என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முல்லை பெரியாறு அணையை உடைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு- தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு
    X

    முல்லை பெரியாறு அணையை உடைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு- தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு

    • மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும்போது முல்லை பெரியாறு அணை உடைந்து விடும் என கேரள மக்களை சிலர் அச்சுறுத்தி வருகின்றனர்.
    • கேரள வக்கீலுக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்ததற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. பேபி அணையை பலப்படுத்தி பின்னர் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருந்தபோதிலும் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுப்பதற்கான தொடர் முயற்சியில் கேரளா ஈடுபட்டு வருகிறது.

    மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும்போது முல்லை பெரியாறு அணை உடைந்து விடும் என கேரள மக்களை சிலர் அச்சுறுத்தி வருகின்றனர். வக்கீல் ரசூல்ஜோய் என்பவர் சேவ் கேரளா பிரிக்கேட் என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் பெரியாறு அணைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    அணை உடைவது போன்று கிராபிக் காட்சிகளை உருவாக்கி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரச்சனையை பெரிதாக்கி வருகிறார். மேலும் அணை உடைந்தால் லட்சக்கணக்கான கேரள மக்கள் பலியாவார்கள் என சிலர் புரளியை கிளப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் ரசூல்ஜோய் அணையை உடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இதற்காக அணையின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்ய வேண்டும். சர்வதேச நிறுவனத்தை வைத்து ஆய்வு நடத்த வேண்டும். அணை பாதுகாப்பானது என்ற அறிக்கை தவறானது என்றும், அதற்கு தங்களிடம் ஆதாரதம் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    பல்வேறு நிபுணர் குழுக்கள் மூலம் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முழு ஆய்வு செய்த பின்னர் அணை பலமாக உள்ளது. 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் தற்போது கேரள வக்கீல் அதற்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்ததற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ள பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வரும் கேரள வக்கீல் ரசூல்ஜோய் நடத்தி வரும் சேவ் கேரளா பிரிக்கேட் அமைப்பை தடை செய்யும் வரை போராட்டம் நடத்த உள்ளோம்.

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் அவர் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் மத்திய கண்காணிப்புக் குழு, துணை காண்காணிப்புக் குழு ஆகியவை ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என அறிக்கை கொடுத்துள்ளது. இருந்த போதிலும் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் செயல்படுவதை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    Next Story
    ×