Union Budget 2026: கவிதையில் கண்டனம் தெரிவித்த கமல் ஹாசன்!

கவிதை மூலம் மத்திய பட்ஜெட்டை சாடியுள்ளார்.எந்த பட்ஜெட் என்றாலும் எங்களது வரிகள் பொருந்தும் போலிருக்கிறது.
Union Budget 2026: கவிதையில் கண்டனம் தெரிவித்த கமல் ஹாசன்!
Published on

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக 9ஆவது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாதனை படைத்துள்ளார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆளும் கட்சியினர் வரவேற்பும், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், எம்.பி. கமல் ஹாசன் தனது பானியில் கவிதை மூலம் மத்திய பட்ஜெட்டை சாடியுள்ளார். இது குறித்த X தள பதிவில் அவர், "எனக்குத் தமிழ் கற்பித்த மூன்று ஆசிரியர்களுள் ஒருவர் கண்ணதாசன். அவர் இந்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதை யூகித்து அன்றே பாடிவைத்தார்.

'பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசியக் கொஞ்சம் மறந்திருப்போம்.

பாரதத்தின் தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி…

பாரதத்தின் பெருமை தன்னைப் பாடு, பாடு சோறு எதுக்கு தம்பி!'

நான் ஆசிரியர்களிடமிருந்து ஊக்கம் பெறுகிறவன். பல மாமாங்கங்களுக்கு முன்பு ஒரு பட்ஜெட்டைக் கண்டு நானும் தமிழில் கவிதை புலம்பியது இத்தருணத்தில் நினைவிலாடுகிறது.

'கள்ளிச் செடி பசுவாகிப்

பால் சுரக்கும்

வேப்பம்பூத் தேனெடுக்கும்

பண வண்டு

வறுமைக் கதிர் அறுக்கக்

கானல் நீர் வாய்க்கால்கள்

கற்பனை அறுவடையில்

கனவு நெல் மணிகள்

தெருவோர ஜமீன்தார்கள்

வரி செலுத்த

பஞ்ச ராஜ்ஜியப் பரிபாலனம்

எங்கும் ஓங்கும்'

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த பட்ஜெட் என்றில்லை; எந்த பட்ஜெட் என்றாலும் எங்களது வரிகள் பொருந்தும் போலிருக்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com