என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shashi Tharoor"

    • செயலியை நிறுவுவதை தொலைத்தொடர்புத் துறை கட்டாயமாக்கியது.
    • ஜனநாயகத்தில் அனைத்தையும் கட்டாயமாக்குவது சிக்கல்.

    மொபைல் போன் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் அனைத்து புதிய கைபேசிகளிலும் விற்பனைக்கு முன் சஞ்சார் சாத்தி செயலியை நிறுவுவதை தொலைத்தொடர்புத் துறை கட்டாயமாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், "எனது பொது அறிவின்படி, இதுபோன்ற செயலிகள் விருப்பத்தேர்வாக இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

    தேவைப்படுபவர்கள் அவற்றைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஜனநாயகத்தில் அனைத்தையும் கட்டாயமாக்குவது சிக்கலாக இருக்கும்.

    உத்தரவுகளை பிறப்பிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் ஊடக அறிக்கைகள் மூலம் பொதுமக்களுக்கு எல்லாவற்றையும் விளக்க வேண்டும். நாம் ஒரு விவாதத்தை நடத்த வேண்டும். அரசாங்கம் இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்க வேண்டும்" என்று கூறினார்.  

    இதற்கிடையே சஞ்சார் சாத்தி செயலி மொபைல் போன்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியுள்ளது.

    இது குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "இந்த செயலி அனைவரையும் சென்றடையச் செய்வது நமது பொறுப்பு. நீங்கள் அதை நீக்க விரும்பினால், அதை நீக்குங்கள். நீங்கள் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அதை பதிவு செய்யாதீர்கள்.

    நீங்கள் செயலியில் பதிவு செய்தால், அது செயலில் இருக்கும். நீங்கள் அதைப் பதிவு செய்யாவிட்டால், அது செயலற்றதாகவே இருக்கும்" என்று தெரிவித்தார். 

    • நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோரான் மம்தானி.
    • வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை முதல் முறையாக மம்தானி சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    நியூயார்க் நகர மேயராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோரான் மம்தானி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை முதல் முறையாக நேற்று சந்தித்துப் பேசினார்.

    அரசியல் அரங்கில் எதிரும் புதிருமாக இருக்கும் டிரம்ப், மம்தானி சந்திப்பு அந்நாட்டு அரசியலில் அனைவராலும் உற்று பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த இருவரது சந்திப்பை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசிதரூர் வரவேற்றுள்ளார்.

    இதுதொடர்பாக, சசிதரூர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகம் என்பது இப்படித்தான் செயல்பட வேண்டும். தேர்தலின் போது எந்த வார்த்தை ஜாலங்களும் இல்லாமல் உங்கள் கருத்தை முன்வைத்து போராடுங்கள். தேர்தல் முடிந்த பின், நாட்டின் பொதுவான நலன்களை நிறைவேற்ற, மக்களிடம் அளித்த வாக்குறுதிகளின்படி ஒத்துழைப்புடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். இதுபோன்ற சந்திப்புகளை இந்தியாவில் அதிகம் பார்க்க விரும்புகிறேன். என் அளவிலான பங்களிப்பையும் செய்ய முயற்சித்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    அண்மைக்காலமாக, பாஜ தலைவர்களை அதிகம் புகழ்ந்தும்,. காங்கிரசை விமர்சித்தும் சசிதரூர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தலைவர்கள் திறமைகளை விட குடும்பப் பெயர்களை நம்பியிருக்க அனுமதிக்கிறது.
    • கடந்த 25 ஆண்டுகளில், 40 வயதுக்குட்பட்ட எந்த எம்.பி.யும் குடும்ப வம்சாவளி இல்லாமல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.

    'குடும்ப அரசியல் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல்' என்ற தலைப்பில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

    அதில், "அரசியல் குடும்பங்களின் ஆதிக்கம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். குடும்ப ஆட்சியிலிருந்து இந்தியா விலகி தகுதி அடிப்படையிலான தலைமைக்கு மாற வேண்டும்.

    குடும்ப அடிப்படையிலான அரசியல் பொறுப்புணர்வை பலவீனப்படுத்துகிறது. நிர்வாகத்தின் தரத்தை குறைக்கிறது மற்றும் தலைவர்கள் திறமைகளை விட குடும்பப் பெயர்களை நம்பியிருக்க அனுமதிக்கிறது.

    இத்தகைய குடும்பங்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய நிதி ஆதாயங்களை ஈட்டியுள்ளன. கடந்த 25 ஆண்டுகளில், 40 வயதுக்குட்பட்ட எந்த எம்.பி.யும் குடும்ப வம்சாவளி இல்லாமல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.

    149 அரசியல் குடும்பங்கள் மாநில சட்டமன்றங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளன என்றும், 11 மத்திய அமைச்சர்கள் மற்றும் ஒன்பது முதலமைச்சர்கள் குடும்ப உறவுகளைக் கொண்டுள்ளனர் என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளதாக தரூர் சுட்டிக்காட்டுகிறார்.

    மேலும் தனது கட்டுரையில், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்யை தொடர்ந்து ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட வாரிசுகளின் செல்வாக்கு, அரசியல் தலைமை என்பது மரபுரிமையாகக் கிடைத்த ஒரு உரிமை என்ற கருத்தை வளர்த்துள்ளது.

    காங்கிரஸ் மட்டுமின்றி, சிவசேனா, சமாஜ்வாடி கட்சி, லோக் ஜனசக்தி கட்சி, சிரோமணி அகாலிதளம், மக்கள் ஜனநாயகக் கட்சி, திமுக மற்றும் பாரத ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகளும் இதற்கு சான்று என்றும் தரூர் குறிப்பிட்டுள்ளார்.

    கட்சிகளில் வெளிப்படையான உள்கட்சித் தேர்தல்கள், சட்டப்பூர்வ கால வரம்புகள் மற்றும் தகுதி அடிப்படையிலான தலைமையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் தேவை என்றும் சசி தரூர் தனது கட்டுரையில் வலியுறுத்தி உள்ளார். இந்த கட்டுரை காங்கிரசார் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஆசிய கோப்பை போட்டியின்போது இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வீரர்களுடன் கைக்குலுக்க மறுப்பு.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடரில் இருந்து விலகப்போவதாக மிரட்டல் விடுத்தது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுத்துவிட்டனர். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கடும் ஆட்சேபனை தெரிவித்தது.

    சூப்பர் 4 சுற்றின்போது பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் சிந்தூர் ஆபரேஷன் நடவடிக்கையின்போது இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என சைகை காட்டினர். இதனால் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் ஐசிசி-யில் புகார் அளித்துள்ளன.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர் இது தொடர்பாக கூறுகையில் "அரசியல் டென்சனில் இருந்து கிரிக்கெட் ஸ்பிரிட் எப்போதும் தனித்து இருக்க வேண்டும். கார்கில் போரின்போது 1999 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது வீரர்கள் கைக்குலுக்கினர். இரு தரப்பினரிடமிருந்தும் பழிவாங்கும் சைகைகள் விளையாட்டு மனப்பான்மையின்மையை வெளிப்படுத்துகிறது" என்றார்.

    • உலகத் தலைவர்களில் யாராவது ஒருவர், தான் நோபல் பரிசுக்கு தகுதியானவர் எனக் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?.
    • இந்தியா- ரஷியா பொருளாதாரம் செத்துப்போனது எனக் கூறியதை கேட்டதுண்டா?.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இதனால் இந்திய ஏற்றுமதி கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ரத்தின கற்கள் மற்றும் நகைத்துறை, கடல்உணவு, உற்பத்தி துறைகள் அதிக அளவில் பாதித்துள்ளது.

    இந்த நிலையில் CREDAI மாநாட்டில் காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அமெரிக்க அதிபர் அடிக்கடி தனது மனநிலையை மாற்றக்கூடிய தனிநபர். அமெரிக்க சிஸ்டம் அந்நாட்டு அதிபருக்கு அதிக சுதந்திரத்தை கொடுத்துளளது. இவருக்கு முன்னதாக 44 அல்லது 45 அதிபர்கள் வெள்ளை மாளிகையில் இருந்துள்ளனர். ஒருவர் கூட இவரை போன்று பழக்க வழக்கம் கொண்டவராக இருந்ததை பார்த்ததில்லை.

    எல்லா நிலைகளிலும் வழக்கத்திற்கு மாறான அதிபர். உலகத் தலைவர்களில் யாராவது ஒருவர், தான் நோபல் பரிசுக்கு தகுதியானவர் எனக் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?. அல்லது அனைத்து நாட்டு தலைவர்களும் என்னுடைய A**யை முத்தமிட வேண்டும்? அல்லது இந்தியா- ரஷியா பொருளாதாரம் செத்துப்போனது எனக் கூறியதை கேட்டதுண்டா?. டிரம்ப் வழக்குத்திற்கு மாறானவர். அவருடைய நடத்தையை வைத்து எங்கள் செயல்திறனை மதிப்பிட வேண்டாம் என்று நான் உங்களிடம் கெஞ்சுகிறேன்.

    இந்தியா ஏற்றுமதி சந்தைகளை பன்முகப்படுத்த வேண்டும். சூரத்தின் ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறையிலும், கடல் உணவு மற்றும் உற்பத்தித் துறையிலும் ஏற்கனவே 1.35 லட்சம் வேலைகள் இழக்கப்பட்டுள்ளன.

    ஆரம்ப 25 சதவீத வரி பல பொருட்களை சாத்தியமற்றதாக்கியது. மேலும் கூடுதலாக 25 சதவீத அபராதம் அமெரிக்க சந்தையில் போட்டியிடுவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியுள்ளது. கூடுதல் வரி என்பது ஒரு வரி அல்ல. இது ரஷிய எண்ணெயை வாங்குவதற்கான தடைகள். சீனா அதிகமாக இறக்குமதி செய்யும்போது, இந்தியாவுக்கான வரி விதிப்பு நியாயமற்றது.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

    • ரணில் விக்ரமசிங்கேவை இலங்கை போலீசார் கைது செய்தனர்.
    • அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

    இலங்கையின் முன்னாள் அதிபரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கேவை, நாட்டின் நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் போலீசார் கைது செய்தனர்.

    அரசு நிதியை தவறாக பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில், சிஐடி தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜராகியபோது, போலீசார் கைது செய்துள்ளனர். ரணில் விக்ரமசிங்கேவுக்கு 76 வயதாகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நிதியை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

    பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கோதபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகியபோது, ரணில் விக்ரமசிங்கே, அதிபராக பதவி ஏற்றார். 2022 முதல் செப்டம்பர் 2024 வரை அதிபராக இருந்தார். அவர் 6 முறை இலங்கை பிரதமராக இருந்துள்ளார்.

    இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கே கைதுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சசி தரூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அற்பமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைதாகி இருப்பது கவலை அளிக்கிறது. தற்போதைய இலங்கை அரசு பழிவாங்கும் அரசியலைக் கைவிட்டு, அவரைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக ரணில் விக்ரமசிங்கே கைதுக்கு ராஜபக்ஷே கண்டனம் தெரிவித்திருந்தார். செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்ஷே, "இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும், சிறிய தவறுக்காக சிறையில் வைக்கப்பட்டிருப்பது வருத்தமாக உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

    • அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தபோது மக்களவையில் எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசி எறிந்தனர்.
    • தவறு செய்தால் ஒருவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்பது மிகவும் தர்க்கரீதியானது.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர், கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் எதிர்த்துப் பேசியுள்ளார்.

    மத்திய அரசு இன்று மக்களவையில் தாக்கல் செய்த தகுதி நீக்க மசோதா, பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் இருந்தால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறுகிறது.

    அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தபோது மக்களவையில் எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசி எறிந்தனர்.

    'இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றுபட்டுள்ள நிலையில், சசி தரூர் வித்தியாசமாக பதிலளித்துள்ளார்.

    நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "30 நாட்கள் சிறையில் இருந்த ஒருவர் எப்படி அமைச்சராகத் தொடர முடியும்? இது மிகவும் பொதுவான விஷயம். இதில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை" என்றார்.

    தவறு செய்தால் ஒருவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்பது மிகவும் தர்க்கரீதியானது என்று அவர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இது நமது ஜனநாயகத்திற்கு நல்லது என்று தான் கருதுவதாக அவர் கூறினார்

    இருப்பினும், மசோதாவை இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை என்றும், அவரது கருத்து இறுதியானது அல்ல என்றும் சசி தரூர் தெளிவுபடுத்தினார்.

    சந்தேகங்களைத் தீர்த்து, அது குறித்து ஆழமான விவாதம் நடத்த மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (ஜேபிசி) அனுப்ப வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். 

    • நமது ஜனநாயகம் மிகவும் விலைமதிப்பற்றது.
    • குற்றத்க்காடுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியறுத்தினார்.

    2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பாஜவுடன் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக நேற்று, தரவுகளுடன் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார்.

    மகாராஷ்டிராவில் குறுகிய காலத்தில் 40 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது, கர்நாடகா தேர்தலில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டது, போலி வாக்காளர்கள், போலி முகவரி, புகைப்படம் இல்லா வாக்காளர்கள், ஒரே முகவரியில் 30, 40 வாக்காளர்கள், படிவம் 6 மோசடி என 5 வழிகளில் இந்த வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் குற்றம்சாட்டினார்.

    மெல்லும் கடந்த 10-15 ஆண்டு வாக்காளர் தரவு மற்றும் வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரினார்.

    "தேர்வு ஆணையம் இந்தத் தரவு மற்றும் சிசிடிவி காட்சிகளை எங்களுக்கு வழங்கவில்லை என்றால், அவர்கள் இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.

    தேர்தல் ஆணையம் எழுத்துபூர்வமான உறுதிமொழியுடன் தரவுகளை சமர்பிக்கும்படி ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளது.

    இந்நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    ராகுலின் வீடியோவை பகிர்ந்து சசி தரூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "இந்த கேள்விகள் மிகவும் தீவிரமானவை, மேலும் அனைத்து கட்சிகள் மற்றும் வாக்காளர்களின் நலனுக்காகவும் இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.

    நமது ஜனநாயகம் மிகவும் விலைமதிப்பற்றது, அதன் நம்பகத்தன்மை, திறமையின்மை, அலட்சியம் அல்லது வேண்டுமென்றே மோசடி மூலம் அழிக்கப்படக்கூடாது" என்று தெரிவித்த சசி தரூர், குற்றத்க்காடுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியறுத்தினார்.

    சமீக காலமாக பிரதமர் மோடியை பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து காங்கிரஸ் தலைமையுடன் இணக்கமின்றி சசி தரூர் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

    மறுபுறம், தொடர் தோல்வி விரக்தியில் ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாக பாஜக தெரிவித்துள்ளது.   

    • சசி தரூரின் கட்டுரை பிரதமர் அலுவலகத்தால் பகிரப்பட்டது.
    • பறக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. இறக்கைகள் உங்களுடையது.

    பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூரை மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்கே, "சசி தரூரின் மொழி மிகவும் நன்றாக இருக்கிறது. அதனால்தான் அவர் காங்கிரஸ் காரியக் குழுவில் தக்கவைக்கப்பட்டுள்ளார். நாங்கள் நாட்டிற்காக ஒன்றாக நிற்கிறோம். ஆபரேஷன் சிந்தூரிலும் நாங்கள் ஒன்றாக நின்றோம். நாடு எங்களுக்குப் பெரியது.

    நாடு முதலில் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் சிலருக்கு மோடி பெரியவர். நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்று கூறினார்.

    கடந்த சில மாதங்களாக பிரதமரைப் புகழ்ந்து சசி தரூர் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். தி இந்துவில் எழுதிய ஒரு கட்டுரையில், பிரதமரிடம் இணையற்ற ஆற்றல் இருப்பதாகவும், அவர் உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு சொத்து என்றும் குறிப்பிட்டார். சசி தரூரின் கட்டுரை பிரதமர் அலுவலகத்தால் பகிரப்பட்டது.

    சசி தரூர் மோடியைப் புகழ்ந்தது அவர் பாஜகவுக்கு தாவுவதற்கான அறிகுறி என்று பல ஊகங்கள் இருந்தன. ஆனால் சசி தரூர் அதை நிராகரித்தார்.

    கார்கேவின் கருத்துகளைத் தொடர்ந்து, தரூர் தனது எக்ஸ் பதிவில், ஒரு பறவையின் படத்தைப் பகிர்ந்து,"'பறக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. இறக்கைகள் உங்களுடையது, வானம் யாருக்கும் சொந்தம் அல்ல" என்று குறிப்பிட்டுளார். 

    • இந்தியாவின் நடவடிக்கைகள் தற்காப்புக்கான ஒரு சட்டபூர்வமான செயல்
    • செயற்குழுவின் நிரந்தர உறுப்பினராக இருந்து கட்சிக்கு எதிராக செயல்படுவதற்குச் சமம்

    காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசியுள்ளார். மோடியின் ஆற்றலும் சுறுசுறுப்பும் இந்தியாவின் முக்கிய சொத்துக்கள் என்று சசி தரூர் கூறினார்.

    தி இந்துவில் சசி தரூர் எழுதிய கட்டுரையில், உலக அரங்கில் மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. அவருக்கு நிறைய ஆதரவு தேவை. ஒற்றுமையின் சக்தியிலும், தகவல் தொடர்பு சக்தியிலும் மோடி மிகவும் முன்னேறி இருப்பதாக சசி தரூர் புகழ்ந்துரைத்தார்.

    ஆபரேஷன் சிந்தூரைப் பற்றி குறிப்பிட்ட சசி தரூர், இந்தியாவின் நடவடிக்கைகள் தற்காப்புக்கான ஒரு சட்டபூர்வமான செயல் என்றும், இந்தியா தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு மட்டுமே பதிலடி கொடுத்து வருவதாகவும் சசி தரூர் கூறினார். இதை வெளிநாடுகளுக்கு விளக்க முடிந்ததாக அவர் கூறினார்.

    இதற்கிடையே கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசின் உத்தரவின் பேரில் மூன்று நாடுகளின் தூதரகப் பணிக்காக சசி தரூர் புறப்பட்டதில் காங்கிரஸ் தலைமை மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளது.

    தரூரின் செயல்களை, செயற்குழுவின் நிரந்தர உறுப்பினராக இருந்து கட்சிக்கு எதிராக செயல்படுவதற்குச் சமம் என்று தலைமை கருதுகிறது.

    இருப்பினும், இந்த விஷயத்தில் தலையிடக்கூடாது என்பதும், தரூர் தனது சொந்த முடிவை எடுக்க அனுமதிப்பதும் கட்சியின் தற்போதைய நிலைப்பாடாகும். கட்சி, நடவடிக்கை எடுத்து தரூரை பெரிது பண்ணாது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நான் கட்சி தொண்டர்களுடன் கடந்த 16 வருடங்களாக நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன்.
    • அவர்களை நெருங்கிய நண்பர்களாக, சகோதரர்களாக பார்க்கிறேன்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், அக்கட்சியின் சில தலைவர்களுடன் தனக்கு கருத்து வேறுபாடு உண்டு எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சசி தரூர் கூறியதவாது:-

    நான் கட்சி தொண்டர்களுடன் கடந்த 16 வருடங்களாக நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். அவர்களை நெருங்கிய நண்பர்களாக, சகோதரர்களாக பார்க்கிறேன். எனினும், சில காங்கிரஸ் தலைவர்களுடன் தனக்கு கருத்து வேறுபாடு உண்டு. சில விஷயங்கள் குறித்து நான் என்ன பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது பொது வெளியில் உள்ளன. நீங்கள் (மீடியா) கூட வெளியிட்டுள்ளீர்கள்.

    இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதனால் நான் செல்லவில்லை. அழைப்பில்லாத இடத்திற்கு செல்லமாட்டேன். வெளிநாட்டுக்கு என்னுடைய தலைமையிலான குழு சுற்றுப் பயணம் செய்து சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தது. இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தேன். அப்போது உள்ளூர் அரசியல் குறித்து விவாதிக்கவில்லை.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

    • நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி. எனது பதவிக்காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன.
    • அமெரிக்கா மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர்ப் பதற்றம் நிலவியது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி அழித்தது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக, உலக நாடுகளுக்கு விவரிக்க மத்திய அரசு 7 குழுக்களை அமைத்துள்ளது.

    அவற்றுள் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஒரு குழுவும் ஒன்று. சசிதரூரை தவிர, அந்த குழுவில் எம்.பி.க்கள் சர்பராஸ் அகமது, காந்தி ஹரிஷ் மதுர் பாலயோகி, சஷாங்க் மணி திரிபாதி, புவனேஸ்வர் கலிதா, மிலிந்த் தியோரா, தேஜஸ்வி சூர்யா மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் தரஞ்சித் சந்து ஆகியோர் அடங்குவர்.

    கடந்த மாதம் 24-ந்தேதி இந்தியாவில் இருந்து நியூயார்க் சென்று கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசிலுக்கு பயணம் செய்து கடந்த 3-ந் தேதி இந்த குழு சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக வாஷிங்டனுக்கு வந்தது. அங்கு அமெரிக்க செனட் குழுவினர், அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசினர்.

    பின்னர் அங்கு சசி தரூர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் மோதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயாராக இருப்பதாக கூறினோம். பாகிஸ்தான் அதை ஏற்றுக்கொண்டதன்பேரில் மோதல் நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மொழியை பயன்படுத்தும் வரை, நாங்கள் பலத்தின் மொழியை பயன்படுத்துவோம் அதற்கு மூன்றாம் தரப்பு தேவையில்லை.

    தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் என்று கருதுபவர்கள் தங்களை தாங்களே கேள்வி கேட்டு கொள்ள வேண்டும். தனிநபர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.

    சமூக ஊடகங்களில் சசி தரூர் காங்கிரசில் தொடர்ந்து இருப்பாரா? அல்லது பா.ஜனதாவில் சேருவாரா? என்பது குறித்து விவாதம் நடைபெறுகிறது. நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி. எனது பதவிக்காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில் அது குறித்து ஏன் கேள்வி எழ வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.

    நாங்கள் இங்கு ஒரு கட்சி அரசியல் நோக்கத்துக்காக வரவில்லை. ஒன்றுபட்ட இந்தியாவின் பிரதிநிதிகளாக வந்து இருக்கிறோம். தேசிய நலன், தேசிய பாதுகாப்பு என்று வரும்போது தேசம் ஒன்றுபட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

    யாரும் எங்களை மோதலை நிறுத்துங்கள் என்று மத்தியஸ்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அமெரிக்கா மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. மத்தியஸ்தம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறுவதை கவனிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் வெள்ளை மாளிகையுடனான இந்தியா உறவில் எந்தவிதமான சிக்கல்களையும் ஏற்படுத்த நாங்கள் இங்கு வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×