என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy Airport"

    • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அடையாள பட்டையை அணிந்து முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகில் சென்றார்.
    • அவர் மீது சந்தேகப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து அவரது அடையாள அட்டையை கேட்டனர்.

    கே.கே. நகர்:

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை சந்திப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    விஜய் வருகையையொட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபர் ஒருவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அடையாள பட்டையை அணிந்து முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகில் சென்றார். அவர் மீது சந்தேகப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து அவரது அடையாள அட்டையை கேட்டனர்.

    அப்போது அவர் கழுத்தில் இருந்து அடையாள அட்டை இல்லாமல் வெறும் கழுத்து பட்டை மட்டும் அணிந்து விஜயை அருகில் சந்திப்பதற்காக வந்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து அந்த பட்டையை பறித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பினர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

    • 180 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறால் ஓடுதள பாதையில் நிறுத்தப்பட்டது.

    180 பயணிகளுடன் இன்று காலை 4.45 மணிக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுதள பாதையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

    விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். 

    • விமான நிலைய வாகன நிறுத்தம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கே.கே. நகர்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய வாகன நிறுத்தம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விமான நிலையத்தில் முனைய நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் சோதனை செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து பயணிகளின் உடைமைகள் ஸ்கேனர் கருவின் மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட பின்பு முனையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இது வருகிற 20-ந் தேதி வரை தொடரும் என தெரிகிறது.

    திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் விமான நிலைய இயக்குனர் ஞானேஸ்வரராவ் தேசிய கொடி ஏற்றி வைக்க உள்ளார். தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் மோப்பநாய் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    • சோதனை செய்தபோது ஹைட்ரோபோனிக் என்ற போதை பொருள் கடத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பப்பட்டது.
    • பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் போதைப்பொருட்கள், தங்கம், அரிய வகை உயிரினங்களை கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

    திருச்சி விமான நிலையத்திற்கு பேங்காங்கில் இருந்து நேரடி விமான சேவை இயக்கப்பட்டபோது அதிக அளவிலான போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    தற்போது பேங்காங்கில் இருந்து நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போதை பொருள் கடத்தல் குறைந்து இருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.

    அப்போது அந்த விமானத்தில் பேங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சிக்கு பயணம் செய்த பயணி ஒருவரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பொருட்கள் இருந்ததை கண்டறிந்து அதனை சோதனை செய்தபோது ஹைட்ரோபோனிக் என்ற போதை பொருள் கடத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 9.82 கோடி இருக்கும் என தெரிகிறது. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணியை கைது செய்து அவரிடம் தொடர்பு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடமைகளை மீண்டும் சோதனை செய்தபோது அவர் தனது உடமையில் மறைத்து அரிய வகை உடும்புகளை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சோதனைக்கு பின்பு அந்த உடும்பானது மீண்டும் கோலாலம்பூருக்கு அனுப்புவதா என்பது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை.
    • உடமையில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் குருவிகளாக செல்பவர்கள் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கடத்த இருந்த 16.5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிக அளவிலான போதை பொருட்களும் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சந்தேகத் திற்கிடமான வகையில் வந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவர் ரூ.9 கோடி மதிப்பிலான 9 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற போதைப் பொருளை தனது உடமையில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட வழங்கப்படவில்லை என பயணிகள் புகார்.
    • விமான நிறுவன நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக கூறி பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சியில் இருந்து துபாய்க்கு செல்ல வேண்டிய விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அதிகாலை 4 மணிக்கு புறப்பட இருந்த விமானம், 6 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட வழங்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், விமான நிறுவன நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக கூறி பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சம்பந்தப்பட்ட விமானம் 113 பயணிகளுடன் ரன் வேயில் சிறிது தூரம் புறப்பட்டு சென்று தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கட்டணம் குறைவாக இருந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • பெங்களூருவிற்கான புதிய விமான சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமான விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் மட்டுமே வழங்கி வந்தது.

    இதில் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலை இருந்து வந்தது. இதனை தவிர்க்கும் வகையில் பயணிகள் மாற்று விமான நிறுவனங்களின் மூலம் சேவைகளை வழங்கிட கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் கடந்த வாரம் தினசரி ஒரு சேவையை தொடங்கியது. இதில் கட்டணம் குறைவாக இருந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதனிடையே திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ நிறுவனம் மட்டும் சேவை வழங்கி வந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வாரத்திற்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விமானம் இயக்க முடிவு செய்தது.

    இதனைத் தொடர்ந்து இந்த சேவையானது இன்று காலை திருச்சியில் இருந்து பெங்களூருக்கு 6.30 மணிக்கு புறப்பட்டு காலை 7:45 மணிக்கு பதிலாக முன்னதாகவே காலை 7.10 மணிக்கு சென்றது. மீண்டும் இந்த விமானம் பெங்களூருவில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு இரவு 7:45 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூருவிற்கான புதிய விமான சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    • விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரிடம் தீவிர சோதனை செய்தனர்.

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதும், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.

    இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரிடம் தீவிர சோதனை செய்தனர்.

    இதில் அந்த பயணி தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் யார்? போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு உள்ள தொடர்பு? இந்தியாவில் அவற்றை எங்கெங்கு சப்ளை செய்ய திட்டமிட்டிருந்தார் என பல கோணங்களில் கிடுக்குப்பிடி விசாரணை நடக்கிறது.

    ஏற்கனவே கடந்த 1-ந்தேதி பாங்காக்கில் இருந்து மலேசியா வழியாக திருச்சிக்கு வட்ந்ஹ விமானத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    அந்த பெண் பயணியை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து வந்த மூன்று விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • பயணிகள் கொண்டு வந்த உடமைகளை அதிநவீன ஸ்கேனர் கருவி மூலம் சோதித்தனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், உள்நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து வந்த மூன்று விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். குறிப்பாக அவர்கள் கொண்டு வந்த உடமைகளை அதிநவீன ஸ்கேனர் கருவி மூலம் சோதித்தனர்.

    இதில் சுமார் 25 பயணிகளிடம் இருந்து அவர் கொண்டு வந்த உடமைகளில் மறைத்து எடுத்து வந்த சுமார் 7.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.3.75 கோடி ஆகும். மேலும் இதுகுறித்து முழு தகவல்களும் விசாரணை நிறைவு பெற்ற பிறகு அதிகாரிகள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • திருச்சி விமானநிலையத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
    • கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து விமான நிலைய மருத்துவர்கள் குழுவினர் இன்று நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,

    நாடு முழுவதும் உருமாறிய ஒமைக்ரான் பிஎஃப்7 வகை கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணைக்குழுமம் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி திருச்சி விமானநிலையத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

    கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து விமான நிலைய மருத்துவர்கள் குழுவினர் இன்று (24-ந்தேதி) நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். இதேபோல மத்திய அரசு உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்று காலை 10 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
    • பயணி தனது உடலில் பேஸ்ட் வடிவில் ரூ.46.37 லட்சம் மதிப்பிலான 846 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது நவீன ஸ்கேனர் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை, பெங்களூர், ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்கள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

    அந்த வகையில் கடந்த வாரம் ரூ.8 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் ஒரு பயணியிடமும், ரூ.41.65 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் மற்றொரு பயணியிடமும் என மொத்தமாக ரூ.49.65 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர் தனது உடலில் பேஸ்ட் வடிவில் ரூ.46.37 லட்சம் மதிப்பிலான 846 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது நவீன ஸ்கேனர் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தவிர வியாபாரிகளாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், குருவிகள் என பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • முத்துலிங்கம் என்ற பயணி கொண்டு வந்த உடைமைகளை சோதனையிட்டபோது தங்க நிறத்தில் சாயம் பூசப்பட்டு இருந்த லுங்கியை கண்டுபிடித்தனர்.
    • அதிகாரிகள் லுங்கியில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்தனர். அதில் சுமார் 128 கிராம் எடையிலான தங்கம் இருந்தது.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தினசரி வாடிக்கையாகி விட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 வெவ்வேறு சம்பவங்களில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அந்த சோதனையில் முத்துலிங்கம் (வயது 46) என்ற பயணி கொண்டு வந்த உடைமைகளை சோதனையிட்டபோது தங்க நிறத்தில் சாயம் பூசப்பட்டு இருந்த லுங்கியை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அந்த பயணி கொண்டு வந்த லுங்கியை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அதனை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்திய போது அதில் தங்கத்தை சாயம் போல் மாற்றி நவீன உத்தியை கையாண்டு நூதன முறையில் பூசப்பட்டு இருந்தது உறுதியானது.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த லுங்கியில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்தனர். அதில் சுமார் 128 கிராம் எடையிலான தங்கம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.6 லட்சத்து 51 ஆயிரம் என மதிப்பிடப்பட்டது.

    தொடர்ந்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த விமான பயணி முத்துலிங்கத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×