என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

TVK பற்றி பேச தேவையில்லை: அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி- செல்லூர் ராஜூ
- த.வெ.க. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்.
- நடிகர்கள் எல்லாரும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது.
மதுரை:
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சம்பத்து பகுதியில் ரூ.42 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.
தமிழக வரலாற்றில் குரூப்-2 அரசு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது இதுதான் முதல் முறை. இதன் மூலம் நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசு என்பதை இளைஞர்கள் மத்தியில் எடுத்துக்காட்டி உள்ளது. இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பல லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தி.மு.க. அரசு முழு பொறுப்பு இருக்க வேண்டும்.
அ.தி.மு.க. தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினை விட நிர்வாக திறன் மிக்கவர் என்று மக்களே கருதுகிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை பார்த்து மு.க. ஸ்டாலின் பயப்படுகிறார்.
த.வெ.க. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். அந்த கட்சியில் உள்ள செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் அ.தி.மு.க.வை விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. அவர்கள் மக்கள் மத்தியில் எந்த வகையில் செல்வாக்கு பெற்று இருக்கிறார்கள் என்பதை வருகிற தேர்தல் முடிவு எடுத்துக்காட்டும் எனவே தேவையற்ற அவர்களை பற்றி விமர்சிக்க தேவையில்லை.
எப்போதும் தமிழக அரசியலில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வும் தான் நேரடி போட்டி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இன்று வரை அந்த நிலைதான் இருக்கிறது.எனவே தேர்தல் களத்தில் தி.மு.க.வை நேரடியாக எதிர்க்க அ.தி.மு.க. தயாராகி வருகிறது. இந்த நேரத்தில் மற்றவர்களை பற்றி பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். நடிகர்கள் எல்லாரும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது.
வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து அநாகரிகமாக விமர்சனம் செய்து வருகிறார். அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்வதற்கு ஒரு வரம்பு இருக்கிறது கருணாநிதியின் அரசியல் பண்பை அவரது பேரன் உதயநிதி தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் அரசியல் பண்பாட்டை மீறி தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலினும், உதயநிதியும் விமர்சனம் செய்து வருகிறார்கள் இதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் தட்ட பாடத்தை புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






