என் மலர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு"
- தமிழகத்தில் உண்மையான விடியலை எடப்பாடி பழனிசாமி தான் கொடுப்பார்.
- கஞ்சா, போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள்
மதுரை:
ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் உண்மையான விடியல் கிடைத்திட எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக மீண்டும் வரவேண்டும். தமிழ்நாடு அமைதியாக இருக்க வேண்டும். போதை கலாச்சாரம் இருக்கக்கூடாது. குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை பாதுகாப்பு இருக்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சி, அனைவருக்கும் சமமான ஆட்சி, அமைய வேண்டும் என்று அன்னை மீனாட்சியிடம் பிரார்த்தனை செய்தேன்.
தமிழகத்தில் உண்மையான விடியலை எடப்பாடி பழனிசாமி தான் கொடுப்பார். எந்த முதலமைச்சரும் சாதிக்காத சாதனையை சாதித்தவர் எடப்பாடி பழனிசாமி. 11 மருத்துவக் கல்லூரியை தொடங்கி சாதனை செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தமிழக மக்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் எப்படி வாழ்ந்தார்களோ அதேபோல வாழ எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார்.
நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டத்தை வைத்து எடை போடக்கூடாது. சினிமா கவர்ச்சிக்கு எப்போதுமே மக்களிடம் மவுசு உண்டு. அமிதாப் பச்சன் வந்தால் கூட அதிக அளவில் கூட்டம் வரும். ஆனால் யார் நல்லாட்சி தருவார்கள் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் .
மதுரையில் 200 கோடி ரூபாய் அளவுக்கு மாநகராட்சியில் தி.மு.க.வினர் கொள்ளையடித்துள்ளனர் இதற்கு தீர்வே இல்லை.
மாநகராட்சி மேயர் இல்லாததால் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் மக்கள் பிரச்சினை தீராமல் உள்ளது . மதுரை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய சொல்லி இருக்கலாம்.
இந்த ஆட்சி 23-ம் புலிகேசி ஆட்சி போல இருக்கிறது. கஞ்சா, போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் அமேசான், சுமேட்டோ, சுகி போன்றவர்கள் வீடுகளில் பொருட்களை கொடுப்பது போல போதைப்பொருளும் வீடுகளுக்கு சப்ளை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளிகள் தாக்கப்படுவது வேதனையளிக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்ததற்கு இதுவே சான்றாக உள்ளது.
அன்றைக்கு காங்கிரஸ்காரர்கள் நாட்டுக்காக சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள். தற்போது அந்த கட்சியில் உள்ளவர்கள் அல்ல. அவர்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் ஆதங்கம் இருக்கத்தான் செய்யும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
- எந்த வளர்ச்சியும் இல்லாத மாநிலமாகவும், கடன் மாநிலமாகவும் கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றார்கள்.
- தமிழ்நாட்டின் கடன் தொகை உத்தரப் பிரதேசத்தை விட அதிகமாக உள்ளது.
திருப்பூர் பல்லடத்தில் மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை ஒட்டி நடைபெற்ற ஏற்பாட்டு பணிகளை அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
'எந்த வளர்ச்சியும் இல்லாத மாநிலமாகவும், கடன் மாநிலமாகவும் கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றார்கள். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினின் அயராத உழைப்பால் இன்று இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது' என்று இபிஎஸ், அன்புமணி போன்ற எதிர்க்கட்சிகளின் தமிழ்நாடு கடன் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் இதனைக் குறிப்பிட்டு, உத்தரப் பிரதேசத்தை விட தமிழ்நாட்டின் கடன் அதிகமாக உள்ளது என காங்கிரஸின் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
'இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் நிலுவைக்கடன் உள்ளது. 2010-ல், உத்தரப் பிரதேசத்தின் கடன் தொகை தமிழ்நாட்டின் கடனை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருந்தது. இப்போது, தமிழ்நாட்டின் கடன் தொகை உத்தரப் பிரதேசத்தை விட அதிகமாக உள்ளது.
வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்குப் பிறகு தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் கடன்/மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், இரண்டுமே கோவிட்-க்கு முந்தைய நிலைகளை விட இப்போது அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் தவெக தலைவர் விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- மேற்கு வங்காள மாநிலத்துக்கு மட்டும் இன்னும் தீர்க்கப்படவில்லை.
- 2024-2025-ம் நிதியாண்டில், ஊதியக்கூறுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5,984.03 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மாற்றி புதிய திட்டத்தை 125 வேலை நாட்களுடன் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகள் கடுமையான நடந்து கொண்டன. மசோதாவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிழித்து எறிந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஆனாலும் ஆளும் கட்சி கூட்டணி எம்.பி.க்கள் ஆதரவோடு அதனை நிறைவேற்றிவிட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலும் அளித்து விட்டார். விரைவில் அது சட்டமாக இருக்கிறது.
இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பல மாநிலங்களுக்கு மத்திய அரசு இன்னும் நிதி பாக்கி வைத்திருப்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டுக்கும் நிதி பாக்கி உள்ளது.
இது தொடர்பான விவரங்கள் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் கேட்ட கேள்விகள் மூலம் பதிலாக கிடைத்து உள்ளன.
அந்த எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை மந்திரி கமலேஷ் பஸ்வான் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும், முந்தைய ஆண்டுகளின் ஏற்கத்தக்க நிலுவை பொறுப்புகள் ஏதேனும் இருந்தால், அவை மத்திய அரசாங்கத்தால் முறையாக ஈடு செய்யப்படுகின்றன.
அதன்படி, 2024-2025 நிதியாண்டு வரையில் செலுத்தப்பட வேண்டிய மற்றும் ஏற்கத்தக்க அனைத்து நிலுவை ஊதிய பொறுப்புகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டன. மேற்கு வங்காள மாநிலத்துக்கு மட்டும் இன்னும் தீர்க்கப்படவில்லை.
2024-2025-ம் நிதியாண்டில், ஊதியக்கூறுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5,984.03 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. 2025-2026 நடப்பு நிதியாண்டில் (11-12-2025 நிலவரப்படி), தமிழ்நாட்டுக்கு ரூ.6,497.06 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.
இதில் ஊதியக் கூறுக்காக ரூ.5,836.20 கோடியும், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ரூ.660.86 கோடியும் வழங்கப்பட்டு உள்ளது.
10-12-2025 நிலவரப்படி, தமிழ்நாட்டுக்கு ஊதியப்பணம் தொடர்பான மொத்த நிலுவைத்தொகை ரூ.304.80 கோடி ஆகும். மேலும், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.622.21 கோடியாக உள்ளது. நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்ட இந்த நிலுவைத் தொகையை மாநிலத்துக்கு விடுவிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
இவ்வாறு மந்திரி பதில் தெரிவித்து உள்ளார்.
- தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு கசக்கிறதா திமுக அரசிற்கு?
- அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மாநிலப்பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியிருக்க, திமுக அரசுக்கு மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் அவமானமாக இருக்கிறதா?
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 'தமிழ்நாடு' என்ற பெயர் அழிக்கப்பட்டதற்கு காரணம் என்ன என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"ஆரம்ப காலங்களில் 'தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம்' என்றே அரசுப்பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த நிலையில் தற்போது திமுக அரசு தமிழ்நாடு பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் என்று முழுமையாக எழுதுவதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்? வண்ணப்பூச்சு தீர்ந்துவிட்டதா? அல்லது அரசுக்கு தெரியாமல் வண்ணப்பூச்சு ஒப்பந்ததாரர் ஊழல் செய்துவிட்டாரா? அல்லது போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு என்று எழுதினால் கோடிக்கணக்கில் இழப்புதான் ஏற்பட்டுவிடுமா?
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுத்த பிறகும், திமுக அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் தமிழ்நாடு என்று பெயரைச் சேர்க்க மறுத்து அமைதிகாப்பது ஏன்?. யாருடைய உத்தரவின் பேரில் 'தமிழ்நாடு' பெயர் தவிர்க்கப்படுகிறது? தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு கசக்கிறதா திமுக அரசிற்கு? இந்த பெயர் நீக்கத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா? அல்லது முதலமைச்சர் பொறுப்பேற்பாரா? இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? இதுதான் திமுக அரசு தமிழ்நாடு மண், மொழி, மானம் காக்கும் முறையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!
தமிழ்நாடு என்ற பெயர் ஒவ்வொரு தமிழனின் உயிர் மூச்சு. இச்சுடர்மிகு பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்பதற்காகவே பெருந்தமிழர் சங்கரலிங்கனார் 76 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்தி தன்னுடைய இன்னுயிர் ஈந்தார். கர்நாடகா, கேரளா, தெலுங்கானா புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மாநிலப்பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியிருக்க, திமுக அரசுக்கு மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் அவமானமாக இருக்கிறதா?
போக்குவரத்து கழகப் பெயரிலிருந்து தமிழ்நாடு என்பதை திமுக அரசு நீக்கி இருப்பதன் மூலம் 'தமிழ்நாடு' என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவோம் என்று வம்படியாக அறிவித்தது தற்புகழ்ச்சிக்கானதே தவிர, தமிழ்நாடு என்ற பெயரின் மீதான பற்றுதலினால் அல்ல என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. நாங்கள்தான் தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்ற பெயரையே வைத்தோம் என பொய்ப்பெருமை பேசும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பாரா?
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் பழையபடி தமிழ்நாடு அரசுப்பேருந்துகள் அனைத்திலும் 'தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம்' என்று முழுமையாக எழுத வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், 'தமிழ்நாடு' பெயர் காக்க நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாடு அமைதியான மாநிலமாக, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
- இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாகவும் தமிழ்நாடு இருந்து வருகிறது
த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய் , "வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள். உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். த.வெ.க. சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளது. ஒளி ஒன்று பிறக்கும் அந்த ஒளி நமக்கு வழிகாட்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். நம்பிக்கையுடன் காத்திருங்கள், நல்லதே நடக்கும்" என்று தெரிவித்தார்.
இதனுடைய, தவெக கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் முன்னிலையில் பேசிய ஆற்காடு நவாப் முகமது அலி, "தமிழ்நாடு அமைதியான மாநிலமாக, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாகவும் இருந்து வருகிறது" என்று தெரிவித்தார்.
தவெக பிரச்சார கூட்டங்களில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விஜய் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
- நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
- பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகள் எண்ணிக்கை 2,854-ல் இருந்து 2,520 ஆக குறைந்துள்ளது.
நம் நாட்டில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. இவை தவிர சுமார் 3 ஆயிரம் சிறிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதேநேரம் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக இயங்கி வந்தன.
இந்த கட்சிகளுக்காக தேர்தல் கமிஷன் பல்வேறு விதிமுறைகளை வகுத்து உள்ளன. அவற்றை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் அவ்வப்போது ரத்து செய்தும் வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை நிறைவேற்றாத 334 அரசியல் கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது. இதன்மூலம் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகள் எண்ணிக்கை 2,854-ல் இருந்து 2,520 ஆக குறைந்துள்ளது.
இதுதவிர அங்கீகரிக்கப்பட்ட 6 தேசிய கட்சிகள் மற்றும் 67 மாநில கட்சிகள் உள்ளன. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 29பி மற்றும் 29சி பிரிவுகளின் கீழ் வருமான வரி விலக்கு கோர முடியாது.
இதையடுத்து 2-வது கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை செப்டம்பர் மாதம் தேர்தல் கமிஷன் ரத்து செய்தது. இதில் தமிழகத்தில் 42 கட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஆகமொத்தம் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொங்கு ஈஸ்வரன்
இந்த 42 அரசியல் கட்சிகளில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்ற கட்சி பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்டது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் உள்ளது. திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன் உள்ளார்.

ஜவாஹிருல்லா
ரத்து செய்யப்பட்ட கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சியானது, கடந்த 3 தேர்தல்களில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எனவே அவர்கள் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக கருதப்படவில்லை.

ஜான் பாண்டியன்
இதேபோன்று ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் தேர்தல் கமிஷனின் ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து இவரது கட்சி தேர்தலை சந்தித்து வந்தது. 2021ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. சின்னத்திலும் போட்டியிட்டது.

தமிமுன் அன்சாரி
2016 சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்ட தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் இக்கட்சி போட்டியிடவில்லை.
நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக போட்டியிடாதது உள்ளிட்ட விதிமீறலால் இந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இவ்வாறு 808 கட்சிகளின் பதிவை 2 கட்டங்களாக ரத்து செய்துள்ளதை தொடர்ந்து தற்போது தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளின் எண்ணிக்கை 2,046 ஆக குறைந்திருக்கிறது. அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்து நடவடிக்கை எடுத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தேர்தல் விதிகளின்படி, தொடர்ந்து 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத மற்றும் கணக்கு தாக்கல் செய்யாத 474 பதிவு செய்யப்படாத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை (Registered Unrecognised Political Parties - RUPPs) ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை, தேர்தல் முறையை சீர்திருத்தும் ஒரு தொடர்ச்சியான பணியின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் 2025 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மொத்தம் 808 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
- உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என்ற பிரிவுகளின் அடிப்படையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881 என்பது தான் நெருடுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என்ற பிரிவுகளின் அடிப்படையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26,94,672 மற்றும் இரட்டைப் பதிவுள்ளவர்கள் எண்ணிக்கை 3,39,278 என்பதை ஏற்றுக் கொள்ளலாம். முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881 என்பது தான் நெருடுகிறது. எல்லா அரசியல் கட்சிகளின் தோழர்களும் இந்த எண்ணில் கவனம் செலுத்தவேண்டும்.
இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. மெய்யான நபர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பது தான் நம்முடைய நோக்கம்". எனக் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் 97,37,832 லட்சம் வாக்களர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
- சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் அதிகம் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு 6,41,14, 587 வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 5, 43, 76,755 பேர் உள்ளனர். இடம்பெயர்ந்தோர் பட்டியல் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
தமிழ்நாட்டில் 97,37,832 லட்சம் வாக்களர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் படிவம் வழங்காவதவர்கள், பூத் கமிட்டி வாரியாக இரண்டு வாரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதில் வழங்கலாம். பெயர் விடுபட்டவர்கள் இன்றுமுதல் ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம். வாக்களர் பூத் கமிட்டிகளில் இந்த பட்டியல் இருக்கும், கொடுக்கப்படும்.
2002, 2005ஆம் ஆண்டுகளில் இடம்பெறாதவர்கள் கொடுத்த படிவங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முகவரியின் இருப்பை வைத்தே பட்டியல் தயாரிக்கப்பட்டது. முகவரியில் இல்லாதவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் அதிகம் நீக்கப்பட்டுள்ளனர். நடைமுறைகளின் அடிப்படையிலேயே பெயர்கள் நீக்கப்பட்டன. 12 ஆயிரம் பேர் படிவத்தை திருப்பி அளிக்க விருப்பமில்லை." என தெரிவித்தார்.
- ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் அழிக்கப்பட்டன.
- மனிதர்கள் மன அழுத்தத்தினாலும் பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர்.
கோவை:
'சிந்து சரஸ்வதி நாகரிகம் மாநாடு' கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்றும், நாளையும் நடக்கிறது. இன்றைய மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்து பேசினார். அவர் கூறியதாவது:-
உலக அளவில் நதிகளின் கரைகளில் தான் நாகரிகங்கள் உருவாகின. நதிகள் அழியும்போது நாகரிகங்களும் மறைந்தன. அதேபோல், பாரதத்தின் தொன்மையான நாகரிகமும், சரஸ்வதி நதிக்கரையோரம் தான் உருவானது. காலப்போக்கில் சரஸ்வதி நதி அழியும்போது நாகரிகமும் மறைந்தது. ஆனால் அதன் தாக்கம் நாடு முழுவதும் உள்ளது.
சரஸ்வதி நதிக்கரையோரம் உருவான நாகரிகத்தில், உலகின் பிற நாகரிகங்களைப் போல கட்டுமான கலை, மக்கள் குடியிருப்பு ஆகியவை இருந்தபோதும், இதன் தனித்துவமாக அறிவு சார்ந்த விஷயங்கள் மற்றும் வேதங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் அழிக்கப்பட்டன. இருந்தபோதும், ராமாயணம் மகாபாரதம் ஆகியவற்றின் கருத்துக்கள் பாரதத்தின் அனைத்து பகுதிகளிலும், பல்வேறு இலக்கியங்களிலும் உள்ளது. குறிப்பாக தமிழ் சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் ராமாயணத்தின் சம்பவங்களும் உள்ளன.
இவ்வாறு சரஸ்வதி நதிக்கரையில் உருவான நாகரிகமும் அங்கு உருவாக்கப்பட்ட தத்துவங்களும் மொழிகளைக் கடந்து இனங்களை கடந்து பாரதம் முழுவதும் பரவியுள்ளது. பாரதம் மட்டுமின்றி உலகத்திற்கே அந்த கருத்துக்கள், தத்துவங்கள் இன்று தேவைப்படுகின்றன. இந்த உலகின் அனைத்து படைப்புகளும் ஒன்று என்பது நமது வேதங்களின் அடிப்படையாகும்.
உலக அளவில் இனம், மதம் காரணமாக பல போர்கள் நடைபெறுகிறது. மனிதர்கள் மன அழுத்தத்தினாலும் பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர். தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாக தேசிய குற்ற ஆவணத்தின் விவரப்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மன அழுத்தத்தால் தற்கொலை அதிகரித்து உள்ளது. நாள் ஒன்றுக்கு 65 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைகளின் தலைநகராக தமிழகம் உள்ளது.
அந்த வகையில் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் இவ்வுலகின் அனைத்து உயிர்களும் ஒன்று என்பதை வலியுறுத்தும் பாரதத்தின் உன்னத கலாச்சாரங்களையும், தத்துவங்களையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அதைத்தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் வளர்ச்சியோடு இழந்த நமது கலாச்சாரத்தையும் மறைக்கப்பட்ட தத்துவங்களையும் மீட்டெடுத்து அவற்றுக்கு புது சக்தியை கொடுத்து வருகிறது. நமது நாடு சர்வதேச அளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஆன்மீக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பல தடைகளையும் கடந்து வளர்ந்து வருகிறது.
ஆரியம், திராவிடம் என பலரும் பிரிக்க நினைத்தாலும் அவர்கள் தோற்றுப் போவார்கள். காரணம் அவர்களிடம் இருப்பது பொய்யான கருத்துக்கள் தான். அந்த வகையில் சரஸ்வதி நதி நாகரிகம் மற்றும் அதன் சிறப்பை இது போன்ற மாநாட்டின் மூலம் எடுத்துரைத்து அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா.
- ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும்.
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப பாராளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதாகும்.
இந்தியாவில் ஒரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளானது அந்த மாநிலத்தில் உள்ள மக்கள்தொகையின் அளவுக்கு ஏற்ப வரையறை செய்யப்படுகின்றன. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், கடந்த கால ஆட்சியாளர்கள் வெறுமனே மக்கள்தொகையை கணக்கில் கொள்ளாமல், அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை நிலைநாட்டும் வண்ணம் அரசியலமைப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு தொகுதி மறுசீரமைப்பை தடுத்து நிறுத்தினர்.
ஆனால், தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பை 2026-ம் ஆண்டு நிகழ்த்த உள்ளது.
1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 2026 வரை மாற்றக்கூடாது என்ற திருத்தத்தை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பு சட்டப் பிரிவு 82-ல் சேர்த்தார். இதனால், மக்கள்தொகை அதிகரித்தாலும் புதிய தொகுதிகளை உருவாக்க இயலாது. அதன்பின், 2001-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 25 ஆண்டுகள் ஒத்திவைத்தார். இன்று வரை இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்ற தொகுதிகளின் செயல்பாடு இருந்துள்ளது. தற்போது 25 ஆண்டு காலம் நிறைவுபெறும் தருணத்தில் பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. ஆனால் வட இந்தியாவில் இந்த பிரசாரம் எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். போதுமான கல்வி மற்றும் பகுத்தறிவு இல்லாத சமூகமாக மக்கள் வாழ்ந்த காலத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகவே இருந்தது.
மக்களிடையே 'நாம் இருவர் - நமக்கு ஒருவர்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள்தொகை பெருக்க அளவை குறைத்த முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. இதனால் மனித வளக் குறியீடுகளிலும், தனிமனித பொருளாதார வளர்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் சராசரி கருவள விகிதம் 2.1% ஆக இருந்து தற்போது 1.4% என்கிற அளவில் கட்டுக்குள் இருக்கிறது. அதன்படி, இந்தியாவிலேயே மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எதிர்வரும் 2031-36-ஆம் கால கட்டங்களில் இது மேலும் குறையும் என்று இந்திய புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது. கருவள விகிதம் கட்டுப்படுத்தப்பட்டதால்தான் மக்கள்தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் பொருளாதார விகிதத்தில் தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு தொடக்கம் முதலே தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
தொகுதி மறுசீரமைப்பு என்பதை பற்றி பா.ஜ.க. பேசவே இல்லை என்றும், தி.மு.க. தலைவர் வேண்டுமென்றே இது குறித்த வீண் வாதத்தை கிளப்புகிறார் என்றும், மத்திய அரசின் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் பேசி வருகின்றனர்.
19-9-2023 அன்று பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார். அரசியல் சாசனத்தின் 128-வது திருத்த மசோதா-2023 என பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க வழிவகை செய்கிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பின்னரே இது அமலுக்கு வரும் என்று விளக்கம் அளித்தார்.
அடுத்தாக, 28.05.2023 அன்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் மக்களவையில் 848 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடப்பில் 543 மக்களவை தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில் 848 இருக்கைகளுடன் பாராளுமன்றத்தை அமைப்பதன் பின்னணி என்ன? இதற்கு வலுசேர்க்கும் விதமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்டு தனி பெரும்பான்மையோடு நிலைபெற்ற ஆட்சியை தொடர வேண்டும் என்பதன் அடிப்படை தான் தொகுதி மறுசீரமைப்பின் முழு நோக்கம் ஆகும். இது எப்படி சாத்தியமெனில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் 31 என குறையும், அதே வேளையில் பா.ஜ.க. ஆளும் பீகார், உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை கிட்டதட்ட இரு மடங்காக உயரும்.
2026-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 543 என நிர்ணயிக்கப்பட்டால் தென்னிந்தியாவில் தற்போது உள்ள மாநிலங்களின் இடங்கள் 130 என்பதிலிருந்து 103 என குறையும். மக்களவையில் 23.74% உள்ள தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம், 18.97% ஆக குறையும். தமிழ்நாட்டிற்கான மக்களவை தொகுதிகள் 39ல் இருந்து 31 ஆக குறையும். ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் இடங்கள் 42ல் இருந்து 34 ஆகும். அதேசமயம், அதிக மக்கள்தொகை மற்றும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் பெரும் ஆதாயத்தைப் பெறுகின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இப்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும். எனவே மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளக் கூடாது என்பதை தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

இதை வலியுறுத்தி கடந்த மார்ச் 5-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சில இயக்கங்கள் என 63 அமைப்புகளுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மட்டும் அல்லாமல் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பங்கேற்றன. இதில் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை பங்கேற்கவில்லை.
இதில் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது, தமிழகத்தின் 7.18 சதவிகிதத்தை மாற்றக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 22-ந்தேதி பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள்தொகை 121 கோடி. 2021-ல் நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.
1971-2011 இடைபட்ட காலத்தில் உத்தரபிரதேசத்தில் 138%, ராஜஸ்தானில் 166% மக்கள்தொகை அதிகரித்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75%, கேரளாவில் 56% மட்டுமே அதிகரித்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் சராசரியாக 15 லட்சம் பேருக்கு ஒரு மக்களை உறுப்பினர் இருக்கிறார். இது உத்தரபிரதேசத்தில் 25 லட்சமாக இருக்கிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு நிச்சயம் தீர்வு காணப்படத்தான் வேண்டும். ஆனால், 1952, 1963, 1973-ல் நடைபெற்ற மறுசீரமைப்புபோல அது சுலபமாக இருக்காது என்பது நிச்சயம்.
- உலகின் மக்கள்தொகை அதிகம் இருந்த நாடான சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது.
- 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 715 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருக்கின்றன.
சென்னை:
இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 121 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 977 பேர் இருந்தனர். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 146 கோடியாக உயர்ந்து இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது ஆண்டுக்கு 1.5 சதவீதம் என்ற அடிப்படையில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் இருக்கிறது.
உலகின் மக்கள்தொகை அதிகம் இருந்த நாடான சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது. நாட்டில் இறப்பு விகிதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அதனை விட பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதே மக்கள்தொகை உயர்வுக்கான முக்கிய காரணமாக உள்ளது.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இங்கு பிறப்பு விகிதம் ஆண்டுக்கு, ஆண்டு கடும் சரிவை சந்தித்து வருகிறது.
பிறப்பு விகிதங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
அதன்படி தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 9 லட்சத்து 45 ஆயிரத்து 842 குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள். அதாவது தினமும் சராசரியாக 2 ஆயிரத்து 591 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு, நேற்று வரை பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 928 ஆக இருக்கிறது. அதன்படி சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 138 குழந்தைகள்தான் பிறந்துள்ளனர்.
இன்னும் டிசம்பர் மாதம் முடிய 18 நாட்கள் மட்டுமே இருப்பதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 7 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறக்க வாய்ப்பு இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்தாலும் 8 லட்சத்தை தாண்டுவது சற்று சிரமம்தான் என்று தெரிகிறது.
இந்த எண்ணிக்கையை கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதாவது 6 ஆண்டுகளில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 18 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.3 முதல் 1.5 சதவீதம் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் மட்டும் கடந்த 6 ஆண்டு களில் சராசரியாக ஆண்டுக்கு 3.1 சதவீதம் அளவுக்கு பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டு தமிழகத்தில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 788 குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். 2021-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 875 ஆக குறைந்தது. தொடர்ந்து 2022-ம் ஆண்டில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 361 குழந்தைகளும், 2023-ம் ஆண்டில் 9 லட்சத்து 2 ஆயிரத்து 329 குழந்தைகளும் பிறந்து இருக்கிறார்கள்.
ஆனால் மிக குறைவாக தொடர்ந்து 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 715 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருக்கின்றன. கடந்த 2024-ம் ஆண்டுடன், இந்தாண்டு இதுவரை பிறந்த குழந்தைகள் எண்ணிக்கையை ஒப்பிட்டால் சுமார் 67 ஆயிரத்து 715 குழந்தைகள் குறைவாக பிறந்து இருக்கிறது. இது 8 சதவீதம் சரிவு ஆகும்.
ரிசர்வ் வங்கியும், தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வருவதை தனது ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவலாக சுட்டிக்காட்டி உள்ளது.
அந்த அறிக்கையில் 'கடந்த 2004-ம் ஆண்டு தமிழகத்தில் 1,000 மக்களுக்கு 17 குழந்தைகள் என்ற பிறப்பு விகிதம் பதிவாகி இருந்தது. ஆனால் கடந்த 2024-ம் ஆண்டில் இது 12 என்று கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது.
தமிழகத்தில் இந்த போக்கு தொடர்ந்தால், எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக குறைந்து தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு மாநிலத்தின் வளர்ச்சி தடைபடும். அதேபோல மக்கள்தொகையின் அடிப்படையில்தான் மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதால், தமிழகத்திற்கான பங்கீட்டு தொகை குறையும். ஆனால் அதே நேரத்தில், சரியான கொள்கை திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டால், குறைந்த மக்கள்தொகையுடன் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கும் வாய்ப்பாக இது இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம் முதியோர் விகிதம் அதிகரித்தால் சமூக பாதுகாப்பு செலவுகள் உயர்வு, முதியோர் நலத்திட்டங்களுக்கு கூடுதல் அழுத்தம் போன்ற சவால்களை தமிழக அரசு எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.
- டிட்வா என்ற பெயருக்கு அரபு மொழியில் 'தீவு' என்று அர்த்தம் சொல்லப்பட்டது.
- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.
டிட்வா புயல் (Cyclone Detwah) கடந்த நவம்பர் மாதம் (2025) இலங்கை அருகே உருவாகி, தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று, தமிழகம் உட்பட கடலோரப் பகுதிகளில் கனமழை மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஒரு சக்திவாய்ந்த புயல் ஆகும்.
ஒவ்வொரு புயலும் உருவான பிறகு, அதனை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக பெயர் சூட்டப்படுவது வழக்கம். இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட்டது.
டிட்வா என்ற பெயருக்கு அரபு மொழியில் 'தீவு' என்று அர்த்தம் சொல்லப்பட்டது. ஏமனுக்கு அருகில் உள்ள 'சோகோட்ரா' தீவின் ஒரு பகுதியின் பெயராகக் கூட இது இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. அரபு மொழியில் டிட்வா என்பதற்கு 'அழகான மலர்' என்றும் கூறப்படுகிறது.
டிட்வா புயல் இலங்கை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களை ஏற்படுத்தியது.

இலங்கையில் கடந்த நவம்பர் 16-ந்தேதி முதல் கோர தாண்டவமாடிய டிட்வா புயலுக்கு 638 பேர் பலியாகி விட்டனர். 190-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும், புயல், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களில் சிக்கி 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,000-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

டிட்வா பேரிடர் காரணமாக இலங்கைக்கு சுமார் 700 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சாகர் பந்து திட்டத்தின்கீழ் இந்தியா மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டது.

டிட்வா புயலால் பேரழிவை சந்தித்துள்ள இலங்கைக்கு ரூ.316 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். பொதுவாக வடகிழக்கு பருவமழை என்பது காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னம் போன்றவற்றால் பெய்து வருகிறது.

இலங்கையில் 'டிட்வா புயல் நல்ல மழையை கொட்டிவிட்டு, அடுத்ததாக தமிழக கடலோரப்பகுதிகளில் 28-ந்தேதி பயணத்தை தொடங்கியது. ராமேசுவரம், ராமநாதபுரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், காவிரி டெல்டா பகுதிகளிலும் அதிகனமழை வரையும், தென்மாவட்டங்களில் கன முதல் மிககனமழையும் பெய்தது.
'டிட்வா' புயல் டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தியது. இதனால் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நாகையில் வீடுகளில் புகுந்த மழை வெள்ளம்
சில மாவட்டங்களில் கனமழை, வேறு சில மாவட்டங்களில் அதிகனமழை என கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது.
டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கின. தோட்டக்கலை பயிர்களும் கடும் சேதத்துக்கு உள்ளாகின.

டிட்வா புயல் காரணமாக நவம்பர் இறுதியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் (சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உட்பட) கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது
'டிட்வா' புயல் காவிரி டெல்டா, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழையை கொடுத்தாலும், வடமாவட்டங்கள், உள்மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை கிடைக்கவில்லை. இதனால் நவம்பர் மாதத்தில் இயல்பு அளவான 17.7 செ.மீ.-ல், 14.9 செ.மீ. மழைதான் பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 16 சதவீதம் குறைவு ஆகும். இது நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில், 3-வது மோசமான மழைப்பதிவாக ஆகிவிட்டது.
இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு 12.5 செ.மீ., 2024-ம் ஆண்டு 14 செ.மீ. பெய்தது இதற்கு முன்பு மோசமான மழைப்பொழிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களை சேர்த்து பார்க்கும்போது, இயல்பான மழை அளவான 35.3 செ.மீ.-ஐ விட 8 சதவீதம் அதிகமாக அதாவது, 38.3 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.
சென்னையிலும் நவம்பரில் மோசமான மழைப்பதிவு இருந்துள்ளது. கடந்த 25 ஆண்டு புள்ளி விவரங்களுடன் பார்க்கையில், இது 5-வது மோசமான மழைப்பொழிவாக பார்க்கப்படுகிறது.






