என் மலர்
நீங்கள் தேடியது "Sellur raju"
- ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது.
- அ.தி.மு.க. பலமிழக்கவில்லை. தி.மு.க. தான் பலமிழந்து இருக்கிறது.
மதுரை:
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை கூடல் நகர் பகுதியில் கால்வாய் பாலம் மற்றும் கரிசல் குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் இரண்டாம் தளத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று, கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆமை வேகத்தில் மதுரையில் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டப்பணி நடைபெற்று திறந்து வைக்கப்பட்டதால், இணைப்புகள் சரியாக கொடுக்கப்படாமல் ஆங்காங்கே குடிநீர்க் குழாய்கள் அழுத்தம் தாங்காமல் வெடித்து சிதறுகிறது.
முதலமைச்சர் பயத்தில் ஏதேதோ பேசுகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டில் ஆட்சியை நடத்தும் என கூறுகிறார். போதைக் கலாச்சாரம் தமிழகத்தில் தலை விரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது. இப்படி அவர்கள் கூட்டணியில் உள்ள வைகோவே சொல்லி இருக்கிறார்.
அ.தி.மு.க. கூட்டணிக்கு வரக்கூடிய கட்சிகள் குறித்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்கிறார். மக்கள் இந்த ஆட்சியை அகற்ற ஆர்வமோடு இருக்கிறார்கள்.
125 நாட்களாக வேலை உறுதி திட்டத்தை உயர்த்திக் கொடுத்த அமித்ஷாவிற்கு நன்றி சொல்லத்தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். விஜய் கட்சி நடத்துவதற்கு எத்தனையோ விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம். அதை விட்டு விட்டு ஜனநாயகன் படம் வெளியிடுவதற்கு நெருக்கடி என்பது தவறு. ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது.
கூட்டணிப் பலத்தில் தான் தி.மு.க. இருக்கிறது. எங்கள் அம்மா போன்று யாருடைய கூட்டணியையும் எதிர்பாராமல் தனித்துப் போட்டி போட மு.க.ஸ்டாலின் தயாரா?
ரூ. 3 ஆயிரம் கொடுத்தாலும் சரி. கொள்ளை அடித்த 4 லட்சம் கோடி ரூபாயை தேர்தலுக்காக இறக்கினாலும் தி.மு.க. வெற்றிப் பெற முடியாது.
அ.தி.மு.க. பலமிழக்கவில்லை. தி.மு.க. தான் பலமிழந்து இருக்கிறது. முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அதனால் தான் திருப்பரங்குன்றம் அருகே முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகிப் போனதோ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும்.
அமித்ஷா மாபெரும் தலைவர். விஜய் கட்சி மற்றும் அவரது படத்திற்கு நெருக்கடி கொடுப்பது போன்ற வேலை எல்லாம் அவர் செய்ய மாட்டார் என்றார்.
- தமிழகத்தில் உண்மையான விடியலை எடப்பாடி பழனிசாமி தான் கொடுப்பார்.
- கஞ்சா, போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள்
மதுரை:
ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் உண்மையான விடியல் கிடைத்திட எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக மீண்டும் வரவேண்டும். தமிழ்நாடு அமைதியாக இருக்க வேண்டும். போதை கலாச்சாரம் இருக்கக்கூடாது. குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை பாதுகாப்பு இருக்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சி, அனைவருக்கும் சமமான ஆட்சி, அமைய வேண்டும் என்று அன்னை மீனாட்சியிடம் பிரார்த்தனை செய்தேன்.
தமிழகத்தில் உண்மையான விடியலை எடப்பாடி பழனிசாமி தான் கொடுப்பார். எந்த முதலமைச்சரும் சாதிக்காத சாதனையை சாதித்தவர் எடப்பாடி பழனிசாமி. 11 மருத்துவக் கல்லூரியை தொடங்கி சாதனை செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தமிழக மக்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் எப்படி வாழ்ந்தார்களோ அதேபோல வாழ எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார்.
நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டத்தை வைத்து எடை போடக்கூடாது. சினிமா கவர்ச்சிக்கு எப்போதுமே மக்களிடம் மவுசு உண்டு. அமிதாப் பச்சன் வந்தால் கூட அதிக அளவில் கூட்டம் வரும். ஆனால் யார் நல்லாட்சி தருவார்கள் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் .
மதுரையில் 200 கோடி ரூபாய் அளவுக்கு மாநகராட்சியில் தி.மு.க.வினர் கொள்ளையடித்துள்ளனர் இதற்கு தீர்வே இல்லை.
மாநகராட்சி மேயர் இல்லாததால் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் மக்கள் பிரச்சினை தீராமல் உள்ளது . மதுரை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய சொல்லி இருக்கலாம்.
இந்த ஆட்சி 23-ம் புலிகேசி ஆட்சி போல இருக்கிறது. கஞ்சா, போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் அமேசான், சுமேட்டோ, சுகி போன்றவர்கள் வீடுகளில் பொருட்களை கொடுப்பது போல போதைப்பொருளும் வீடுகளுக்கு சப்ளை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளிகள் தாக்கப்படுவது வேதனையளிக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்ததற்கு இதுவே சான்றாக உள்ளது.
அன்றைக்கு காங்கிரஸ்காரர்கள் நாட்டுக்காக சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள். தற்போது அந்த கட்சியில் உள்ளவர்கள் அல்ல. அவர்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் ஆதங்கம் இருக்கத்தான் செய்யும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
- களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச மாட்டேன் என்ற விஜய்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த செல்லூர் ராஜூ.
- நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
மதுரை செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
இங்கே இருக்கும் அதிகாரிகளுக்கு சொல்கிறேன், 2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதும், தவறு செய்யும் அதிகாரிகள், அவர்கள் ஐஏஎஸ் ஆக இருந்தாலும் சரி, எந்த அதிகாரிகளாக இருந்தாலும் சரி சிறைச் சாலை செல்வது உறுதி.
நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
எழுதி வைத்து கொள்ளுங்கள், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர்.
நேற்று வந்த விஜய்க்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
வடிவேலு, நயன்தாரா வந்தால்கூடதான் கூட்டம் கூடும். நடிகர் என்றால் கூட்டம் கூடதான செய்யும். அதற்காக எல்லோரும் எம்ஜிஆர் ஆக மாற முடியாது.
அதிமுக களத்தில் இல்லை என பேச எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்.
அதிமுக களத்தில் இல்லை என பேசுவது முட்டாள் தனமானது. விஜய் நாவை அடக்கி பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- AI மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகின
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் செல்பி ஈடுபப்து போன்ற AI விடியோவை செல்லூர் ராஜு பகிர்ந்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பம் இந்த ஆண்டு அசுர வளர்ச்சி கண்டது. கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாடஜிபிடி, மெட்டா ஏஐ, பெரிப்ளெக்ஸிட்டி ஏஐ, டீப்சீக் என ரக ரகமாக வெகு ஏஐ மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
குறிப்பாக AI மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. அந்த வரிசையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியுடன் செல்பி ஈடுபப்து போன்ற AI விடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "நண்பர்களே இன்றைய அறிவியல் வளர்ச்சி என்னுடைய இதயதெய்வங்களோடு நான் SELFIE எடுப்பதுபோல்..." என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில், "AI -ல் விளையாடும் செல்லூரார், அவ்வளவுதூரம் போய்விட்டு அண்ணாவை சந்திக்காதது நியாயமா? சார்" என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு செல்லூர் ராஜு, "நண்பரே மன்னிக்கவும் தப்புதான்" என்று தெரிவித்துள்ளார்.
- அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதலமைச்சருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது.
- தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க.வின் அடிமைகளாக செயல்படுகிறது.
மதுரை:
மதுரையில் நடந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் ஊழல் நடைபெற்றுள்ளது, நகரமைப்பு பிரிவின் ஊழலுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம். அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்க உள்ளோம். அனுமதி பெற்று குடியிருப்புகள் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் கட்டப்படுகிறது.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் மிக மோசமாக நடைபெறுகிறது. மக்களின் பிரச்சனைகளை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை, மாநகராட்சிக்கு மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் நியமிக்க வேண்டும். தி.மு.க. தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
தி.மு.க. அரசு நான்கே முக்கால் வருடத்தில் மதுரை மக்களுக்கு என்ன செய்தது?, அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. திறந்து வைக்கிறது. தி.மு.க. ஆட்சி வந்தவுடன் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 2 மாதங்களில் முடிவடையும் என சொன்னார்கள்.
ஆனால், கனிமொழி எம்.பி.யாக இருப்பதால் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்துடன் செயல்பட தொடங்கி உள்ளது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என யார் என்ன பேசினாலும் அடுத்து ஆளப்போவது அ.தி.மு.க. மட்டுமே, அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதலமைச்சருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க.வின் அடிமைகளாக செயல்படுகிறது. ஆனால் அ.தி.மு.க.வை அடிமை கட்சி என விமர்சனம் செய்கிறது. ஒரு அடிமை தான் இன்னொரு வரை அடிமை என சொல்லுவார்கள். அதனால் தான் தி.மு.க. கூட்டணி கட்சிகள் எங்களை அடிமை என விமர்சனம் செய்கிறது. அரிதாரம் பூசியவனால் ஆட்சி நடத்த முடியுமா? என எம்.ஜி.ஆரை தி.மு.க. விமர்சனம் செய்தது.
ஆனால், தி.மு.க.வை 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல செய்தவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் மறைந்தும் தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். எம்.ஜி.ஆரின் புகழை பாடாதோர் எவருமுண்டா?, முதலமைச்சர் கூட எம்.ஜி.ஆரை பெரியப்பா என கூறினார். முதலமைச்சரின் பெரியப்பாவை கேலி, கிண்டல் செய்யும் தி.மு.க.வினரை முதல்வர் கண்டிக்க வேண்டாமா? என்றார்.
- விண்ணப்பங்களை கொடுக்காமலேயே தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர்.
- விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 50 சதவீதம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நிறைய வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமாரை சந்தித்து புகார் மனு அளித்தார்.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் இதுவரை 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவத்தை வழங்குவோம் என்று கூறினார்கள், மூன்று முறை வீட்டு கதவை தட்டுவோம் என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சரியான பயிற்சி இல்லை. இதன் காரணமாக வாக்காளர்களுக்குரிய விண்ணப்பபடிவங்கள் அவர்களை சென்று சேரவில்லை. மேலும், விண்ணப்ப படிவங்களை பெற்றவர்கள் குறைந்த அளவிலேயே, அதாவது 40 சதவீதத்திற்கு உள்ளேயே தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். இந்த நிலையில் மேற்கு சட்டமன்ற தொகுதியில் அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுக்குரிய வாக்காளர் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விண்ணப்பங்களை கொடுக்காமலேயே இப்படி தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் பெரிய மோசடி நடந்துள்ளதாக கருதுகிறோம். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம்.
ஆனால் கலெக்டர் தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம் அப்படி ஏதாவது விடுபட்டவர்கள் இருந்தால் அடுத்த மாதம் 4-ந்தேதிக்கு மேல் அதற்குரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்கிறார். அது எப்படி முடியும் அது முடிகிற காரியமா? எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆளும் கட்சியான தி.மு.க. இந்த வாக்காளர் விண்ணப்ப படிவத்தை அதிகளவில் பெற்றுள்ளனர். அவர்களுடைய தலைவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். அப்போது அந்த நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொடுத்து வருகிறோம் என்று கூறுகிறார். அப்படி என்றால் அந்த விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.
எனவே தேர்தல் அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட்டு அனைத்து வாக்காளர்களிடம் அவர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற முடியும். இல்லாவிட்டால் அதில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனையும் மாவட்ட கலெக்டர் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. 2026-ல் ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது.
- அ.தி.மு.க. யாருக்கும் துரோகம் இழைத்தது இல்லை.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மதுரை முனிச்சாலை பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க. 54ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-
31 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், சாமானியர்களுக்கும் பட்டியல் இனத்தவர்க்கும் பதவி கொடுத்து அழகு பார்த்த கட்சி அ.தி.மு.க.
மகளிருக்கும் சம உரிமை கொடுத்து, திறமைக்கேற்ப பதவிக் கொடுத்து அழகு பார்த்த கட்சி அ.தி.மு.க. ஒரு இயக்கத்திலிருந்து இன்னொரு இயக்கம் பிரிவது சகஜம். ஆனால் தி.மு.க.வில் பிரிந்த அ.தி.மு.க. இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாக இருக்கிறது.
எங்கள் பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என ஸ்டாலின் சொல்கிறார்.
வைகை கரையில் சாலைகள் அமைத்து அ.தி.மு.க. ஆட்சியில் சாதனைப் படைத்தோம். தி.மு.க. ஆட்சியில் கலைஞர் நூலகம், ஏறு தழுவுதல் அரங்கம் இதை தான் சாதனையாக மதுரைக்குச் சொல்கிறார்கள்.
170 கோடியில் கோரிப்பாளையம் சந்திப்பு பாலத்தின் திட்டத்தை வடிவமைத்தது அ.தி.மு.க. அரசு. அதனை விரைவுப்படுத்த முடியாமல், தி.மு.க. ஆட்சியில் பாலப்பணி இன்னும் நிறைவடையவில்லை.
மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் ஓராண்டு போராடி, 200 கோடி மாநகராட்சி சொத்து வரி ஊழலை வெளிக்கொண்டு வந்தோம். கல்யாண மண்டபங்களுக்கும் வீடுகளுக்கான சொத்து வரியை விதித்து ஊழல் செய்தது தி.மு.க.
இன்று ஊழல் வழக்கில் மேயர் இந்திராணி ராஜினாமா வரை சென்றுள்ள அவலம் மதுரை மாநகராட்சியில் நடந்து இருக்கிறது. இந்த புகாரில் மேயர் கணவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேயர் ராஜினமா செய்து இரண்டு வாரமாகியும் மதுரையில் புது மேயரை நியமிக்க இயலாமல் திணறுகிறது தி.மு.க. 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக் குழுத் தலைவர் ராஜினமா செய்து 2 மாதங்களாகி விட்டது. 69 தி.மு.க. கவுன்சிலர்கள் இருந்தும், தி.மு.க.வால் ஒரு மேயரைத் தேர்ந்து எடுக்க முடியவில்லை.
இரண்டு அமைச்சர்கள் இருந்தும், மதுரைக்கு மேயரைத் தேர்ந்து எடுக்க துப்பு இல்லாத கட்சியாக தி.மு.க.. இருக்கிறது. பேசாமல் மதுரை மாநகராட்சியை கலைத்து விட்டுச் செல்லுங்கள்.
தி.மு.க. 2026-ல் ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது. நாங்கள் கூட்டணிக்காக அலையவில்லை. அ.தி.மு.க. எந்த காலத்திலும் சூழ்நிலையிலும் யாரையும் கூட்டணிக்கு வம்படியாக அழைத்தது இல்லை.
எங்கள் கொள்கையோடு எங்களுக்கு துணையாக மக்களை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை தூக்கி கொண்டாடுவோம்.
அ.தி.மு.க. யாருக்கும் துரோகம் இழைத்தது இல்லை. நண்பன் என்றால் நண்பன். நண்பனுக்கு உயிரையும் தோளையும் கொடுப்போம்.
ஆனால் அதே தோழன் காதை கடித்தால் தூக்கி காலுக்கு கீழே போட்டு மிதிப்போம். இது தான் அ.தி.மு.க. வரலாறு. இது புரிந்தவர்களுக்கு புரியட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அதிமுக கூட்டத்தில் த.வெ.க. கொடிகளை வைத்திருந்தவர்கள் த.வெ.க.வினர் இல்லை.
- அ.தி.மு.க. டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க. கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க.வினர் கொடிகளுடன் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
இதையடுத்து கூட்டத்தில் த.வெ.க. கொடிகளை வைத்திருந்தவர்கள் த.வெ.க.வினர் இல்லை. அ.தி.மு.க. இளைஞர்கள் என தெரியவந்தது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அ.தி.மு.க. டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க. கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.
அந்த இளைஞர்களைப் பார்த்து "கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என இ.பி.எஸ். பேசினார் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "அதிமுக காரங்க எங்கள் கட்சிக் கொடியவே தூக்க மாட்டாங்க.. இதுல அடுத்த கட்சிக் கொடியைப் பிடித்து ஆட்டுவோமா? அதிமுக தொண்டர்கள் மாற்று கட்சி கொடியை பிடித்ததாக வரலாறே கிடையாது. தவெக கொடியை தூக்கி பிடிக்கும் அளவிற்கு அதிமுகவினர் இழிபிறவிகள் அல்ல" என்று தெரிவித்தார்.
- கரூர் சம்பவத்தில் விஜய் மீது அதிகமாகவே விமர்சனங்கள் வந்துவிட்டன.
- சம்பவம் நடந்தவுடன் உடனடியாக விசாரணை ஆணையத்தை தி.மு.க. அரசு நியமித்தது எப்படி?
மதுரை:
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது மிகுந்த மனவேதனையையும், வயிற்றெரிச்சல், ஐயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலைப் பொறுத்தவரை அவர் புதுமுகம். அதனால் அவரை ஆளாளுக்கு விமர்சனம் செய்யக்கூடாது. ஏற்கனவே கரூர் சம்பவத்தில் விஜய் மீது அதிகமாகவே விமர்சனங்கள் வந்துவிட்டன.
கரூரில் த.வெ.க.வினர் கேட்ட இடத்தில் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. 10 ஆயிரம் பேர் கூடும் இடத்தில் 27 ஆயிரம் பேர் திரண்டதால் தான் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது, இது வருத்தமாக உள்ளது.
எனவே த.வெ.க. தலைவர் விஜய் மாவட்டந்தோறும் பஸ்சில் செல்லாமல் ஒவ்வொரு தொகுதி வாரியாக செல்ல வேண்டும்.
கரூர் சம்பவத்தில் அப்பாவி பெண்களும், குழந்தைகளும் மரணம் அடைந்த துயரத்தில் இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு அரசியல் சதி இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். இத்தனை உயிர்களை காவு கொடுத்த நிகழ்வுக்கு யார் சதி செய்திருந்தாலும் அவர்கள் குடும்பம் விளங்காது.
கரூரில் அதே இடத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய அனுமதி கேட்டபோது, அந்த இடத்தில் நெரிசல் ஏற்படும் என போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர் அனுமதி கொடுத்தனர். அது போல த.வெ.க.வினர் கேட்டபோது அந்த இடத்தில் அனுமதியை மறுத்து வேறு அகலமான இடத்தை அவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் போலீசார் அப்படி செய்யவில்லை. மேலும் விஜய் காலதாமதமாக அந்த பகுதிக்கு வந்துள்ளார். அவரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சம்பவம் நடந்தவுடன் உடனடியாக விசாரணை ஆணையத்தை தி.மு.க. அரசு நியமித்தது எப்படி?
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி 4 வருடமாகி விட்டது. அதனை திறக்க முடியவில்லை.
- ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். அது முடியாது.
மதுரை:
மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள சொக்கநாதபுரம் காளியம்மன் கோவிலுக்கு ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
திறப்பு விழாவிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
நான் அமைச்சராக இருக்கும்போது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தேன். தி.மு.க. அமைச்சர்கள் டிபன் பாக்ஸ்களை கொடுத்து வருகிறார்கள். பத்திரபதிவுத்துறை அமைச்சரின் தொகுதிக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் திட்டங்களை எதுவும் கொண்டு வரவில்லை. ஆனாலும் எங்களது ஆட்சியிலே கொண்டு வந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
புதிதாக மண்டல தலைவர் யாராக இருந்தாலும் மக்கள் பணத்தை சூறையாடாமல் இருந்தால் சரி. முன்னால் இருந்தவர்கள் ரூ.250 கோடியை சுவாகா செய்து விட்டார்கள்.
பொற்கைப் பாண்டியன் வாழ்ந்த மதுரையில் மன்னராட்சி நடக்கிறது. ஒரு திருடனும் வரமாட்டான். குற்றம் செய்தவர்களே மாமன்றத்தை நடத்துவது சரியா?.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி அ.தி.மு.க. விஜயினால் படம் தான் காட்ட முடியும். புயல் மையம் கொண்டுள்ளது என சொல்வார்களே அதே போல எடப்பாடி பழனிசாமி சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் மையம் கொண்டுள்ளனர்.
பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி 4 வருடமாகி விட்டது. அதனை திறக்க முடியவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். அது முடியாது.
கலைஞர் ஆட்சி அமைப்போம் என்று யாரும் சொல்வதில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சி தான் வேண்டும் என அ.தி.மு.க. பற்றிதான் பேசுகிறார்களே தவிர தி.மு.க. பற்றி பேசுவதில்லை. எடப்பாடியார் பொதுச்செயலாளராக இருக்கும் வரை தி.மு.க.வு க்கு வெற்றி எளிது என உதயநிதிக்கு எழுதிக் கொடுத்தவர்கள் தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார் என்றார்.
- நாங்கள் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது மதுரைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம்.
- நாங்கள் யாருக்கும் எஜமானனும், அல்ல யாருக்கும் அடிமையும் அல்ல.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி வருகிற 1-ந்தேதி மதுரை வருகிறார். அவரை வரவேற்க மதுரை மக்கள் தயாராக இருக்கிறார்கள். மதுரையில் தி.மு.க. ஆட்சியில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் டிபன் பாக்ஸ் கொடுத்து வருகிறார். ஒரு அமைச்சருக்கு இதுதான் பணியா? என்று பொதுமக்களே கேவலமாக பேசுகிறார்கள். இன்னொரு அமைச்சர் தனது பதவி இறக்கப்பட்டதால் சைலண்ட் ஆகிவிட்டார். அவர் வருகிற தேர்தலில் நிற்பாரா? நிற்க மாட்டாரா? என்பது தெரியவில்லை. உங்க பொங்க சோறும் வேண்டாம், பூசாரித்தனமும் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.
அரசு நிகழ்ச்சிகளில் 2 அமைச்சர்கள் கலந்து கொள்வதை கூட மக்கள் அசிங்கமாக பார்க்கிறார்கள். மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடுகள் நடந்துள்ளதை ஏன் அமைச்சர்கள் கண்காணிக்கவில்லை. மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி அமைச்சர்கள் இரண்டு பேரும் மாநகராட்சியை கண்காணித்து இருந்தால் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மதுரை மாநகராட்சியில் நடந்துள்ள சொத்துவரி முறைகேடுகளுக்கு தி.மு.க. அமைச்சர்கள் இரண்டு பேருமே காரணம்.
மாநகராட்சியில் நிழல் மேயராக மேயரின் கணவர் இருந்தார். அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் மேயர் இன்னும் பதவி விலகவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நேர்மையான விசாரணை நடக்கும். ஆனால் தவறு செய்தவர்களை விட்டுவிட்டு சம்பந்தமில்லாத நபர்களை விசாரிக்க வேண்டும் என்று போலீசார் அழைக்கிறார்கள், இது ஏற்கத்தக்கது அல்ல. மதுரை மாநகராட்சி மேயர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் எதிர்பார்ப்பாகும். அடுத்து வரும் மாநகராட்சி கூட்டங்களில் மேயர் கலந்துகொண் டால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள். மதுரை மேயர் பதவியில் நீடித்தால் தி.மு.க.வுக்கு தொடர்ந்து கெட்ட பெயர் மக்கள் மத்தியில் ஏற்படும்.
அமைச்சர் மூர்த்தி இன்னும் 6 மாதத்திற்கு பிறகு எங்கு இருப்பார் என்று தெரியாது. அநேகமாக நார்வே, சுவீடன் போன்ற நாடுகளுக்கு அவர் சென்று விட வாய்ப்பு இருக்கும். மத்திய, மாநில நிதியை கொண்டு சாலைகள் போடுவது சாதனை இல்லை. நாங்கள் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது மதுரைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம்.
40 ஆண்டு காலமாக நிறையாத தெப்பக்குளத்தை வைகை தண்ணீர் மூலம் நிரப்பினோம். ஆனால் இப்போது அந்த தடுப்பணையில் உள்ள ஒரு செட்டர் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைந்துள்ளது, இதுவே ஒரு முறைகேடாகும். ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மதுரையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள். அதனை அவர்கள் சொல்ல முடியுமா?
முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் பகுதியில் இந்த தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனை குடித்த பெண்கள் இளநீர் போல தண்ணீர் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த தண்ணீரை தந்தவர் எடப்பாடி பழனிசாமி. தாகம் தீர்த்த அவரை வரவேற்க மதுரை மக்களே தயாராக இருக்கிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பாதை மாறி சென்று விட்டார். திசை தெரியாத காட்டுக்குள் சென்று விட்டு வழி தெரியாமல் தவிப்பது போல தவித்து வருகிறார். வேறு எதுவும் அவரைப் பற்றி சொல்வதற்கு இல்லை. அ.தி.மு.க. எப்பொழுதும் தனது கொள்கையிலிருந்து எள்ளளவும் விலகாது. அது திருமாவளவனுக்கும் தெரியும். கொள்கைகளை கடைபிடிப்பதில் எம்.ஜி.ஆர்., அம்மா வழியில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். நாங்கள் யாருக்கும் எஜமானனும், அல்ல யாருக்கும் அடிமையும் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடி பழனிசாமியின் காரில் செல்லூர் ராஜு ஏற முயன்றார்.
- வேறு காரில் வருமாறு செல்லூர் ராஜுவிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் காரில் செல்லூர் ராஜு ஏற முயன்றபோது அந்த வாகனத்தில் ஏற வேண்டாமென எடப்பாடி பழனிச்சாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. வேறு காரில் வருமாறு எடப்பாடி பழனிச்சாமி கூறியதை அடுத்து செல்லூர் ராஜு வேறு காரில் ஏறி பயணித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இதனையடுத்து செல்லூர் ராஜு மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய செல்லூர் ராஜு, "என் மீது எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிருப்தியும் இல்லை. காரில் இடமில்லாத காரணத்தால்தான் என்னால் அந்த வாகனத்தில் செல்ல முடியவில்லை" என்று விளக்கம் அளித்தார்.






