என் மலர்
நீங்கள் தேடியது "சிபி ராதாகிருஷ்ணன்"
- பிரமாண்ட வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. கட்சியினரும் சென்னை குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.
- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
சென்னை:
துணை ஜனாதிபதியாக சி.பி.ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. 2 முறை அந்த நிகழ்ச்சி தள்ளிப்போனது. இந்தநிலையில் முதல் முறையாக நாளை அவர் சென்னை வருகிறார்.
அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. கட்சியினரும் சென்னை குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.
மாலை 5 மணி அளவில் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஹண்டே தலைமை தாங்குகிறார். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகிக்கிறார்.
மத்திய மந்திரி எல்.முருகன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பாராட்டு உரை வழங்குகிறார்கள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், ஜோதிமணி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர், ஐசரி கணேஷ், இயக்குனர் பாக்கியராஜ், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், டாக்டர் சுதா சேஷையன், டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். முடிவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
முன்னதாக நாளை காலை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிக்கும் விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
- காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
- 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ராமேசுவரம்:
காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா நாளை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையடுத்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன், காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும் மத்திய மாநில உளவுத்துறை, பாதுகாப்பு துறை உயர் மட்ட அதிகாரி குழு ஆலயம் விடுதியில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், தமிழ் சங்கமம் நிறைவு விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை மாலை 3:30 மணி அளவில் மண்டபத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, அங்கிருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை வந்தடைந்து, ஒரு மணி நேரம் நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
பின்னர் மீண்டும் சாலை மார்க்கமாக சென்று மண்டபம் ஹெலிபேட் தளத்தில் இருந்து 5 மணிக்கு புறப்பட்டு செல்கிறார். துணை குடியரசு தலைவர் சாலை மார்க்கமாக வரும் போது மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபத்திலிருந்து ராமேசுவரம் வரையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டு, குடியரசு துணை தலைவர் நிகழ்ச்சி மேடையை வந்தடைந்த உடன் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும்.
அதேபோல் மீண்டும் அவர் புறப்பட்டு செல்லும் போது போக்குவரத்து நிறுத்தப்படும் என்பதால் பொதுமக்கள் தங்களது பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளதாகவும், 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் துணை குடியரசு தலைவர் வருகையையொட்டி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து டிரோன்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
- விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள்.
- விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.
கே.கே.நகர்:
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (29-ந்தேதி, திங்கட்கிழமை) புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலமாக திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று அங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். இங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்லும் வகையில் அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் திருச்சி விமான நிலையத்தில் இயக்குனர் ராஜூ மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் திலீப் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருச்சி விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள்.
அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய வாகன நிறுத்தம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்தில் முனைய நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் உடமைகளை சோதனை செய்து வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து பயணிகளின் உடைமைகள் அதிநவீன ஸ்கேனர் கருவின் மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட பின்பு முனையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதுகாப்பானது நாளை மறுநாள் (30-ந்தேதி) வரை தொடரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையை முன்னிட்டு ராணுவ விமானம் தரையிறங்கி ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
- டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் செப். 12-ந்தேதி பதவியேற்பு விழா நடைபெற்றது.
- கடந்த 2004 முதல் 2007 வரை தமிழக பா.ஜ.க. தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார்.
இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு செப்.9-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். பாராளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த எம்.பி.க்களும் வாக்களித்தனர்.

இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து மகாராஷ்டிர ஆளுநராக இருந்த அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் செப். 12-ந்தேதி பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி விலகிய ஜெகதீப் தன்கரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். கடந்த ஜூலை 21-ந்தேதி துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த அவர், அதன் பிறகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்று, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் முழு விவரம்:
தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் 1957-ம் ஆண்டு மே 4-ந்தேதி பிறந்தார். 16-வது வயதில் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தார். 1974-ம் ஆண்டில் பாரதிய ஜன சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க. செயலாளராக பதவி வகித்தார். கடந்த 1998, 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் கோவை தொகுதியில் இருந்து 2 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டில் ஐ.நா. சபைக்கான இந்திய குழுவில் இடம் பெற்றார்.
கடந்த 2004 முதல் 2007 வரை தமிழக பா.ஜ.க. தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார். அப்போது சுமார் 19,000 கி.மீ தூரத்துக்கு ரத யாத்திரை நடத்தினார்.
நதிகள் இணைப்பு, தீவிரவாத ஒழிப்பு, பொது சிவில் சட்டம், போதை ஒழிப்பு ஆகியவற்றுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். கடந்த 2016-ல் கொச்சியில் செயல்படும் தென்னை நார் வாரியதலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2023-ல் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அப்போது தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார். 2024-ல் மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது துணை ஜனாதிபதியாக அவர் பதவியேற்று உள்ளார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சுமதி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தமிழகத்தில் இருந்து 3 பேர் புதிதாக பதவியேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனையும் சேர்த்து இதுவரை 15 பேர் துணை ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இந்த பதவியை அலங்கரித்துள்ளனர்.
கடந்த 1952 முதல் 1962 வரை சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், கடந்த 1984 முதல் 1987 வரை வெங்கட்ராமன் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த நிலையில், தற்போது தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் இப்பதவிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2030-ம் ஆண்டு செப்டம்பர் வரை அவர் பதவியில் நீடிப்பார்.
அரசியல் வாழ்க்கையை தாண்டி சி.பி.ராதாகிருஷ்ணன் கல்லூரி காலத்தில் டேபிள் டென்னிஸில் சாம்பியனாகவும், ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் மற்றும் கைப்பந்து அவருக்கு பிடித்தமான விளையாட்டுகளாகும்.
- ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு வேறு சில வலுவான காரணங்கள் இருந்திருக்கலாம் என பேச்சுகள் எழுந்தன.
- தன்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார் என்றும் செய்தி பரவியது.
இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி அன்று திடீரென ராஜினாமா செய்தது தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

அவரது ராஜினாமா கடிதத்தில் "உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக" தான் விலகுவதாகக் குறிப்பிட்டிருந்தார். எனினும், அவரது திடீர் முடிவு பல ஊகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது.
ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு அவரது உடல்நலக்குறைவைத் தாண்டி, வேறு சில வலுவான காரணங்கள் இருந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பேசப்பட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் தன்கரிடம் சமர்ப்பித்தன.

இதனை ஜெகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்தது. ஊழல் ஒழிப்பு குறித்து அரசு வேறு வழியில் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தன்கரின் இந்த நடவடிக்கை, அரசுடன் அவருக்கு பிளவு ஏற்பட்டதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஆளும் கட்சி தன்கர் மீது அவநம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரத் தயாரானதாகக் கூறப்பட்டது. இதிலிருந்து தப்பிக்கவே அவர் ராஜினாமா முடிவை எடுத்ததாகவும் பரவலாக பேசப்பட்டது.
ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முக்கிய மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கவில்லை. இது தன்கரை அவமதிக்கும் விதமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

பீகார் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமாரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வந்து அவருக்குத் துணை ஜனாதிபதி பதவியை அளிக்கும் திட்டம் ஆளும் கட்சிக்கு இருந்தது என்றும், அதற்காகவே தன்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார் என்றும் செய்தி பரவியது.
இதற்கிடையே, ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
துணை ஜனாதிபதிக்கான தேர்தல்:
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், முன்னாள் மக்களவை உறுப்பினர் மற்றும் மகாராஷ்டிரா ஆளுநர் ஆவார்.
இவருக்கு எதிராக, இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான பி.சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார். இதில், சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஜூலை 21 அன்று ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பிறகு, செப்டம்பர் 12 அன்று சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.
சர்ச்சைக்கிடமாக ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது உயர் அரசியலமைப்புப் பதவியான மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
- சர்வதேச மாநாட்டு மையத்தையும், தேசியக் கொடிக்கான 100 அடி உயர கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கிறார்.
- 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் 73,527 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படும்.
டிச.29ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 2021, 2022, 2023 & 2024 ஆம் ஆண்டுகளுக்கான 30வது ஆண்டு பட்டமளிப்பு விழா, டிசம்பர் 29, 2025 திங்கட்கிழமை அன்று, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.
இந்திய துணைக் குடியரசுத் தலைவரும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சி.பி. ராதாகிருஷ்ணன், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையை நிகழ்த்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும், 2500 பேர் அமரக்கூடிய சர்வதேச மாநாட்டு மையத்தையும், தேசியக் கொடிக்கான 100 அடி உயர கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கிறார்.
இந்த 30வது பட்டமளிப்பு விழாவில், 746 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்படும். 2021 ஆம் ஆண்டு முதல் முதலிடம் பிடித்த 191 பேருக்கும், 2022 ஆம் ஆண்டு முதல் 191 பேருக்கும், 2023 ஆம் ஆண்டு முதல் 192 பேருக்கும், 2024 ஆம் ஆண்டு முதல் 186 பேருக்கும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் பட்டம் மற்றும் தங்கப் பதக்கங்கள் நேரில் வழங்கப்படும். மொத்தம், 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் 73,527 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தாய், தந்தை, குரு, தெய்வமாக அரசியலமைப்பு உள்ளது.
- ஜனநாயகத்தின் மீதான நமது நம்பிக்கையை உலகிற்கு மீண்டும் புரிய வைத்தது.
அரசியலமைப்பு சட்ட தினம் பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முதலாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிலையில் தனது உரையை தமிழ் மொழியில் தொடங்கினார். அவர் பேசியதாவது:-
தாய், தந்தை, குரு, தெய்வமாக அரசியலமைப்பு உள்ளது. நமது அரசியலமைப்பு அரசியலமைப்பு சபையில் நமது அன்னை பாரதத்தின் சிறந்த தலைவர்களால் வரைவு செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது சுதந்திரத்திற்காகப் போராடிய மில்லியன் கணக்கான நமது நாட்டு மக்களின் கூட்டு ஞானம், தியாகம் மற்றும் கனவுகளை உள்ளடக்கியது.
சிறந்த அறிஞர்கள், வரைவுக் குழு மற்றும் அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்ற நுண்ணறிவு மிக்க சிந்தனைகளை வழங்கினர். அவர்களின் தன்னலமற்ற பங்களிப்பு பாரதத்தை இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக மாற்றியது. நமது அரசியலமைப்பு அறிவு மற்றும் வாழ்ந்த அனுபவம், தியாகங்கள், நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளிலிருந்து பிறந்தது. நமது அரசியலமைப்பின் ஆன்மா பாரதம் ஒன்று, அது என்றென்றும் ஒன்றாக இருக்கும் என்பதை நிரூபித்துள்ளது.
370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, 2024 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல்களின் போது, அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களித்தது ஜனநாயகத்தின் மீதான நமது நம்பிக்கையை உலகிற்கு மீண்டும் புரிய வைத்தது.
சமீபத்தில் நடைபெற்ற பீகார் தேர்தல்களில், குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான பெண்களின் வாக்களிப்பு, நமது தாய் பாரத ஜனநாயகத்தின் கிரீடத்தில் மற்றொரு விலைமதிப்பற்ற வைரத்தைச் சேர்த்துள்ளது. அரசியலமைப்பு சபையின் பெண் உறுப்பினர்களின் பங்களிப்புகள் ஒப்பிடமுடியாதவை என்றார்.
- துணை ஜனாதிபதி அங்கிருந்து சாலைமார்க்கமாக மீண்டும் கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.
- தடை செய்யப்பட்ட நேரத்தில் தடையை மீறி டிரோன்களை பறக்கவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கோவை:
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வர உள்ளார்.
அப்போது அவருக்கு விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதனையடுத்து துணை ஜனாதிபதி விமான நிலையத்தில் இருந்து 6.30 மணிக்கு சாலை மார்க்கமாக கோவை பிளிச்சி ஒன்னிபாளையம் ஸ்ரீ எல்லை கருப்புராயன் கோவிலுக்கு செல்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் 10,008 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து துணை ஜனாதிபதி அங்கிருந்து சாலைமார்க்கமாக மீண்டும் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் இரவு 9.40 மணிக்கு விமானம் மூலம் ராஜ்பூர் சென்றடைகிறார்.
துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாவட்டத்தில் ஒன்னிபாளையம் கருப்புராயன் கோவில் சுற்றுவட்டார பகுதிகள், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு 8 மணிவரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட நேரத்தில் தடையை மீறி டிரோன்களை பறக்கவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே துணை ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக மாநகர அளவில் 500 போலீசாரும், புறநகர அளவில் 1000 போலீசாரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும்.
- தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
விழாவில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
- தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாக இன்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
இதற்காக நேற்று மாலை மதுரை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இதேபோல் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார்.
நேற்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டார். பின்னர் இரவு மதுரையில் அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கினார்.
இந்நிலையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கு தங்கிருப்பதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக அவரை நேரில் சந்தித்து உரையாடினார். அப்போது துணை ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசை முதலமைச்சர் வழங்கினார்.
அவருடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி உடன் இருந்தனர்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்! என்று தெரிவித்து உள்ளார்.
- நாளை காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்கிறார்.
- முதல்வர் ஸ்டாலின் இரவில் புறப்பட்டு நாளை இந்த குருபூஜை விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
தமிழகம் வந்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூரில் நடந்த பாராட்டு விழாவுக்கு பின் கோயம்பத்தூர் விமானம் நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு கோவிலில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பொற்றாமரைக்குளம் உள்பட பிரகாரங்களில் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
நாளை காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, நாளை மதியம் 12 மணியளவில் மீண்டும் டெல்லி செல்கிறார். இன்று தென்காசி, நெல்லையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் நாளை இந்த குருபூஜை விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
- எம்.ஜி.ஆர். போல மக்களிடத்திலே செல்வாக்கு பெற்ற தலைவர் என்று சொன்னால் எனக்கு தெரிந்து யாரும் இல்லை.
- தொடர்ந்து உழைத்தால் தொடர்ந்து உயரலாம்.
திருப்பூர்:
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா திருப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
எல்லோரோடும் இணைந்து பணியாற்றுகின்ற ஒரு பெரிய வாய்ப்பை இறைவன் எனக்கு தந்திருக்கிறான். தி.மு.க.வோடும் பணியாற்றி இருக்கிறேன். அ.தி.மு.க.வோடும் பணியாற்றி இருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் நான் முதன்முதலாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நான் சார்ந்த இயக்கத்தினுடைய கவுன்சிலர்களே ஒட்டுமொத்த பாராளுமன்றத்தில் ஒருவர் கூட இல்லை.
அன்றைக்கு கம்யூனிஸ்ட் சகோதர கவுன்சிலர்களோடும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான். அதனால்தான் என்னவோ என்னை கட்சி அரசியலில் இருந்து இறைவன் விலக்கி வைக்க வேண்டும் என்று நினைத்து விட்டான் போலும். எதுவுமே நம்முடைய முடிவிலே மட்டும்தான் நம்முடைய பயணம் தொடர்கிறதா என்று கேட்டால் என்னைப் பொறுத்தளவில் நிச்சயமாக இல்லை.
நாம் ஒரு திசையில் பயணிப்போம் என்று நினைப்போம். அந்த திசையை நோக்கி சென்று கொண்டிருப்போம். அதே தான் நம்முடைய முழு வாழ்வும் என்கின்ற நிலை இருக்கும். ஆனால் கால சூழலும் இறைவனுடைய விருப்பமும் வேறாக இருக்கும். பங்களாதேஷ்க்கு எக்ஸ்போர்ட் செய்து கொண்டிருந்த நேரத்தில் நான் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று நினைக்கவே இல்லை. அரசியல் ஈடுபாடு என்பது எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருந்தது.
பள்ளியிலே படிக்கின்ற போது மாணவர் தலைவனாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன். அவினாசி சுந்தரமூர்த்தி நாயனார் அருள் எனக்கு இல்லாமல் போயிருந்தால் நான் இந்த இடத்திலே உங்கள் முன்பாக நிற்பதற்கான வாய்ப்பே நிச்சயமாக சத்தியமாக இல்லை.
என்னுடைய ஜாதகத்தை ஒருவர் பார்த்து சொன்னார். நீ இரண்டு முறையாவது பாராளுமன்ற உறுப்பினர் ஆவாய் என்று. அவரது வாழ்க்கை முழுவதும் தொழில் ஜோசியம் அல்ல. அவர் அரசியலில் ஒரு பொறுப்பிலே இருக்கிறார். அவர் சொன்னதும் உடனே எனக்கு சிரிப்பே நீக்கவில்லை. நான் சார்ந்து இருக்கிற இயக்கத்திலே நான் ஒரு முறை கவுன்சிலர் ஆனாலே பெரியது என்று சொன்னேன். இன்றைக்கு அவர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் சொன்ன வாக்குப் பலித்திருக்கிறது. காங்கயத்தை சேர்ந்த நாவிதர் ஒருவர் எனது ஜாதகத்தை பார்த்து விட்டு நீங்கள் எந்த காரணத்தை கொண்டும் அரசியலை விட்டு விலகி விடாதீர்கள் என்றார். அரசியலில் ஏற்றத்தாழ்வுகள் வரத்தான் செய்யும்.
எம்.ஜி.ஆர். போல மக்களிடத்திலே செல்வாக்கு பெற்ற தலைவர் என்று சொன்னால் எனக்கு தெரிந்து யாரும் இல்லை. வாழ்க்கையில் ஒருவன் பிறந்து விட்டான் என்று சொன்னால் அவன் இறக்கின்ற வரை உழைக்க வேண்டும் என்பதுதான். நான் என்னுடைய தகப்பனாரோடு பல நேரங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருப்பேன். அவர் சொன்னது ஒன்று என்னுடைய மனதில் என்றைக்கும் ஆழமாக பதிந்திருக்கிறது. அவர் ஒருமுறை என்னிடத்தில் சொன்னார். எவ்வளவு வசதி வந்தாலும் எவ்வளவு அதிகாரம் உன்னிடத்தில் வந்தாலும் சாப்பிடுகிறவரை நீ ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இறைவன் உனக்கு தருகின்ற உணவு உழைக்காமல் வரக்கூடாது. ஒருவர் தலைவராக உயர்கிறார் என்று சொன்னால் அவரிடத்தில் ஏதாவது ஒரு பண்பு இருந்தால் மட்டும்தான் அவர் தலைவராக உருவாக முடியும். நான் சார்ந்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மிக எதிரானது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இப்பொழுது தான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல . ஆனால் கலைஞர் கருணாநிதி இடத்தில் எனக்கு ஒன்று பிடிக்கும். எந்த நேரத்திலும் உழைப்பை நிறுத்தாத ஒரு தலைவர் . தோல்வியைப் பற்றி துவண்டு விடாமல் அவர் தொடர்ந்து உழைத்தார். கடுமையாக முயற்சிக்காமல் யாராலும் உயர்ந்த இடத்திற்கு வர முடியாது.
தொடர்ந்து உழைத்தால் தொடர்ந்து உயரலாம். குறிக்கோளை நிர்ணயம் செய்து கொண்டு அதை நோக்கி பயணம் செய்ய வேண்டும், சத்தியமும் தர்மமும் அந்த பயணத்தில் இருக்க வேண்டும். அடுத்தவரை வீழ்த்துவதை விட தான் உயர வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.
திருப்பூர் பின்னலாடைக்கு எத்தனையோ சரிவுகள் வந்துள்ளது. ஆனால் இன்றைய சரிவு நம் கையில் இல்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன நினைக்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏற்றுமதி இதைவிட 2 மடங்காகும் நாள் விரைவில் வரும். அதுவரை நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று பேசினார்.






