search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mallikarjun Kharge"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனநாயகம், அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை காக்க மக்களிடம் கோருகிறோம்.
    • பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன.

    புதுச்சேரி:

    புதுவைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் நமது உரிமைகள் காக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பில் நமக்கு தந்துள்ள உரிமைகளை நிலைநாட்ட தேர்தல் மிக முக்கியமானது. இந்திய மக்களும் இதை உணரத் தொடங்கியுள்ளனர்.

    ஐ.டி., அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் பலவீனப்படுத்தப்படுகின்றன. அரசியலமைப்பை மதிக்காதோரை இந்த அமைப்புகளின் தலைவராக்குகிறார்கள்.

    ஒத்துழைப்பு தராதோரை அழுத்தம் தந்து ராஜினாமா செய்ய வைத்து வேண்டியோரை நியமித்து, பிரதமர் மோடி இந்த அமைப்புகளை தங்கள் தேவைக்கு பயன்படுத்துகிறார். அதனை அமித்ஷா செயல்படுத்துகிறார்.

    ஜனநாயகம், அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை காக்க மக்களிடம் கோருகிறோம். மோடி தனது அரசை பற்றி பேசாமல் தன்னை பற்றி மட்டுமே முன்னிறுத்துவதால் அவரை விமர்சிக்கிறோம். இது தனிமனித விமர்சனமாக பார்க்கக்கூடாது.

    பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன. வேலைவாய்ப்பு, வெளிநாட்டு கள்ளப்பணம் மீட்பு உள்ளிட்டவை உதாரணங்கள். இதுவரை தந்த எந்த வாக்குறுதிகளையும் மோடி நிறைவேற்றவில்லை.

    பிரசாரத்துக்கு வரும் மோடி தொடர்ந்து காங்கிரசையும் ஆட்சியில் தற்போது இல்லாத காந்தி குடும்பத்தினரை விமர்சிக்கிறார். அது காங்கிரஸ் மீதான பயத்தை வெளிப்படுத்துகிறது. காங்கிரசை அழிக்க முயற்சிக்கிறார்.

    தமிழகம், புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தி.மு.க. தலைமையில் அனைத்து இடங்களிலும் வெல்லும். கருத்து கணிப்புகள் விஷயத்தில் கருத்து கூற விரும்பவில்லை. பல ஏஜென்சிகள் பலதரப்பட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர். நாங்கள் மோடி பிரதமராவதை தடுத்து நிறுத்தி நல்ல எண்ணிக்கையில் இடங்களை இந்தியா கூட்டணி பெறுவோம்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாதது. சட்டப்பேரவை தேர்தல், மக்களவைத்தேர்தல் ஆகியவை ஒன்றுக்கொன்று வித்தியாசமானது. புதுச்சேரி, தமிழ்நாடு அல்ல லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. கூட்டம் நிரம்பியுள்ளதா என்பதை விட எங்கள் கருத்தை பகிர்வதே முக்கியம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • டெல்லி தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
    • பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். இதுதொடர்பாக கார்கே கூறியதாவது:

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். எம்.எஸ்.பி.யை உயர்த்தி சட்டப்பூர்வ உத்தரவாதம் தருவதாகச் சொல்லியிருந்தார் - இதுதான் உத்தரவாதமா?

    நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் பெரிய பணி எதையும் அவர் தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை.

    இளைஞர்கள் வேலை தேடுகிறார்கள். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் பற்றி அவர் கவலைப்படவில்லை.

    10 ஆண்டுகளில் இந்த மனிதரால் ஏழைகளுக்கு எதுவும் செய்ய முடியவில்லை.

    அவரது தேர்தல் அறிக்கையை நம்புவது சரியல்ல. மக்களுக்கு வழங்குவதற்கு அவரிடம் எதுவும் இல்லை என்பதை இது நிரூபிக்கிறது என தெரிவித்தார்.

    • 1974-ம் ஆண்டு நட்புறவு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
    • 2015-ல் எல்லைப் பகுதிகளுக்கு ஈடாக வங்காளதேசத்துடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை உங்கள் அரசு மேற்கொண்டதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

    புதுடெல்லி:

    கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது என்பதை தெளிவுபடுத்தும் புதிய உண்மைகள் வெளியாகி உள்ளதாகவும், இதன் மூலம் 'காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது' என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறினார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "1974-ம் ஆண்டு நட்புறவு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. 2015-ல் எல்லைப் பகுதிகளுக்கு ஈடாக வங்காளதேசத்துடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை உங்கள் (பிரதமர் மோடி) அரசு மேற்கொண்டதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

    இந்த பிரச்சனையை தீர்த்து கச்சத்தீவை மீட்பதற்கு 10 ஆண்டுகால ஆட்சியில் உங்கள் அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்ததா என்று நீங்கள் சொல்ல வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    • ராகுல் காந்தி ஒரே நாளில் 3 இடங்களில் பிரசார கூட்டங்களில் பேசும் வகையில் பயண திட்டம் தயாரித்துள்ளனர்.
    • அடுத்த வார இறுதியில் இருந்து ஒவ்வொருவராக வர இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகிய மூவரும் வர இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. அடுத்த வார இறுதியில் இருந்து ஒவ்வொருவராக வர இருக்கிறார்கள்.

    ராகுல் காந்தி ஒரே நாளில் 3 இடங்களில் பிரசார கூட்டங்களில் பேசும் வகையில் பயண திட்டம் தயாரித்துள்ளனர். ராகுல் செல்ல முடியாத இடங்களுக்கு பிரியங்காவும், அதேபோல் கார்கேவும் செல்வார்கள். தமிழகம் முழுவதும் இவர்கள் செல்லும் வகையில் பயண திட்டங்களை தயார் செய்து டெல்லி தலைமைக்கு அனுப்பி இருக்கிறார்கள். தலைவர்கள் வருகைக்கான தேதி உறுதியானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    • 15 பாராளுமன்ற தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது
    • புதுவை காங்கிரசின் கோட்டையாகவே திகழ்ந்தது.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட யூனியன் பிரதேசமான புதுவையில் 1963-ம் ஆண்டு முதல் சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடந்து வருகிறது.

    ஆரம்பகால தேர்தல்களில் சுதந்திரத்துக்கு போராடிய கட்சி காங்கிரஸ் என்பதால் மக்களிடம் பெரியளவில் மதிப்பு இருந்தது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க.வும், அதிலிருந்து பிளவுபட்டு அ.தி.மு.க.வும் தொடங்கியபோது புதுவையிலும் அந்த கட்சிகளின் ஆதிக்கம் தொடங்கியது.

    பெரும்பாலும் சட்டமன்றத்தில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. 2 முறையும், தி.மு.க. 4 முறையும், என்.ஆர். காங்கிரஸ் 2 முறையும் ஆட்சி அமைத்தனர். 1963-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.

    அதன்பிறகு நடந்த பல தேர்தல்களில் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தனர்.

    அதேநேரத்தில் இதுவரை நடந்த 15 பாராளுமன்ற தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 1963, 1967, 1971 ஆகிய 3 தேர்தல்களில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அதன்பின் 1980, 1984, 1989, 1991, 1996 என 5 முறை தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் 1999, 2009, 2019 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. இதனால் புதுவை காங்கிரசின் கோட்டையாகவே திகழ்ந்தது.

    யூனியன் பிரதேசமான புதுவை மக்களும், மத்தியில் உள்ள ஆட்சியில் இருப்பவர்களுக்கு வாக்களித்தால் புதுவைக்கு நன்மை கிடைக்கும் என வாக்களித்தனர்.

    வ.சுப்பையா, ப.கண்ணன் ஆகியோர் புதுவைக்கென தனி கட்சி தொடங்கினர். ஆனால் அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை, பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் 2011-ல் காங்கிரசில் பிளவை ஏற்படுத்தி ரங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி ஆட்சியையும் பிடித்தார்.


    தொடர்ந்து 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு என்.ஆர்.காங்கிரஸ் வெற்றியும் பெற்றது. 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம், பதவியை ராஜினாமா செய்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அவர் தற்போது சிட்டிங் எம்.பி.யாக உள்ளார். அவர் மீண்டும் 2-வது முறையாக பாராளுமன்ற தேர்தலில் களத்தில் இறங்கியுள்ளார்.

    அதேநேரத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரசில் பெரும் பிளவு ஏற்பட்டது. அமைச்சராக இருந்த நமச்சிவாயம், கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜனதாவில் இணைந்தார்.

    அவருடன் சேர்ந்து காங்கிரசில் இருந்த பல்வேறு பிரிவுகள், அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் வெளியேறினர். 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தற்போது காங்கிரசுக்கு புதுவை லாஸ்பேட்டை தொகுதி, மாகி தொகுதி ஆகியவற்றில் மட்டுமே 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியில் அடித்தளம் வரை கட்டமைப்பு உள்ளது. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனைத்து தொகுதியிலும் உள்ளனர். கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது. இதோடு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

    2021 சட்டமன்ற தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து புதுவை மீண்டும் காங்கிரசின் கோட்டை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. தங்களுக்கு சாதகமாக சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் நம்புகிறது.

    ஏனெனில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். 22 எம்.எல்.ஏ.க்கள் பலத்தோடு பா.ஜனதா போட்டியிட்டாலும் மக்கள் ஆதரவோடு மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என காங்கிரசார் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதற்காக அனுபவத்தின் மூலம் பிரசார வியூகம் அமைத்து தலைவர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

    புதுவை தொகுதி காங்கிரசுக்கு மீண்டும் 'கை' கொடுக்குமா? என்பது ஜூன் 4-ந்தேதி தெரிந்து விடும்.

    • கேரள மாநிலத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதி வயநாடு மக்களவை தொகுதி.
    • வயநாடு தொகுதியில் இருகட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது அந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்துவிட்டன. இதையடுத்து கட்சி வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஏப்ரல் மாதம் தொடங்கியதும், கேரள மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர். கேரள மாநிலத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதி வயநாடு மக்களவை தொகுதி.

    அதற்கு காரணம் அந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தியே, இந்த முறையும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மேலும் இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் களம் காணுகிறார்.


    இதன்காரணமாக இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டுகட்சிகள் இந்திய அளவில் ஒரே கூட்டணியில் இருக்கும் நிலையில், வயநாடு தொகுதியில் இருகட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன. அவர்களுடன் வயநாடு தேர்தலில் களம் காணப்போகும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் யார்? என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், அக்கட்சியின் மாநில தலைவரான சுரேந்திரனே அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

    வயநாடு தொகுதியை பொறுத்தவரை 2009-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதைய தேர்தலில் ராகுல்காந்தியை, சுரேந்திரன் எதிர்கொள்ள உள்ளார்.

    சுரேந்திரன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பத்தினம்திட்டாவில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தை பிடித்தார். மேலும் அவர் 2016-ம் ஆண்டு நடந்த சட்மன்ற தேர்தலில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் போட்யிட்டு வெறும் 89 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.


    2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் சுரேந்திரன் போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் 2020-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்து பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய சுரேந்திரனுக்கு தற்போது வயநாடு தொகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

    அவர் வயநாடு தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ராகுல் காந்தி மற்றும் ஆனி ராஜா ஆகியோருக்கு சவால் விடும் வகையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா ஆகிய மூன்று கட்சிகளுமே வயநாடு தொகுதியை கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு நிலவும் முன்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது தேர்தல் முடிவு வந்தபிறகே தெரியவரும்.

    • விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
    • 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, கடலூர், கரூர், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்த 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் கட்டணம் செலுத்தி நேற்று முதல் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்தனர். விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.

    விருப்ப மனு கொடுப்பவர்கள் கட்டணத்துடன் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு ஆகியவற்றையும் இணைத்து கொடுத்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 100 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    இன்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தனர். இதனால் காங்கிரஸ் களம் இறங்கும் 9 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து 200-க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    விருப்ப மனு கொடுப்பதற்கு நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணிவரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு விருப்ப மனு கொடுத்தவர்களில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்புவார்கள்.

    மேலிட தலைவர்கள் அவற்றை ஆய்வு செய்து அதிகாரப்பூர்வ வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளனர். தற்போதைய நிலவரப்படி கரூர் தொகுதியில் ஜோதிமணி, சிவகங்கை கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.

    மயிலாடுதுறை தொகுதியில் ராகுலுக்கு மிகவும் நெருக்கமான பிரவீண் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் மயிலாடுதுறை தொகுதியை மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஹசினா சையது, பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஆகியோரும் கேட்கிறார்கள்.

    திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், காங்கிரஸ் ஐ.டி. பிரிவு தலைவருமான சசிகாந்த் செந்தில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் அந்த தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்.பி. ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், ரஞ்சன்குமார், இமயா கக்கன், விக்டரி ஜெயக்குமார் ஆகியோரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

    கடலூர் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நிறுத்தப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி தொகுதியில் டாக்டர் செல்லகுமார் போட்டியிட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    நெல்லை தொகுதியில் விஜய்வசந்த் போட்டியிடுவார் என்றும், கன்னியாகுமரி தொகுதியில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    கன்னியாகுமரி: விஜய் வசந்த் அல்லது ரூபி மனோ கரன், ராபர்ட் புரூஸ்

    நெல்லை: திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு, சிந்தியா.

    மயிலாடுதுறை: அசன் மவுலானா, பிரவீண் சக்கரவர்த்தி, ரமணி.

    கடலூர்: கே.எஸ்.அழகிரி, நாசே ராமச்சந்திரன், டாக்டர் விஷ்ணுபிரசாத்

    திருவள்ளூர் : ஜெயக்குமார், சசிகாந்த்செந்தில், பி. விசுவநாதன், ரஞ்சன் குமார்

    சிவகங்கை: கார்த்தி சிதம்பரம்.

    உத்தேச பட்டியலில் உள்ள இந்த தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதனால் டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்கள் 9 தொகுதிகளுக்கு யார்-யாரை தேர்வு செய்வது என்று கடும் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே போட்டியிட்டு எம்.பி.யாக இருப்பவர்கள் மற்றும் வாரிசுகளை கடந்து புதுமுகங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
    • காங்கிரஸ் கட்சியின் கடைசி செயற்குழு கூட்டம் டிசம்பர் 21-ந்தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (19-ந்தேதி) நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி காரிய கமிட்டி கூட்டம் இதுவாகும் என்று 2 மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்த செயற்குழுவில் இறுதி வடிவம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம், அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு, 30 லட்சம் பொதுத்துறை வேலைகளை நிரப்புதல், 50 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கப்படுவது போன்ற வாக்குறுதிகளை அந்த கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதிகள் இடம்பெறும்.

    காங்கிரஸ் கட்சியின் கடைசி செயற்குழு கூட்டம் டிசம்பர் 21-ந்தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டை விட்டு வெளியே வராதவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
    • பிரதமர் வருகையால் தி.மு.க. கூட்டணியினர் தோல்வி பயத்தில் உள்ளனர்.

    திருப்பூர்:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று திருப்பூரில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமியை நேரில் சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கேட்டதுடன், சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வீட்டை விட்டு வெளியே வராதவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பிரதமர் கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகத்திற்கு வருகை தருகிறார். அவையெல்லாம் தேர்தலை மனதில் வைத்து அல்ல. பிரதமர் வருகையால் தி.மு.க. கூட்டணியினர் தோல்வி பயத்தில் உள்ளனர்.

    கோவையில் பிரதமரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு திமு.க. தடை விதிக்க நினைத்தது. எல்லா மாநிலத்திலும் பிரதமர் மக்களை சந்திக்கிறார்


    பி.எம்ஸ்ரீ., பள்ளி திட்டத்திற்கு கையெழுத்து போடுவார்கள். ஆனால் புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என சொல்வது ஏற்கத்தக்கதல்ல. தேர்தல் முடிந்ததும் வேறு காரணம் சொல்லி ஏற்றுக்கொள்வர்.

    ஆ. ராசா 2 ஜி வழக்கில் ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தீர்ப்பு வரலாம். தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் மோடி வருகை புரிய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். தேதி கொடுக்க பிரதமரும் தயாராக இருக்கிறார். இந்தியா கூட்டணிக்கு எங்கேயும் எழுச்சி இல்லை. நாடு முழுவதும் ஜெய்ஸ்ரீராம் கோஷம்தான் எழுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.
    • மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022-ம் ஆண்டு பாரத ஒற்றுமை யாத்திரையை செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரையை 2023-ம் ஆண்டு ஜனவரியில் ஸ்ரீநகரில் நிறைவு செய்தார்.

    அதன் பிறகு 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை' என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கி மும்பை தாராவி வழியாக சென்று அம்பேத்கர் சமாதியான சைத்ய பூமியில் நிறைவு செய்தார். இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.

    இன்று காலையில் ராகுல் காந்தி மும்பையில் நியாய சங்கல்ப் பாதயாத்ரா என்ற பெயரில் மணிபவன் முதல் ஆகஸ்டுகிராந்தி மைதானம் வரை நடைபயணம் மேற்கொண்டார்.


    இதைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார்.


    இதே போல் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி சம்பாய் சோரன் ஆகியோரும் மும்பை சென்றுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார், கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசிய பிறகு இன்று இரவே சென்னை திரும்புகிறார்.

    • காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
    • பா.ஜ.க.வின் வங்கிக் கணக்குகளை முடக்கவேண்டும் என கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

    பெங்களூரு:

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. அவர்கள் வருமான வரித்துறையினரை வைத்து இப்படி செய்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சிக்கு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம் வங்கிகளில் உள்ளது. இப்படி செய்தால் தேர்தல் எப்படி நடக்கும்?

    தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. எப்படி பணம் சம்பாதித்தது என்பதை சுப்ரீம் கோர்ட்டு இன்று அம்பலப்படுத்தியுள்ளது.

    எங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க. வங்கி கணக்குகள் செயல்பட்டில் உள்ளது.

    தேர்தல் பத்திர முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் பா.ஜ.க.வின் வங்கி கணக்குகளை முடக்கவேண்டும்.

    தேர்தல் பத்திர முறைகேடு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

    • யாத்திரை இறுதி நிகழ்வை வெற்றி அடைய செய்ய எங்களுடன் இணைந்து கொள்ள அழைக்கிறேன்.
    • பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதால் பங்கு பெற வேண்டும்.

    சென்னை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த மாதம் 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். 15 மாநிலங்கள் மற்றும் 6700 கி.மீ. தூரத்திற்கு பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    ராகுலின் யாத்திரை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். யாத்திரையின் போது சக்தி வாய்ந்த முழக்கங்களை காங்கிரஸ் எடுத்து செல்கிறது.

    ராகுலின் யாத்திரை வெற்றி அடைந்து வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மும்பையை அடைகிறது.

    இதையொட்டி மும்பை சிவாஜி பூங்காவில் மாலை 7 மணிக்கு யாத்திரை நிறைவு விழா நடைபெறுகிறது.

    இந்தியா நீதி ஒற்றுமை யாத்திரை நிறைவு பெறும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

    இதில் பங்கேற்க இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து யாத்திரையின் நோக்கம் வெற்றி அடைந்ததை விளக்கி பேசுகின்றனர்.

    யாத்திரை நிறைவு விழாவில் பங்கு பெற இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    யாத்திரை இறுதி நிகழ்வை வெற்றி அடைய செய்ய எங்களுடன் இணைந்து கொள்ள அழைக்கிறேன். பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதால் பங்கு பெற வேண்டும். ஒரு மதச்சார்பற்ற வலுவான ஜனநாயகத்தை நிறுவுவதற்கு உதவும் என்று அக்கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.

    கார்கேவின் அழைப்பை ஏற்ற திருமாவளவன் மும்பைக்கு செல்கிறார். யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்.

    ×