என் மலர்
நீங்கள் தேடியது "Amitshah"
- அமித்ஷா வர்ணம் தீட்டிய பகுதியில் பொதுமக்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
- தே.மு.தி.க.வையும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.
காரைக்கால்:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று காரைக்கால் வந்தார். காரைக்காலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக அவர் கோட்டுச்சேரியில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் தாமரை சின்னத்துக்கு வர்ணம் தீட்டினார். நல்லாட்சி தொடரட்டும், புதுவை மலரட்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என அவர் எழுதினார்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு காரைக்கால் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோட்டுச்சேரி பகுதி போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அமித்ஷா வர்ணம் தீட்டிய பகுதியில் பொதுமக்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் தே.மு.தி.க.வையும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.
அதற்கான பேச்சுவார்த்தையில் பா.ஜ.க. முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த முறை பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் போது அவர் பங்கேற்கும் கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் மேடை ஏற செய்யும் முயற்சியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
2 நாள் பயணமாக தமிழக மற்றும் புதுவை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் வியூகம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அன்றாடம் தாக்குதல் நடத்தினார்கள்.
- புதுச்சேரி மக்கள் மோடி மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து இருக்கிறார்கள்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.
புதுச்சேரியில் பா.ஜ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை உறுதிபடுத்தும் வகையில் பா.ஜக. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு திருச்சி வந்தார்.
அவருடன் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான மன்சுக் மாண்டவியா, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோரும் வந்தனர். திருச்சி வந்த அமித்ஷாவை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்கி ஓய்வெடுத்தனர்.
இன்று காலை அமித்ஷா நட்சத்திர ஓட்டலில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 30 நிமிடம் நடந்தது. இதில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றி வியூகம், தொகுதி பங்கீடு, தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளுக்கு முன் தேதியிட்டு அவர்களின் வங்கிக் கணக்கில் கோடை சிறப்பு தொகுப்புடன் சேர்த்து ரூ.5,000 வழங்கியதால் ஏற்பட்டுள்ள அரசியல் தாக்கம் ஆகியவை தொடர்பாக அமித்ஷா விரிவாக விவாதித்ததாக கூறப்படுகிறது.
இதனை எதிர் கொண்டு பெண் வாக்காளர்களை பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி பக்கம் திருப்பி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் மத்திய மந்திரி அமித்ஷா திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்துக்கு வந்தார்.
அங்கு அவரை புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம், புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் அமித்ஷா அங்கிருந்து காரில் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை வழியாக நகராட்சி சந்தை திடலை அடைந்தார். அங்கு நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசினார். கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
திருநள்ளாறு சனீஸ்வரன், பத்ர காளியம்மனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன். உலகின் தொன்மையான மொழியான தமிழில் உரையாற்ற முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
நான் இங்கு வந்திருப்பதற்கு 2 நோக்கங்கள் இருக்கின்றன. முதல் நோக்கம் நமது பிரதமர் மோடி தலைமையிலும், புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலும் இத்தனை ஆண்டு காலம் என்ன நடந்திருக்கிறது என்பதற்கான பட்டியலை, அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்க வந்திருக்கிறேன்.
இந்த இந்தியா கூட்டணி இருக்கிறதே இவர்களுடைய தீய நோக்கம், அந்த திரையை கிழித்து எறிவதற்காகவும் நான் இங்கு வந்திருக்கிறேன்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3 வேலைகளை செய்து இருக்கிறது. ஒன்று ஊழலை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. 2-வது விஷயம் முன்பு இங்கு இருந்த காங்கிரஸ் அரசு புதுச்சேரியை டெல்லிக்கு அடிமையாக ஆக்கி வைத்திருந்தது.
ஆனால் எங்கள் அரசு இங்கு சுயமாக செயல்படும் அரசுக்கு ஆதரவு அளித்து அதை உருவாக்கி இருக்கிறது. 3-வது பணி புதுச்சேரியில் அரசியல் நிலைத்தன்மையை நாங்கள் அமைத்திருக்கிறோம்.
காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அன்றாடம் தாக்குதல் நடத்தினார்கள்.
மோடி பிரதமராக ஆன பிறகு 2019-ல் முதல் முறையாக புல்வாமாவில் தாக்குதல் நடந்த பிறகு அவர்களின் வீடு புகுந்து தாக்கினோம். வான் வழியே சென்று தாக்குதல் தொடுத்தோம். முதல் துல்லிய தாக்குதல், பிறகு வான்வழி தாக்குதல், நிறைவாக ஆபரேஷன் சிந்தூரை அரங்கேற்றினோம். அவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம்.
பிரதமர் மோடியின் அரசை பார்த்து எந்த ஒரு தீய சக்தியும் கண்ணெடுத்து கூட பார்க்க முடியாது. இந்தியாவுக்கு பிரதமர் மோடி வலிமையை மட்டும் அளிக்கவில்லை. போதுமான பாதுகாப்பையும் அளித்துள்ளார். புதுச்சேரி மக்கள் மோடி மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து இருக்கிறார்கள்.
புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. புதுச்சேரியின் உரிமைகளை ஏலத்தில் விட்டவர் நாராயணசாமி. ரூ.15 ஆயிரம் கோடி என்பது புதுச்சேரியின் 3 ஆண்டு பட்ஜெட். தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களை அபகரித்தவர் நாராயணசாமி. அவரது ஆட்சியின் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும். நாராயணசாமிக்கு டெல்லி கஜானாவை நிரப்புவதுதான் வேலையாக இருந்தது. காங்கிரசால் புதுச்சேரி பின்னடைவை சந்தித்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி அமித்ஷா, திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து காரைக்கால் பா.ஜ.க. கிளை கமிட்டி நிர்வாகி ஒருவரது இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.
அதன்பிறகு அமித்ஷா மாலையில் மீண்டும் திருச்சி புறப்பட்டு செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் அமித்ஷா டெல்லி புறப்படுகிறார். அமித்ஷா வருகையையொட்டி காரைக்கால், திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- தொகுதி பங்கீடு குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
- என்.ஆர். காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு.
காரைக்காலில் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் மத்திய அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் ரங்கசாமி தனியாக சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
அப்போது சட்டசபை தேர்தலில் கூட்டணியில் மற்ற கட்சிகளை சேர்ப்பது மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
ஏற்கனவே, பா.ஜ.க-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி இணைந்து போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது மற்றும் பா.ஜ.க மற்றும் என்.ஆர். காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.
- திருச்சிக்கு வருகை தரும் அமித்ஷா அன்று இரவு திருச்சியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கிறார்.
- பிப்ரவரி 14-ந்தேதி திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் புறப்பட்டு செல்கிறார்.
திருச்சி:
தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் மத்திய மந்திரி அமித்ஷா கடந்த மாதம் திருச்சி வருகை தந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.
அதேபோல் பிரதமர் மோடி சென்னையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல் அடுத்தமாதம் (மார்ச்) 1-ந்தேதி மதுரை வருகை தர உள்ளார். மேலும் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் அடிக்கடி தமிழகம் வந்து செல்கின்றனர். மத்திய மந்திரி பியூஸ் கோயல் தமிழகத்தில் முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் மற்றும் காரைக்காலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருச்சி வருகை தர உள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தரும் அமித்ஷா அன்று இரவு திருச்சியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் பிப்ரவரி 14-ந்தேதி திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் புறப்பட்டு செல்கிறார். காரைக்கால் வரிச்சிகுடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் தரையிறங்குகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு காரைக்கால் நகராட்சி திடலுக்கு காலை 11 மணிக்கு சென்றடைகிறார். அதன் பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
பொதுக்கூட்டம் முடிவடைந்த பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் அவர், விமானத்தில் சேலம் புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெறும் பா.ஜ.க. மத்தியக்குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அமித்ஷா வருகையையொட்டி மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் திருச்சியில் முகாமிட உள்ளனர்.
மேலும் திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் பாரதம் அடுத்த தசாப்தம் என்ற பெயரில் தொழிலதிபர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெறுகிறது. இதில் மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், எல்.முருகன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருந்து பா.ஜ.க. சார்புடைய தொழிலதிபர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
அமித்ஷா இரண்டு நாட்கள் திருச்சியில் இருப்பதால் 13-ந்தேதி மாலை அல்லது 14-ந்தேதி தமிழக தேர்தல் நிலவரம் குறித்து பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்க வாய்ப்புள்ளதாகவும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- பா.ஜ.க. நம்பர் 2 கட்சியாகவும், சிவசேனா நம்பர் 1 கட்சியாகவும் இருந்தது.
- அண்ணாமலை என்னுடைய ஃப்ரண்ட். அவர்கிட்டயும் நான் பேசிக்கொண்டு தான் இருக்கேன்.
பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றியது தொடர்பாக யூகங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. மேலிடம் விளக்கம் அளிக்காமல் உள்ளனர். இந்த நிலையில், அண்ணாமலை மாற்றப்பட்டு அரசியல் யுக்தி என்று ஆடிட்டர் குரூமூர்த்தி பேசியுள்ளார்.
'துக்ளக்' நாளிதழின் 56-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:-
அண்ணாமலை பொறுத்தவரை அது பா.ஜ.க.வின் முடிவு. அண்ணாமலையும், பா.ஜ.க.வும் சேர்ந்து தான் முடிவு எடுத்துள்ளார்களே தவிர அண்ணாமலையை கலக்காமல் எதையும் எடுக்கலை. காரணம் என்னவென்றால் பா.ஜ.க.வால் மட்டும் தனியாக தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என்கிற நிலைமை இருப்பதினால்.
எடப்பாடி எந்த விஷயத்திலும் பா.ஜ.க.வோடு நெருங்ககூடாது என்று 2024-ல் அவர் எடுத்த முடிவை அவர் மாற்றிக்கொண்டு பா.ஜ.க. ஒத்துழைக்க வந்திருப்பதானால் தான் இன்னிக்கு தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலில் எதார்த்தம் என்று ஒன்று இருக்கிறது. எல்லாமே ஐடிலிசம் கிடையாது. பா.ஜ.க. தனியாக நின்று 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எழுச்சி பெற்று வெற்றி பெறும் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? 10 ஆண்டு தி.மு.க. இருக்கும் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? ஏற்றுக்கொள்ள முடியாது.
தி.மு.க. போயே ஆக வேண்டும் என்றால் அதற்கு உண்டான யுக்திகளை தயார்படுத்த வேண்டும். அமித்ஷாவை விட இதைப்பற்றி விஷயம் தெரிந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. 2014-ல் மகாராஷ்டிரா தேர்தலின் போது உத்தவ் தாக்கரே என்கிட்ட போன் செய்து கேட்கிறார். அமித்ஷா எங்க இருக்காரு சார் என்னால பார்க்கவே முடியலை சார் என்று. அப்போ மாட்டுங்காவில் ஒரு சின்ன வீட்டில் இருந்தார் அந்த சமயத்தில். அங்கிருந்து தான் யுக்திகளை கையாண்டு பா.ஜ.க. நம்பர் 2 கட்சியாகவும், சிவசேனா நம்பர் 1 கட்சியாகவும் இருந்தது. அதனை அப்படியே மாத்தினார் அமித்ஷா. இன்றைக்கு பா.ஜ.க. மகாராஷ்டிராவை கைப்பற்றி இருக்கிறது என்றால் அன்னிக்கு அவர் எடுத்த யுக்தி. அதனால் அவருக்கு தெரியும். சில பேருக்கு அந்த அஸ்ட்ராலானி என்று கூறுவார்கள். அதாவது எல்லாவிதமான திறமையும் இருக்கும். அந்த மாதிரி திறமை உள்ளவர். தமிழ்நாட்டை கையில் எடுத்து இருக்கார். நம்பிக்கையுடன் இருங்கள். அண்ணாமலையும் அவருக்கு ஒத்துழைப்பார். அண்ணாமலை என்னுடைய ஃப்ரண்ட். அவர்கிட்டயும் நான் பேசிக்கொண்டு தான் இருக்கேன். அதனால அண்ணாமலைக்கு எதிராக ஏதோ ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக நினைத்துக்கொண்டு பேசுவது தவறு என்று கூறினார்.
- ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது.
- அ.தி.மு.க. பலமிழக்கவில்லை. தி.மு.க. தான் பலமிழந்து இருக்கிறது.
மதுரை:
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை கூடல் நகர் பகுதியில் கால்வாய் பாலம் மற்றும் கரிசல் குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் இரண்டாம் தளத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று, கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆமை வேகத்தில் மதுரையில் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டப்பணி நடைபெற்று திறந்து வைக்கப்பட்டதால், இணைப்புகள் சரியாக கொடுக்கப்படாமல் ஆங்காங்கே குடிநீர்க் குழாய்கள் அழுத்தம் தாங்காமல் வெடித்து சிதறுகிறது.
முதலமைச்சர் பயத்தில் ஏதேதோ பேசுகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டில் ஆட்சியை நடத்தும் என கூறுகிறார். போதைக் கலாச்சாரம் தமிழகத்தில் தலை விரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது. இப்படி அவர்கள் கூட்டணியில் உள்ள வைகோவே சொல்லி இருக்கிறார்.
அ.தி.மு.க. கூட்டணிக்கு வரக்கூடிய கட்சிகள் குறித்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்கிறார். மக்கள் இந்த ஆட்சியை அகற்ற ஆர்வமோடு இருக்கிறார்கள்.
125 நாட்களாக வேலை உறுதி திட்டத்தை உயர்த்திக் கொடுத்த அமித்ஷாவிற்கு நன்றி சொல்லத்தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். விஜய் கட்சி நடத்துவதற்கு எத்தனையோ விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம். அதை விட்டு விட்டு ஜனநாயகன் படம் வெளியிடுவதற்கு நெருக்கடி என்பது தவறு. ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது.
கூட்டணிப் பலத்தில் தான் தி.மு.க. இருக்கிறது. எங்கள் அம்மா போன்று யாருடைய கூட்டணியையும் எதிர்பாராமல் தனித்துப் போட்டி போட மு.க.ஸ்டாலின் தயாரா?
ரூ. 3 ஆயிரம் கொடுத்தாலும் சரி. கொள்ளை அடித்த 4 லட்சம் கோடி ரூபாயை தேர்தலுக்காக இறக்கினாலும் தி.மு.க. வெற்றிப் பெற முடியாது.
அ.தி.மு.க. பலமிழக்கவில்லை. தி.மு.க. தான் பலமிழந்து இருக்கிறது. முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அதனால் தான் திருப்பரங்குன்றம் அருகே முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகிப் போனதோ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும்.
அமித்ஷா மாபெரும் தலைவர். விஜய் கட்சி மற்றும் அவரது படத்திற்கு நெருக்கடி கொடுப்பது போன்ற வேலை எல்லாம் அவர் செய்ய மாட்டார் என்றார்.
- ஆட்சி நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக தான் செயல்பட வேண்டும்.
- அப்பட்டமான ஒரு பொய் நாடகம் தமிழக அரசால் நடந்து கொண்டிருக்கிறது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-
கே: புதுக்கோட்டை விழா கோலமாக இருக்கிறது. அதுகுறித்து?
ப: ஜார்ஜ் கோட்டையை பிடிக்கப் போகிறோம், அதனால் புதுக்கோட்டை விழா கோலமாக இருக்கிறது. பல கோட்டைகளைப் பிடித்து சாதனை படைத்த அமித்ஷா இன்று வருகிறார். புதுக்கோட்டையில் ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதற்கான வியூகத்தை வகுக்க போகிறோம். நிச்சயமாக வெற்றி கிடைக்கும். தொடர்ந்து தமிழக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறது.
தேர்தல் ஸ்டண்ட் என்பது நேற்று இவர்கள் அறிவித்திருக்கிற ஓய்வூதிய திட்டம். இது புதிய ஓய்வுதிய திட்டமா, பழைய ஓய்வூதிய திட்டமா, அல்லது பழைய, புதிய ஓய்வூதிய திட்டமா என்ற ஒரு குழப்பத்திலேயே அந்தத் திட்டம் இருக்கிறது. இப்படி ஒரு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றாமல் ஓய்வூதியத் திட்டம் வந்திருக்கிறதா என்பதில் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
மகாத்மா காந்தி பெயரை மாற்றி விட்டு பாரத பிரதமர் அதை விரிவுபடுத்தினார். இவர்கள் பெயரை மாற்றி அதை சுருக்கி விட்டு, ஏற்கனவே அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று பின்னர் அவர்களுக்கே கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அதற்கு எல்லோரும் ஸ்வீட் கொடுக்கிற மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர புதிய ஓய்வூதிய திட்டத்தின் ஒரு மறு உருவு தானே தவிர, பழைய ஓய்வூதிய திட்டம் இல்லை.
கே: தமிழக அரசுக்கு மத்திய அரசிடமிருந்து நிதிகள் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே?
ப: ப.சிதம்பரம் போன்றவர்கள் கடன் வாங்குவது பிரச்சனை இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசை பொறுத்தவரை முதலமைச்சர் சொல்கிறார் போதையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று. ஆட்சி நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக தான் செயல்பட வேண்டும். இணக்கமில்லாமல் நீங்கள் இருந்து கொண்டிருப்பதால் தான் எல்லாம் நாங்கள் செய்தோம், நாங்கள் செய்கிறோம் என்று சொல்வது. துப்புரவு தொழிலாளர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை அடி அடி என்று அடிக்கிறீர்கள்.
தேர்தல் சமயத்தில் இன்னும் பல அறிவிப்புகள் வரலாம். இந்த ஓய்வூதிய திட்டம் எப்போது முதல் அமல்படுத்தப்படும் என்று இந்த அரசாணையில் இல்லை. தி.மு.க.வுக்கு நாம் அடுத்து வருவோமா என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆனாலும் அறிவிப்பு விடுவோம் என்று தான் நடக்கிறது. இது போன்ற பல அறிவிப்புகளை நான் எதிர்பார்க்கிறேன்.
கே: தி.மு.க. கூட்டணி கட்சியினர் மது ஒழிப்பு போன்ற போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் கட்சியில் உள்ளவர்களே மது ஆலையை நடத்துகிறார்கள்.
ப: வைகோவிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன், நீங்கள் எதற்கு எதிராக நடைபயணம் செல்கிறீர்கள்? அறிவாலயத்திற்கு தான் நீங்கள் நடைபயணம் செல்ல வேண்டும். சாராய ஆலையை நோக்கி தான் நடைபயணம் செல்ல வேண்டும். ஆனால் சாராய ஆலையை நீங்கள் மூட மாட்டீர்கள், டாஸ்மாக்கை குறைக்க மாட்டீர்கள். அப்பட்டமான ஒரு பொய் நாடகம் தமிழக அரசால் நடந்து கொண்டிருக்கிறது.
அதேபோல் நாளை 10 லட்சம் லேப்டாப்புகளை முதலமைச்சர் மாணவர்களுக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள். உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கி இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் ஏன் எச்.சி.எல். நிறுவனத்தில் வாங்கவில்லை. நமது தமிழரான சிவ நாடாரிடம் ஏன் வாங்கவில்லை?
கே: நீங்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது அறநிலையத்துறை அமைச்சருக்கும் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதே போல் இப்பொழுது கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ளதே?
ப: நான் கவர்னராக இருக்கும்போது கூட அதைப்பற்றி சிந்தித்தது கிடையாது. நான் கூட்டத்தோடு தான் செல்வேன் என்று நான் கூறியபோது என்னுடன் வந்தவரை தடுத்து நீங்கள் மட்டும் செல்லுங்கள் என்று கூறுகிறார். இவர் தனியாகவா எல்லா இடங்களுக்கும் செல்கிறார்? கோவில் அவருடைய சொந்த சொத்தா, பொதுமக்களுடையது தான். இந்த தி.மு.க. கூட்டணி தான் மதசார்பற்ற கூட்டணி என்று பெயர் வைப்பதற்கு உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று நான் சொல்கிறேன்.
கே: தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி டோல் பிரீ எண்ணை வழங்கி, மக்களுடைய தகவல்களை தெரிவிக்க சொல்லி இருக்கிறார்களே?
ப: ஏற்கனவே உள்ள தேர்தல் அறிக்கையை பார்க்க சொல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
- தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துடிப்பான நிர்வாகிகளுடன் உரையாற்ற உள்ளார்.
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு விழாவில் பங்கேற்க, புதுக்கோட்டைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வருகிறார். இதனை தொடர்ந்து, கூட்டணி, தேர்தல் வியூகம் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், புதுக்கோட்டை வருகை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, பல லட்சக்கணக்கான மக்களை இப்பேரணி இணைக்கிறது.
இன்று அதன் நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துடிப்பான நிர்வாகிகளுடன் உரையாற்ற உள்ளதாக கூறியுள்ளார்.
- நாங்கள் அமித்ஷாவிடம் சென்று தமிழகத்தினுடைய அரசியல் கள நிலவரங்களை தெரிவித்து வந்தோம்.
- ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தாலும் என்னுடன் தொடர்பில் உள்ளார்.
போடி:
தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் பிரிந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பு. அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பது சாத்தியமா என்பதற்கு சாத்தியப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமே. அதற்காகத்தான் இந்த போராட்டம். இன்று மக்களுடைய குரலாக அது ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்த செங்கோட்டையன் தற்போது த.வெ.க.வில் இணைந்து விட்டார். அ.தி.மு.க. ஒருங்கிணைய வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தது நான் தான். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி வெகு நாள் ஆகிவிட்டது.
நாங்கள் அமித்ஷாவிடம் சென்று தமிழகத்தினுடைய அரசியல் கள நிலவரங்களை தெரிவித்து வந்தோம். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை உருவாக்கியபோது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் அதன் சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டது.
ஆனால் தற்போது அவைகள் மீறிவிட்டது மீண்டும் எம்.ஜி.ஆர். உடைய இயக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி தற்போது வரை நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து போராடி வருகிறோம். கழக சட்ட விதிகளை கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதில் முழு மூச்சாக இயங்கி வருகிறோம்.
ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தாலும் என்னுடன் தொடர்பில் உள்ளார். மேலும் பலர் எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களை பொறுத்தவரை அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். அனைவரும் ஒன்றிணைந்தாலே வெற்றி உறுதி. கட்சி விதிகளை மீட்டெடுக்கும்வரை எங்களது சட்டபோராட்டம் தொடரும் என்றார்.
- கூட்டணி மட்டுமின்றி தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இரு கட்சிகளும் விரிவாக ஆலோசித்து உள்ளனர்.
- கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மைதானம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிகளை உறுதிப்படுத்தும் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஏற்கனவே 2021 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. 2024 பாராளுமன்ற தேர்தலில் அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டது.
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை பலமான கூட்டணியுடன் சந்திக்கும் வகையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பே அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியை அமித்ஷா உருவாக்கினார்.
முன்கூட்டியே உருவான இந்த கூட்டணி அரசியலில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவதில் டெல்லி பா.ஜ.க. தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஸ் கோயல் சென்னை வந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது மற்ற கட்சிகளை சேர்ப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
கூட்டணி மட்டுமின்றி தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இரு கட்சிகளும் விரிவாக ஆலோசித்து உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டு இருந்தன. ஆனால் இந்த தேர்தலில் பா.ஜ.க. 35 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி பியூஸ் கோயல் எடப்பாடி பழனிசாமியிடம் தங்கள் கட்சியின் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி குழுப்பிய போது அவர் உறுதியாக எதையும் கூறவில்லை. ஆனால் தனது தலைமையிலான இந்த காலகட்டத்தில் பா.ஜ.க. அதிகமான எண்ணிக்கையில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.
முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அ.ம.மு.க., ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தற்போது அந்த கூட்டணியில் இல்லை. அதேபோல் தே.மு.தி.க.வும் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. எனவே கூட்டணியை வலுப்படுத்துவது மற்றும் உறுதிப்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவுகின்றன.
இதற்கிடையில் கூட்டணியை உறுதிப்படுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது.
பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பிரசார பயணத்தை தொடங்கினார். இந்த பிரசார பயணத்தை பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் (ஜனவரி) 9-ந்தேதி புதுக்கோட்டையில் நிறைவு செய்கிறார். இந்த இரு விழாக்களையும் ஒரு சேர நடத்தவும் இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகிய இருவரையும் அழைக்கவும் முடிவு செய்து இருந்தார்கள்.
ஆனால் பிரதமர் மோடியின் வருகை உறுதியாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு 9-ந்தேதி அமித்ஷா வருகை உறுதியாகி இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மைதானம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்போதைக்கு கூட்டணி கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் சில கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகி இருப்பதாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடப்பதால் எந்தெந்த கட்சிகள் வரும் என்பது கடைசி நேரத்தில்தான் தெரியவரும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.
- டெல்லியில் உள்ள இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நயினார் சந்திக்கிறார்.
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். டெல்லியில் உள்ள இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை குறித்து அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, யாத்திரையின்போது மக்களிடம் இருந்துபெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நிர்மலா சீதாராமனிடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.
யாத்திரையின்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- அந்தமானில் வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார்.
- சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவிஜயபுரம்:
சாவர்க்கரின் புகழ்பெற்ற கவிதையான 'சாகரா ப்ராண்' எழுதப்பட்டு 116வது ஆண்டு நிறைவை ஒட்டி, உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அந்தமான் நிகோபர் தீவுக்குச் சென்றார்.
தெற்கு அந்தமானில் உள்ள பியோத்னாபாத் என்ற இடத்தில் நிறுவப்பட்ட வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார். அதன்பின், சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:
அந்தமான் நிகோபர் தீவுகள் ஒரு தீவுக்கூட்டம் அல்ல. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தவம், தியாகம், அர்ப்பணிப்பு, தேசபக்தியால் உருவான ஒரு புனித பூமி.
நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, வீர சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒருபோதும் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
அவர் தமது காலத்தில் ஹிந்து சமூகத்தில் இருந்த தீமைகளை எதிர்த்து துணிச்சலுடன் போராடினார். சமூகத்தின் எதிர்ப்பு அவருக்கு இருந்தாலும் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தார்.
வீர சாவர்க்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. பிறப்பிலே ஒரு உண்மையான தேசபக்தர்.
சுதந்திரத்துக்கு முன், அந்தமான் நிகோபர் சிறைக்கு கொண்டு வரப்பட்ட நபர், அங்கிருந்து திரும்பி வந்தாலும் அவர்களின் மனம், ஆன்மா அழிக்கப்பட்டு, ஒருபோதும் அசல் வடிவத்திற்கு திரும்ப முடியாது.
ஆனாலும், வீர சாவர்க்கர் தமது வாழ்க்கையின் கடினமான நாட்களை இங்கே கழித்ததால் இந்தியருக்கு ஒரு தீர்த்த ஸ்தலமாக மாறிவிட்டது. இந்த இடம், மற்றொரு சுதந்திர போராட்ட வீரரான நேதாஜியின் நினைவுடனும் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சாவர்க்கர் 1911-ம் ஆண்டு ஸ்ரீ விஜயபுரம் என அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






