பாட்டை அ.தி.மு.க.வின் சார்பிலும், அல்லலுறும் வேளாண் பெருமக்கள் சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறேன். தொடர்ந்து தி.மு.க. அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த மேற்பார்வை குழு கூட்டத்தில் பெரியாறு அணையில் நில அதிர்வு மானி பொருத்துவது குறித்து கேரள அரசு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    • தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.

    கூடலூர்:

    தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. 152 அடி உயரம் கொண்டுள்ள அணையில் உச்சநீதிமன்றம் உத்தரவுபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    இருந்தபோதும் அணை பலவீனமாக இருப்பதாக கேரளஅரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதை உறுதி செய்த பின்னரும் கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

    தற்போது நில அதிர்வு மற்றும் நில நடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு ஏற்படுவதாக பொய் குற்றச்சாட்டை கூறி வருகிறது. இதனால் நில அதிர்வு மானி பொருத்த கண்காணிப்பு குழுவை கேரள அரசு வலியுறுத்தியது.

    கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த மேற்பார்வை குழு கூட்டத்தில் பெரியாறு அணையில் நில அதிர்வு மானி பொருத்துவது குறித்து கேரள அரசு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு கண்காணிப்பு குழு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அணையில் நில அதிர்வு மற்றும் நில நடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் மற்றும் அக்ஸ்சலரோ கருவிகள் வாங்க ரூ.99.95 லட்சம் நிதி தமிழக பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. கருவிகளை பொருத்தும் பணியை செய்து முடிக்க ஐதராபாத்தை சேர்ந்த மத்திய அரசின் தேசிய புவியியல் ஆராய்ச்சி மையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இரு மாநில பிரச்சினை என்பதால் நில அதிர்வு மானியின் அறிக்கை ஒவ்வொரு 15 நொடிக்கும் ஐதராபாத்தில் உள்ள ஆய்வு குழுவிற்கு தகவல் சொல்லும் வகையில் 5 ஆண்டு ஒப்பந்தத்துடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் பெரியாறு அணையில் கருவிகள் பொருத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழக அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள நீர்பாசனத்துறையின் இண்டர்ஸ்டேட் வாட்டர் குழுவின் அனுமதி பெற்று அவர்கள் முன்னிலையில்தான் பணியை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொதுப்பணித்துறையை கேரளா வற்புறுத்தி உள்ளது.

    இதற்கு ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு, வைகை விவசாய சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் எஸ்.ஆர்.தேவர் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணையில் வர்ணம் பூசுதல், மராமத்து பணி என அனைத்துக்கும் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸிஅகஸ்டின் தலைமையில் உள்ள இண்டர்ஸ்டேட் வாட்டர் குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இது இரு மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்சினை என்பதால் கேரள அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. கடந்த 2006-ம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் ஏற்றிய அணைகள் பாதுகாப்பு சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் கேரளாவின் செயலுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம் என்றார்.

    • திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாலாற்று படுகையில் உள்ள ஏரிகளில் தண்ணீர் இருப்பு உள்ளது.
    • இதனால் விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    வேலூர்:

    பாலாறு கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகிறது. கர்நாடகத்தில் 93 கிலோமீட்டர் தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிலோமீட்டர் தொலைவும் தமிழகத்தில் 222 கிலோமீட்டர் தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே வாயலூர் என்னுமிடத்தில் கலக்கிறது.

    33 கிலோமீட்டர் மட்டுமே ஓடும் ஆந்திராவில் 22 இடங்களில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 10 முதல் 15 மீட்டர் உயரம் வரை சில தடுப்பணைகள் உள்ளன.

    இந்த தடுப்பணைகளின் உயரத்தை மேலும் அதிகரிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக தடுப்பணைகளை தாண்டி பாலாற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் வறண்டு கிடந்த பாலாறு மீண்டும் உயிர்த்தெழுந்து உள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாலாற்று படுகையில் உள்ள ஏரிகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தமிழக எல்லையில் உள்ள குப்பம் தொகுதிக்கு வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்:-

    முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொகுதியான குப்பத்தில் ஒரு வளர்ச்சி பணிகள் கூட நடைபெறவில்லை. ஹந்திரி நீ வா குடிநீர் கால்வாய் பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பணிகள் 6 மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படும்.

    யாமி கானி பல்லி, மதனப்பல்லி பகுதிகளில் ரூ.250 கோடி செலவில் சிறிய அணை கட்டப்படும்.

    குப்பம் தொகுதி மக்களுக்காக பாலாற்றின் குறுக்கே ரூ.120 கோடி செலவில் ஆங்காங்கே தடுப்பணை விரிவாக்க பணிகள் நடைபெறும் என அறிவித்தார்.

    இதன் மூலம் பாலாற்றில் உள்ள 22 தடுப்பணைகளில் உயரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிய தடுப்பணைகளும் வர வாய்ப்புள்ளது என ஆந்திர மாநில விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.

    இந்த பணிகளால் தமிழகத்திற்கு பாலாற்றில் இருந்து தண்ணீர் வருவது கேள்விக்குறியாகி விடும் என வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

    பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டுவது மற்றும் ஏற்கனவே உள்ள தடுப்பணைகளை உயரம் அதிகரிக்க செய்யும் பணிகளை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    விவசாயிகள் நலன் பெற எந்த தியாகத்தையும் செய்ய அ.தி.மு.க. அரசு தயாராக உள்ளது என்று தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Loksabhaelections2019 #EdappadiPalaniswami #ADMK #TNFarmers
    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக தேர்தல் பிரசாரம் செய்தார்.

    இன்று காலை மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேனி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.

    அம்மாவின் அரசு விவசாய மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை தந்து வருகிறது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து வருகிறார். ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது. அதுபோல இப்போது நாங்களும் சொல்கிற திட்டங்களை நிச்சயம் செய்து முடிப்போம்.

    உலக பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டை மீட்டு தந்தது அ.தி.மு.க. அரசு. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளீர்கள். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். நானும் ஒரு விவசாயி என்ற முறையில் சொல்கிறேன். விவசாயிகள் வாழ்வு செழிக்க இந்த அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். சாத்தையாறு அணை மராமத்து பணிக்கு ரூ.3½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கும்.


    முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக தேக்க சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் ஜெயலலிதா. அவரது வழியில் செயல்படும் இந்த அரசு முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்காக ரூ.7½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அணையை மேலும் பலப்படுத்தும் பணிகள் நடத்தப்படுகிறது. அணையை பலப்படுத்தும் பணிக்கு கேரள அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது. 2 படகுகளில் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி கேட்டோம். ஒரு படகுக்கு மட்டுமே அனுமதி தந்துள்ளனர்.

    அணைக்கு செல்லும் வழியில் உள்ள மரங்களை அகற்றவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் நலன் பெற எந்த தியாகத்தையும் செய்ய அ.தி.மு.க. அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். #Loksabhaelections2019 #EdappadiPalaniswami #ADMK #TNFarmers
    வாரணாசி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்னு தலைமையில் 111 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். #TNfarmers #Ayyakannu #AyyakannuagainstModi #ModiinVaranasi
    வாரணாசி:

    தமிழ்நாட்டு விவசாயிகளின் வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.

    கடந்த 2017-ம் ஆண்டில் அய்யாக்கண்னு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் 100 நாள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  2018-ம் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது மீண்டும் போராட்டம் நடத்தினர். ஆனால், தமிழக விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நேற்றிரவு பாஜக தலைமை வெளியிட்ட முதல் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வாரணாசி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்னு தலைமையில் 111 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த அய்யாக்கண்ணு, தமிழ்நாட்டில் இருந்து சுமார் 300 விவசாயிகள் விரைவில் வாரணாசிக்கு சென்று நான் மற்றும் மேலும் 110 விவசாயிகள் மோடியை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்வோம் என தெரிவித்துள்ளார். #TNfarmers #Ayyakannu  #AyyakannuagainstModi #ModiinVaranasi
    தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் செயலை செய்யாதிங்க என்று மத்திய, மாநில அரசுகளை வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். #MDMK #Vaiko
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த முத்தாயிபாளையத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பேசினார்.

    பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் ஆயிரத்து 500 கிலோ வாட் மின்சாரத்தை கடலுக்கு அடியிலும் பூமிக்கு அடியிலும் கொண்டுசெல்ல அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    ஆனால் தமிழகத்தில் மட்டும் விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர் மின்னழுத்த கோபுரத்திற்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்து இருந்தனர்.

    ஆனால் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்மின் கோபுரத்துக்கு எதிராக போராடிய விவசாயிகளை மிரட்டுவது கைது செய்வது போன்ற செயல்கள் கண்டனத்துக்குரியது. முதலமைச்சரும் இந்தப் பாவத்தைச் செய்ய வேண்டாம்.

    விளைநிலங்கள் வழியாக உயரமான கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

    விவசாய நிலத்தில் மின் கோபுரங்கள் அமைந்தால் அந்த நிலத்தின் மதிப்பு குறைந்து நிலத்தை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் செயலை செய்யாதிங்க. அந்த போக்கை மத்திய மாநில அரசு கைவிட வேண்டும்.

    இவர் அவர் கூறினார். #MDMK #Vaiko
    இந்து கடவுள் குறித்து பேச சீமானுக்கு தகுதி இல்லை என்று கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #BJP #PonRadhakrishnan #Seeman
    கோவை:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் இந்து கடவுள்களை இழிவாக பேசிய நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பொன். ராதாகிருஷ்ணன், எந்த தகுதியில்லாதவர் தகுதி நிறைந்த வி‌ஷயங்களை பேச கூடாது. சீமான் அரசியல், சமுதாயம் பேசட்டும் . ஆன்மீகம் மீது நம்பிக்கை இல்லையெனில் விட்டு விட வேண்டும். யாகவராயினும் நா காக்க வேண்டும். இதுபோல கேவலமான வார்த்தைகளை பேசுபவர்களை யோக்கியமற்றவர்களாக தான் கருத முடியும் என்றார்.


    டெல்லியில் தமிழக விவசாயிகள் தமிழர்களின் மானத்தை வாங்கும் வகையில் போராட்டம் நடத்துவது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். இந்த போராட்டங்களுக்கு தமிழகத்தை சேர்ந்த சில கட்சிகள் நிதி உதவி செய்கிறார்கள். இதனை தமிழர் என்ற உணர்வோடு கண்டிக்க வேண்டும்.

    மேகதாதுவில் அணை கட்டுவது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. ஆய்வறிக்கை தயாரிக்க மட்டுமே மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. கஜா புயல் நிவாரணம் குறித்து உள்துறை இணையமைச்சரிடம் பேசியுள்ளேன். விரைவில் நல்ல தகவல் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலைவாய்ப்பின்மை குறித்து ராகுல்காந்தி கருத்து குறித்து கேட்ட போது, காங்கிரஸ் கட்சியினருக்கு வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது என்றார்.

    பின்னர் அவர் திருப்பூர் புறப்பட்டு சென்றார். #BJP #PonRadhakrishnan #Seeman 
    நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் திரண்டுள்ள விவசாயிகள் தொடர்ந்து இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #TNFarmersProtest #FarmersProtest
    புதுடெல்லி:

    விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், 60 வயது விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு டெல்லியில் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த போராட்ட குழுவில் திருச்சியை சேர்ந்த தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான 1,300 பேர் தமிழகத்தில் இருந்து பங்கேற்று உள்ளனர். அதேபோன்று உத்தரப்பிரதேசம், பீகார், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட 29 மாநில விவசாயிகளும், 4 யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 207 விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகளும் என மொத்தம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.

    நேற்று இவர்கள் டெல்லியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள அவர்கள் இன்று டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லப் போவதாக அறிவித்தனர்.

    இதற்காக தமிழக விவசாயிகள் 25 பெண்கள் உள்பட 1,300 பேரும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று காலை 8 மணிமுதல் திரண்டனர். அதேபோன்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் யோகேந்திர யாதவ், தலைமையிலும் மற்ற விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் என லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டிருந்தனர்.

    எங்கு பார்த்தாலும் பச்சை துண்டுகளுடன் விவசாயிகள் தலைகளாக காணப்பட்டன. இதில் தமிழக விவசாயிகள் 10 மணிக்குள் மத்திய அரசு வந்து கோரிக்கை குறித்து, உறுதி கூறி, நிறைவேற்ற வாக்குறுதி தராவிட்டால் பேரணியில் முழு நிர்வாணமாக செல்வோம் என அறிவித்திருந்ததால் பரபரப்பாக இருந்தது. பேரணி இடத்தில் ஆயிரக்கணக்கான டெல்லி போலீசார் மற்றும் மத்திய ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.


    நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு டெல்லி ஆம் ஆத்மி எம். எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததோடு, அவர்கள் நேரடியாக வந்து உணவு வழங்கினர். இன்று காலையும் பேரணி தொடங்கும் முன்பு விவசாயிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தண்ணீர் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டது.

    ராம்லீலா மைதானமே பரபரப்புடன் காணப்பட்டது. போக்குவரத்து மாற்றப்பட்டது.

    தமிழக விவசாயிகள் நிர்வாணமாக பாராளுமன்றம் நோக்கி செல்வோம் என அறிவித்திருந்ததால் டெல்லி போலீசார் அவர்கள் இடத்தில் கூடுதல் போலீசாரை நிறுத்தி இருந்தனர்.

    இதுகுறித்து பேரணியில் நின்ற திருச்சி அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் ஏற்கனவே டெல்லியில் 141 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அன்று நாங்கள் தொடங்கிய போராட்டம் இன்று இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகளை டெல்லியில் திரள வைத்துள்ளது.

    தமிழக விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ராம்லீலா மைதானத்தில் இருந்து பாராளுமன்றம் வரை 3 கி.மீட்டர் நிர்வாணமாக செல்ல உள்ளோம். விவசாயிகளின் வேட்டி, சட்டையை ஏற்கனவே மத்திய அரசு கழற்றிவிட்டது. இப்போது எங்கள் கோவணத்தையும் மத்திய அரசு கோரிக்கையை நிறைவேற்றாததன் மூலம் கழற்றிவிட்டது என்பதை குறிக்கும் வகையில் செல்ல உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNFarmersProtest #FarmersProtest
    விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். #FarmersProtest
    புதுடெல்லி:

    விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும், அதன் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும், புயல் சேதத்தால் அழிந்து விட்ட அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய நஷ்ட ஈடு விரைந்து வழங்க வேண்டும், 60 வயதடைந்த விவசாயிகளுக்கு மகன், மகள் இருந்தாலும், சொந்தமாக பட்டா நிலம் இருந்தாலும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்,

    அழிந்துவிட்ட பயிர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்தியும், மத்திய அரசின் இழப்பீட்டுக்கான காப்பீட்டு தொகை கிடைக்காமல் உள்ளதை மத்திய அரசு விவசாயிகளுக்கு விரைந்து பெற்றுத்தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைத்து டெல்லியில் இன்றும், நாளையும் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.

    இதற்காக கடந்த 27-ந்தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ற அவர்கள், அங்கிருந்து சென்னையில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை டெல்லி சென்றடைந்தனர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய அவர்கள் ரெயிலை மறித்தனர். என்ஜின் மீது ஏறி நின்ற அவர்கள் தண்டவாளத்திலும் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    தமிழக விவசாயிகள் கழுத்தில் மண்டை ஓடு, எலும்பு மாலை அணிந்து அரை நிர்வாணத்துடன் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த காட்சி.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். தொடர்ந்து விவசாயிகள் கையில் மண்டை ஓடு, கழுத்தில் எலும்பு மாலை அணிந்தவாறு அரை நிர்வாணத்துடன் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். இன்றும், நாளையும் அவர்கள் ராம்லீலா மைதானத்தில் திரண்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

    அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் மன்னார்குடி பழனிவேல், மாநில செயலாளர்கள் வந்தவாசி தினேஷ், முருகன், கடலூர் சக்திவேல், மாவட்ட தலைவர்கள் சென்னை மாவட்டம் ஜோதிமுருகன், விழுப்புரம் மாவட்டம் ஏழுமலை, காஞ்சிபுரம் மாவட்டம் சண்முகம், கோவை மாவட்டம் படிஸ்வரன், திருச்சி மாவட்டம் பொன்னுசாமி, கரூர் மாவட்டம் சரவணன் , திருவள்ளூர் மாவட்டம் நாககுமார், தஞ்சாவூர் மாவட்டம் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்கனவே டெல்லியில் திருச்சி விவசாயிகள் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தினர். பாராளுமன்றம் முன்பு ஆடைகள் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மீண்டும் தமிழக விவசாயிகளால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #FarmersProtest
    ×