என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu"

    • தொகுதி பங்கீட்டை முன்னெடுக்க டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்தார்.

    நீண்ட நாட்களாக காத்திருந்த காங்கிரஸுக்கு ஆசுவாசம் அளிக்கும் விதமாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் நேற்று முன்தினம் (பிப்.22) தொடங்கியது தி.மு.க.

    தொகுதி பங்கீட்டை முன்னெடுக்க டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது. இந்தக் குழு முஸ்லீம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. முஸ்லீக் லீக் சார்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் தி.மு.க. 2 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து மதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளைக் கோருகிறது. மேலும் ஒரு ராஜ்யசபா இடத்தையும் கோரியுள்ளது. தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த குழுக்களை அமைத்து ஆயத்தமாகி வருகின்றன.

    இந்நிலையில் காங்கிரஸ் 45 இடங்களை கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிய அன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் 45 இடங்களை கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் தி.மு.க. இத்தனை இடங்களை கொடுக்க முன்வர தயங்குகிறது. காரணம் கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தும் அதே வேளையில், தி.மு.க. தனித்துப் பெரும்பான்மை பெறும் வகையில் சுமார் 165-170 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. 

    அதேவேளை காங்கிரஸின் உள் மதிப்பீட்டின்படி, தி.மு.க. 2021 இல் 173 தொகுதிகளில் போட்டியிட்டு, 133 தொகுதிகளில் வெற்றி பெற்று 40 தொகுதிகளில் தோல்வியடைந்தது. பெரும்பாலும் இந்த 40 தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.விடம் தோல்வியடைந்தது. இந்த தோல்வியடைந்த தொகுதிகளில் குறைந்தது 20 இடங்களை தங்களுக்கு ஒதுக்கினால் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இருப்பினும், கடந்த 2021 தேர்தலைப் போலவே 25 இடங்கள் அல்லது அதற்குச் சற்று கூடுதலாக (27-28) வழங்கவே திமுக விரும்புவதால் முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வசதி படைத்தவர்களுக்கே எந்த வகையான இலவசமும் முதலில் போய்ச் சேருகிறது.
    • ஏன் தேர்தல் நெருங்கும் வேலையில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன?

    மின்சார திருத்த விதிகள் 2024 இன் விதி 23 ஐ எதிர்த்து தமிழ்நாடு மின் விநியோக நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவை இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி மற்றும் நீதிபதி விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்திடம் கேள்விகளை அடுக்கிய நீதிபதி காந்த்,

    "இவை அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்வது பொதுநலனுக்கு உகந்ததா? இலவசங்களால் ஒட்டுமொத்த நாடும் ஏற்கனவே... நாங்கள் குறிப்பாக தமிழ்நாட்டைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஒட்டுமொத்த இந்தியா குறித்தும் பேசுகிறோம். நாம் என்ன மாதிரியான கலாச்சாரத்தை வளர்த்து வருகிறோம்? மின்சாரக் கட்டணம் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் இடையே என்ன வேறுபாடு உள்ளது?

    ஒரு நல்ல அரசு என்ற முறையில், விளிம்புநிலை மக்களுக்கு நீங்கள் நிவாரணம் வழங்க விரும்புவது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால், வசதியுள்ளவர்கள் மற்றும் வசதியற்றவர்களுக்கு இடையே எந்தப் பாகுபாடும் காட்டாமல் நீங்கள் (இலவசங்களை) வழங்கத் தொடங்கினால், அது ஒரு வகையான 'திருப்திப்படுத்தும் அரசியல்' ஆகாதா?"

    நீங்கள் வருவாய் உபரி மாநிலமாக இருந்தாலும் கூட, அந்தத் தொகையை சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை மேம்படுத்துவது போன்ற ஒட்டுமொத்த பொதுமக்களின் வளர்ச்சிக்காகச் செலவிடுவது உங்கள் கடமை அல்லவா? அதற்குப் பதிலாக, நீங்கள் தொடர்ந்து உணவு மற்றும் ஆடைகளை விநியோகித்துக் கொண்டே இருக்கிறீர்கள், மக்களும் தேர்தல் நேரத்தில் அனைத்தையும் அனுபவிக்கிறார்கள். இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

    இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமானது என்பது புரிந்துகொள்ளத்தக்கது. கல்வி கற்க வசதியற்ற குழந்தைகள் இருந்தால், அரசு அதை வழங்க வேண்டும். அது அரசின் கடமை. திறமையான ஆனால் மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்ல வசதியற்ற குழந்தைகள் இருந்தால், அரசு அவர்களுக்கு உதவ வேண்டும். ஆனால், வசதிகளை அனுபவிக்கக்கூடிய நிலையில் இருக்கும், அனைத்து வாழ்வாதாரங்களும் கொண்ட வசதி படைத்தவர்களுக்கே எந்த வகையான இலவசமும் முதலில் போய்ச் சேருகிறது. மாநில அரசுகள் தங்களது இதுபோன்ற கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது? என்று நினைக்கிறோம். 

    சமீபத்தில் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்களை நாம் பார்த்தோம். ஏன் தேர்தல் நெருங்கும் வேலையில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன? அனைத்து அரசியல் ஆளுமைகள், தலைவர்கள், கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். இப்படி இலவசங்களை தொடர்ந்து கொடுத்துவந்தால் அது நாட்டின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். ஒரு சமநிலை இருக்க வேண்டும். இந்த இலவசங்கள் எவ்வளவு நாள் நீடிக்கும்?

    மாநிலங்கள் நிதிப்பற்றாக்குறையில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும், மக்களுக்கு இத்தகைய பண விநியோகங்களைச் செய்து வருவதுதான் எங்களது கவலை. அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? ஏன் அந்தப் பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்காக அர்ப்பணிக்கக்கூடாது? சாலைகள், நீர்ப்பாசனம், மின்சாரம் என நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதற்கான நீண்டகால வளர்ச்சி திட்டத்தை உருவாக்கலாம். 

    மக்கள் சுயமாக சம்பாதித்து, கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான வேலைவாய்ப்பு வழிகளை அரசு உருவாக்க வேண்டும்.  இலவச உணவு, இலவச எரிவாயு, இலவச மின்சாரம் என அனைத்தையும் கொடுக்கத் தொடங்கி... நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிலேயே பணத்தையும் செலுத்தினால், பிறகு மக்கள் ஏன் வேலை செய்யப் போகிறார்கள்? தங்களுக்குத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்துவிடும் என்று தெரிந்த பிறகு, அவர்கள் எங்கிருந்து வேலையைக் கற்றுக்கொள்வார்கள்? நாம் இப்படித்தான் தேசத்தைக் கட்டமைக்கிறோமா?" என கேள்வி எழுப்பினார். 

    தொடர்ந்து தமிழ்நாடு அரசின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 

    • காலனித்துவ கால "மெக்காலே மனநிலையை" மாற்றும் நோக்கிலான சீர்திருத்தத்தை தமிழகச் சமூகம் ஏற்றுக்கொண்டது.
    • திமுகவின் எதிர்ப்பு அரசியல் இயல்பானதுதான்

    தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைமீதான நிலைப்பாடு என்ன என்பதை இந்தியா முழுவதும் அறிவர். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இக்கொள்கையை ஏற்றால்தான் கல்விநிதி என ஒருசில நிதிகளையும் பிடித்தம் செய்துவைத்துக்கொண்டு விடுவிக்க மறுத்து வருகிறது மத்திய அரசு.

    இதுதொடர்பாக பலமுறை திமுக தலைவர்களுக்கும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே வார்த்தைபோர் நிலவியுள்ளது. அதன் விளைவுதான் தற்போது நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த எம்.பி. கமல்ஹாசனின் உரையும். தற்போதுவரை இது தொடர்கிறது. என்ன நிகழ்ந்தாலும், நிதியே ஒதுக்காவிட்டாலும் திமுக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

    இந்நிலையில், மாநிலம் முழுவதும் மேற்கொண்ட பயணங்களின் அடிப்படையில், தமிழ்நாடு மக்கள் பன்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும், திமுகதான் அதை அரசியலாக்குகிறது எனவும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். திமுகவின் இந்த எதிர்ப்பு அரசியல் இயல்பானதுதான் என்றும், பன்மொழி அறிவு என்பது புதிய உலகின் ஒரு ஆயுதம் என்றும் தெரிவித்துள்ளார். 

    • 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வழக்கைத் தாக்கல் செய்தது.
    • மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் மற்றும் மத்திய அரசு நடத்திய சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வி

    தமிழ்நாடு, கர்நாடகா இடையே நீண்ட காலமாக நிலவும் பெண்ணையாறு நதி நீர் விவகாரத்தில் தீர்வு காண, ஒரு மாதத்திற்குள் நடுவர் மன்றத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு அதிகாரப்பூர்வ அரசிதழில் முறையான அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாதத்திற்குள் தீர்ப்பாயத்தை அமைக்க உத்தரவிட்டது.

    மேலும், தமிழ்நாட்டின் புகாரை மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிணக்குகள் சட்டம், 1956-ன் பிரிவு 5-ன் கீழ் தீர்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்கவும் உத்தரவிட்டது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணைகள் மற்றும் தடுப்பணைகளைக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    தமிழ்நாடு அரசு அந்த மனுவில், குறிப்பாக மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் மற்றும் மத்திய அரசு நடத்திய சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பூர்வமாகத் தீர்ப்பாயம் அமைப்பதே தீர்வாகும் என நீதிமன்றம் முடிவு செய்தது.

    கர்நாடக அரசு மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டுவது மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீரைத் திசைதிருப்பும் பணிகளை மேற்கொள்வது, கீழ்நிலை மாநிலமான தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையைப் பாதிப்பதாகக் கூறி 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இந்த வழக்கைத் தாக்கல் செய்தது. 

    • மத்திய அரசின் இப்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாடு கொண்டாட எதுவுமில்லை.
    • டிரெக்கிங், கோபுரம் என வெற்று அறிவிப்புகளை தந்து ஏமாற்றுகிறது பாஜக அரசு

    பாஜகவிற்கு சித்தாந்த ரீதியாக சிம்ம சொப்பனமாக தமிழ்நாடு இருப்பதால், தமிழர்கள் மீது பாஜக கொண்டுள்ள வன்மம் தீராது என்பதை இந்த ஒன்றிய பட்ஜெட் நிரூபித்து விட்டது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

    பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தேர்தல் நடக்கும் மாநிலங்களைக் கவர பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறார்கள்!

    எவ்வளவு அறிவிப்புகளைச் செய்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு விழாது என்பதை தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்

    ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு அவர்களின் அடிமைகளுக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்!

    வழக்கமாக ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சமயத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் மாநிலங்கள் கொண்டாடக்கூடிய அம்சங்கள் இருக்கும். ஆனால், ஒன்றிய பாஜக அரசின் இப்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாடு கொண்டாட எதுவுமே இல்லை. பாஜகவிற்குச் சித்தாந்த ரீதியில் சிம்மசொப்பனமாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். தமிழர்கள் மீது பாஜக கொண்டிருக்கும் வன்மம் ஒருபோதும் தீராது என்பதை மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நிரூபித்துவிட்டது.

    தமிழ்நாடு என்கிற பெயரே இல்லாத பட்ஜெட்டை கடந்த காலங்களில் தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசு, அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த முறைப் பெயருக்காவது தமிழ்நாடு என்ற வார்த்தையைச் சேர்த்துவிடுவது என்று குறியாக இருந்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதுவும் பெயரளவு அறிவிப்புகள்தான். தமிழ்நாட்டிற்கென பிரத்தியேகமான சிறப்புத் திட்டங்கள் எதையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

    கடந்த காலத்தில் பீகார் மற்றும் ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு திட்டங்களை அள்ளி வழங்கியது ஒன்றிய பாஜக அரசு. குறிப்பாக 'பீகார் பட்ஜெட்டா!' என சொல்லும் அளவிற்கு, வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு 11 ஆயிரம் கோடி, மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க 26 ஆயிரம் கோடி, பெகல்பூர் மின் நிலைய திட்டத்திற்கு 21 ஆயிரம் கோடி எனச் சுமார் 70 ஆயிரம் கோடிக்குச் சிறப்புத் திட்டங்களை அறிவித்தது மோடி அரசு. ஆனால், இப்போதும் தமிழ்நாட்டை வழக்கம் போலவே புறக்கணித்திருக்கிறார்கள்.

    மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 41 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற நமது நீண்ட காலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மோடி குஜராத் முதலமைச்சராக இருக்கும்போது, 50 சதவிகித வரிப் பகிர்வு கேட்டுப் போராடினார். அவர் பிரதமர் ஆன பிறகு அதனைச் செயல்படுத்த மறுக்கிறார்.

    விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான சமக்ரா சிக்ஷா நிதி 3,548 கோடி ரூபாய், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல்ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி போன்றவற்றை விடுவிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

    கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பற்றி அறிவிப்பும் இடம்பெறவில்லை. அமெரிக்காவின் வரிவிதிப்பால் பல்லாயிரம் கோடி இழப்பை சந்தித்திருக்கும் திருப்பூர் ,கோவை தொழிற்துறையை மீட்பதற்கு ஆக்கப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை. தேர்தல் நடக்கும் மாநிலங்களை கவருவதற்காக பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. நாட்டின் பொருளாதாரத்திற்கு 9 விழுக்காடு பங்களிப்பைச் செய்யும் தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு வெறும் 4 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதால் ஆண்டுக்குச் சுமார் ரூ. 5,000 கோடி நிதி இழப்பு ஏற்படும்.

    பொதிகை மலையில் டிரெக்கிங், பழவேற்காட்டில் பறவைகளைக் கண்காணிக்க மூன்று புதிய கோபுரங்கள் அறிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒன்றிய அரசின் அறிவிப்பா? ஆட்சியைத் தாங்கி பிடிக்கும் பீகாருக்கும் ஆந்திராவுக்கு வாரிக் கொடுப்பார்கள். ஆட்சி அமைக்கக் கூடிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்தால் ஆயிரம் கோடிகளில் திட்டங்களை அறிவிப்பார்கள். ஆனால், தேர்தல் நடக்கும் காலத்தில்கூட அள்ளிக் கொடுக்க மனம் இல்லாமல் டிரெக்கிங், கோபுரம் என வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு ஏமாற்றப் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்.

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் மதுரையில் தொழில் வழித்தடம், தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா, மதுரையிலிருந்து கொல்லம் நவீன தேசிய நெடுஞ்சாலை, சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும், புதிதாக 7 ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்றெல்லாம் சொன்னார்கள். அவையெல்லாம் என்ன நிலையில் இருக்கிறது என சொல்வார்களா?

    பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தியப் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையில் இருக்கும். ஆனால், ஞாயிற்றுக் கிழமை ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் பங்குச்சந்தைகள் செயல்பட்டன. அதன் விளைவு என்ன தெரியுமா? பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஒன்றிய பட்ஜெட்டில் பலனே இல்லை என்பதைப் பங்குச் சந்தையே பறைசாற்றிவிட்டது.

    தமிழ்நாட்டை முழுவதுமாக புறக்கணித்த பட்ஜெட்டை வெட்கமேயில்லாமல் வரவேற்று அறிக்கைவிடுகிறார் அடிமை பழனிசாமி. சொல்வதற்கு ஒன்றுமேயில்லாமல் தொடர்ந்து 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள நிதி அமைச்சருக்கு வாழ்த்துகள் என்று அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி.

    அதிமுகவோ பாஜகவோ எத்தனை முகமூடிகளை அணிந்து வந்தாலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல இனி எப்போதும் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாது. இதனை உணர்ந்து கொண்டதால்தான் ஒன்றிய பட்ஜெட்டில்கூட தமிழ்நாட்டை வஞ்சித்திருக்கிறார்கள். பட்ஜெட்டில் தமிழ்நாட்டை ஒன்றும் செய்யாமல் வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு அவர்களின் அடிமைகளுக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்தார். 

    • மோடி சென்னைக்கு வந்ததும் சூரியன் மறைந்துவிட்டது.
    • திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றமுடியவில்லை. சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறுகிறார்கள்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் அனைவரும் வரவேற்றுப் பேசிய நயினார் நாகேந்திரன்,

    "மோடி சென்னைக்கு வந்ததும் சூரியன் மறைந்துவிட்டது. தே.ஜ.கூட்டணி கூட்டம் நடக்கிறது; சூரியன் இல்லவே இல்லை. இந்த இயக்கம் மாபெரும் இயக்கம். ஆட்சி மாற்றம் நிச்சயம் உறுதி. அதற்காக வேலையை பிரதமர் மோடியும், இபிஎஸ்-ம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றமுடியவில்லை. சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை ஒழிக்க வேலை நடந்துகொண்டிருக்கிறது.

    11 மருத்துவ கல்லூரிகளை தமிழ்நாட்டிற்கு தந்துள்ளார்கள். 11 வந்தே பாரத் ரயில்கள் தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளார். இந்த 11 ஆண்டுகளில் ரூ. 14 லட்சம் கோடி தமிழ்நாட்டிற்கு நிதி அளித்துள்ளார்" என தெரிவித்தார். 

    • முதலிடத்தில் உத்தரபிரதேச மாநிலம் 77 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது.
    • தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், விளையும் 74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    சென்னை:

    ஒரு பொருளின் தரம், அதன் உற்பத்தி முறை மற்றும் சிறப்பம்சங்கள் அந்த இடத்தின் மண், காலநிலை அல்லது அங்கு வாழும் மக்களின் பாரம்பரியத் திறமையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும்போது அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இது ஒரு பொருளின் பூர்வீகத்தை உலகிற்குப் பறைசாற்றும் முத்திரையாகச் செயல்படுகிறது. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும்போது, அது உண்மையான இடத்திலிருந்து வந்த தரமான பொருள்தான் என்பதற்கு இது சான்றாக அமைகிறது.

    இந்த புவிசார் குறியீடு விவசாயம், கைவினை, உணவு, இயற்கை மற்றும் கைத்தொழில் சார்ந்த பொருட்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் புவிசார் குறியீடு என்பது ஒரு மண்ணின் பாரம்பரியத்தையும், அந்த மக்களின் உழைப்பையும் அங்கீகரிக்கும் உலகளாவிய கவுரவம் ஆகும். இது போலித் தயாரிப்புகளிடம் இருந்து உண்மையான உள்ளூர் உற்பத்தியாளர்களை காக்கும் ஒரு கேடயமாகவும் திகழ்கிறது.

    அந்த வகையில் புவிசார் குறியீடு பெறுவதில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், விளையும் 74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. சமீபத்தில் உறையூர் பருத்திச் சேலை, கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை, நாமக்கல் கல்சட்டி, தூயமல்லி அரிசி, அம்பாசமுத்திரம் சொப்புச் சாமான்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றன.

    இதுவரை புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற 74 பொருட்களில் கைவினை பொருட்கள் பிரிவில் 38 பொருட்களுக்கும், உணவுப் பொருட்கள் பிரிவில் 9 பொருட்களுக்கும், உற்பத்திப் பொருட்கள் பிரிவில் 3 பொருட்களுக்கும், விவசாயப் பொருட்கள் பிரிவில் 24 பொருட்களுக்கும் கிடைத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை புள்ளி விவரங்களாக தெரிவித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் வரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருந்த நிலையில், கடந்த 21 மாதங்களில் 16 பொருட்களுக்கு மேலும் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த புவிசார் குறியீடு மாநிலத்தின் செழுமையான பாரம்பரியம், திறமையான கைவினைத்திறன் மற்றும் விவசாய சிறப்பை பிரதிபலிக்கிறது. அத்துடன் புகழ்பெற்ற கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் முதல் தனித்துவமான விவசாய விளைபொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் வரை, புவியியல் குறியீடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் தனித்துவமான அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுகின்றன.

    இதன் மூலம் புவிசார் குறியீடு பெறுவதில் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உத்தரபிரதேச மாநிலம் 77 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது.

    • இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஆணையர்/சுற்றுலா மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம்
    • தமிழ்நாடு வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் விசாகன், தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக மாற்றம்

    தமிழ்நாட்டில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவில், தொழில்நுட்ப கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஆணையர்/சுற்றுலா மேலாண்மை இயக்குனராகவும்,

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனராக இருந்த கிறிஸ்துராஜ், தமிழ்நாடு மாநில வாணிப கழக மேலாண்மை இயக்குனராகவும், தமிழ்நாடு வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் விசாகன், தொழில்நுட்பக் கல்வி இயக்குனராகவும், சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் செயலாளர் உமா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் ஆகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் செயலாளர் ரத்னா வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை கூடுதல் செயலாளர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



     


    • நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக கூறப்பட்டது.
    • தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. .

    பீகாரில் நகைக்கடைகளில் பெண்கள் முகத்தை மூடி வர தடை விதிக்கப்பட்டது. அதே போல் உ.பி. வாரணாசியிலும் ஹிஜாப் அணிந்து வர நகைக்கடைகள் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே, தமிழகத்தில் நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடை சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

    ஆனால் இது தவறான தகவல் என தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. 

    இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், "நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை - தமிழ்நாட்டில் அல்ல!

    'பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்யமாட்டோம்' என்று நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக வதந்தி பரவி வருகிறது.

    ஆனால், நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடை என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் உண்மையல்ல. சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் அல்ல. தவறான தகவலைப் பரப்பாதீர்!" என்று கூறப்பட்டுள்ளது. 

     

    • 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    • எப்.சி. புதுப்பிக்க முடியாமல் ஏறத்தாழ 30 ஆயிரம் லாரிகள் கடந்த ஒரு மாதகாலமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    நாமக்கல்:

    15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரி, பஸ்களுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் (எப்.சி.) ரூ.2,500 இருந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி அனைத்து வாகனங்களுக்கும் தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தியது.

    அதன்படி 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரிகள் மற்றும் பஸ்களுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் ரூ.12,500 ஆகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஏறத்தாழ 10 மடங்கு வரை தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் உயர்ந்து இருப்பதால், லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் சான்றிதழை புதுப்பிக்காமல் வைத்து உள்ளனர். இதனால் ஒன்றிரண்டு பழைய லாரிகளை வைத்து தொழில் செய்து குடும்பத்தை நடத்தி கொண்டு இருக்கும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து சம்மேளன நிர்வாகிகள் கூறியதாவது:-

    தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை மற்ற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் நிறுத்தி வைக்க வேண்டும் என மாநில போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    ஏறத்தாழ 10 மடங்கு வரை தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் உயர்ந்து இருப்பதால், ஒரு லாரி வைத்து தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் எப்.சி. புதுப்பிக்க முடியாமல் ஏறத்தாழ 30 ஆயிரம் லாரிகள் கடந்த ஒரு மாதகாலமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    எனவே லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உயர்த்தப்பட்ட எப்.சி. கட்டணத்தை குறைக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தமிழகம் முழுவதும் ஏற்கனவே போதிய லோடு கிடைக்காமல் ஆயிரக்கணக்கில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், எப்.சி. கட்டண உயர்வால் மேலும் 30 ஆயிரம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது லாரி உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

    • டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் செப். 12-ந்தேதி பதவியேற்பு விழா நடைபெற்றது.
    • கடந்த 2004 முதல் 2007 வரை தமிழக பா.ஜ.க. தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார்.

    இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு செப்.9-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

     

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். பாராளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த எம்.பி.க்களும் வாக்களித்தனர்.

     

    இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து மகாராஷ்டிர ஆளுநராக இருந்த அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.

     

    டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் செப். 12-ந்தேதி பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    பதவி விலகிய ஜெகதீப் தன்கரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். கடந்த ஜூலை 21-ந்தேதி துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த அவர், அதன் பிறகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்று, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

     

    சி.பி.ராதாகிருஷ்ணன் முழு விவரம்:

    தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் 1957-ம் ஆண்டு மே 4-ந்தேதி பிறந்தார். 16-வது வயதில் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தார். 1974-ம் ஆண்டில் பாரதிய ஜன சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க. செயலாளராக பதவி வகித்தார். கடந்த 1998, 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் கோவை தொகுதியில் இருந்து 2 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டில் ஐ.நா. சபைக்கான இந்திய குழுவில் இடம் பெற்றார்.

    கடந்த 2004 முதல் 2007 வரை தமிழக பா.ஜ.க. தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார். அப்போது சுமார் 19,000 கி.மீ தூரத்துக்கு ரத யாத்திரை நடத்தினார்.

    நதிகள் இணைப்பு, தீவிரவாத ஒழிப்பு, பொது சிவில் சட்டம், போதை ஒழிப்பு ஆகியவற்றுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். கடந்த 2016-ல் கொச்சியில் செயல்படும் தென்னை நார் வாரியதலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2023-ல் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அப்போது தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார். 2024-ல் மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது துணை ஜனாதிபதியாக அவர் பதவியேற்று உள்ளார்.

    துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சுமதி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தமிழகத்தில் இருந்து 3 பேர் புதிதாக பதவியேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனையும் சேர்த்து இதுவரை 15 பேர் துணை ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இந்த பதவியை அலங்கரித்துள்ளனர்.

    கடந்த 1952 முதல் 1962 வரை சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், கடந்த 1984 முதல் 1987 வரை வெங்கட்ராமன் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த நிலையில், தற்போது தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் இப்பதவிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2030-ம் ஆண்டு செப்டம்பர் வரை அவர் பதவியில் நீடிப்பார்.

    அரசியல் வாழ்க்கையை தாண்டி சி.பி.ராதாகிருஷ்ணன் கல்லூரி காலத்தில் டேபிள் டென்னிஸில் சாம்பியனாகவும், ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் மற்றும் கைப்பந்து அவருக்கு பிடித்தமான விளையாட்டுகளாகும்.

    • தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு கசக்கிறதா திமுக அரசிற்கு?
    • அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மாநிலப்பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியிருக்க, திமுக அரசுக்கு மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் அவமானமாக இருக்கிறதா?

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 'தமிழ்நாடு' என்ற பெயர் அழிக்கப்பட்டதற்கு காரணம் என்ன என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

    "ஆரம்ப காலங்களில் 'தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம்' என்றே அரசுப்பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த நிலையில் தற்போது திமுக அரசு தமிழ்நாடு பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் என்று முழுமையாக எழுதுவதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்? வண்ணப்பூச்சு தீர்ந்துவிட்டதா? அல்லது அரசுக்கு தெரியாமல் வண்ணப்பூச்சு ஒப்பந்ததாரர் ஊழல் செய்துவிட்டாரா? அல்லது போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு என்று எழுதினால் கோடிக்கணக்கில் இழப்புதான் ஏற்பட்டுவிடுமா?

    இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுத்த பிறகும், திமுக அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் தமிழ்நாடு என்று பெயரைச் சேர்க்க மறுத்து அமைதிகாப்பது ஏன்?. யாருடைய உத்தரவின் பேரில் 'தமிழ்நாடு' பெயர் தவிர்க்கப்படுகிறது? தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு கசக்கிறதா திமுக அரசிற்கு? இந்த பெயர் நீக்கத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா? அல்லது முதலமைச்சர் பொறுப்பேற்பாரா? இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? இதுதான் திமுக அரசு தமிழ்நாடு மண், மொழி, மானம் காக்கும் முறையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!

    தமிழ்நாடு என்ற பெயர் ஒவ்வொரு தமிழனின் உயிர் மூச்சு. இச்சுடர்மிகு பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்பதற்காகவே பெருந்தமிழர் சங்கரலிங்கனார் 76 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்தி தன்னுடைய இன்னுயிர் ஈந்தார். கர்நாடகா, கேரளா, தெலுங்கானா புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மாநிலப்பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியிருக்க, திமுக அரசுக்கு மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் அவமானமாக இருக்கிறதா?

    போக்குவரத்து கழகப் பெயரிலிருந்து தமிழ்நாடு என்பதை திமுக அரசு நீக்கி இருப்பதன் மூலம் 'தமிழ்நாடு' என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவோம் என்று வம்படியாக அறிவித்தது தற்புகழ்ச்சிக்கானதே தவிர, தமிழ்நாடு என்ற பெயரின் மீதான பற்றுதலினால் அல்ல என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. நாங்கள்தான் தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்ற பெயரையே வைத்தோம் என பொய்ப்பெருமை பேசும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பாரா?

    ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் பழையபடி தமிழ்நாடு அரசுப்பேருந்துகள் அனைத்திலும் 'தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம்' என்று முழுமையாக எழுத வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், 'தமிழ்நாடு' பெயர் காக்க நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    ×