என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் இருந்து நாமக்கல் சுற்றுலா மாளிகை வரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • அரசு நலத்திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ.131 கோடியே 36 லட்சம் ஆகும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை 6 மணி அளவில் கரூரில் இருந்து நாமக்கல் வருகை தர உள்ளார்.

    அவருக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட எல்லையான ராசாம்பாளையம் சுங்கசாவடி அருகில் மாவட்ட நிர்வாகம் சார்பாக கலெக்டர் துர்காமூர்த்தி சிறப்பான வரவேற்பு அளிக்கிறார். அதே போல தி.மு.க. சார்பாக நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் இருந்து நாமக்கல் சுற்றுலா மாளிகை வரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.

    தொடர்ந்து நாளை அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.87.38 கோடியில் 139 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.10.80 கோடியில் முடிவுற்ற 36 திட்டப்பணிகளை திறந்து வைப்பதோடு, பல்வேறு துறைகளின் சார்பில் 2,001 பயனாளிகளுக்கு ரூ.33.18 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். அரசு நலத்திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ.131 கோடியே 36 லட்சம் ஆகும்.

    தொடர்ந்து நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் நகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதற்கட்டமாக பட்டாக்கள் மற்றும் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்க உள்ளார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன விளையாட்டு உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைக்க உள்ளார்.

    • போலீசுக்கே இந்த நிலமை என்றால் பொது மக்கள் நிலை என்ன?
    • முதலுதவி கூட செய்யாமல் என் அக்காவை கொன்றுவிட்டார்கள்

    நாமக்கல் மாவட்டம் பேவல்குறிச்சி காவல் நிலையத்தின் பெண் எஸ்எஸ்ஐ காமாட்சி காவல் நிலையத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், காமாட்சியின் இறப்புக்கு பணிச்சுமையே காரணம் என அவரது சகோதரி, ஆய்வாளர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

    அதன் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்," எனது சகோதரிக்கு விடுப்பு கொடுக்காமல் டார்ச்சர் செய்தே கொன்றுவிட்டீர்கள். போலீசுக்கே இந்த நிலமை என்றால் பொது மக்கள் நிலை என்ன?

    வயிற்றில் கட்டி இருப்பதால் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், விடுப்பு கேட்டுள்ளார். ஆனால், விடுப்பு கொடுக்காமல் வேண்டும் என்றே இரவு பணிக்கு வர வெச்சிருக்காங்க.

    காவல் நிலையத்திலேயே உயிரிழந்திருக்காங்க. மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருந்தால் மருத்துவர்கள் சோதித்திருப்பார்கள். ஆனால், இங்கு முதலுதவி கூட செய்யாமல் என் அக்காவை கொன்றுவிட்டார்கள்" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

    • கமிஷன் தொகையை குறைப்பது மற்றும் மறைமுக கட்டணத்தை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
    • ஓட்டல் உரிமையாளர்கள் வைக்கும் கோரிக்கையை ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் ஏற்க மறுத்து விட்டன.

    நாமக்கல் மாநகரில் 100-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் ஒவ்வொரு உணவகத்திற்கும் ஏற்ப கமிஷனில் வேறுபாடு வைத்து உள்ளனர். மேலும் விளம்பர கட்டணம், மறைமுக கட்டணம் போன்றவற்றால் வருமானத்தில் 50 சதவீதம் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் உணவு வழங்காமல் நிறுத்தி வைக்க இருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

    இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் நேற்று நாமக்கல் நகர ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கமிஷன் தொகையை குறைப்பது மற்றும் மறைமுக கட்டணத்தை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஆனால் ஓட்டல் உரிமையாளர்கள் வைக்கும் கோரிக்கையை ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் ஏற்க மறுத்து விட்டன. எனவே திட்டமிட்டபடி இன்று முதல் நாமக்கல் மாநகரில் கூடுதல் கமிஷன் வசூலிக்கும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு உணவு வழங்கப்பட மாட்டாது எனவும், வாடிக்கையாளர்கள் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் எனவும் ஓட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னையில் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சென்னையிலும், ஸ்விகி, ஜொமோட்டா மூலம் உணவு வழங்கப்படாது என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் ரவி தெரிவித்துள்ளார். 

    • டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை தன்வர்த்தினி எழுதி உள்ளார்.
    • அரசு வேலை வாங்கி தருவதாக தன்வர்த்தினி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் உள்பட சிலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பெரியமணலி குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார்(29). இவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

    அந்த மனுவில், நாமக்கல் அருகே வரகூராம்பட்டியில் உள்ள கனரா வங்கியில் அதிகாரியாக நான் பணியாற்றி வருகிறேன். நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள ஒரு திருமண தகவல் மையத்தின் மூலம் நாமக்கல் ராமாபுரம்புதூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரது மகள் தன்வர்த்தினி(29) என்பவருடன் அறிமுகமானது. அப்போது தன்வர்த்தினி பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் என அவரும், அவரது தந்தையும் எங்களிடம் கூறினர்.

    தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி வையப்பமலை கொங்கு திருமண மண்டபத்தில் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் விசாரித்த போது தன்வர்த்தினி பொள்ளாச்சி கோட்டாட்சியர் இல்லை என்பது எங்களுக்கு தெரிய வந்தது.

    நாங்கள் தன்வர்த்தினியிடமும் அவரது பெற்றோரிடமும் விசாரித்தபோது, தன்வர்த்தினி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தேர்வாணைய செயலர் கையொப்பமிட்ட சான்றிதழையும் காண்பித்தனர். தன்வர்த்தினியின் பெயரில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கையொப்பமிட்ட ஒரு அடையாள அட்டையையும் என்னிடம் காண்பித்தனர்.

    நாங்கள் தொடர்ந்து விசாரித்ததில் சான்றிதழ், அடையாள அட்டை, டி.என்.பி.எஸ்.சி. பட்டியல் அனைத்தும் போலியானது என தெரியவந்தது. ஏமாற்றும் நோக்கில் தமிழ்நாடு அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.

    அரசு அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்தும், ஏமாற்றியும் என்னுடன் திருமணம் செய்து சட்டத்திற்கு புறம்பாக போலியான ஆவணங்களை தயாரித்த அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தார்.

    அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சவீதா மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, தன்வர்த்தினியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு சேலம் பெண்கள் கிளைச் சிறையில் தன்வர்த்தினி அடைக்கப்பட்டார்.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை தன்வர்த்தினி எழுதி உள்ளார். நேர்முகத்தேர்வு வரை சென்றுள்ளார். 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். சென்னையில் சிவில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது நாங்கள் ஏமாந்து விட்டோம். ஒருவர் எங்களிடம் வந்து சான்றிதழ், அடையாள அட்டையை வழங்கி சென்றார் என தன்வர்த்தினி தெரிவித்தார்.

    இதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. அவர் உண்மையை மறைக்கிறாரா என்று தெரியவில்லை. மேலும் சென்னையில் அடையாள அட்டை, சான்றிதழ் கொடுத்த நபரிடம் விசாரிக்க வேண்டியது உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே தன்வர்த்தினிக்கு ஆதரவாக பேசி வந்த இதில் தொடர்புடைய அசோகன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தன் வர்த்தினிக்கு சான்றிதழ் கொடுத்ததாக கூறப்படும் சென்னையை சேர்ந்த திருமுருகன் என்பவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். அவர் சிக்கினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே அரசு வேலை வாங்கி தருவதாக தன்வர்த்தினி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் உள்பட சிலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இந்த வழக்கில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. 

    • ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டதாக இந்த மினி டைடல் பூங்கா அமைய உள்ளது.
    • இந்த டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    தமிழ்நாடு அரசு சார்பில் டைடல் பூங்காவானது பல்வேறு மாவட்டங்களில் திறக்கப்படுகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.

    ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டதாக இந்த மினி டைடல் பூங்கா அமைய உள்ளது. இந்த டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 12 மாதங்களில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க டைடல் பூங்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    மினி டைடல் பூங்கா கட்டிடத்தில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கேயே பணிபுரியும் வகையில் குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட மேலாண்மை வசதிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை வசதிகள், 24 X 7 பாதுகாப்பு வசதிகள் , உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

    • எதிர்வீட்டில் வசிக்கும் எலட்ரீசியின் சங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மின்விசிறியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய சென்றபோது கதவை மூடிக்கொண்டு நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

    நாமக்கல்லில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எதிர்வீட்டில் வசிக்கும் எலட்ரீசியின் சங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்விசிறியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய சென்றபோது கதவை மூடிக்கொண்டு நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர், மூதாட்டியை கொலை செய்துவிட்டு தப்பியோட முயற்சித்தபோது கொலையாளிகை பிடித்து போலீசாரிடம் மக்கள் ஒப்படைத்தனர்.

    • டேங்கர் லாரியில் இருந்தது சுத்திகரிக்கப்படாத மற்றும் சமையலுக்கு பயன்படாத எண்ணெய்.
    • சோயா ஆயிலை பிடித்து செல்வது போன்ற காணொலி சமூக ஊடகங்களில் பரவியது.

    தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சென்ற டேங்கர் லாரி விபத்தில் சிக்கியது.

    விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து சமையல் எண்ணெய் வெளியேறியது என தகவல் வெளியானதால், பொது மக்கள் குடம் குடமாக பிடித்துச் சென்றனர்.

    இந்நிலையில், டேங்கர் லாரியில் இருந்தது சுத்திகரிக்கப்படாத மற்றும் சமையலுக்கு பயன்படாத எண்ணெய் என்றும் உணவுப் பொருளாக பயன்படுத்த வேண்டாம் என்று நாமக்கல் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    08.06.2025-ந் தேதி 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி நாமக்கல் மாவட்டம், நாமக்கல் உட்கோட்டம், நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதன்சந்தை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது வாகனம் பழுது ஏற்பட்டு மேம்பாலத்தில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது அதிகாலை 05.00 மணியளவில் அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் மோதியதில் ஆயில் டேங்கில் கசிவு ஏற்பட்டு சோயா ஆயில் ரோட்டில் ஊற்றியது. பொதுமக்கள் சிலர் இந்த சோயா ஆயிலை பிடித்து செல்வது போன்ற காணொலி சமூக ஊடகங்களில் பரவியது.

    விபத்தில் கசிவு ஏற்பட்டு வெளியேறிய சோயா ஆயிலானது சுத்திகரிக்கப்படாதது மற்றும் சமையலுக்கு பயன்படாத எண்ணெய் ஆகும்.

    எனவே, இந்த சோயா ஆயிலை பொதுமக்கள் யாரும் உணவு பொருளாக பயன்படுத்த வேண்டாம் 6760T நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • லாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
    • பொதுமக்களை அப்புறப்படுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு 10,000 லிட்டர் சமையல் எண்ணெயை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த லாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    லாரி மீது வாகனம் ஒன்று மோதியதால், லாரியில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் குடங்களை கொண்டு வந்து எண்ணெயை பிடித்து சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

    • மர்ம நபர்கள் சேட்டு வீட்டின் கதவு மீது பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (42). விவசாயியான இவர் வெல்டிங் பட்டறையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (37). இவர்களுக்கு பிரீத்தி (19), சன்சிகா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். சேட்டுவின் மூத்த மகள் பிரீத்தி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகள் சன்சிகா பெற்றோருடன் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.

    நேற்று இரவு சேட்டு அவரது மனைவி நிர்மலா, மகள் சன்சிகா ஆகிய 3 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் சேட்டு வீட்டின் கதவு மீது பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர். அப்போது பெட்ரோல் குண்டு வெடித்ததில் அதி பயங்கர சத்தம் கேட்டது. அப்போது தீப்பிடித்து உள் பக்க கதவு எரிந்தது. அதேபோல் வீட்டுக்குள்ளும் தீ பரவியது. இதில் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த சத்தம் கேட்டு சேட்டு வெளிேய ஓடி வந்து பார்த்தார். அப்போது வீட்டு முன்பு தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவசர அவசரமாக வீட்டில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தார்.

    பின்னர் வீட்டின் முன் பக்கம் உள்ள இரும்புகேட்டை திறக்க முயன்ற போது அது வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சேட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் விைரந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    சேலத்தில் உள்ள தடய அறிவியல் நிபுணர் வடிவேல் தலைமையிலான குழுவினரும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் ஆய்வு நடத்தினர். இதுதொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து நள்ளிரவில் இந்த வழியாக வந்த நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டுக்குள் சேட்டு அவரது மனைவி நிர்மலா, மகள் சன்சிகா 3 பேரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் குண்டு வீசி அவர்களை கொல்ல திட்டமிட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. சேட்டு சத்தம் கேட்டு எழுந்து வந்து தீயை அணைத்ததால் அதிர்ஷ்டவசமாக 3 பேரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் ஸ்கீமை அமுலுக்கு கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார்.
    • நண்பர்களுடன் சேர்ந்து 8 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து பார்த்தோம்.

    சேலம்:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நாமக்கல்லில் பரமத்தி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்குள்ள லாரியின் முன் பகுதி விற்பனை செய்யும் கடையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவி செய்ததுடன் அவர்கள் தீயை விரைந்து அணைக்க உதவினார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2023-ம் ஆண்டு தொடக்கத்தில் முதலமைச்சர் வழிகாட்டுதல் படி ஜப்பான் நாட்டில் உள்ள ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடம் நிதி ஆதாரம் சம்பந்தமாக கேட்டுக்கொள்ள டோக்கியோவுக்கு நானும், துறை அதிகாரிகளும் சென்றோம். டோக்கியோவில் 8 கி.மீ . தூரத்திற்கான நடைபாதை ஹேல்த் வாக் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு சாலையில் இரு மருங்கிலும் மரங்கள் நடப்பட்டு இருக்கைகள் நடப்பட்டு நடப்பதினால் ஏற்படும் நன்மைகளை குறிப்பிட்டு விளம்பர பலகைகள் வைத்து சாலைகள் அமைக்கப்பட்டிருந்தது.

    அவர்களிடம் 8 கிலோ மீட்டர் என்று நிர்ணயத்திருக்கீறிர்கள் இதற்கான பிரத்யோக காரணம் உண்டா? என்று கேட்ட போது அவர்கள் சொன்னது 8 கி.மீ. நடந்தால் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் அடியை எடுத்து வைப்போம். அந்த வகையில் தினந்தோறும் ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் 10 ஆயிரம் அடி நடந்தால் உடலுக்கு நல்லது, எந்த விதமான நோய் பாதிப்பும் இருக்காது என்ற வகையிலான செய்தியை சொன்னார்கள், நாங்கள் சென்னைக்கு திரும்பியதும் முதலமைச்சரிடம் அந்த கருத்தை வலியுறுத்தினோம்.

    முதலமைச்சரும் டோக்கியோவில் இருப்பது போலவே தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் ஸ்கீமை அமுலுக்கு கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் வருவாய் மாவட்டங்கள் 38 மாவட்டத்திலும் இந்த ஹெல்த் வாக் ஸ்கீம் 8 கி.மீட்டர் தூரம் அடையாளம் காணப்பட்டு இரு மருங்கிலும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருக்கைள் போடப்பட்டு ஒரு சில மாவட்டங்களில் மரங்களும் அடர்த்தியாக நடப்பட்டு இந்த திட்டம் நவம்பர் 4-ந்தேதி 2023 அன்று துணை முதலமைச்சர் உதயநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

    கொட்டும் மழையில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 38 மாவட்டங்களில் இருந்தும் நடப்பவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அந்த வகையில் அன்றிலிருந்து இந்த ஹெல்த் வாக் என்பது தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டிடங்களை திறந்து வைக்கவும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டவும் வந்திருந்த நான் இன்று காலை நடப்போர் நல சங்கம் வைத்து 700-க்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சியில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டிலேயே 700-க்கும் மேற்பட்டோர் நடப்போர் நல சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வது என்பது நாமக்கல் தான் முதலிடமாக இருக்கும் என்று கருதுகிறேன். அந்த வகையில் அந்த நண்பர்களுடன் சேர்ந்து 8 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து பார்த்தோம்.

    மிக சிறப்பான வகையில் 46 இடங்களில் நிரந்தரமாக நடந்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பது குறித்தான விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளியில் தொடங்கி டிரினிட்டி கல்லூரி வரை 4 கிலோ மீட்டர், மீண்டும் அங்கிருந்து இங்கு வந்தால் 4 கி.மீட்டர், இரு பக்கமும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 3 அடி உயரத்திற்கான சாலை தடுப்புகள் இருப்பதை பார்த்தோம், அதனை உட்காரும் இருக்கைகளாக மாற்றுமாறு கூறி உள்ளோம். சில இடங்களில் மரங்கள் நட வேண்டியது இடங்கள் இருக்கிறது. சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்போடு சாலையில் மரங்கள் நட வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்.

    ராஜேஷ்குமார் எம்.பி.யிடமும் இதனை வலியுறுத்தி நிறைய சாலைகளை பசுமை பகுதியாக மாற்ற ஆயிரக்கணக்கான மரங்களை குறிப்பாக நாட்டு மரங்களான புங்கை மரம், பூவரசு மரம், அத்தி மரம், நாவல் மரம், வேப்ப மரங்களை நடவேண்டும் என்று அவரிடம் வலியுறுத்துவோம். அந்த வகையில் இந்த ஹெல்த் வாக் சாலை மிக சிறப்பாக உள்ளது. இங்கு இருப்பவர்களும் மிக சிறப்பாக விழிப்புணர்வு பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரால் 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம் 2.0 விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் உமா, ராமலிங்கம் எம்.எல்.ஏ., நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பொதுமக்களிடம் சிகிச்சைகள் கேட்டறிந்தார். மேலும் டாக்டர், செவிலியர்களிடம் பொதுமக்கள் வருகை மற்றும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.



    • மகன்கள் 2 பேரும் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனம் உடைந்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • தகவல் அறிந்த திருச்செங்கோடு போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஆன்றாபட்டி அருகே உள்ள குப்பாண்டாம் பாளையம் ஊராட்சி வன்னியர் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் கபில் ஆனந்த் (வயது 41) லாரி டிரைவர்.

    இவருக்கு நதியா என்ற மனைவியும், ஹரி ரஞ்சித், விக்னேஷ் ஆகிய 2 மகன் உள்ளனர்.

    திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் ஹரி ரஞ்சித், அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வுகளில் தோல்வி அடைந்தனர். தனது இரு மகன்களும் தேர்ச்சி பெறாததால் மன வருத்தத்தில் கபில் ஆனந்த் இருந்து வந்தார்.

    தான் படிக்கவில்லை என்றாலும் தனது மகன்களாவது படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த கபில் ஆனந்த் மகன்கள் தேர்வில் தோல்வி பேரதிர்ச்சியாக இருந்தது. இதுகுறித்து நேற்று மாலை வீட்டிலிருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென வீட்டுக்குள் சென்ற கபில் ஆனந்த் கதவை சாத்திவிட்டு கொக்கியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனைவி கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து கடப்பாறை கொண்டு கதவை உடைத்து கபில் ஆனந்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கபில் ஆனந்த் ஏற்கனவே இறந்துவிட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    தனது மகன்கள் 2 பேரும் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனம் உடைந்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆன்றாபட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கேப்டன் தான் என்னுடைய எல்லாமே என்று நினைத்து கேப்டனுக்காகவே வாழ்ந்தேன்.
    • கேப்டனுக்கு அம்மா இல்லை. அம்மா பாசமே அவருக்கு தெரியாது.

    நாமக்கலில் தே.மு.தி.க. சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

    இதையடுத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தமிழகம் முழுவதும் சினிமா பிரபலங்கள் பலரும் பல வருடம் வாழ்ந்து விட்டு விவகாரத்து செய்கின்றனர். ஏன் தெரியல. ஒன்னு மட்டும் சொல்றேன் கணவன்-மனைவிக்குள் உண்மையான புரிதல் இருக்கணும். ஈகோ இருக்கக்கூடாது. நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்று. புரிதல் இருக்கணும், விட்டுக்கொடுத்து வாழணும். அதுதான் வாழ்க்கை.

    ஓ நீ இப்படியா, நான் அப்படின்னு வாழ்ந்தால் எப்படி அந்த குடும்பம் விளங்கும். அதுக்கான உதாரணங்கள் தான் இன்றைக்கு எத்தனை எடுத்துக்காட்டுகளை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஆனால் நான் பெருமையாக சொல்றேன்... கேப்டன் தான் என்னுடைய எல்லாமே என்று நினைத்து கேப்டனுக்காகவே வாழ்ந்தேன்.

    எனக்காக எந்தவிதமான சுய விருப்பம் எதுவும் இல்லை. அவர் என்ன விரும்புகிறாரே அதுதான் என்னுடைய விருப்பம். அவர் என்ன சொல்றாரோ அதுதான் என்னுடைய சொல். அவர் என்ன செய்கிறாரோ அதுதான் என் செயல். இப்படி 1990 ஜனவரி 30-அன்று தாலி கட்டின மறுநிமிடமே என் வாழ்க்கையை கேப்டனுக்காக அர்ப்பணித்து விட்டேன். கேப்டன் எவ்வளவு பெரிய கோவக்காரர் தெரியுமா? அவருக்கு கோபம் அப்படி வரும். பொறுமையா பார்ப்பேன். அதனால தான் அவரை அறியாமலேயே ஒரு பேட்டியில் கேப்டன் சொல்லியிருக்கிறார், என்னுடைய மனைவி நிழல் சக்தி அல்ல நிஜ சக்தி.. அவள் என்னுடைய மனைவி மட்டுமல்ல என் தாய் என்று சொல்லியிருக்கிறார். அந்த பேட்டியை இப்போ தினமும் போட்டு பார்ககிறேன்.

    கேப்டனுக்கு அம்மா இல்லை. ஒரு வயதாக இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். அம்மா பாசமே அவருக்கு தெரியாது. அதனால என்கிட்ட கேட்டாரு, அம்மா பாசம் தெரியாது. எனக்கு நீ சாப்பாடு ஊட்டி விடுவியா என்று கேட்டார். ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை தினமும் நான்தான் அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுவேன். சூட்டிங் முடிந்து நடுராத்திரி எப்போது வந்தாலும் சூடாக சமைத்து ஊட்டிவிட்டு தான் படுப்பேன். ஏன் இதெல்லாம் சொல்றேன் என்றால் அந்த புரிதல் இருக்கணும். அந்த புரிதல் இருந்தால் இந்த விவகாரத்து எல்லாம் தூசி மாதிரி. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கிற 'தில்' போதும். இளைஞர்கள், பெண்கள், மாணவிகள் இதை என்னுடைய அட்வைஸாக எடுத்துக்கணும் என்று பேசினார்.

    ×