என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை இன்று தொடங்கியது
- கட்டணம் குறைவாக இருந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பெங்களூருவிற்கான புதிய விமான சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமான விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் மட்டுமே வழங்கி வந்தது.
இதில் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலை இருந்து வந்தது. இதனை தவிர்க்கும் வகையில் பயணிகள் மாற்று விமான நிறுவனங்களின் மூலம் சேவைகளை வழங்கிட கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் கடந்த வாரம் தினசரி ஒரு சேவையை தொடங்கியது. இதில் கட்டணம் குறைவாக இருந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ நிறுவனம் மட்டும் சேவை வழங்கி வந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வாரத்திற்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விமானம் இயக்க முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து இந்த சேவையானது இன்று காலை திருச்சியில் இருந்து பெங்களூருக்கு 6.30 மணிக்கு புறப்பட்டு காலை 7:45 மணிக்கு பதிலாக முன்னதாகவே காலை 7.10 மணிக்கு சென்றது. மீண்டும் இந்த விமானம் பெங்களூருவில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு இரவு 7:45 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவிற்கான புதிய விமான சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.






