search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெகதீப் தன்கர்"

    • மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • இந்த விழாவில் நேரிலும், நேரலையிலும் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர்.

    கோயம்புத்தூர்:

    உலகின் மிகப் பிரம்மாண்டமான மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    ஈஷாவில் 30-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது.

    சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

    இந்த விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்துக் கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.


    இந்நிலையில், ஈஷாவில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

    ஈஷா மகா சிவராத்திரி விழா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    திரையரங்க வரலாற்றில் முதல் முறையாக ஈஷா மகா சிவராத்திரி விழா பி.வி.ஆர். ஐநாக்ஸ் (PVR Inox)திரையங்குகளில் மார்ச் 8-ம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே, பாட்னா, அகமதாபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கான்பூர், நொய்டா, லக்னோ, அலகாபாத், டேராடூன் உட்பட 35 பெருநகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட PVR Inox திரையரங்குகளில் மகா சிவராத்திரி விழா நேரலை ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்ட காட்சி நேரம் வரை இவ்விழா ஒளிபரப்பு செய்யப்படும். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாளை புதுச்சேரி வருகிறார்.
    • துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி, புதுச்சேரியில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாளை புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி பல்கலைகழகம் செல்லும் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின் கடற்கரை சாலையில் உள்ள அரசு விடுதியில் தங்குகிறார். மறுநாள் காலை அரவிந்தர் ஆசிரமம் மற்றும் மணக்குல விநாயகர் கோவிலில் சாமிதரிசனம் செய்கிறார். அதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் நடராஜன் கோவிலுக்கு சென்று நடராஜனை தரிசனம் செய்கிறார்.

    இந்நிலையில், துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி, புதுச்சேரியில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் செல்லும் சாலை, மற்றும் தங்கும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

    • எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து கிண்டலடித்தார்.

    புதுடெல்லி:

    சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர்போல மிமிக்ரி செய்து கிண்டல் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எம்.பி.க்கள் கண்ணியத்தைக் காக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு வலியுறுத்தினார்.

    இந்நிலையில், எனது பதவியை அவமதித்தால் பொறுத்துக் கொள்ள முடியாது என துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ஜகதீப் தன்கர் கூறுகையில், காங்கிரஸ் 138 ஆண்டுகள் பழமையான கட்சி என கூறுகிறீர்கள். உங்கள் அமைதியும், கார்கேயின் அமைதியும் எனது காதில் எதிரொலிக்கிறது. என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஒருவர் மிமிக்ரி செய்து கிண்டல் செய்கிறார். ஒருவர் அதனை வீடியோ பதிவு செய்கிறார்.

    என்னை தனிப்பட்ட முறையில் அவமதித்தால் சகித்துக் கொள்வேன். ஆனால், துணை ஜனாதிபதி பதவி மற்றும் எனது சமூகத்தை அவமதிப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த அவையின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது என குறிப்பிட்டார்.

    • சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து பாராளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர்போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்வது போன்ற வீடியோ வைரலானது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பாதுகாப்பு மீறலுக்குப் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரியும் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 141 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    மாநிலங்களவை உறுப்பினர்களை அவைத் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர், பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயலால் ஜெகதீப் தன்கர் கடும் அதிருப்தியில் உள்ளார்.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அது கண்ணியம் மற்றும் மரியாதையை பேணும்வகையில் இருக்க வேண்டும். அதுதான் நாம் பெருமைப்படும் பாராளுமன்ற பாரம்பரியம். அதை அவர்கள் நிலைநாட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், துணை ஜனாதிபதியை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியிருக்கிறார்.

    • ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.
    • இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

    குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி நடக்கிறது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, மேற்கு வங்காள மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் போட்டியிடுவார் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

    முன்னாக டெல்லியில் இன்று பிரதமர் மோடியை ஜெகதீப் தன்கர் சந்தித்து பேசினார். இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர், எங்கள் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக இருப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

    ஜெகதீப் தன்கர்-க்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய சிறந்த அறிவு இருக்கிறது. அவர் சட்டமன்ற விவகாரங்களை நன்கு அறிந்தவர். அவர் ராஜ்யசபாவில் ஒரு சிறந்த தலைவராக இருப்பார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவையின் நடவடிக்கைகளை வழிநடத்துவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும், பிரதமர் தமது பதிவில் கூறியுள்ளார்.

    ஜெகதீப் தன்கர் தனது பணிவுக்கு பெயர் பெற்றவர், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நல்வாழ்வுக்காக எப்போதும் பாடுபட்டவர். அவர் எங்கள் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக இருப்பதில் மகிழ்ச்சி. இவ்வாறு பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.

    இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் இன்னும் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படாததால் ஜெகதீப் தன்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

    ×